Thread started by madhu on 9th August 2012 08:25 PM
இரை தின்ற மலைப்பாம்பு போல இருளில் அந்த நெடுஞ்சாலை அவர்கள் எதிரே நீஈஈளமாக வளைந்து வளைந்து போய்க்கொண்டு இருந்தது. காரின் ஜன்னல் கண்ணாடிகள் ஏற்றப் பட்டு இருந்தபோதும் வெளியே சீறும் காற்றின் இரைச்சலும் சடசடவென்று விழும் மழைத்தாரைகளின் ஓசையும் உள்ளே இருப்பவர்களின் எலும்பு வரை புகுந்து சில்லிட வைத்தது.
"ஷ்யாம்.. கிளைமேட் திடீர்னு ரொம்ப மோசமா ஆயிருச்சே ?"
"யெஸ் ப்ரீத்தி.. நீ சொல்றது சரிதான். பட்.. இப்போ திரும்பிப் போகவும் முடியாது. எப்படியாவது நேரே போறதைத் தவிர வேற வழியே இல்லை" என்றபடி ஷ்யாம் மீண்டும் கையிலிருந்த செல்போனின் பட்டனை அழுத்தி காதில் வைத்துக் கொண்டான். எந்த விதமான ஒலியும் கேட்கவில்லை.
"ஷிட்... சிக்னல் இருக்குதா இல்லையா அப்படின்னு கூட தெரியலயே என் சிஸ்டர்"
கார் கல்யாண ஊர்வலம் போவது போல மிகவும் மெதுவாக ஊர்ந்து கொண்டு போனது.
"இன்னும் எவ்வளவு தூரம் போகணும் ?"
மழைத் தாரைகள் இரும்புக் கம்பிகள் போல முன் கண்ணாடியில் விழ அதைத் துடைக்க வைப்பர்கள் மூச்சு முட்டியபடி உழைத்துக் கொண்டு இருந்தன. ஹெட் லைட் வெளிச்சத்தில் பாதை ஓரமாக தெரிந்த கல்லில் "ராஜகிரி 18 கி.மீ" என்ற எழுத்துக்கள் தெரிய கார் ஒரு குலுக்கலுடன் நின்று போனது.
மீண்டும் மீண்டும் ஷ்யாம் அதற்கு உயிர் கொடுக்க முயற்சிக்க எதுவும் பலனில்லாமல் போக அந்த இருளில் வெளியே கொட்டும் மழையின் சத்தம் மட்டும் பின்னணியாக இருவரும் மௌனமாக அப்படியே உட்கார்ந்திருந்தனர்.
யார் இவர்கள் ? எங்கே போகிறார்கள் ? இந்தக் கேள்விகளுக்கான விடையை அடுத்த பத்தியில் காணவும்.
ஒரு பெரிய மல்டிநேஷனல் கம்பெனியின் பொது மேலாளரான விஸ்வநாதனின் புத்திரச் செல்வங்கள்தான் இவர்கள். படிப்பு, வேலை இவையே வாழ்க்கையின் முக்கியமான விஷயங்கள் என்று நினைத்துக் கொண்டு அதிலேயே எப்போதும் அழுந்திக் கிடப்பவர்கள். ஷ்யாம் ஒரு கார் டயர் கம்பெனியின் மார்க்கெட்டிங் மானேஜர். ப்ரீத்தி மேனேஜ்மெண்ட் கன்சல்டண்டாக ஒரு பெரிய நிறுவனத்தில் பணி புரிந்து கொண்டு இருந்தாள். அவள் திறமையைக் கண்டு கொண்ட அந்த நிறுவனம் அவளை வெளி நாடுகளுக்கு அனுப்பி அதிக லாபம் கண்டிருந்ததால் அவள் ஒரு நாள் விடுமுறை கேட்டாலும் உடனே அவள் சம்பளத்தை உயர்த்தி விட்டு லீவை கான்சல் செய்து கொண்டு தொழில் நடத்தி லாபம் ஈட்டிக் கொண்டு இருந்தது.
செய்யும் தொழிலே தெய்வம் என்று இருந்த அவர்களுக்கு இப்போதுதான் தொழில் மட்டுமே எல்லாமும் இல்லை என்று புரிந்திருந்தது. இந்தப் பயணம் எதற்காக என்று தெரிந்தால் உங்களுக்கு கோபமும் சிரிப்பும் வரலாம். நாளை விடியற்காலையில் ராஜகிரி ஜமீந்தார் ஜம்புலிங்கத்தின் மகன் விக்னேஷுக்கும் ப்ரீத்திக்கும் நிச்சயதார்த்தம். அவர்களின் பெற்றோரும் மற்றவர்களும் முன்னாலேயே போய்விட ஒரே நாள் மட்டுமே லீவு கிடைத்ததால் ப்ரீத்தி முந்திய நாள் மாலை வந்து சேருவதாக சொல்லி இருந்தாள். மணப்பெண் தனியாக பிரயாணம் செய்ய வேண்டாம் என்று ஷ்யாமை அவளுடன் கிளம்பி காரிலேயே வந்து சேரச் சொல்லி விட்டு அவர்களின் அம்மாவும் அப்பாவும் ராஜகிரிக்கு கிளம்பி விட்டார்கள்.
வெறும் மூன்று மணி நேர பயணம்தானே என்ற அலட்சியத்துடன் கிளம்பிய இவர்கள் இருவரும் கிளம்பிய இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு மாறிய இயற்கையின் சீற்றத்தால் வழியில் மாட்டிக் கொண்டு திருதிருவென்று விழித்தபடி காருக்குள் இருந்தார்கள். ஜமீந்தார் வீட்டு நிச்சயதார்த்தம் என்பதால் வழியில் நிறைய போக்குவரத்து இருக்கும் என்று நினைத்தவர்களுக்கு மெயின் ரோடில் ராஜகிரிக்கு செல்லும் பாதையை சரியாக கண்டுபிடிக்க முடியாமல் ஒருவரிடம் வழி கேட்க மெயின் ரோடிலிருந்து ஜமீந்தார் பங்களாவுக்கு செல்லும் சாலை இருபது கிலோ மீட்டர் அளவுக்கு உள்ளே செல்லும் என்றும் ஒரு சிறிய குன்றை சுற்றிக் கொண்டு சென்றால் அதன் பின்புறச் சரிவில்தான் பங்களா இருக்கிறது என்றும் அவன் சொன்னான்.
ஒரு இடத்தில் மெயின் ரோடிலிருந்து பிரிந்த ஒரு சாலையில் இருந்த ஒரு ஆர்ச்சில் பெரிய பேனர் கட்டி நிச்சயதார்த்ததிற்கு வருக வருக என்ற வாசகங்களும் விக்னேஷ், ப்ரீத்தியின் படங்களுடன் கூடிய சுவரொட்டிகளுமாக தோரணங்களுடன் வண்ண விளக்குகளும் மின்ன ஜொலித்துக் கொண்டு இருந்தது. அங்கே ஒரு டீக்கடை மட்டுமே இருந்தது.
ஷ்யாம் அந்த வளைவின் வழியாக காரைத் திருப்பினான். டீக்கடையில் இருந்த ஆள் கையை நீட்டி ஏதோ சொல்ல வந்தது போல இருந்தது. ஆனால் ஷ்யாம் நிறுத்தாமல் ஓட்டி வந்து விட்டான். கொஞ்ச தூரத்துக்கு சாலை ஒழுங்காக இருந்தது. ஆனால் அதன் பின் சாலையின் இரு புறமும் அடர்ந்த மரங்கள் மட்டுமே இருக்க சாலையும் கரடுமுரடாக மாறியது. மெயின் ரோடிலிருந்த வளைவைத் தாண்டி ராஜகிரியை நோக்கி அவர்கள் கார் சற்று தூரம் சென்றதுமே வானம் இருட்டிக் கொண்டு வந்து சில நிமிடங்களில் பேய் மழை கொட்ட ஆரம்பித்தது. கொஞ்ச நேரத்துக்கு முன்பு வரை நீலமாக இருந்த வானம் கருங்கும்மென்று மாறி காற்றும் மழையுமாக சீறுவதை அவர்கள் எதிர்பார்க்கவே இல்லை. மின்னலும் இடியும் கண்ணையும் காதையும் பயமுறுத்தின.
இப்போது காரும் நின்று விட்டதால் எப்படியாவது மெதுவாக ஓட்டிக் கொண்டு ஜமீன் பங்களாவுக்குப் போய் சேர்ந்து விடலாம் என்ற ஆசையும் நிராசையாகிப் போனது.
"ஷ்யாம்.. என்ன செய்யலாம் ? செல்போனும் வேலை செய்யலை. இன்னும் எவ்வளவு நேரம் இங்கேயே இருக்க முடியும் ? இந்த மழை நின்றால்தான் யாராவது வரவங்க போறவங்க கிட்டே உதவி கேட்கலாம். ஆனா... "
அவள் பேச்சை தடுத்தபடி ஒரு இடி இடித்தது. கார் தடதடவென்று ஆடியது. ஃப்ளாஷ் லைட் போல ஒரு மின்னல் வெட்டு. மீண்டும் ஒரு இடி.
"ப்ரீத்தி.. இந்த வெதர்ல இப்படி ஒரு இடத்துல நின்னு போன காருக்குள்ள சும்மா உட்கார்ந்துகிட்டு இருக்குறது சரியா தப்பா அப்படின்னு எனக்கு தெரியல. லெட் மீ கெட் டவுன் அண்ட் சீ. பக்கத்துல ஏதாச்சும் ஹெல்ப் கிடைக்குமான்னு பாக்கலாம்" சொன்னபடி ஷ்யாம் காரின் பின்சீட்டில் இருந்த பையை இழுத்து திறந்து அதிலிருந்து ஒரு பிளேசரை எடுத்து மாட்டிக் கொண்டு டிரவர் சீட்டிலிருந்து காரின் கதவைத் திறந்து கொண்டு இறங்கினான். அடுத்த நிமிடம் "அம்மா...." என்ற சத்தத்துடன் சரிந்தான்.
"ஷ்யாம்.. ஷ்யாம்.. என்ன ஆச்சு ?" ப்ரீத்தி பதற்றத்துடன் அவன் புறமாக சீட்டில் நகர்ந்து போக அவன் "கீழே ஏதோ பள்ளம். கால் சறுக்கி விட்டிடிச்சு." என்றபடி எழ முயற்சித்தான். ஆனால் முடியவில்லை.
"ப்ரீத்தி.. ரொம்ப வலிக்குது. அந்த டார்ச் லைட்டை எடுத்து ஆன் செஞ்சு பாரு. அதை எடுத்துக்காம சட்டுனு இறங்கியது என் தப்புதான்"
ப்ரீத்தி அடித்த விளக்கின் ஒளியில் அவன் கால் ஒரு சிறு பள்ளத்தில் சேற்றில் சிக்கி மடங்கி இருந்தது தெரிந்தது. மெல்ல அதைத் திருப்பி எடுத்தான். சோதித்தபோது கீறலோ ரத்தமோ இல்லை. ஆனால் சுளுக்கி இருக்கலாம் என்று தோன்றியது. காலை ஊன்ற முயலும்போது வலியால் அவன் முகம் கோணியது.
"ஷ்யாம். பேசாமல் காரிலே உட்காரு. மழை நின்னதும் ஏதாச்சும் செய்யலாம்" என்றபோதுதான் சட்டென்று பக்கத்தில் இருந்த சிறிய மேட்டுச் சரிவில் தெரிந்த ஒரு விளக்கு ஒளி அவள் பேச்சை சட்டென்று நிறுத்தியது.
"ஷ்யாம்.. அதோ பாரு. ஏதோ லைட் தெரியுது. வீடு போல இருக்குது. உன்னாலே நடக்க முடியாட்டி நீ இங்கேயே இரு. நான் போய் ஏதாவது ஹெல்ப் கிடைக்குமா என்று பார்க்கிறேன்"
அதற்கு ஷ்யாம் பதில் சொல்லும் முன் ஒரு உருவம் கையில் ஆடும் லாந்தர் விளக்குடன் சட்டென்று அவர்கள் முன் வந்தது. ப்ரீத்தி பயத்தில் ஒரு கணம் உறைந்து போனாள். காரின் உள்விளக்கைப் போட்டுவிட்டு டார்ச்சையும் அடித்தாள். வந்த உருவம் ஒரு சாக்குத் துணியை போர்த்திக் கொண்டு இருந்தது. அது ஒரு வயதான கிழவி என்று தெரிந்தது.
"என்ன ஆச்சு கண்ணுங்களா ? வண்டி நின்னு போச்சா ? " என்று சகஜமாக கேட்டாள்.
அவள் குரலைக் கேட்டதும் லேசாக மூச்சு விட்ட ப்ரீத்தி "ஆமாம் பாட்டி.. இங்கே யாரும் மெகானிக் இருக்காங்களா ?" என்றாள்.
"காரு ரிப்பேரு எல்லாம் மெயின் ரோடுலதான் செய்வாங்க. அதுவும் இன்னைக்கும் நாளைக்கும் யாரும் இருக்க மாட்டாங்கம்மா"
"ஏன் ? என்ன விஷயம் ?"
"ராஜகிரி ஜமீந்தார் பையனுக்கு நாளைக்கு நிச்சயம். அதுக்காக எல்லாரும் ஜமீனுக்கு போயிட்டாங்கம்மா."
ப்ரீத்தியும் ஷ்யாமும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
"பாட்டி... நாங்களும் அதுக்குதான் வந்திருக்கோம்"
"அது சரி.. ஆனா இந்த வழியா ஏன் வந்தீங்க ? மெயின் ரோடுல இன்னும் நேரா போயிருந்தா நாலு கிலோ மீட்டருக்கு அப்புறம் நல்ல ரோடு வருமே "
"என்னது ? எங்களுக்கு தெரியாதே ? இந்த வழின்னு நெனச்சுகிட்டு இல்லே வந்துட்டோம்"
"அதனாலே பரவாயில்லே கண்ணுங்களா ! ஆனா இந்த வழியிலே பாதை அவ்வளவு நல்லா இருக்காது. அதுவும் இந்த மழையிலே ரொம்ப சிரமப்படும்"
"பாட்டி.. நாங்க எப்படியாச்சும் போய்ச் சேரணும். ஏன்னா.. இவ என் தங்கச்சி.. நாளைக்கு உங்க ஜமீந்தார் வீட்டுக்கு மருமகளாகப் போற பொண்ணு"
பாட்டியின் கண்கள் விரிந்தது வெளிச்சத்தில் தெரிந்தது.
"அட என் ராசா ! இதுதான் இளைய ராணியம்மாவா ? நல்லா இருங்கம்மா.. சரி.. இப்போதைக்கு என் குடிசையிலே வந்து தங்கிக்குங்க. அப்பாலே என்ன செய்யலாமுன்னு பார்க்கலாம். இந்த மழையிலே இங்ங்னே நடு ரோட்டிலே இருக்க வேணாம்"
காலை எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் கத்தி மேல் நடப்பது போலிருக்க ஷ்யாம், ப்ரீத்தியின் தோளில் கையை வைத்துத் தாங்கியபடி காரைப் பூட்டி விட்டு பாட்டியின் பின்னால் நடந்து சென்று அந்த மேட்டில் இருந்த சின்ன குடிசையை அடைந்தான்.
"ஷ்யாம்.. உன் நிலைமையில் நீ நடக்காமல் இருப்பதே நல்லது. ஒருவேளை இங்கிருநது ஜமீன் பங்களாவுக்கு நடந்து போக முடியும் அப்படின்னா நான் மெதுவாக போய் ஏதாச்சும் ஹெல்ப் அனுப்பி வைக்கவா?"
பாட்டி அவர்கள் உட்கார ஒரு கோணியை விரித்து விட்டு "அம்மாடி.. நீ சொல்லுறது நல்ல உபாயம்தான் . என் வீட்டிலேயும் இப்போ உதவிக்கு யாருமில்ல. என் துணைக்கு என் பேத்தி மட்டும்தான் இருக்குறா. உங்க அண்ணன் இங்கே இருக்கட்டும். என் பேத்திக்கு குறுக்கு வழி தெரியும். ஒரு மணி நேரத்துல உன்னை ஜமீன் பங்களாவுல சேர்த்து விடும். அங்கிட்டு போய் யாரையாச்சும் உதவிக்கு அனுப்பு" என்றாள்
"கிரேட்... அதுதான் நல்ல ஐடியா ஷ்யாம். யூ டேக் ரெஸ்ட்" என்றபடி ப்ரீத்தி எழுந்திருக்க பாட்டி உள்பக்கமாக திரும்பி "மோகினி .. மோகினி.." என்று அழைத்தாள்.
பௌர்ணமி இரவில் முழு நிலவு வரும் பார்த்ததுண்டு. ஆனால் அமாவாசை அன்று, கரு மேகம் சூழ்ந்த இரவில், திடீரென்று முழு நிலவு உதித்தால் எப்படி இருக்கும் ?
மோகினி என்ற அந்தப் பெண்ணுக்கு பதினெட்டு வயது இருக்கலாம். பாவாடையும் ஆண்கள் அணியும் சட்டையும் போட்டிருந்தாள். தோளின் மீதாக சரிந்து விழுந்த தலைமுடி ஹோகேனக்கல் அருவியை நினைவு படுத்தியது. தருமபுரியின் மாம்பழம் போல லேசாக சிவந்து தெரிந்த கன்னக் கதுப்புகளும், ஹோசூரின் ஆர்க்கிட் மலர்கள் போல சுழிக்கும்போது வடிவம் மாறும் இதழகளுமாக அவள் வந்தபோது ஷ்யாமுக்கு ப்ரீத்திக்கு காலில் சுளுக்கு வந்திருக்கக் கூடாதா தான் அவளுடன் பங்களாவுக்கு போயிருக்கலாமே என்ற எண்ணம் கூட ஏற்பட்டது.
எப்படி இவள் எந்த சினிமா டைரக்டர் கண்ணிலும் படாமல் தப்பி இருக்கிறாள் என்று நினைத்தபடி இருந்த ப்ரீத்தியை "கண்ணு.. இது என் பேத்தி மோகினி... உன்னை சாக்கிரதையா ஜமீன் பங்களாவுல கொண்டு விட்டு வருவா" என்ற பாட்டியின் குரல் தன்னிலைக்கு கொண்டு வந்தது.
"ஹாய் மோகினி" என்றவளைப் பார்த்து மோகினி "வணக்கமுங்க" என்று கூறிவிட்டு பிறகு தன் மார்பில் தொங்கிக் கொண்டு இருந்த சங்கிலியை எடுத்து உதடுகளில் வைத்துப் பிடித்துக் கொண்டு மோகனமாய் சிரித்தபடி "அய்யோடா" என்றாள்.
"என்ன ஆச்சு ? ஏன் அப்படி சொல்லுறே ? " என்று ப்ரீத்தி திகைப்புடன் பார்க்க பாட்டி "அவ எப்பவும் அப்படித்தாங்க, அய்யோடான்னு சொல்லிக்கிட்டே இருப்பா. நீங்க கிளம்புங்க. மோகினி.. பாத்து பத்திரமா கூட்டிகிட்டு போ. காட்டாத்துல வெள்ளம் இருக்கப் போவுது" என்றாள்.
ஷ்யாம் பதற்றத்துடன் "என்னது காட்டாறா ? வெள்ளமா ? அப்படின்னா இங்கேயே இரு ப்ரீத்தி. எங்கேயும் போக வேணாம்" என்றான்.
"பயப்படாதே கண்ணு. சாதாரண நாளுங்களிலே அதுல தண்ணியே இருக்காது. இப்போ மழை பெய்யுறதாலே ஒரு வேளை தண்ணி இருந்தா சாக்கிரதையா தாண்ட சொல்லுறேன். அவ்வளவுதான்"
"நீ தைரியமா இரு ஷ்யாம். நான் போய் பங்களாவிலே சொல்லி அங்கிருந்து மோகினியுடனேயே ஆளுங்களை அனுப்பி வைக்கிறேன். அம்மா ரொம்ப கவலைப் பட்டுகிட்டு இருப்பாங்க. எதுக்கும் நீ அப்பப்போ செல்போன்ல அவங்களை காண்டாக்ட் பண்ண டிரை செஞ்சுகிட்டே இரு"
ஷ்யாம் தலையசைக்க மோகினி ஒரு சாக்கை எடுத்து தன் தலைமேல் போட்டுக் கொண்டாள்.
"ஐயம் நாட் டேக்கிங் எனி லக்கேஜ் வித் மீ ஷ்யாம்" என்றபடி ப்ரீத்தி அங்கிருந்த பிளேசரை மட்டும் எடுத்துப் போர்த்திக் கொண்டாள்.
"வரேன் பாட்டி. ரொம்ப நன்றி. ஆளுங்களை அனுப்பறேன். மழை நின்னதும் நீங்களும் கிளம்பி வந்திடுங்க" என்றபடி மழையில் சென்ற மோகினியை பின் தொடர்ந்தாள் ப்ரீத்தி. குடிசைக்கு வெளியே மழை மெதுவாக பெய்து கொண்டே இருந்தாலும் டார்ச் விளக்கின் ஒளியில் மோகினி செல்வதை கவனித்தபடியே ப்ரீத்தி அவளைப் பின் தொடர்ந்தாள். அருகிலிருந்த மேட்டின் மீது ஏறி இறங்கியதும் மழை சட்டென்று குறைந்து தூறலாக ஆனது. கம்பளிப் போர்வையாக போர்த்தியிருந்த இருட்டு அது மாலை நேரம் என்பதையே மறைத்திருந்தது. ஆனாலும் ப்ரீத்திக்கு மோகினி மங்கலான வெளிச்சத்தில் ஒரு தேவதை போலவே தோன்றினாள்.
"ராணிம்மா.. என் கையைப் பிடிச்சுக்குங்க. இல்லாட்டி சறுக்கி விட்டுடும்" என்று மோகினி நீட்டிய கையை ப்ரீத்தி பிடித்துக் கொண்டபோது ஏனோ மெல்ல பெருமூச்சு ஒன்று வெளியேறியது.
அவளைப் பார்த்தபடியே அருகில் நடந்த மோகினி "என்னம்மா அப்படி பாக்குறீங்க ?" என்றாள். பிறகு தன் மார்பில் தொங்கிக் கொண்டு இருந்த சங்கிலியை எடுத்து உதடுகளில் வைத்துப் பிடித்துக் கொண்டு மோகனமாய் சிரித்தபடி "அய்யோடா" என்றாள்.
( தொடரும் )
-
From: Madhu Sree
on 10th August 2012 08:02 PM
[Full View]
madhu pappaa... ennaala andha font padikka mudila
-
From: madhu
on 10th August 2012 08:07 PM
[Full View]

Originally Posted by
Madhu Sree
madhu pappaa... ennaala andha font padikka mudila

Oh... it was posted long back.
u need murasu anjal software to read it.
here is the link
http://www.appusami.com/DOWNLOAD.htm
-
From: rajraj
on 11th August 2012 05:49 AM
[Full View]
Good story madhu!

Now, you have to find an Alfred Hitchcock to make it a movie!
-
From: madhu
on 11th August 2012 05:53 AM
[Full View]

vathiyarayya...
Hitchcock padicha

senjuduvaru
-
From: suvai
on 25th August 2012 06:47 PM
[Full View]
Madhu nga...ononnaa padikaren...sareengala!
kathai padika..naanum participate panninaa maathri feeling....ty for a lovely story & very expressive writing...
-
From: madhu
on 25th August 2012 06:50 PM
[Full View]

suvai nga..
mella nithanama padiyunga. unga aatharavai enrum naadum MP
-
From: TamilMoon
on 26th August 2012 12:07 AM
[Full View]
superrrrrrr madhu na... nallaruku...
rathiri 12 mani.. nalla nerathuku than naan indha kadhaiya padichiruken... ayyoda.. enakku pinnadi edhavadhu mohini irukka pogudhu..
ungaloda mohini kadhaigal innum thodarattum...
-
From: madhu
on 26th August 2012 04:57 AM
[Full View]

vijay !!
unakku mohini-nna ivlo pidikkuma ?
-
From: rajeshkrv
on 26th August 2012 08:25 AM
[Full View]
மதுஸ்ரீ பிரமாதம். அருமை அருமை தொடருங்கள்
-
From: madhu
on 26th August 2012 08:35 AM
[Full View]

Originally Posted by
rajeshkrv
மதுஸ்ரீ பிரமாதம். அருமை அருமை தொடருங்கள்
ராஜேஷ்... நான் ஸ்ரீ மது.. not மதுஸ்ரீ,,,
( ஒரு வேளை நீங்க மயிலம்மாவோட பின்னூட்டத்தை தொடர சொல்றீங்களோ ?

)