விகடன் மேடை - பாரதிராஜா பதில்கள்!
பி.தண்டபாணி, தேனி.
'' உங்களின் 'அல்லி கலா நாடகமன்றம்’ நினைவுகளைப் பகிர்ந்துகொள்ளுங்களேன்?''
''1958-ல் 'அல்லி கலா நாடக மன்றம்’ ஆரம்பிச்சு, தேனி, அல்லிநகரம் பகுதிகளில் நாடகம் போட்டுட்டு இருந்தோம். 80 ரூபாய் கையில சேர்ந்தா மேடை, ஸ்க்ரீன், மேக்கப்னு அமர்க்களமா நாடகம் போட்டுரலாம். ஆனா, அந்த 80 ரூபாயை ஒவ்வொரு ரூபாயா சேர்க்கிறதுக்குள்ள... உசுரு தொண்டைக்குழிக்கு மேல வந்துரும். அப்போ ஒரு பெரியவர் எப்பவும் எங்களுக்கு 50 ரூபா நன்கொடையாத் தருவார். ஹி இஸ் அவர் மெய்ன் ஸ்பான்சர். அவர் கொடுத்த அந்த ரூபாயை வெச்சுத்தான் அல்லி கலா நாடக மன்றமே இயங்குச்சு. அப்போ எனக்குக் கிடைச்ச புரவலர் ராமானுஜம், இப்போ 'அன்னக்கொடி’ படத்தில் ஹீரோவாக நடிக்கும் லட்சுமணனின் தாய்வழித் தாத்தா. சினிமா, நாடகத்தின் மேல் தீராத் தாகம்கொண்ட கலைஞர் அவர். நிலக்கோட்டையில் சொந்தமா சினிமா தியேட்டர் வெச்சிருந்தார். பெரியவர் ராமானுஜம் கொடுத்த உற்சாகம் காரணமாகத்தான் 'பாசறை பலிகடாக்கள்’, 'பரிகாரம்’, 'ஒ... நெஞ்சே’னு ஏகப்பட்ட நாடகங்கள் போட்டேன். அப்போ என் எல்லா நாடகங்களுக்கும் இசைஅமைச்சவர்... 'பண்ணைபுரம்’ ராசாங்கிற உங்க இளையராஜா!''
கே.கலையரசன், கிடாரங்கொண்டான்.
''உங்களுக்கு இளையராஜாவை விட நெருங்கிய நண்பர் யார்?''
''பண்ணைபுரத்தில் ஹெல்த் இன்ஸ்பெக்டரா வேலை பார்த்த டைம்ல இருந்து மை பெஸ்ட் ஃப்ரெண்ட்... இளையராஜாவின் அண்ணன் ஆர்.டி.பாஸ்கர்தான். அவன் மூலமாத்தான் ராஜாவே எனக்குப் பழக்கமாகி, என் நாடகங்களுக்கு மியூஸிக் பண்ணான். அப்புறம் நான் சென்னைக்கு வந்து தங்கி, சினிமா வாய்ப்புத் தேடிட்டு இருந்த சமயம், அப்படி இப்படினு காசை மிச்சம் பிடிச்சு நாடகம் நடத்த 270 ரூபாய் சேர்த்துவெச்சேன். திடீர்னு ஒருநாள் விடிகாலையில பாஸ்கர், ராஜா, அமரன் மூணு பேரும் என்னோட அறைக்கு வந்து கதவைத் தட்டினாங்க. 'உன்னை நம்பி வந்துட்டோம்பா... இதுதான் கையிருப்பு’னு ஒரே ஒரு 10 ரூபாய் தாளைக் கண்ல காமிச்சாங்க. அப்புறம் என்ன... நாடகத்துக்காகச் சேர்த்த பணமெல்லாம் நட்புக்காகச் செலவாச்சு. பிகாஸ்... பாஸ்கர் என் நண்பன்!''
எஸ்.குரு, சிதம்பரம்.
''இயக்குநர், நடிகர் மணிவண்ணன் உங்களை எப்பவும் கடுமையாக விமர்சிக்கிறாரே... ஏன்?''
''இங்கே ஒரு ஃப்ளாஷ்பேக் கட் பண்றேன்... என் முதலாளி கே.ஆர்.ஜி-யும் நானும் வேலை விஷயமாக அடிக்கடி ஒரு ஆபீஸுக்குப் போவோம். அங்கே அக்கவுன்ட் செக்ஷன்ல வேலை பார்க்கிற ஒரு ஆள் என்னைப் பார்க் கிறப்பலாம் எந்திரிச்சு வணக்கம் வைப்பான். நான் அதை ஆச்சர்யமா பார்க்கிறப்ப, 'பாரதி... உன் மேல அவன் ரொம்பப் பிரியமா இருக்காம்பா... அதான் வணக்கம் வைக்கிறான்’னு சொல்வார் கே.ஆர்.ஜி.
கொஞ்ச நாளுக்கு அப்புறம் பார்த்தா, அந்த ஆள் யோகாம்பாள் தெருவில் நான் குடியிருந்த வாடகை வீட்டு வாசலுக்கு வந்து தினமும் நிக்க ஆரம்பிச்சுட்டான். வீட்டு வாசல்ல என்னைப் பார்க்கிறப்பலாம் வணக்கம் வைப்பான். இப்படியே ஒரு 15 நாள் போச்சு. ஒரு நாள் அவனை அழைச்சுட்டு வரச் சொன்னேன். வந்து உக்காந்தவனுக்கு உயிர் கண்ணுல இருந்தது. எதுவும் கேக்காம அவனுக் குக் குடிக்கத் தண்ணியும் கொஞ்சம் டீயும் கொடுக்கச் சொன்னேன். குடிச்சான். அவனுக் குள்ள ஏதோ ஒரு திறமை இருக்குன்னு எனக்குள்ள தோணுச்சு. 'கல்லுக்குள் ஈரம்’ படத்தில் அவனை வேலை பார்க்கச் சொன்னேன். அப்போ என்கிட்ட இருந்த பலர், 'அவன் மூஞ்சியே சரியில்லையே’னு சொல்வாங்க. 'போங்கடா... அவன் திறமைசாலிடா’னு 'நிழல்கள்’ படத்துல வசனம் எழுதும் பொறுப்பை அவனுக்குக் கொடுத்து, நடிக்கவும்வெச்சேன். அவன்தான் மணிவண்ணன்.
அவனுக்குக் கல்யாணம் நடந்த கதை தெரியுமா? என் அம்மாவுக்குத் தெரிஞ்ச ஒரு பெண், மயிலாப்பூர்ல என் நண்பர் ஆறுமுகத்தின் வீட்டில் அவருடைய பாதுகாப்பில், என் கண் காணிப்பில் இருந்துச்சு. அந்தப் பெண்ணுக்கு நானும் ஆறுமுகமும் அவருடைய பிராமண சமூகத்தில் மாப்பிள்ளை தேடிட்டு இருந்தோம்.
ஒரு முறை மணிவண்ணனையும் அழைச்சுட்டு அந்த மயிலாப்பூர் வீட்டுக்குப் போயிட்டு கார்ல திரும்பிட்டு இருந்தோம். அப்போ அந்தப் பொண்ணுக்கு மாப்பிள்ளை தேடும் விஷயமாப் பேசிட்டே வந்தோம். அப்போ எங்க பேச்சுக்கு இடையில் குறுக்கிட்ட மணிவண்ணன், 'அந்தப் பெண்ணை நானே கல்யாணம் பண்ணிக்கிறேனே’னு சட்டுனு கேட்டுட்டான். அப்போதைக்கு நான் எதுவும் சொல்லாம, என் மனைவிகிட்ட இது சம்பந்தமா பேசினேன். 'ஒரு வருஷம் போகட்டுங்க. அப்பவும் அவர் இதே பிடிவாதத்தோட இருந்தா... அவருக்கே அந்தப் பெண்ணைக் கட்டிவெச்சுடலாம்’னு அவங்க சொன்னாங்க.
ஒரு வருஷம் போனது. 'மணிவண்ணன் அந்தப் பொண்ணு ஞாபகமாவே இருக்கான். பேசாம கட்டி வெச்சிடுங்க’னு சித்ரா லட்சுமணன் என்கிட்ட வந்து சொன்னான். 'சரி’னு முடிவெடுத்து, அந்தப் பொண் ணுக்கு என் கைக்காசுல இருந்து பத்து பவுன் நகை போட்டு, அந்தப் பெண்ணுக்கும் மணிவண்ணனுக்கும் கல்யாணம் பண்ணிவெச்சேன். அப்புறம் 'காதல் ஓவியம்’ படத்தின் வசனத்தை அவனை எழுதச் சொன்னேன். அந்தப் படத்தின் டப்பிங் வேலை நடந்துட்டு இருக்கும்போது அதுல கலந்துக்காம, என்னைத் தேடி வீட்டுக்கு வந்தான் மணிவண்ணன். 'நான் தனியாப் படம் டைரக்ஷன் பண்ணப்போறேன்’னு சொன்னான். உடனே, மனசார ஆசீர்வாதம் பண்ணி அனுப்பிவெச்சேன்.
மணிவண்ணன் நல்ல படிப்பாளி, சிறந்த அறிவாளி. என்ன ஒண்ணு... வாயைத் திறந்தா, எல்லாமே பொய் பொய்யாத்தான் கொட்டும்.
ஒரு ராஜா கதை இருக்குமே... வீதில கஷ்டப் பட்டுட்டு இருந்த ஒரு பிச்சைக்காரனை அரண்மனைல தங்கவெச்சான் அந்த ராஜா. ஆனா, அரண்மனையின் நளபாகவிருந்து அந்தப் பிச்சைக்காரனுக்கு அலர்ஜி ஆகிடுச்சு. 'இவன் பிச்சை எடுத்த தெருவுல இருக்குற பத்து வீடுகள்ல இருந்து சோறு வாங்கிட்டு வந்து இவனுக்குப் போடுங்க’னு சொன்னார் ராஜா. அப்படியே செஞ்சாங்க... பிச்சைக்காரனுக்கு உடம்பு சரியாப்போச்சு. அப்பிடி, மணிவண்ணனை அரண்மனைக்கு அழைச்சுட்டு வந்தது என் தப்புதான்!''