ஞாயிறு கொண்டாட்டம்
'மல்லிகைப் புன்னகை!'
சன் டிவியில் ஒளிபரப்பாகி முடிவுற்ற 'சிந்துபாத்' தொடரில் மல்லிகை ராணியாக வந்து எல்லோர் மனதிலும் இடம் பிடித்த மகேஸ்வரி தற்போது 'மந்திரப்
புன்னகை' படத்தில் நடிக்கிறார் என்று கேள்விப்பட்டு
அவரோடு பேசினோம்:
சின்ன திரையைத் தேர்ந்தெடுத்தது எப்போது?
பதினோராம் வகுப்பு படிக்கும்பொழுது சன் மியூசிக் சேனலில் வி.ஜேவிற்கு ஆட்கள் தேவை என்று விளம்பரம் செய்திருந்தார்கள். அதைப் பார்த்துவிட்டு சும்மா முயற்சி செய்து பார்ப்போமே என்று நானும் என் அக்காவும் விண்ணப்பித்து இருந்தோம். அதில் நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன். அப்படித்தான் சின்ன திரையில் கால் வைத்தேன்.
அதன் பிறகு படித்துக்கொண்டே ஓய்வு நேரத்தில் சன் மியூசிக்கில் காம்பயரிங் செய்து வந்தேன். பளஸ் டூ முடித்ததும் கல்லூரிக்குச் செல்வதில் சிரமம் ஏற்பட்டதால் முழுநேர வேலை பார்த்துக் கொண்டே கரஸில் பி.காம்., படித்தேன். அதன்பிறகுதான் கலைஞர் டிவியில் வாய்ப்பு கிடைத்தது. இன்று வரை காம்பயரிங் செய்து வருகிறேன்.
தொடர்களில் நடிக்கிறீர்களா?
நான் கடைசியாக நடித்த தொடர் சிந்துபாத். அதில் 'மல்லிகை ராணி'யாக நடித்திருந்தேன். அதைத் தவிர நிறைய தெலுங்கு தொடர்களில் நடித்திருக்கிறேன். அதன் பிறகு இரண்டு வருடமாக தொடர்களில் நான் நடிக்கவில்லை. கலைஞர் டிவியிலும், இசையருவியிலும் நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கிக்கொண்டிருக்கிறேன். இதைத் தவிர தற்போது பெரிய திரையில் கரு.பழனியப்பன் இயக்கும் 'மந்திர புன்னகை' என்ற திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. எனக்கு நல்ல கதாபாத்திரம்.
மந்திரப் புன்னகை கதைக்கு உங்களை எப்படித் தேர்வு செய்தார்கள்?
கரு. பழனியப்பன் ஸார் ஆபிஸில் இருந்து போன் பண்ணி கூப்பிட்டார்கள். போய் பார்த்தேன். போனதும் இது, அதுன்னு எதுவும் கேட்கவில்லை. பார்த்தவுடனே அந்த கேரக்டருக்கு நான் பொருத்தமாக இருந்ததனால் வாய்ப்பளித்தார்கள். இப்பொழுது நடித்துக் கொண்டிருக்கிறேன். மூன்று பெண்களை மையமாக வைத்து நடக்கிற கதை. அதில் ஒரு நானும் ஒரு நாயகியாக நடிக்கிறேன். எனக்கு முக்கியத்துவம் உள்ள ஒரு கேரக்டர்.
ஸ்டேஜ் ஷோவிற்கும், தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுத்து வழங்குவதற்கும் என்ன வித்தியாசம்?
தொலைக்காட்சியைப் பொருத்தவரை ஓர் அறைக்குள் காமிராவை வைத்து நாம் என்ன பேசப் போகிறோமோ அதைப் பதிவு செய்வார்கள். ஓரளவுக்கு நாம் முன்பே அதற்குத் தயார் செய்து கொண்டு வந்துவிடுவோம். அப்படி ஏதாவது தவறாகப் பேசிவிட்டாலும் மறுடிபடியும் திருத்திக் கொள்ள ஒரு வாய்ப்பிருப்பதால் ஒரு கான்ஃபிடன்ட் இருக்கும். ஆனால், மேடை நிகழ்ச்சிகள் அப்படியில்லை. நம் முன் அமர்ந்திருக்கும் மக்கள் அனைவரின் முன்னிலையிலும் பேச வேண்டும். நாம் என்ன பேசுகிறோம் என்பதை அவர்கள் கவனித்துக் கொண்டிருப்பார்கள். அதனால் மிக ஜாக்கிரதையாகப் பேச வேண்டும்.
சினிமாவில் நடிக்க உங்கள் கணவர் ஒத்துழைப்பு கொடுக்கிறாரா?
கணவர் வெங்கட். பிஸினஸ் மேன். சமீபத்தில்தான் எங்களுக்குத் திருமணம் நடந்தது. டிவியில் என்னைப் பார்த்துவிட்டு அவருக்குப் பிடித்து போய், இந்தப் பெண்ணைத்தான் நான் திருமணம் செய்து கொள்வேன் என்று வீட்டில் சொல்லி என்னைத் திருமணம் செய்து கொண்டார். அது மட்டுமில்லாமல் சினிமாத்துறையில் அவருக்கும் நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். அதனால் இந்தத் துறையைப் பற்றி அவரால் புரிந்துகொள்ள முடிகிறது. வேறு யாராவது இப்படிப் புரிந்து கொண்டிருப்பார்களா என்பது தெரியவில்லை. அந்த விதத்தில் அவர் எனக்கு நூறு சதவிகிதம் உறுதுணையாக இருக்கிறார். அவர் மட்டும் இல்லை என் கணவர் வீட்டிலும் எல்லாரும் என்னிடம் அன்பாகவும், ஆதரவாகவும் இருக்கிறார்கள்.
http://dinamani.com/edition/story.as...44&SEO=&Title=