இயக்குநர் மிஷ்கினும் எழுத்தாளர் சாரு நிவேதிதாவும் ஆத்மார்த்த நண்பர்கள். அனேகமாக தினமும் சந்தித்து இரவு முழுக்க உலக சினிமா, இலக்கியம் பேசிக் கொண்டிருப்பவர்கள்.
நந்தலாலா காப்பி என்று பலராலும் விமர்சிக்கப்பட்ட போது, நந்தலாலா ஒரு உலக சினிமா என்று அவற்றுக்கெல்லாம் வரிந்து கட்டிக்கொண்டு பதில் எழுதிக்கொண்டிருந்தவர் சாரு. யார் கண் பட்டதோ? இப்போது, மிஷ்கினை திட்டவில்லை என்றால் தூக்கம் வராது என்கிற ரேஞ்சுக்கு இணையதளத்தில் தினமும் ஒரு பதிவு போடுகிறார் சாரு.
என்ன நடந்தது? சாரு நிவேதிதாவிடம் கேட்டோம்.
கடந்த மாதம் சென்னை காமராஜர் அரங்கில் நடந்த என் புதிய நாவலான தேகம் வெளியீட்டு விழாவுக்கு பேச்சாளர்களில் ஒருவராக மிஷ்கினை அழைத்திருந்தேன். அந்த விழாவில் மிஷ் கின் பேசும்போது, என் நாவலை சரோஜாதேவி புத்தகம் என்றும்,யாரும் அதை வீட்டில் வைத்துப் படிக்க முடியாது என்றும் சொன்னார்.ஆனால்,ஏன் இப்படியொரு முடிவுக்கு வந்தார் என்பதை விளக்கவில்லை.
இதோடு நிறுத்தியிருந்தால் கூடப் பரவாயில்லை;அது இலக்கிய விவாதமாகப் போயிருக்கும்.ஆனால், மிஷ்கின் நானும் அவரும் அந்தரங்கமாகப் பேசிக் கொண்டதை எல்லாம் அவ்வளவு பெரிய பொது-மேடையில் போட்டு உடைத்தார். அதில் 99 சதவிகிதம் பொய் வேறு.நான் வீட்டுக்கு அழைத்தால் ரெமி மார்ட்டின் இருக்கிறதா என்று கேட்பார்என்று சொன்னார். ஆனால், நடந்தது என்னவோ இதற்கு நேர் எதிர்.
மிஷ்கின் என்னை இரவு 9 மணிக்கு மேல்தான் அழைப்பார். போனால் பத்தரை மணிக்கு மேல் ரெமி மார்ட்டின் வெள்ளமாய் ஓடும்.காலை நான்கு மணி வரை போகும் பேச்சு. காலையில் பால்காரர் பால் போட வரும் போதுதான் வீடு திரும்புவேன்.என் மனைவி அவந்திகா தலையில் அடித்துக் கொள்வாள்.
இவர் அடிக்கடி அழைத்து,நான் அடிக்கடி குடிப்பது எனக்கு ஒத்து வரவில்லை. பல காரியங்கள் கெட்டுப் போயின. அதனால் இரவு ஒன்பது மணிக்கு மேல் மிஷ்கினிடமிருந்து அழைப்பு வந்தால் போனை எடுப்பதையே தவிர்க்க ஆரம்பித்தேன். பிறகு, இந்த வம்பே வேண்டாம் என்று குடிப்பதையே நிறுத்தினேன்.
மிஷ்கின் ஓய்வெடுப்பதற்காக நியூசிலாந்து சென்று வந்த போது, அங்கே எதுவும் நடந்ததா? என்று நான் கேட்டேனாம். அதாவது, மேட்டர் என்ற பொருள் படும்படி சொன்னார். தயவுசெய்து சொல்லுங்கள், இரண்டு நண்பர்கள் மிக அந்தரங்கமாகப் பேசிக் கொண்டிருந்ததை இப்படி பொதுமேடையில் சொன்னால் யாருடைய அந்தரங்கம்தான் இங்கே புனிதமானதாக இருக்கும்? அப்படிக் கேட்டேன் தான். ஏன் கேட்டேன்? நான் கிராமத்தில் இருந்து வந்தவன். மணநாள் முடிந்து மறுநாள் அங்கே ஒவ்வொரு தாயும் தன் மகளைப் பார்த்து, மாப்பிள்ளை எப்படி நடந்து கொண்டார்? என்று சூசகமாகக் கேட்பாள். முதலிரவு எப்படிக் கழிந்தது? என்று பொருள். அது மாதிரி ஒரு பிரியத்தில்தான், தனியாக வாழ்கிறாயே நண்பா; இங்கே நீ ஒரு நடிகையிடம் ஹலோ சொன்னாலே கிசுகிசு வந்து விடுமே? நியூசிலாந்து சென்றாவது உன் காமம் தணித்தாயா? என்று சங்கேதமான மொழியில் கேட்டேன். என் சொந்த மகனாக இருந்தாலும் 35 வயது வரை அவன் தனியாக வாழ்ந்தால், அப்படித்தான் கேட்பேன். அப்படிக் கேட்காதவன் நல்ல தகப்பன் அல்ல என்பது என் கருத்து.
என் வருத்தம் எல்லாம் இதுதான்.அந்தரங்கத்தை இப்படி பொதுவில் பேசலாமா? அது தர்மமா?
அந்தரங்க விஷயங்களை இப்படி பொதுவில் அலசலாம் என்றால், மிஷ்கின் என்னிடமும் நண்பர்களிடமும் இளையராஜா, கமல்ஹாசன் மற்றும் தன் சக இயக்குநர்கள் பற்றிச் சொன்னதை எல்லாம் நான் வெளியே சொல்லலாமா? இவர் ராஜாவிடம் மூன்று மணி நேரம் பேசிக் கொண்டிருந்தாராம். குடிக்கத் தண்ணீர் கூடத் தரவில்லையாம். ஆனால், அவர் மட்டும் குடித்துக்கொண்டே இருந்தாராம்.இவர் வாய் விட்டுக் கேட்டதற்கு, இது என் தண்ணீர் என்று சொன்னாராம். இளையராஜாவின் மருமகன் சபரி என் நண்பர்.அவர் அழைப்பின் பேரில் நவராத்திரியின் போது ராஜா வீட்டுக்குச் சென்றேன்.அட்டகாசமான அக்காரவடிசல் போட்டு விருந்து கொடுத்தார்கள். ஆனால் இவர் இப்படிச் சொல்கிறார்.
கமல் பற்றி மிஷ்கின் சொன்ன விஷயத்தை என் தலையே போனாலும் சொல்ல மாட்டேன்.
மொத்தத்தில் அன்பு பற்றி படம் எடுக்கும் மிஷ்கினிடம் அன்பு இல்லை என்று ஆவேசமாக பேச்சை முடித்துக் கொண்டார் சாருநிவேதிதா.
இதற்கு மிஷ்கின் என்ன பதில் சொல்லப்போகிறார்?.
Bookmarks