-
3rd May 2020, 04:48 PM
#181
Junior Member
Diamond Hubber
"ராம்சந்தருக்கு பால் கொண்டுவா டா..! எம்.ஜி.ஆருக்கு கிடைத்த முதல் கவுரவம்',"
நூற்றாண்டு நாயகன் எம்.ஜி.ஆர்.
அத்தியாயம் : 2
பிள்ளைகளின் எதிர்காலத்துக்காக சத்யபாமா உழைக்க ஆரம்பித்தார். உடலை வருத்தி ஒரே நாளில் பல சிறுசிறு வேலைகளைச் செய்து சம்பாதிக்க ஆரம்பித்தார். ஆனாலும் வறுமை அந்தக் குடும்பத்தை முழுவதுமாகவிட்டு விலகி ஓடிவிடவில்லை. பள்ளிசேர்க்கும் வயது வந்தபோது கும்பகோணம் ஆனையடிப் பள்ளியில் பிள்ளைகள் சேர்க்கப்பட்டனர். பள்ளியில் ராம்சந்தர் படுசுட்டி. ஏதாவது குறும்பு செய்துவிட்டு ஓடி ஒளிந்துகொள்வான். பஞ்சாயத்து, அண்ணன் சக்கரபாணிக்கு போகும். தம்பியைக் கூப்பிட்டுக் கோபப்படுவதுபோல் நடிப்பார். புகார் சொன்னவர்கள் சமாதானம் அடைவர். பிறகு, ''ஏன் ராம்சந்தர்... இப்படிச் செய்றே? அம்மாவிடம் யாராவது இதைச் சொன்னா பிரம்படிதான் கிடைக்கும்” என தம்பி மீது இரக்கப்பட்டுப் பேசுவார் சக்கரபாணி. எம்.ஜி.ஆர் அவர்களிடமிருந்த நல்ல பழக்கங்கள் பல சத்யபாமாவினால் வந்தவை. பிள்ளைகள் பொய்சொல்வதை, சொந்த சகோதரனாக இருந்தாலும் அனுமதியின்றி ஒருவர் பொருளை இன்னொருவர் எடுப்பதை அவர் அனுமதிக்கமாட்டார்.
இம்மாதிரி சமயங்களில்தான் சத்யபாமா பிரம்பைத் தூக்குவார்; படிப்பில் குழந்தைகள் சோடைபோனால்கூட மன்னிப்பார்; ஒழுக்கத்தில் குறை கண்டால் பொறுக்கமாட்டார். ஒழுக்கம்தான் பிள்ளைகளை உயர்த்தும் என்பதில் உறுதியான பெண்மணி அவர். சத்யபாமாவின் இந்தக் கண்டிப்புதான் சகோதரர்களை வறுமையிலும் செம்மையாக இருக்கவைத்தது.
படிப்பு, அப்படி இப்படி என்றாலும் சகோதரர்களுக்கு நடிப்பு நன்றாக வந்தது. பள்ளியில் அந்த வருட விழாவில் அரங்கேற்றப்பட்ட 'லவகுசா' நாடகத்தில் ராம்சந்தருக்கு லவன் வேஷம் அளிக்கப்பட்டது. சிறுவன் பின்னியெடுத்துவிட்டான். அதுமுதல் ராம்சந்தருக்கு தடபுடல் மரியாதைதான் பள்ளியில். நாடக ஆசையில் கொஞ்சநாள் கனவிலும் நனவிலும் தன்னை ராஜா போன்று எண்ணிப் பேசிவந்தான்.
இப்படித்தான் ஒரு விடுமுறை நாளில் சிறுவன் ராம்சந்தர் வில் அம்பு செய்து தெருவில் விளையாடிக்கொண்டிருந்தான். சிறுவன் விட்ட அம்பு தெருவில் போய்க்கொண்டிருந்த ஒருவர் மீது பட்டு காலில் ரத்தம் கொட்ட ஆரம்பித்தது. குறிபார்த்து விட 'ராமச்சந்திர'னா என்ன; ராம்சந்தர்தானே! பயந்து வீட்டில்போய் பதுங்கிக்கொண்டான். ஆனாலும் அடிபட்டவர், கோபத்துடன் ராம்சந்தர் வீட்டுக்குள் நுழைந்து, ''கூப்பிடுறா... உன் அப்பா அம்மாவை'' என எகிற... அப்போது, எதேச்சையாக உள்ளே நுழைந்தார் வேலுநாயர். அடிபட்டவரை பார்த்து, ''வாரும்... எப்போ வந்தீர்... ஏன் இவ்வளவு தாமதம்... இது என்ன ரத்தம்” எனக் கேட்டார். ராம்சந்தருக்கு ஒன்றும் புரியவில்லை. வீட்டுக்குள் இருந்துவந்த சத்யபாமாவுக்கும் ஒன்றும் புரியவில்லை. பின்னர்தான் புரிந்தது. வந்தவர் வேலுநாயரின் உறவினர். நாடகக் கம்பெனி ஒப்பந்ததாரர். பிள்ளைகள் இருவரும் படிப்பில் சற்று மந்தமாக இருந்ததால் சத்யபாமாவிடம் அனுமதி பெற்று அவர்களை நாடகக் கம்பெனியில் சேர்க்கத் திட்டமிட்டு வரச்சொல்லியிருக்கிறார். வந்த இடத்தில்தான் இந்த ரகளை.
எது எப்படியோ நாராயணன் நாயருக்கு (அடிபட்டவர்) சகோதரர்களைப் பிடித்துவிட்டது. சத்யபாமாவையும் பேசிக் கரைத்துவிட்டார் வேலுநாயர். புகழ்பெற்ற மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி அப்போது கும்பகோணத்தில் முகாமிட்டிருந்தது. அன்றே சிறுவர்கள் அதில் சேர்த்துவிடப்பட்டனர். கும்பகோணத்தில் கொஞ்சநாள் பயிற்சி. பின்னர் பாண்டிச்சேரியில் நாடகம் போட கம்பெனி நிர்வாகம் முடிவெடுத்தது. முதல்முறையாகத் தாயைப் பிரிந்துசெல்கின்றனர் சகோதரர்கள். இரண்டு தரப்பிலும் கண்ணீர் வெள்ளம். “ எல்லாம் உங்க நன்மைக்குதானப்பா” பிள்ளைகளின் கண்ணீரைத் துடைத்தபடி சொன்னார் சத்யபாமா. பீறிட்டுக் கிளம்பிய ரயிலின் சத்தத்தில் குழந்தைகளின் அழுகைச் சத்தம் குறைவாகவே கேட்டது.
நாடகக் கம்பெனியில், ராம்சந்தருக்கு மகாபாரத நாடகத்தில் விகர்ணன் வேஷம் கொடுக்கப்பட்டது. கௌரவர்களில் ஒருவனே இந்த விகர்ணன். கண்பார்வையற்ற மன்னனான திருதராஷ்டிரனுக்கும், காந்தாரிக்கும் பிறந்த நூறு பிள்ளைகளுள் ஒருவன். சிறுவேஷம் என்றாலும் ராம்சந்தருக்கு தன்னை நிரூபிக்க அது போதுமானதாக இருந்தது. நாடக நுணுக்கங்களை ஓரளவு சகோதரர்கள் தெரிந்துகொள்ளத் தொடங்கினர். விகர்ணன் வேஷத்தில் நன்றாக நடித்ததால், அடுத்த முறை அதே நாடகத்தில் அபிமன்யு வேஷம் தரப்பட்டது.
'நாடகத்தில் படையோடு எழுந்திடுவேன்' என அபிமன்யு பாடும் பாடல் ஒன்று உண்டு. ஆனால், எம்.ஜி.ஆருக்கு பாடுவதில் கொஞ்சம் தடுமாற்றம் இருந்தது. ரிகர்சலிலேயே கொஞ்சம் அப்படி இப்படித்தான் பாடினார். பாடலாசிரியரும் நாடகத்தின் நகைச்சுவை நடிகருமான பக்கிரிசாமி, “பையா நீ இந்தப் பாட்டை நாடகத்தில் நன்றாகப் பாடி முடித்துவிட்டால், உனக்கு என் பரிசு 1 ரூபாய். இல்லையென்றால் நான் தரும் தண்டனையை நீ வாங்கிக்கொள்ள வேண்டும்” எனக் கறாராகச் சொல்லிவிட்டார். 'இதென்னடா வம்பு, பாடினால் பரிசு... பாடாவிட்டால் தண்டனையா...' சரியாக சிக்கிக்கொண்டோமா என்ற குழப்பத்துடனே ரிகர்சலில் ஈடுபட்டான் சிறுவன் ராம்சந்தர்.
தண்டனைக்காக அல்லாமல் தான் பாடத்தகுதியற்றவன் என்ற ஆசிரியரின் எண்ணத்தை மாற்றியாகவேண்டும் என முடிவெடுத்தான் ராம்சந்தர். பலநாட்கள் கடும் முயற்சியில் ரிகர்சலில் ஈடுபட்டான். நாடகத்தன்று நாடகக் குழுவில் இருந்த ராம்சந்தரின் நண்பர்கள் பதைபதைப்போடு மேடையை வெறித்துகொண்டிருந்தனர்.
ராம்சந்தர் பாடத் தொடங்கினான். எங்கும் சுருதி விலகவில்லை. வாத்தியாரின் எதிர்பார்ப்பையும் விஞ்சி உச்சஸ்தாயியில் பாடி முடித்தபோது... அரங்கமே அதிரும்படி கைதட்டல் எழுந்தது.
வாத்தியார் வைத்த பரீட்சையில் தன் தம்பி ஜெயித்துவிட்டதை மகிழ்ச்சியுடன் அரங்கின் ஓரத்தில் நின்று ரசித்துக்கொண்டிருந்தார் சக்கரபாணி . நினைத்ததை முடித்துவிட்ட மகிழ்ச்சியில், கூட்டத்தைப் பெருமிதத்தோடு பார்த்துக்கொண்டிருந்தான் ராம்சந்தர்.
அரங்கில் அன்று அவன் காதுகளில் முதன்முறையாக ஒலித்த கைதட்டல், அடுத்த பல பத்து ஆண்டுகளுக்கு தொடரப்போவதை காலம் மட்டுமே அன்று அறிந்திருக்கும்.
சில நிமிடங்களும் தாமதிக்கவில்லை. பக்கிரிசாமி, ராம்சந்தரை அழைத்து கட்டிப்பிடித்தபடி ஓங்கி குரல் கொடுத்தார். “ஏய் பையா, ராம்சந்தருக்கு பால் கொண்டுவாங்கடா..”- ராம்சந்தருக்கு இன்னும் மகிழ்ச்சி. ஆம் அன்றைய நாளில் பாய்ஸ் கம்பெனியில் ஒரு வழக்கம் உண்டு. அதாவது, நாடகத்தில் அப்ளாஸ் வாங்கும் அளவு சிறப்பாக நடிப்பவர்களுக்கு கம்பெனி உரிமையாளர் தன் கையால் நாடகம் முடிந்தவுடன் பாராட்டி பால் தருவார். கம்பெனியில் அது ஒரு கெளரவம். அதுவரை அரிதான சிலரே அப்படி கெளரவம் பெற்றிருந்தனர். முதன்முறையாக ராம்சந்தருக்கு அன்று, அந்தக் கெளரவம் கிடைத்தது.
கம்பெனியில் நல்ல நடிகன் என பெயர் வாங்கியாகிவிட்டது. இப்போது முறைப்படி ராம்சந்தருக்கு 6 வருட அக்ரிமென்ட்டும், சக்கரபாணிக்கு 3 ஆண்டுகளும் என ஒப்பந்தம் கையெழுத்தானது. சகோதரர்கள் தொடர்ந்து பாய்ஸ் கம்பெனியின் நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தனர். பாலபார்ட் நடிகனாக ராம்சந்தர் நடித்துக்கொண்டிருந்தபோது அங்கு ராஜபார்ட் நடிகராக இருந்தவர் அந்நாளைய சூப்பர்ஸ்டார்களில் ஒருவரான பி.யு.சின்னப்பா. கதாநாயக நடிகர் என்பதால், கம்பெனியில் ஏக மரியாதை அவருக்கு. அதைப் பார்க்கிறபோதெல்லாம் தானும் ஒருநாள் இப்படிப் பலரும் மதிக்கும் பெயரும் புகழும் பெற்ற நடிகனாக வேண்டும் என்ற வெறி சிறுவன் ராம்சந்தரின் மனதில் எழும். ராம்சந்தரின் ஆசை நிறைவேறியதா...?
தொடரும்... .....
விகடன்
யாழ் இணையம்
-
3rd May 2020 04:48 PM
# ADS
Circuit advertisement
-
3rd May 2020, 04:49 PM
#182
Junior Member
Diamond Hubber
"எம்.ஜி.ஆர் குருவிடம் அறை வாங்கியது ஏன்...?"
நூற்றாண்டு நாயகன் எம்.ஜி.ஆர் -
அத்தியாயம் : 3
அந்நாளில் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் சேர்வது என்பது குதிரைக்கொம்பான விஷயம். திறமையுள்ளவர்களுக்கு மட்டுமே அங்கு கதவுகள் திறக்கப்படும். சச்சிதானம்பிள்ளை என்பவர் நடத்திவந்த இந்த நாடக கம்பெனியில் நடித்தவர்கள் பின்னாளில் புகழ்பெற்ற சினிமா நட்சத்திரங்களானார்கள். பி.யு சின்னப்பா, பி.ஜி. வெங்கடேசன், டி.எஸ் பாலையா, நன்னையா பாகவதர், கே.பி கேசவன், பிரபல நாடகாசிரியர் எம்.கந்தசாமி முதலியார், அவரது மகன் எம்.கே. ராதா, கே.ஆர் ராமசாமி , காளி என்.ரத்தினம் என இந்த பட்டியல் ரொம்ப நீளம். இந்த பட்டியலில் ராம்சந்தருக்கும் ஓர் இடம் இப்போது.
பாய்ஸ் கம்பெனியில் சேர வெறும் கலை ஆர்வமும் நடிப்புத்திறனும் மட்டுமே தகுதிகளில்லை. கிட்டதட்ட அது ஓர் குருகுல வாசம்போல. நடிப்புப் பயிற்சிக்கு முன்னதாக அவர்களுக்கு அடிப்படை படிப்பு சொல்லித்தரப்படும். விடியற்காலை எழுந்ததும் தேகப்பயிற்சி, பின்னர் வீர திர விளையாட்டுப்பயிற்சி, நாடக வசனங்களை பாடம் செய்தல், பாடும் பயிற்சி, நடனப்பயிற்சி என கிட்டதட்ட ஒருவனை நாடகத்துறையில் சகலகலா வல்லவனாக்கும் முயற்சிகள். அதேசமயம் இத்தனை பயிற்சிக்குப்பின்னும் நாடகத்தில் சொதப்பினால் அதற்கு தண்டனைகளும் உண்டு. அந்த தண்டனைக்கு பயந்தே நடிகர்கள் கண்ணும் கருத்துமாக பயிற்சிகளை செய்வார்கள். உடலையும் உள்ளத்தையும் உறுதியாக்க பாய்ஸ் கம்பெனி இட்ட இந்த உரம்தான் பின்னாளில் ராம்சந்தரை 'எம்.ஜி.ஆர்' ஆக ஆக்கியது என்பதில் சந்தேகமில்லை.
சேர்ந்தபோது மாத சம்பளம் நாலணா. இப்போது 5 ரூபாய். சக்கரபாணிக்கும் அதேதான். பெருமிதமான இந்த அங்கீகாரத்துடன் தனது திறமையை மட்டுப்படுத்திக்கொள்ளாமல் இன்னும் புகழடையவேண்டும் என்ற எண்ணம் ராம்சந்தருக்கு தீவிரமானது. அந்நாளில் கம்பெனியில் எம்.ஜி.ஆருக்கு குருவாக இருந்தவர் எம்.கந்தசாமி முதலியார். இவர் தமிழகத்தில் நாடக வளர்ச்சிக்கு வித்திட்டவர்களில் முக்கியமானவர். எம்.ஜி.ஆருக்கு நடிப்பு சொல்லிக்கொடுத்தவர் காளி என்.ரத்தினம்.
நாடகங்கள் குறித்த முக்கியத்துவம், நடிகர்களின் அர்ப்பணிப்பு போன்றவற்றை ராம்சந்தருக்கு உணர்த்தியவர் எம்.கே என்றால், ஒரு நடிகன் கதாபாத்திரத்தில் சோபிக்க என்னவெல்லாம் தியாகம் செய்யவேண்டும், எப்படியெல்லாம் தன்னை கதாபாத்திரத்திற்குள் பொருத்திக்கொள்ள வேண்டும் என்பதை ராம்சந்தருக்கு சொல்லிக்கொடுத்தவர் காளி என்.ரத்தினம். எம்.ஜி.ஆரின் நடிப்புக்கு ஆதாரமானவர்கள் இவர்கள் இருவரும். உதாரணமாக இவர்களுடனான ராம்சந்தரின் ஒரு அனுபவத்தை சொல்லலாம்.
ராம்சந்தர் அப்போது ராஜேந்திரன் என்ற நாடகத்தில் நடித்துவந்தார். ஊதாரித்தனமாக செலவு செய்யும் பெரும் பணக்கார வாலிபன் வேடம் அவருக்கு தரப்பட்டிருந்தது. ஒரு காட்சியில் மகனின் ஊதாரித்தனத்தால் அவனுக்கு தன் கணக்கில் வங்கியில் பணம் தர வேண்டாம் என அவரது தந்தை வங்கிக்கு அறிவுறுத்தியிருந்தார். இதுதெரியாமல் சென்று 'செக்' கிற்கு பணம் கேட்க வங்கி மறுக்கிறது. கோபமடைந்த வாலிபன் தன் செருப்பை கழற்றி வங்கி அதிகாரிகளை அடிப்பதுபோல் ஓங்கியபடி வெறியாட்டம் போடுகிறான். நாடகத்திற்கு நடிப்பு சொல்லிக்கொடுத்தவர் காளி.என். ரத்தினம்.
முதல்நாள் நாடக அரங்கேற்றம் நடந்து முடிந்து ஓய்வாக வந்து தன் இருக்கையில் வந்து அமர்ந்தார் ராம்சந்தர். அப்போது வேகமாக அவரை நோக்கி முன்னேறி வந்த கந்தசாமி முதலியார் ராம்சந்தரின் முகத்தில் ஒங்கி ஒரு அறை விட்டார். அதிர்ந்துபோயினர் அங்கிருந்தவர்கள். கந்தசாமி முதலியார் நடிப்பு விஷயங்களில் கொஞ்சம் முரட்டுமனிதர். அதனால் அவரிடம் சென்று ராம்சந்தரை அறைந்ததற்கான காரணம் கேட்க யாருக்கும் தைரியமில்லை. எந்த தவறும் செய்யாத தன்னை ஏன் வாத்தியார் அடித்தார் என கன்னத்தை பிடித்தபடி நின்றான் ராம்சந்தர். தந்தை என்பதால் எம்.கே.ராதா மட்டும் துணிந்துகேட்டார். எதற்காக அவனை அடித்தீர்கள் நன்றாகத்தானே நடித்தான்...?
“முட்டாள்தனமான நடிப்பு...எந்த பணக்காரனாவது பொது இடத்தில் இப்படி செருப்பை கழற்றி அநாகரீகமாக நடந்துகொள்வானா...ஏற்ற பாத்திரத்தின் தன்மையை புரிந்துகொள்ள வேண்டாமா... இப்படி நடித்தால் நாடகம் பார்ப்பவர்கள் என்னையும் நம் நாடக குழுவையும்தானே தவறாக பேசுவார்கள். ரத்தினம் என்ன பாடம் சொல்லிக்கொடுத்தான் இவனுக்கு! ” என்று பொரிந்து தள்ளினார் கந்தசாமி முதலியார். ராம்சந்தருக்கு எந்த கோபமும் எழவில்லை. காரணம் தந்தையை இழந்து தாயை பிரிந்து வறுமைக்காக கலைத்துறையில் ஈடுபட்டிருக்கும் தனக்கு எல்லாமுமாக இருந்து இதுநாள் வரை வழிநடத்தி வருபவர் எம்.கே முதலியார் என்பதால், அவர் எதை செய்தாலும் அது தன் வளர்ச்சிக்குத்தான் என்பதில் உறுதியாக இருந்ததே. நல்ல படிப்பினையாக அந்த சம்பவத்தை எடுத்துக்கொண்டான் ராம்சந்தர்.
அதேசமயம் தன்னை வாத்தியார் அடித்ததை யாரும் தட்டிக்கேட்க துணிவில்லாதபோது தைரியமாக தனக்காக தன் தந்தையையே எதிர்த்து கேள்வி கேட்ட எம்.கே.ராதாவின் அன்பில் நெகிழ்ந்துபோனார் எம்.ஜி.ஆர். தன் சொந்த சகோதரர் சக்கரபாணிக்கு இணையான பாசத்துடன் இறுதிவரை அவரையும் தன் சொந்த சகோதரர் போன்றே மதித்து பாசத்துடன் பழகினார் எம்.ஜி.ஆர்.
எம்.ஜி.ஆருக்கு முன்னரே சந்திரலேகா, அபுர்வ சகோதரர்கள் பாசவலை போன்ற படங்களில் நடித்து பின்னாளில் புகழ்பெற்றவர் எம்.கே.ராதா. திரையுலகில் புகழடைந்ததற்கு பின், எம்..ஜி.ஆர் பொது இடங்களில் மூத்தவர்களின் கால்களில் விழுந்து வணங்கியது அரிதான சந்தர்ப்பங்களில்தான். அணணா கூட இடம்பெறாத இந்த பட்டியலில் எம்.கே ராதாவும், சாந்தாராமும் இடம்பெற்றிருந்தனர். தன் வாழ்நாளில் முக்கியமான எந்த நிகழ்வுகளுக்கும் எம்.கே.ராதாவை தேடிச்சென்று ஆசிபெறுவதை இறுதிவரை கடைபிடித்தார் எம்.ஜி.ஆர். எம்.கே.ராதாவின் மீது அத்தனை மரியாதையும் அன்பும் வைத்திருந்தார் எம்.ஜி.ஆர்.
இனி நடிப்பில் சோடைபோகக்கூடாது. வாத்தியாரிடம் அடி வாங்கக்கூடாது என அன்றே உறுதி எடுத்துக்கொண்டார் ராம்சந்தர். தொடர்ந்து மனோகரா உள்ளிட்ட பல நல்ல நாடகங்கள் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் நடத்தப்பட்டன. இந்த நேரத்தில் பி.யு சின்னப்பாவை போல் பெரிய நடிகர் ஆக வேண்டும் என்ற ராம்சந்தரின் ஆசை ஒருநாள் கைக்கூடிவந்தது.
அப்போது பாய்ஸ் கம்பெனி 'தசாவதாரம்' என்ற நாடகத்தை நடத்திவந்தது. சென்னையில் பல நாட்கள் தொடர்ந்து நடந்த வெற்றிகரமான நாடகம். பின்னர் பாலக்காட்டில் நடத்தப்பட்டது. இதில் பரதனாக பி.யு சின்னப்பா நடித்தார். ராம்சந்தருக்கு சத்ருகன் வேடம். பெயருக்குத்தான் வேடம்; அதில் நடிப்புத்திறமையை காட்டும் வாய்ப்பு துளியும் இல்லை. வேண்டா விருப்பமாகவே நடித்துவந்தார் ராம்சந்தர். ஒருநாள் புதுக்கோட்டையில் இருந்து பாலக்காட்டுக்கு பறந்து வந்தது அந்த 'அதிர்ச்சி' தந்தி. தந்தி சொன்ன சேதி என்ன...?
தொடரும் ..........
Vikatan News
யாழ் இணையம்.
-
3rd May 2020, 04:51 PM
#183
Junior Member
Diamond Hubber
"கதர் பக்தியும் காந்தி தரிசனமும்..!"
நூற்றாண்டு நாயகன் எம்.ஜி.ஆர் -.
அத்தியாயம் : 4
பாலக்காட்டில் நடந்த 'தசாவதாரம்' நாடகம் பி.யு சின்னப்பாவின் புகழை அதிகப்படுத்தியது. சென்ற இடங்களில் எல்லாம் பாராட்டு மழை. ஆனால் அது நிலைக்கவில்லை. ஆம், நாடக குழு தங்கியிருந்த வீட்டிற்கு பறந்துவந்தது ஒரு தந்தி. சின்னப்பாவின் தாய் மறைந்துவிட்டதை சொன்னது அது.
அழுதபடி ஊருக்கு புறப்பட்டார் சின்னப்பா. வெளி மாநிலம். நாடகத்திற்கு நல்ல வசூல். தொடர்ந்து இன்னும் சில தினங்கள் நடத்தினால் நல்ல வசூலாகலாம். கம்பெனி நிர்வாகிக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. “கே.ஆர் ராமசாமியை கூப்பிடுவோமா அவசரத்துக்கு” என்றார் வாத்தியார். “அவனை தேடி கண்டுபிடிச்சி ஒத்திகை நடத்தி...விடிஞ்சிடும் போ...”கவலையுடன் சொன்னார் முதலாளி. பலரும் பலரை பரதன் பாத்திரற்கு பரிந்துரைத்தார்கள்.
முதலாளிக்கு திடீரென ஒரு யோசனை உதித்தது. “ஆமாம் அந்த ராம்சந்தர் எங்க இருக்கான் கூப்பிடு அவனை”. ஆரம்பத்திலிருந்தே சின்னப்பாவுடனேயே வருவதால் எப்படியும் பரதன் வேடத்திற்கான வசனங்கள் அத்துபடியாகி இருக்கும். எனவே ராம்சந்தர்தான் சரியான மற்றும் விரைவான தேர்வு என அவர் தீர்க்கமாக முடிவெடுத்தார்.
உடனடியாக நாடக குழுவினர் தங்கியிருந்த வீட்டுக்கு ஆள் அனுப்பப்பட்டது. ஆனால் அங்கு ராம்சந்தர் இல்லை. விசாரித்ததில், பாலக்காட்டில் உள்ள தனது உறவினர் ஒருவரை பார்க்க சென்றுவிட்டதாக சொன்னார்கள். முதலாளியிடம் சென்று தகவல் சொன்னபோது, “என்ன செலவானாலும் சரி, ராமசாமியை உடனே கிளம்பி பாலக்காடு வரச்சொல்லு” என்றார் கொதிப்பான குரலில். அதே நேரம் அந்த இடத்திற்கு வியர்க்க விறுவிறுக்க ஓடி வந்துகொண்டிருந்தார் ராம்சந்தர்.
எல்லோர் முகத்திலும் ஆச்சர்யமும் அதிர்ச்சியும் உண்டானது. முதலாளி முகத்தில் கொள்ளை சந்தோஷம். “டேய்... போய் பரதன் பாடத்தை படி...இன்னிலேர்ந்து நீதான் பரதன்”- அசரீரி போல முதலாளி சொன்னதைக் கேட்டு தன்னையே கிள்ளிப்பார்த்துக்ககொண்டார் ராம்சந்தர்.
பாலக்காட்டின் இன்னொரு மூலையில் இருந்து முதலாளியைத் தேடி ராம்சந்தர் அத்தனை சீக்கிரம் வந்தது எப்படி..?
வீட்டில் ராம்சந்தரை தேடி வந்ததை பார்த்த அவரது சக நடிகனான நண்பன், விஷயத்தை கேட்டு தெரிந்துகொண்டு தம் நண்பனுக்கு வந்த வாய்ப்பு பறிபோய்விடக்கூடாது என வாடகை சைக்கிள் பிடித்து அழைத்துவந்திருக்கிறார். நண்பனால் ராம்சந்தரின் கனவு நனவானது அன்று.
“பாடம் படி, போ" என காளி. என்.ரத்தினம் சொன்னபோது, “தேவையில்லை அண்ணே... என் பாடத்தோட அவர் பாடத்தையும் நான் படிச்சி வெச்சிருக்கேன். ஒருதடவை ஒத்திகை பார்த்தால் போதும்”- நெகிழ்ந்தார் ரத்தினம். இதுதான் எம்.ஜி.ஆர்!
'வாய்ப்புகள் வரும்... போகும். அல்லது எப்போதாவது வரலாம். அதற்காக தகுதியை நாம் வளர்த்துக்கொள்ளவேண்டுமே தவிர வாய்ப்பு வரவில்லை என சுணங்கிவிடக்கூடாது. சுணங்கினால் வாய்ப்பு வரும்போது அதை பயன்படுத்திக்கொள்ள முடியாமல் போய்விடும். திரைத்துறையில் அரசியலிலும் எம்.ஜி.ஆர் பெற்ற வெற்றிகளுக்கு எல்லாம் இதுதான் காரணம். பாலக்காட்டில் பரதன் என்ற கதாபாத்திரத்தில் முதன்முறையாக கதாநாயகன் வேடம் ஏற்றார் எம்.ஜி.ஆர்.
பி.யு.சின்னப்பா நடித்த பாத்திரத்தில் ராம்சந்தர். மக்கள் ஏற்றுக்கொள்வார்களா என்ற ஐயம் முதல்நாளிலேயே தீர்ந்தது. சின்னப்பாவுக்கு வந்த அதே கைதட்டல். பத்துநாட்கள் மட்டுமே நடத்த திட்டமிட்டிருந்த நாடகம் அடுத்த பத்து பத்து நாட்கள் கூடுதலாக நடந்தது. கதாநாயகனாக வெற்றிபெற்றார் எம்.ஜி.ஆர்.
ஆயினும் சின்னப்பா திரும்பி வந்ததால் கடைசி 2 நாட்கள் அவரே மீண்டும் பரதனாக நடித்தார். ஆனாலும் முதலாளி கடைசி நாளன்று எம்.ஜி.ஆரின் அருகே வந்து அவரது காதுகளில் மெதுவாக சொன்னார் இப்படி, “ டேய் ராம்சந்தர், வாய்ப்பு விட்டுப்போச்சுன்னு கவலைப்படாதேடா...சின்னப்பாவின் எல்லா பாடத்தையும் நேரம் கிடைக்கும்போது படிச்சி வெச்சிக்கடா...பின்னாடி பயன்படும்”- முதலாளி வாக்கு பலித்தது ஒருநாள்.
தற்காலிகமாக வந்த கதாநாயகன் வாய்ப்பு நிரந்தரமாகும் காலம் கைக்கூடிவந்தது சில மாதங்கள் கழித்து. ஆம், 'தசாவதாரம்' முடிந்து கம்பெனியின் அடுத்தடுத்த நாடகங்கள் பல அரங்கேற்றப்பட்டன. அதில் ஒன்று 'சந்திரகாந்தா'. அதில் சுண்டூர் இளவரசன் வேடத்தில் சின்னப்பா நடித்துக்கொண்டிருந்தார். பாய்ஸ் கம்பெனிக்கும் தனிப்பட்ட முறையில் சின்னப்பாவுக்கும் புகழ் தந்த நாடகங்களில் ஒன்று இது.
ஆந்திர மாநிலம் சித்துாரில் இந்த நாடகம் நடந்துகொண்டிருந்தபோது சின்னப்பாவுக்கு மகரக்கட்டு பிரச்னை வந்தது. இதனால் நாடகத்தில் அவரால் பாடி நடிக்கமுடியாத நிலை. இதனால் நாடகம் கொஞ்சநாள் நிறுத்தப்பட்டது. அதற்குள் சின்னப்பாவால் குரலை தேற்ற முடியவில்லை. கொஞ்சநாளில் மனக்கசப்பும் உருவாகவே சின்னப்பா கம்பெனியை விட்டு விலகுவதென முடிவெடுத்தார். அவர் விலகியதையடுத்து முக்கிய கதாநாயகன் பாத்திரங்கள் எம்.ஜி.ஆருக்கும், கம்பெனியின் மற்றொரு நடிகரான கே.எம்.கோவிந்தன் என்பவருக்கும் பிரித்தளிக்கப்பட்டன.
இதில் எம்.ஜி.ஆருக்கு அளிக்கப்பட்டவை முக்கிய கதாபாத்திரங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மனோகராவில் மனோகரன், சந்திரகாந்தாவில் சுண்டூர் இளவரசன், பதிபக்தியில் வீரமுத்து, இப்படி! பாத்திரங்கள் எம்.ஜி.ஆருக்கு நிரந்தரமாகின; நிரந்தரம் என்றால் பெயரளவில் இல்லை. ராஜபார்ட் நடிகர்களுக்கு கம்பெனி தரும் சிறப்பு சலுகைகளும் சிறப்பு மரியாதைகளும் எம்.ஜி.ஆருக்கு இப்போது கிடைத்தன.
ஆனாலும் கதாநாயகனாத்தான் நடிப்பேன் என எம்.ஜி.ஆர் தன்னை கட்டுப்படுத்திக்கொள்ளவில்லை. ராஜபார்ட், ஸ்திரீ பார்ட் என எதிலும் தன்னை நிரூபித்தார். மகழ்ச்சியாக சென்றன நாட்கள்.
இந்த சமயத்தில் எம்.ஜி.ஆருக்கு 'கதர் பக்தி' என்ற நாடகத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நாடகத்தின் முடிவில் நிஜமாகவே காந்தியத்தின் மீதும், காந்தியின் மீதும் காதல் உண்டானது. இதனால் கதர்த்துணிகளையே உடுத்த ஆரம்பித்தார். காரைக்குடியில் அவரது நாடகம் ஒன்று நடத்தப்பட்டபோது போராட்டம் ஒன்றில் கலந்துகொள்வதற்காக காந்தி அங்குவந்திருந்தார்.
விஷயம் அறிந்த எம்.ஜி.ஆர், தன் ஆதர்ஷ நாயகனை நேரில் பார்ப்பதென முடிவெடுத்து காந்தி கலந்துகொண்ட கூட்டத்திற்கு ஆர்வத்துடன் சென்றார். காந்தியை நேரில் சந்தித்தார். புகழ்பெற்ற நடிகரான பின் ஒருமுறை காந்தியை சந்தித்த தன் அனுபவத்தை இவ்வாறு விவரித்திருந்தார்.
"நான் அப்போது இளைஞன்தான். காங்கிரஸ் கட்சியில் நான் இருந்தேன். கதராடையே அணிந்து வந்தேன். காரைக்குடிக்கு காந்தியடிகள் வந்து ஒரு மேடை மீது நின்று, மக்களுக்கு தரிசனம் தந்தார். அமைதியும், எளிமையும் உருவான அவரைப் பார்த்ததும் ஏதோ செய்வத்தன்மை பொருந்திய ஒருவரைப் பார்ப்பது போன்ற பக்தி உணர்வுதான் ஏற்பட்டது.
அந்தப் புன்சிரிப்பும், அவரது நடையும், குனிந்த தலையும் என் உள்ளத்தில் இன்னும் சித்திரமாகப் பதிந்திருக்கின்றது. ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்த அக்கூட்டத்தில் ஒரு மூலையில் நின்றபடி பார்த்தேன் இந்த பார் முழுதும் போற்றும் மகானை. அப்போது மக்களுக்கு என்னை அதிகம் தெரியாது."
காலத்தின் விளையாட்டு, பின்னாளில் காந்தி வளர்த்தெடுத்த, அவரது கொள்கைகளை முன்னெடுத்த காங்கிரஸ் கட்சியையே அவர் எதிர்க்க நேர்ந்ததுதான்.
மீண்டும் நாடக கம்பெனிக்கு வருவோம்... சினிமா படங்கள் தோன்றி மவுனப்படங்களாக வெளிவந்து மக்களுக்கு ஆச்சர்யத்தை தந்துகொண்டிருந்த காலம் அது. தமிழகத்தில் மவுனப்பட காலம் முடிந்து பேசும்படங்கள் தயாரிக்கும் முயற்சிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்துகொண்டிருந்தன.
இந்த நேரத்தில்தான் கம்பெனியின் முக்கிய நடிகர்கள் பலரும், குறிப்பாக வாத்தியார் எம்.கந்தசாமி முதலியார், எம்.கே.ராதா போன்றோர் சினிமா ஆசையில் கம்பெனியில் இருந்து விலகிச் சென்றிருந்தனர்.
கம்பெனியில் ராஜபார்ட் நடிகர், சகலவிதமான மரியாதைகள், கணிசமான சம்பளம் என விரும்பியதெல்லாம் கிடைத்தாலும் சகோதரர்கள் தனிமையை உணர ஆரம்பித்தனர் கொஞ்சநாளில்...
தொடரும் ........
-
3rd May 2020, 04:53 PM
#184
Junior Member
Diamond Hubber
"எம்.ஜி.ஆர் அழுத ரகசியம்!"...
" நூற்றாண்டு நாயகன் எம்.ஜி.ஆர்"...!
🍁 அத்தியாயம் : 5🍁
கம்பெனியில் இருந்த தனது நலன் விரும்பிகள் வெளியேறிவிட்ட கவலையில் நாடகங்களில் பங்கெடுத்துவந்த ராம்சந்தருக்கு இன்னொரு பிரச்னை உருவானது. ஆம் பி.யு.சின்னப்பாவுக்கு வந்த அதே மகரக்கட்டு பிரச்னை. பாடி நடிக்கும் குரல்வன்மை போனதால் ஒரேநாளில் எல்லாமே தலைகீழானது. வாழ்க்கை ஒரு வட்டம் என்பதுபோல் சின்னப்பாவிடமிருந்து ராம்சந்தருக்கு வந்த ராஜபார்ட் வேடங்கள் இப்போது இன்னொருவருக்கு அளிக்கப்பட்டது.
மகரக்கட்டு என்பது ஆண்களுக்கு பருவ வயதின் துவக்கத்தில் குரல்வளம் கடினமாக மாறிவிடும் தன்மை. சிறுவர்கள் பெரியவர்களாகிவிட்டதற்கான அடையாளம் அது. இயல்பான மனிதர்களுக்கு அதில் சிக்கலில்லை. தொழில்முறை நாடக நடிகர்களுக்கு அது வனவாசம் போன்ற காலகட்டம். எந்த பாத்திரத்திற்கும் அந்த குரல் பொருந்திவராது. இக்காலகட்டத்தில் நடிகர்கள் பெரும்பாலும் வேறு தொழிலுக்கோ அல்லது நாடக குழுவிலேயே வேறு பிரிவுக்கோ மாறிவிடுவர். மகரக்கட்டினால் பாட வாய்ப்பில்லாத சில பாத்திரங்கள் மட்டுமே ராம்சந்தருக்கு ஒதுக்கப்பட்டன. சக்கரபாணி தன் தம்பியின் நிலை கண்டு வருந்தினார்.
'தொடர்ந்து கம்பெனியில் தங்கி தம் திறமையை மழுங்கடித்துவிடக்கூடாது. அதேசமயம் கம்பெனியை விட்டு முற்றாக வெளியேறிவிடுவதும் புத்திசாலித்தனம் இல்லை' என சிந்தித்த சகோதரர்கள், குரல் வன்மை திரும்ப வரும்வரை முதலாளிக்கு தெரியாமல் வேறு கம்பெனியில் சேர்ந்து நடிப்பது என முடிவெடுத்தனர். ஆனால் அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் தெரிந்த நண்பர்கள்தான். நாடக குழுக்களின் அறிமுகம் எதுவும் கிடையாது. கம்பெனியின் பழைய வாத்தியாரான எம்.கந்தசாமி முதலியார், மொய்தீன் என்ற நாடக ஒப்பந்ததாரருடன் இணைந்து சிங்கப்பூரில் நாடகம் போட்டுவந்த தகவலை அப்போதுதான் சக்கரபாணியின் நண்பர் ஒருவர் சொன்னார்.
சகோதரர்களுக்கு மகிழ்ச்சி. நம் மீது அன்பு கொண்ட வாத்தியார் எப்படியும் நமக்கு ஒரு வழிகாட்டுவார் என்ற எண்ணத்துடன் அவரை நேரில் சந்தித்தனர். 'பசங்களா எப்படிடா இருக்கீங்க...' என நலம் விசாரித்த கையோடு சகோதரர்களின் பிரச்னைக்கும் தீர்வு சொன்னார் எம்.கே.
மொய்தீன் குழுவில் சகோதரர்களை சிங்கப்புர் அழைத்துச்செல்வதென முடிவெடுக்கப்பட்டது. நாகப்பட்டினத்தில் 12 நாட்கள் நாடக ஒத்திகை நடந்தது. ஆனால் அன்றைய அரசியல் சூழலால் அந்த பயணம் ரத்தானது. அதற்கு பதிலாக பர்மா பயணமாக முடிவானது.
பர்மா செல்லும் நாள் வந்தது. அந்நாளில் நாடக குழுக்களில் நடிப்பவர்கள் அவ்வப்போது நாடக குழுக்களை மாற்றிக்கொள்வது சகஜம் என்றாலும் தமக்கு ஆதரவளித்த கம்பெனிக்கு துரோகம் செய்துவிட்டு வேறு குழுவுக்கு வந்தது சகோதரர்களுக்கு உறுத்தியது. அப்படி தம்முடன் பழைய குழுவில் இருந்த யாரேனும் நம்முடன் வந்து நம்மை அடையாளம் கண்டுவிடுவார்களோ என்ற அச்சம் சக்கரபாணியை விட ராம்சந்தருக்கு அதிகமாக இருந்தது. அதற்கு காரணம் உண்டு.
பாய்ஸ் கம்பெனியில் முதலாளி சச்சிதானந்தம் கோபக்காரர்தான். ஆனால் பேச்சோடு அவர் கோபம் நின்றுவிடும். ஆனால் வாத்தியார் காளி.என்.ரத்தினம் அப்படியல்ல; கோபம் வந்தால் தாறுமாறாக அடித்துவிடுவார். பாய்ஸ் கம்பெனியில் சேர்ந்த புதிதில் ராம்சந்தர் நல்லதங்காள் நாடகத்தில் நடித்தார். அதில் வறுமையினால் தன் குழந்தைகளை ஒவ்வொருவராக கிணற்றில் வீசிவிடுவாள் நல்லதங்காள். கடைசி குழந்தை ராம்சந்தர். கடைசி குழந்தையை வீசும் முன் அந்த குழந்தை அம்மாவிடம் தன்னை கொன்றுவிடாதே என்றும் தான் குடும்பத்தை காப்பாற்றுவதாகவும் அழுதபடி கூறவேண்டும்.
ஆனால் ராம்சந்தருக்கு அப்போதிலிருந்தே அழுகை மட்டும் கொஞ்சம் சிக்கல் தரும் விஷயம். ஒத்திகையின்போதே டயலாக் பேசுவார். அழுகை வராது. அழவில்லையென்றால் அந்த காட்சி உருக்கமாக இருக்காது. இதற்காக காளி.என்.ரத்தினம் ஓர் உபாயம் செய்தார். முதல்நாள் நாடக அரங்கேற்றத்தின்போது அந்த காட்சியில் ராம்சந்தரை வசனம் பேசியபடி நாடக மேடையின் ஓரமாக வரச்சொல்லியிருந்தார் ரத்தினம்.
வாத்தியார் கூப்பிடுகிறாரே என சிறுவன் ராம்சந்தர் வசனம் பேசியபடி மேடையின் ஓரம் வர, திடடமிட்டபடி அங்கு மறைந்திருந்த ரத்தினம் ராம்சந்தரின் தலையில் ஒங்கி ஒரு குட்டு வைத்தார். உயிர் போகும் வலி. ராம்சந்தர் நிஜமாகவே அழுதபடி வசனம் பேச, அதை சிறுவனின் யதார்த்தமான நடிப்பு என நம்பி, “அடடா, என்னமா நடிக்கிறான்யா பையன்! ” என அரங்கில் பலத்த கைதட்டல். வலியினால் நாடகம் முடிந்தபின்னும் அழுதுகொண்டிருந்தான் ராம்சந்தர். இப்படி நாடகத்தின் வெற்றிக்காக எதையும் செய்யத் தயாராக இருப்பவர் காளி.என். ரத்தினம்.
கப்பல் பயணத்தில் இந்த சம்பவம்தான் திரும்ப திரும்ப நினைவில் வந்து ராம்சந்தரை பயமுறுத்திக்கொண்டிருந்தது.
யாராவது பார்த்துவிட்டு முதலாளியிடம் சொல்லிவிடுவார்களோ என்ற அச்சத்துடனேயே பர்மா பயணமானார்கள் சகோதரர்கள். பர்மாவில் நாடகம் துவங்கியது. ஒருநாள் நாடகத்தின் க்ளைமேக்ஸ் காட்சி நடந்துகொண்டிருந்தது. அப்போதுதான் அந்த சம்பவம் நடந்தது
தொடரும்.........
-
3rd May 2020, 04:55 PM
#185
Junior Member
Diamond Hubber
"எம்.ஜிஆரை சிறைக்கு அனுப்பிய காந்தி!" -
நூற்றாண்டு நாயகன் எம்.ஜி.ஆர் -
அத்தியாயம் : 6
மகரக்கட்டினால் கம்பெனியிலிருந்து வெளியேறி பர்மாவில் வேறொரு குழுவுடன் நாடகம் நடிக்கச் சென்றிருந்த ராம்சந்தர் நாடகத்தன்று முதன்முறையாக பூகம்பம் என்ற ஒன்றை நேரில் உணர்ந்தார்கள்
ஆம் நாடக மேடையில் நாடகம் நடந்துகொண்டிருந்தபோது கட்டிடம் ஒரு கணம் குலுங்கி நின்றது. அதிர்ச்சிக்கு ஆளானார்கள் அத்தனைபேரும். என்னவாயிற்று என்பதை உணர்வதற்குள் இன்னொரு முறை நிகழ்ந்தது அந்த சம்பவம். பதறியபடி தெருக்களில் சிதறி ஓடினர் நாடகம் பார்க்கவந்தவர்கள். சக்கரபாணி, தம்பியை தேடினார். சிறிதுநேரத்திற்குப்பின்னர்தான் தம்பியை கண்டுபிடித்தார். இது பூமி அதிர்ச்சி என்றார்கள். சகோதரர்கள் அந்த அதிர்ச்சியிலிருந்து மீள சில தினங்கள் பிடித்தன.
பர்மாவில் நாடகம் நடந்துகொண்டிருந்த சமயம் பி.யு.சின்னப்பாவும் பல இடங்களில் வாயப்புத் தேடி அலைந்து திரிந்து இறுதியாக மொய்தீன் குழுவில் நடிக்க பர்மாவுக்கு வந்திருந்தார். குறைவான ஆட்களே அழைத்துவரப்பட்டிருந்ததால் சமயங்களில் ராம்சந்தரே பெண் வேடமிட வேண்டியிருந்தது ஒருநாடகத்தில் பி.யு.சின்னப்பா ராஜபார்ட்டாகவும் ஸ்திரீ பார்ட்டாக ராம்சந்தரும் நடித்தனர். பர்மாவில் வெற்றிகரமாக நாடகங்கள் முடிந்து 6 மாதங்களுக்குப்பின் சென்னை வந்துசேர்ந்தனர் நாடக குழுவினர். அப்போது சென்னை யானைக்கவுனியில் ராம்சந்தர் குடும்பம் வசித்தது.
சொல்பேச்சு கேளாமல் இப்படி கண்டபடி அங்கும் இங்கும் திரிவது சத்தியபாமாவுக்கு அறவே பிடிக்கவில்லை. பிள்ளைகளை திட்டித்தீர்த்தார். அடுத்து என்ன செய்வது என்பது பற்றி எந்த திட்டமும் இல்லை சகோதரர்களிடம். ஆனாலும் அவர்கள் நாடகங்களை பார்ப்பதை கைவிடவில்லை. சென்னையில் எங்கு நாடகங்கள் நடந்தாலும் சகோதரர்கள் போய் பார்ப்பார்கள். வீட்டிற்கு வந்தபின் நடிகர்களின் நடிப்பை விமர்சனம் செய்வர். ஒரு மாதம் கழிந்த நிலையில் ஒருநாள் வேலுநாயர் ராம்சந்தரின் வீட்டுக்கு வந்தார்.
குடும்பத்தின் நலத்தை விசாரித்தவர், சகோதரர்களின் செயலை கண்டித்ததுடன், முதலாளி இன்னமும் அவர்கள் மீது அக்கறையாக இருப்பதை சுட்டிக்காட்டி திரும்ப பாய்ஸ் கம்பெனிக்கு வரும்படி அழைத்தார். அப்போதெல்லாம் சென்னை ஒற்றை வாடை தியேட்டரில் மாதம் 30 நாட்களும் நாடகங்கள் நடக்கும். வேலுநாயர் ராம்சந்தர் - சக்கரபாணியை சந்தித்த நேரத்தில் அங்கு பாய்ஸ் கம்பெனி நாடகங்கள் நடத்திவந்தது. இதனால் வேலுநாயருடன் அன்றே முதலாளியை பார்க்க கிளம்பினர் சகோதரர்கள்.
முதலாளியை பார்த்ததும் சகோதரர்களுக்கு ஒன்றும் பேச முடியவில்லை. “ஏம்பா நான் உங்களுக்கு என்ன குறைவெச்சேன். ஒழுக்கமான பசங்க நீங்க... குரல் கெட்டா என்ன கொஞ்சநாள் சாதகம் பண்ணி சரியாக்கிட்டா பழையபடி நடிக்கவேண்டியதுதானே...அதுக்காக கம்பெனியை விட்டு ஒடுறதா...சரி இனிமே அப்படி செய்யாதீங்க..போய் பாடத்தை படிங்க“ என பெரிய மனதுடன் பேசிவிட்டு கிளம்பினார்.
மீண்டும் உற்சாகத்துடன் நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தனர் சகோதரர்கள். கதர்பக்தி நாடகம் இப்போது மீண்டும் நடத்தப்பட்டது. எம்.ஜி.ஆர் கதர்த்துணி உடுத்த ஆரம்பித்த காலகட்டம் அது.
ஒரு பக்கம் காந்தியத்தின்மீது பற்று. அதன்பேரில் காந்தியக்கொள்கைகளில் தீவிர பிடிப்பு உண்டாகி இக்காலத்தில் நிறைய புத்தகங்களை தேடிப்பிடித்து படிக்க ஆரம்பித்தார். மற்றொரு பக்கம் எம்.ஜி.ஆர் தீவிர ஆத்திகராகவும் இக்காலத்தில் இருந்தார். சத்தியபாமா குடும்பத்தினரின் குலதெய்வம் காளி. என்றாலும் சிவனையும் நாராயணனையும் அவர்கள் தீவிரமாக வணங்கிவந்தனர். இதனால் இயல்பாகவே தாயின் வழக்கம் பிள்ளைகளுக்கு தொற்றிக்கொண்டது. எம்.ஜி.ஆர் வெங்கடேசபெருமாளை வணங்கும் வழக்கம் கொண்டிருந்தார். அக்காலத்தில் அவரது கழுத்தில் தாமரை மணி மாலை ஒன்று எப்போதும் அவரது கழுத்தை அலங்கரிக்கும். பாய்ஸ் கம்பெனியில் பாலநடிகனா இருந்தபோது சிலமுறை திருப்பதிக்கும் சென்று சாமி தரிசனம் செய்திருக்கிறார் அவர்.
"நான் ஒரு நாத்திகன் என்று பலரும் என்னைத் தவறாகப் புரிந்து கொண்டு, எழுதிவருகிறார்கள். உண்மையாகவே நான் ஒரு நாத்திகன் அல்ல. எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு. ஒருவனே தேவன் என்ற கொள்கையுடையவன் நான். நமக்கெல்லாம் மீறிய ஒரு பெரிய சக்தி இருக்கிறது. அதைத்தான் கடவுள் என்று சொல்கிறோம். வழிபடுகிறோம். பலர் இந்தச் சக்திக்கு உருவம் கொடுத்து, பெயர்கள் தந்து கடவுளாக வணங்கி வழிபடுகிறார்கள்.
நான் என் தாயின் உருவத்தில் அந்தச் சக்தியை இப்போது வழிபாட்டு வருகிறேன். அப்படியானால் நான் கோயிலுக்குப் போனது கிடையாதா? போயிருக்கிறேன். அங்கிருந்த தெய்வங்களை வணங்கி இருக்கிறேன். 'மர்மயோகி' படம் கோவை சென்ட்ரல் ஸ்டூடியோவில் தயாராகி வந்த சமயம், நான் பழநிக்குப் போய் முருகனைத் தரிசித்து இருக்கிறேன். அப்போது நான் மட்டும் தனியே போகவில்லை.
நண்பர் எம்.என்.நம்பியாரும் வந்திருந்தார். அவரின் மூத்த மகனை (சுகுமாரன் நம்பியார்) என் தோளிலே தூக்கிக்கொண்டு மலைக்குச் சென்றேன். அந்தக் குழந்தைக்கு அன்று நானே பெயரும் சூட்டினேன்.
ஒரு சமயம் திருப்பதி ஏழுமலையானைத் தரிசிக்க நடந்தே போயிருக்கிறேன். இரண்டாவது முறையாக திருப்பதிக்குச் சென்றபோது தான் என் உள்ளத்தில் பெரிய மாறுதல் ஏற்பட்டது. நண்பர்கள் சிலருடன், வாடகை காரில் திருப்பதிக்குச் சென்றிருந்தேன். ஏராளமான பக்தர்கள் தர்ம தரிசன வரிசையில் நின்றுகொண்டிருந்தார்கள். நாங்களும் அந்த தர்ம தரிசன வரிசையில் போய் நின்றுகொண்டோம்.
சற்றுநேரத்தில் எங்களுடன் வந்து பிரிந்துபோன நண்பர் ஒருவர், எங்களிடம் வந்தார். வரிசையிலிருந்து பிரிந்து எங்களுடன் வரும்படி அவர் எங்களையெல்லாம் அழைத்தார். நாங்களும் வெளியே வந்தோம். அவர், "உள்ளே சென்று வணங்கிவர நமக்கு பிரத்தியேகமான அனுமதி கிடைத்துவிட்டது. வரிசையில் காத்திருக்க வேண்டாம். தலைக்கு இரண்டு ரூபாய் வீதம் ஒருவரிடம் கொடுத்து ஏற்பாடு செய்துவிட்டேன்"... என்றார் அந்த நண்பர்.
என் உள்ளத்தில் இது ஒரு பெரிய கேள்வியையே எழுப்பிவிட்டது.
'ஏழுமலையானைத் தரிசனம் செய்ய வந்திருக்கும் புனிதமான இடத்தில் இப்படி ஒரு முறையற்ற செயலா?' என்ற கேள்வியும் 'தெய்வத்தைத் தரிசிக்க லஞ்சமா?' என்ற வேதனையும் என் நெஞ்சத்தைப் போர்க்களமாக்கிவிட்டன. இதுபோன்ற வழிகளில் தான் தெய்வத்தைத் தரிசிக்க வேண்டுமா?
எனக்கு அது பிடிக்கவில்லை. என் மனம் அதற்கு இடம் தரமறுத்துவிட்டது. அன்று தான் நான் கடைசியாகக் கோயிலுக்குப் போனது. அதன்பிறகு நான் கோயிலுக்குச் சென்றது கிடையாது. அதனால் தெய்வம் என்று ஒன்று இருக்கிறது என்பதை நான் மறுப்பவனாக எண்ணிவிடக்கூடாது."- 1968-ல் நாடகம் ஒன்றுக்கு தலைமை வகித்துப் பேசிய அவர் தன் கடவுள் நம்பிக்கை பற்றி இப்படி குறிப்பிட்டார்.
கடவுள் மறுப்புக்கொள்கையில் தீவிரமாக இருந்த பெரியாரின் மீதும், அவரின் தளபதியாக விளங்கிய அண்ணாவின் மீதும் பி்ன்னாளில் எம்.ஜி.ஆருக்கு ஈர்ப்பு உருவானபோதும் கூட எம்.ஜி.ஆர் தன் ஆத்திக கொள்கையை விட்டுவிடவில்லை. அண்ணா உருவாக்கிய திமுகவில் அவர் இணைந்தார். பெரியார் அளவுக்கு நாத்திக கொள்கையில் அண்ணா உறுதியாக இல்லாதது திமுகவில் எம்.ஜி.ஆர் சேர ஒரு முக்கிய காரணமானது எனலாம். ஆனால் எக்காலத்திலும் அவர் கடவுளை மறுத்ததில்லை. ஆனால் பகுத்தறிவுக்கு ஒவ்வாத கருத்துக்கள் கொண்ட படங்களை பலமுறை தவிர்த்திருக்கிறார். சிவாஜி நடித்த காத்தவராயன் உள்ளிட்ட பல படங்கள் இதற்கு உதாரணம்.
பாய்ஸ் கம்பெனிக்கு திரும்ப வருவோமே...கதர்பக்தி நாடகம் திரும்ப நடத்தப்பட்டபோது எம்.ஜி.ஆர் உள்ளத்தில் காந்தியக்கொள்கைகள் கனன்று கொண்டிருந்தது.
காரணம் சுதந்திரத்திற்கான போராட்டங்கள் தமிழகத்தில் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வந்த அந்நாளில் பாய்ஸ் கம்பெனியின் நாடகங்கள் துவங்கும் முன் “மகாத்மாக காந்திக்கு”....என மேடையில் இருந்து குரல் வரும். பார்வையாளர்கள் ஜே என்பார்கள். நாடகத்தின் கதையும் குடிப்பழக்கத்தின் தீமையை சொல்வது.
'சுதந்திரத்துக்காக இந்த தள்ளாத வயதில் காந்தி போராட்டங்களை நடத்தும்போது இளம்வயதில் நாம் பொறுப்பற்று இருக்கிறோமே' என்ற எண்ணம் அவரது மனத்தை உறுத்திக்கொண்டே இருந்தது. ஒருகடடத்தில் நாமும் எதையாவது செய்யவேண்டும் என்ற உந்துதல் ஏற்பட, ராம்சந்தர் காங்கிரஸில் காலணா உறுப்பினராக சேர்ந்தார்.
சேர்ந்ததுடன் நிறுத்திக்கொண்டிருக்கலாம். அதையும் மீறி எதையாவது செய்யும் எண்ணம் அவருக்குள் தீவிரமானது... அது, இறுதியில் அவரை சிறைக்குக் கொண்டு போய் நிறுத்தியது...என்ன நடந்தது?
தொடரும்.........
-
3rd May 2020, 04:57 PM
#186
Junior Member
Diamond Hubber
"கண்ணில் பட்ட 'அது'... கொதித்தெழுந்த எம்.ஜி.ஆர்!" - நூற்றாண்டு நாயகன் எம்.ஜி.ஆர்.
அத்தியாயம் : 7
நடிகர்கள் பொதுவாக உணர்ச்சியவயப்படுபவர்கள். நாடகத்தின் பெயர் கதர் பக்தி; கதாநாயகன் காந்தியின் கொள்கைகளை கொண்டாடுபவன். மதுவிலக்கை வலியுறுத்தி பக்கம் பக்கமாய் வசனங்கள்... கதாநாயகன் ராம்சந்தரின் மனசுக்குள் காந்தி வந்து அமர இது போதாதா?! காங்கிரஸின் காலணா உறுப்பினராகும் அளவு அவரது காந்தியப்பற்று வளர்ந்தது. காந்தியையும் நேரிலும் தரிசித்திருந்ததால் அது இன்னும் உச்சத்திற்கு போனது.
அப்போதெல்லாம் கள்ளுக்கடை மறியல் போராட்டங்கள் தீவிரமாக காங்கிரஸ் மற்றும் பல அமைப்புகளால் நடத்தப்பட்டு வந்தன. மறியல் நடப்பதும் அதை போலீஸார் தடியடி நடத்தி கலைப்பதும் வாடிக்கையாக இருந்த காலம். மறியல் போராட்டங்களில் சாரிசாரியாக இளைஞர்கள் சிறையில் அடைபட்டு வந்தனர். யானைக்கவுனியில் ராம்சந்தர் வீடருகே, இயங்கிவந்த கள்ளுக்கடை முன் காங்கிரஸ் தொண்டர்கள் அன்று மறியல் செய்ய இருப்பதாக சொல்லப்பட்டது. “என்னண்ணே உங்க தம்பி கூட மறியல்ல கலந்துக்க போறாமே! தேசபக்தி முத்திடுச்சா” - போகிற போக்கில் ஒரு நடிகர், சக்கரபாணியிடம் சொல்லிவிட்டுப் போனார்.
ராம்சந்தராவது போராட்டத்தில் கலந்துகொள்வதாவது என மனதிற்குள் சிரித்துக்கொண்டு வேறு வேலையில் ஈடுபட்டார் சக்கரபாணி. தகவலை அவர் உறுதிபடுத்தாதற்கு காரணம் சத்தியபாமா. வறுமையினால் ஊர் விட்டு ஊர் வந்து படிப்பையும் துறந்து நாடகத்தில் நடிக்கும் தம் பிள்ளைகள் சுதந்திரப்போராட்ட உணர்வுகளுக்கு ஆட்படுவதை அவர் ஆரம்பத்திலிருந்தே விரும்பவில்லை. பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த ஒரு தாயின் கவலை அது. தனது கவலையை தொடர்ந்து பிள்ளைகளிடம் அவர் வலியுறுத்திவந்திருக்கிறார். இதனால் அம்மாவின் பேச்சுக்கு மாறாக ராம்சந்தர் அப்படிப்பட்ட விஷயங்களில் ஈடுபடமாட்டான் என்பதில் சக்கரபாணிக்கு அத்தனை நம்பிக்கை இருந்தது.
நாடக கொட்டகைக்கு கிளம்பிவந்தவர் ஒத்திகையில் மூழ்கினார். ஆனால் கொஞ்சநேரத்தில் மனதில் ஏதோ நெருடியது. வீட்டிலிருந்து தனக்கு முன்பு கிளம்பிய தம்பி எங்கே? ....மனது தேடத்துவங்கியது. கொட்டகையில் விசாரித்ததில் எல்லோரிடமும் ஒரே பதில் “ராம்சந்தரா... காலையிலிருந்தே அவனைப் பார்க்கலையே...” பகீர் என்றது சக்கரபாணிக்கு. 'நமக்கு வந்த தகவல் உண்மைதானா...' பதறியபடி மறியல் நடந்த கள்ளுக்கடைக்கு விறுவிறுவென சென்றார்.
சந்தேகம் உறுதியானது. மறியலில் ஈடுபட்ட போராட்டக்காரர்களை தடியடி நடத்தி போலீஸார் ஜீப்பில் ஏற்றிக்கொண்டிருந்தனர். அவர்களின் மத்தியில் குல்லா போடாத ஒரு இளைஞனும் வண்டியில் ஏற்றப்பட்டுக்கொண்டிருந்தான். அது ராம்சந்தரேதான்.
வண்டி புறப்பட்டது. அதை பின்தொடர முடியவில்லை. கடைசியில் ராம்சந்தரை பூக்கடை காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றதாக தெரிந்து அங்கு சென்றார் சக்கரபாணி. காவல்நிலையத்தில் சிரித்தபடி நின்றிருந்தார் ராம்சந்தர். “ஏண்டா உனக்கு இந்த வேலை...அம்மா சொன்னதைப்பற்றி கொஞ்சமும் கேட்கலை இல்லையா? ...சரி வா பெயில் எடுக்கிறேன்” என கடுங்கோபத்துடன் அவரை திட்டினார். “தேவையில்லை ஏட்டா... அவ்வளவு பெரிய பெரிய தலைவர்களாலேயே இன்னும் சுதந்திரம் வாங்க முடியலை...நீ போராடி என்னத்தை வாங்கப்போறே” என இன்ஸ்பெக்டர் கேஸ் எழுதாமல் தன்னை வெளியே அனுப்பிவிட்டதை ராம்சந்தர் சொல்ல... அத்தனை மணிநேர பதற்றத்தை மீறி சிரிக்கத்துவங்கினார் சக்கரபாணி.
ராம்சந்தரின் மதுவிலக்குப் போராட்டம் அத்துடன் முடிவுக்கு வந்ததா என்றால் இல்லை!..மதுவிலக்குக்காக தெருவில் இறங்கி ஒரு பக்கம் ராம்சந்தர் கொடிபிடித்துக்கொண்டிருக்க, அவருக்கு அதிர்ச்சி தரும் சம்பவம் ஒன்று அவரது வீட்டிலேயே பல மாதங்களுக்குப்பின் நடந்தது. ... அப்போது சக்கரபாணிக்கு திருமணமாகிவிட்டிருந்தது. ஒருநாள் செலவிற்கு பணம் இல்லாமல் வீட்டில் துழாவிக்கொண்டிருந்தார் ராம்சந்தர். வழக்கம்போல அம்மாவின் பீரோவிலும் தேடியபோது துணி அடுக்கவைக்கப்பட்ட அடுக்கில் துணிகளுக்கு மத்தியில் ஏதோவொன்று அவர் கைக்கு தட்டுப்பட்டது.
வழக்கத்துக்கு மாறான பொருளாக தென்படவே, ஆவலுடன் அதை உள்ளேயிருந்து எடுத்த ராம்சந்தர் அதிர்ச்சியின் விளிம்புக்கே சென்றுவிட்டார்... அது பாதி குடிக்கப்பட்டு மீதம் இருந்த ஒரு மது பாட்டில். மதுவிலக்கை வலியுறுத்தி நாடகங்களும், தெருவில் இறங்கி போராட்டங்களும் நடத்திவர, சொந்த வீட்டிலேயே மது பாட்டில் இருந்தது கோபத்தை உண்டுபண்ணியது. மூக்கை பரபரபரவென தேய்த்துவிட்டுக்கொண்டு வீட்டின் நடுஹாலுக்கு வந்தார்.
அங்கே தாயும் அண்ணியாரும் பிறந்த குழந்தையான மணியை கொஞ்சிக்கொண்டிருந்தனர்.
“ யாரு இங்க மது குடிச்சது...”உச்சஸ்தாயியில் கத்தினார் எம்.ஜி.ஆர். ஒருவரிடமும் பதிலில்லை. என்னடா இது இப்படி அசிங்கமா சத்தம் போடறே... அக்கம்பத்தினர் கேட்டா என்ன நினைப்பாங்க... போய் வேலையைப் பாரு....” - சத்தியபாமாவின் பேச்சு இன்னும் கொதிப்பை ஏற்படுத்த, “ஓஹோ குடிக்கிறது தப்பு இல்லை. அது மத்தவங்களுக்கு தெரியறதுதான் உங்களுக்கு பிரச்னையா” - பதிலுக்கு எகிறினார் ராம்சந்தர்.
“இது உன் அண்ணன் வாடகை தர்ற வீடு... உனக்கு பெரியவனே சும்மா கிடக்கான். நீ என்னமோ எகிறுறியே.. இஸ்டமிருந்தால் இரு இல்லேன்னா வெளியே போ...”சத்தியபாமா மகனுக்கு சளைக்காமல் குரலை உயர்த்திப் பேசினார். தாயின் பேச்சில் கொதிப்படைந்த ராம்சந்தர், கையிலிருந்த பாட்டிலை தரையில் ஓங்கி அடித்துவிட்டு சட்டையை மாற்றிக்கொண்டு ஒரு முடிவோடு விறுவிறுவென
தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்தார்... அவரது கால்கள் கடற்கரையை நோக்கி நடந்தன...
தொடரும்.........
-
3rd May 2020, 05:01 PM
#187
Junior Member
Diamond Hubber
"எம்.ஜி.ஆர் இவரிடம் தான் நடிப்பு கற்றார்!"...
நூற்றாண்டு நாயகன் எம்.ஜி.ஆர் - அத்தியாயம் : 8, 9
எம்.கந்தசாமி முதலியார்... உட்பட எம்.ஜி.ஆரின் வாழ்க்கையில் பல்வேறு நபர்கள் வெவ்வேறு காலகட்டங்களில் ஆளுமை செலுத்தியிருக்கிறார்கள். அவர்களில் எம்.கந்தசாமி முதலியார் முக்கியமானவர். வறுமையினால் பள்ளிப்படிப்பைத் துறந்து எம்.ஜி.ஆரும் அவர் சகோதரரும் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் நாடகக் குழுவில் இணைந்தபோது கம்பெனியின் நாடகங்களை எழுதி இயக்கிக்கொண்டிருந்தவர்தான் எம்.கந்தசாமி முதலியார். சத்தியபாமா தன் இரு மகன்களை ஒப்படைத்தது இவரிடம்தான். அப்போது சத்தியபாமாவின் கைகளைப் பிடித்துக்கொண்டு, “உங்க பிள்ளைங்க குறித்து இனி கவலைப்படாதீங்கம்மா... இனி அவங்களுடன் சேர்த்து எனக்கு 3 பிள்ளைங்க. எதிர்காலத்தில் அவுங்க நல்ல நிலைக்கு வர நான் பொறுப்பு” என ஆறுதல் சொன்னவர் எம்.கந்தசாமி முதலியார்.
அந்தக் காலத்திலேயே பி.ஏ பட்டதாரியான எம்.கந்தசாமி முதலியார், புராண நாடகங்கள் மட்டுமே போடப்பட்டுவந்த காலத்தில் சமூக நாடகங்களைத் துணிச்சலுடன் அரங்கேற்றியவர். நாடகத்தில் பகல் காட்சி என்ற ஒன்றை அறிமுகப்படுத்தியவரும் அவர்தான். படிக்கும் காலத்திலேயே கல்லூரி முதல்வர் முல்லர் என்பவரால் நாடகத்தின் மீது ஈடுபாடு கொண்டு பின்னாளில் அதற்காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர். இவருடைய புதல்வர்தான் ஜெமினி நிறுவனத்தில் ’சந்திரலேகா’, ’அபூர்வ சகோதரர்கள்’ படங்களில் நடித்துப் புகழ்பெற்ற எம்.கே ராதா.
தந்தையில்லாத எம்.ஜி.ஆர் சகோதரர்களை, சத்தியபாமாவுக்கு வாக்கு கொடுத்தபடியே தம் பிள்ளைகளில் ஒருவராகப் பாவித்தார் எம்.கே. நாடகம் மட்டுமின்றி அச்சு, விளம்பரம் போன்ற துறைகளிலும் ஞானம் பெற்றவர் எம்.கே.
நாடகக் குழுவில், தாய் தந்தையைப் பிரிந்து வந்திருக்கும் சிறுவர்களுக்குத் தந்தையைப்போல் இருந்து பாதுகாத்தவர் அவர். அவரது பிள்ளையான எம்.கே.ராதாவுக்கும் தந்தையில்லாமல், தாயைப் பிரிந்துவந்தவர்கள் என்பதால் எம்.ஜி.ஆர் சகோதரர்கள் மீது ஓர் இனம்புரியாத ஒரு பாசம் இருந்தது.
தந்தையுடன் எங்கு சென்றாலும் சகோதரர்களுக்கும் சேர்த்து தின்பண்டங்களை வாங்கி மறைத்துவைத்துக்கொண்டு கொட்டகைக்கு வந்தபின், சகோதரர்களுக்குத் தருவார் அவர். இது மற்ற பிள்ளைகளுக்கு வருத்தத்தைத் தந்தது. வாத்தியார் மகன் நம்மைவிட ராம்சந்தருக்கும் சக்கரபாணிக்கும் தனிக் கவனிப்பு தருகிறாரே என்ற தங்கள் ஆதங்கத்தை ஒருமுறை வாத்தியாரிடமே தெரிவித்தனர்.
மகனை அழைத்த எம்.கே., ’’நண்பர்களிடம் பேதம் காட்டக் கூடாது. உனக்கு ராம்சந்தர் சகோதரர்கள் மீது அதிக பாசம் இருப்பது தவறில்லை. ஆனால், அதை நீ இப்படி வெளிப்படையாக காட்டக் கூடாது. ஒருவர் மீது அதிகம் பிரியம் காட்டினால், அது மற்றவர்களை ஒதுக்குவதுபோல் ஆகிவிடும். இனி அப்படிச் செய்யாதே” என அறிவுரை கூறினார். இப்படி நாடகக் குழுவில் அனைவரையும் அரவணைத்துச் சென்றவர் எம்.கே.
நாடகக் குழுவில் சிறுவர்கள் யார் தவறு செய்தாலும் தன் பிள்ளை எம்.கே.ராதாவைத்தான் அடிப்பார், எம்.கே. அப்படிக் கண்டிப்பதைப் பார்த்து அடுத்தமுறை அந்தத் தவற்றைச் செய்யமாட்டார்கள் என்பது அவரின் கணக்கு. “யாரோ செய்கிற தவறுக்கு என்னை ஏன் கண்டிக்கிறீர்கள்” என ஆற்றாமையாக ஒருநாள் கேட்டார் எம்.கே.ராதா. அதற்கு, “தாய் தந்தையரைப் பிரிந்து பல மைல் துாரங்களில் இருந்துவந்து எப்போது வீடு திரும்புவோம் எனத் தெரியாமல் நம்முடன் தங்கியிருக்கிறார்கள். தவறுக்காக அவர்களைக் கண்டித்தால் அவர்கள் யாரிடம் ஆறுதல் தேடிப்போவார்கள். நானும் அம்மாவும் உன்னுடன் இருப்பதால், உனக்கு அது பெரிய வருத்தத்தைத் தராது. அதனால், நீ பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும்.” - தந்தையின் மனிதநேயத்தைப் புரிந்துகொண்டு அமைதியானார் எம்.கே.ராதா.
ராம்சந்தர் சகோதரர்கள் பாய்ஸ் கம்பெனியில் இணைந்தபோது... ஆரம்பத்தில் போதிய வாய்ப்பு கிடைக்கவில்லை என்ற ஆதங்கம் அவர்களுக்குள் இருந்தது. சமூக நாடகங்களில் முதன்முதலாகப் பிரதான வேடங்களை அவர்களுக்கு அளித்து உற்சாகப்படுத்தியதும் கந்தசாமி முதலியார்தான். கம்பெனி உரிமையாளரிடம் கோபித்துக்கொண்டு எம்.கே. மற்றும் அவரது மகன் எம்.கே.ராதா வேறு குழுவில் இடம்பெற்று வெளிநாடுகளில் நாடகம் நடத்திக்கொண்டிருந்தனர். அப்போது ராம்சந்தர் சகோதரர்களையும், தங்களுடன் இணைத்துக்கொள்ள பல முறை முயன்றனர். ஆரம்பத்தில் சகோதரர்கள் மறுத்தனர். ஆனால், பின்னாளில் சகோதரர்களுக்குக் குழுவைவிட்டுப் பிரியும் மனநிலைக்கு வந்தபோது அவர்களுக்குக் கைகொடுத்தவர் எம்.கே-தான். அவர்களுடனான முதல் பயணமே பர்மா.
கந்தசாமி முதலியாரைத் தவிர, வேறு யாராக இருந்தாலும் கடல்கடந்த அந்தப் பயணத்துக்கு அனுமதித்திருக்கமாட்டார் சத்தியபாமா. அத்தனை நம்பிக்கை கொண்டிருந்தார் கந்தசாமி முதலியார் மீது.
தந்தைக்கு நிகராக அவரது தனயனும் சகோதரர்கள் மீது அளவுக்கு அதிகமான பாசம் வைத்திருந்தார். பின்னாளில் புகழ்பெற்ற நடிகரான எம்.ஜி.ஆர்., ’’தனக்கு எம்.கே.ராதாவுடன் சேர்த்து இரண்டு அண்ணன்கள்" என்று வாஞ்சையுடன் புகழ்ந்தார். முன்னரே குறிப்பிட்டபடி எம்.ஜி.ஆரால் பொதுமேடையில் காலில் விழுந்து வணங்கப்பட்டவர்களில் ஒருவர் எம்.கே.ராதா. இன்னொருவர் சாந்தாராம். அத்தனை மரியாதைக்குரிய இடத்தில் எம்.கே.ராதாவை வைத்திருந்தார்.
பின்னாளில், எம்.ஜி.ஆர் முதல்வரான சமயம்... முதன்முதலில் அவர் வீடு தேடிச்சென்று வாழ்த்து பெற்றது எம்.கே.ராதாவிடம்தான். சுமார் ஒரு மணிநேரம் அவரது வீட்டில் இருந்து பூஜையறையில் இருந்த கந்தசாமி முதலியார் படத்தின் முன் 10 நிமிடங்கள் நின்று வணங்கிவிட்டுத் திரும்பினார்.
“நாடகத்துல நடிக்கும் காலத்திலேயே தம்பி, தான் நடித்து முடித்துவிட்டாலும் அங்கிருந்து போய்விடாமல் மற்றவர்களின் நடிப்பை அரங்கின் ஓரமாக நின்று ரசிக்கும். அபாரமான பாடம் செய்யும் சக்தியும், கேள்விஞானமும் அதிகம் அவருக்கு. உடன் நடிப்பவர்களுக்கு உதவுவதில் முன்நிற்பார். மனிதநேயம், விடாமுயற்சி, அயராத உழைப்பு, தன்னம்பிக்கை இவைதான் அவரை இந்த உயரத்துக்குக் கொண்டுவந்தன” 70-களின் மத்தியில், தம்பி எம்.ஜி.ஆரை சிலாகித்துச் சொன்னவர் எம்.கே.ராதா.
எம்.கந்தசாமி முதலியார் எம்.ஜி.ஆருக்கு நாடகக் குரு மட்டுமல்ல; அவரது திரையுலகப் பிரவேசத்துக்கும் அவர்தான் வித்திட்டார்.
எம்.ஜி.ஆரின் முதல்படமான 'சதிலீலாவதி' யில் நடிக்கும் வாய்ப்பு பெற்றுத்தந்தவர் அவரே... ராம்சந்தருக்கு முதல்பட வாய்ப்பு எப்படிக் கிடைத்ததுத் தெரியுமா...?
தொடரும்..............
-
3rd May 2020, 05:02 PM
#188
Junior Member
Diamond Hubber
"முதலாளிமார் சிறை வைக்கப்பட்ட எம்.ஜி.ஆர்"..! - நூற்றாண்டு நாயகன் எம்.ஜிஆர். அத்தியாயம் 10
எம்.ஜி.ஆரின் முதற்படம் 1936 ம்ஆண்டு வெளியானது. இந்தியத் திரைப்படங்கள் மௌனம் கலைந்து பேச ஆரம்பித்த காலத்தில் நாடக நடிகர்கள் மெல்ல திரைப்பட ஆசையில் திளைக்க ஆரம்பித்தனர். பார்வையாளர்களின் கைதட்டலையும் கூச்சலையும் நேரில் கண்டு அனுபவித்தவர்கள், சினிமா மாயைக்குள் சிக்குண்டனர். திரைப்படங்களில் நடித்து புகழ்பெறுவது அவர்களின் கனவாக ஆனது. ராம்சந்தர் சகோதரர்களும் அதற்கு விதிவிலக்கல்ல. என்றாலும் அவர்கள் திரைத்துறையில் எளிதாக வாய்ப்பு பெறும் அளவு நாடகத்துறையில் புகழ்பெற்றவர்களாக அப்போது இல்லை. இளமையும் நடிப்புத்திறமையும் அவர்களிடம் மூலதனமாக இருந்தபோதும் சினிமா வாய்ப்பு பெறும் அளவுக்கு பரவலான நட்புவட்டத்தை பெற்றிருக்கவில்லை அவர்கள். வெளியுலகத்தைப்பற்றியோ, மனிதர்களின் சுபாவம் பற்றியோ பெரிய அளவில் அறிந்துகொள்ளாத பக்குவம்தான் அவர்களுக்கு இருந்தது. உலக அனுபவமும் அவ்வளவாக பெற்றிருக்கவில்லை. 'நாடகத்தில் நடிக்கிறோம், பணம் கிடைக்கிறது, குறைந்தபட்ச வசதியான வாழ்க்கை' இப்படித்தான் கழிந்தன ராம்சந்தரின் நாடக வாழ்க்கை.
திரைப்பட ஆசையில் நாடக கம்பெனியில் இருந்து ஒவ்வொருவராக கழன்று சென்றுகொண்டிருந்தனர். ஆசான் எம்.கந்தசாமி முதலியார், அவரது மகன் எம்.கே.ராதா, கே.பி கேசவன், பி.யு சின்னப்பா, கே.ஆர். ராமசாமி...என அந்நாளில் புகழ்பெற்ற நாடகக்கலைஞர்கள் மற்றும் இன்னும் பலர் அப்படி விலகியிருந்தனர். சினிமா ஆசை சகோதரர்கள் மனதில் மெல்லத் துளிர்விட ஆரம்பித்தது. அரைகுறை மனதுடன் நாடகங்களில் நடித்துக்கொண்டிருந்தபோதுதான் அந்த தகவல் வந்தது சகோதரர்களுக்கு. ஆம் நாடக கம்பெனியின் முதலாளி சொந்தமாக திரைப்படம் எடுக்கப்போகிறார் என்ற தகவல்.
சகோதரர்களுக்கு மகிழ்ச்சி. ஆஹா, நாமும் திரைப்பட நடிகர்களாகப்போகிறோம். கும்பிடப்போன காமிரா குறுக்கே வந்ததுபோல், துள்ளிக்குதித்தனர் இருவரும்.
அப்போது மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி 'பதிபக்தி' என்ற நாடகத்தை நடத்திவந்தது. தமிழகத்தில் அந்த நாடகம் நடக்காத ஊர் இல்லை என்ற அளவுக்கு பெரும் வரவேற்பை பெற்றது அந்த நாடகம். அதன் விளைவாக அதை படமாகத் தயாரிக்க திட்டமிட்டது நாடக கம்பெனி. அதேசமயம் நாடகக்குழுவை கலைத்துவிடவும் திட்டமிட்டிருப்பதாக கூறப்பட்டது. அது, சகோதரர்கள் மனதில் பயத்தை உண்டுபண்ணியது. காரணம் அக்காலத்தில் சினிமா தயாரிப்பு என்பது புனே, மும்பை என சில குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே தயாரிக்கப்பட்டன. சென்னையில் அந்நாட்களில் வசதியான ஸ்டுடியோக்கள் அரிதாகவே இருந்தன. இதனால் ஒரு படத்தை தயாரித்து முடிக்க பல மாதங்கள் ஆகின. 'நாடகம் தினமும் நடக்கிறது. தினமும் நிச்சயமான வருமானம். ஆனால் சினிமாவில் ஒரு படத்திற்கான குறைவான சம்பளத்தில் வருடம் முழுக்க உழைப்பையும் நேரத்தையும் செலவிடவேண்டியதிருக்கும். அப்படியானால் நாடகத்தை முற்றாக துறக்கவேண்டும். இதுதான் கவலை தந்தது சகோதரர்களுக்கு. சினிமாவை நம்பி நிரந்தர வருமானத்தை இழக்கமுடியாது. எப்படியோ மனதை தேற்றிக்கொண்ட நேரத்தில் இடியென வந்தது அந்த தகவல்.
முதற்படம் என்பதால் ஏற்கெனவே சினிமாவில் பிரபலமானவர்களைக் கொண்டே தயாரிக்க திட்டமிட்டிருப்பதாகவும், அதேசமயம் எம்.ஜி.ஆர் சகோதரர்கள் தொடர்ந்து கம்பெனி நாடகங்களில் நடிக்கவேண்டும் என கம்பெனி முடிவெடுத்த தகவல் அது. .நொந்துபோனார்கள் சகோதரர்கள்.
இத்தனை வருடங்கள் கம்பெனிக்காக உழைத்த நமக்கு கம்பெனியின் சொந்தப்படத்தில் நடிக்க வாய்ப்பு மறுக்கப்படும்போது தொடர்ந்து இங்கு நம் உழைப்பை வீணாக்கவேண்டுமா என்ற எண்ணம் ராம்சந்தர் மனதில் தோன்றியது. கம்பெனியை விட்டு விலகுவதென சகோதரர்கள் முடிவெடுத்தனர். ஆனால் அதிலும் ஒரு சிக்கல். முதலாளி சச்சிதானந்தம் பிள்ளை ரொம்ப கறார் பேர்வழி. விருப்பப்பட்ட நேரத்தில் விடுமுறையே அளிக்கமாட்டார். விலகுவதென்றால் விடுவாரா...அதுவும் கம்பெனியில் ஆட்கள் இல்லாத இந்த நேரத்தில்.
ஒருமுறை வேலுாரில் முகாம் போட்டிருந்த நேரம், ஊரெல்லாம் காலரா பரவியது. பலர் இறக்கவும் நேரிட்டது. உச்சகட்டமாக நாடகக்குழுவில் இருந்த ஒருவரும் காலரா பாதிப்பில் இறந்தார். ஊரை உடனே காலி செய்வது நல்லது என குழுவினர் முடிவெடுத்தனர். ஆனால் முதலாளி சச்சிதானந்தம் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. திட்டமிட்டபடி ஒப்பந்தம் முடிந்த பின்னரே செல்வது என உறுதியாக இருந்தார். இத்தனைக்கும் ராம்சந்தரே கூட காலராவினால் பாதிக்கப்பட்டிருந்தார். அத்தனை முரட்டு மனிதர் அவர். சகோதரர்களுக்கு இப்போது இந்த சம்பவம் நினைவுக்கு வந்து கிலி தந்தது.
மன உளைச்சலுக்கு ஆறுதல் தேடி அவர்கள் சென்ற இடம் எம்.கந்தசாமி முதலியார் வீடு. தங்கள் பிரச்னைகள் முழுவதையும் அவரிடம் சொல்லி அழுதனர். இளமையும் அழகும் கொண்ட தங்கள் எதிர்காலம் நாடகத்திலேயே முடங்கிவிடக்கூடுமோ என்ற தங்கள் அச்சத்தை சொல்லி வேதனைப்பட்டனர். எல்லாவற்றையும் கேட்டுக்கொண்ட எம்.கே. மனதில் ஒரு திட்டத்துடன் சகோதரர்களிடம், கம்பெனியை விட்டு வந்துவிடுங்கள்...உங்களுக்கு நான் ஒரு வழி செய்கிறேன்”- எம்.கே வின் வார்த்தைகளில் ஆறுதலடைந்து வீடு திரும்பினர் சகோதரர்கள்.
என்ன வேண்டுமானாலும் நடக்கட்டும் என மனதில் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு மறுநாள் முதலாளி முன்போய் நின்று தங்கள் முடிவை சொன்னார்கள். “ஏலே பயலுகளா...நல்லா நடிச்சி பேரு கிடைச்சி, நாலு காசும் பார்த்தபின்னாடி திமிரு வந்திடுச்சா...கம்பெனியில ஆளு குறைவா இருக்கு. உங்களை வெளிய அனுப்பமுடியாது. அப்படி தெரியாம ஓடிப்போக நினைச்சிங்கன்னா, கம்பெனி சாமான்களை திருடிட்டுப் போயிட்டதா போலீஸ்ல புகார் தந்து புடிச்சி கொடுத்திடுவேன். ஜாக்கிரதை”- முதலாளியின் பேச்சால் அதிர்ந்தனர் சகோதரர்கள்.
சினிமா வாய்ப்பும் மறுக்கப்பட்டதோடு, விரும்பியபடி வெளியேறவும் செல்லமுடியாமல் கிட்டதட்ட சிறைக்காவல் போல தாங்கள் வைக்கப்பட்டதை நினைத்து இருதலைக்கொள்ளி எறும்பாக தவித்த சகோதரர்கள் சத்தியபாமாவிடம் அதைச் சொல்லி வேதனைப்பட்டனர். “அட, இதற்காகவா விசனப்பட்டு உட்கார்ந்திருக்கிறீர்கள். என் பிள்ளைகளை மிரட்டறானா அந்த முதலாளி.. போய் ஒரு வெள்ளைத்தாளை கொண்டுவாங்கடா, சீக்கிரம்...” அம்மா ஏன் வெள்ளைத்தாளை கொண்டுவரச் சொல்கிறார்" என்ற குழப்பத்துடன் தாயாரைப் பாரத்தார்கள் சகோதரர்கள்...அம்மா சொன்ன அதிரடி யோசனையை கேட்டு அதிர்ந்து நின்றனர் இருவரும்.
தொடரும்...............
-
3rd May 2020, 05:04 PM
#189
Junior Member
Diamond Hubber
"எம்.ஜி.ஆருக்கு தியேட்டரில் கிடைத்த அனுபவம்! - நூற்றாண்டு நாயகன் எம்.ஜி.ஆர். அத்தியாயம் 11
நாடக முதலாளியால் தன் பிள்ளைகள் மிரட்டப்பட்டதைக் கேள்விப்பட்டு பொங்கி எழுந்தார் சத்தியபாமா. “அவரு என்னடா புகார் தர்றது...நாம தருவோம் அவர் மேல...”- எம் ஜி ஆர் பேப்பர் கொண்டுவர, விடுவிடுவென சொல்லச் சொல்ல சக்கரபாணி எழுத ஆரம்பித்தார்.
“மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் நடித்துவரும் எங்களுக்கு கம்பெனி எடுக்கும் சொந்தப் பணத்தில் வாய்ப்பு தராததோடு தொடர்ந்து தங்கள் நாடகத்தில் நடிக்கவேண்டும் எனவும், மறுத்தால் கம்பெனி சாமான்களை திருடிச்சென்றுவிட்டதாக எங்கள் மீது முதலாளி பழிபோட்டு சிறைக்கு அனுப்பிவிடுவதாக மிரட்டுகிறார். எங்களை இந்த இக்கட்டிலிருந்து காக்கவேண்டும்.” இதுதான் கடிதத்தின் சாராம்சம்.
தாயின் சொல்படி, கடிதத்தை உள்ளுர் காவல்நிலையத்திற்கு பதிவுத்தபாலில் அனுப்பிவைத்தனர் சகோதரர்கள். “இப்போ போய் சினிமாவாய்ப்பை தேடுங்கடா...உங்க முதலாளி என்ன பண்ணிடுவார்னு பார்ப்போம்” - தாயின் சாதுர்யமான முடிவை எண்ணி வியந்த சகோதரர்கள், மனநிம்மதியுடன் வாய்ப்பு தேடும் முடிவுக்கு வந்தனர்.
அப்போது அவர்களுக்கு நினைவுக்கு வந்தவர், நாடக உலகில் மேடைப் புலி என்று அக்காலத்தில் அழைக்கப்பட்ட கே.பி கேசவன். அவரது நாடகத்திற்கு நிச்சயமான வசூல் என்பது அந்நாளில் உறுதி. பாய்ஸ் கம்பெனியில் இருந்தபோது சகோதரர்களுடன் நெருங்கிப்பழகியவர். அழகும், கணீர்க்குரலில் அவர் பேசும் வசனமும் அப்போது நாடகமேடையில் அவரை பிரபலப்படுத்தியிருந்தது. நாடகத்துறையில் இருந்து விலகி சினிமாப்படங்களில் நடித்துக்கொண்டிருந்த அவர், ராஜ்மோகன் என்ற படத்தில் கதாநாயகனாக அப்போது நடித்துக்கொண்டிருந்தார். கம்பெனியில் இருக்கும்போது அத்தனை பேரும் புகழும் பெற்றிருந்த அவர், “ராம்சந்தரா உன் அழகுக்கும் கலருக்கும் நீ ஒருநாள் இந்த சினிமாவை ஆளப்போறேடா”- என எம்.ஜி.ஆரை பார்க்கும்போதெல்லாம் சொல்வார். அப்போதெல்லாம் வெட்கப்பட்டு சிரிப்பார் எம்.ஜி.ஆர். காரணம் சினிமாவில் நடிப்பது குதிரைக்கொம்பான காலம் அல்லவா.
ஆனால் பின்னாளில் அதுதானே நடந்தது. பின்னாளில் பெரும் போராட்டங்களுக்கிடையில் சினிமா உலகில் தனக்காக ராஜ்ஜியத்தை உருவாக்கிக்கொண்ட எம்.ஜி.ஆர், அங்கு தொடர்ந்து நிலைத்து நிற்கவும் கே.பி கேசவனே காரணமானார்.
சினிமா உலகில் புகழின் உச்சியை தொட்டபோதும், தன்னைச்சுற்றி ஒளிவட்டம் இருப்பதாக எம்.ஜி.ஆர் கற்பனை செய்துகொள்ளவில்லை. வெற்றிகளின்போது வெறி கொண்டு ஆடாமலும், தோல்விகளின்போது துவண்டுவிடாமல் போராடவும் இருக்க அவருக்கு பாடமாக இருந்தவர் கே.பி கேசவன்தான்.
பல ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம் நடந்தது. சென்னை 'நியூ எல்பின்ஸ்டன்' தியேட்டரில் அப்போது 'இரு சகோதரர்கள்' என்ற படம் திரையிடப்பட்டிருந்தது. அதில் கதாநாயகனாக நடித்தவர் அன்றைய பிரபல நடிகர். நாடக மேடையிலும் சினிமாவிலும் நடித்து பெரும் புகழ்ப் பெற்றிருந்த அவருடன் எம்.ஜி.ஆரும் வேறு சிலரும் படத்தைப் பார்க்க சென்றிருந்தனர்.
இடைவேளையின்போது, படத்தின் கதாநாயகனே படம் பார்க்க வந்த தகவல் ரசிகர்களுக்கு எட்டியது. ரசிகர்கள் அவரைப் பார்ப்பதற்காக எழுந்து நின்று அவர் பெயரைக் கூறி வாழ்த்துக் கோஷமிட ஆரம்பித்தார்கள். அந்தப் படத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட மிகச் சிறிய வேடங்களில் நடித்திருந்த எம்.ஜி.ஆர், இதைத் திகைத்துப்போய் பார்த்துக்கொண்டிருந்தார். கதாநாயகனை தங்கள் அன்பில் திளைக்கவைத்தனர் ரசிகர்கள். இத்தனை ஆதரவும், செல்வாக்கும் பெற்ற ஒரு நடிகனின் அருகில் தான் அமர்ந்திருந்தது பெருமையாக இருந்தது எம்.ஜி.ஆருக்கு.
படம் முடிந்த பின் புறப்பட்டால் ரசிகர்கள் அன்பிலிருந்து விடுபடமுடியாது என்பதால் கதாநாயக நடிகர் அதற்கு முன்பே புறப்பட்டார். ஆனால் அதற்குள் மக்களும் வெளியே வந்துவிட்டனர். கதாநாயக நடிகர் மேலே இருந்து படி இறங்கி கீழே வருவதற்க்குள் ரசிகர்கள் அவரை சூழந்துக் கொண்டு ஆட்டோகிராப் கேட்டு அன்புத்தொல்லை கொடுத்தனர். அவர்களிடம் இருந்து அவரை பெரும் சிரமத்துடன் காப்பாற்றி அன்று பாதுகாப்பாக காருக்கு அழைத்துச் சென்று அனுப்பி வைத்தது எம்.ஜி.ஆர்தான்.
அன்று மக்களுக்கு எம். ஜி.ஆர் என்ற துணைநடிகரைத் தெரியாது. ரசிகர்களிடம் அவர் சண்டையிட்டு கதாநாயக நடிகரை மீட்டபோது கூட அவரும் அந்த படத்தில் நடித்திருப்பவர்களில் ஒருவர் என்பதை அவர்கள் அறியவில்லை. அன்றைக்கு எம்.ஜி.ஆரின் பிரபல்யம் அவ்வளவுதான்.
காலச் சக்கரம் சுழன்றது. அதற்குப் பல ஆண்டுகளுக்கு பின், எம்.ஜி.ஆர் நடித்த 'மர்மயோகி' திரைப்படம் வெளியானது. படத்தின் வெற்றியால் மூலைமுடுக்கெல்லாம் எம்.ஜி.ஆரின் வாள்வீச்சும், அநாயாசமான நடிப்பும், இளமையும், அழகும் மக்களால் சிலாகிக்கப்பட்டது. அப்போது சென்னை 'நியூ குளோப்' தியேட்டரில் அதே கதாநாயக நடிகருடன் ஓர் ஆங்கிலப் படம் பார்க்கச் சென்றிருந்தார் எம்.ஜி.ஆர்.
இடைவேளையின்போது 'மர்மயோகி' எம்.ஜி.ஆர் படத்திற்கு வந்திருந்த தகவல்
அறிந்து ரசிகர்கள் எழுந்து கூச்சல் போட்டார்கள். அவருக்கு அருகில் அமர்ந்திருந்த அந்த முன்னாள் கதாநாயக நடிகரை யாருக்கும் அடையாளம் தெரியவில்லை. அவரைத் தள்ளிக்கொண்டுச் சென்று எம்.ஜி.ஆரிடம் ஆட்டோகிராப் வாங்கினர் ரசிகர்கள். பலர் அந்த முன்னாள் கதாநாயக நடிகரிடமே தங்கள் நோட்டுப்புத்தகங்களை தந்து எம்.ஜி.ஆரிடம் ஆட்டோகிராப் வாங்கித்தரக்கோரினர். பொறுமையுடன் அதை செய்தார் அவர். அந்த அளவிற்கு அந்த முன்னாள் கதாநாயகன் மக்களின் மனங்களில் இருந்த மறக்கப்பட்டிருந்தார்.
படம் முடிந்து வெளியே வந்தபோது மக்கள் கூட்டம் எம்.ஜி.ஆரை சூழ்ந்தது. அந்த ரசிகர் கூட்டத்திடமிருந்து எம்.ஜி.ஆரைக் காப்பாற்றி ஒரு டாக்ஸியில் ஏற்றி அனுப்பினார் அந்த 'முன்னாள்'. எம்.ஜி.ஆர் ஏறி அமர்ந்த டாக்ஸி அங்கிருந்து சீறிக்கிளம்பியது. வண்டியின் பின் கண்ணாடி வழியாக எம்.ஜி.ஆர் திரும்பிப்பார்த்தார். திரண்டு நின்ற மக்கள் கூட்டத்தில் மக்களோடு மக்களாக அந்த முன்னாள் கதாநாயகனும் பரிதாபமாக நின்றுகொண்டிருந்தார். இத்தனைக்கும் அந்த நடிகருக்கு வயதாகிவிடவுமில்லை; நடிப்பு வன்மையும் குறைந்துவிடவில்லை.
எம்.ஜி.ஆர் மனதில் இந்த சம்பவம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. அன்றுதான், எவ்வளவுதான் புகழ் கிடைத்தாலும் அதன் போதைக்கு அடிமையாகிவிடக்கூடாது என தீர்க்கமான முடிவுக்கு வந்தார்.
“எந்த மனிதனும் அவனுடைய வாழ்க்கையில் உச்ச நிலைக்குப் போய்விட்டதாக நினைப்பது, தோல்வியான ஒரு சூழ்நிலையில் தோன்றும் திகைப்பேயாகும். கலைஞர்களுக்கு உச்சநிலை, தாழ்ந்தநிலை என்பதெல்லாம் மக்களால் தரப்படும் ஒரு மயக்க நிலை. அவ்வளவுதான். கலைஞனைப் பொறுத்தவரை அவனுக்கு வீழ்ச்சி கிடையாது. சூழ்நிலை அவனை உயர்த்தும்; தாழ்த்தும். அது மக்களின் மனதில் தோன்றும் முடிவு! - என 1968 ம்ஆண்டு ஏப்ரலில் சினிமா இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் மேற்சொன்ன சம்பவங்களைக் கூறி பேட்டியளித்தார் எம்.ஜி.ஆர்.
எம்.ஜி.ஆருக்கு படிப்பினையை ஏற்படுத்திய அந்த கதாநாயக நடிகர் வேறு யாருமல்ல; சினிமா வாய்ப்புக்காக முதன்முதலாக எம்.ஜி.ஆர் நாடிச் சென்ற அதே கே.பி.கேசவன்தான்!
வாய்ப்பு பெற்று தந்தாரா கே.பி.கேசவன்?
தொடரும்... .........
-
3rd May 2020, 05:06 PM
#190
Junior Member
Diamond Hubber
"எஸ்.எஸ்.வாசன் கதையில் திரைப்பட வாழ்வைத் துவக்கிய எம்.ஜி.ஆர்"! - நூற்றாண்டு நாயகன் எம்.ஜி.ஆர்.
அத்தியாயம் 12
இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் சென்னை வருகை தந்தபோது முதல்வர் எம்.ஜி.ஆரை கோட்டையில் சந்தித்தார். இருவரும் உற்சாகமாக உரையாடினார்கள். சந்திப்பு முடிந்து இளவரசரை ஆளுநர் மாளிகைக்கு திரும்ப அழைத்து வருகிறேன்.
அப்போது சார்லஸ் என்னிடம் ‘’எம்.ஜி.ஆரின் பின்னணி என்ன? இவர் ராஜகுடும்பத்தைச் சேர்ந்தவரா?’’ என்று வியப்போடு விசாரிக்கிறார். நான் அவரது குடும்பப்பின்னணி பற்றி விவரித்தேன். ஆனாலும் ஆச்சரியம் விலகாமல் சார்லஸ் சொன்னார்: ‘’ஒருவேளை போன பிறவியில் இவர் அரசராக இருந்திருக்கலாம்!’’. அப்படியே நான் மெய்சிலிர்த்துப் போய்விட்டேன். தமிழக மக்கள் மட்டுமல்ல…உலகையே ஆண்ட அரச குடும்பத்தின் இளவரசர்கூட, நம் எம்.ஜி.ஆரைப் பார்த்து ‘அரசர்’ என்று வியக்கிறாரே…அந்த அதிசயம்தான் எம்.ஜி.ஆர்.!
– தகவல் : சு .திருநாவுக்கரசர் ( புதிய தலைமுறை )...........
Bookmarks