-
16th September 2018, 12:37 PM
#1
Junior Member
Senior Hubber
சிவாஜி பாட்டு- 44
---------------------------------
காற்றோடும், ரசனையோடும்
மட்டுமல்லாமல் சில பாடல்கள்
நம் வாழ்வோடும் பொருந்தி
விடுகின்றன.
மகிழ்வு மிகுந்த ஒரு பொழுதில்
ஒரு இளம்பெண் பாடுவதாய்
வரும் இந்த "அமுதை பொழியும் நிலவே" பாடல், என் வாழ்வோடு பொருந்தி விட்ட பாடல்.
முப்பத்து நான்கு வருஷங்களுக்கு முன், தனது நாற்பத்தி நான்காம் வயதில் உயிர் நீத்த என் தந்தையாருக்கு மிகப் பிரியமான
பாடல்... இது!
மிக இனிமையான குரலில் நம் சுசீலாம்மா "ஓஓ...ஓ" என துவங்குவதிலிருந்து, "டஸ்"
என்று தாம்பாளம் தரையில்
விழும் ஓசையும், "கிறீச்" எனும்
பெண் கூவலுமாய் பாடல்
நிறைவுறுகிற கடைசி விநாடி
வரைக்கும் இந்தப் பாடலை
என் அப்பா வெகுவாய் ரசிப்பதை எண்ணற்ற முறைகள் பார்த்திருக்கிறேன்.
ஏதொன்றுமறியா அப்பாவியாய்
ஒரு முகம். அதில் அகல விரிந்து
மலர்ந்திருக்கும் இரு விழிகள்.
அவற்றில் சதா ஞானத் தேடல்.
வெளியுலகம் தெரியாத காட்டுவாசியாய் நம் நடிகர் திலகம்.
எங்கிருந்தோ ஒலிக்கும் தேன் குரல் பாடல் கேட்டு தெறித்தோடி வருவார்.. தலைவர். செங்குத்தாய்
நிமிர்ந்த மலையில் அவர் ஒடி வருவதைக் கவனியுங்கள். எந்த
ஒரு தடுமாற்றமும் இருக்காது. சாவகாசமாய் நின்று போகும் மந்தத் தனம் இருக்காது. தமிழ் திரையுலகம் முதலும், கடைசியுமாய்ப் பார்த்த அசத்தல்
டார்ஜான்.. நம் நடிகர் திலகம்.
மிக மெலிதாய், எழிலாய் மூக்கு
சுளித்துப்,புன்னகைத்துப் பாட்டிசைக்கும், இளம் பெண்கள்
எல்லாருக்கும் யாசகமாய்த் தந்தாலும் தீராத அழகு கொண்ட இந்தப் பாடலின் கம்பீரக் கதாநாயகி சில மாதங்களுக்கு முன் நெரிசல் மிகுந்த சென்னையின் பேருந்து சிக்னல்
ஒன்றில், யாசகம் கேட்டு நின்றதாய்ப் படித்த பத்திரிகைச்
செய்தி அதிர்ச்சியை அள்ளித் தந்தது.
மலையேறிய தங்கமலையாம்
அய்யன் இப்போதில்லை.
அப்பா மடியில் ஆவலோடு
இருத்தியிருந்த அடர் அரக்கு நிற உறையிட்ட ஃபிலிப்ஸ் டிரான்சிஸ்டர் இப்போதில்லை.
அவர் பாடல் ரசித்துச் சாய்ந்திருந்த ஈஸி சேர் இப்போதில்லை.
அவரே இப்போதில்லை.
"இல்லை"களின் மத்தியில்
பெரிய ஆறுதலாய்...
பெரு நம்பிக்கையாய்...
ஈரம் கசியும் கண்களினூடே அன்பு அப்பாவை காட்சிப்படுத்துவதற்கு
என்றென்றும் உயிர்ப்போடிருக்கும்..
இந்தப் பாட்டு !
-
16th September 2018 12:37 PM
# ADS
Circuit advertisement
Bookmarks