-
2nd June 2017, 01:03 AM
#11
Senior Member
Devoted Hubber
( புனித ரமலான் மாதத்தில் , வரும் பொருத்தமான பதிவு என நினைக்கிறேன்). 'இவரைப் போன்ற ஒரு நண்பரை நான் பெற்றால் எவ்வளவு நன்றாக இருக்கும், இவரைப் போன்ற மனிதர்களே உலகில் அனைவரும் இருந்து விட்டால் உலகம் எவ்வளவு அமைதியாக இருக்கும், இவரைப் போன்ற மகனைப் பெற எவ்வளவு தவம் செய்திருக்க வேண்டும்' ....என்றெல்லாம் எண்ண வைக்கும் இளைஞன். அமைதியும் சாந்தமும் திகழும் முகம். அதிர்ந்து பேசாத அமைதியான சுபாவம்..பகைவனுக்கும் அருளும் பண்பு......அதுதான் ரஹிம். A.பீம்சிங் இயக்கத்தில், ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்து, 1961 இல் வெளிவந்த 3.15 மணி நேரம் ஓடக்கூடிய நீளமான படம் 'பாவமன்னிப்பு'. படம் தொடங்கிக் கிட்டத்தட்ட அரைமணி நேரம் கழித்துத்தான் திலகம் அறிமுகமே ஆவார்.'எல்லோரும் கொண்டாடுவோம்..அல்லாவின் பெயரைச் சொல்லி..நல்லோர்கள் வாழ்வை எண்ணி...' என்ற அருமையான , கருத்தாளம் மிக்க பாடலுடன் அவர் என்ட்ரி ஆரம்பிக்கும். படம் முழுமையும் அதே சாந்தமான முகம், Subtle acting தான். கிட்டத்தட்ட படத்தில் வரும் எல்லோருமே சாந்த சொரூபிகள்தான், ஒரே ஒருவரைத் தவிர. அவரைப்பற்றி நிறையச் சொல்ல வேண்டும். அதைத்தனியே அப்புறம் எடுத்துக் கொள்ளலாம். நிறையப் படங்களில், திடுக்கிடும் ரகசியங்கள், திருப்பங்கள், நாயகன், நாயகி பற்றிய ஏதேனும் செய்திகள் போன்றவை படம் முடியப் போகும் கிளைமாக்ஸில் சொல்லுவார்கள்.ஆனால், இப்படத்தில் எல்லா விசயத்தையுமே ஆரம்பத்திலேயே சொல்லி விடுவதால், பார்வையாளர்களுக்கு எதிர்பாராத ட்விஸ்ட் என்று எதுவும் இல்லை. ஆனால் படத்தின் வெற்றியே, கதையை ஆரம்பத்திலேயே சொல்லி விட்டும் 3.15 மணி நேரம் அனைவரையும் கட்டிப் போடும் திரைக்கதைதான். ரகசியங்கள் எல்லாம் பார்ப்பவர்களுக்குத் தெரியும், ஆனால் படத்தில் வரும் பாத்திரங்களுக்குத் தெரியாது.ஒவ்வொரு முடிச்சாக அவிழ்ந்து , இறுதியில் அனைத்தும் தெளிவாக முடியும். ஆளவந்தார் என்கின்ற பணக்கார வைர வியாபாரிக்கு இரண்டு ஆண் குழந்தைகள். அவரின் ஒரு குழந்தை சிறு வயதிலேயே காணாமல் போகிறது. அவரால் ஏமாற்றப்பட்ட விசுவாச வேலைக்கார TS பாலையாவால் , பழி தீர்க்க கடத்திச் செல்லப்பட்ட குழந்தை. அதுதான் சிவாஜி. மற்றவர் ஜெமினி. சிவாஜி குப்பத்திலும், ஜெமினி பணக்காரப் பிள்ளையாகவும் பின்னர் போலிஸ் அதிகாரியாகவும். பொன்னகரம் என்ற குப்பத்தின் ஏழை ஜனங்களுக்குப் போக்கிடமே பாரதி வைத்தியசாலை என்ற பெயரில் வைத்தியம் பார்க்கும் இஸ்மாயில் பாயாக வரும் நாகையாவும் , சுப்பு சாஸ்திரியாக வரும் கொத்தமங்கலம் சுப்புவும்தான் ( தில்லானா மோகனாம்பாள் காவியத்தைத்தந்தவர்). அந்தக்குப்பம் இருக்கும் இடம் தனக்குச் சொந்தமானது என்று சொல்லி, அதைச் சர்க்கரை ஆலை கட்ட விற்க முயலும் ஆளவந்தாரின் முயற்சிக்குத் தடையாக இருக்கும் ரஹிமின் மேல் ஆரம்பத்தில் இருந்தே அவருக்கு வெறுப்பு. ஆளவந்தாரால் ,நயவஞ்சமாகப் போலிஸில் மாட்டப்பட்டுச் சிறை செல்லும் TS பாலையாவின் ஒரு பெண் ,சாவித்திரி, தங்கமாக, வேலைக்கார ஆயாவின் பெண்ணாக குப்பத்திலும், இன்னொரு பெண், தேவிகா, சமூக சேவகர் ஜேம்ஸ் என்னும் கிருத்துவராக வரும் SV சுப்பையா வீட்டில் மேரியாகவும் வளர்கிறார்கள். பணக்கார ஜெமினி, ஏழைத் தங்கத்தைக் காதலிக்கிறார், அப்புறம் பிரிந்து போலிஸ் டிரெய்னிங் போய்விடுகிறார். தேவிகா ரஹிமைக் காதலிப்பார். ஆளவந்தாரின் மனைவி M.V.ராஜம்மாவுக்கு, தேவிகாவைத் தன் மகன் ஜெமினிக்குத் திருமணம் செய்து வைக்க ஆசை. அது நிறைவேறியதா, ஆளவந்தாரின் பணத்தாசைக்கு எப்படியெல்லாம் ஒவ்வொருவரும் பாதிக்கப்படுகிறார்கள் என்பதே மீதிக்கதை. இப்படம் மத நல்லினக்கத்துக்கு அருமையான ஒரு உதாரணம்.படத்தில் நான்கு மதங்கள் சம்மந்தப்பட்டுள்ளன. கிருத்தவம், இஸ்லாம், இந்து மற்றும் புத்தமதங்கள்.( படத்தயாரிப்பு பேனரே புத்தா பிலிம்ஸ்தான்). ஜெமினி சாவித்திரிக்குக் காதல் பரிசாக புத்தர் சிலை ஒன்றைக் கொடுத்து புத்தரின் அன்பைப்பற்றிச் சில வார்த்தைகள் சொல்லுவார், அதைத்தவிர புத்தமதம் பற்றி இதில் வேறெதுவும் இல்லை. ஆரம்பத்தில் இஸ்மாயில் பாய் ( நாகையா) புனிதக் குர்ரான் பற்றிச் சொல்லும் கருத்துக்கள் உயர்வானவை. படம் முழுவதும் எம்.வி.ராஜம்மா பூஜைத்தட்டோடு கோயிலுக்குப் போவதும் வருவதுமாக இருப்பார். அவ்வப்போது ஜேம்ஸ் கிருத்துவத்தின் கருணையைச் சொல்லுவார்.போப்பாண்டவரைச் சந்தித்து விட்டு வந்து அவரைப்பற்றிச் சொல்லும் கருத்துக்கள் அருமை. இவ்வளவு கதை மாந்தர் இருந்தும் மூன்று மதங்கள் படம் முழுக்க விரவி இருந்தும் , ஒரு இடத்தில் கூட , எந்த ஒரு மதம் பற்றிய சம்பிரதாயங்களையும் , வழிபாடுகள் பற்றியும் சொல்லாது இயல்பாக கதை நகர்த்தி இருப்பது தனிச்சிறப்பு. மேலும் எந்த விதமான மத மாச்சரியக் கருத்துக்களும் இல்லாதது அருமை. பணத்தாசை கொண்ட ஆளவந்தாருக்குக் கூட மதம் ஒரு பிரச்சினை இல்லை, பணம் மட்டுமே பிரதானம். இப்போது ஆரம்பத்தில் சொன்ன அவரைப்பற்றி ஒரு சிறப்புப் பார்வை. ஆளவந்தாராக வரும் M.R. ராதா. அப்பப்பா, என்ன ஒரு performance? உடல் முழுக்க சந்தனம், வாய் திறந்தால் என் அப்பன் ஞானபண்டிதன் என்ற பேச்சு , தெய்வத்துக்குப் பயந்ததாகத் தோற்றம்...ஆனால் அவ்வளவும் வெளிவேசம்... மனசு முழுக்க விசம். பணம் பணம் பணம் இது மட்டுமே அவர் நோக்கம். படம் முழவதும் பிரேம் பை பிரேம் அவர்தான் ஆக்கிரமித்திருப்பார். படத்தின் முதுகெலும்பே அவர்தான். ரத்தக்கண்ணீர் போல ராதாவின் திரைவாழ்வில் இது மிகவும் குறிப்பிடும்படியான படம். என்ன டயலாக் டெலிவரி, டைமிங், மாடுலேசன்.... உதாரணத்துக்கு ஒன்று "ஜேம்ஸூ,ஞானபண்டிதன் கோயிலுக்கு வெள்ளிக்கிழமை ஆனா நான் போறேன், ஞாயித்துக்கிழமை ஆனா மாதா கோயிலுக்கு நீ போற. வாரம் பூரா செஞ்ச பாவத்தை ஒரு நாளாவது சாமிகிட்டப் போயி சரிப்படுத்தனும் இல்ல......". சிவாஜியின் முகத்தில் ஆசிட் ஊற்றிச் சிதைக்கும் அளவுக்குக் கொடூர சிந்தனை..... அருமையான பாத்திரம் அவருக்கு...அப்படி வீடு கட்டி விளையாடி இருப்பார்.. இப்படியும் ஒரு மனம் முதிர்ந்த, நிலை பிரளாத ஒரு இளைஞன் இருக்க முடியும் என்று நிரூபித்தவன் ரஹிம். வயதுக்கு மீறிய முதிர்ச்சியான சொல்லும் செயலும் நடத்தையும். ஊர் ஊராகச் சென்று ஏழை எளிய மக்களுக்குச் சேவை...சேவை ஒன்றைத்தவிர வேறு எதுவுமே அறியாத உத்தமன். " எதுவும் யாருக்கும் சொந்தமில்லை...இந்த மண்ணை எல்லாம் வளைத்துக் கொள்ளும் மன்னாதி மன்னனாக இருந்தாலும், முடிவில் இம்மண்ணில்தான் போய்ப்புதைய வேண்டும்" என்பது போன்று வயதுக்கு மீறிய பக்குவ ம்..... தேவிகா காதலியாக இருந்தாலும் அவரிடம் இவர் காட்டும் கண்ணியம்... அமைதியாகச் செல்லும் ஆற்றோட்டமான நடிப்பு. முகத்தில் ஆசிட் வீசப்பட்டதும் வலியும் எரிச்சலும் தாங்க முடியாமல் தரையில் விழுந்து புரண்டு கதறும் போது, கல்லான மனங்கள் கூடக் கரைந்து போகும். இப்படிப் பட்ட உத்தமனுக்கா இப்படி ஒரு நிலை வர வேண்டும் என்று நம் மனம் பதறித் துடிக்கும் ராதாவின் ஆர்ப்பாட்டமான நடிப்பும் திலகத்தின் அமைதியான நடிப்பும் நேர் எதிர் துருவங்கள்.. இங்க ஒருவரைப்பற்றி மிக முக்கியமாகச் சொல்லியே ஆக வேண்டும். கண்ணதாசன். எவ்வளவு அற்புதமான பாடல்களைத்தந்திருக்கிறார்? பாலிருக்கும், பழமிருக்கும்.... வந்த நாள் முதல்........ காலங்களில் அவள் வசந்தம்.....சிலர் சிரிப்பார் சிலர் அழுவார்...... எல்லோரும் கொண்டாடுவோம்........அத்தான் என்னத்தான்......காலங்கள அழிந்தாலும் நிலைத்திருக்கும் காவியப்பாடல்கள். தேன் சொட்டும் இசை அமைத்த மெல்லிசை மன்னர்களைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை. ரஹிம் என் மனங்கவர்ந்த ஆதர்ச புருசன்.
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
2nd June 2017 01:03 AM
# ADS
Circuit advertisement
Bookmarks