-
26th June 2016, 06:19 PM
#11
Junior Member
Devoted Hubber
Written by Mr. Sudhangan,
நடிகர் முத்துராமனுக்கு சிவாஜி மீது எப்போதுமே மிகுந்த பாசமும் மரியாதையும் உண்டு!
தன்னுடன் எந்தந்த பாத்திரங்களில் முத்துராமன் நடித்தால் நன்றாக இருக்கும் என்பதை சிவாஜி உணர்ந்தேயிருந்தார்!
கர்ணன் என்றால் அர்ஜூனன் வேடத்திற்கு முத்துராமனே பொருத்தமாக இருப்பார் என்பது சிவாஜிக்கு தெரியும்!
பார் மகளே பார் சிவாஜிக்கு இணையாக பி.பி.எஸ் குரலில் முத்துராமனுக்கும் பாட்டு! அந்த பாட்டுத்தான் அவள் பறந்து போனாளே!
பழநி படம் என்றால் அதில் நான்கு சகோதரர்களில் ஒரு தம்பி முத்துராமன் என்பதில் உறுதியாக இருந்தார்!
நெஞ்சிருக்கு வரை படத்தில் தான் காதலித்த பெண் தன் நண்பனை காதலிக்கிறாள் என்று தெரிந்ததும் தானே அந்த பெண்ணுக்கும், தன் நண்பனுக்கு திருமணம் ஒரு சகோதரனைப் போல் திருமணம் செய்து வைப்பார்!
அப்போதுதான் ஒரு திருமண அழைப்பிதழையே விஸ்வநாதன் பாடலாகப் போட்டிருப்பார்!
அந்த பாடல் தான் ` பூ முடிப்பாள் இந்த பூங்குழலி’ பாடல்!
அந்த நண்பன் வேடத்திலும் முத்துராமன்!
அதே போல் தான் ராமன் எத்தனை ராமனடியிலும் முத்துராமனுக்கு நல்ல வேட!
எங்கிருந்தோ வந்தாள் படத்தில் சின்ன வேடமாக இருந்தாலும் அதில் முத்துராமனுக்குத்தான் கதையின் திருப்புமுனையாக கதாபாத்திரம்!
இப்படி முத்துராமன் மீது சிவாஜி மிகுந்த மரியாதை உண்டு!
இந்த முத்துராமன் சிவாஜியைப் பற்றி என்ன சொல்கிறார்
`என்னதான் உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா? திரு சிவாஜி கணேசனோடு நான் நடிக்கிறேன் என்றால் மலைக்கும் மடுக்குவுமுள்ள பெரிய வித்யாசத்தைக் காண்கிறேன். அவர் உலகப் புகழ் பெற்ற உன்னதமான கலை தெய்வம்.. ஆமாம்! தெய்வப்பிறவியே தான் அவர்! அவருடைய அன்பும் ஆசியும் என்று எனக்கிருந்து வருகிறது. அவர் ஒரு ஆலமரம் போல் இருந்து கலையுலகுக்கு நிழல் தருகிறார். நமது தமிழ்நாடு, அவரின் திறமைமிக்க நடிப்பால் கலையில் உலகப்புகழ் பெற்றுவிட்டது. அதையெண்ணி என் மனம் மிகுந்த பூரிப்படைகின்றது’ இதை அவர் அவன் தான் மனிதன் பட வெற்றி விழா மலரில் பதிவு செய்திருக்கிறார் முத்துராமன்!
1969ம் ஆண்டு சிவாஜி நடித்து வெளிவந்த படங்கள் அஞ்சல் பெட்டி 520, அன்பளிப்பு, காவல் தெய்வம், குருதட்சணை, சிவந்த மண், தங்கச் சுரங்கம், திருடன், தெய்வமகன், நிறைகுடம்,
இந்த ஒன்பது படங்களும் வித்யாசமானவை!
அஞ்சல் பெட்டி 520 படம் சுமாராகத்தான் ஒடியது!
இந்தப் படத்திற்கு சுதர்ஸனம் இசையமைத்து இருந்தார்!
அன்பளிப்பு இந்த படத்தை ஏ.சி.திருலோக்சந்தர் இயக்கியிருந்தார்
இந்த படம்தான் சிவாஜியும், அப்போது மிகவும் பிரபலமாக இருந்த தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட் என்றழைக்கப்பட்ட ஜெய்சங்கர் சிவாஜியுடன் இணைந்து நடித்த முதல் படம்!
ஒரு முறை ஜெய்சங்கரிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவர் இந்த அனுபவத்தை பற்றி சொல்லும் போது, ` எல்லா நடிகர்களுக்கும் சிவாஜியுடன் நடிப்பது என்றால் ஒரு வித பதட்டம் இருக்கும். ஆனால் எனக்கு பதட்டமே இல்லை. காரணம் நான் என்னை மிக சரீயஸான நடிகனாக கருதியதேயில்லை. அதனால் இதை சிவாஜியிடமே சொன்னேன்! நீங்க நடியுங்க! நான் உங்க கூட படம் முழுவதும் வந்துவிட்டு போகிறேன்’ என்றேன்1
ஆனால் படம் சரியான வெற்றியை பெறாவிட்டாலும் ஜெய்சங்கரும் இந்த படத்தில் நன்றாகவே நடித்திருப்பார்!
அந்த வருட வந்த காவல் தெய்வம் படத்தின் சிவாஜிக்கு ஒரு கெளரவ வேடம் தான்!
இது ஜெயகாந்தனின் கை விலங்கு கதையை வைத்து எடுக்கப்பட்ட படம்!
இந்தப் படத்தை நடிகர் எஸ்.வி. சுப்பையா தயாரித்திருந்தார்!
சிவாஜிக்கு ஒரு மரமேறி வேடம்!
அதே போல் ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில் வந்த படம் தான் குருதட்சணை!
இதில் சிவாஜி, பத்மினி, ஜெயலலிதா நடித்திருந்தார்கள்!
ஆனால் ஏ.பி.நாகராஜனின் புராணப் படங்கள் ஏற்படுத்திய பாதிப்பை இந்த படம் ஏற்படுத்தவில்லை.
அந்த வருடத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம் ஸ்ரீதர் தயாரித்து இயக்கிய சிவந்த மண் படம் தான்!
இந்த படம் தயாரிப்பில் இருக்கும் போதே இயக்குனர் ஸ்ரீதர் ஆனந்த விகடன் இதழில் ஒரு 12 வாரம் `அந்நிய மண்ணில் சிவந்த மண்’ என்கிற தொடரை எழுதினார்.
மேலும் வெளிநாட்டில் தயாரிக்கப்படும் படம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது!
மேலும் படம் பொருட்செலவில் பிரும்மாண்டமாக தயாரிக்கப்படுகிறது என்பதாலும் படத்தின் மீது மிகுந்து எதிர்பார்ப்பு!
சிவாஜி ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தோடு படம் வெளியாவதற்கு காத்திருந்தார்கள்.
படத்தின் பாடல்கள் அதற்கு முன்பே பட்டிதொட்டியெங்கும் பிரபலமானது!
எங்கும் திரும்பினாலும் அந்த படத்தின் ` ஒரு ராஜா ராணியிடம்’ பாடல் தான் கேட்கும்1
அது நீண்ட பாடல்1
வானொலியில் நேயர் விருப்பம் என்றால் இந்த பாடலுக்குத்தான் அதிக கடிதங்கள் குவியும்!
படம் அண்ணா சாலையின் குளோப் தியேட்டரில் ரீலிசானது!
முன் பதிவே கூட பல நாட்களுக்கு ஆனது!
சிவாஜ் ரசிகர்களை குதிரைப் போலீஸார் விரட்டினார்கள்1
ஆனால் இத்தனை பெரிய ஆரம்பம் இருந்தும் படம் எதிர்ப்பாத்த வெற்றியை தரவில்லை!
மன்னராட்சியையும் நிகழ்கால படித்த இளைஞனையும் பின்னி கதை இருந்ததால், படம் எடுபடாமல் போனதா என்பது தெரியவில்லை!
இந்த படத்தில் வந்த ` பட்டத்து ராணி’ பாடல் வந்த போதும் ஊரெங்கும் பின்னனிப் பாடகி எல்.ஆர். ஈஸ்வரி பற்றியே பேச்சு!
இதே படத்தை ஸ்ரீதர் இந்தியிலும் தயாரித்தார் படத்தின் பெயர் தர்த்தி!
தமிழ் படத்தில் முத்துராமன் நடித்த வேடத்தில் இந்தியில் சிவாஜி நடித்தார்!
அப்போது இந்தியில் பட்டத்து ராணி பாடலை பாட இந்திப் பாடகி ஆஷா போன்ஸ்லே தடுமாறிப்போனார்1
அவரால் ஈஸ்வரியைப் போல பாட முடியவில்லை!
அதே போல் இந்த படத்தின் போது தனக்கு ஏற்பட்ட ஒரு அபாயகரமான அனுபவத்தை பற்றி எங்கள் ஆனந்த விகடன் எம்.டியும், அப்போது ஜெமினி கலர் லேப் அதிபருமான திரு எஸ். பாலசுப்ரமணியன். `சிவந்த மண் படத்தை எங்கள் லேபில் தான் ப்ராஸஸ செய்தோம். தொழிலாளர்களின் கவனக்குறைவினால் பிலிம்கள் பாழாகிவிட்டது என்று ஒரு நாள் இரவு எனக்குச் சொன்னார்கள். அதிர்ச்சி அடைந்தேன்! மற்ற படங்களாக இருந்தால் இங்கே படப்பிடிப்பு மீண்டும் எடுத்துக் கொள்ளலாம் ஆனால் இதுவோ வெளிநாட்டில் எடுக்கப்பட்ட படம்! மறுபடியும் படக்குழுவினரையெல்லாம் அழைத்துக்கொண்டு எப்படி போக முடியும்’ பிறகு என்ன நடந்தது ?
(தொடரும்)
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
26th June 2016 06:19 PM
# ADS
Circuit advertisement
Bookmarks