சென்ற ஆண்டினைப் போலவே இவ்வாண்டும் மெல்லிசை மன்னர் இணைய தள ஆண்டு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. வாணி ஜெயராம் அவர்கள் தாமாகவே நிகழ்ச்சியில் ஒரு ரசிகராகப் பங்கேற்று விழாவில் கலந்து கொண்டு தன் பங்கிற்குத் தானும் பாடல்களை பாடியது இது இரண்டாம் முறை. சென்ற முறை கிட்டத் தட்ட ஒரு மணி நேரம் அவருடைய இசை மழையில் நாங்கள் நனைந்தோம். அப்போது பெரும்பாலான பாடல்களை முழுதும் பாடியது மட்டுமின்றி மனப்பாடமாகவும் பாடியது பிரமிக்க வைத்தது. இவ்வாண்டும் அதே போல். மெல்லிசை மன்னரின் இன்னொரு வெறியரான ஜெயச்சந்திரன் அவர்கள் தவிர்க்க முடியாத குடும்ப நிகழ்ச்சி காரணமாக வரவில்லை. அவருடன் மெல்லிசை மன்னரின் இசையைப் பற்றிப் பேசிக் கொண்டே இருக்கலாம்.
அதே போல் பாக்கியராஜ் அவர்களும் தாமாகவே நிகழ்ச்சிக்கு வந்திருந்தது மெல்லிசை மன்னரின் பால் அவருக்குள்ள ஈடுபாட்டினை காட்டியது. இந்நிகழ்ச்சியில் பாக்கியராஜ் கூறிய செய்தி புதியது வரலாற்றில் இடம் பெற வேண்டியது.
கவியரசர் கண்ணதாசன் அமெரிக்கா கிளம்புவதற்கு இரு தினங்களுக்கு முன்பு அந்த ஏழு நாட்கள் திரைப்படத்திற்காக தென்றலது என்னிடத்தில் சொல்லி வைத்த பாடலைத் தான் எழுதினார் என்பது. பல்லவியும் ஒரு சரணமும் எழுதி முடித்த நிலையில் அவசரமாக அன்றைக்கே அமெரிக்கா செல்ல இருப்பதாகவும் திரும்பி வந்தவுடன் பாடலை முடித்துத் தருவதாகவும் கூறிச் சென்றாராம். எதிர்பாராமல் அவர் இறைவனடி சேர்ந்து விட்டதால் பாக்கியராஜ் அவர்களே பாடலின் மீதி வரிகளை முடித்து வைத்தாராம்.
இதன் படி பார்த்தால் கவியரசர் கண்ணதாசன் கடைசியாக எழுதி பாடல் அந்த ஏழு நாட்கள் படத்தில் வரும் தென்றலது பாடலே ஆகும்.
இப்பாடலை குருவிக்கரம்பை சண்முகம் பெயர் எழுதியதாக சில தகவல்கள் உள்ளன என்பதும் நினைவு கூறத் தக்கது.
நிகழ்ச்சியில் எடுக்கப் பட்ட சில நிழற்படங்களை இங்கே விரைவில் பகிர்ந்து கொள்கிறேன்.
Bookmarks