-
28th August 2012, 12:26 PM
#1
Senior Member
Senior Hubber
கால்களை வாங்கியவ்ன்..
கால்களை வாங்கியவன்
சின்னக் கண்ணன்
கணேஷிற்குக் கோபம்,துக்கம்,அழுகை,கவலை எல்லாம்- நன்றாகக் கொலைப் பட்டினி போடப்பட்ட கன்றானது அவிழ்த்து விடப்பட்டதும் தாவிச் சென்று அம்மாவின் மடியை விட்டு அம்மாவின் காலை முட்டுமே- அதைப் போலக் கண்மண் தெரியாமல் முட்டிக் கொண்டு வந்தது. காரணம் காந்தன் சொன்ன வார்த்தைகள்.
கணேஷைப் பற்றி - கணேஷ் ஜனித்த போது பிரம்மன் அவன் தலையெழுத்தை எழுத வேண்டி எழுது கோல் எடுத்தபோது இவனே அதைப் பிடுங்கி கோழிக் கிறுக்கலாய் எழுதிவிட்டானோ என்னமோ. வாழ்க்கையில் எல்லா யிடங்களிலும் நாய், சில அமைச்சர்கள், விலைவாசி ஏற்றத்தால் தமிழ்நாட்டுப் பொதுஜனம் போல் படாத பாடு பட்டு ஒவ்வொரு நிலையிலும் மிகக் கஷ்டப்பட்டுக் கொண்டு யிருந்தான். பார்க்காத வேலைகள் எல்லாம் விரல் விட்டு எண்ணி விடலாம். கஷ்டங்கள், துன்பங்கள் எல்லாம் பழகிவிட்டதால் ஒரு நிலையில் தமிழக முதலமைச்சர் ஆவதற்கும் விண்ணப்பித்தான். அருள் பார்வை கிடைக்கவில்லை எனில் தற்சமயம் பர்வதா பிரஸ் என்ற அச்சகத்தில் டாப்பையன் முதல் முதலாளியின் செயலாளர் என - ஒரு எல்லாம் கலந்து கட்டி அடிக்கும் வேலை ஒன்றைப் பார்த்து வயிற்றை நிரப்பி வாயால் தண்ணீர் குடித்து அதைக் கழுவி வந்தான்.
அப்பொழுது தான் காந்தனின் அறிமுகம் அவனுக்கு ஏற்பட்டது.
காந்தன்: பிறக்கும் போதே ஆசீர்வதிக்கப் பட்டவர்களில் ஒருவன். சின்ன வயதில் அவன் அம்மா தங்கத்தில் செய்யப்பட்ட, வெள்ளி முலாம் போடப்பட்ட பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட நிப்பிள் கொண்ட பாட்டிலால் தான் அவனுக்கு தமிழ், ஆங்கிலம் மற்றும் யிந்திப் பால் புகட்டினாள். காந்தனின் அப்பாவிற்குச் சொந்தமாக யிரு மளிகைக் கடைகள் நகரின் மையத்திலும், யிரு 'சுத்திகரிக்கப் பட்ட தண்ணீர் ' தயார் செய்யும் தொழிற்சாலை ஊரில் ஒதுக்குப் புறத்தில் தோன்றிய அழகிய நகரான கொக்குப் பாக்கத்தில் இருந்தது. பணத்திற்குக் கேட்கவா வேண்டும். ஒரிஸ்ஸாவில் வரும் வெள்ளத்தைப் போல அவரிடம் வந்து சேர்ந்து கொண்டே, வடிந்து விடாமல் கூடிக் கொண்டே சென்றது.
காந்தன் வளர்ந்து, ஆந்திராவில் உள்ள ஒரு தனியார் பொறியியற் கல்லூரியில் இலவசமாகச் சேர்ந்து (அவன் அப்பா அவன் முதல் வகுப்பு படிக்கும் போதே நன்கொடை கொடுத்து விட்டார்) இளங்கலை, முதுகலைப் பட்டம் முடித்து விட்டு என்ன செய்வதென்றறியாமல் இருந்தான். அப்பாவின் வியாபாரத்திலும் பங்கு கொள்ள இஷ்டமில்லை. ரொம்ப போரடித்ததால் எதையாவது வளர்க்கலாம் என யோசித்தான். அவன் வீட்டில் ஏற்கெனவே ஒரு டஜன் நாய்கள், பூனைகள் இருந்து அவைகளைப் பார்த்துக் கொள்ள ஆட்களும் இருந்தார்கள். மகனின் கஷ்டத்தை அறிந்த தந்தை அவனுக்கு 'செல்லப் பிராணி 'யாக வளர்ப்பதற்கு ஆப்பிரிக்காவில் இருந்து ஒரு முதலைக் குட்டி வரவழைத்து பங்களாவின் பக்கத்திலிருந்த ஒரு புறம்போக்கு நிலத்தில் ஒரு குளமும் வெட்டிக் கொடுத்தார். அந்த முதலையோ ஹார்லிக்ஸ் சாப்பிடாமலேயே அசுர வேகத்தில் வளரவே, காந்தன் பயங்கொண்டு, அதை ஆள் வைத்து அடித்துக் கொன்று அருகில் இருந்த மாலை நேர சிற்றுண்டி விடுதிக்கு (தமிழில் 'ஈவ்னிங் மட்டன் ஸ்டால் ' என்பார்கள்) 'சிக்கன் 65 ' செய்வதற்கு அனுப்பி விட்டான்.
மறுபடியும் போரடிக்க 'சரி தமிழ் வளர்க்கலாம் ' என முடிவு செய்து 'வாயு ' என்ற பெயரில் சிற்றிதழ் ஆரம்பித்தான். அவனது பத்திரிகையை தமிழ் நாட்டில் ஐந்து பேரும்(வெவ்வேறு பெயரில் அவனே சந்தா கட்டியிருந்தான்) அமெரிக்கா,ஆப்பிரிக்கா,ஆஸ்திரேலியா,சிங்கப்பூர் , டிம்பக்டூ எனப் புலம் பெயர்ந்த தமிழர்கள் 145 பேரும் வாங்கி வந்தார்கள். 'வாயு 'வில் 'காராபூந்திப் பாண்டியன் ' என்ற பெயரில் கவிதைகள், கட்டுரைகள், சிறு கதைகள் எழுதி வந்தான் காந்தன். அந்தப் பத்திரிகையை அடிக்கக் கொடுத்த இடம் பர்வதா பிரஸ்.
-
28th August 2012 12:26 PM
# ADS
Circuit advertisement
Bookmarks