[tscii]பாமரத்தமிழர் சிறுபகுதியினரா? அவருக்குத் தமிழாவது எழுதப்படிக்கச் சரியாய்த் தெரியுமா? அவர் சம்ஸ்கிருதம் படிப்பதெங்கே? அவர் தம் கொச்சைத் தமிழிற்றானே இறைவனை வேண்டுவர்? அவன் அதனைக் கேளானா? அவருக்கருளானா? அவருக்குச் சம்ஸ்கிருத மந்திரத்தை ஏன் விடான்? இப்படி வாதிப்பர் அந்நவீனர். பாமரர் பண்டதர் எல்லோருமே தம் குறைகளைக் கொச்சைத் தமிழிற்றான் முறையிடுவர். அது இன்றும் நடைபெற்றே வருகிறது. இறைவன் அதற்கிரங்கானென யாருஞ் சொல்லவில்லை. ஊமைகளுக்குக் கொச்சைத் தமிழும் வராது. அவரும் முறையிடுகின்றனர். அவனருள்வதுமுண்டு. அதனைக் காட்டிக் கொச்சைத் தமிழ் மந்திரமும் வேண்டாமென்றால் அந்நவீனர் என்ன செய்வர்? பாமரத்தமிழருக்குத் திருமுறைகளுந்தான் ஏன்? அம்மந்திரங்களும் வேண்டாம். அவர் கொச்சைத் தமிழே அவருக்குப் போதும். மனங்கலந்த பத்தி வழிபாடு நிச்சயம். ஆனால் திருமுறை மந்திரங்களால் அர்ச்சிக்க வேண்டுமாம்: அந்நவீனர் சொல்கிறார். அதனால் அப்பாமரத் தமிழரை அவரும் புறக்கணித்தவராகிறார்.
மேலும் சம்ஸ்கிருத மந்திரத்தை வெறுப்பவர் பாமரா? அல்லர். அந்நவீனரே. அவர் பாமரத் தமிழருக்குப் பரிவு காட்டுவதுபோல் நடிக்கின்றனர். அவ்வழிபாட்டிற்கு அம்மந்திரம் தடை: அப்படி அப்பாமரரைக் கொண்டும் சொல்விக்க வேண்டும். தம்கொள்கை வலுக்கும், அவர் நம்பிக்கை அது. அதற்கே அந்நடிப்பு உதவுகிறது. ஆனால் குரான் முதலில் அரபு மொழியில் தோன்றியது. இப்போது அதற்குப் பல பெயர்ப்புகளுள, உலகத்து இசுலாமியரும் பல பாஷையினர். அவருள்ளும் பாமரரே பலர். ஆயினுமென்? அத்தனை கோடிப்பேரும் பயபக்தியுடன் ஓதியும் மதித்தும் வருவது அரபுமொழிக் குரானே. உலகெங்கு முள்ள கத்தோலிக்கரும் பல மொழிகளுக்குரியர் தான். அவருள்ளும் பாமரர் வெகுபேர். இலத்தீன் அச்சமயத்துப் பாஷை. அவரெல்லாம் தம் சமய விஷயத்தில் அம்மொழி வாக்கியங்களையே போற்றுகின்றனர். குரானை வெறுக்கிற பாமர இசுலாமிய ருளரா? இலத்தீனை வெறுக்கிற கத்தோலிக்கப் பாமர ருளரா? அப்படியே சம்ஸ்கிருத வேத மந்திரங்களை வெறுக்குந் தமிழ்ச்சைவப் பாமரரும் இலர். அவர் அவற்றை மதிக்கவே செய்வர். 'அவன் சொல்வது வேத வாக்கா? வேத விதியா? நான் ஏற்றுக் கொள்ள ' என்பது உலக வசனம். அதுவே இன்றும் சான்று. அவ்வேதாகமங்களும் அவரைப் புறக்கணிக்க வில்லை. அவர் பால் வைத்த கருணையாலேயே அவை தோன்றின. அவற்றைக் கற்க. அவ்வுண்மை புலனாம். மேலும் அவற்றுக் காசிரியர் பரமசிவனார். அவரொருவரே பரமாப்தர். அவரைக் காட்டிலுமா அந்நவீனர் கருணையுடையார்? ஆனால் பரமசிவனார் கற்றவர் விழுங்குங்கற்பகக்கனி, கல்லார் நெஞ்சில் நில்லார். அவ்வுண்மையை மறுக்க முடியாது. ஆயினும் அவர் பாமரரைப் படிப்படியாயேற்றிப் பண்டித ராக்கியே அவருள்ளத்தில் விளங்குவார்.
உலகத்தில் இரண்டு சமயங்களைக் கலக்க முடியுமா? அவற்றை ஒரே சமய மாக்க முடியுமா? அவை எவனாலும் முடியா. அவ்விரண்டு சமயங்களையும் அக்கலவையழிக்கும். இன்றேல் அக்கலவை மூன்றாஞ் சமயமாகும். அப்படியிருக்க எல்லாச் சமயங்களையுமே கலக்க வேண்டுமாம்: அந்நவீனர் சொல்கிறார். அ·தாவதென்ன? அவற்றையெல்லாம் அழிக்க வேண்டுமென்பதே யாம். அல்லது சமயங்களின் எண்ணைப் பெருக்க வேண்டு மென்பதாம். அல்லது அக்கலவையில் ஏதேனுமொரு சமயத்தைக் கரவாகப் புகுத்த வேண்டுமென்பதாம். அதில் மற்றொரு குறையுமுண்டு. என்னை? எல்லாச் சமயங்களுக்கும் அடிப்படையொன்றே, ஆகலின் எவரும் எச்சமயத்தையும் ஆசரிக்கலாம்: அவர் சொல்வது தது. அது தான் அவருடைய சமரசப் பிரசங்கம். அச்சமரசம் அவருக்கு வெகுப்பிரியமானது. அச்சமரசமாவது யாது? அது தான் விபசாரம். சமய விபசாரமே சமய சமரசம். வரம்பழியாத சைவாசாரமுடையார் பலர். அவரெல்லாம் சைவ ச்மய வெறியராம்: அவர் பிதற்ற லது. கற்பு வரம்புள் நிற்பாள் ஒருத்தி. அதனால் அவள் ஒரே கணவன் பால் ஆசை கொண்டவள். அவளை அக்கணவன்பால் வெறி கொண்டவள் என எண்ணலாமா? அப்படிச் சொல்லிப் பரிகசிக்கிறாள் இன்னொருத்தி. அவள் எப்படிப்பட்டவளா யிருப்பாள்? அப்பரிகாசம் போன்றதே அப்பிதற்றலும். அதனால் சூழ்நிலை கீழ்நோக்கியது. அதற்கிரையானார் அச்சைவருட் சிலர். அவர் அச்சமரசபதத்தைக் கேட்டனர். அது கெளரவார்த்தமுடையது போல் அவருக்குப் பட்டது. அன்றியும் சைவப் பிரமாண சாத்திரங்களை அவரால் அறிந்து கொள்ளமுடியவில்லை. ஏன்? அந்நவீனருக் கேற்ற சுவடிகள் பல. அவற்றை யெல்லாம் அவர் பிரமாணங்களெனக் காட்டினர். அதனால் சைவசமய வரம்பு கலகலத்தது. மேலும் சாத்திர வரம்புள் நின்றே சைவத்தை யாசரிக்க வேண்டும். அதுதான் சைவக்கற்பு. அக்கற்பைக் காத்தலும் அச்சைவருக்குக் கஷ்டமா யிருந்தது. சூழ்நிலையும் அக்கஷ்டத்துக் கேற்புடைய தாயிற்று. ஆகையால் அச்சைவரும் அவ்விபசாரத்தி லிறங்கினர். 'அழிந்த பிறகு அண்ணனோடு போனா லென்ன? தம்பியோடு போனா லென்ன?' அது பழமொழி. அவர் அதைப் புதுக்கினர். அவருட் சிதறலுண்டாயிற்று. சமய மாற்றத்துக்குக் காரணம் பலவாகலாம். ஆனால் சைவருள் வேறு சமயங்களிற் புகுவார்க்கு அவ்வரம்பின் கலகலப்பே காரணம். அச்சிதறியவர் வேறு சமயங்களிற் புகுந்தனர். ஒரு சிலர் நாத்திகருமாயினர்.அதிலென்ன விநோதம்? மேலும் அவரெல்லாம் சைவத்தை விடு வெளியேறியவர். விபசார பிரதி பத மாகிய அச்சமரசம் அம்மட்டில் ஓயவில்லை. சைவசமயமாகிய கிருகத்தில் இருந்து கொண்டே சமயவிபசாரஞ் செய்வாருமுளர். அச்சோரரும் எண்ணற்றபேர். அவரையும் அது சிருட்டித்துவிட்டது. அநியாயம்! இப்படியிருந்தால் நாத்திகம் ஏன் பரவாது? மனங்கலந்த சிவபத்தி வழிபாடு எங்கிருந்து வரும்? அத்தனை கேட்டுக்குங் காரணம் எது? அந்நவீனரின் அச்சமரசக் கொள்கையே. ஆனால் அக்கேடு சம்ஸ்கிருத மந்திரங்களால் வந்ததாம். அவர் சொல்கிறார். அது பொய்.
சைவ சமயந் தோன்றியது என்று அன்றே அதன் அநுட்டானத்துக் குரிய விதிநியமங்களுந் தோன்றியிருக்க வேண்டும். அது முந்தியும் அவை பிந்தியுந் தோன்றா. அதையாக்கிய பரமசிவனாரே அவற்றையும் ஆக்கினார். அவற்றைவிட்ட மாந்தர் அதனையும் விட்டவரே. தமிழ் மந்திரக் கொள்கைக்கு மூலவசனமே யில்லை. சமீப காலத்துத் தமிழ் வெறியின் விளைவே அக்கொள்கை. அதனால் சம்ஸ்கிருத மந்திரங்களைப் பெயர்த்துக் கோடல், திருமுறைப்பகுதிகளை மந்திரங்களெனக் கோடல், புதுத் தமிழ் மந்திரங்களைச் சிருட்டித்துக் கோடல் ஆகிய குழப்பங்கள் தலை தூக்கின. அக்கோடல்கள் பொருந்துவனவே யாகுக. அவற்றைச் செய்து கொடுப்பதற்கு அதிகாரிகள் வேண்டும். அவராவார் யார்? தனி மனிதரா? குழுவினரா? அவ்வதிகாரத்துக்கு வேண்டப்படும் தகுதி யாது? அ·தவரிடமுண்டா? அவ்வதிகாரம் அவருக்கு எங்கிருந்து கிடைத்தது? மக்களிடமிருந்தா? ஆமெனின், இப்போது சம்ஸ்கிருத மந்திரங்கள் வழக்கத்தி லிருந்து வருகின்றனவே; அவையும் அக்காலை அப்படித்தான் வந்தனவா? எதிர்காலத்திலும் சைவமக்கள் தோன்றுவர். அவரும் தமக்கிஷ்டமான அதிகாரிகளை நியமிக்கலாம். முந்தையோர் கொடுத்த மந்திரங்களை அப்பிந்தையோர் மாற்றுவர். அம்மாறுதல் அடிக்கடி நேரக்கூடும். மந்திரங்களே வேண்டா மென்கிற கட்சியும் உருவாகலாம். அதுவும் பெரும் பகுதி வாக்குச் சீட்டு பெறமுடியும். அதனால் மந்திரங்ளென்பதே மறையும். அவை வல்லாரும் இல்லாற் போவர். சைவாசாரத்திக்குப் பிரமாண சாத்திர சம்மதந் தானே வேண்டும். வெகுஜன சம்மதமும் ஏன்? சாஸ்திரம் ஸ்திரமா? ஜனம் ஸ்திரமா? அவற்றுள் பிரதானமாவதும் எது? அவ்வதிகாரிகள் செய்தனவற்றை மந்திரங்களென எலாதாருமிருப்பர். அவரை யார் என் செய்வர்? அவரவர் தத்தமக் கிஷ்டமான மந்திரங்களை யாக்கிக் கொண்டா லென்னை? இன்னும் அவ்வதிகாரங் கொடுத்தவர் பாமரரும் பண்டிதருமா? பண்டிதர் மாத்திரமேயா? பண்டிதரே யெனின், அவர் தமிழ்ப் பண்டிதரா? சைவ பண்டிதரா?
10. சம்ஸ்கிருத மந்திரங்கள்
சந்திராங்கத னென்பா னொருவன். அவன் இவ்வுலகத்தரசன். அவன் நாகலோகஞ் சென்றான். நாகரசனும் அவனும் சந்தித்தனர். அந்நாகராசன் அவனை நோக்கி 'நீங்கள் திறந்தெரித் தேத்துந் தேவன் யார்?' என்றான். அதற்கவன் 'கங்கையை முடியிற் சூட்டிக் கவுரியை பாகம் வைத்துப்- பொங்கர வங்கடம்மைப் புரிகுழை யணிந்து பாதச் - செங்க மலத்தை வேதச் சிரத்தினி லிருத்தித் தேவ - ரங்கைகள் கூப்ப நின்ற வவனெம்மை யளிக்குந் தேவே' என்று விடை கொடுத்தான். உடனே அந்நாகராசன் 'சிறியனீ யாயுமென்முன் சிவனது தகுதியெல்லா - மறிவுற மொழித லாலேயருங்களி யெய்து கின்றேன்' என்று கூறி மகிழ்ந்தான். சந்திராங்கதனுக்குப் பல வரிசைகளுங் கிடைத்தன. இச்செய்தியைச் சைவ சமய சிரோமணியாகிய வரதுங்கராமபாண்டிய மகாராசர் தெரிவிக்கிறார். இதனால் சைவசமயத்தின் வியாபகம் புலனாகும்.
பிரமனுலகம், விட்டுணுவுலகம், இந்திரனுலகம் முதலிய வுலகங்கள் பல. அவை சாத்திரப் பிரசித்தம். அங்கும் சீவ வர்க்க முண்டு. பாஷையிருக்கும். அப்பாஷை ஒன்றேயாகலாம், பலவு மாகலாம். அவ்வுலகங்களின் தலைவன் மாரும் ஏனைச் சீவரும் இப்பாரத தேசத்துக்கு வருவர். இங்குள்ள சைவாலயங்களில் பரமசிவனாரை ஏத்தித் தொழுவர். அ·தென்று முள்ள வழக்கம். 'முந்திய தேவர் கூடி முறைமுறை யிருக்குச் சொல்லி.....இமையவர் பரவி யேத்த', 'வேதங்கள் நான்குங் கொண்டு விண்ணவர் பரவியேத்த', 'இந்திரன் பிரமனங்கி யெண்வகை வசுக்களோடு மந்திர மறைய தோதி வானவர் வணங்கி வாழ்த்த', 'வானவரிருக்கொடும் பணிந் தேத்த விருந்தவன்', 'அருமறையால் நான்முகனும் மாலும் போற்றுஞ் சீரானை', 'புடை சூழ்ந்த பூதங்கள் வேதம் பாட', 'அண்டர்தமக் காகமநூன் மொழியும்' என்றது திருமுறை. அவ்வேதாகமங்கள் சம்ஸ்கிருதமே. அவ்வானவ ரனைவரும் அம்மந்திரங்களைச் சொல்லியே துதிக்கின்றனர். அவ்வடிகளிற் காண்க. அரக்கரும் இருக்கு மந்திரங் கொண்டே துதித்தார். 'முன்கைமாநரம்புவெட்டி முன்னிருக் கிசைகள் பாட', 'மந்திரத்த மறைபாட வாளவனுக்கீந்தான்' என்ற திருமுறை காண்க. அவ்வடிகலில் இராவணன் செய்தி கூறப்பட்டது. இவற்றால் சைவ சமயத்தின் வியாபகம் புல னாவதோடு வேத சிவாகமங்களின் வியாபகமும் புலனாகும்.' எண்டிசைகள் கீழுலக மேலுலக மெங்கு - மண்டுமறை யன்றியில் வழங்குவ....' எனப் புராணமும் அதை யாதரிக்கிறது.
சம்ஸ்கிருதம் விண்ணுலகத்துக்கும் பொது என்றது நன்னூல் விருத்தி. அதற்கு மூலவசனங்கள் வேண்டுமே. மேற்காட்டிய 'முந்திய் தேவர்' என்றது முதல் 'அண்டர் தமக்கு' என்றது வரையுள்ள திருமுறை யடிகளே அவை. இன்னும் கலை விளங்கிய மக்களுக்கும் வானவ ராதியோரும் சந்திக்க நேரும். அப்போது அவர் அம்மொழியிற்றான் பேசிக்கொள்வர். தமயந்தி சுயம்வரம் நடந்தது. அதில் பல நாட்டரச குமாரரும் வானவருங்கூடினர். அவர் பேசிக்கொண்டது அம்மொழியே. அதை இரு மொழி நைடதத்திலுங் காண்க. இதனால் சம்ஸ்கிருதத்தின் வியாபகமும் புலனாகும். ஆகவே அகில புவனங்களுக்குமே உரியதாகிய சைவசமயத்தின் சர்வபிரமாண நூல்களாகிய் வேதசிவாகமங்களை அப்புவனங்களுக்கும் பொது மொழியாகிய சம்ஸ்கிருதத்தில் அச்சமய முழுமுதற் கடவுளாகிய பரமசிவனாரருளிச் செய்தார். இப்பேருண்மை அந்நவீனர் தலையில் ஏறுமா? அவர் தான் தமிழ் வெறி கொண்டலை கின்றனரே.
இனிக், காசுமீரச் சைவர் இராமேசுவரத்துக்கு யாத்திரை வருவர். இராமநாதாலயத்தில் மந்திரங்கள் ஓதப்படும். அவருக்கு அவற்றின் பொருள் தெரிந்திருக்க வேண்டும். தமிழகச் சைவர் காசிக்கு யாத்திரை போவர். விசுவநாதால்யத்திலும் அவை ஓதப்படும். அவருக்கு அவ்ற்றின் பொருள் தெரிந்திருக்க வேண்டும். அவ்விரண்டாலய மந்திரங்களும் பொதுவாயதொரு மொழியிலிருந்தாற்றான் அது சாத்தியமாகும். சைவாலயங்கள் எல்லா மாகாணங்களிலுமுள. அங்கெல்லாம் மந்திரங்கள் ஓதப்படும். அவற்றின் பொருளுந் தெரிந்திருக்க வேண்டும். அதற்காக அம்மொழி அம்மாகாணங்களுக்கும் பொதுவாயிருத்தல் நல்லது. சம்ஸ்கிருதமே அப்படியிருப்பது. ஆகலின் அம்மொழி மந்திரங்களே சகல சைவாலயங்களிலும் ஓதப்பட்டு வரலாயிற்று. திருப்பழுவூர் என்பது ஒரு தலம். அவ்வூர்ச் சிவாலயத்தில் 'அந்தணர்களானமலை யாளரவ ரேத்'துகின்றனர். அவர் சொந்த மொழி மலையாளம். ஆயினும் அம்மொழி மந்திரங்களை அவர் அங்கு ஓதவில்லை. 'வேதமொழி சொல்லி' (அம்) மறை யாளரிறைவன்றன் பாதாமவை யேத்'தியே அர்ச்சிக்கின்றனர். வேதமொழி - சம்ஸ்கிருத மந்திரம். திருச்செந்தூர் முதலிய சில ஆலயங்களுள. அங்கு அம்மலையாளர் வந்து அர்ச்சிக்கின்றனர். அ·தெப்படியோ நேர்ந்து விட்டது. ஆனால் அங்கும் அவர் ஓதுவன சம்ஸ்கிருத மந்திரங்களே. அதையுங் காண்க.
மாகாணந்தோறும் சைவாலயங்களுள, அவற்றை அவ்வம் மாகாணத்துச் சைவர்கள் தம்பொருட் செலவில் நிருமித்திருக்கலாம். ஆயினும் அவ்வெல்லா வாலயங்கலும் வேத சிவாகம விதிப்படிதான் நடந்துவரும். ஒன்றிரண்டில் அவ்விதி சிறிது திறம்பி யிருக்கலாம். அவற்றைத் திருத்திகொள்ள வேண்டும். அவ்வாலயங்களின் பொருட்செல்வம் அவ்வம் மாகாணத்துச் சைவமக்களுக்கே உரியதாகுக. ஆனால் ஒரு மாகாணத்துச் சைவமக்களுக்கு மற்ற மாகாணங்களிலுள்ள சைவாலயங்களும் சேவாயோக்கிமாயிருந்துவர வேண்டும்: இருந்தும் வருகின்றன. அவருக்கு அவற்றைச் சேவிக்கு முரிமை மறுக்கப்படவுங் கூடாது: மறுக்கப்படவில்லை. அவை வேதசிவாகம முறையில் நடந்துவருவதே அதற்கு அனுகூலமாம். அவ்வளவில் அவ்வெல்லா மக்களுக்கும் அவ்வெல்லா வாலயங்களும் பொதுவுடைமையே. அதில் தடையிருக்க முடியாது.
இன்னும் இராமன் வடநாட்டான். அவன் பிரதிட்டித்த் சிவலிங்கமே இ[