`யாமிருக்க பயமேன்'
விஜய் டிவியில் திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் மர்மத்தொடர் `யாமிருக்க பயமேன்.'
பூமிக்குள் புதைந்த ரகசியம் உறங்கிவிடும்; மனித மனங்களுக்குள் புதைந்த ரகசியம் உறங்கிடாது என்பதற்கேற்ப நூற்றுக்கணக்கான வருடங்களுக்குமுன் நமது மண்ணில் வாழ்ந்த சித்தர்களும், சித்தாந்தர்களும் விட்டுச்சென்ற மர்மங்கள் ஏராளம். அவற்றை அறிய நாம் செய்த ஆராய்ச்சியில் விடை தெரியாத பல மர்மங்கள் அடங்கிக் கிடக்கின்றன. அதில் சில உண்மைகளையும், கற்பனைகளையும் கலந்து மக்களின் ரசனைக்கேற்ப ஒரு தேர்ந்த கதைக்களத்தை எடுத்து அதை தொடராக வழங்கியுள்ளதுதான் இந்த `யாமிருக்க பயமேன்' தொடர்.
பழனி முருகன் சிலையை உருவாக்கியது போகர் சித்தர் என்பது புராண இதிகாசங்கள் கூறும் உண்மை. நவபாஷாணங்களால் உருவான அந்த சிலையைப் போல போகர் இன்னொரு சிலையை உருவாக்கினார் என்று நம்பப்படுகிறது. ஆனால் அந்த இரண்டாவது சிலை எங்கே என்பதுதான் இன்றுவரை பதில் கண்டறியப்படாத மர்மமாக நீடித்து வருகிறது.
பழனி மலைப்பகுதியில் மறைந்துள்ள முருகனின் இரண்டாவது சிலையை காலம் காலமாய் பல குழுக்கள் தேடியும் பலன் என்னவோ பூஜ்யம் தான். பல தலைமுறைகளாக தொடரும் முருகன் சிலைக்கான இந்த தேடலில் தற்காலத்தில் மிக தீவிரமாக முயற்சித்து வருபவர்கள் பழனி நகரத்தில் வசிக்கும் இந்திராணி மற்றும் பழனி மலைப்பகுதியில் வசிக்கும் திணைக்காத்தான் குடும்பத்தினர். இரு குழுக்களுமே `இரண்டாவது சிலை தங்கள் பரம்பரைக்கு சேர வேண்டிய குலச் சொத்து' என கருதுவதால், அதை கைப்பற்றும் முயற்சியில் பல தலைமுறைகளாக பல்வேறு யுத்தங்களையும், அதனால் பெரும் உயிரிழப்புகளையும் சந்தித்துள்ளனர்.
புதிராய் தொடரும் இந்த மர்மக் களத்தில் ஒருவன் பலியாக, அந்த வழக்கை விசாரிக்க வரும் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் அது கொலையாக இருப்பதற்கான வாய்ப்புகளை ஆராய, பழனியில் வசிக்கும் வெற்றிவேலின் நண்பன் ஆறுமுகம் இந்த மரணத்திற்கும் சிலை தேடலுக்கும் நிச்சயம் தொடர்புண்டு என திட்டவட்டமாக கூறுகிறான். வெற்றிவேல் இதை நம்ப மறுத்தாலும், தொடர்ந்து நடக்கும் சில நிகழ்வுகள் புரிதலுக்கும் மீறிய நிஜங்களாக வந்து போக, இந்த வழக்கில் மிகுந்த ஆர்வம் கொள்கிறான்.
அந்த இரண்டாவது சிலையை தேடும் நோக்கத்தோடு சென்றவர்கள் கண்டது பல சாகசங்களை தெரிந்து வைத்திருந்த சித்தர்களை. இந்த சித்தர்கள் இரும்பை தங்கமாக்கும் `ரசவாதக்கலை'யில் தேர்ந்தவர்கள். பாதரசத்தை இறுகச்செய்து ஆபரணமாக அணிபவர்கள். பலவித ஆரூடங்களும், மாயவித்தைகளும் கற்றுத்தேர்ந்தவர்கள். இவர்களால் நிகழவிருக்கும் அற்புதங்கள் என்ன என்பதை `யாமிருக்க பயமேன்' கதை சொல்லும்.
வழிபடுவதற்காக முருகன் சிலையை தேடும் இவர்களைத் தவிர, சிலையை கைப்பற்றி, பல்லாயிரம் கோடி பணம் பார்க்கவும் ஒரு கும்பல் இந்த தேடுதல் போராட்டத்தில் ஈடுபடுகிறது. விடையில்லா இந்த தேடலின் முடிவில் உணர்த்தப் போகும் உண்மை இறுதியில் தரப்போவது என்ன? முருகனின் இரண்டாவது சிலையா? அதைத் தேடியலைந்தவர்கள் அதற்காக கொடுத்த விலையா? புதைந்திருக்கும் ரகசியங்கள் வெளிப்பட பதிலளிக்க வருவதே `யாமிருக்க பயமேன்'.
மூலக்கதை நாகா மற்றும் ராம்ஜி. திரைக்கதை இந்திரா சவுந்தர்ராஜன். இசை: ஸ்ரீஹரி கிருஷ்ணா. நட்சத்திரங்கள்: வடிவுக்கரசி, மாஸ்டர் சாணக்கியா, சசி ஆனந்த், அனில், மகாலட்சுமி.
தயாரிப்பு விஜய் டிவி.
Bookmarks