-
4th March 2010, 06:37 PM
#81
Senior Member
Veteran Hubber
Originally Posted by
Plum
saaradha_sn, Kase dhan kadavuLada matrum veettukku veedu cover paNNittIngaLA?
(in the 3 series yu are doing - RaviC, JaiS nad SriK)
Dear Plum,
'திருமாங்கல்யம்' படத்துக்கு முன் 'காசேதான் கடவுளடா' படத்தைப் பற்றித்தான் எழுத நினைத்தேன். ஆனால் அதில் ஸ்ரீகாந்தின் ரோல் சின்னது என்பதால் தள்ளிப்போட்டேன். (அதில் தேங்காய் ரோலுக்கு முன் முத்துராமன் ரோலே சிறியதுதான்). விரைவில் எழுதுகிறேன்.
(நீங்கள் குறிப்பிட்ட மூன்று திரிகளிலும் எந்தெந்தப் படங்கள் பற்றி இதுவரை 'கவர்' பண்ணப்பட்டுள்ளது என்ற பட்டியல் அந்தந்த திரிகளின் முதல் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது).
-
4th March 2010 06:37 PM
# ADS
Circuit advertisement
-
4th March 2010, 06:40 PM
#82
Senior Member
Platinum Hubber
Thanks saaradha. romba comment paNNattAlum, I watch these threads with interest(despite not being a fan of any of the actors concerned!)
-
4th March 2010, 07:08 PM
#83
Senior Member
Veteran Hubber
Dear Plum,
On seeing the names of two movies you have mentioned in your previous post, it seems that you are a fan of comedy films.
So, did you read the post for 'Kaasi Yaathirai' in previous page (#5)...? (which is a comedy number).
-
9th March 2010, 11:40 AM
#84
Senior Member
Veteran Hubber
இந்த வாரம் திங்கள் முதல் வெள்ளி வரை, ஜெயா தொலைக்காட்சியின் 'திரும்பிப்பார்க்கிறேன்' நிகழ்ச்சியில் தேசிய நடிகர் ஸ்ரீகாந்த் தோன்றி தன் நினைவலைகளை பகிர்ந்துகொள்கிறார். முதல் நாள் நிகழ்ச்சியைப் பார்க்காதவர்களுக்காக, சில விஷயங்கள் இதோ......
-
9th March 2010, 11:57 AM
#85
Senior Member
Veteran Hubber
ஜெயா டி.வி.யின் 'திரும்பிப் பார்க்கிறேன்' நிகழ்ச்சியில் ஸ்ரீகாந்த்.
திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகும் 'திரும்பிப் பார்க்கிறேன்' நிகழ்ச்சியில் ஒவ்வொரு திங்களன்றும் நமக்கு ஒரு எதிர்பார்ப்பு. இந்த வாரம் யார் வந்து தன் திரையுலக அனுபவங்களைத் திரும்பிப்பார்த்து நம்மோடு பகிர்ந்துகொள்ளப் போகிறார்கள் என்று அறிந்துகொள்ள ஆர்வம். (இந்த வாரம் வரப்போவது யார் என்று முதல் வாரமே அறிவிக்க மாட்டார்கள்).
அந்த வகையில் இதுவரை நான் பார்த்தவரையில் சௌகார் ஜானகி, ஜெயந்தி, காஞ்சனா, சி,வி,ராஜேந்திரன், சித்ராலயா கோபு, பாலமுரளி கிருஷ்ணா, ஏ.ஆர்.எஸ்., சோ, பாலாஜி, ரவிச்சந்திரன், விசு, எஸ்.பி.முத்துராமன், ஏ.சி.திருலோகசந்தர், இசையமைப்பாளர் (சங்கர்) கணேஷ், சந்திரபோஸ், குசலகுமாரி, ராஜசுலோச்சனா, ஒய்.ஜி.மகேந்திரன், வெண்ணிற ஆடை மூர்த்தி, குட்டி பத்மினி, பாடகி M.S.ராஜேஸ்வரி, டான்ஸ் மாஸ்டர் புலியூர் சரோஜா, ஒளிப்பதிவாளர்கள் பி.என்.சுந்தரம், எம் கர்ணன், பேராசிரியர் ஏ.எஸ்.பிரகாசம், வியட்நாம் வீடு சுந்தரம், வினு சக்ரவர்த்தி..... இப்படி ஏராளமான திரைப்பிரபலங்கள் பங்கேற்று தங்கள் அனுபவங்கள் சிலவற்றை பகிர்ந்து கொண்டிருக்கின்றனர்.
அந்த வகையில் நேற்று (08.03.2010) யார் வரப்போகிறார்கள் என்று ஆவலோடு காத்திருந்தபோது, இன்ப அதிர்ச்சியாக நிகழ்ச்சியை அறிமுகம் செய்யும் அந்தப்பெண் காம்பியர் இப்படி அறிவித்தார்.. "அதிர்ஷ்டம்னா இவர் மாதிரிதாங்க இருக்கனும். பெரிய இயக்குனரான கே.பாலச்சந்தர் அவர்களால் நாடக மேடைகளில் செதுக்கப்பட்டு, இன்னொரு பெரிய இயக்குனரான ஸ்ரீதர் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட இவரோடு முதல் படத்தில் நடிச்சது யார் தெரியுமா? நம்ம் புரட்சித் தலைவி அம்மாதான். தெரியலீங்களா?. என்னங்க அடுத்தாத்து அம்புஜத்துக்குக் கூட இவரைத் தெரிஞ்சிருக்கும்போது உங்களுக்குத் தெரியாமல் இருக்குமா?" என்று அந்தப்பெண் அறிவித்ததுமே புரிஞ்சு போச்சு. ஆகா.... "நம்ம" ஸ்ரீகாந்த் அல்லவா வரப்போகிறார் என்று மனம் முழுக்க மகிழ்ச்சி.
அவரேதான்.... பேண்ட், முழுக்கை சட்டை, நெற்றியில் விபூதி, பொட்டு சகிதம் சின்னத் திரையில் தோன்றியதும் கண்களில் நீர் கட்டியது. 'எவ்வளவு நாளாச்சு உங்களைப்பார்த்து. நீங்கன்னா எனக்கு அவ்வளவு இஷ்ட்டம். மகாநடிகனில் கடைசி ஒரு சீனில் கவர்னராக வருவீங்க. அதன்பின்பு பார்க்கவேயில்லையே' பைத்தியக்காரி போல மனசுக்குள்ளேயே பேசிக்கொண்டிருந்தேன். திரையில் தோன்றியதும் வணக்கம் போட்டுவிட்டு பேசத்துவங்கினார். பேச ஆரம்பித்த பிறகுதான் அவர் எவ்வளவு துரதிஷ்டக்காரர் என்று தெரிந்தது.
'என்னுடைய உண்மையான பெயர் வெங்கட்ராமன். சொந்த ஊர் ஈரோடு. ஆஃபீஸ்ல 'வெங்கி'ன்னு கூப்பிடுவாங்க. நண்பர்கள் சிலர் ராஜா என்றும், ஸ்ரீ என்றும் கூப்பிடுவாங்க. ஸ்ரீகாந்த்னு அழைப்பவர்கள் ரொம்ப கம்மி (நம்ம திரியில் முதலிலேயே இதை சொல்லியிருந்தோம்). பெற்றோரைப்பொறுத்தவரை நான் அதிர்ஷ்டம் இல்லாதவன். என்னுடைய இரண்டு வயதிலேயே அப்பாவும், ஐந்து வயதில் அம்மாவும் இறந்துட்டாங்க (எவ்வளவு பெரிய துரதிஷ்டம்) தாத்தாவிடமும், மாமாவிடமும் வளர்ந்தேன். கோவையில் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு, கல்லூரியில் நான் விரும்பிய குரூப் கிடைக்காததால் டைப்ரைட்டிங் மற்றும் Short-Hand படித்துவிட்டு, வேலூரில் கொஞ்சநாள் வேலை செய்தபின் வேலைதேடி சென்னை வந்தேன். மாதம் முப்பது ரூபாய் சம்பளத்தில் (??) ஒரு வேலை கிடைத்தது. திருவல்லிக்கேணியில் மாதம் 40 ரூபாய் வாடகையில் ஒரு ரூம் எடுத்து அதில் நாலுபேர் தங்கியிருந்தோம். எனக்கு வாடகை ஒன்பது ரூபாய். மீதமுள்ள பணத்தில் ஒருநாளைக்கு மதியம் ஒருவேளை மட்டுமே சாப்பிடுவேன். அதற்கு மாதம் 15 ரூபாய். காலை டிபன் எப்போதாவது நண்பர்கள் வாங்கித்தந்தால் சாப்பிடுவேன். டீ, காபியெல்லாம் சாப்பிடுவது கிடையாது. இப்படியே கொஞ்சநாள் போனது. (ரவிச்சந்திரன் திரியின் முதல் பக்கத்தில், 'கடந்த கால வாழ்க்கையை சொல்வதில்' நடிகர்களையும் நடிகைகளையும் ஒப்பீடு செய்திருந்தேன். அது எவ்வளவு சரியானதுன்னு ஒவ்வொருவரும் நிரூபிக்கிறாங்க).
முப்பது ரூபாய் வருமானத்தில் எவ்வளவு நாள் ஓட்டுவது என்று வேறு வேலை தேடத்துவங்கினேன். என் நண்பன் மூலமாக ஒரு வேலைக்கு இண்ட்டர்வியூவுக்குப்போனேன். ஒரு கடிதம் டைப் செய்யச்சொன்னார்கள். பண்ணினேன். 'எவ்வளவு சம்பளம் எதிர்பார்க்கிறீர்கள்?' என்று மேனேஜர் கேட்க, நான் மனதுக்குள் சாப்பாடு மற்ற செலவுகளைக் கணக்குப்போட்டுப் பார்த்து '80 ரூபாய்' என்றேன். '80 ரூபாயா?' என்று அவர் கேட்டதும், அதிகமா கேட்டுட்டோமோ என்று நினைத்து, சரி காலை டிபனை கட் பண்ணிக்கலாம் என்ற எண்ணத்துடன் '70 ரூபாய்' என்றேன். மீண்டும் அவர் அதிர்ச்சி தெரிவிக்க, இன்னும் பத்து ரூபாய் குறைத்து '60 ரூபாய் கொடுத்தால் வேலையில் சேர்கிறேன்' என்றேன். அவர் சிரித்துக்கொண்டே 'உங்களுக்கு சம்பளம் மாதம் 100 ரூபாய்' என்றார். என் சந்தோஷத்துக்கு அளவேயில்லை. என் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ள பெற்றோர் இல்லையே என்று அப்போது வருந்தினேன். சென்னைக்கு வந்து முதல் முறையாக மூன்று வேளை சாப்பிட்டேன். அதுவரை பல்பொடி வாங்கி கையாலேயே பல் துலக்கி வந்த நான் பேஸ்ட், பிரஷ் வாங்கி பல் துலக்கத்துவங்கினேன்.
வேலையில் சேர்ந்து சிறிதுநாட்கள் கழித்து, நாங்கள் ஒரு நாடக ட்ரூப் ஆரம்பித்து, சைடில் நாடகங்கள் போடத்துவங்கினோம். மேஜர் சுந்தர்ராஜன், எஸ்.ஆர்.வீரராகவன் இவர்களெல்லாம் எங்கள் ட்ரூப்பில் ஒரு ரூபாய் மெம்பர்கள்'.
-
9th March 2010, 12:26 PM
#86
Senior Member
Veteran Hubber
'அப்போது ஏ.ஜி.எஸ். டிபார்ட்மெண்ட்டில் வேலை செய்துவந்த கே.பாலச்சந்தர், அவரது ஆஃபீஸ் விழாக்களுக்காக நாடகம் போடுவார். அந்த நாடகங்களை எங்கள் ரூமில் இருந்துதான் எழுதுவார். அதில் முக்கியமான நாடகம்தான் மேஜர் சந்திரகாந்த். இந்த நாடகத்தை 'கிரீக் ஸ்டேஜ்' ஸ்டைலில் போடலாம் என்று நான் யோசனை சொன்னேன். அதாவது நடுவில் மேடை போட்டு நாடகம் நடக்க, சுற்றிலும் ஆடியன்ஸ் இருந்து பார்ப்பதாக இருக்கும். இன்ஸ்பெக்டர் மோட்டார் சைக்கிளில் வந்து இறங்குவது போன்ற காட்சிகளெல்லாம் நேச்சுரலாக இருக்கும். ஏஜீஸ் அலுவலக காம்பவுண்ட்டில் அதற்கு நிறைய இடம் இருந்தது. இந்த ஏற்பாடு அனைவராலும் வரவேற்கப்பட்டது. கே.பாலச்சந்தர் மிக அற்புதமான படைப்பாற்றல் கொண்ட ஒருவர்.'
(ஸ்ரீகாந்த் பேட்டியின்போது ராஜநாகம், காசேதான் கடவுளடா, தங்கப்பதக்கம் ஆகிய படங்களின் கிளிப்பிங்ஸ் காண்பிக்கப்பட்டன. ஒளிப்பதிவாளர் பாபு, தன் நண்பர் ஸ்ரீகாந்த் பற்றி சொன்ன தகவலும் இடம் பெற்றது).
-
10th March 2010, 10:09 PM
#87
சாரதா, நிகழச்சியைப் பார்க்க முடியாத என் போன்றவர்களுக்கு பெரிய உதவி செய்கிறீர்கள்! வாழ்த்துக்கள்!
-
13th March 2010, 11:23 PM
#88
Senior Member
Senior Hubber
-
14th March 2010, 10:06 AM
#89
Senior Member
Veteran Hubber
மிக்க நன்றி ராஜேஷ்....
பார்க்காதவர்களுக்கு பார்க்க வாய்ப்பளித்தமைக்கும், பார்த்தவர்கள் மீண்டும் பார்க்கச்செய்தமைக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள், நன்றிகள்.
Originally Posted by
Bhoori
சாரதா, நிகழச்சியைப் பார்க்க முடியாத என் போன்றவர்களுக்கு பெரிய உதவி செய்கிறீர்கள்! வாழ்த்துக்கள்!
RV.....
உங்கள் பாராட்டுக்கள் அப்படியே நண்பர் ராஜேஷுக்கு சமர்ப்பிக்கப்படுகிறது.
-
14th March 2010, 06:26 PM
#90
Senior Member
Veteran Hubber
முதல் நாள் போக மற்ற நான்கு நாட்களில் ஸ்ரீகாந்தின் 'திரும்பிப் பார்க்கிறேன்' நிகழ்ச்சியிலிருந்து சில துளிகள்......
நடிகர்திலகத்தைப்பற்றிப் பேசிய இடங்களிலெல்லாம் 'நடிகர்திலகம்' என்று மட்டுமே குறிப்பிட்டாரே தவிர 'சிவாஜி சார்' என்று கூட பெயரைக் குறிப்பிடவில்லை. அவருடன் தனக்கு நடிக்கக்கிடைத்த சந்தர்ப்பங்கள் மிகச்சிறந்த அனுபவங்கள் என்று சொன்னவர் அவற்றில் சிலவற்றைப் பட்டியலிட்டார். அவற்றில் வியட்நாம் வீடு, தங்கப்பதக்கம், ஞான ஒளி, ராஜபார்ட் ரங்கதுரை, அவன் ஒரு சரித்திரம் ஆகியவை அடங்கும். தன்னுடைய பாத்திரம் மட்டும் சிறக்காமல் உடன் நடிக்கும் அனைவரது ரோலும் நன்றாக அமைய வேண்டுமென்று சிரத்தை எடுத்துக்கொள்வார் என்று கூறியவர், படத்தில் எனக்கு ஒரு குளோசப் வைத்தால் அதற்கு கௌண்ட்டராக தனக்கும் ஒரு குளோசப் கேட்பார். அதுபோல அவருக்கு ஒரு குளோசப் வைத்தால், எனக்கும் ஒன்று வைக்கச்சொல்வார். கேட்டால், 'அப்போதான் நான் செய்த பெர்ஃபாமன்ஸுக்கு நீ ரெஸ்பான்ஸ் பண்ணுவது ஜனங்களுக்குத் தெரியும்' என்பார். சில நேரங்களில் அவர் சொல்லித்தருவது எனக்கு ஸூட் ஆகாதபோது, 'சரி அவன் ஸ்டைலில் பண்ணட்டும் விட்டுடுங்க' என்று சொல்லிவிடுவார். நடிகர்திலகத்தோடு நடிக்க மற்ற நடிகர்களுக்கு கிடைக்காத அருமையான பாத்திரங்கள் எல்லாம் அவரோடு நடிக்கும்போது எனக்குக் கிடைத்தது.
நிறையப்பேர் நான் பராசக்தி படம் பார்த்துவிட்டுத்தான் நடிக்க வந்தேன்னு சொல்லிக்கிறாங்க. அப்படி வந்தவங்க ஏன் அவரிடமிருந்து டெடிகேஷன், சின்ஸியாரிட்டி, பங்க்சுவாலிட்டி இவற்றைக் கற்றுக்கொள்ளவில்லை?' என்று கேள்வியும் எழுப்பினார்.
-----------------------------------------------
ஜெயகாந்தன் கதைகளைப்பற்றி அதிகம் புகழ்ந்தார். அவருடைய நான்கு கதைகள் படமானபோது நான்கிலும் தான் கதாநாயகனாக நடித்ததைப்பற்றி பெருமைப்பட்டார். கதாசிரியர் இருக்கும்போது அதென்ன திரைக்கதை என்று ஒன்று தனியாக?. கதை எழுதுபவர்களுக்கு திரைக்கதை எழுதத் தெரியாதா என்று விளாசினார். சிலநேரங்களில் சில மனிதர்கள் படத்துக்கு ஜெயகாந்தன் ஷாட் வாரியாக பிரித்து, லாங்ஷாட், குளோசப், ட்ராலி ஷாட் என்று விவரித்து எழுதியது புத்தகமாக அச்சிடப்பட்டு, அரசு திரைப்படக் கல்லூரியில் பாடமாக வைக்கப்பட்டுள்ளதை பெருமையுடன் குறிப்பிட்டார்.
--------------------------------------------------
ராஜாஜியின் 'திக்கற்ற பார்வதி' திரைப்படத்தில் நடித்ததைப் பற்றியும் அதற்கு மத்திய அரசின் விருது கிடைத்து, அதைப்பெற டெல்லி சென்றபோது நடந்த அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டார். அக்கதை உண்மையிலேயே ராஜாஜி அட்டெண்ட் பண்ணிய ஒரு கேஸ் என்றும், அவர் அட்டெண்ட் பண்ணிய கேஸ் என்பதால், அதே கோர்ட்டிலேயே படமாக்க அனுமதி கிடைத்ததையும் சொன்னார்.
-------------------------------------------------
மேடை நாடகங்களைப்பற்றி அதிகம் பேசினார். கிட்டத்தட்ட ஒரு எபிசோட் முழுக்க நாடகங்களுக்கே ஒதுக்கி, தான் நடித்த நாடகங்கள் மாத்திரமல்லாது மற்றவர்களின் நாடகங்களையும் ரொம்பவே சிலாகித்துப்பேசினார். தான் நடித்த நாடகங்கள் எல்லாம் எப்படி படமாயின என்பதை விவரித்தார். எல்லோருடைய நடிப்பையும் புகழ்ந்தார். எக்காரணம் கொண்டும் மேடை நாடகங்கள் அழிந்துவிட விட்டுவிடக்கூடாது என்று ரொம்பவே ஆதங்கப்பட்டார்.
---------------------------------------------------
'இவர்கள் வித்தியாசமானவர்கள்', 'ராஜ நாகம்','பாமா விஜயம்' போன்ற ஏராளமான படங்களைக் குறிப்பிட்டுப்பேசினார். ராஜநாகம் இந்தியிலும், தெலுங்கிலும் தோல்வி என்றும், கன்னடத்திலும் தமிழிலும் மட்டுமே வெற்றி என்றும் சொன்னார். ஜெயலலிதாவைக் குறிப்பிடும் போதெல்லாம் 'முன்னாள் முதல்வர்' என்று குறிப்பிட்டார். வெண்ணிற ஆடை படத்தில் முதலில் அந்த ரோலில் நடித்த நடிகை ஹேமமாலினி மாற்றப்பட்டு அதில் ஜெயலலிதா நடித்ததையும், 'கண்ணன் என்னும் மன்னன் பேரை' பாடல் இரண்டு முறை ஜெ.வுக்கு இருவேறு உடைகளில் படமாக்கப்பட்டதையும் புடவையில் நடித்ததே படத்தில் இடம் பெற்றதையும் சுவைபடக்கூறினார்.
-----------------------------------------------------
'அவள்' படத்தைப்பற்றி மறக்காமல் குறிப்பிட்ட அவர், அதிலிருந்து தொடர்ந்து அதே மாதிரி ரோல்களைத்தந்து தனக்கு 'கற்பழிப்புத் திலகம்' என்று பட்டம் சூட்டியதை சிரித்துக்கொண்டே சொன்னவர், அந்நேரங்களில் படப்பிடிப்புக்குப்போனால் 'ஏம்ப்பா, இன்னைக்கு நான் யார் ஜாக்கெட்டைக் கிழிக்கணும்?' என்று கேட்பது வழக்கம் என்றும் சிரித்துக்கொண்டே சொன்னார்.
-----------------------------------------------------
நடிகர்களைப்போல மிமிக்ரி செய்பவர்களைப்பற்றி கடுமையாக சாடினார். நடிகர்திலகம், எம்.ஜி.ஆர்., நம்பியார் போன்ற சகாப்த நடிகர்களைப்போல மிமிக்ரி செய்வது அவர்களைக்கேலி செய்வது போலாகும் என்றவர், ஒவ்வொரு நடிகருக்கும் ஒரு மேனரிஸம் இருக்கும். அதைக் கிண்டலடித்து காசு சம்பாதிப்பது மிகவும் மோசமான செயல் என்று வருத்தம் அடைந்தார்.
-------------------------------------------------------
இந்நிகழ்ச்சியின் முடிவில் பெரும்பாலும் எல்லோரும் தன்னுடைய குடும்ப உறுப்பினர்களை அறிமுகப்படுத்துவது வழக்கம். ஆனால் எபிசோட் முடியும் நேரமாகிவிட்டதால், நேரமின்மை காரணமாக, 'என்னுடைய திரும்பிப்பார்க்கிறேன் நிகழ்ச்சியை இத்துடன் முடித்துக்கொள்கிறேன். மீண்டும் சந்திப்போம்’ என்று எதிர்பார்க்கிறேன்' என்று சொல்லி விடை பெற்றுக்கொண்டார்.
சந்திக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.... (குறிப்பாக நான் எதிர்பார்க்கிறேன்).
Bookmarks