-
28th March 2009, 11:14 PM
#1
Senior Member
Senior Hubber
KaruvaNdu
"தேன் வேட்டைக்கு படைகள் தயாரா?" ஸ்பஷ்டமாக என் காதுபடும்படியாகவே தளபதியை கேட்டாள் அரசிளங்குமாரி . கேள்வியோடு என் திசையில் ஒரு நமட்டுச் சிரிப்பு. அந்தச் சிரிப்பு என்னையே பின் தொடர்வது போல் ஒரு பிரமை. பிரமை என்று எனக்கே உறுதியோடு கூறுவது தான் எனது சமத்தை நான் காப்பாற்ற ஆட்கொண்ட யுக்தி. படைத்தலைவன் என் சலனத்தை உணர்ந்திருக்க வேண்டும். "நேரே பற, மலரைத் திற, தேனைப் பெற!" கூட்டுக் கோஷத்தை எழுப்பினான். வேட்டைப் படை உடனே பின் தொடர்ந்தது, "நேரே பற, மலரைத் திற....
'அம்சிரைத் தும்பி பேரன்' என்ற பட்டப் பெயருடன் தான் நான் கூட்டுப் பள்ளியில் நுழைந்தேன். ஒரு பெருமையின் கூறாக இருந்த சொற்கிரீடத்தில் விரைவில் இளக்காரக் கறை படியத் துவங்கியது, பள்ளியின் முதல் நாளிலே. என் பாட்டனாரிடம் சிவபெருமான் 'பெண்கள் கூந்தல் மணம்' குறித்து சந்தேகம் தீர்த்ததாக ஒரு கதை பரவலாகப் பேசப்பட்டது. பாட்டனுக்கு தெய்வக்குரல் கேட்டதோ இல்லையோ எனக்கு வயிற்றுக்கும் சிறகுக்கும் சம்பந்தமே இல்லாத ஒரு உருளைத் தலை வந்து வாய்த்திருந்தது. பள்ளியில் தயங்கித் தயங்கிச் சேர்க்கப்படும் வரையில் நான் பொத்தி தான் வளர்க்கப் பட்டேன். பொத்தி வளர்த்தது பெருமைக்காக அல்ல பாதுகாப்பிற்காக என்று உடன் படிப்பவர்கள் உணர்ந்தவுடன் புறம்பேசும் குரல்களில் பொறாமை மறைந்து ஏளனம் அதிகரித்தது. எனக்கும் அந்த ஏளனம் அடிப்படையற்றது என்று தோன்றவே இல்லை. அந்த இராட்சசத் தலை காரணமாக எனது சக வயது வண்டுகளில் சிறகுகளை சரியாக பயன்படுத்த கற்றுக் கொண்டவர்களில் கடை மாணவன் நான். கொடுக்கை சரிவர உபயோகிக்கவும் மற்றவர்களைக் காட்டிலும் வெகுவாக முயற்சிக்க வேண்டி இருந்தது. மீதமிருந்த குலப் பெருமையில் மட்டுமே என்னை தேன் வேட்டைக் குழுவில் சேர்த்திருக்க வேண்டும்.
தேர்ச்சி பெற்ற எந்த வண்டும் தேன் வேட்டைக்குச் செல்லாமல் இருப்பது கடினம். பெரும்பாலும் தேன் கிண்ணத்தையோ, சிறகையோ இழந்த வண்டுகள் மட்டுமே விதிவிலக்குகள். அதிலும் சிறகிழந்த மற்றும் அனைத்து கால்களையும் இழந்த வண்டுகள் மற்ற எந்த பணிக்கும் சேர்க்கப் பட முடியாது. மொத்த கூடும் ஒரு பாரமாகவே அவர்களைக் கருதியது. இதனாலே தேன் வேட்டைப் பயிற்சியின் முக்கிய பாகம் மனிதர்களை எவ்வாறு சமாளிப்பது என்பது தான். முதல் அறிவுரை தான் மிகவும் முக்கியம் - 'விலகியிருப்பதே வெற்றி'. இது தான் அந்த சுற்றுப்புற சூழல் அறியாத தாந்தோநிகளை கையாள கற்றுக் கொடுக்கப் படும் முக்கிய வழி. உயிர் பிரிவது சந்தேகமற்ற நிலையில் மட்டுமே கொடுக்கை பயன் படுத்த வேண்டும், ஏனென்றால் பயன் படுத்தியவுடன் உயிர் பிரிவது நிச்சயம். கடை நிலை தேன் கூட்டாளியாக தேர்ச்சி பெற நான் பட்ட பாடு எனக்கும் எனது இப்போதைய படைத் தலைவருக்கும் தான் தெரியும். "பாட்டன் பெயரை காப்பற்ற வேண்டும்" என்று மந்திரம் ஓதி மந்திரம் ஓதியே சொல்லிக் கொடுப்பார். எனக்கோ பாட்டன் மீதிருந்த வெறுப்பு படைத் தலைவர் மீதிருந்த மரியாதையை விட குறைந்தது. அந்த மரியாதையின் பொருட்டே பயிற்சி செய்தேன் - ஏதோ மாய தந்திரத்தால் அரசிளங்குமாரியின் தளபதியாரின் முன் சாகசம் செய்து தேர்ச்சியும் பெற்றேன். படைத் தலைவர் சந்தோஷப்பட்டார். தளபதியாரின் தேர்ச்சிப் பரிந்துரைக்குப் பின் அவரது சிறகு எவ்வளவு இருந்தது என்று எனக்குத் தெரியவில்லை.
முதல் தேன் வேட்டைக்குச் செல்ல மனம் இடம் கொடுக்கவே இல்லை. நீ சிபாரிசில் தேர்ச்சிப் பெற்றவன் தானே என்று சகப் படையாளிகளின் குமுறல்கள் கேட்பது போல் பிரம்மை. ஆனால் போகாமலும் இருக்க முடியாது. காரணம் தேடும் வேளையில் தான் படைத் தலைவர் தனிமையில் ஒரு கருத்து சொன்னார். "நீ முதல் முறையாக கூடு விட்டு வெளியேறுகிறாய். உன் பாட்டனார் பெருமையை விட கூட்டிற்கு தேன் சேர்ப்பதே பெருமை. உன் பெயரும் புகழும் அதனின்றே பிறக்கட்டும்" என்று வாழ்த்தினார். நேற்று இரவு மனம் அவர் சொன்னதையே அசை போட்டது. ஒரு வேளை என் பாட்டனின் குரல் கேட்கும் சொத்து எனக்கிருந்தால்? நான் தேன் சேர்த்து பெருமை பெறுவது இந்தப் பிறப்பில் நடைபெறாது. அப்பொழுதுதான் தீர்மானித்தேன், பயிற்சி அனைவற்றையும் நிராகரிக்க.
...தேனைப் பெற!" நானும் கோஷத்தை முடித்துக் கொண்டே படையுடன் கூட்டினின்று வெளியேறினேன். ஒளி, மனம் அனைத்தும் பிரவாகமாகப் பெருக , படை தோட்டம் ஒன்றை நெருங்கியது. நான் மெல்ல படை அமைப்பிநின்று என்னை அப்புறப் படுத்திக் கொண்டேன். பல நேரம் பறந்தேன், தலைகனம் தாக்கத் துவங்கியது. சோர்வடையும் நேரத்திலே தோட்டத் தின் நடுவே மரமொன்று தென்பட்டது. மரத்தடியில் இரு மனிதர்கள் - ஒரு வாலிபன், ஒரு வயோதிகன். என்னை பாதை இறுதி கண்ட பயணாளியின் புதுத் தெம்பு தாக்கியது. வயோதிகன் வாலிபனின் மடியில் தலை சாய்த்து நித்திரையில் இருந்தது போல் அசையாமல் படுத்திருக்க, வாலிபன் அமர்ந்தபடியே கண் மூடியிருந்தான். நான் அருகே சென்றேன். ஒன்றும் கேட்கவில்லை. ஒரு வேளை முகமருகே சென்றால் தான் குரல் கேட்குமோ என்று காதருகே பறந்தேன். ஒன்றும் கேட்கவில்லை. வாயருகே பறந்தேன். ஒன்றும் கேட்கவில்லை. அந்த வாலிபன் நகருவது போலவும் இல்லை. பாட்டன் தற்புகழ்ச்சிக்கு சொன்ன பொய்யை எண்ணி கோபம் வந்தது. சிவபெருமான் மனித உருவில் பேசினாராம். அவர் பதில் கூறினாராம்! பொங்கிய ஆத்திரத்தில் கொடுக்கு வெளியேறியதும் வாலிபனைக் கொத்தியதும் எனையறியாமலே நடந்தன. உயிர் மெல்ல மெல்லக் கரைந்து கொண்டிருந்தது. எங்கேயோ தூரத்து இடி முழக்கம் போல் ஒரு குரல் "இராதேயா நீ க்ஷத்ரியன் தானே?....
"Fiction is not the enemy of reality. On the contrary fiction reaches another level of the same reality" - Jean Claude Carriere.
Music
-
28th March 2009 11:14 PM
# ADS
Circuit advertisement
-
29th March 2009, 12:55 AM
#2
Moderator
Platinum Hubber
As I said.. one of the better stories I have read in a while. Very well written. Comments to follow.
மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே
-
29th March 2009, 01:01 AM
#3
Senior Member
Veteran Hubber
இப்போ புரிஞ்சிடுச்சி!
(ஆனா பர... பர-ன்னு எழுதியிருக்கீங்களே அண்ணாத்தே, அது பற இல்லயோ?)சரி, சரி.
-
29th March 2009, 08:21 AM
#4
Senior Member
Senior Hubber
PR - Thanks again. And do put forth the suggestions.
Venki - The 'ர' - 'ற' issue is the bane of my writing existence. I'll make the changes.
"Fiction is not the enemy of reality. On the contrary fiction reaches another level of the same reality" - Jean Claude Carriere.
Music
-
29th March 2009, 08:37 AM
#5
Senior Member
Platinum Hubber
புராணம் கொஞ்சம், விஞ்ஞானம் கொஞ்சம், நடை அழகு கொஞ்சம்,கற்பனை வளம் எக்கசக்கம் கலந்து ஒரு தேனான விருந்து! அருமை!
Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.
-
29th March 2009, 08:41 AM
#6
Senior Member
Senior Hubber
"Fiction is not the enemy of reality. On the contrary fiction reaches another level of the same reality" - Jean Claude Carriere.
Music
-
30th March 2009, 02:29 PM
#7
Moderator
Platinum Hubber
உலகில் தாய்தந்தையரில்லாமல் பிறந்தவன் தான் சுதந்திர மனிதனாக இருக்க முடியும். பெற்றோர் மூலம் பிறந்து அவர்களை இழந்துவிட்டவனை சொல்லவில்லை. வெளியிலிருந்து உலகத்துக்குள் தனியனாக துப்பப்பட்டவனைச் சொல்கிறேன். அவன் இருத்தலுக்கு நன்றிக்குறியவர்கள் என்று யாரும் இல்லாததால் – மிலன் குந்தெரா , ‘வாழ்க்கை வேறெங்கோ உள்ளது’ (Life is Elsewhere)
வாழ்க்கை நிரூபணங்களின் தொகுப்பு. இயல்புகள், சிந்தனைகள், தன்மைகள் போன்ற அரூபங்களில் முழுமை இல்லை என்று வாழ்க்கை மறுக்கிறது. செயல்கள் அதற்கு தேவை. ‘அதற்கு’ என்றால் பிறரின் எதிர்பார்ப்பு மட்டும் அல்ல. நாமும் தான். சுய மதிப்பீடு செயல்களற்ற உலகத்தில் நெடுநாள் இருப்பதில்லை. நம் நினைவுகள் யாவும் நடந்தவைகள் பற்றியே. செயல்கள் மட்டுமே வாழ்வில் எச்சங்களை விட்டுச் செல்கின்றன. நடந்திருக்கக் கூடிய ஆனால் நடக்காமல் போன சாத்தியங்கள் பற்றிய நினைவுகள் நாளடைவில் துல்லியம் தேய்பவை. முன்கால மனநிலைகளும், ஒரு காலத்தில் ப்ரக்ஞையை முழுவதுமாக அக்கிரமித்த மனவோட்டங்களும், அழுத்தங்களும் சுவடில்லாமல் மறைகின்றன.
செயல்களின் தொகுப்பு எங்கிருந்து துவங்குகிறது. நமது செயல்களிலிருந்தா? நாம் நினைவுகொள்ளும் செயல்களிலிருந்தா ? நாம் நினைவுகொள்ளும் செயல்களில் நம் இருத்தலுக்கு முன்பே நடந்தவையும் உண்டு. ஏன், ஒரு வகையில் அவை தான் இன்னும் முக்கியம். ஒரு மனிதனின் இருத்தலின் துவக்கவமே இருவரின் செயல்தான் என்கிற போது – அவன் ஒரு தொடர்ச்சங்கிலியின் ஒரு இணைப்புத்துண்டாகத் தான் காண முடியும். இது தான் விரும்பத்தக்கது என்று மனத்தை இணங்கச் செய்வதும் ஒரு ‘சமநிலையை எய்தும் யுக்தி’ தான். சமநிலையிலிருந்து சற்று பிறழ்வது கூட பயம்தரும் ஒரு இருத்தலை சுதந்திரம் என்று சொல்வதும் வேடிக்கை தானே.
இடைச்செருகலாக இருக்கும் இருத்தலில் கோபம் வருவது இயற்கை. நாளை இன்னும் நிகழவில்லை என்பதால் அதனை தனது தேர்வுகள் ஓரளவுக்கு வடிக்கின்றன என்று அவன் சற்று தணியலாம். அதனால் மொத்த கோபமும் தனது தேர்வுகளுக்கு முற்றிலும் அப்பார்பட்ட நேற்றைப் பற்றியே. கடந்தது பொய்யாக இருக்கலாம். இறையனார் அம்சிறைத்தும்பியிடம் பாடியது போல அவை நம்புதற்கரிய செவிவழிச் செய்திகளே. அது கொடுமையே. அதனினும் கொடுமை அவை உண்மையாக இருப்பது தான். அந்த உயரத்தை எட்ட தன் முயற்சிகள் போதாது என்ற தெளிவு இருக்கும்போது பாரம்பரியம் தரும் அழுத்தம் வேதனை ஆகிறது.
தேன் வேட்டையில் ஆர்வம் இல்லை என்று சொல்ல முடியுமா. சிபாரிசுகளும், முயற்சிகளும் சேர்ந்த பயணத்தில் கடைசி நிலையன்றோ தேன் வேட்டை. அதனின்று விலகுவதற்கு உலகத்துக்கு காரணங்கள் சொல்ல வேண்டுமே. சொல்லக்கூட வேண்டாம், “ தகுந்த காரணங்கள் இருக்கவேண்டும்” என்ற சட்டகமே அழுத்தம் தானே. அல்லது “வேறு எதில் ஆர்வம்” என்றாவது சொல்ல வேண்டும். இதற்கு பேசாமல் “தேனைப் பெற” என்று பாடி முடிக்கலாம்.
க்ஷத்திரயன் அல்லன் என்றாலும் இழிவு. ஆனால் க்ஷத்திரிய நிலை எய்துவதும் உன்னதமானதோ இல்லை அதுவும் சாபக்கேடு தான். பிறப்புக்கும் குணாதிசயங்களுக்கும் ஒரு நிச்சயமான உறவு இருப்பதாக உலகம் கொள்வது மனிதனது சாத்தியங்களை ஒடுக்கமாக வரையறுக்கிறது. தன் பிறப்பை மீறிய சாத்தியங்களை கர்ணன் அன்று நிகழ்த்தினானா. அல்லது அவன் பிறப்பைப் பற்றிய நிரூபணமாகவே (அவன் குரு சொன்னது போல) அந்த நிகழ்வை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டுமா. முதலாவது அவனுக்கு அவனுக்குத் தனது திறம் சார்ந்த உவகையை அளிக்கவேண்டும் என்றால் இரண்டாவதும் அவனை சந்தோஷத்தில் ஆழ்த்த வேண்டும் - அவன் வாழ்வில் கண்ட அவமானங்களிலிருந்து விடுதலை அளிக்கும் உண்மை அல்லவா அது. ஆனால், நாம் மதிப்பவரின் மோசமான அபிப்ராயத்தை சம்பாதித்துவிட்ட துயரம் தான் அவனுக்கு மிஞ்சுகிறது.
“விலகிச்சென்றால் வெற்றி” என்ற ‘புத்திசாலித்தனத்தை’ ஒடுக்குமுறையாக உணரும் கருவண்டின் மீறல் இன்னொரு மீறலை தடுக்கிறது. இறையனார் அல்லாதவர்கள் அழிவில் மட்டுமே திறம் வளர்க்க முடியும் போலும்.
மிக சிறப்பான எழுத்து.
மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே
-
30th March 2009, 02:50 PM
#8
Senior Member
Platinum Hubber
இலக்கியத் தரம் வாய்ந்த எழுத்துக்கள். Somehow it reminded me of pr's senthil's story. (may be the style?) Slapping climax always creams the story. வேற என்ன சொல்ல. உங்கள் எழுத்தை எல்லாம் படித்த பிறகு, என்னைப் போன்றவர்கள் எழுதுவதை விட்டுவிடுவது சிறந்தது.
-
30th March 2009, 03:06 PM
#9
Senior Member
Platinum Hubber
SP-யின் முடிவு வேடிக்கையாக இருக்கிறது! மல்லிகையின் மணம் போல் முல்லையின் மணம் இருக்குமா, தாமரையின் வண்ணம் போல் செம்பருத்தியின் நிறம் இருக்குமா? ஒவ்வொன்றுக்கும் ஒரு தனித்தன்மை, அடையாளம் இருப்பது தவறில்லையே? கல்கியின் நடை வேறு, சுஜாதாவின் நடை வேறு; தெளிந்த நீரோடையாய் சிலர், கரையுடைக்கும் காட்டாறாய் சிலர்- ஒவ்வொருவருக்கும் ஒரு பாணி;கதம்பமான இலக்கியம் நமது சொத்து, போற்றுவோம், பாதுகாப்போம், ஆதரிப்போம்!
Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.
-
30th March 2009, 03:10 PM
#10
Bookmarks