விஜய் டிவியில் திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும் புதிய தொடர் `ரோஜாக்கூட்டம்'
ஐந்து பெண்கள். அவர்களுக்கென்று தனித்தனி வாழ்க்கை. ஒவ்வொரு பெண்ணின் வாழ்வுக்குள்ளும் ஏதேனுமொரு ரகசியம். ஒரேயடியாய் அதை கொன்றுவிட முடியாமலும் அதன் ஆதிக்கத்திலிருந்து விடுபட முடியாமலும் திணறும் இந்தப் பெண்களின் போராட்டத்தை சொல்லிச் செல்கிறது ரோஜாக்கூட்டம்.
திருமணமானவர்கள், குழந்தைகள், கணவன், மாமனார், மைத்துனர் என்று ஒவ்வொருவருக்கும் ஒரு வாழ்க்கை வட்டம் உள்ளது போல், இந்த ஐந்து பெண்களுக்கும் இருக்கிறது. திருமணம் ஆகிவிட்டதாலேயே அவர்களுக்கு பிரச்சினை இருக்கிறது என்றோ, இல்லை என்றோ சொல்ல முடியாது ஆனால் இந்த பெண்கள் தங்கள் வாழ்க்கையையும், பிரச்சினைகளையும் கையாளும் முறையே ரோஜாக்கூட்டம்.
ஜனனி, ராதிகா, மானஸா, சாருலதா, லீனா ஐவரும் படித்த, புத்திசாலியான பெண்கள்.
கணவனை விட்டு பிரிந்து வாழும், தன்னம்பிக்கையுடைய பெண் சாருலதா, கொடுமைக்கார கணவனிடமிருந்து விவாகரத்து வாங்கி, தன் மகன் நரேஷுடன் தனியாய் வாழ்பவள். ஆண்களையே வெறுக்கும் அவளது வாழ்வில் என்ன போராட்டம் என்பது விரைவில் தெரிய வரும்.
ஒரு பெரிய நிறுவனத்தில் பெரும் பொறுப்பில் இருப்பவள் ராதிகா. கணவன் கார்த்திக் ஒரு சாதாரணமான அரசு அலுவலக ஊழியன். இரண்டு பெண் குழந்தைகள். வருமான வித்தியாசம் தங்கள் உறவை பாதிக்கவே இல்லை என்றே அவர்கள் நினைத்துக் கொண்டு இருந்தார்கள். ஆனால், ராதிகாவின் வேலைப் பளு கூடக் கூட, அவள் தன்னிடமிருந்து விலகிச் செல்வதாக உணரத் தொடங்குகிறான் கார்த்திக். வேலையா, குடும்பமா எனும் பெரும் கேள்வியோடு ஒரு பெரிய இடைவெளி அவர்களுக்குள் ஏற்படுகிறது.
மானசா எதற்கும் அஞ்சாதவள். தமிழகத்தின் முன்னணி மாடல்களில் ஒருத்தி! அபார்ட்மெண்டில் தனியாக வசிப்பவள். தைரியசாலி! எந்நிலையிலும் தனது சுதந்திரத்தையும், சுயமரியாதையையும் விட்டுத் தராதவள்! ஒற்றையாய் வாழும் பெண்கள் இச்சமூகத்தில் சந்திக்கும் பிரச்சினைகள் இவளுக்கும் உண்டு. அனைத்தையும் லாவகமாய் கையாளும் திறமையும் இவளிடம் உண்டு.
ஜனனிக்கு உலகமே வீடுதான். படிக்கும் காலத்தில் சுதந்திரப் பறவையாய் சுற்றித்திரிந்தவளுக்கு, திருமண வடிவில் தடை வருகிறது. குடும்பத் தலைவியாக வீட்டோடு மட்டும் இரு என்கிறார்கள்.
சஞ்சய்-லீனா தம்பதிகளின் அன்னியோன்யத்தை பார்த்து வியக்காத, பொறாமைப்படாத ஆட்களில்லை! இந்த தம்பதியின் வாழ்வில் மறைந்திருக்கும் ஒரு பூகம்ப ரகசியம் லீனாவின் கடந்த காலம் பற்றியது.
இந்த ஐந்து கதாநாயகிகளும் ஒரு அபார்ட்மெண்டில் வாழ்கிறார்கள். ஒருவருக்கொருவர் ஆதரவாகவும், பிரச்சினைகளுக்கு தோள் கொடுப்பவர்களாகவும் இருக்கும் இந்த ஐந்து பெண்களும் தங்கள் வாழ்க்கையில் சுற்றிச்சுழலும் பிரச்சினைகளை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பது கதை.
Bookmarks