மேலாளருடன் நடந்தது என்ன? சபீதா ராய் விளக்கம்


பிரபல சின்னத்திரை நடிகை சபீதா ராய். பல ஆண்டுகளாக டி.வி.சீரியல்களில் நடித்து வருகிறார். தற்போது தாமரை, இளவரசி, வாணி ராணி தொடர்களில் நடித்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு சபீதாராயும், ஒரு தனியார் தொலைக்காட்சி தயாரிப்பு நிறுவன மேலாளரும் ஒரு அப்பார்ட்மெண்டின் கார்பார்க்கிங்கில் வைத்து ஒருவர் மீது ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டார்கள். இந்த காட்சியும், இருவருக்கும் தவறான உறவு இருப்பது போன்றும் செய்தி ஒளிபரப்பானது. இது சின்னத்திரை உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் அன்று நடந்தது என்ன? என்பது குறித்து சபீதா ராய் விளக்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:


வாணி ராணி நாடகத்தில் எனது அப்பா ஸ்தானத்தில் நிர்வாக தயாரிப்பாளர் சுகுமார் என்பவர் இருந்தார். அவருக்கு விபத்தில் காலில் அடிப்பட்டிருந்தது. அப்போது 20 ஆயிரம் ரூபாய் கொடுத்து உதவினேன். மனிதாபமான அடிப்படையில் அவரும் எனக்கு உதவியுள்ளார். ஆகையால் நானும் அவருக்கு உதவினேன். 2 மாதங்களாக சுகுமார் சாரும் எனக்கு பணம் தரவில்லை. இப்போது தருகிறேன், பிறகு தருகிறேன் என்று இழுத்தடித்துக் கொண்டே சென்றார்.


சம்பவத்தன்று "மனைவி ஊரிலில்லை. ஆகையால் மகன்கள் மட்டும் தான் வீட்டில் உள்ளார்கள். நாங்களும் இரவு ஊருக்குச் செல்கிறோம். ஆகையால் என்னால் வந்து தர இயலாது. நீங்கள் வந்து வீட்டுக்கு வந்து வாங்கிக் கொள்ளுங்கள்" என்றார். எனக்கு சுகுமாருடைய வீடு அவ்வளவாக தெரியாது. அதனால் நண்பர்களுடன் சென்று, வீட்டிற்கு கீழேயே உட்கார்ந்துவிட்டேன். மேலே கூட நான் செல்லவில்லை. அப்போது சுகுமாரும், அவருடைய நண்பரும் வண்டியில் வந்து இறங்கினார்கள். ஏன் இங்கு வந்தாய் என்று கோபத்துடன் கேட்க, நானும் "நீங்களே தானே வரச் சொன்னீர்கள்" என்று கோபத்துடன் பதிலளித்தேன். வீட்டில் மனைவி இல்லை என்பதால் வீட்டுக்கு வந்து வாங்கி செல்லும்படி நீங்கள் தானே சொன்னீர்கள் என்று நான் பேச, எங்களுக்குள் வாக்குவாதம் முற்றியது.


நான் அப்படிச் சொல்லவே இல்லை என்ற போது, அவருடன் வந்திருந்தவரிடம் எனது தொலைபேசியைக் காட்டி அவர் தான் வரச் சொன்னார் என்று கூறி ஆதாரத்தைக் காட்டினேன். கோபம் தாங்க முடியாமல், சத்தமாக பேசிய உடனே சுகுமார் என்னை அடித்து போனை பிடிங்கினார். நானும் அவரை அடித்துவிட்டேன்.


இதற்கிடையே எங்களுக்கு இடையே நடந்த சண்டையை, அந்த அப்பார்ட்மெண்டில் குடியிருக்கும் ஒரு தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் படம்பிடித்துள்ளார். அவருக்கும் சுகுமாருக்கு ஏற்கனவே பகை இருந்துள்ளது. அவர் தான் காவல்துறைக்கும் தகவல் தெரிவித்துள்ளார். காவல்துறை வந்து எங்கள் இருவருக்கும் சமரசம் செய்து வைத்தார்கள். நான் செய்தது தவறு தான், 2 நாட்களில் பணம் கொடுத்துவிடுகிறேன். ஏமாற்றியது தவறு தான். நீ எனது மகள் ஸ்தானத்தில் இருக்கிறாய் என்று சுகுமாரும் மன்னிப்புக் கேட்டார்.


அப்போது ஒரு காவல்துறை அதிகாரி என்னிடம் "கீழ் வீட்டில் உள்ளவர், வீடியோவாக உங்களுடைய சண்டையை எடுத்துள்ளார். நீங்க சம்பந்தப்பட்டு இருப்பதால் போய் பேசிவிடுங்கள்" என்றார். நான் உடனே அவருடைய வீட்டுக்குச் என்று காலில் விழுந்து "அண்ணா.. அவர் பணம் தர வேண்டும் என்பதால்தான் வந்தேன். அது கைகலப்பாகி விட்டது. எனக்கு இன்னும் திருமணமாக வில்லை. வீடியோ வெளியே வந்தால் பிரச்சினையாகி விடும். தயவு செய்து அழித்துவிடுங்கள் " என்று கெஞ்சினேன். அதற்கு "எனக்கு அவன் மீது தான் ஆத்திரம். உங்கள் மீது எதுவுமில்லை தங்கச்சி" என்றார். "அண்ணா.. நான் சம்பந்தப்பட்ட விவகாரம் ப்ளீஸ்" என்று கேட்டேன். சரி நான் பார்த்துக் கொள்கிறேன் என்று அனுப்பிவிட்டார்.


நானும் வீட்டுக்கு வருவதற்குள் எங்கள் இருவரையும் தவறாக சித்தரித்து தொலைகாட்சியில் செய்தியை வெளியிட்டுவிட்டார்கள். எனக்கு பேரதிர்ச்சியாகி விட்டது. எனக்கு அம்மா மட்டும் தான். உடன்பிறந்தவர்கள் யாருமே கிடையாது. காவல்துறையில் எந்தவொரு புகாருமே பதிவாகவில்லை. டி.ஆர்.பிக்காக அப்படியொரு செய்தியை வெளியிட்டு எனது திரையுலக வாழ்வையே சிதைத்துவிட்டார்கள். அந்த தொலைக்காட்சிக்கு தொலைபேசியில் "நான் தற்கொலை செய்து கொள்வேன்" என்று பேசியதற்கு "இனிமேல் போடவில்லை. நீங்கள் ஒரு பேட்டி கொடுங்கள் வெளியிடுகிறோம்" என்று சொல்கிறார்கள். அந்த வீடியோ பதிவில், முன்னால் - பின்னால் பேசியது எதையுமே வெளியிடாமல் "மனைவி இல்லை. வீட்டுக்கு வரச்சொல்லி காசு வாங்கிச் செல்ல சொன்னீர்களே" என்று பேசியதை மட்டும் வெளியிட்டுள்ளார்கள்.


யாரோ ஒருவர் செய்தியை எடுத்து கொடுத்ததற்கு என்னுடைய வாழ்க்கையை வீணாக்கிவிட்டார்கள். எனது அப்பா வயது இருப்பவரோடு, கள்ளக்காதல் என செய்தி வெளியிட்டுவிட்டு இப்படி சொல்வதற்கு எப்படி தான் மனது வருகிறது என தெரியவில்லை. மேலும், தொலைக்காட்சியில் நிறுத்துகிறோம் என்று சொல்லிவிட்டு சமூகவலைத்தளத்தில் பரப்பிவிட்டார்கள். இதனால் நான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளேன். இதே மாதிரி வேறு எந்தவொரு பெண்ணுக்கும் நடைபெறக்கூடாது. இந்த செய்தியின் மூலமாக 2 குடும்பத்தின் வாழ்க்கையை சிதறடித்துவிட்டார்கள். 2 குடும்பத்தை சிதைத்து அப்படி என்ன டி.ஆர்.பி போட்டி என தெரியவில்லை. இப்பிரச்சினையால் என்னை சீரியலிலிருந்து நீக்கி விட்டார்கள்.


இதனை நான் நடிகர் சங்கத்தில் விஷால் மற்றும் கார்த்தியிடம் கொண்டு சென்றேன். தற்போது அவர்கள் தான் எனக்கு துணை நிற்கிறார்கள். நான் தவறு செய்திருந்தால் கூனிகுறுகி நிற்பேன். என் மீது எந்தவொரு தவறுமே இல்லை. ஒரு நாள் டி.ஆர்.பிக்காக எனது மொத்த வாழ்க்கையின் மீது கருப்பு புள்ளி வைத்துவிட்டார்கள். ஆனால், இதனை தைரியமாக எதிர்கொள்வேன். இவ்வாறு அந்த அறிக்கையில் சபீதா தெரிவித்துள்ளார்.




நன்றி: தினதந்தி