சன் டி.வி.யில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 11.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ``பந்தம்'' தொடர் 200-வது எபிசோடை தொட்டிருக்கிறது.
``கதையில் இப்போது புதிதாய் வந்திருக்கிற ஜீவா கதாபாத்திரம் பரபரப்பாக பேசப்படுகிறது. அந்த கதாபாத்திரம்தான் கதையை இப்போது சுவாரஸ்யமாய் நகர்த்திக் கொண்டிருக்கிறது. அதோடு இதுவரைக்கும் யாராலும் தோற்கடிக்க முடியாத ஆதிலட்சுமியை இந்த ஜீவா வந்துதான் தோற்கடித்திருக்கிறாள். இதுவரைக்கும் தோல்வியையே பார்க்காத ஆதிலட்சுமி இப்போது வரிசையாய் தோற்கத் தோற்க, அவளது ஆத்திரம் அதிகமாகிறது. ஜீவாவை ஏதாவது பண்ண துடித்துக் கொண்டிருக்கும் அவள் கண்ணில் பொட்டு, பூச்சி என இரண்டு பேர் பட, காசுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யும் அவர்களில் `பொட்டு' அவளது கவனிப்புக்கு ஆளாகிறான். அவனை மார்டனாக மாற்றி `ஜீவாவை காதலித்து ஏமாற்றி விடு. உனக்கு 5 லட்சம் தருகிறேன்' என்கிறாள்.
பொட்டு இப்போது சூர்யா என பெயரை மாற்றி ஜீவாவின் மனதில் இடம் பிடிக்கிறான். அதே சமயம் ஜீவா தனது தாயார் தாமிரபரணியை எப்படியாவது வெளியில் கொண்டு வர பிரபாகருடன் சேர்ந்து முயற்சி எடுக்கிறாள்.
ஆதியின் இளைய மகன் செல்வாவை கல்யாணம் பண்ணியிருக்கும் நித்திலா, செல்வாவை இதுவரையில் கணவனாக ஏற்றுக்கொள்ளவில்லை. இருந்தாலும் செல்வா நித்திலாவின் மேல் காதலோடு இருக்கிறான். அவனின் காதலை முதலில் புரிந்து கொள்ள மறுக்கும் நித்திலா, கொஞ்சம் கொஞ்சமாய் செல்வாவை புரிந்து கொள்ள ஆரம்பிக்கும் போது.. செல்வா நித்திலாவின் வாழ்க்கையில் புயலென நுழைகிறாள் மகிளா...!
மகிளா செல்வாவின் முன்னாள் காதலி... செல்வா இப்பொழுது யாரை ஏற்றுக் கொள்ளப் போகிறான் என்பது ஒரு சுவராஸ்யமான திருப்பம்.
அதே நேரம் ஜீவாவின் ஆபீசில் வேலை பார்க்கும் சூர்யா, ஆதியின் திட்டப்படி ஜீவாவின் மனதில் இடம் பிடித்து விடுகிறான். இதனால், சந்தோஷமான ஆதி, ஜீவாவை `ஏமாற்றி விடு' என்று தனது அடுத்த திட்டத்தை முன் வைக்க.. சூர்யாவும் சரி என்கிறான். அடுத்து என்னாகிறது என்பது எதிர்பாராத திருப்பமாக இருக்கும்'' என்றார் தொடரின் கதாசிரியர் குமரேசன்.
இந்த தொடரில் ஜீவா, நித்திலா, என இரட்டை வேடத்தில் ப்ரீத்தி சீனிவாசன் நடிக்கிறார். நளினி, கன்யா, ராஜசேகர், தீபக், மனோகர், வெங்கட், ஷில்பா, சுக்ரன், ஐஸ்வர்யா, ஸ்ரீபா, பாம்பே கண்ணன், வத்சலாபாட்டி, ஏ.சி. முரளி, ஸ்ரீலதா, வாசுவிக்ரம், தேவ் ஆனந்த், சுருளிமனோகர், சவால்ராம் ஆகியோரும் உண்டு.
வசனம் வே.கி.அமிர்தராஜ், ஒளிப்பதிவு பழனி, பாடல்: வைரமுத்து, கதை:ரமணிசந்திரன், முகப்பு இசை: இமான்.
Bookmarks