-
10th July 2011, 09:59 AM
#501
திருக்குறளில் வள்ளுவர் கூறுவதை திரிக்க தமிழர் மரபிற்கு விரோதிகள் பலர் தமிழின் பெயரால்.
இங்கே சில அழகான கட்டுரைகள்
மனுக்குறள்?-முனைவர் செ.ம. மாரிமுத்து
http://www.tamilpaper.net/?p=877
திருக்குறளை உலகப்பொதுமறை என்றும், தமிழர் அனைவருமே சமயச்சார்பின்றிப் பின்பற்றக்கூடிய ஒப்பற்ற அறநூல் என்றும் சொல்கிறோம். நுணுகி ஆராய்ந்து பார்த்தால் , இக்கருத்து எவ்வளவு பெரிய மாயை என்பது விளங்கும். குறள் பக்தி கொண்ட யாரையும் புண்படுத்தும் நோக்கில் இதைச் சொல்லவில்லை. காரணம் இருக்கிறது.
அன்வர் செரிபு என்று எனக்கொரு நண்பர். என்போலவே மார்க்ஸீய சிந்தனையால் ஆட்கொள்ளப்பட்டு, மதம் என்னும் பேய் பிடிக்காத, மதம் கடந்து சிந்திக்கும் அகண்ட பார்வை கொண்டவர். தொழிற்சங்கத் தோழர். பல எதிர்ப்புகளை மீறித் தன் மகளுக்குக் கேரளப் புரட்சி வீராங்கனையான அஜிதாவின் பெயரை வைத்தவர். தமிழில் மிக நல்ல புலமை கொண்டவர். என் திருமண அழைப்பிதழில் திருக்குறளை அச்சிட்டிருப்பதைப் பார்த்து இவர் ஆச்சரியப்பட்டுவிட்டுச் சொன்னார்.
‘எதைப் படித்தாலும் முழுசாய்ப் படிக்க வேண்டும். ஆழ அகலப் படிக்க வேண்டும். இங்கே அங்கே ஒரு பாட்டை உருவிப் பார்த்தால் இப்படித்தான். திருக்குறள் இன்றைக்கு இந்துத்வாவாதிகள் பரப்பிவரும் பிற்போக்கு மனுவாதக் கருத்துகளுக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சூசகமாய் வித்திட்ட ஒரு நூல். எத்தனை பெரியார் வந்தாலும் மீட்கமுடியாத, தமிழர்களுடைய மூடநம்பிக்கைகளுக்கு ஆதாரமான நூல் இதுதான்’ என்றார்.
எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. ஆத்திரம் பொங்கிவர, ‘என்னப்பா இப்படிக் குண்டைத் தூக்கிப் போடுகிறாய்? பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று சமத்துவத்தைச் சொல்லும் திருக்குறள் எங்கே, பிறப்பால் பேதம் கற்பிக்கும் வர்ணாஸ்ரமத்தைத் தூக்கிப் படிக்கும் ஆரிய மனுவாத நூல்கள் எங்கே?’ என்றேன்.
‘முதல் அடியைச் சொல்லிவிட்டு அடுத்த அடியை விட்டுவிட்டால் எப்படி? சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையால் என்று தொழில்ரீதியாக மனிதர்களைப் பிரிப்பதே மனு தர்மம்தானே’ என்ற நண்பர், மேலும், ‘வள்ளுவர் பிறப்பிலேயே உயர்ந்த பிறப்பு, இழிபிறப்பு, (மேல்பிறந்தார், கீழ்ப்பிறந்தார்) பிறப்பொழுக்கம், குலவொழுக்கம் போன்ற ஆதாரமான வர்ணாஸ்ரம நம்பிக்கை கொண்டவர்தான்; ஒழுக்கம் உடைமை என்ற அதிகாரமே இதற்கு உதாரணம்; ஒழுக்கம் என்றால் நன்னடத்தை (டிஸிப்லின்) என்ற பொருளில் இங்கே சொல்லவில்லை, அவனவன் ‘குலதர்ம’ப்படி, சாதிவழக்கப்படி ஒழுகுவதையே இங்கே ஒழுக்கம் என்கிறார். ‘ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும்’ என்ற குறளுக்கு அடுத்து, பார்ப்பானின் பிறப்பொழுக்கம் குன்றக்கூடாது என்று அவர் சொல்வதிலிருந்து உயர்ந்த பிறப்பு, இழிந்த பிறப்பு என்ற கேடுகெட்ட நம்பிக்கையைத் தெரிந்து கொள்ளலாம்’ என்றார்.
’இப்படி ஆரிய வேதநூலுக்கு விளக்கம் சொல்லவந்த தமிழ்நூலே திருக்குறள்’ என்றும் சொன்னார். அவர் என்னை மேலும் ஆழ்ந்து படிக்கச்சொன்ன பரிமேலழகர், மணக்குடவர், காளிங்கர், பரிதியார் முதலிய பலர் எழுதிய உரைகளையும், தொடர்புடைய பல நூல்களையும் தேடிப் படித்தேன்.
படிக்கப்படிக்க எனக்கு ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது.
அந்தணர் (பிராமணர்), அரசர் (சத்திரியர்), வணிகர் (வைசியர்), வேளாளர் (சூத்திரர்) ஆகிய நான்கு வர்ணத்தார்க்கும் உரிய கடமைகளைப் புகழ்ந்துபாடி அவர்கள் அவற்றை விட்டுவிடாமல், தொடர்ந்து செய்வதுதான் உத்தமமான செயல் என்று தெள்ளத் தெளிவாய்ச் சொல்வதோடு, அவர்ணாக்கள் (குலமிலர், பஞ்சமர்) என்போரைக் ‘குடியிலார்’ என்றும், ‘கீழ்’ என்றும் சொல்லும் இந்த நூலா உலகப்பொதுமறை என்று இத்தனை காலம் சொல்லப்பட்டு வந்திருக்கிறது!
இதை ஓர் அபாண்டக் குற்றச்சாட்டாக பலர் நினைக்கலாம். ஆனால் ஆதாரங்கள் இருக்கிறதே.
மனுநூலின் தமிழ்வடிவே திருக்குறள்!
“எழுத்துமுதல இலக்கண வகையும்
வழுத்து வேதாகம வகையதன் பயனும்
தங்கிய குறட்பா தமிழ்மனுநூல்…”
(பெருந்தொகை – 1543 )
அறமாவது, மனு முதலிய நூல்களில் விதித்ததைச் செய்தலும் விலக்கியன ஒழிதலுமாம். அஃது ஒழுக்கம், வழக்கு, தண்டம் என மூவகைப்படும்.
அவற்றுள் ஒழுக்கமாவது அந்தணர் முதலிய வருணத்தார் தத்தமக்கு விதிக்கப்பட்ட பிரமசரியம் முதலிய நிலைகளில் நின்று அவ்வவற்றிற்கு ஓதிய அறங்களின் வழுவாது ஒழுகுதல்.
வழக்காவது ஒரு பொருளைத் தனித்தனியே எனது என்று இருப்பார் அது காரணமாகத் தம்முள் மாறுபட்டு அப்பொருள்மேற் செல்வது. அது கடன் கோடல் முதலிய பதினெட்டு பதத்ததாம்.
தண்டமாவது அவ்வொழுக்க நெறியினும், வழக்க நெறியினும் வழீஇயனாரை அந்நெறி நிறுத்துதற் பொருட்டு ஒப்பநாடி அதற்குத்தக ஒறுத்தல்.
இவற்றுள் வழக்கமும் தண்டமும் உலகநெறி நிறுத்துதற் பயத்தவாவதல்லது ஒழுக்கம் போல மக்கள் உயிர்க்கு உறுதி பயத்தற் சிறப்பு இலவாகலானும், அவைதாம் நூலானேயன்றி உணர்வு மிகுதியானும், தேய இயற்கையானும் அறியப்படுதலானும், அவற்றை ஒழித்து ஈண்டுத் தெய்வப்புலமைத் திருவள்ளுவரால் சிறப்புடைய ஒழுக்கமே அறம் என எடுத்துக் கொள்ளப்பட்டது.
அதுதான் நால்வகை நிலைத்தாய் (நால்வகை நிலையாவன: பிரமசரியம், கிருகஸ்தம், வானப்பிரஸ்தம், சந்நியாசம் என்னும் நால்வகை ஆசிரமங்கள்) வருணந்தோறும் வேறுபாடு உடைமையாயின், சிறுபான்மையாகிய அச்சிறப்பியல்புகள் ஒழித்து, எல்லார்க்கும் ஒத்தலின் பெரும்பான்மையாகிய பொது இயல்பு பற்றி இல்லறம், துறவறம் என இருவகை நிலையால் கூறப்பட்டது.
- இது திருக்குறள் உரையின் முன்னுரையில் (உரைப்பாயிரம்) பரிமேலழகர் சொல்வது. திருவள்ளுவரின் இதயம் கண்டவர் என்று தமிழ்ப்புலவர்களால் வானளாவப் புகழப்படும் பரிமேலழகர், சுற்றிவளைத்து இங்கே குறள் சொல்லும் அறம் என்பது மனு தர்மமே என்றும், அதனைப் பொது இயல்பு பற்றிப் பெரும்பான்மைக்குத் திறம்பட திணித்திருக்கிறார் என்றும் சொல்கிறார்.
ஏதோ பரிமேலழகர் தவறாகப் புரிந்து கொண்டுவிட்டார் என்று கருதவேண்டியதில்லை. அவர் இந்த முடிவுக்கு வந்ததன் ஆதாரங்களை வள்ளுவர் வாய்மொழி மூலமே பார்க்கலாம்.
பிராமண தர்மத்தைப் போற்றிச் சொல்வது:
பல குறள்கள் இருந்தாலும் முக்கியமான சிலவற்றைப் பார்ப்போம்.
மறப்பினும் ஓத்துக் கொளல் ஆகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்
பரிமேலழகர் உரை:
ஒழுக்கம் உடைமை என்ற அதிகாரத்தின் முன்னுரையிலேயே பரிமேலழகர் சொல்வது: அஃதாவது தத்தம் வருணத்திற்கும் நிலைக்கும் ஓதப்பட்ட ஒழுக்கத்தினை உடையராதல்.
(அதாவது அவரவர் வர்ணாஸ்ரம தர்மப்படி ஒழுகுவது)
ஓத்து மறப்பினும் கொளல் ஆகும் – கற்ற வேதத்தினை மறந்தானாயினும் அவ்வருணம் கெடாமையின், பின்னும் அஃது ஓதிக் கொள்ளலாம்; பார்ப்பான் பிறப்பு ஒழுக்கம் குன்றக்கெடும் – அந்தணனது உயர்ந்த வருணம் தன் ஒழுக்கம் குன்றக்கெடும்.
மறந்தவழி இழிகுலத்தனாம் ஆதலின் மறக்கலாகாது என்னும் கருத்தான், மறப்பினும் என்றார். சிறப்புடை வருணத்திற்கு மொழிந்தமையின் இஃது ஏனைய வருணங்கட்கும் கொள்ளப்படும்.
பரிதியார் உரை:
பிராமணன் வேதம் ஓதி மறந்தாலும் பின்பு சந்தத்தை விட்டு ஓதிக்கொள்ளலாம். ஒழுக்கம் கெட்டால் பிராயச்சித்தம் பண்ணினாலும் போகாது; செய்த தோஷம் அநுபவிக்க வேண்டும்.
அதாவது மற்றவன் எப்படிக் கெட்டாலும், பிராமணன் குலத்தொழிலை விட்டுவிடக்கூடாது என்று பார்ப்பன ஜாதிய பீடங்கள் கவலைப்படுவதைவிட இது மோசமாக அல்லவா இருக்கிறது!
-
10th July 2011 09:59 AM
# ADS
Circuit advertisement
-
10th July 2011, 10:00 AM
#502
மனுக்குறள்? 2 -முனைவர் செ.ம. மாரிமுத்து
நேற்றுப் பார்த்த உதாரணங்களின் தொடர்ச்சியுடன் இன்று ஆரம்பிப்போம். திருவள்ளுவர், சத்திரிய தருமத்தையும் போற்றியிருக்கிறார் என்பது தெரியுமா?
இதற்கு உதாரணம் சொல்ல ஏராளமான குறள்கள் இருந்தாலும், அன்றிலிருந்து தமிழ்மக்களை அடிமையாக்கிய பார்ப்பன – சத்திரிய கூட்டுச் சதிக்கு ஆதாரமான சில குறள்களை மட்டும் பார்ப்போம்.
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்.
பரிமேலழகர் உரை:
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் நின்றது – அந்தணர்க்கு உரித்தாய வேதத்திற்கும் அதனால் சொல்லப்பட்ட அறத்திற்கும் காரணமாய் நிலைபெற்றது;
மன்னவன் கோல் – அரசனால் செலுத்தப்படுகின்ற செங்கோல்.
(வேதமானது) அரசர், வணிகர் என்னும் ஏனையோர்க்கும் உரித்தாயினும், தலைமை பற்றி, அந்தணர் நூல் என்றார். ‘மாதவர் நோன்பும் மடவார் கற்பும், காவலன் காவல்’ (மணிமேகலை 22: 208,9) அன்றித் தம் காவலான் ஆகலின், ஈண்டு அறம் என்பது அவை ஒழிந்தவற்றை. வேதமும் அறனும் அநாதியாயினும் (சநாதன தர்மம் என்று படிக்க) செங்கோல் இல்வழி நடவா ஆகலின், அதனை அவற்றிற்கு ஆதி என்றும், அப்பெற்றியே தனக்கு ஆதியாவது பிறிது இல்லை என்பார் நின்றது என்றும் கூறினார்.
காளிங்கர் உரை:
மற்றும் அறநூல் என்று இங்ஙனம் ஒன்று சொல்லாது அந்தணர் நூல் என்றது, அரசர் நெறியாகிய செங்கோலும் நால்வருணத்தார் நடையுள் ஒரு நடை ஆகலானும், அவை யாவையும் பிறவும் துறவுமாகிய அனைத்தினையும் பழுது அற உரைப்பது பார்ப்பார் ஓதியும் ஓதுவித்தும் இங்ஙனம் விளங்க நடைபெற்று வருகின்ற வேதம் ஆகலான்.
கவிராஜபண்டிதர் உரை:
அரசன் நீதியாய் நடத்தினால், வேதமும், சாஸ்திரமும், தருமமும் வர்த்திக்கும்.
அதாவது பார்ப்பனரின் வேதநூலே அனைவரும் பின்பற்ற வேண்டிய ஒரே நீதிநூல்; அதைக் காப்பாற்ற வேண்டியது அரசனின் கடமை என்கிறார் வள்ளுவர். என்னே ஒரு கூட்டுச்சதி இது!
ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்.
பரிமேலழகர் உரை:
காவலன் காவான் எனின் – காத்தற்குரிய அரசன் உயிர்களைக் காவான் ஆயின்;
ஆபயன் குன்றும் – அறன் இல்லாத அவன் நாட்டுப் பசுக்களும் பால் குன்றும்;
அறுதொழிலோர் நூல் மறப்பர் – அந்தணரும் நூல்களை மறந்துவிடுவர்.
ஆபயன் – ஆவால் கொள்ளும் பயன்,
அறுதொழில்களாவன (வேதம்) ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என இவை.
பசுக்கள் பால் குன்றியவழி அவி இன்மையானும், அது கொடுத்தற்கு உரியார் மந்திரம், கற்பம் என்பன ஓதாமையினும், வேள்வி நடவாதாம்; ஆகவே வானம் பெயல் ஒல்லாது என்பதாயிற்று.
அடப்பாவிகளா! இங்கே அரசன் சரியாக ஆட்சி செய்யாவிட்டால் பொதுமக்களுக்கு நேரும் சிரமம் எல்லாம் பெரிதாகத் தெரியவில்லை வள்ளுவருக்கு. பார்ப்பனன் தொழில் நடக்காது என்பதுதான் பிரதானமாய் இருக்கிறது!
உலக நாடுகளில் எல்லாம் இன்று மரணதண்டனை தவறு என்றும் அதைத் தவிர்க்க வேண்டும் என்றும் விவாதம் எழுந்துள்ளது. ஆனால் கேள்வி ஏதும் கேட்காமல் ‘இவன் கொடியவன், இவன் தலையை வெட்டலாம்’ என்ற உரிமையை மன்னனுக்குக் கொடுத்தது மனு தர்மம். அதனால்தான் மதுரை பற்றி எரிந்தது. அது சத்திரியன் மனு, சத்தியர்களுக்காகவே உருவாக்கிய சிறப்புச்சலுகை.
வள்ளுவர்தான் மனுவாதி ஆயிற்றே! இங்கே அவர் பரிந்துரையும் மனுதர்மப்படியே இருக்கிறது.
கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்
பரிமேலழகர்:
வேந்து கொடியாரை கொலையின் ஒறுத்தல் – அரசன் கொடியவர்களைக் கொலையான் ஒறுத்துத் தக்கோரைக் காத்தல்,
பைங்கூழ் களை கட்டதனொடு நேர் – உழவன் களையைக் களைந்து பைங்கூழைக் காத்ததனொடு ஒக்கும்.
கொடியவர் என்றது தீக்கொளுவார், நஞ்சிடுவார், கருவியில் கொல்வார், கள்வர், ஆறலைப்பார், சூறை கொள்வார், பிறனில் விழைவாரென்று இவர் முதலாயினாரை. இவரை வடமொழியில் ஆததாயிகள் என்ப. இப் பெற்றியரைக் கண்ணோடிக் கொல்லாவழிப் புல் களைக்கு அஞ்சா நின்ற பைங்கூழ் போன்று நலிவு பல எய்தி உலகு இடர்ப்படுதலின், கோறலும் அரசர்க்குச் சாதி தருமம் என்பதாயிற்று.
ஆக தன் விருப்பப்படி ஒருவனைக் கொல்வது இங்கே ஒருவன் சாதி தருமம் என்றாகிப் போனது. என்ன கொடுமை இது!
வள்ளுவராவது இதை ‘மனுதர்மப்படி’ என்று சொல்லாமல் விட்டார். ஆனால், இந்த மனுதர்மத்தை நியாயப்படுத்தி ‘மாபெரும் தமிழ்த்துரோகி’ என்று பெரியாரால் அடையாளம் காட்டப்பட்ட கம்பன் சொல்வதைப் பாருங்கள்.
நன்றி கொன்றரு நட்பினை நார் அறுத்
தொன்று மெய்ம்மை சிதைத்துரை பொய்த்துளார்க்
கொன்று நீக்குதல் குற்றத்தின் நீங்குமால்
சென்று மற்றவன் சிந்தையைத் தேர்குவாய்..
நஞ்சம் அன்னவரை நலிந்தாலது
வஞ்சம் அன்று மனுவழக்கு ஆதலால்..
(கம்பராமாயணம் – கிட்கிந்தை 3,5)
ஆகாதவனைப் போட்டுத்தள்ளுவது மனுதர்மம். இங்கே ஆரிய சத்திரியன் இராமன் இந்த நாட்டின் ஆதிகுடிகளைப் பிரித்தாள்வதற்கு, சகோதரர்களுக்கிடையேயான சண்டையைப் பெரிதுபடுத்தி அண்ணனைக் கொன்று, தம்பியின் ராஜியத்தைத் தன் ஆளுகைக்குக் கொண்டுவந்த குயுக்திக்கும் இதே மனுதர்மம் பயன்பட்டிருக்கிறது. அது எந்த வெட்கமும் இல்லாமல் கம்பன் வாயாலேயே இங்கே உறுதிப்பட்டுள்ளது.
திருக்குறளையும் கம்பராமாயணத்தையும் ஆய்ந்தறிந்த பெரியார் அன்றே தெள்ளெனச் சொன்னார்:
கம்பன் இன்றைய அரசியல்வாதிகள் – தேசபக்தர்கள் பலர்போல் அவர் படித்த தமிழ் அறிவை, தமிழர் எதிரியாகிய பார்ப்பனருக்கு ஆதரவாய் பயன்படுத்தித் தமிழரை இழிவுபடுத்திக் கூலிவாங்கிப் பிழைக்கும் மாபெரும் தமிழ்த் துரோகியே ஆவான். இவன் முழுப் பொய்யன். முழுப் பித்தலாட்டக்காரன். தன்னைப் பார்ப்பானாகவே கருதிக் கொண்டு பார்ப்பான்கூடச் சொல்லப் பயப்படும் கருத்துக்களை எல்லாம் கூறி தமிழர்களை நிரந்தரக் கீழ்மக்களாக்கிவிட்ட துரோகியாவான். தொல்காப்பியன், வள்ளுவன், கம்பன் இம்மூவருமே ஜாதியையும் ஜாதித்தொழிலையும் ஏற்றுக் கொண்டவர் ஆவார்கள்.
வைசியரும், வேளாளரும், குடிப்பிறப்பால் அமையும் குணங்களும்:
வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோல் செயின் (குறள் – 120)
என்ற குறளிலே வைசியரைக் குலதர்மப்படி ஒழுகச் சொல்லும் வள்ளுவர், உழவு என்ற அதிகாரத்தில் (104) வைசியர் மற்றும் நான்காம் வர்ணத்தாரின் குலத்தொழிலை உயர்த்திப்பாடுகிறார்.
பரிமேலழகர்:
அஃதாவது சிறுபான்மை வாணிகர்க்கும் பெரும்பான்மை வேளாளர்க்கும் உரித்தாய உழுதல் தொழில். செய்விக்குங்கால் ஏனையோர்க்கு உரித்து. இது மேல்குடி உயர்வதற்கு ஏது என்ற ஆள்வினை வகையாகலின் குடிசெயல்வகையின் பின்வைக்கப்பட்டது.
உழுவார் உலகத்தார்க்கு அச்சாணி, உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் என்றெல்லாம் இவரைப் புகழ்ந்து இவர்தம் குலதர்மப்படி ஒழுகச் சொல்வதை இந்த அதிகாரத்தில் காணலாம்.
இப்படி நால்வகை வர்ணத்தில் பிறக்கும் கொடுப்பினை பெற்றவரே குடிப்பிறந்தார். அப்படிப் பிறப்பதால் இயல்பாகவே அமையும் குணங்களை ‘குடிமை’ என்ற அதிகாரத்தில் (96) பட்டியல் போட்டே காட்டுகிறார் இந்த மனுவாதி.
பரிமேலழகர்:
அஃதாவது உயர்ந்த குடியின்கட் பிறந்தாரது தன்மை.
உயர்ந்த குடிப்பிறப்பு நால்வகை வருணத்தார்க்கும் இன்றியமையாதாகலின், அச்சிறப்புப்பற்றி இது முன்வைக்கப்பட்டது.
மாதிரிக்கு இரண்டு குறள்கள்:
இற்பிறந்தார் கண்அல்ல தில்லை இயல்பாகச்
செப்பமும் நாணும் ஒருங்கு. (951)
ஒழுக்கமும் வாய்மையும் நாணும் இம் மூன்றும்
இழுக்கார் குடிப்பிறந் தார். (952)
அதாவது நால்வருணத்திலே நல்ல குடியிலே பிறந்தவனுக்கு நடுவுநிலைமை, பழிபாவங்களுக்கு நாணுதல், நல்லொழுக்கம், வாய்மை இதெல்லாம் இயல்பாகவே அமையும் என்று சொல்கிறார்.
சிலர், குடிப்பிறப்பு என்றால் நல்ல குடும்பத்திலே நல்ல தாய் தகப்பனுக்குப் பிறப்பதைச் சொல்வதாகப் புரிந்துகொண்டு உரை எழுதி இருக்கிறார்கள். அது தவறான புரிதல். குடிமை என்ற அதிகாரத்திலேயே, குடி என்பதற்கு மாற்றாகக் குலம் என்றும் (குலம் பற்றி வாழ்தும் – 956, குலத்தின்கண் ஐயப்படும் – 958, குலத்தில் பிறந்தார் – 959) வள்ளுவர் சொல்வதிலிருந்தே அவர் சொல்வது வருணாசிரம அடிப்படையிலான பிறப்பைத்தான் என்பதில் எந்த சந்தேகமும் கொள்ளத் தேவையில்லை.
பிறப்பின் அடிப்படையில் அமைவதாக, அமைய வேண்டியதாக வள்ளுவர் தரும் சிறப்புக் குணங்களின் பட்டியல்:
குறள் எண்வாரியாக
951 – குடிப்பிறந்தாரே பண்பாளர்; தீயன செய்ய நாணமும், நடுவு நிலைமையும் (செப்பம்) உடையவர்
952 – ஒழுக்கமும் வாய்மையும் உடையவர்
953 – முகமலர்ச்சியும், ஈகையும் இன்சொல்லும் கொண்டவர்
954 – எத்தனை கோடி கொடுத்தாலும் மானத்தை விடாதவர்
956 – சிறுமையான செயல் செய்ய மாட்டார்
959 – வாய்ச்சொல்லே அவர் சாதி காட்டும்
963 – பெருக்கத்திலும் பணிவுடையவர்; சுருக்கத்திலும் பண்பு மாறாதவர்
992 – அன்பும் பண்பும் நிறைந்தவர்
794 – நட்பை மதித்து நடப்பவர் ஆகவே சாதிபார்த்து நட்பு கொள்ள வேண்டும்.
இந்த வள்ளுவரைத்தான் தமிழ்மக்கள் தலையில் தூக்கி வைத்துக்கொண்டு, இத்தகைய பிதற்றல்களை உலகப்பொதுமறை என்று கொண்டாடி வருகின்றனர்.
அதுசரி, இப்படிப் பிறப்பு அமையக் கொடுத்து வைக்காத துரதிருஷ்டசாலிகளின் பாடு என்ன? அதை மட்டும் விட்டுவிடுவாரா இந்த மனுவாதி?
வருணாசிரமதருமத்தின் வழக்கப்படி நால்வருணத்தாரும் அவரவர் குலத்தொழிலை விடாமல் தொடர்ந்து அதன்படி ஒழுக வேண்டும். அதை விட்டுவிட்டால் சாதிவிலக்கு ஆகிவிடும். ஒருவன் சாதிவிலக்கம் ஆகிவிட்டால் குடியில்லாதவன் ஆகிவிடுவான். அப்புறம் அவனும் அவன் சந்ததியும் இழிந்த பிறவிகளாகத் தொடர வேண்டியதுதான். இப்படித்தான் பஞ்சமர் என்ற அவர்ணாக்கள் உருவானதும், அவர்கள் மிதியடியாய்ப் பயன்படுத்தப்பட்டதும்.
இதை மிகத்தெளிவாக வள்ளுவம் எடுத்து வைக்கிறது:
ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும் – 133
பரிமேலழகர்:
ஒழுக்கம் உடைமை குடிமை – எல்லார்க்கும் தத்தம் வருணத்திற்கு ஏற்ற ஒழுக்கம் உடைமை குலன் உடைமையாம்; இழுக்கம் இழிந்த பிறப்பாய்விடும் – அவ்வொழுக்கத்தில் தவறுதல் அவ்வருணத்தில் தாழ்ந்த வருணமாய்விடும்.
இப்படி வருணத்தில் தாழ்ந்தானோ அல்லது விலக்கப்பட்டவனோ (நான்காம் வகுப்பில் இருப்பவன் அதற்குமேல் தாழ்ந்தால் அவர்ணா) அவன் கீழான இழிபிறவியாகிவிடுவான்.
இவர்களுக்குக் ‘கீழ்கள்’ என்று அடைமொழி கொடுத்து ஆண்டைகள் கொடுமைப்படுத்த வள்ளுவர் கொடுக்கும் அதிகாரத்தைப் பாருங்கள்.
அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்
அவாவுண்டேல் உண்டாம் சிறிது 1075
சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்
கொல்லப் பயன்படும் கீழ் 1078
உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்
வடுக்காண வற்றாகும் கீழ் 1079
கீழானவனை எப்போதும் அச்சுறுத்தி வை! கரும்புபோல் கசக்கிப்பிழி! நீ நன்றாக உடுத்தி, உண்டு, அதை அவன் கண்டு வயிற்றெரிச்சல் படுவான், அது விளங்காமல் போகும். ஆகவே அவனை விலக்கி வை!
இத்தனையும் சொல்பவர் வள்ளுவர்தான்.
இதற்கு மேலும் ஆதாரம் வேண்டுவோர் மனு ஸ்மிருதியை நேராகவே படித்து அதில் உள்ள எத்தனை பிற்போக்கான கருத்துக்கள் வள்ளுவரால் அப்படியே எடுத்தாளப்பட்டுள்ளன என்று தாமாகவே அறிந்து கொள்ளலாம்.
பல குறள்கள் மனுஸ்மிருதியிலிருந்து சொல்லுக்குச்சொல் மாறாமல் அப்படியே வள்ளுவரால் மொழிபெயர்க்கப்பட்டிருப்பதையும் பார்க்கலாம்.
-
10th July 2011, 10:02 AM
#503
மனுக்குறள்? 3 -முனைவர் செ.ம. மாரிமுத்து
பல குறள்கள் மனுஸ்மிருதியிலிருந்து சொல்லுக்குச்சொல் மாறாமல் அப்படியே வள்ளுவரால் மொழிபெயர்க்கப்பட்டிருப்பது பற்றி நேற்று கண்டோம். சில உதாரணங்களையும் காணலாம்.
Manusmriti II:218
http://www.hindubooks.org/scriptures...2_211_220.html
As the man who digs with a spade (into the ground) obtains water, even so an obedient (pupil) obtains the knowledge which lies (hidden) in his teacher.
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றணைத் தூறும் அறிவு – 396
Manusmriti III:78
http://www.hindubooks.org/scriptures...ch3_71_80.html
Because men of the three (other) orders are daily supported by the householder with (gifts of) sacred knowledge and food, therefore (the order of) householders is the most excellent order.
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை – 41
Manusmriti IX:12
http://www.hindubooks.org/scriptures...ch9_11_20.html
Women, confined in the house under trustworthy and obedient servants, are not (well) guarded; but those who of their own accord keep guard over themselves, are well guarded.
சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை – 57
II வள்ளுவரின் வடமொழிப்பற்று
தமிழ் என்ற சொல்லையே ஓரிடத்திலும் பயன்படுத்தாமல் கவனமுடன் தவிர்த்திருக்கும் வள்ளுவர் அதே நேரத்தில் குறள் நெடுகிலும் ஏராளமான வடமொழிச் சொற்களைப் பயன்படுத்தியுள்ளார்.
எகா:
அமரர், அமிழ்து, அவி, ஆசாரம், ஆசை, ஆதி, இந்திரன், இலக்கம், கணம், கருமம், காமம், காமன், காரணம், காலம், சலம், சூது, சூதர், தண்டம், தவம், தானம், தூது, தேவர், நாகரிகம், நாமம், பகவன், பண்டம், பாக்கியம், பாகம், பாவம், பாவி, பூசனை, பூதம், மங்கலம், மந்திரி, மாயம், மனம், மானம், வரன், வாணிகம் இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.
இதிலே பலவற்றிற்கும் இணையான தமிழ்ச்சொற்கள் இருந்தும் வலிந்து வடமொழியைப் பயன்படுத்தியிருப்பது வள்ளுவரின் வடமொழிப்பற்றைத் தெள்ளென விளக்கும். இதற்குப்போய் தமிழ்மறைநூல் என்று பெயரிட்டு அழைக்கும் கொடுமையை என்னென்பது!
III தவிர்க்கப்பட்ட தமிழர் வழிபாடு
ஆரிய மொழிப்பற்று ஒருபுறம் என்றால் காடன், மாடன் போன்ற நாட்டார் தெய்வங்களையும், தத்தம் குலதெய்வங்களையும், சித்தர், முனிகளையும் வணங்கும் தமிழ்மரபு வழிபாடு வள்ளுவரால் முற்றாய்ப் புறக்கணிக்கப்பட்டு, ஆரிய தெய்வங்களே பெருந்தெய்வங்களாக திறமையுடன் காட்டப்பட்டுள்ளன.
வள்ளுவர் குறளினூடே அடுக்கிப்போகும் ஆரியவழித் தெய்வங்களின் தொகுப்பு:
விஷ்ணுவும் ஸ்ரீதேவியும்: 84, 167, 179, 519, 617, 920, 1103
பூதேவி: 1040
ஸ்ரீதேவிக்கு மூத்தவள்: 167, 617, 936
இந்திரன்: 25, 899
பிரும்மா: 1062
மக்கள் உள்ளத்தே காமத்தை ஊட்டும் மன்மதன்: 1197
கூற்றுவன்: 269, 326, 765, 894, 1050, 1083, 1085
மேலும் லஜ்ஜா, தரா என்று வடமொழியார் பாணியில் நாணெணும் நல்லாள் (924) என்பதும் நிலமெனும் நல்லாள் (1040) என்பதும் குறிப்பிடத்தக்கன.
இப்படித் தான்கொண்ட ஆரியப்பற்றை எந்தவித ஐயத்துக்கும் இடமின்றித் தெளிவாகக் காட்டும் வள்ளுவரை, பெரியார் ஒருவரே மிகச்சரியாகப் புரிந்து கொண்டிருந்தார். பெரியார் அன்றே சொன்னார்:
திருவள்ளுவன் அக்காலத்துக்கு ஏற்ற வகையில் ஆரியக் கருத்துக்கு ஆதரவு கொடுக்கும் அளவில் பகுத்தறிவைப் பற்றிக் கவலைப்படாமல் நீதி கூறும் முறையில் தனது மத உணர்ச்சியோடு ஏதோ கூறிச் சென்றான்.
குறளில் இந்திரன், பிரம்மா, விஷ்ணு முதலிய தெய்வங்களையும், மறுபிறப்பு, சுவர்க்கம், நரகம், மேலோகம், பிதுர், தேவர்கள் முதலிய ஆரிய மதச் சம்பிரதாயங்களையும், மூடநம்பிக்கைகளையும் கொண்ட விஷயங்களைப் பரக்கக் காணலாம்.
IV பார்ப்பனரின் நீதிநூலே திருக்குறள்
பார்ப்பனரின் நீதிநூலே திருக்குறள் என்பதற்குச் சான்றாக திருவள்ளுவமாலையில் பல பாடல்கள் உள்ளன.
வேதப் பொருளை விரகால் விரித்துலகோர்
ஓதத் தமிழால் உரைசெய்தார் – ஆதலால்
உள்ளுநர் உள்ளும் பொருளெல்லாம் உண்டென்ப
வள்ளுவர் வாய்மொழி மாட்டு.
– செயலூர்க் கொடுஞ்செங்கண்ணனார்
ஆரியமும் செந்தமிழும் ஆராய்ந் திதனின்இது
சீரிய தென்றொன்றைச் செப்பரிதால் – ஆரியம்
வேதம் உடைத்துத் தமிழ்திரு வள்ளுவனார்
ஓது குறட்பா உடைத்து
– வண்ணக்கஞ் சாத்தனார்
ஆரியவேதம் சொல்வதற்கும் இதற்கும் வேறுபாடே இல்லை, ஒன்றுக்கு ஒன்று குறைவே இல்லை என்று ஆராய்ந்து பார்த்து மகிழ்கிறார் இவர்.
பரிமேலழகரும் சரி, இவர் போன்ற சங்கப்புலவர்களும் சரி, தத்தம் பின்னணியால் மூளைச்சலவை செய்யப்பட்டுத் திரித்துக் கூறுவதாகச் சொல்வார் சிலர். இந்த ஆய்வுக்கட்டுரை அவர்களுக்காகவே எழுதப்பட்டிருக்கிறது.
திருக்குறள் அந்தணரின் சொந்த நூலே அன்றி அது உலகப்பொதுமறை அன்று என்பதற்கு மிக முக்கியமான சான்று கிபி.இரண்டாம் நூற்றாண்டு காலத்திய கூலவாணிகன் சீத்தலைச்சாத்தனால் இயற்றப்பட்ட மணிமேகலையில் இருக்கிறது.
இதிலே சிறைசெய் காதையில் கிளைக்கதையாக ஒரு காட்சி விரிகிறது.
‘அரசு ஆள் உரிமை நின்பால் இன்மையின்
பரசுராமன் நின்பால் வந்து அணுகான்’
– என்ற குறிப்பால் அறியப்படும் பரசுராமன் காலத்திய புராதனமான புகாரை ஆண்ட ககந்தன் என்ற சோழமன்னன், மருதி என்ற பார்ப்பனப் பெண்ணைக் கண்டு காமுறுகிறான். ’கற்புநெறி தவறாத நான் இந்த மன்னன் உள்ளம் புகுந்தமை எங்ஙனம்’ என்று பார்ப்பனத்தியான மருதி கலங்கி நிற்கிறாள்.
பார்ப்பனி மருதியை பாங்கோர் இன்மையின்
யாப்பறை என்றே எண்ணினன் ஆகி
காவிரி வாயிலில் ககந்தன் சிறுவன்
“நீ வா” என்ன நேர் இழை கலங்கி
“மண் திணி ஞாலத்து மழை வளம் தரூஉம்
பெண்டிர் ஆயின் பிறர் நெஞ்சு புகாஅர்
புக்கேன் பிறன் உளம் புரி நூல் மார்பன்
முத் தீப் பேணும் முறை எனக்கு இல்” என
மா துயர் எவ்வமொடு மனைஅகம் புகாஅள்
‘மழைவளமே எம்போன்ற பெண்களால் அன்றோ! இனி நான் எப்படி அகம் திரும்பி பூணூல் மார்பனான என் கணவனுக்காக முத்தீ பேணுவேன்!’ என்று வீடு திரும்பாமல் புகாரின் காவல்தெய்வமான சதுக்கபூதத்திடம் சென்று அழுகிறாள் மருதி.
அவளைத் தேற்றுவது போல் அந்த பூதம் சொல்கிறது:
மா துயர் எவ்வமொடு மனைஅகம் புகாஅள்
பூத சதுக்கம் புக்கனள் மயங்கிக்
“கொண்டோர் பிழைத்த குற்றம் தான் இலேன்
கண்டோன் நெஞ்சில் கரப்பு எளிதாயினேன்
வான் தரு கற்பின் மனையறம் பட்டேன்
யான் செய் குற்றம் யான் அறிகில்லேன்
பொய்யினைகொல்லோ பூத சதுக்கத்துத்
தெய்வம் நீ” எனச் சேயிழை அரற்றலும்
மா பெரும் பூதம் தோன்றி “மடக்கொடி!
நீ கேள்” என்றே நேர் இழைக்கு உரைக்கும்
“தெய்வம் தொழா அள் கொழுநன் தொழுது எழுவாள்
பெய் எனப் பெய்யும் பெரு மழை” என்ற அப்
பொய்யில் புலவன் பொருளுரை தேறாய்!
இங்கே இந்தச் சதுக்கபூதம் சொல்லும் அறிவுரையைக் கவனித்துப் பார்க்க வேண்டும். பார்ப்பனியான மருதிக்கு அது இருக்குமுதலான வேதத்தை எடுத்துச் சொல்லவில்லை. உபநிடத நூல்களையோ, மனுமுதலான சாத்திரநூல்களையோ எடுத்துச் சொல்லவில்லை. ஆனால் பெண்ணடிமைத்தனத்துக்கு ஊற்றுக்கண் போன்ற ஒரு திருக்குறளை மேற்கோள் காட்டி அறிவுரை சொல்கிறது.
“தெய்வம் தொழா அள் கொழுநன் தொழுது எழுவாள்
பெய் எனப் பெய்யும் பெரு மழை” என்ற அப்
பொய்யில் புலவன் பொருளுரை தேறாய்!
– என்று சொல்லி “இனி நீ உன் கணவனையே கும்பிட்டு வா! இதர தேவதைகளுக்கான விழாக்களிலே மனதைச் செலுத்தாதே!” என்றும் சொல்லி அந்தப்பூதம் அவளை வழியனுப்புவதாய் போகும் இக்கதை.
மணிமேகலை பௌத்தகாவியம். பின்னாளில் நாகார்ச்சுனர் போன்ற சில பார்ப்பனர் புகுந்து குழப்பிய மகாயானம் போலன்றி, இது உண்மையான மூலபௌத்தமான ஹீனயானம் என்னும் தேராவாத பௌத்த நூல். பெண்விடுதலைக்கு வித்திட்டது பௌத்தம். ஆகவே சீத்தலைச்சாத்தன் எந்தச்சார்புமின்றி, ‘திருக்குறள் பார்ப்பனர் நூலே’ என்று வரும் தலைமுறைக்குக் காட்டவே இதை அமைத்திருக்கிறார்.
இதிலிருந்து தெரியவரும் மற்றொரு உண்மை என்னவென்றால் இரண்டாம் நூற்றாண்டுக்கு மிகவும் தொன்மையான புராண காலத்திலேயே திருக்குறள், மருதி போன்ற சாதாரணமான பார்ப்பன மக்களிடம் நீதிநூலாய் இருந்திருக்கிறது. எனவே, பின்னாளில் இயற்றப்பட்ட மனுநூல் போன்றவை திருக்குறளை அடியொற்றியே இயற்றப்பட்டிருக்கலாம் என்று கருதவும் வாய்ப்பிருக்கிறது.
இதைப்படிக்கும் தமிழ்மக்கள் இனியாவது குறள் மயக்கத்திலிருந்து மீளவேண்டும்.
(முற்றும்)
-
10th July 2011, 11:24 AM
#504
Senior Member
Seasoned Hubber
வள்ளுவர் பொதுமறை
In full democracies, there is abundant room for heresy and heretics.
Previously, there was a Ph.D who put forward in his thesis that VaLLuvar copied or borrowed from St.Thomas and he (வள்ளுவர் ) was in fact a person inclined to Christianity.
Now there is another who says that VaLLuvar imported his stuff from Manu.
Do not forget: There is also a standing Statement of Claim that vaLLuvar was espousing Jain philosophy.
ஜெயேந்திர சுவாமிகள் - திருக்குறள் வேதத்திற்கு முரண்பட்டது என்று ஒதுக்கிவிட்டதாகக் கேள்வி !
எது உண்மை - ஒவ்வொன்றாக ஆராய்வோம்!
திருக்குறள் பொதுமறை எனப்படுவதால் எல்லாருக்கும் வேண்டிய எல்லாக் கருத்துக்களும் அதில் கிடைக்கும்...சந்திப்போம் மீண்டும் !
-
10th July 2011, 03:48 PM
#505
Senior Member
Seasoned Hubber
பார்ப்பனர் நூலாக இருப்பதில்.....
[QUOTE]]ஆகவே சீத்தலைச்சாத்தன் எந்தச்சார்புமின்றி, ‘திருக்குறள் பார்ப்பனர் நூலே’ என்று வரும் தலைமுறைக்குக் காட்டவே இதை அமைத்திருக்கிறார். இதிலிருந்து தெரியவரும் மற்றொரு உண்மை என்னவென்றால் இரண்டாம் நூற்றாண்டுக்கு மிகவும் தொன்மையான புராண காலத்திலேயே திருக்குறள், மருதி போன்ற சாதாரணமான பார்ப்பன மக்களிடம் நீதிநூலாய் இருந்திருக்கிறது. etc etc,[ /QUOTE]
ஒரு நூல், பார்ப்பனர் நூலாக இருப்பதில் எந்தத் தவறுமில்லை. என்றாலும் திருக்குறள் தமிழர் வாழ்வியல் நூல். யாவருக்கும் அறம். பொருள், இன்பம் என்ற உறுதிப் பொருள்களைப் புகட்டுவான்வேண்டி இயற்றப்பட்டது. இந்தக் கட்டுரையாளர் தம் காரணமற்ற சொந்த விருப்பு வெறுப்புகளைப் பொழிந்து ஒருதலைச் சார்பாகக் கருத்துரைத்துள்ளார். பார்ப்பனப் பெண்ணாக இருந்தாலும் வேறு யாராக இருந்தாலும் தன் கற்பினைக் காத்துக்கொள்ள முனைவதும் கணவனை மதித்துப் போற்றுவதும் பெண்ணியத்துக்கு எதிரானதன்று.
சாத்தனார் நாயனாரை "பொய்யில் புலவன்" (பொய்யற்ற மெய்ப்புலவன்) என்று புகழ்ந்திருப்பதால், பார்ப்பன வெறுப்போ பெண்ணடிமை செய்யும் நினைப்போ மற்றெந்தக் குற்றமுமோ இல்லையென்பது தெளிவு.
-
10th July 2011, 04:11 PM
#506
Senior Member
Seasoned Hubber
சீரிய தென்றொன்றை....
Originally Posted by
x
[Bஆரியமும் செந்தமிழும் ஆராய்ந் திதனின்இது
சீரிய தென்றொன்றைச் செப்பரிதால் – ஆரியம்
வேதம் உடைத்துத் தமிழ்திரு வள்ளுவனார்
ஓது குறட்பா உடைத்து
– வண்ணக்கஞ் சாத்தனார்
ஆரியவேதம் சொல்வதற்கும் இதற்கும் வேறுபாடே இல்லை, ஒன்றுக்கு ஒன்று குறைவே இல்லை என்று ஆராய்ந்து பார்த்து மகிழ்கிறார் இவர்.
...இது
சீரிய தென்றொன்றைச் செப்பரிதால் –..................
இதனின் இது சீரியதென்று சொல்லவியலாதபடி இரண்டும் சீரியவென்பதுதான் பாடலின் பொருள். வேறுபாடு இல்லை, குறைவு இல்லை என்பவை எழுதியவரின் சொந்தக் கருத்து.
Last edited by bis_mala; 10th July 2011 at 06:22 PM.
Reason: typo title
B.I. Sivamaalaa (Ms)
-
10th July 2011, 04:46 PM
#507
Senior Member
Seasoned Hubber
வள்ளுவனும் வடமொழியும்
On the allegation that vaLLuvan used vadamozi liberally and he was pro-vadamozi:
Research has proven 2/3 of Skt words to be Dravidian or Dravidian-derived. If the root of a word is in PIE base, then it may have to be explained. Otherwise, the word is Tamil or Tamil>Prakrit>Skrt. We will deal with individual words as we proceed. No hurry.
note:
[
Originally Posted by
x
The four classes are not determined by birth or colour but by psychological characteristics which fit us for definite functions in society. Dr. Radhakrishnan, The Bhagavadgītā , page 364-5.
Last edited by bis_mala; 10th July 2011 at 10:35 PM.
Reason: note title
B.I. Sivamaalaa (Ms)
-
11th July 2011, 09:20 PM
#508
Senior Member
Seasoned Hubber
உங்கள் சிந்தனைக்கு !
சாதிகள் உருவாகி குமுகத்தை (சமுதாயத்தை(ப்) பீடித்துக்கொண்டமைக்கு எந்தப் பழைய நூலையும் குறைகூறுவது எத்துணை சரியான நிலை என்று சிந்திக்கவேண்டும். சாதிகள், மக்களிடம் தோன்றி வளர்ந்தவை. பெரிதும் படிப்பறிவு இல்லாத மக்கள், நூல்களை எந்த அளவுக்கு நம்பி இருந்தனர்? இன்று கிடைப்பதுபோல் நூல்கள் முன்காலத்தில் பரவிக் கிடக்கவில்லை. எங்கோ ஒரு புலவர் வீட்டில் ஒன்றிரண்டு கிடக்கும். அவர் அவற்றைப் படித்து எந்த அளவுக்குப் பரப்பிக் கொண்டிருந்திருப்பார்? பாட்டை எழுதிக்கொண்டு (மாட்டு வண்டியிலோ கால்நடையாகவோ ) போய் எந்த மன்னனிடமாவது காட்டிப் பரிசில் பெற்றுவந்து அவர் பிள்ளை குட்டியைக் காப்பாற்றுவதிலேயே அவருக்கு வயதாகிவிடும். வெள்ளைக்காரன் படித்து எடுத்துச் சொன்னதனால்தானே இன்று பலரும் ஆய்வு செய்து
கொண்டிருக்கிறார்கள்? இல்லாவிட்டால், இந்த நூல்களெல்லாம் எங்கே போயிருக்குமோ? .அச்சகங்கள் இயங்கிய காலமோ பண்டைக் காலம்? சிந்தியுங்கள்
-
14th July 2011, 12:22 PM
#509
Senior Member
Devoted Hubber
இந்தியாவின் கல்வி வளர்ச்சி நிலை இங்கில்லந்தைவிட பல மடங்கு அதிகம். அச்சு இயந்திரம் புத்தகமாக வர இயல உலக மொழி எல்லாவற்றிலும் உரைநடை தோன்றியது. வெள்ளைக்கரன் எடுத்துச் சொல்லி தர வேண்டிய நிலையில் என்றுமே இருந்தது இல்லை. பொது சகாப்தத்துக்கு முன் 300- பொ.ச.200 வரை சங்ககால இலக்கியம், 200 வாக்கில் திருக்குறள், பொ.ச.3ம் நுற்றாண்டில் தொல்காப்பியம், சிலப்பதிகாரம், மணிமேகலை இவற்றை பாதுகாத்தது நம் முன்னோர் தான், இவற்றை மீட்டது தமிழ் பெரியார் உ.வே.சா. தான்,ஏன் தேவையின்றி யாருக்கோ கொடி பிடிக்கீறிர்கள்.
வள்ளுவரும் நம் முன்னோர் சென்ற வழியை ஏன் மாற்றி பொய் சொல்லித் திரிகின்றீர்கள்
-
14th July 2011, 10:21 PM
#510
Senior Member
Seasoned Hubber
Poor educational levels and illiteracy in TN in yesteryears
ம.த. கலாநிதி உ.வே சாமிநாத ஐயரவர்கள் ஒரு பழைய நூல் ஓர் இடத்தில் இருப்பதறிந்து அங்கு சென்று அந் நூலைக் கண்டார்.மட்டற்ற மகிழ்ச்சி அவருக்கு. அடுத்தமுறை அவ்வழியே வருகையில் அதை எடுத்துச் செல்லலாம் என்று முடிவுசெய்தவராய், வேறோரிடத்துக்கு இன்னொரு நூலைக் காப்பாற்றச் சென்றுவிட்டார். அந்த வேலை முடிந்து மீண்டும் அவ்விடம் வந்தபோது என்ன நடந்துகொண்டிருந்தது தெரியுமா?
தீமூட்டிப் பழைய நூல்களையெல்லாம் எரித்துக்கொண்டிருந்தார்கள். அவர் தேடிவந்த நூலையும் சேர்த்துத்தான்.
தூக்கி வாரிப்போட்டது அவருக்கு.....
தமிழன்னையின் நிலை நினைந்து கண்ணீர் விட்டவராய், அங்கிருந்தகன்றார்.
எரித்துக்கொண்டிருந்தவனோ, யாருக்கு வேணும் இந்தக் குப்பை....என்று முணுமுணுத்தபடி எரிப்பதைத் தொடர்ந்தான்......
அவ்வளவு கல்வி சிறந்திருந்ததாம் இந்தியாவிலே....
நூல்நிலையமமைக்கச் சொல்லித்தந்தவனே, வெள்ளைக்காரன் தான்.....
Last edited by bis_mala; 19th July 2011 at 05:03 AM.
Reason: typo; title
B.I. Sivamaalaa (Ms)
Bookmarks