நல்ல தொடர்களை கொடுப்பதுதான் நோக்கம்: ஜே.கே.
அபிநயா கிரியேஷன்ஸ் சார்பில் பத்துக்கும் மேற்பட்ட மெகா தொடர்களை தயாரித்த ஜே.கே. முதன் முதலாக சன் டி.வியில் ஓளிபரப்பாகி வரும் திருப்பாவை சீரியலைத் தயாரித்து இயக்கி வருகிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது.
இதுவரை மாங்கல்யம், ஆடுகிறான் கண்ணண், தீர்க்க சுமங்கலி, செல்லமடி நீ எனக்கு, தெலுங்கில் காஸ்ட்லி அல்லுலு, வம்ச வருஷம் உள்ளிட்ட பல தொடர்களை தயாரித்து இருக்கிறேன்.
தற்போது இயக்கி வரும் திருப்பாவை என்னுடைய கதை என்பதால், அதனை மற்ற யாரும் சொன்னால் நன்றாக இருக்காது என்பதற்காகவே, நான் இயக்கும் பணியில் இறங்கினேன். மாமியார், மருமகள் சண்டை, இரண்டு, மூன்று பெண்களைத் திருமணம் செய்து கொண்டு அல்லல்படுவது போன்ற வழக்கமான சீரியல் கதைகளைப் போல் இல்லாமல் முற்றிலும் மாறுபட்ட கதையைக் கொண்டதுதான் திருப்பாவை.
இந்தக் கதை வேதத்தை பற்றியது, நல்ல விஷயங்களை செய்யும் போது வேதத்தை மீறுவதில் தப்பில்லை, எதுவாக இருந்தாலும் வேதம் சொல்லுகிற படிதான் நடக்க வேண்டும் என இந்த இரண்டு கருத்துகளுக்கிடையே நடக்கும் மோதல்தான் "திருப்பாவை'.
கண்ணால் காண்பதும், காதால் கேட்பதும் நிஜம் மாதிரி தெரியும் ஆனால் நிஜமாக இருக்காது. விசாரித்தால்தான் உண்மை தெரியவரும். மனம் விட்டு பேசாத எதுவுமே பிரச்னைதான்; அதை பேசி தீர்த்து விட்டால் முடிந்து விடும்.
நகர வாழ்க்கையில் மனைவிக்கு வாங்கி போகிற மல்லிகை பூ கூட டீசல் புகையில் கருகி விடுகிறது. கிராமத்தை விட்டு பிழைப்பு தேடி நகரத்துக்கு வந்த ஒவ்வொருவரும் ரசனையை தொலைத்துவிட்டுதான் வாழ்கின்றனர்.
ஆகவே டி.வி.யில் கிராமத்தை காட்டுவோம் என்பதற்காகதான் இந்த சீரியலை நகரங்களை விட்டு விட்டு கும்பகோணம் அருகிலுள்ள உப்பிலியப்பன் கோவில் கிராமத்தில் எடுத்திருக்கிறோம். இனி வரும் காட்சிகளையும் அங்கேயே எடுக்க முடிவு செய்துள்ளேன். சீரியலை கிராமத்தில் எடுப்பது அதிக செலவுதான். ஆனாலும் நல்ல சீரியலை மக்களுக்கு கொடுப்பதுதான் நோக்கம் என்றார் ஜே.கே.
Bookmarks