அன்றும் .. இன்றும்.. என்றும்..
தமிழ் திரையுலக வரலாற்றில் முதன் முதலில் 7 திரையரங்குகளில் வெள்ளி விழா (25 வாரங்கள்) கொண்டாடி சாதனை செய்த படம் மக்கள் திலகத்தின் எங்க வீட்டுப் பிள்ளை. சென்னை காசினோ திரையரங்கில் 211 நாட்கள் ஓடி பழைய சாதனைகளை முறியடித்த படம். காசினோவில் மட்டுமே ரூ. 5 லட்சத்துக்கு மேல் வசூல் செய்தது.
இதற்கு முன் அதே காசினோ திரையரங்கில் காதலிக்க நேரமில்லை படம் 25 வாரங்களைக் கடந்த ஓடினாலும் தினசரி 2 காட்சிகளாக நடைபெற்றது. ஆனால், எங்க வீட்டுப் பிள்ளை 3 காட்சிகளாக 211 நாட்கள் வெற்றிகரமாக ஓடி சாதனை படைத்ததையும் குறிப்பிட வேண்டும். தஞ்சையில் வெள்ளி விழா கண்ட படம் (யாகப்பா திரையரங்கம்) என்ற சிறப்பும் எங்க வீட்டுப் பிள்ளைக்கு உண்டு.
கடந்த 2-ம் தேதி டிஜிட்டல் மெருகேற்றப்பட்டு சென்னை, கோவை, வேலூர், திருச்சி நகரங்களில் பல திரையரங்குகளில் எங்க வீட்டுப் பிள்ளை படம் திரையிடப்பட்டு வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. டிஜிட்டல் முறையில் வந்த மக்கள் திலகத்தின் படங்கள்.. சென்னையில்
1. ஆயிரத்தில் ஒருவன், 2.ரிக்க்ஷாக்காரன், 3.அடிமைப்பெண், 4.நினைத்ததை முடிப்பவன் ஆகிய படங்கள் தொடர்ந்து சென்னை தேவி திரையரங்க வளாகத்தில் வெளியாகி இப்போது 5வது படமாக எங்க வீட்டுப் பிள்ளையும் அதே வளாகத்தில் வெளியாகி உள்ளது.
மக்கள் திலகத்தின் பழைய டிஜிட்டல் படங்கள் தொடர்ந்து ஏசி அரங்குகளிலும் மால்களில் உள்ள திரையரங்குகளிலும் குறிப்பாக தேவி வளாகத்தில் (சத்தியம் அரங்கையும் சேர்த்துக் கொள்ளலாம்) வெளியாகி வருவதும் ஒரு சாதனைதான். வேறு எந்த பழைய படங்களுக்கும் கிடைக்காத பெருமை இது.
அந்த அளவுக்கு பெரிய ஏசி திரையரங்குகள், மால்களில் உள்ள திரையரங்குகள் மக்கள் திலகம் படங்களின் மீது நம்பிக்கை வைத்துள்ளன. பழைய படங்கள் என்ன? சில நேரங்களில் ஒரு சில புதிய படங்களையும் கூட வசூலில் மிஞ்சிவிடும் ஆற்றல் மக்கள் திலகத்தின் படங்களுக்கே உண்டு. தேவி வளாகத்தில் எங்க வீட்டுப் பிள்ளை படம் வெளியான விதமே அதற்கு உதாரணம்.
முதலில் தேவி திரையரங்கை விநியோகஸ்தர் தரப்பில் அணுகியபோது புதிய படங்கள் வருவதால் இப்போதைக்கு எங்க வீட்டுப் பிள்ளைக்கு தியேட்டர் கொடுக்க முடியாது என்று திரையரங்க நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சரி, இதற்காக காத்திருக்க வேண்டாம் என்று தேவி வளாகம் தவிர்த்து மற்ற திரையரங்குகளில் படத்தை வெளியிட்டிருக்கிறார்கள். படத்துக்கு நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது. திடீரென தேவி திரையரங்கு சார்பில் எங்க வீட்டுப் பிள்ளை விநியோகஸ்தரை தொடர்பு கொண்டு தேவி பாலாவில் படத்தை திரையிட விரும்புகிறோம் என்று தெரிவித்திருக்கிறார்கள். விநியோகஸ்தருக்கு இன்ப அதிர்ச்சி...
தேவி பாலாவில் எங்க வீட்டுப் பிள்ளை படம் வெளியாகி இப்போது நடக்கிறது. படத்தை வெளியிட மறுத்த தியேட்டர் நிர்வாகம் விரும்பிக் கேட்டு வாங்கி திரையிட்டிருக்கிறது. இடையில் நடந்தது என்ன? சஸ்பென்ஸை கடைசியில் பார்ப்போம்.
அதற்கு முன் ஒரு சின்ன ஃபிளாஷ் பேக். மக்கள் திலகத்தின் 100 நாட்கள் ஓடிய வெற்றிப் படமான ரகசிய போலீஸ் 115 படம் 1968-ம் ஆண்டு வெளியாகி வசூல் பிரளயம் செய்தது. சென்னையில் மட்டுமே வெறும் பத்து நாட்களில் 2 லட்சத்து 37 ஆயிரத்து 470 ரூபாய், 44 காசுகள் வசூலாகி உள்ளது. சென்னையில் முதல் பத்து நாட்களில் மட்டுமே 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். இத்தனைக்கும் இது பழைய டிக்கெட் கட்டணம்.
மக்கள் திலகம் புரட்சித் தலைவராக உருவெடுத்து மக்கள் செல்வாக்கோடு தமிழக முதல்வராக அரியாசனம் ஏறிய பிறகு தியேட்டர்களில் டிக்கெட் விலையை உயர்த்தினார். அதற்கு முன்பு 1968-ல் தியேட்டர்களில் அதைவிடக் குறைவான டிக்கெட் கட்டணமே இருந்தது. இத்தனைக்கும் சென்னையில் ரகசிய போலீஸ் 115 படம் ஏசி திரையரங்குகளில் வெளியாகவில்லை. சென்னையில் அப்போது ஏசி திரையரங்கம் அதிகம் இல்லை. இருந்தாலும் ஏசி திரையரங்கம் என்றால் டிக்கெட் கட்டணம் கொஞ்சம் கூடுதலாக இருக்கும். அதைவிட ரகசிய போலீஸ் 115 படம் திரையிட்ட அரங்குகளில், ஏசி இல்லாத அரங்குகளில் குறைவான கட்டணம்தான்.
அப்படி இருந்தும் வெறும் 10 நாட்களில் சென்னையில் ரூ.2 லட்சத்து 37 ஆயிரத்துக்கும் அதிகமான வசூலை ரகசிய போலீஸ் வாரிச் சுருட்டினார் என்றால், M(aximum). G(uarantee). Ramachandran -ஐ வசூல் சக்ரவர்த்தி என்று அழைப்பதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்?
சென்னையில் 10 நாட்களில் வசூலான தொகையையும், வசூல் சக்ரவர்த்தி என்று மக்கள் திலகத்தைக் குறிப்பிட்டும் 1968-ல் படம் வெளியானபோது நாளிதழில் கொடுக்கப்பட்ட விளம்பரம்.
இதில், இன்னொன்று... எங்க வீட்டுப் பிள்ளை படம் வெளியானபோது காசினோவில் மட்டுமே ரூ.5 லட்சத்துக்கும் அதிகமாக வசூலித்தது என்று முதலில் சொல்லியிருந்தேன். அதற்கு ரகசிய போலீஸ் விளம்பரம் போல விளம்பர ஆதாரம் கிடைக்கவில்லை. அப்போதைய ரசிகர்கள் குறித்து வைத்திருந்தது மற்றும் நோட்டீஸ்கள்தான் உள்ளது.
ஆனால், 10 நாட்களில் 5 தியேட்டர்களில் ரகசிய போலீஸ் 115 படம் 2 லட்சத்து 37 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வசூலித்தது என்றால், காசினோவில் 211 நாட்கள் ஓடிய எங்க வீட்டுப் பிள்ளை படம் ரூ.5 லட்சத்துக்கும் அதிகமாக (காசினோவில் மட்டும்) நிச்சயம் வசூலித்திருக்கும் என்று புரிந்து கொள்ள கணக்கில் புலியாக இருக்கத் தேவையில்லை. பச்சைக் குழந்தைக்கும் புரியும்.
இப்போது, தேவி வளாகத்தில் எங்க வீட்டுப் பிள்ளையை திரையரங்க உரிமையாளர்களே திரையிட விரும்பி விநியோகஸ்தரை அணுகியதன் சஸ்பென்சை உடைப்போம்...
கடந்த 2-ம் தேதி புதிய படம் வெளியாகி உள்ளது. தேவி வளாகத்திலும் அந்தப் படம் திரையிடப்பட்டது. படத்துக்கு ஒற்றை இலக்கத்திலேயே ஆட்கள் வந்துள்ளனர். பதறிப் போன தியேட்டர் நிர்வாகம் எங்க வீட்டுப் பிள்ளை படத்தை விநியோகஸ்தரிடம் விரும்பிக் கேட்டு வாங்கி தேவி பாலாவில் திரையிட்டுள்ளது.
முதலில் தேவி நிர்வாகம் மறுத்ததால்தான் எங்க வீட்டுப் பிள்ளை படம் 2-ம் தேதி தேவி பாலாவில் வெளியாகவில்லை. இரண்டு நாள் கழித்து 4-ம் தேதி ஞாயிற்றுக்கிழமைதான் திரையிடப்பட்டது. அதிலும் நாளிதழ் விளம்பரத்தில் பகல் 12.30 மணி என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆனால், படத்துக்கு மற்ற திரையரங்குகளில் கிடைத்த வரவேற்பால் முக்கிய நேரமான மாலைக் காட்சியாக 7 மணிக்கு திரையிட்டு வருகின்றனர். இதுதான் தேவி வளாகத்தில் எங்க வீட்டுப் பிள்ளை படம் வெளியான விதத்தின் சுவாரசியம்.
ஒரு சில புதிய படங்களை விடவும் மக்கள் திலகத்தின் பழைய படங்கள் வசூலைக் கொடுக்கும் என்பதற்கும் அதனால்தான் விநியோகஸ்தர்களும் திரையரங்கு உரிமையாளர்களும் (ஏசி திரையரங்குகள், மால்களில் உள்ள திரையரங்குகள் கூட) விரும்புகிறார்கள் என்பதற்கும் இப்போதைய உதாரணமாக திகழ்கிறார் தமிழக மக்கள் சொந்தம் கொண்டாடும் எங்க வீட்டுப் பிள்ளையான மக்கள் திலகம்.
1968-ல் 50 ஆண்டுகளுக்கு முன்பு ரகசிய போலீஸ் 115 படம் வெளியானபோது அன்று மட்டுமல்ல, எல்லா வகையறாக்களையும் ஓரம் கட்டி, ஏழைகளின் இதய தெய்வம் இன்றும் வசூல் சக்ரவர்த்தியாக திகழ்கிறார் . என்றும் திகழ்வார்.
நன்றி - அகில உலக எம்ஜிஆர் மன்றம் முகநூல்
Bookmarks