Page 318 of 401 FirstFirst ... 218268308316317318319320328368 ... LastLast
Results 3,171 to 3,180 of 4001

Thread: Makkal thilagam mgr part 22

  1. #3171
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Π*оссия
    Posts
    0
    Post Thanks / Like
    திருக்குவளை மீ.லதா.



    அள்ளி தந்த கைகள் எங்கே ,
    அரவணைத்த நெஞ்சம் எங்கே,
    சேற்றில் மலர்ந்த செந்தாமரை போல தமிழரின் நல்வாழ்விற்காய் பிறந்தாரோ நல் மாணிக்கமாக எம் ஜி ஆர். அவர் சிம்ம குரல் எடுத்து கர்ஜனை செய்ய வேண்டாம். ஒலிப்பெருக்கியில் ஒரு குரல் கொடுத்தால் போதும் என் இரத்தத்தின் இரத்தங்களே… என் இனிய உடன் பிறப்புகளே என்று சொன்னாலே போதும்… ஒடி வரும் மக்கள் வெள்ளத்தில் அவர் திணறிய நாட்கள் எத்தனையோ! பொன்மன செம்மலாய் பூமிதனில் இன்றும் ஒளிரும் தீபங்களாய் இருப்பவரை பற்றி எழுதுகிறேன். அவர் மீது அன்பு கொண்ட நான்.

    இலங்கையில் உருவாகி தமிழகத்தில் நிலைக்கொண்ட புயலாக வந்தார். அன்பு என்ற மந்திரத்தில் அடங்கிப் போனோம் நாம்.

    ஏழையின் பங்காளனாக அவர் இருந்தார். ஏட்டுக் கல்வியை ஏழைக்கும் அளித்த காமராசரின் வாரிசாக வந்து கொடுத்தார் இலவசமாய்.

    தாய் சத்தியபாமாவின் கண்டிப்பான வளர்ப்பும், நேசமான உறவும், பாசமான பரிவும் உலகை ஆள வைத்தவையோ??

    1936ல் சதிலீலாவதி என்னும் திரைப்படத்தில் முதலில் நடித்திருந்தும், 1947 ல் அவர் நடித்த ராஜகுமாரி படம் வெளிவரும்வரை அதிகம் புகழ் கிடைக்கவில்லை. தொடர்ந்து வந்த அடுத்த 25 ஆண்டுகள், தமிழ் திரைப்பட உலகில் மிக முக்கியமானவர்களில் ஒருவராக விளங்கினார். இவருடைய சக நடிகர்களுள் ஒருவரான எம். ஆர். ராதாவினால் சுடப்பட்டுத் தெளிவாகப் பேசும் திறனை இழந்தபோதும் அவருடைய நட்சத்திர வலிமை குறையவேயில்லை.

    இச்சம்பவத்திற்குப் பின்னர் முதன் முதலாக வெளிவந்த திரைப்படம் காவல்காரன். இது மாபெரும் வெற்றிப் படமாகவும், திரையுலகில் அவரது ஆளுமையை மீண்டும் நிலை நிறுத்தும் நிகழ்வாகவும் அமைந்தது. 1971 ஆம் ஆண்டின் அகில இந்திய சிறந்த நடிகராக, எம்.ஜி. ஆரை மத்திய அரசு தேர்வு செய்து, “பாரத்” விருதை வழங்கியது. இது சத்யா மூவிஸ் தயாரிப்பான “ரிக்சாக்காரன்” படத்தில் நடித்ததற்காக கிடைத்தது. தமிழ்நாட்டில் மொத்தம் 12 தியேட்டர்களில் 100 நாட்கள் முதல் 150 நாட்கள் வரை ஓடி, வசூலைக் குவித்தது படம்.

    அவர் நடித்துக் கடைசியாக வெளி வந்த திரைப்படம் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்.

    1972-இல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியொன்றை அவர் ஆரம்பித்தார். பின்பு அக்கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமாக மாறியது. முதன் முதலாக போட்டியிட்ட திண்டுக்கல் பகுதியில் பெரும் வெற்றி பெற்றது.

    திரைப்படங்களின் மூலம் அவரடைந்த புகழும், அவருடைய வசீகரமான தோற்றமும், சமூகத் தொண்டனாகவும், ஏழைகள் தோழனாகவும், கொடையாளியாகவும், வீரனாகவும் நடித்ததன் மூலம் பெற்றுக் கொண்ட நற்பெயரும், அவர் மிக விரைவில் மக்களாதரவைப் பெற வழிவகுத்தது. 1984 ல் கடுமையாக நோய்வாய்ப்பட்டும், தமிழக அரசியல் வரலாற்றில் தேர்தல் பிரசாரத்திற்கே வராமல் முதலமைச்சர் ஆன ஒரே முதல்வரானார் எம்.ஜி.ஆர். இவரது ஆட்சிக்காலத்தில் மதுவிலக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

    1987 வரை 10 ஆண்டுகள் தொடர்ச்சியாக முதலமைச்சர் பதவியை வகித்துப் பதவியிலிருக்கும் போதே காலமானார். மறைவிற்குப் பின் அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

    எம்.ஜி.ஆர் எத்தனையோ குழந்தைகளுக்குப் பாதுகாவலராக இருந்து படிக்கவைத்தார். அதில் முக்கியமான இரண்டு பேர், அரசியலைக் கலக்கிய துரைமுருகன். சினிமாவில் வலம் வந்த கோவை சரளா என்று எம்.ஜி.ஆர் 25ல் ஆனந்த விகடனில் வெளி வந்தது.

    mgr“இருந்தாலும் மறைந்தாலும் பெயர் சொல்ல வேண்டும்
    இவர்போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்”

    “மாபெரும் சபைதனில் நீ நடந்தால் – உனக்கு
    மாலைகள் விழவேண்டும்
    ஒரு மாற்றுக்குறையாத மன்னவன் இவனென்று
    போற்றிப் புகழ வேண்டும்”

    இவை வெறும் பாடல் வரிகள் அல்ல. சாகாவரம் பெற்ற ஒரு சகாப்தத்தைப் பற்றிய ஆழமான பதிவுகள். அந்த சகாப்தம் தான் எம்.ஜி.ஆர்.

    இருபதாம் நூற்றாண்டில் எம்.ஜி.ஆர் என்ற இந்த மூன்றெழுத்து மந்திரச் சொல், தமிழகத்தை, இந்தியாவை, ஏன் உலகின் ஒரு பகுதியை எவ்வாறு ஆட்டிப்படைத்தது. மக்களை எப்படி ஈர்த்திருந்தது என்பதை நம்மில் பலரும் அறிவோம்.

    எழுபதுகளில், ஒரு ஆங்கிலப் பத்திரிகை, இந்தியாவில் மக்களின் பேரன்பைப் பெற்ற பெருமகன்களாக இருவரைச் சுட்டியது. ஒருவர் பண்டித ஜவஹர்லால் நேரு. மற்றொருவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.

    நாடக அரங்கிலும், திரையுலகத்திலும், அரசியல் பொதுவாழ்விலும் எவராலும் வெல்ல முடியாத சக்தியாக, மக்கள் மனம் கவர்ந்த முடிசூடா மன்னனாக வலம் வந்தவர் எம்.ஜி.ஆர். நின்றால் பொதுக்கூட்டம். நடந்தால் ஊர்வலம். அமர்ந்தால் மாநாடு…என்பார்களே…. அது முழுக்க முழுக்க எம்.ஜி.ஆருக்கு பொருந்தும்.

    மதத்தால், இனத்தால், மொழியால் அவர் யார் என்பதை விட, மனத்தால், குணத்தால், எண்ணத்தால், செயலால் ஒரு மாபெரும் மனிதராக வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்.

    குழந்தைத் தொழிலாளராக நாடகத்துறையில் அடியெடுத்து வைத்த எம்.ஜி.ஆரின் அந்தப் பாலப் பருவத்திலேயே பட்ட துன்பங்களும், துயரங்களும் ஏராளம், ஏராளம்.

    “உழைப்பவரே உயர்ந்தவர்” எனும் உன்னத லட்சியத்தை கொள்கையாகக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர் “ஓடி ஓடி உழைக்கணும், ஊருக்கெல்லாம் கொடுக்கணும்” எனும் பாடல்களுக்கு ஏற்ப வாழ்நாளெல்லாம் தாம் பாடுபட்டு உழைத்துச் சேர்த்த பணத்தை வாரிக்கொடுத்து வள்ளலானார். அந்த வள்ளலின் பொன்மனத்தைப் போற்றித்தான் திருமுருக கிருபானந்த வாரியார் எம்.ஜி.ஆருக்கு பொன்மனச் செம்மல் என்ற பட்டத்தை வழங்கினார்.

    திரையுலகிலும், அரசியல் பொதுவாழ்விலும் எம்.ஜி.ஆர் சந்திக்காத சோதனைகள் இல்லை. அத்தனையையும் முறியடித்து சாதனைகள் பல புரிந்தவர்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3172
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Π*оссия
    Posts
    0
    Post Thanks / Like
    எஸ். பழனிச்சாமி.



    லண்டனில் பி.பி.சி. தமிழோசை ரேடியோவிற்கு முதன் முதலாக அளித்த பேட்டியில் எம்.ஜி.ஆர் அவர்கள் தன்னுடைய வாழ்க்கை வரலாற்றை, சுருக்கமாக இப்படிச் சொல்லி இருந்தார்.

    ‘இலங்கையிலே பிறந்து கேரளாவில் வளர்ந்தேன். என்னுடைய இரண்டரை வயதில் என் தந்தை இறந்து விட்டார். என்னுடைய தந்தையும், பாட்டனாரும் பெரும் லட்சாதிபதிகளாக இருந்தவர்கள். பெரும் பணக்காரர்கள். வசதியும் வாய்ப்பும் மிகுந்தவர்கள். ஆனால் கேரளத்தில் மருமக்கத்தாயம் என்ற ஒரு வழக்கம் இருந்த காரணத்தால் அதாவது குழந்தைகளுக்கு தன் தந்தையின் சொத்துக்கள் இல்லை என்ற காரணத்தால் நாங்கள் அனாதைகளாக்கப்பட்டோம். என் தாயினுடைய அரவணைப்பில்தான் நாங்கள் வளரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. என் தந்தை மாஜிஸ்ட்ரேட்டாக இருந்தார், பிரின்சிபாலாக இருந்தார். அவர் பிரின்சிபாலாக இலங்கையிலே பணியாற்றும்போது கண்டியில்தான் நான் பிறந்தேன். தந்தை இறந்தபிறகு ஐந்து வயதிற்குள்ளேயே தமிழகத்துக்கு வந்து விட்டேன். முதன்முதலாக நான் எழுதப் படிக்கக் கற்றுக் கொண்ட மொழி தமிழ். எனக்கு அறிவு தெரிந்த நாள் முதல் பார்த்துக்கொண்டும் பழகிக் கொண்டும் இருக்கின்ற மக்கள் தமிழ் மக்கள். என் உடம்பில் இத்தனை ஆண்டுகளாக குருதி வளர்ந்திருக்கிறது, என் உடலில் சூடு தணியாமல் இருக்கிறதென்றால், நான் வளர்ந்திருக்கிறேன், வாய்ப்புப் பெற்றிருக்கிறேன் என்றால் அது தமிழ் கூறும் நல்லுலகம் தந்த வாய்ப்பாகும். ஆகவே அந்த தமிழ் மக்களுக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்ற ஆர்வம் என்னை அறியாமலே என்னை உந்தித் தள்ளிக் கொண்டிருக்கிறது. என் தாயின் அரவணைப்பில் வளர்ப்பில் வளர்ந்த காரணத்தால் எனக்கு அதிக கல்வி கற்றுக் கொள்ள முடியவில்லை. ஏழாவது வயதில் நாடகக் கம்பெனியில் சேர்ந்து விட்டேன். அதன் பிறகு 1935 ல் சினிமாவில் நடிக்கத் துவங்கினேன். 1929-30 என்ற கால கட்டத்திலேயே நான் காங்கிரஸ் கட்சியில் அங்கத்தினராக இல்லாவிட்டாலும், ஒரு ஊழியனாக இருந்தேன். 1933-34 காலகட்டத்தில் அதில் அங்கத்தினராக பதிவு செய்து கொண்டு விட்டேன். அதன் பிறகு சில நாட்கள் இருந்து, எனக்கு அங்கே செயல்பட்ட முறைகளிலே குறைபாடுகள் கண்டதாக எண்ணியதால், விருப்பு வெறுப்பற்ற நிலையில் நான் வளர வேண்டும் என்று நினைத்த காரணத்தால் அதிலிருந்து விலகி, அரசியலில் எந்தவித தொடர்பும், ஈடுபாடும் இல்லாமல் இருந்தேன். ஆனால் அன்று முதல் நான் ஒரு தேசியவாதியாக எப்பொழுதுமே இருந்து கொண்டிருப்பவன். அது மட்டுமல்ல மகாத்மாவின் கொள்கையிலே பிடிப்பும் நம்பிக்கையும் கொண்டவன். அவைகளையெல்லாம் ஒருங்குசேர நான் தமிழகத்திலே கண்ட தலைவன் பேரரறிஞர் அண்ணாதான். அவருடைய புத்தகங்களைப் படித்து விட்டு அவருடைய நியாயமான கோரிக்கைகள்தான் தமிழகத்துக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்று கருதியதால் திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர்ந்தேன். அண்மையில் 1972ம் ஆண்டு அக்டோபர் 10ந் தேதி அன்று குற்றமற்ற நான் வெளியேற்றப் பட்டேன். வெளியேற்றப்பட்ட பிறகு தொண்டர்களுடைய, மக்களுடைய விருப்பத்தின்படி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற அமைப்பை நான் உருவாக்கினேன். இப்பொழுது அதில் நான் முதல் தொண்டனாக இருக்கின்றேன் என்று சொல்லுகின்றார்கள். நான் அதிலே பணியாற்றிக் கொண்டிருக்கின்றேன்.’

    அதே பேட்டியில் பிரிட்டனில் உள்ள மக்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் உங்களுடைய அனுபவம் என்ன என்ற கேள்விக்கு எம்.ஜி.ஆர் அவர்கள் இப்படி பதில் சொல்லியிருப்பார்.

    ‘1930ம் ஆண்டு மதுவிலக்குப் போராட்டத்தில் மறியல் செய்த நேரங்களில் எல்லாம் பிரிட்டிஷ் ஆதிக்கம் வெளியேற வேண்டும் என்ற எண்ணத்தோடு போராடியவன். அதே பிரிட்டனுக்கு வந்து இங்கு மக்களைக் காணும்போது, இன்று காமன்வெல்த் அமைப்பிலே அங்கத்தினரான இந்தியக் துணைக்கண்டத்துக்கும் பிரிட்டனுக்கும் உள்ள உறவையும், பிரிட்டிஷ் மக்கள் இந்தியர்களை மதிக்கின்றார்கள் என்பதையும் இங்கு நான் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். ஆண்டான் அடிமை என்பது நிலைமை மாறி, சுதந்திர பங்காளி என்ற நிலையிலே இந்தியரும் ஆங்கிலேயரும் இணையும் போது அதிலே மகிழ்ச்சியும் பெருமிதமும் இருக்கிறது என்பதை நான் இங்கு காணுகிறேன்.

    பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள், இந்திய மக்களுக்கு அவர்களது மொழியாலும், செயலாலும் இந்தியர்களின் சுதந்திர உணர்வைத் தூண்டி விட்டார்கள். அவர்கள் நமக்கு அரசியல் சிந்தனைக்கு ஆக்கம் அளிக்கக்கூடிய சூழ்நிலையை உருவாக்கியவர்கள் என்று நான் சொல்வேன். ஆங்கிலத்தை அடிப்படையாகக் கொண்டு, ஆங்கிலேயர்கள் மூலமாக ஆங்கிலம் கற்று உலக விஷயங்களையும், விஞ்ஞான உயர்வையும் அறிந்து பிறகு அவர்களை நாட்டை விட்டு வெளியேற்ற ஆங்கிலம் பயன்பட்டது.’

    இந்தப் பேட்டியில் இருந்து எம்.ஜி.ஆர் அவர்களுக்கு இருந்த தமிழ் மக்களுக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தையும், நம் இந்திய நாட்டின் மீது அவருக்கு உள்ள பற்றையும் தெரிந்து கொள்ள முடிகிறது. அவர் அரசியலில் வெற்றி பெற்றதற்கு அடிப்படையான விஷயங்கள் என்ன என்பது இப்போது தெரிகிறதல்லவா?

    எம்.ஜி.ஆர் அவர்களின் வாழ்க்கை வரலாறும், அவருடைய திரைப்பட மற்றும் அரசியல் செயல்பாடுகளும் தமிழகத்தோடும், தமிழ் மக்களோடும் இரண்டறக் கலந்து விட்ட ஒன்றுதான். அனைவரும் அறிந்த விஷயங்கள்தான். இன்று வரை எம்.ஜி.ஆர் என்ற மந்திரச் சொல் தமிழர்களிடையே எத்தகைய மதிப்பையும் மரியாதையையும் பெற்றிருக்கிறது என்பதும் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

    சிறு வயதில் வறுமையில் வாடினாலும் பல நல்ல குணங்களை அவர் தன் தாயிடமிருந்து கற்றுக் கொண்டார். அந்தக் குணங்களே அவரை வாழ்க்கையில் உச்சத்திற்கு கொண்டு சென்றது. தன் தாயிடம் அவர் கொண்ட அன்புதான் பின்னாளில் அரசியலில் காலடி எடுத்து வைத்த போது தாய்க்குலத்தின் பேராதரவைப் பெற்றுத் தந்தது.

    ஆரம்ப காலத் திரைப் படங்களிலும் தாய் சொல்லைத் தட்டாதே, தாயைக்காத்த தனயன், தாய்க்குத் தலை வணங்கு, தாய்க்குப் பின் தாரம், தாய் மகளுக்கு கட்டிய தாலி, தெய்வத்தாய், தாயின் மடியில், கன்னித்தாய், குடியிருந்த கோயில், ஒரு தாய் மக்கள் என்று தாயை முன்னிலைப் படுத்தியே அவருடைய படங்களின் தலைப்புகள் அமைந்தன. மாபெரும் வெற்றியையும் பெற்றுத் தந்தன.

    சினிமாத்துறையைப் பொருத்தவரை நடிப்பு மட்டுமல்லாது, தயாரிப்பு, இயக்கம், வினியோகம் என்று பல துறைகளிலும் ஈடுபட்டு வெற்றி பெற்றார். சினிமாவைப் பற்றி அணுஅணுவாக அறிந்து வைத்திருந்தார். பொதுமக்களின் பார்வையிலிருந்து சினிமாவை அணுகினார். எந்த மாதிரி கதையம்சம் கொண்ட படங்கள் மக்களைக் கவரும் என்பதை நன்றாக தெரிந்து வைத்திருந்தார். அந்த ஞானமே திரையுலகில் அவரது மாபெரும் வெற்றிக்கு வழிவகுத்தது. அவர் மொத்தம் 136 படங்கள் நடித்திருக்கிறார். அதில் 86 படங்கள் 100 நாட்களுக்கு மேல் ஓடி வெற்றி வாகை சூடி இருக்கிறது.

    சிறு வயதில் பிழைப்புக்கான ஒரு தொழிலாக நாடகங்களில் நடிக்க ஆரம்பித்து, பின் சினிமாவில் நுழைந்த எம்.ஜி.ஆர் அவர்கள் ஒரு கட்டத்தில் திரைப்படத் துறையில் வல்லுனர் ஆனார். தான் நடிக்கும் திரைப் படங்களில் கதை, வசனம், பாடல்கள், இசை, இயக்கம் என்று ஒவ்வொன்றிலும் அவரது தாக்கம் இருக்கும். அவர் சொல்வது போல் எல்லாம் அமைந்து படம் வெளியானால் நிச்சயம் அந்தப் படம் வெற்றிப் படமாக இருக்கும். அந்த அளவிற்கு அவரது அறிவாற்றலும், ஆளுமையும் வியாபித்து இருந்தது.

    அவருடைய திரைப்பட வெற்றி ஃபார்முலாவை பயன்படுத்தி இன்றும் ஒரு சில படங்கள் வெற்றி அடைகின்றன. இருந்தாலும் அவருடைய திறமைக்கும், ஈடுபாட்டிற்கும் சமமாகச் சொல்லக் கூடிய ஒருவரை காண்பது அரிது. திரைப்படங்களில் அவருடன் பணியாற்றிய யாருடைய பேட்டியை படித்தாலும், ‘எம்.ஜி.ஆர் அவர்கள் யாரைச் சந்தித்தாலும், சாப்பிட்டீர்களா என்றுதான் முதலில் கேட்பார்’ என்று சொல்லி இருப்பார்கள். அந்தளவுக்கு மனிதநேயத்தோடு வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்.

    இசையமைப்பாளர்கள், இசையமைக்கும் போது சரணத்துக்கும், பல்லவிக்கும் என பலப்பல மெட்டுக்களை எம்.ஜி.ஆரிடம் போட்டுக் காண்பிப்பார்களாம். ஆனால் அவரோ, இதில் கொஞ்சம் அதில் கொஞ்சம் என்று எடுத்து இதை சரணத்திலும், அதைப் பல்லவியிலும் போடுங்கள் என்பாராம். இசையமைப்பாளர்களுக்கு அது வினோதமாக இருந்தாலும் அதே போல் செய்து கொடுப்பார்களாம். அந்தப் பாடல் வெளியாகும்போது மிகப்பெரிய வரவேற்பைப் பெறுமாம். எம்.ஜி.ஆரின் படப்பாடல்கள் இன்றளவும் ரசிக்கத் தக்கதாக இருப்பதற்குக் காரணம் அவருடைய ஞானம்தான்.

    எம்.ஜி.ஆருக்காக பெரும்பாலான பாடல்களைப் பாடிய மறைந்த T.M. சௌந்திரராஜன் அவர்கள், எம்.ஜி.ஆருக்காகவே தன் குரலை சிறிது மாற்றிப் பாடியதாக ஒரு பேட்டியில் சொல்லி இருப்பார். தனக்குத் திருப்தி ஏற்படும் வரை பாடகர்களைப் பாட வைத்து, பிறகு அவர்களுக்கு வழக்கமான சம்பளத்துடன், மனமுவந்து சன்மானமும் கொடுப்பார் என்றும் அவர் சிலாகித்துச் சொல்லி இருப்பார்.

    தன்னுடைய படத்தின் கதைகளில் மனிதாபிமானமும், தர்மமே இறுதியில் வெல்லும் என்ற கருத்துடைய காட்சிகளும் அமையும்படி பார்த்துக் கொண்டார். தன்னுடைய பாடல்களில் தன் கொள்கைகளையும், லட்சியங்களையும் வெளிப்படுத்தினார். நேர்மறைச் சிந்தனைகளையும், உற்சாகம் கொடுக்கும் வார்த்தைகளையும் அவருடைய திரைப்படப் பாடல்களில் காணலாம்.

    mgr



    உன்னை யறிந்தால் நீ உன்னை யறிந்தால்
    உலகத்தில் போராடலாம்
    உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை
    வணங்காமல் நீ வாழலாம்
    மானம் பெரிதென்று வாழும் மனிதர்களை
    மானென்று சொல்வதில்லையா – தன்னைத்
    தானும் அறிந்துகொண்டு ஊருக்குச் சொல்பவர்கள்
    தலைவர்கள் ஆவதில்லையா
    மாபெரும் சபைதனில் நீ நடந்தால்
    உனக்கு மாலைகள் விழ வேண்டும் – ஒரு
    மாற்றுக் குறையாத மன்னவன் இவனென்று
    போற்றிப் புகழ வேண்டும்

    என்று திரைப்படப் பாடலுக்கு வாயசைத்து நடித்தவர், அந்தப் பாடல் சொல்லும் அர்த்தத்துக்கு ஏற்ப வாழ்ந்தும் காட்டினார்.

    உழைப்பாளி வர்க்கத்தின் ஒரு அங்கமாக அவர் நடித்த பெரும்பாலான படங்களின் கதாபாத்திரங்கள், அவரை தத்தம் குடும்பத்திலும், சமூகத்திலும் ஒருவர் என்று மக்கள் கருதும்படி செய்தது. அதனால் மிக எளிதாக மக்கள் மனதைக் கவர்ந்தார் எம்.ஜி.ஆர் அவர்கள்.

    தேவை உள்ளவர்களுக்கு அவர் செய்த உதவிகள் வள்ளல் என்ற பட்டத்தை அவருக்குப் பெற்றுத் தந்தன. மக்களின் அடிப்படைத் தேவைகளுக்காகப் போராடும் வகையிலான அவரது கதாபாத்திரங்கள் அவரை மக்களின் தலைவராக முன்னிறுத்தி மக்கள்திலகம் என்ற பட்டத்தையும் பெற்றுத் தந்தது.

    இது போன்ற அவரின் செயல்பாடுகள் மக்கள் மத்தியில் அவரைப் பற்றி மிக உயர்ந்த பிம்பத்தை ஏற்படுத்தியது. அதுவே சினிமாவில் மட்டுமல்லாது, பின்னாளில் அவரது அரசியல் பிரவேசத்தின் போதும் மாபெரும் ஆதரவையும் வெற்றியையும் அவருக்குப் பெற்றுத் தந்தது.

    சிறுவயதில் பசியின் கொடுமையை அனுபவித்த காரணத்தினால், அவர் முதல்வராகப் பதவி ஏற்ற பிறகு, பள்ளியில் சத்துணவுத் திட்டத்தை கொண்டு வந்து, படிக்கும் குழந்தைகள் பசியால் வாடாது இருக்க ஏற்பாடு செய்தார். அது இன்றளவும் தொடர்கின்றது. மதிய உணவுத் திட்டம் பெருந்தலைவர் காமராஜர் உருவாக்கியது என்றாலும், எம்.ஜி.ஆர் அதை விரிவு படுத்தினார்.

    பாரத், டாக்டர் போன்று எத்தனையோ பட்டங்களையும் பதவிகளையும் பெற்றவர் எம்.ஜி.ஆர். இறுதியில் அவரது மறைவுக்குப் பின் இந்திய அரசின் மிக உயரிய விருதான பாரத ரத்னா பட்டமும் அவருக்கு வழங்கப்பட்டது. ஒரு நடிகராகவும், மக்கள் தலைவராகவும் வாழும் போதும் மறைந்த பின்னும் மக்கள் மனத்தில் நிலைபெற்றிருப்பவர் எம்.ஜி.ஆர். இன்னும் பல காலம் அவருடைய புகழ் நிலைத்து நிற்கும் என்பது உறுதி.

    பொன்மனச் செம்மல் என்றும், புரட்சித் தலைவர் என்று போற்றப்படும் எம்.ஜி.ஆர் அவர்களின் வாழ்க்கை, போராட்டங்களை எதிர்கொண்டு வாழ்க்கையில் முன்னேறி சாதனை படைக்கத் துடிக்கும் எல்லோருக்கும் மிகச்சிறந்த பாடமாக இருக்கும் என்பது நிச்சயம்.

  4. #3173
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Π*оссия
    Posts
    0
    Post Thanks / Like
    சுமதி ரவிச்சந்திரன்.



    “மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் அது
    முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்.”

    தமிழ், ஈழம், கடமை, அன்பு, பாசம், புகழ், நன்றி, காதல், நட்பு, உதவி, கல்வி, பரிசு, தானம், கருணை, மனம் என்ற அனைத்து வகையிலும் ‘கரம்’ என்ற மூன்றெழுத்தில் மக்களின் மனதில் நிலைத்து நிற்கும் புரட்சித் தலைவர் என்று அனைவராலும் பாராட்டப்பட்ட மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன் என்ற எம்.ஜி. ஆர். என்ற ‘பொன்மனச்செம்மல்’ அவர்களின் மக்களின் மனத்தில் நிறைந்த தன்மையை இக்கட்டுரையின் வழி இயம்புவதில் பெருமையடைகிறேன்.

    mgrமூன்றெழுத்து வலிமைமிகு, பெருமைமிகு, தருமம் மிகுந்த தன்னுடையச் சிவந்த கரங்களால் தனிப்பெரும் பெருமை பெற்ற கலைமாமணி, பாரதரத்னா அவர்களின் நினைவுகளும் கட்டுரை வடிவில் தருவதில் பெருமை செய்யும் ‘வல்லமை’ இதழுக்கும் வணக்கங்கள்.

    “மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்” என்று திரைப்படப் பாடலின் வரிகளிள் தவழ்ந்துவருவது இனிமையாகும் என்று நினைத்து வியந்து நின்றதும் உண்டு. “மூச்சு” என்ற மூன்றெழுத்து வழி ஈழம் – பொன், பெருமை மனிதர், தங்கமனிதர் என்ற பெருமையும் எம்.ஜி. ஆர். என்ற பெயரின் முதல் எழுத்து சுருக்கத்தில் வியந்து நிற்கும் அளவுக்கு நடிப்பிலும், கொடையிலும் , அன்பு, பண்பு, பாசம், உபச்சாரம் என்ற அனைத்து அளவிலும் தனிப்பட்ட மனிதராக வாழ்ந்து மறைந்த, மாபெரும் சபைகளின் வழி நடந்து ‘ புகழ் மாலைகள் ‘ ஏற்றுக்கொண்டு நம்மிடையே வாழ்ந்தவர்.

    ஈழம் என்பது சிங்கதேசம் என்பது மட்டுமல்ல. ஈழம் – பொன் , பொன் தீவில் பிறந்த மனிதர் ‘பொன்மனச்செம்மல் ‘என்பதில் சாலவும் பொருத்தமானவர். தவப்புதலவன் பிறந்த நாளின் எண்ணான ‘ ஏழு ‘ என்பதும் ஏற்றமிகு வாழ்க்கையின் அஸ்திவாரமாக அமைந்தது .

    1917 பிறந்த நாள் , சுறவம்(சனவரி) 17, 1917 இல் பிறந்த தவப்புதல்வர் ஈழம், கண்டி, நாவலப்பிட்டியில் பிறந்து ஈழத்திற்கும் பெருமை படைத்தவர். மலையாளத்தில் வாழ்ந்தாலும் தமிழின் வழியான மலையமும் சேர்ந்தே சிறப்பாகியது.
    1927 தொடங்கிய பயணத்தில் தன்னுடைய 20 வயதில் (1937) திரையுலகில் பிரவேசித்து, நாடகங்களில் நடித்து,
    1947 முதல் கதாநாயகனாக பரிமளிக்கும் திறமை பெற்றவர். நடிப்புத் திறமையில் திறமையையும், பாடல்கள் வழியே பாமரனும் பாடும் எளிமையான நடிப்பின் ஊடாக அனைவர் மனத்திலும் பிரவேசித்தவர்.
    1967 திராவிடக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் என்ற நிலையில் உயர்ந்தார்.
    1977 தி.மு.க. அண்ணாவின் மறைவிற்குப் பிறகு கருணாநிதியின் பிரவேசத்தில் கருத்து வேறுபாடு காரணமாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமாகப் பிரிந்து ஆண்டிப்பட்டியில் வெற்றிபெற்று ‘முதல் அமைச்சர் ‘ என்ற முதல்வர் பதவி வகித்தார்.
    1987 பத்து ஆண்டுகள் தொடர்ந்து முதல்வர் பதவி வகித்த ‘ பொன்மனச்செம்மல்’ தனது எழுபதாவது வயதில் இந்த அரசியல் உலகம், திரையுலகம், தமிழ்நாடு என்ற அனைத்திலும் பெருமை பெற்று மனத்தில் நிறைந்த மக்கள்திலகம்’ என்ற மாபெரும் புகழுடன் உடல்நலக் குறைவினால் மறைந்தார். ஏழ்பிறப்பு என்ற நிலையில் ‘ தேவர்’ என்ற நிலைக்குப் பிறகு மக்கள், விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம் இந்த நிலையில் மக்கள் என்ற இரண்டாவது நிலையின் வழி பிறக்கும் அனைவருக்கும் கிட்டாத பிறப்பாகப் பிறந்து, பிறந்த பயனையும், வாழ்கின்ற பயனையும் மக்களுக்கு கொண்டு செல்லும் பெரும்பேறு அனைவருக்கும் கிட்டுவதில்லை.. அப்படி கிடைத்த பாக்கியம் பெற்ற மனிதர்கள் ‘பெருமைமிகு சிலரின்’வரிசையில் ‘கலைச்சுடர் ‘என்று தமிழ் நாட்டிலும், நிருத்தியச் சக்கரவர்த்தி என்று ஈழம் ரசிகர்களாலும் பாராட்டப்பட்டு வாழும் பொழுதிலே ‘நிறைவான பெருமை’ அடைந்தவர்.

    திரைப்படச் சேவை :
    இதயக்கனி – அறிஞர் அண்ணா
    புரட்சி நடிகர் – கலைஞர். மு. கருணாநிதி
    நடிக மன்னன் – சென்னை ரசிகர்கள் (சி.சுப்ரமணியம்)
    மக்கள் நடிகர் – நாகர்கோவில் ரசிகர்கள்
    பல்கலை வேந்தர் – சிங்கப்பூர் ரசிகர்கள்
    மக்கள் கலைஞர் – காரைக்குடி ரசிகர்கள்
    கலை அரசர் – விழுப்புரம், முத்தமிழ்க் கலைமன்றம்
    கலைச்சுடர் – மதுரை தேகப்பயிற்சிக் கலைமன்றம்
    கலைமன்னர் – நீதிபதி ராஜமன்னர்
    கலைமன்னன் – சென்னை ரசிகர்கள்
    கலை வேந்தர் – மலேசிய ரசிகர்கள்
    திரை நாயகன் – சேலம் ரசிகர்கள்
    இவ்வாறு திரையுலகின் பிரவேசத்தில் நடிப்பின் திறமையின் மக்கள் கொடுத்த புகழ் பட்டங்கள் . திரையுலகின் பணிகளில் அவரின் நடிப்பு மட்டும் அன்றி, திரைபடத் துறையில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கும் உதவி செய்து பெருந்தன்மையுடன் கருணையும், எளிமையும் கொண்ட மனிதராகத் திகழ்ந்தார்.

    பொதுமக்களின் சேவையில் அரசியலில் முழு மூச்சாகக் கொண்டு அரசியல் பிரவேசத்தில் ஆர்வமும் , அரவணைத்துச் செல்லும் தன்மையும் செம்மலின் குணங்களுள் ஒன்றாக இருந்தது. அவர் சாப்பிடும் முன்பு உடன் வந்த வாகன ஓட்டுனர் முதற்கொண்டு ‘உணவு’ விசயத்தில் கவனமாகப் பார்த்துக் கொள்வார். ஒருமுறை அவர் ஒரு நடிப்புத் தளத்திற்காக வெளியூர் சென்றபோது ‘பயணவிடுதியின் பணிச்சிறுவன்’ கேட்ட கேள்விக்கு அவசரமாகப் பதில் அளிக்கமுடியாமல் சென்றுவிட்டார். ஆனாலும் அவர் நடிப்புப்பணி முடிந்து திரும்பிவரும் நேரத்தில் அந்தச் சிறுவனைப் பற்றி விசாரித்து அவனுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டாராம். எந்தவொரு மனிதரையும் ஒரே மாதிரியாகக் கவனித்து மதிப்பு கொடுக்கும் தன்மையில் அவர் ஒரு ‘தனிப்பிறவி . அதனால் தான் பொதுமக்களின் சேவையில் அவர் பெற்ற பட்டங்கள் வரிசையில் மக்கள் திலகம் இன்றும் நிலைத்து நிற்கிறது.

    பொதுமக்களின் சேவையின் வழி கிடைத்த பட்டங்கள் :
    கொடுத்துச் சிவந்த கரம் – குடந்தை ரசிகர்கள்
    கலியுகக் கடவுள் – கர்நாடகா, பெங்களூரு
    நிருத்தியச் சக்கரவர்த்தி – இலங்கை ரசிகர்கள்
    பொன்மனச் செம்மல் – கிருபானந்த வாரியார்
    மக்கள் திலகம் – தமிழ்வாணன்
    வாத்தியார் – திருநெல்வேலி ரசிகர்கள்
    புரட்சித் தலைவர் – கட்சித் தோழர்கள்
    இதய தெய்வம் – தமிழ்நாடு பொதுமக்கள்
    மக்கள் மதிவாணர் – இரா. நெடுஞ்செழியன்
    ஆளவந்தார் – ம.பொ. சிவஞானம்.
    அண்ணா அவர்களின் பவள விழாவின் சிறப்பு என்ற வகையில் ‘அண்ணாவின் வளைவினை ‘ நிறுவினார். அரசியல் வாழ்வில் இவர் செய்த நற்பணிகள் சிறப்பான இடம் பெற்றுள்ளன. பெண்களுக்கு, ஏழை, எளியவர் மற்றும் பணிபுரியும் பெண்கள் என்று அனைத்து வழிகளிலும் பெண்களைச் சிறப்பிக்க கொண்டுவந்த திட்டங்களின் காரணமாகஎம்.ஜி. ஆர். அவர்களின் புகழ் பன்மடங்காக இன்றும் நிலைத்து நிற்பதில் வியப்பில்லை.

    திட்டங்களின் செயல்பாடுகள் :
    * சத்துணவுத் திட்டம்.
    * விதவை ஆதரவற்ற பெண்களுக்குத் திருமண உதவி
    * தாலிக்கு தங்கம் வழங்குதல்
    * மகளிருக்குச் சேவை நிலையங்கள்
    * பணிபுரியும் பெண்களுக்குத் தங்கும் விடுதிகள்
    * தாய்சேய் நல இல்லங்கள்
    * இலவசச் சீருடை
    * இலவசக் காலணி
    * இலவசப் பற்பொடி
    * இலவசப்பாடநூல்
    * வறட்சிக் காலத்தில் லாரி மூலம் குடிநீர்

    மேலும் அவரின் முக்கியப் பணிகளில் தமிழ்ப்பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டதில் முன்னின்று முயற்சி செய்து தஞ்சையில் தமிழ்ப் பல்கலைக்கழகம் ஆகஸ்ட், 1, 1981-இல் 972.7 ஏக்கர் நிலத்தில் இடம் ஒதுக்கப்பட்டு , 1921ஆம் ஆண்டு உமாமகேசுவரனார் ஏற்பட்ட தீர்மானம் அவர் பிறந்த தஞ்சையில் அறுபது (60) வருடங்களுக்குப் பிறகு முதலமைச்சராக இருத்த எம்.ஜி. இராமச்சந்திரன் அவர்களால் நிறுவப்பட்டது. இதன் முக்கிய அம்சம்”தமிழ்மொழி, தமிழ் இலக்கணம், தமிழ் இலக்கியம், சித்த மருத்துவம்”… முதற்கொண்டு அனைத்துவகை பாடப் பிரிவுகளும், ஓவியம், கட்டிடக்கலை, சிற்பக்கலையும் ஓலைச்சுவடி, கல்வெட்டுக்கள் பாடப்பிரிவும் பயிற்றுவிக்கப் படுவதுடன் கைவினைப்பொருட்கள், கடலியல், தொல்லியல் …மட்டுமல்லாமல் மற்ற ‘மொழி ‘ கற்றலும் உள்ளது.

    பழ. நெடுமாறன் அவர்களின் கருத்துப்படி ஈழமக்களின் போராட்டத்தின் போது ஏழுகோடிக்கும் தொகை உதவி செய்தும் வந்தார் என்பது அறியமுடிகிறது. அவர் ஈழத்தில் பிறந்து தமிழ் மக்களிடையே வாழ்ந்தாலும் ஈழவிடுதலைக் காரணமாகவும், தமிழ் மக்களின் நன்மைக்காகவும் தனிஈழம் கிடைக்கும் முடிவில் அவர்களுக்குஉதவி செய்தார். விடுதலைப் போராட்ட விடுதலைப்புலி பிரபாகரன் அவர்களின் பண்பும், கடமையும் ஈர்க்கப்பட்டு அவர்களுக்கு உதவி செய்தார் என்று ‘ ஆன்டனி பாலசி்ங்கம் ‘ கூறுகிறார் தன்னுடைய கட்டுரையில்.

    அரசியலில் செம்மலின் எளிமை :
    * முன்னணித் தமிழ் தேசியவாதி
    * திராவிடக் கழகத்தின் ‘முன்னேற்றக் கழக உறுப்பினர் ‘
    * திராவிட இயக்கத்தில் பொருளாளர்
    * அண்ணாவுடன் கருத்து வேறுபாட்டில் வெளியேறுதல்
    * 1971-ல் ‘பாரத் ‘ திரைப்பட விருது
    * 1972 இல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் துவக்கம்.
    * அனைத்திந்திய அண்ணா திராவிடக் கழகம் உருவாக்கியப் பெருமை (17/10/1972)
    * 1977- முதல் அமைச்சர் பதவி ( திண்டுக்கல் )

    அரசியல் அல்லாத எளிமை வழியில்:
    * திரைப்படப் புகழ்
    * வசீகரத் தோற்றம்
    * சமூகத் தொண்டர்கள்
    * ஏழைகள் தோழன்
    * கொடையாளி
    * வீரன் – நடிப்பின் வீரமும் மிளிரும் மன்னர்

    அரசு விருதுகள் :
    * பாரத் விருது (இந்திய அரசு)
    * அண்ணா விருது (தமிழக அரசு)
    * பாரத ரத்னா விருது (இந்திய அரசு)
    * பத்மஸ்ரீ விருது (இந்திய அரசு, விருதை ஏற்க மறுப்பு )
    * சிறப்பு முனைவர் பட்டம் (அமெரிக்கா, அரிசேனா பல்கலைக்கழகம் )

    நினைவுகள் :
    தாமரை மலர் போன்ற வடிவம் கொண்ட நினைவிடம் சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டு உள்ளது. மூன்றெழுத்து நாயகனின் புகழ், மூன்று முறை முதலமைச்சர் பதவி வகித்தவர்… நினைவுகள் ‘ இதயக்கனி ‘ யாகி ‘ நாடோடி மன்னன் ‘ தயாரித்து படம் வெற்றி பெற்றால் ” நான் மன்னன் ” என்று கூறிய பெருமை உடையவர். மந்திரிகுமாரி தொடங்கி மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் போன்ற வெற்றிப் படங்கள் வழியில் வரலாற்று மனிதராகவும் வாழ்ந்து மறைந்த ‘ வரலாற்று நாயகன் ‘ என்று பகர்வதே சாலப் பொருந்தும். அவரின் உருவில் கோவில் கட்டி வழிபாடு செய்யும் பக்தி கொண்ட தமிழகமக்கள் போற்றும் ‘நாயகன் ‘ என்று பெயர் பெற்ற மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன்.

    1977 அரசியல் பிரவேசத்திற்குப் பிறகும் அவர் திரைப்படம் தயாரித்து , நடிப்பிலும் சிலகாலம் இருந்தார்.
    1977 முதல் 1987 வரை பத்து ஆண்டுகள் தமிழ் நாட்டின் முதலமைச்சர் பதவி வகித்தார்.
    1984-ல் அவரின் உடல்நலம் குறைவு காரணமாக அவரின் இறுதி நாட்கள் படுக்கையில் சிலகாலம் வாழவேண்டியக் கட்டாயத்தில் இருந்த அவர் தங்கமனிதர், கலியுகக் கடவுள், என்றெல்லாம் மக்களால் புகழப் பட்டுக் கொண்டிருக்கும் பாடல்களின் வரிகளிலும், அன்றும், இன்றும் என்றும் வாழ்ந்து கொண்டிருக்கும்
    ‘இதயத்தெய்வம் ‘ , ஒளிவிளக்கு நம்மிடையே மனிதருள் மாணிக்கமாக வாழ்கிறார் என்பதில் ஐயமில்லை. ஏழு என்ற எண்ணிற்கு பெருமை சேர்த்த மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன் என்ற MGR .

    “இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்லவேண்டும்
    இவர்போல் யாரென்று ஊர் சொல்ல வேண்டும்” —இப்படிப்பட்ட பெருமையில் வாழ்ந்த

    அரசியல், திரைஉலகம், பொதுநலச் சேவை, மக்களின் தொண்டே மகேசன் தொண்டு என்ற வகையில் தமிழக மக்கள் அனைவரின் மனத்திலும் நிறைந்த மாபெரும் வள்ளல், தங்கம், பொன்மனச்செம்மல் என்ற பெயருடன் தன்னுடைய வசீகரத் தோற்றத்துடனே திசம்பர் திங்கள் 24ஆம் நாள் 1987 ஆம் வருடம் தனது இறுதி யாத்திரையாகிய ‘ தூக்கம் போலும் சாக்காடு ‘ என்ற நிலையை அடைந்தார். மூன்றெழுத்து நாயகன் , நற்சொல், நற்செயல் என்று அனைத்து வகையில் வாழ்வு வாழ்ந்தவர் ‘பிறப்பு ‘என்ற நான்கெழுத்தும் ‘ இறப்பு’ என்ற நான்கு எழுத்தும் பிரிவு என்ற மூன்று எழுத்தின் வழியே மறைவு என்றபடி உண்மையாகியது.


    சுமதி ரவிச்சந்திரன், ராமாபுரம்

  5. #3174
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Π*оссия
    Posts
    0
    Post Thanks / Like
    கலைவாணன்.

    வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார்? என்று கேள்வி எழுப்பி அதற்கு விடை சொன்ன மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., என்னுடைய மனத்தில் மட்டும் நின்றவர் அல்ல… கோடிக்கணக்கான மக்களின் மனங்களில் இன்றும் கொலுவீற்றிருப்பவர் அந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ஏனென்று காரணங்களை யோசிக்க வேண்டுமா என்ன…? காரணங்களை விஞ்சிய பூரணணாயிற்றே அவர்! முழு நிலவு போன்ற முகம், கவர்ந்திழுக்கும் விழிகள், கனிவான சிரிப்பு, எந்த நிறத்தில் ஆடை அணிந்தாலும் பொருந்துகிற செக்கச் சிவந்த உடல்… இப்படி பார்த்ததுமே பிடித்துப் போகிற உருவம் படைத்தவரல்லவோ நமது பொன்மனச் செம்மல்.

    ‘மாதா வயிறெரிய வாழா ஒருநாளும்’ என்றொரு பழைய மொழி சொல்வார்கள். அன்னையின் அன்பைப் பெறாத வாழ்வு வாழ்வாகவே இராது. ‘பத்துத் திங்கள் சுமந்தாளே அவள் பெருமைப்பட வேண்டும்… உன்னைப் பெற்றதனால் அவள் மற்றவராலே போற்றப்பட வேண்டும்’ என்று சிறுவனுக்கு அறிவுரை கூறிய வாத்யார் தன் அன்னையைத் தெய்வமாக வணங்கி வந்தவராயிற்றே! தாய்க்காக தன் இல்லத்தில் தனிக் கோயிலே கட்டி வணங்கியவராயிற்றே… ‘தாயில்லாமல் நானில்லை’ பாடலில் மட்டுமா அன்னையின் பெருமையைப் போற்றினார்…? தன் அனைத்துப் படங்களிலும் அம்மாவின் வார்த்தையை எந்தச் சூழ்நிலையிலும் தட்டிடாத தனயனாக அல்லவோ வாழ்ந்து காட்டினார். இது ஒன்றே போதாதா மக்கள் மனத்தில் அவர் நிற்பதற்கு…?

    mgr2பொழுதுபோக்கிற்கு உத்தரவாதம் தரும் திரைப்படங்களாக அவருடைய படங்கள் அமைந்தாலும் அதிலும் கண்ணியம் காத்தவர் வாத்யாரையன்றி வேறு எவர் உளர்…? கதாநாயகன் ஒரு அடி அடித்தால் வாயிலும் மூக்கிலும் ரத்தம் கக்கி, இருபத்தைந்து அடி தூரம் வில்லன்கள் பறந்து விழுகிற இன்றைய சண்டைக்காட்சிகளைக் கண்டு துன்புற்ற கண்களுக்கு, ஒரு துளி ரத்தம் சிந்தினாலே பெரிதெனக் கருதும், கலைநயம் மிக்க வாத்யாரின் சண்டைக் காட்சிகள் ஒப்பற்ற விருந்தன்றோ..!

    இதைத் தவிரவும் குறிப்பிடப்பட வேண்டிய விஷயம்.. வில்லன் இவர் குடும்பத்தையே அழித்திருந்தாலும், எத்தனை கொடுமைகள் செய்திருந்தாலும்கூட தன் எந்தப் படத்திலும் வாத்யார் வில்லனைக் கொல்வதாகக் காட்சிகள் இருக்காது. கிளைமாக்ஸில் ஒன்று வில்லனை மனம் திருந்தியவனாக்கி மன்னிப்பார் அல்லது சட்டத்தின் பிடியில் ஒப்படைப்பார். அவரை வாத்யார் என்று அன்போடு கூப்பிட்டு மக்கள் மனதில் இருத்திக் கொள்ள இதைவிடப் பெருங்காரணம் எதும் தேவையா என்ன…?

    ராமகிருஷ்ணப் பரமஹம்சரிடம் ஒரு அன்னை வந்து இனிப்பு தின்னும் தன் மகனுக்கு அறிவுரை கூறும்படி கேட்க, அடுத்த வாரம் வந்து பாருங்கள் என்றார் ராமகிருஷ்ணர். அடுத்த வாரம் வந்ததும் அந்தச் சிறுவனுக்கு அன்பாக அறிவுரைத்தார். ஏன் இதற்கு ஒரு வாரம் என அந்தத் தாய் வினவ, சென்ற வாரம் வரை நானே அதிகம் இனிப்பு உண்பவனாக இருந்தேன். அப்பழக்கத்தை கைவிட்டால்தானே அறிவுரை கூறும் தகுதி எனக்குக் கிட்டும்..? என்றாராம் ராமகிருஷ்ணர். தன் படங்களில் குடித்தலும் புகைத்தலும் தவறு என்று அழுத்தந்திருத்தமாய் போதித்த வாத்யார் நிஜ வாழ்விலும் முன்னுதாரணமாக இருந்து காட்டியவரல்லவா…?

    mgr3இரண்டு உதாரணங்களை இங்கு சொல்லுதல் அவசியம். ‘நினைத்ததை முடிப்பவன்’ படத்தில் ஒரு எம்.ஜி.ஆர். வில்லன். அவர் புகை பிடிக்கும் காட்சி ஒன்று படத்தில் வந்தாக வேண்டும். அதில் நடிக்கவோ வாத்யாருக்கு உடன்பாடில்லை. ஆனாலும் சமாளித்தார். எப்படி..? முதல் பாதியில் ராம்தாஸ் புகைக்க முயலும்போது, ‘இந்த ரஞ்சித்துக்கு முன்னால எவனும் சிகரெட் பிடிக்கக் கூடாது’ என்று தட்டிவிடுவார். பின்னொரு காட்சியில் வில்லன் எம்.ஜி.ஆர். சிகரெட்டை வாயில் வைக்க முற்படுகையில் கதாநாயக எம்.ஜி.ஆர். அதே வசனத்தைச் சொல்லி, அவர் வாயிலிருந்து தட்டி விடுவார். காட்சியிலும் நிறைவு… கொள்கைக்கு முரணாக நடிக்கவில்லை என்று வாத்யாரிடமும் நிறைவு.

    இதேபோன்று மற்றொரு பெரும் தர்மசங்கடம் அவரது 100வது படமான ஒளிவிளக்கு படத்தில் வந்தது. கதையின்படி நாயகன் குடித்து நிதானமிழந்திருக்கும் வேளையில் கொள்ளைப் பழி அவன் மீது சுமத்தப்படுகிறது. ஹிந்தியில் தர்மேந்திரா குடிப்பவராக நடித்திருந்தார். இந்திப்பட கதாநாயகர்கள் குடிகாரர்களாக நடிப்பது சகஜமான ஒன்று. தமிழிலும் இந்தக் காட்சியில் வாத்யார் குடிப்பதாக நடித்தேயாக வேண்டும். நடிப்புக்காகக் கூட அதைச் செய்ய விரும்பவில்லை வாத்யார். கதையை மாற்றுவதில் தயாரிப்பாளர் எஸ்.எஸ்.வாசனுக்கும் உடன்பாடில்லை. கடைசியில் வாத்யார் ஒரு சின்ன மாறுதல் செய்தார். மதுவை அவர் அறியாமல் குடிக்க வைத்து விடுகிறார்கள். மதுவின் மயக்கம் தெளிந்தபின் அவரது மனச்சாட்சி அவரை ‘தைரியமாகச் சொல்.. நீ மனிதன் தானா?’ என்று குத்திக் காட்டி மதுவின் கொடுமைகளை எடுத்துக் கூறும். குடித்ததை நினைத்து அவர் துடிப்பார், வருந்துவார். இப்படி எந்த விதத்திலும் மற்றவர்களைப் பாதிக்கும் விஷயங்களைச் சொல்லக் கூடாது என்று பிடிவாதக்காரராக அவர் இருந்ததைவிடவா மக்கள் மனத்தில் குடியிருப்பதற்கு பிறிதொரு காரணம் வேண்டும்…?

    தன்னைச் சந்திப்பவர்கள் எவராக இருந்தாலும் அவர்களை முதலில் சாப்பிடச் சொல்லி உண்டி கொடுத்து உபசரிப்பது மக்கள் திலகத்தின் வழக்கம் என்பது உலகம் அறிந்த உண்மை. ஆனால் அதற்கொரு காரணமும் சொல்வார்கள் சிலர். சிறு வயதிலிருந்தே பசியையும் பட்டினியையும் அனுபவித்து வாழ்ந்தவர் மக்கள் திலகம். அதனால் பிறர் பசிப்பதைப் பொறுக்காதவர். இந்தக் காரணத்தினால் தன்னைச் சந்திக்கும் எவரையும் வயிறார உண்ண வைத்துக் கண்டு மகிழ்பவராக இருந்தார் என்பதே அந்தக் காரணம். அதில் உண்மை இருந்தாலும் இயல்பிலேயே அவருக்கு அமைந்திருந்த ஈரமுள்ள இதயம்தான் அவரை அப்படிச் செயல்படச் செய்தது என்பதே நிஜமான நிஜம்.

    ஒரு மழைநாளில் அவர் காரில் செல்கையில் வெளியே ஒரு காட்சி கண்ணில் படுகிறது. கொட்டுகிற மழையில் உள்ளே உட்கார்ந்திருப்பவர் நனையாமல் கூரை அமைத்திருக்க தான் மட்டும் சொட்டச் சொட்ட நனைந்தபடி வயிற்றுப் பிழைப்புக்காக ரிகக்ஷா ஓட்டிக் கொண்டிருந்தனர் பல ரிக்க்ஷாக்காரர்கள். அவர்களைக் கண்டதும், வள்ளலின் மனம் கசிந்தது. தன் அலுவலகம் வந்த உடனே, உதவியாளரைக் கூப்பிட்டு, ”நகரிலுள்ள ரிக்க்ஷாத் தொழிலாளிகள் அனைவருக்கும் மழைக்கோட்டுகள் தர வேண்டும், வாங்கி வாருங்கள்” என்று ஆணையிட்டாரே.. அதற்கு என்ன காரணம் இருக்க முடியும் – மற்றவர் துன்பம் கண்டு பொறாத இளகிய நெஞ்சம் ஒன்றைத் தவிர..! அடித்தட்டு மக்கள் அனைவரிடமும் கல்லில் செதுக்கிய சிற்பமாய் அவர் மனங்களில் பதிந்து போனதற்கு இதைவிடச் சிறந்த காரணம் ஏதேனும் உண்டா என்ன…?

    mgr4கலைவாணர் என்.எஸ்.கே. உடல்நலம் குன்றி மருத்துவமனையில் இருந்த சமயம் அது. அவர் நினைவுக்குத் திரும்பியதும் அவரைப் பார்க்க வந்து சென்றவர்கள் பற்றி அவரிடம் சொல்லப்பட்டது. “ராமச்சந்திரன் வரலையா..? உடனே வரச்சொல்லி ஆளனுப்புங்க” என்றிருக்கிறார். அதன்படி வந்த மக்கள் திலகம் அவரிடம் என்ன உதவி கேட்டாலும் தான் செய்வதாகக் சொன்னார். கலைவாணர், “நிறையப் பேருக்கு உதவின எனக்கு நீ நிறைய உதவிகள் இப்ப வரை பண்ணிட்டிருக்கேங்கறது ஊருக்குத் தெரியாது. ஆனா நீ வரலைங்கறதை மட்டும்தான் எல்லாரும பாப்பாங்க… அதனாலதான் உன்னை வந்துட்டுப் போகச் சொன்னேன். வேற ஒண்ணும் இப்ப தேவையில்ல” என்றாராம். வள்ளலுக்கு வள்ளல் இந்த வாத்யார் என்பது அவரை அனைவரின் மனத்திலும் சிம்மாசனமிட்டு உட்கார வைக்கச் சிறந்த காரணம்தானே…

    அரசியலில் எதிரெதிர் துருவங்களாக இருந்தாலும் கலைஞர் கருணாநிதியிடம் அளவற்ற மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்தவர் மக்கள் திலகம். ஒருமுறை அவரெதிரில் ‘கருணாநிதி சொல்றாரு’ என்று பேசிய ஒருவரை, ‘கலைஞர்னு சொல்லுங்க. நானே அவரை கருணாநிதின்னு பேர் சொல்லிக் கூப்பிடறதில்ல’ என்று திட்டியிருக்கிறார். திருச்செந்தூர் ஆலய மரணத்திற்கு நீதிகேட்டு கலைஞர் தமிழகம் முழுவதும் நடை பயணம் மேற்கொண்டபோது தினம் அவரின் உடல்நலம் பற்றி போனில் விசாரித்ததுடன், தானே பேசி அதை கைவிடக் கோரியவர் மக்கள் திலகம். அந்தப் பண்பாடும் நாகரீகமும் அவரையன்றி வேறு எவருக்கு வரும்?

    இப்படிப் எண்ணற்ற காரணங்களால் மக்கள் மனத்தில் பதிந்துவிட்ட மக்கள்திலகம், என் மனத்தில் பதிந்ததற்கு இவை தவிர்த்த வேறுசில காரணங்களும் உண்டு. தான் சார்ந்த துறையான திரைப்படத் துறையில் அவருக்கிருந்த அபாரமான அறிவு பிரமிக்கத் தக்கது. சிறந்த இசை ரசிகராகவும், எடிட்டராகவும், நடிகராகவும், இயக்குனராகவும், திரைக்கதை ஆசிரியராகவும்… இப்படிப் பல அவதாரங்களைத் தன்னுள் பொதித்து வைத்திருந்தவர் வாத்யார். அவரது புகழ்பெற்ற ‘உலகம் சுற்றும் வாலிபன்’ பற்றி அவரது எழுத்துக்களில் இப்படிச் சொல்கிறார் : mgr5
    “அவரிடம் (ப.நீலகண்டன்) ‘உலகம் சுற்றும் வாலிபன்’ கதையின் ஆரம்பத்தைச் சொல்லி இருந்தேன். அதாவது விஞ்ஞானி ஒருவன் தான் கண்டுபிடித்திருந்த புதிய விஞ்ஞான யுக்தியை தன்னைப் போன்ற விஞ்ஞானிகள் மத்தியில் செயல்படுத்திக் காண்பிக்கிறான். தன் உழைப்பின் விளைவாக உருவான புதிய சாதனை உலகை அழிக்கும் அழிவு சக்தியாக மலர்ந்திருப்பதை மற்றவர்கட்குச் செயல்படுத்திக் காண்பிக்கிறான். அந்த ஆராய்ச்சிக் குறிப்புகளையெல்லாம் அந்த விஞ்ஞானிகளின் எதிரிலேயே தீயிட்டுக் கொளுத்தி விடுகிறான். ஆனால் ஒரு விஞ்ஞானி இந்தக் கூற்றை நம்புவதில்லை. அதன் நகல் எங்காவரு இருந்தே தீரும் என்ற எண்ணத்தில் முன்னவனைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துவிட்டு அவன் செத்துவிட்டதாக உலகத்தை நம்பச் செய்து விடுகிறான். இளம் விஞ்ஞானியின் தம்பி இதை நம்பாமல் அண்ணனைத் தேடிப் புறப்படுகிறான்.

    இவ்வளவுதான் நான் அவருக்குச் சொல்லியிருந்தேன். அதுவும் குறிப்பாகத்தான். இவ்வளவு விளக்கமாகக் கூட அல்ல. நான் என்ன எடுக்கப் போகிறேன், எப்படிப்பட்ட காட்சிகளை உருவாக்க இவ்விதப் பெரிய பயணத்தைத் துவங்கி இருக்கிறேன்… இந்த விவரம் எல்லாம் அப்போது அவரிடம் இல்லை. ஆகவே அவர் சிந்தனையில் ஆழ்ந்திருந்ததற்குக் காரணம் ‘இத்தனை பேருடன் புறப்பட்டுச் செல்கிறோமே, பிறர் நம்மைக் கேலி செய்யாத அளவுக்காவது ஏதாவது காரியம் ஆற்றிவிட்டு வரவேண்டும் என்ற அச்சம்தான் என்பது உண்மையாகத் தானிருக்கும்!”

    இப்படி வெளிநாடுகளுக்கு படப்பிடிப்புக்காகப் பணயப்படும் நிலையில் கூட திரைக்கதை, வசனத்தை முடிவு செய்து கொள்ளாமல் புறப்பட்டுச் சென்று வெளிநாடுகளின் அழகையெல்லாம் சீரான காட்சிகளாலும் ரசனையான வசனங்களாலும் இன்றும் கைதட்ட வைக்கும் பாடல்களாலும் அள்ளிவந்து, எத்தனையோ தடைகளை வென்று அதை சாதனைப் படமாக்க முடிகிறது என்றால் அது வாத்யாரால் மட்டுமே சாத்தியம். அவரை மிஞ்ச இனியொருவன் பிறந்துவரப் போவதில்லை என்பதே நிதர்சனம்.

  6. #3175
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Π*оссия
    Posts
    0
    Post Thanks / Like
    வில்லவன் கோதை.

    அது ஒரு இனிமையான மாலைப் பொழுது.

    தமிழன் என்றொரு இனமுண்டு அவர்க்கு தனியே ஒரு குணமுண்டு !

    என்ற எழுச்சி மிக்க இசையொலி அந்த ஊருக்கு வெளியேயிருந்த டூரிங் தியேட்டரின் உச்சியிலிருந்து வெளியேறி நாற்புறமும் சூழ்ந்திருந்த கிராம மக்களை ஒருவித பரபரப்புக்குள்ளாக்குகிறது.

    இன்னும் சற்று நேரத்தில் அன்றைய முதற்காட்சியாக திரையிடப்பட இருக்கின்ற சாகாவரம் பெற்ற கலைஞன் எம்ஜி ராமச்சந்ரன் நடித்த மலைக்கள்ளன் திரைப்படத்துக்கான முன்னோட்டம்தான் அது.

    அன்று அந்த திரைப்படத்துக்கு நான் அழைத்துச் செல்லப் பட்டிருந்தேன்.தொள்ளாயிரத்து ஐம்பத்தி நாலு என்று நினைக்கிறேன். அப்போது எனக்கு ஏறகுறைய எட்டு வயதிருக்கும். அதற்கு முன்னதாகவே அவர் நடித்த வேறு சில படங்களை பார்த்திருந்தாலும் என் நினைவுத்திரையில் எம்ஜியார் என்ற வடிவம் முழுமையாக பதிந்து போனது அன்றுதான்.

    அன்று என் மனதைக் கவர்ந்துபோன அந்த கள்ளன் கடைசிவரையில் திருப்பித்தந்ததாக எனக்கு நினைவில்லை. என்னைப்போலவே களவாடப்பட்டவர்கள் அந்த தலைமுறையில் பெரும்பாலோர் இருக்கக்கூடும்.

    தொள்ளாயிரத்து எழுபத்தைந்தில் திரைக்கு வந்த அதே எம்ஜி ராமச்சந்ரனின் இதயக்கனி என்றொரு திரைப்படத்தில் முகப்பிசையாக கவிஞர் வாலியின் பாடல் ஒன்று ஒலிக்கும்.

    தென்னகமாம் இன்பத் திருநாட்டில் மேவியதோர்
    கன்னடத்துக் குடகுமலைக் கனிவயிற்றில் கருவாகி
    தலைக்காவிரி என்னும் தாதியிடம் உருவாகி
    ஏர்வீழ்ச்சி காணாமல் இருக்க சிவசமுத்திர
    நீர்வீழ்ச்சி எனும் பேரில் நீண்ட வரலாறாய்

    வண்ணம் பாடியொரு வளர்த்தென்றல் தாலாட்ட
    கண்ணம்பாடி அணைகடந்து ஆடுதாண்டும் காவிரிப்பேர் பெற்று
    அகண்ட காவிரியாய்ப் பின் நடந்து
    கல்லணையில் கொள்ளிடத்தில் காணும் இடமெல்லாம்
    தாவிப் பெருகி வந்து தஞ்சை வளநாட்டைத்
    தாயாகிக் காப்பவளாம் தனிக்கருணை காவிரிபோல்
    செல்லும் இடமெல்லாம் சீர் பெருக்கித் தேர் நிறுத்தி
    கல்லும் கனியாகும் கருணையால் எல்லோர்க்கும்
    பிள்ளையென நாளும் பேசவந்த கண்மணியே
    வள்ளலே எங்கள் வாழ்வே இதயக் கனி
    எங்கள் இதயக் கனி இதயக் கனி

    மக்கள் திலகம் எம்ஜியாரின் வாழ்வைப்பேச இப்படியொரு பாடலைத் தவிற வேறொரு சரியான உவமை இருக்குமென்று எனக்குத் தோன்றவில்லை. மக்கள் திலகத்தின் வாழ்வை காவிரித்தாயின் நெடும்பயணத்தோடு ஒப்பிட்டு அந்தப்பாடலில் வாலி பேசுவார்.

    தொள்ளாயிரத்து பதிநேழில் ஸ்ரீலங்காவின் கண்டியில் பிறந்து கேரளத்தில் தவழ்ந்து , தமிழகத்தில் வேர்பரப்பி விருட்சமாக பெரும்பாலான மக்கள் மனதில் இன்றும் நிற்பவர் எம் ஜி ராமச்சந்திரன்..

    சரியாக எழுபதாண்டுகள் வாழ்ந்த ராமச்சந்திரனின் முற்பகுதி வாழ்க்கை அவருக்கு அத்தனை எளிதாக இருந்திடவில்லை. அன்றைக்கு அவர் அனுபவித்த பசியின் கோரச்சுவை இன்றைய தலைமுறைக்கு தெரியாத ஒன்று.

    mgrஅவர் தந்தை மருதூர் கோபால மேனன் மறைவுற்றபோது எம்ஜி ராமச்சந்திரனும் அவர் மூத்த சகோதரர் எம் ஜி சக்ரபாணியும் பச்சிளம் குழந்தைகள். ஈழத்தீவில் வாழ வழியின்றி இரண்டு குழந்தைகளுடன் இந்தியாவின் கேரளத்துக்கு குடிபெயர்ந்தார் அன்னை சத்யபாமா.

    அடுத்து தமிழ்நாட்டின் கும்பகோணம் அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கிறது. வறுமையின் பிடியில் இறுகிய அந்த குடும்பம் பிழைப்பிற்கு வேறுவழியின்றி அன்னாளில் தாழ்வான தொழிலாக கருதப்பட்ட நாடகத்தொழிலை ஏற்கிறது.

    ஈழத்து சகோதரர்கள் ஏழு எட்டு வயதிலேயே நாடக சபாக்களில் வேஷம் கட்டத் தொடங்குகிறார்கள். பல்வேறு நாடகங்களில் சின்னச்சின்ன வேஷங்களை ஏற்ற ராமச்சந்திரன் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு சதி லீலாவதி என்ற திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாய் ஒரு துணைப்பாத்திரத்தில் அறிமுகமாகிறார்.

    அடுத்த பதினைந்து ஆண்டுகள் திரையுலகில் அவருக்கு கிடைத்ததொல்லாம் வெரும் துணைப்பாத்திரங்களே.

    தொள்ளாயிரத்து நாற்பத்தேழில் முதன்முதலாக அவர் கதாநாயகனாக நடித்த ராஜகுமாரி திரைக்கு வருகிறது. அதைத் தொடர்ந்து வருடத்துக்கு இரண்டிரண்டு படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் ராமச்சந்திரன் பெருவாரியான மக்களைச் சென்றடையவில்லை.

    நாற்பத்தேழில் இந்ததேசம் நள்ளிரவில் விடுதலை பெறுகிறது. விடிந்தபின்னும்கூட இந்த தேசத்தின் பெருவாரியான மக்களுக்கு விடுதலை கிடைத்துவிடவில்லை. இனம் மதம் சாதி போன்ற பெரும் சுவர்கள் அவர்கள் வளர்ச்சிக்கு இடையூராய் நிற்கிறது. தமிழகத்தில் தந்தை பெரியாரின் சமூக சீர்திருத்த இயக்கமும் பேறறிஞர் அண்ணாவின் அரசியல் சார்ந்த திமுகாவும் வலுவாக காலூன்றுகின்றன. கல்வியிலும் கலையிலும் ஈடுபாடு மிக்க திராவிட இயக்கத்தினர் தங்கள் கருத்துக்களை அடித்தளத்து மக்களிடையே கொண்டு சேர்க்க கலைத்துறையை கையில் எடுக்கின்றனர்.

    அண்ணா, கலைஞர், ஆசைத்தம்பி, சிற்றரசு, மாறன் போன்ற திமுகாவின் முன்னணித்தலைவர்கள் எல்லாம் திரைக்கதை தீட்டிய திரைப்படங்கள் ஒவ்வொன்றாக திரைக்குவந்து நாடெங்கும் பேசப்படுகிறது. பேறறிஞர் அண்ணாவின் பேச்சாலும் எழுத்தாலும் கவரபட்ட தமிழ்த் திரையுல கலைஞர்கள் தங்கள் இயல்பான ஆத்தீக மரபுகளை மாற்றிக்கொண்டு சீர்திருத்தம் பேசிய இயக்கத்தில் இணைகின்றனர். அதுவரை காந்தியார்மீதும் காங்கிரஸ் பேரியக்கத்தின்மீதும் நேசம் செலுத்திய ராமச்சந்திரன் ஐம்பத்தி மூன்றில் திமுகாவில் இணைகிறார்.

    தொள்ளாயிரத்து ஐம்பத்தி நான்கில் நாமக்கல் கவிஞரின் மலைக்கள்ளன் கலைஞரின் திரைக்கதையில் வெளிவந்து எம்ஜியாரை எட்டாத உயரத்துக்கு கொண்டு செல்கிறது. தமிழ்த்திரையுலகுக்கு முதன் முதலாக தேசிய விருதை மலைக்கள்ளன் திரைப்படம் பெற்றுத்தருகிறது. ஏறத்தாழ ஆறு தேசிய மொழிகளில் மலைக்கள்ளன் திரைப்படம் வெளியாகி திரையுலகம் அதுவரை காணாத வசூலை வாரிகொட்டுகிறது.

    அதைத்தொடர்ந்து அவர் நடித்து திரைக்கு வந்த ஒவ்வொரு படமும் ஒரு சரவெடி என்றே சொல்லவேண்டும்.

    அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா . என்ற எம்ஜியாருக்காக கவிஞர் கண்ணதாசன் எழுதிய இந்தப் பாடல் அன்றைய தலைமுறையையே பித்தர்களாக்கிற்று என்று சொல்லலாம்.

    கலைஞர்தான் முதன் முதலாக எம்ஜியாரை புரட்சி நடிகர் என்ற அடைமொழி இட்டு அழைக்கிறார். அடுத்தடுத்து புரட்சி நடிகர் நடித்த திரைப்படங்கள் மகத்தான வெற்றி பெற்று வசூலில் சாதனை படைக்கிறது.

    mgr2இயல்பாகவே இறையுணர்வு மிக்க ராமச்சந்திரன் அண்ணாவின் கருத்துக்களுக்கேற்ப தன்னை மாற்றிக்கொண்டு கடவுள் சார்ந்த திரைப்படங்களில் நடிப்பதைத் தவிர்க்கிறார். ஒடுக்கப்பட்ட சமூகத்திற்காவும் நலிந்த பிரிவினருக்காகவும் திரைப்படங்களில் உயர்ந்த குரலெழுப்புகிறார். நடைபாதையில் குடியிருப்பவர் நலனுக்காக போராடுகிறார். திரைப்படங்களில் கூட புகைபிடிப்பதை நிறுத்துகிறார். மது அருந்தும் காட்சிகளை தவிர்க்கிறார். தான் நடித்த எல்லா திரைப்படங்களிலும் தருமத்துக்கும் நியாயத்திற்கும் குரல் எழுப்புகிறார். பெண்களைக் காக்க சண்டைபோடுகிறார்.

    அவருக்காக திரைக்கதைகளும் பாடல்களும் பிரத்யோகமாக உருவாக்கப்படுகின்றன. பாற்க பரவசமூட்டும் எம்ஜியாரின் கவர்ச்சியான தேகம் அதற்கெல்லாம் ஈடு கொடுக்கிறது. அவருடைய திரைப்படங்கள் அத்தனையும் அவரது ரசிகர்களை ஏமாற்றியதில்லை. எந்த படமும் அவருடைய தயாரிப்பாளர்களுக்கு இழப்பை ஏற்படுத்திவிட்டதாக நினைவில்லை.

    தமிழகத்தின் வறண்ட பூமிகளிலும் நலிந்த மக்களிடையேயும் அவர் ஏற்படுத்திய ஒப்பனைப்பிம்பம் ஆழப்பதிகிறது. சென்னை ரசிகர்களுக்கு அவர் வாத்தியார் ஆகிறார்.

    அவருக்கான ரசிகர் மன்றங்கள் திமுகாவின் சார்புமன்றங்களாக பெருமளவில் துவக்கப்படுகிறது. அவருடைய ஒவ்வொரு திரைப்படத்துக்கும் தோரணங்கள் கட்டி திரைஅரங்கத்தை அலங்கரிக்கிறது அந்நாளைய திமுக பட்டாளம்.

    இன்றைக்குத் தொடரும் ரசிகர்களின் கட்டவுட் பாலாபிஷேக கலாச்சாரத்துக்கு அதுவே முன்னோடி என்று கருதுகிறேன். அன்று அவர் வளர்ச்சிக்கு திராவிட இயக்கத்தின் எழுத்தும் பேச்சும் ஒரு மாபெரும் ஏணியாக நின்றன.

    அப்போதுதான் தனக்குத்தானே அடைமொழியிட்டு அழைத்துக் கொள்ளும் தன்னம்பிக்கை மிக்க எழுத்தாளர் கல்கண்டு ஆசிரியர் தமிழ்வாணன் எம்ஜியாரை மக்கள் திலகமென்று முதன்முதலாக அழைக்கிறார் அதுவே அவர் பெற்ற இரண்டாவது இயல்பான அடைமொழி.

    ஏறதாழ நூற்றுமுப்பது படங்களுக்கு மேல் நடித்திருந்த எம்ஜியார் நடிப்புத்துறை மட்டுமின்றி கலைத்துறையின் சகல நுணுக்கங்களையும் பெற்றிருந்தார். படத்தொகுப்பிலும் இயக்குதலிலும் அவர் தேர்ந்திருந்தார். சுயமாக திரைப்படம் தயாரிப்பதிலும் அரங்குகளுக்கு வினியோகிப்பதிலும் கூட அவருக்கு பயிர்ச்சியிருந்தது. நாடோடிமன்னன், உலகம் சுற்றும் வாலிபன், மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் ஆகிய மூன்று வெற்றிப்படங்களும் அவர் இயக்கத்தில் வந்து வரலாறு படைத்தவை.

    அறுபத்தொன்பதில் அடிமைப்பெண் படப்பிடிப்புக்கு ராஜஸ்தான் சென்றபோது தொப்பியணியும் வழக்கத்தை மேற்கொண்டார். அப்போதிலிருந்து தொப்பியும் கருப்புக்கண்ணாடியுமின்றி அவர் வெளியுலகிற்கு தோன்றியதில்லை. தன் தோற்றத்தை எப்போதும் ஒரே மாதிரியும் ஒப்பனையோடும் அமைத்துக்கொள்ள அவர் என்றைக்குமே தவறியதில்லை.

    ஏறத்தாழ அகவை அறுபதைக்கடந்த போதும் இளம் கதாநாயகிகளோடு காதற் காட்சிகளில் தொடர்ந்து நடித்து தமிழ்த்திரையுலகை பழிதீர்த்துக்கொண்டவர் மக்கள்திலகம். மக்களிடையே ஏற்படுத்தியிருந்த இந்த ஒப்பனைப் பிம்பத்தை மண்ணில் மறையும்வரை காத்தவர் மக்கள் திலகம் மட்டுமே.

    இளம் வயதில் அவரை திரும்பிப்பாற்காத இந்த தமிழ்த் திரையுலகம் அவருடைய கிழவயதில் அவர் கால்களில் மண்டியிட்டு கிடந்தது மிகப்பெரிய வினோதம்.

    வாடிய முகத்தை கண்டபோதெல்லாம் வாடியதோடல்லாமல் வாட்டத்தை போக்குகின்றவராகவும் எம்ஜியார் திகழ்ந்தார். இயல்பிலேயே மிகுந்த இரக்கசிந்தனை அவருக்கிருந்தது. வருமையிலும் பகிர்ந்துண்ணும் பாங்கை அவர் பெற்றிருந்தார்.

    தொள்ளாயிரத்து அறுபத்து இரண்டில் இந்தியாவுக்கெதிராக சீனா போர் தொடுத்தபோது பாரதப்பிரதமரின் வேண்டுகோளுக்கிணங்க அந்நாளிலேயே தன் உழைப்பிலிருந்து 75,000 ரூபாயை அள்ளிக்கொடுத்தவர் எம்ஜியார். குழந்தைகளையும் முதியோர்களையும் பெரிதும் நேசித்தவர் எம்ஜியார். அந்நாளில் சுயமாக இயங்கி வந்த கல்விக் கூடங்களுக்கும் தொண்டு நிறுவனங்களுக்கும் அவர் அளித்த நன்கொடைகள் கணக்கில் அடங்கா.

    நான் படித்த சென்னை மேற்கு மாம்பலம் உயர்நிலைப்பள்ளி ( இன்று அஞ்சுகம் மேல் நிலைப்பள்ளி என்ற பெயராம் ) கட்டிட நிதிக்காக அட்வகேட் அமரன் என்ற நாடகத்தை நடத்தி பெருநிதி அளித்தவர் எம்ஜியார். இருந்தபோதும் அந்த பள்ளி இன்றும் பழைய தோற்றத்திலேயே கீற்றுக்கொட்டக்கையில் நீடிப்பதை சமீபத்தில் பாற்கநேர்ந்தது.

    எம்ஜியாருடைய வாழ்வில் முதல் இரண்டு மனைவிகள் அடுத்தடுத்து மரணமுற்றபோது மூன்றாவதாக அவரோடு இணைந்து நடித்த விஎன் ஜானகியை அறுபதுகளில் மணந்து அவர் ஜானகி ராமச்சந்திரனானார்.

    திரையில் எனக்கொருமகன் பிறப்பான் அவன் என்னைப்போலவே இருப்பான் என்று குதூகுலத்தோடு குதித்துப் பாடிய எம்ஜியாரின் விருப்பம் கடைசிவரை பொய்யாயிற்று.

    தொள்ளாயிரத்து அறுபத்தேழில் ஏறத்தாழ இருபது படங்களுக்கு மேலாக அவரோடு இணைந்து நடித்த நடிகவேள் எம் ஆர் ராதாவால் தனிப்பட்ட காரணங்களுக்காக சுடப்பட்டு தனிப்பிறவியாக அவர் பிழைத்ததை பார்த்தவன் நான்.

    தன்வாழ்வுக்கு ஏணியாய் நின்ற திமுகாவின் அந்நாளைய அசுர வளர்ச்சிக்கு எம்ஜியார் திருப்பிச் செலுத்திய பங்கு மகத்தானது.

    எம்ஜியாரும் கருணாநிதியும் தொள்ளாயிரத்து ஐம்பதிலேயே நெருங்கிய நண்பர்கள். அவர்கள் இணைந்து வெளியான மந்திரி குமாரி திரைப்படம் தமிழ்த்திரையுலகிற்கு ஒரு திருப்பம் தந்தது.

    அண்ணாவின் மறைவிற்குப்பிறகு கருணாநிதி முதல்வர் பொறுப்பேற்க எம்ஜியாரே துணை நின்றார். இருப்பினும் காலப்போக்கில் அவர்களுக்கிடையே ஏற்பட்ட கசப்பில் 1972 ல் எம்ஜியாரின் அண்ணாதிமுக உருவெடுக்கிறது. திமுகாவில் கருணாநிதிக்கெதிராக நின்றிருந்தவர்கள் எம்ஜியாரோடு அணிசேர்ந்தனர். மாற்றுக் கட்சிகளில் இருந்த கருணாநிதிக் கெதிரானவர்களும் அதிமுகாவை ஆதரித்தனர். பிற்படுத்தப்பட்டோருக்கான சலுகைகளால் பின்தங்கியவர்கள் கருணாநிதிக்கெதிராக எம்ஜியாரோடு சேர்ந்தனர்.

    ஒருதனிமனித எதிர்ப்பே அந்தக்கட்சியின் தலையாய கொள்கையாயிற்று. முன்னதாக நலிந்தமக்களிடையே எம்ஜியார் ஏற்படுத்தியிருந்த பிம்பம் அவரது அரசியலுக்கு பெரும்துணையாயிற்று. அண்ணாகாலத்தில் திமுக கலைத்துறையை ஊறுகாயாய் பயன்படுத்திற்று. ஆனால் அதிமுகாவோ அதையே முக்கிய விருந்தாக்கிற்று. மத்திய அரசின் மிட்டலுக்கு பயந்து அதிமுகவை அஇஅதிமுக வாக அவர் மாற்றியது நல்ல வேடிக்கை.

    மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் அது முடிந்தபின்னாலும் பேச்சிருக்கும் என்று பாடிய அந்த திரைக்கலைஞன் அடுத்தடுத்து காலப்போக்கில் நான்கெழுத்துக்கும் ஆறெழுத்துக்கும் தாவியது துரதிஷ்டம்.

    இயக்கத்தின் வளர்ச்சிக்காக திமுகவினர் தொடர்ச்சியாக அரசுக்கெதிரான போராட்டங்களை நடத்தி சிறைப்பட்ட காலம். அத்தனை போராட்டங்களிலும் கலந்து கொள்ளாமலிருக்க கலைத்துறையினருக்கு அண்ணா விதிவிலக்களித்திருந்தார். அவர்களை திமுகாவின் செல்லப் பிளைகளாகவே அண்ணா பாவித்தார். அவர்களை இயக்க வளர்ச்சிக்கு பிரச்சாரக்கருவியாக மட்டுமே கையாண்டார். கழக நிர்வாக செயல்பாடுகளில் அவர்களுக்கெல்லாம் பெரிதாக இடமளிக்க வில்லை.

    திமுகாவின் எந்தப்போராட்டங்களிலும் எம்ஜியார் கலந்து கொண்டதில்லை. சிறைபுகுகின்ற வாய்ப்பும் அவருக்கு கிட்டியதில்லை.

    திராவிட இயக்கத்தில் இவர்களுக்கெல்லாம் ஒரு இறுக்கமான பிடிப்பு இல்லாமற் போனதற்கு இதுவும் ஒருகாரணம் என்று கருதுகிறேன்.

    எழுபத்திரெண்டில் திமுகவைவிட்டு எம்ஜியார் வெளியேறிய போது கட்டியவேட்டியோடு வெளியேறினார் என்று சொல்லவேண்டும். திமுக பெரியாரிடம் சமரசம் செய்துகொண்ட கடவுள் மறுப்பு கொள்கையை முழுதுமாக எம்ஜியார் கைவிட்டதைத்தான் இப்படி குறிப்பிடுகிறேன். பெரும்பாலான ஆத்தீகர்கள் கூட எம்ஜியாரோடு அணிவகுக்க இப்போது சங்கடமில்லாமற் போயிற்று.

    பக்திப்பழம் திருமுருக கிருபானந்த வாரியார் சாமிகள் மக்கள் திலகத்துக்கு பொன்மனச்செம்மல் என்ற பட்டத்தை வழங்குகிறார். அதேசமயம் அவரது அபிமானிகளோ அவரை புரட்சித்தலைவராக்கி மகிழ்ந்தனர்.

    தொள்ளாயிரத்து எழுபத்தி இரண்டுக்குப்பிறகு எம்ஜியார் பிக்சர்ஸ் முகப்புக்கொடி அண்ணா திமுக அடையாளமாயிற்று.அவர் நண்பர் கருணாநிதிக்கெதிராக மக்களிடையே அவர் விதைத்த வெறுப்பு விதைகள் அவர் மறைந்து இரண்டு தலைமுறை கடந்த பிறகும் கூட அகன்றதாக தெரியவில்லை.

    பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் இரண்டுமுறை திமுகாவிலும் மூன்று முறை அதிமுகாவிலும் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் மக்கள்திலகம். பெரம்பலூர் மதுரை மாவட்டங்களின் நலிந்த பிரிவினர் அவரை கண்களால் கண்ட தெய்வமாக இன்றும் நேசிக்கின்றனர்.

    பெருவாரியான மக்களின் பேராதரவுடன் தமிழ்நாடு முதல்வராக ஏறதாழ பதினோரு ஆண்டுகள் பதவியில் இருந்தவர். அவரது திரைப்படங்களுக்கு பிலிம்பேர் பத்திரிக்கையின் மதிப்புமிக்க விருதும் மத்திய அரசின் தேசிய விருதுகளும் கிடைத்திருக்கின்றன. சென்னை பல்கலைக்கழகம் கௌரமிக்க டாக்டர் பட்டம் வழங்கி அவருக்கு பெருமை சேர்க்கிறது.

    மந்திரிகுமாரி, மலைக்கள்ளன், அலிபாபாவும் 40 திருடர்களும், எங்கவீட்டுப்பிள்ளை, நாடோடி மன்னன், ஆயிரத்தில் ஒருவன், மகாதேவி, உலகம் சுற்றும்வாலிபன், ரிக்ஷாக்காரன் . . . அவரது வெற்றிப் படங்களின் எண்ணிக்கை இப்படி நீள்கிறது.

    அவரது கடைசிகாலங்களில் வெளியான நான் ஏன் பிறந்தேன் திரைப்படத்தை நான் விரும்பி ரசித்தேன் என்று சொல்லவேண்டும். அவருடைய உலகம் சுற்றும் வாலிபன் அவருடைய முந்தைய சாதனைகள் அனைத்தையும் முறியடித்து புதிய வரலாறு படைத்ததை மறக்க இயலாதது.

    அவருடைய திரைப்படங்களைப்பற்றியோ அவரது நற்குணங்களைப் பற்றியோ அவர் அளித்த நன்கொடைகள் பற்றியோ வரையறுக்கப் பெற்ற சொற்களில் இந்த பதிவில் ஒருபோதும் விளக்கிட முடியாது.

    தொள்ளாயிரத்து எண்பத்தியேழு டிசம்பர் இருபத்திநாலில் அந்த மகத்தான கலைஞன் உயிர் நீத்த போது தமிழகமே ஸ்தம்பித்தது. சோகம் என்ற சொல்லின் வலிமையை தமிழகம் அன்று முழுமையாக உணர்ந்தது.

    ஏறத்தாழ முப்பதுக்குமேற்பட்ட மதிப்புமிக்க உயிர்கள் அவருக்காக உதிர்ந்து போயின. அவரை அரசியலில் எதிர்த்து நின்றவர்களும் அன்று கண்ணீர் உகுத்தனர்.

    மத்திய அரசு எண்பத்தியெட்டில் அந்த பெருமகனுக்கு மிக உயரிய விருதான பாரத ரத்னா வழங்கி கௌரவிக்கிறது.

    பதினைந்து வருடங்களுக்கு மேலாக நேரடியான அரசியல் அநுபவம் இருந்தாலும் மக்கள் திலகத்தின் ஆட்சி அத்தனை திருப்திகரமானதாக இருந்திடவில்லை என்பதை இங்கு சொல்லித்தான் ஆகவேண்டும். அவர் திமுகாவை விட்டு வெளியேறியபோது அவரோடு அவசரம் அவசரமாக இணைந்து கொண்டவர்கள் பெரும்பாலும் திமுகாவில் பல காரணங்களால் ஒதுக்கப்பட்ட அதிருப்தியாளர்களும், அரசியல் சந்தர்ப்பவாதிகளுமாகவே இருந்தார்கள்.

    கருணாநிதியை ஊழல்வாதியாக குற்றம்சாட்டி கட்சி ஆரம்பித்த எம்ஜியார் தனது அரசின் சகல துறைகளிலும் ஊடுருவிய ஊழலை தடுக்க முடியாமற் போயிற்று. திரைப்படங்களில் சாமானிய மக்களுக்காக தொடர்ந்து குரல் எழுப்பியிருந்தாலும் அவர் ஆட்சியின் பயன்கள் அவர்களுக்கு எட்டமுடியாமல் போயிற்று. அவரது ஆட்சிகாலங்களில் தமிழகத்திற்கான தொலைநோக்கு திட்டங்கள் எதுவுமே சிந்திக்கபடாமற் போயிற்று.

    நிர்வாகத்திறன் போதாமை, நேர்மையான ஆலோசகர்கள் இன்மை, இவையெல்லாம் அவருக்கெதிராக நின்றது. ஆளும் கட்சியினரின் அபரிதமான தலையீடு அரசு எந்திரத்தை கடித்துக் குதறியது.

    அதேசமயம் குழந்தைகளுக்கான காமராஜரின் மதிய உணவுத் திட்டத்தை சீரமைத்து மதிப்புமிக்க சத்துணவுத்திட்டமாக்கியது மக்கள் திலகமே. அரசின் நியாயவிலைக்கடைகளை பெருமளவு விரிவாக்கியதும் பிற்படுத்தப்பட்டோருக்கான கல்வியில் அறுபத்தொன்பது விழுக்காடு இடஒதுக்கீடு ஏற்படுத்தியதும் அவர் ஆட்சி காலத்தில்தான்.

    தமிழ் ஈழ விடுதலைக்காக உயிர்துறந்த மாவீரன் பிரபாகரன் கரங்களை அன்நாளில் வலுப்படுத்த மக்கள்திலகம் துணையாக நின்றதை மறக்கமுடியாது.

    காலம் காலமாக கலைத்துறையில் அவர் ஏற்படுத்திக்கொண்ட மாயபிம்பம், ஒரு ஒப்பனை வடிவம், தலைமுறைகளைத் தாண்டி இன்றும் அவரை பேசிக்கொண்டிருக்கிறது. திரையுலகில் அவர் வாயசைத்த பாடல்கள் தமிழ்நாடெங்கும் இன்னும் அவரது நினைவை ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது.

    தனிமனித எதிர்ப்பில் தோன்றிய அவருடைய இயக்கம் இன்றும் ஒரு பெருங்கூட்டத்துக்கு அரசியல்வாழ்வு கொடுத்துக் கொண்டிருக்கிறது.

    இருந்தபோதும் அவரது எதிராளிகளுக்கும் அவர் இன்னும் மனங்கவர்ந்த மக்கள் திலகம்தான்.

    என் நினைவுகளில் மக்கள் திலகத்துக்கு நீங்காத ஒரு இடமுண்டு. அதில் ஒன்றும் இரு கருத்தில்லை.

  7. #3176
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Π*оссия
    Posts
    0
    Post Thanks / Like
    நேற்று இன்று நாளை

    ‘தோன்றிற் புகழொடு தோன்றுக’ என்ற வள்ளுவரின் வாக்குக்கேற்பவும், ‘இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்லவேண்டும் இவர்போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்’ என்ற தனது சொல்லுக்கேற்பவும் வாழ்ந்து மறைந்தவர்தான் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரையுலகில் நடிகராக நுழைந்து, இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் உயர்ந்தவர்.

    ‘மருதூர் கோபாலமேனன் ராமச்சந்திரன்’ என்ற இயற்பெயரைச் சொன்னால் பெரும்பாலா-னோரால் புரிந்துகொள்ள இயலாது. சுருக்கமாக எம்.ஜி.ஆர் என்றால் இளைய தலைமுறை-யினர்கூட புரிந்து புன்முறுவல் பூக்கின்றனர்.

    1917 ஜனவரி 17 அன்று கோபாலமேனன் – சத்தியபாமா தம்பதியருக்கு மகனாக இலங்கையில் பிறந்து, இள வயதில் கேரளாவில் வளர்ந்தார் அவர். சென்ற தலைமுறையும் இந்தத் தலைமுறையும் மட்டுமின்றி இனி வரும் தலைமுறைகளும் அவர் புகழைப் பேசும்.

    உழைக்கும் கரங்கள்

    தந்தையின் மறைவுக்குப்பின் ‘மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி’யில் நடிகராகச் சேர்ந்த எம்.ஜி.ஆர், சதி லீலாவதி மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்தார். மந்திரிகுமாரி மலைக்கள்ளன், அலிபாபாவும் 40 திருடர்களும் ஆகியவை அவரைப் பிரபலமாக்கின.

    நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன், மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் ஆகியவை அவர் இயக்கிய திரைப்படங்கள்.. இவற்றில் நாடோடி மன்னன் அவரது சொந்தத் தயாரிப்பாகும். அவர் தயாரித்த மற்றுமொரு படம் அடிமைப்பெண். சிறந்த நடிகருக்கான விருதுகள் எங்க வீட்டுப் பிள்ளைக்கும் ரிக்ஷாக்காரனுக்கும் அவருக்குக் கிடைத்தன. அடிமைப்பெண் சிறந்த படமாகத் தேர்வு பெற்றது. பல வெளிநாடுகளில் படமாக்கப்பட்ட உலகம் சுற்றும் வாலிபன் அதற்கு முந்தைய எல்லா ரிக்கார்டுகளையும் முறியடித்து வசூலில் சாதனை புரிந்தது. அவர் நடித்த கடைசிப் படம் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்.

    அவரது கடின உழைப்பையும் முன்னேற்றத்தையும் அங்கீகரித்து அவரது மறைவுக்குப்பின் இந்திய அரசு பாரத ரத்னா விருது வழங்கி கௌரவித்தது.

    தாயின் மடியில்

    பொதுமக்களின் – குறிப்பாகத் தாய்க்குலத்தின் – மனங்களைக் கொள்ளை கொள்ளும் கதாபாத்-திரங்களாகவே தேர்ந்தெடுத்து நடித்தார், எம்.ஜி.ஆர். கன்னித்தாய், தெய்வத்தாய், தாய்க்குப்பின் பாசம், தாய் சொல்லைத் தட்டாதே, என்று தாயை மையமாக வைத்தே பல படங்களில் நடித்தார். புகை பிடிப்பது, மது அருந்துவது போன்ற காட்சிகளில் நடிக்க மறுத்தார்.

    நினைத்ததை முடிப்பவன்

    இதர கதாநாயகர்களைப் போலன்றி, எம்.ஜி.ஆர் தன் படங்களில் பாடல்களுக்கும் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து வந்தார். பாடல் பதிவின்போதும் இசையமைப்பிலும் கூடவே இருந்து உன்னிப்பாகக் கவனிப்பதுடன் சில திருத்தங்களும் சொல்வார். தான் நினைத்தபடியே பாடல் திருப்திகரமாக வரும்வரை அவர்களை விடமாட்டார். அதனாலேயே வர்த்தகரீதியாக வெற்றி பெறாத அவரது சில படங்களில்கூடப் பாடல்கள் இனிமையாக அமைந்தன.

    தனிப்பிறவி

    அவரது திரைப்படப் பாடல்கள் சிலவற்றில் அவரது புனைப்பெயர்கள் இடம் பெற்றதுண்டு (புரட்சித் தலைவன் நீ, பொன்மனச் செம்மலைப் புண்படச் செய்தது யாரோ? வானகமே உருகாதோ வள்ளல் முகம் பாராமல்?). திரையுலகில் அவருக்குச் செல்லமாக ‘சின்னவர்’ என்றொரு பெயர் இருந்தது. அதையும் விட்டு வைக்கவில்லை நம் பாடலாசிரியர்கள் (சேலத்துப் பட்டென்று வாங்கி வந்தார் அந்தச் சின்னவரைப் போய்க் கேளும்).

    வேறு பல நடிகர்களுக்கும் பட்டப் பெயர்கள் இருந்தபோதிலும் அவை அந்த நடிகர்களின் பாடல்களில் இடம் பெறவில்லை. இந்தப் பெருமை எம்.ஜி.ஆர். ஒருவருக்கே சொந்தம்.

    என் கடமை

    கவிஞர் கண்ணதாசனுடன் கருத்து வேறுபாடு கொண்டு ‘தன் படங்களுக்கு அவர் பாடலே எழுதக்கூடாது’ என்று தீர்மானித்திருந்தார். ஆனால் பணத்தோட்டம் படத்திற்கு அவர் எழுதியிருந்த ‘பேசுவது கிளியா?” என்ற பாடலில் ‘சேரனுக்கு உறவா செந்தமிழர் நிலவா?’ என்ற வரியை ரசித்தவாறே கோபம் தணிந்து அதைச் சேர்த்துக் கொள்ளச் சம்மதித்தார்.

    உலகம் சுற்றும் வாலிபன் தயாரிப்பில் இருந்த சமயம் ஒருநாள் கவிஞர் வாலியிடம், “இந்தப் படத்தில் நீ கிடையாதய்யா” என்று எம்.ஜி.ஆர். சொல்ல, வாலி “அதெப்படி? என் பேரு இல்லாம இந்தப் படம் வெளியாயிடுமா?” என்று வாதிட்டார். இறுதியில் கவிஞர், “சரி, அப்படின்னா ‘வாலி’ங்கற என் பேரே இல்லாமே இந்தப் படத்தை ‘உலகம் சுற்றும் பன்’ அப்படின்னு மாத்தி வெளியிடுங்க, பார்ப்போம்?” என்றார். வாய்விட்டுச் சிரித்த எம்.ஜி.ஆர், அவருக்கும் அதில் பாட்டெழுத வாய்ப்பளித்தார்.

    ஒருமுறை டி.எம். சவுந்தரராஜன் மேல் கோபம் கொண்டு, தனது சொந்தப் படமான அடிமைப்பெண்ணுக்கு எஸ்.பி. பாலசுப்ரமணியத்தை விட்டே பாட வைத்து ஒலிப்பதிவு செய்தார். ஆனால் ‘தாயில்லாமல் நானில்லை, ‘உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது போன்ற உணர்ச்சி கொந்தளிக்கும் பாடல்களை இந்தப் புதிய குரலில் கேட்க மக்கள் துணிவார்களா?’ என்ற சந்தேகம் தோன்றவே, தன் வைராக்கியத்தைத் தளர்த்திக்கொண்டு டி.எம்.எஸ்.ஸையே திரும்ப அழைத்துப் பாடச் செய்தார். எஸ்.பி.பி. கேட்டுக்கொண்டதன் பேரில் ஆயிரம் நிலவே வா என்ற பாடலை மட்டும் தக்க வைத்துக்கொண்டார் (அந்தப் பாடல்தான் எஸ்.பி.பி.யின் திரையுலக வாழ்க்கைக்கே திருப்புமுனையாக அமைந்தது).

    தன் எதிரிகளையும்கூட அன்புடனும் நேசத்துடனும் வைத்திருக்க வேண்டும் என்பதைத் தன் கடமையாகவே கருதிச் செயல்பட்டார்.

    இதயக்கனி

    ஆரம்பத்தில் காங்கிரஸில் இருந்த எம்.ஜி.ஆர், அறிஞர் அண்ணாவின் வசீகரப் பேச்சுகளால் கவரப்பட்டு தி.மு.க.வில் இணைந்தார். பின்னாளில் அண்ணாவே எம்.ஜி.ஆரின் வசீகரத்தால் கவரப்பட்டு அவரைத் தன் இதயக்கனி என்று அறிவித்தார். சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.ஜி.ஆர், அண்ணாவின் மறைவுக்குப் பின் பொருளாளரானார்.

    1972யில் கருணாநிதி தன் மகன் மு.க. முத்துவைத் திரையுலகில் களமிறக்கினார். பிள்ளையோ பிள்ளை, பூக்காரி போன்ற படங்களில் எம்.ஜி.ஆர். மாதிரியே ஒப்பனைகள் செய்து நடிக்க வைத்தார். ‘திரையுலகை விட்டுத் தன்னை விரட்டவே கலைஞர் நாடகமாடு-கிறார்’ என்பதை சூசகமாகப் புரிந்துகொண்ட எம்.ஜி.ஆர், ஊழல் குற்றச்சாட்டை அவர் மீது சுமத்தி, “கட்சியின் கணக்குகளைக் காட்ட முடியுமா?” என்று சவால் விட்டார். கோபமுற்ற கருணாநிதி அவரைக் கட்சியிலிருந்தே நீக்கினார்.

    ‘அண்ணா திராவிட முன்னேற்றக் கழக’த்தைத் தொடங்கினார், எம்.ஜி.ஆர்.. அவரது சினிமா பாப்புலாரிட்டியால் கோடிக்கணக்கான மக்கள் அதில் இணைந்தனர். 1977யில் நடந்த பொதுத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தார். திரைப்பட நடிகராக இருந்து முதலமைச்சராக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த முதல் நபர் அவர்தான். 1987யில் முதலமைச்சர் பதவியிருந்தபோதே மரணமடைந்தார்.

    முகராசி

    1967யில் சட்டமன்றத் தேர்தலுக்காக தி.மு.க. தயாராகிக்கொண்டிருந்தபோது அண்ணாவிடம் எம்.ஜி.ஆர், “தேர்தல் நிதியா நான் எவ்வளவு தரணும்ண்ணா?” என்றதற்கு அண்ணா, “உன் பணம் தேவையில்லே தம்பி, உன் முகம்தான் தேவை. பிரச்சாரக் கூட்டங்கள்லே நீ வந்து முகத்தைக் காட்டு. அப்புறம் நமக்குத்தான் ஓட்டு” என்றார். அதன்படியே எம்.ஜி.ஆரின் பிரச்சாரங்களிலெல்லாம் கூட்டம் அலை மோதியது. அதிக வாக்குகளுடன் தி.மு.க. வென்றது.

    சிரித்து வாழ வேண்டும்

    எங்க வீட்டுப் பிள்ளை படத்தின் வெள்ளிவிழாக் கொண்டாட்டம் திருநெல்வேலியில் நடைபெற்றபோது, நடிகர் நடிகைகள் அனைவரும் பேசி முடித்தபின் கடைசியாகப் பேச வந்தார் எம்.ஜி.ஆர். அப்போது கூடுதலாக இன்னொரு மைக் வைக்கப்பட்டது. உடனே நம்பியார் வந்து, “நாங்க இத்தனை நடிகர் நடிகைங்க பேசறப்போ ஒரே ஒரு மைக்கை வச்சிட்டு இப்போ உங்களுக்கு மட்டும் ஏன் ரண்டு?” என்றார். “படத்திலேதான் என்கூட ஒரே சண்டை போட்டீங்க, இங்கேயுமா?” என்று எம்.ஜி.ஆர். பதில் சொல்ல, கூட்டம் ஆர்ப்பரித்தது. “இப்படியெல்லாம் பிரச்னையைத் திசை திருப்பாதீங்க, உங்களுக்கு மட்டும் ஏன் ரண்டு மைக்? அதுக்கு விளக்கம் சொன்னாலே ஆச்சு” என்றார் நம்பியார், விடாப்பிடியாக. உடனே எம்.ஜி.ஆர், “நான் படத்திலே ரண்டு வேஷத்திலே நடிச்சேனில்லையா? அதனாலேதான்” என்று ஒரு கணம்கூடத் தயங்காமல் சொல்லவும், சிரிப்பலை அடங்க வெகுநேரமாயிற்று.

    நல்ல நேரம்

    1967யில் ஒருநாள் எம்.ஜி.ஆர். வீட்டுக்கு எம்.ஆர். ராதா சென்றபோது பெற்றால்தான் பிள்ளையா படம் குறித்து அவர்களிடையே வாக்குவாதம் முற்றியது, சட்டென்று தன் கைத்துப்பாக்கியால் எம்.ஆர். ராதா எம்.ஜி.ஆரைச் சுட, இரு குண்டுகள் அவரது காதைத் துளைத்தன. இந்தச் சம்பவத்திற்குப் பின் எம்.ஜி.ஆரின் இடது காது பழுதடைந்து போய், பேசும் சக்தியும் பாதிக்கப்பட்டது. அறுவைச் சிகிச்சை செய்துகொண்டு குரலை மட்டும் ஓரளவு நிவர்த்தித்துக் கொண்டார். அவரது நல்ல காலம், பாதிப்பு காதுடன் நின்று போனது.

    நாடோடி மன்னன்

    மிகுந்த பொருட்செலவில் முதல் சொந்தப் படமாக நாடோடி மன்னனைத் தயாரித்தபின், ‘படம் நன்றாக ஓடுமா?’ என்று எம்.ஜி.ஆருக்கே கவலை பிடித்துக்கொண்டது. அண்ணாவிடம் சென்று தன் கவலையை வெளியிட்டார். அண்ணா தனக்கேயுரிய நகைச்சுவை உணர்ச்சி-யுடன் சொன்னாராம். “ஓடிட்டா நீ மன்னன், ஓடாமப் போனா நாடோடி”

    தர்மம் தலை காக்கும்

    வறுமையுற்ற ஏழைகளுக்கு வாரி வழங்குவதில் வள்ளலாய்த் திகழ்ந்தார் எம்.ஜி.ஆர். புயல், வறட்சி, வெள்ளம் போன்ற பேரழிவுகளின்போது தாராளமாக நிதியுதவி செய்வார். 1962யில் சீனாவுடன் போர் மூண்டபோது யுத்தநிதியாக ரூ. 75 ஆயிரம் கொடுத்தார். கடவுள் நம்பிக்கை அதிகம் இல்லாதபோதிலும் கேரளாவிலுள்ள மூகாம்பிகை கோவிலுக்கு அரைக் கிலோ எடையுள்ள தங்க வாள் ஒன்றை அன்பளிப்பாகக் கொடுத்தார். அவரது தர்ம குணம்தான் பல சந்தர்ப்பங்களில் அவரது உயிரைக் காப்பாற்றியது என்பது மக்களின் திடமான நம்பிக்கை.

    பாசம்

    புரூக்ளின் மருத்துவமனையில் எம்.ஜி.ஆர். சிகிச்சை பெற்று வந்த சமயம் சிவாஜி கணேசன் தன் மனைவி கமலாவுடன் அமெரிக்கா சென்று சந்தித்து நலம் விசாரித்தார். இருவரும் வெளியேறியபின் கமலாவை மட்டும் உள்ளே அழைத்த எம்.ஜி.ஆர். “கமலா, தம்பிக்கு அதிகமா கருவாடு கொடுக்காதேம்மா” என்றார். “நான் அதிகமாக் கருவாடு சாப்பிட்டதாலே உப்புச் சத்து கூடிப் போய், ஆஸ்பத்திரியிலே வந்து கிடக்கறேன். இந்தக் கதி தம்பிக்கு வந்திடக் கூடாதும்மா” என்று அவர் சொன்னதும், ‘அவர் இவ்வளவு கஷ்ட நிலையில் இருக்கும்போதும் தன் கணவர்மேல் இத்தனை பரிவும் பாசமும் காட்டுகிறாரே’ என்றெண்ணிய கமலாவுக்குக் கண்ணீரே வந்துவிட்டதாம்.

    ஆயிரத்தில் ஒருவன்

    ‘அவரது திரைவாழ்க்கை அரசியலுக்கு உதவியதா, அல்லது அரசியல்தான் திரையுலகுக்கு ஆதரவாக இருந்ததா?’ என்று கேட்பது, ‘முட்டை முதலில் வந்ததா கோழி முதலில் வந்ததா?’ என்று கேட்பதற்கு ஒப்பாகும். அரசியலில் அவர் கால் பதித்தபின் இரண்டும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தே இருந்தன.

    ‘வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார்?’ என்ற தன் கேள்விக்கு, தானே பதிலாக வாழ்ந்து மறைந்த மாமனிதர் அவர். அவரது புகழ் நீடூழி வாழ்க!

  8. #3177
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Π*оссия
    Posts
    0
    Post Thanks / Like
    திருமதி. மீனாட்சி நாகப்பன்.

    என்னுரை:
    “பச்சைக்கிளி முத்துச்சரம்” . . . . . .என்ற பாடலில்
    “வள்ளல் குணம்” யாரோ . . . . . . . என்ற பாடல் வரிகளின் கதாநாயகர்!

    காவியமாய்! நெஞ்சின் ஓவியமாய்! – காலங்கள் கடந்தாலும் எல்லோர் மனதிலும் என்றும் துடிக்கின்ற இதயமாய் வாழ்கின்றவர் திரு. எம்.ஜி.ஆர் என்றழைக்கப்படும் எம்.ஜி.இராமச்சந்திரன் ஆவார்!

    “இருந்தாலும் மறைந்தாலும் பெயர்சொல்ல வேண்டும்
    இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்” என்கிற பாடல் வரிகளுக்கு உயிர் ஊட்டியவர்! இலக்கண இலக்கியமாய்த் திகழ்ந்தவர்! இவ்வாறு மக்களின் மனதில் மக்கள்திலகமாய் விளங்கிய எம்.ஜி.ஆர் அவர்கள் பற்றிய என் மனத்துளிகள் சில!

    mgrசிறியோர் நலன் சில வரிகள்:
    “திருடாதே பாப்பா திருடாதே..” என்கிற மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் வரிகள்..

    “திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது” என்று டி.எம்.செளந்திரராஜன் அவர்கள் குரலில் பாடினாலும் மக்கள்திலகம் மூலமே அதுபோன்ற பாடல்கள் மக்கள் மனதில் நிலைபெற்று இன்றளவும் பாடப்படுகின்றன!

    ‘சின்னப்பயலே.. சின்னப்பயலே! சேதி கேளடா..
    . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
    ஆளும் வளரணும்.. அறிவும் வளரணும்..
    அதுதாண்டா வளர்ச்சி!” என்று இளம் குழந்தைகளை நோக்கி இனிமையாய் சொன்ன விதமும்,

    தூங்காதே தம்பி தூங்காதே!
    . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . என்ற பாடலில்.. பொன்னான வேலைகள் .. பணி நிறைவு செய்ய காத்திருக்கும்போது தூங்கிக் கழிக்கக்கூடாது என்கிற அறிவுரையைப் பாடலின் மூலம் நடித்துக்காட்டிய விதம் அருமை!

    “நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
    இந்த நாடே இருக்குது தம்பி!”
    என்று இளைஞர்களுக்கும் திரையிசைப் பாடல்மூலம் திகட்டாத கருத்துக்களை வழங்கியவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள்!

    இளமை இனிமை என்றும் என்றென்றும்:
    “ஹலோ! ஹலோ!! சுகமா..
    ஆமா! நீங்க நலமா..”
    என்று காதலனாய் காதலியுடன் பாடும்விதமும்…

    “மெல்லப் போ மெல்லப் போ
    மெல்லிடையாளே மெல்லப்போ “
    என்று காதலியின் நடையை வருணித்து…

    “தொட்டால் பூ மலரும்..
    தொடாமல் நான் மலர்ந்தேன்”
    என்ற பாடலில் காதலியைப் பார்த்து கண் சிவந்த விதமும், ஒவ்வொரு இளைஞனும் இளைஞியும் அன்றைய காலக்கட்டத்தில் “காதல்” எனும் உணர்வும், உணர்ச்சியும் எழாமல் இருந்திருந்தால் ஆச்சர்யமே! அவ்வளவு இனிமை என்றும் என்றென்றும் காணும்போது!

    நாட்டின் நலனில் பற்றுகொண்ட பாடல்கள்:
    “தாய் மேல் ஆணை! தமிழ்மேல் ஆணை..” என்று சத்தியம் செய்யும் பாடல்! சாத்தியமான பாடல் அது!
    “அச்சம் என்பது மடமையடா!
    அஞ்சாமை திராவிடர் உடமையடா!”
    என்கிற பாடல் பயத்தை நீக்கும் பாடல் அல்லவா?

    “உன்னையறிந்தால் நீ
    உன்னையறிந்தால் உலகத்தில் போரடலாம்
    உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலைவணங்காமல்
    நீ வாழலாம்!”
    என்ற பாடல் உன்னை அறிந்து கொள்! மற்றவர்களை குறை சொல்லுமுன் என்கிறது!

    “நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால். . . . . . . .” என்று பாடிய திரைப்படக் கதாநாயகர், பிறகு தமிழக முதல்வராய் ஆணையிட்டு மக்களின் நலன் காத்தது இறைவனின் அருளாசி!

    1960களில் கொடிகட்டிப்பறந்தவர் திரைப்படங்களில்!
    “அதோ அந்தப் பறவை போல வாழவேண்டும்
    இதோ இந்த அலைகள் போல ஆடவேண்டும்..” என்கிற பாடலில் வாழ்க்கைக் கடலில் துன்ப அலைகள், துயர அலைகள் வரும்.. அதை துடுப்புப்போல் தள்ளிவிட்டு இன்பமயமான வாழ்க்கை தொடர வேண்டும் என்று உணர்ச்சி பொங்க உரைத்தார்!

    மக்கள் பணி:
    திரைப்படங்களில் முதல்வராக… கதாநாயகராக… இருந்த மக்கள்திலகம், மக்களின் முதல்வராக பணியாற்றியது அவர் வாழ்க்கையின் உச்சம்! ஏழை எளிய மக்களுக்குப் பல திட்டங்களைக் கொண்டு வந்து அவர்கள் நலன் காத்த அருட்செல்வர்! சென்னையில் போரூர் செல்லும்வழியில் இராமாபுரத்தைக் கண்டால் எம்.ஜி.ஆரின் நினைவுகளில் மூழ்காதவர் எவரும் இலர்!

    காலஞ்சென்ற காவியத்தலைவன்!
    காரிருள் நீக்கிட வந்த கதிரவன்!
    வாழ்வில் பேரொளி கொடுத்த பெருஞ்சுடர்!
    இன்றளவும் உலகின் நீளமான இரண்டாவது கடற்கரையாம் மெரீனாவிலே வங்கக்கடலோரம் மக்களின் நம்பிக்கைச் சுடராய் காட்சிதருகிறார்!

    “பொதுவாக.. மண்ணைத் தோண்டி தங்கமெடுப்பதைக் அறிவோம்! முதன்முறையாக மண்ணைத்தோண்டி எங்கள் தங்கத்தையல்லவா புதைத்தோம்” என்கிற புலவர் புலமைப்பித்தன் அவர்களின் வைர வரிகளோடு இக்கட்டுரையை நிறைவு செய்ய விரும்புகிறேன்!

    மக்கள் திலகம் பற்றி மனம் நிறைந்தவை:
    சொல்லலாம்! சொல்லிக் கொண்டே இருக்கலாம்! அன்றும் இன்றும் என்றும் … இசையும் பாடலும் இருக்கும்வரை மக்கள் திலகத்தின் படக்காட்சிகள்..மனக்காட்சியாக மனம் நிறைந்து நிலைக்கும்!

    திருமதி.மீனாட்சி நாகப்பன்
    புதுக்கோட்டை

  9. #3178
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Π*оссия
    Posts
    0
    Post Thanks / Like
    எம். ஜெயராமசர்மா ….. மெல்பேண்

    ஈழத்தில் பிறந்தார். இன்னல் பல கண்டார். எதற்குமே இளைக்காமல்
    ஏற்றம் பல பெற்றார்.இரக்கமே அவருள் எங்கும் வியாபித்து நின்றதால்
    என்றுமே மக்கள் மனத்தில் நீங்கா இடம்கொண்டார். இதயக் கனியானார்.
    வாழவைத்த தெய்வமானார்.கலங்கரை விளக்கமானார்.எங்க வீட்டுப்
    பிள்ளை ஆகி என்றுமே மக்கள் திலகமாக எம் ஜி ஆர் விளங்குகிறார்.

    images (7)

    அவர்கடந்து வந்த பாதை கல்லும், முள்ளும், காட்டாறுகளும் நிரம் பியதாகும்.அவர் தென்றலைத் தீண்டியதில்லை.தேன் தொட்டு நின்றதும் இல்லை.பஞ்சணையில் படுத்ததும் இல்லை.பசியாற உண்டதும் இல்லை.அரைவயிறு,கால்வயிறுதான், அவருக்கும் அவரது குடும்பத்துக்குமே கிடைத்தது.

    நல்ல நிலையில் வாழ்ந்த குடும்பம் நலிவடைந்து போனதால் நாட்டைவிட்டு நாடுவரும் நிலையங்கு தோன்றியது.தந்தையை இளம் வயதில் பறி கொடுத்துவிட்டு தாயுடனும் சகோதரருடனும் ஈழத்தைவிட்டு இந்தியா வந்தனர் எம் ஜி ஆர் குடும்பத்தார். பசியைப் போக்குவதே பெரும்பாடாக இருந்தமையால் படிப்பு என்பதை நினைத்துப் பார்க்கவே முடியாத ஒன்றாகி இருந்தது.பாலகனான எம் ஜி ஆர் மூன்றாம் வகுப்புடன் பள்ளியைவிட்டு நாடகத்துறைக்குள் புகுந்துவிடும் நிலை உருவானது.வருமானத்துக்கு நடிப்பே வழிகாட்டியது. எழுத்தாளர் அனுராத ரமணனின் தாத்தா குடிலன் ஆர். பாலசுப்பிரமணியன் எம் ஜி ஆரின் ஆசிரியராக இருந்தார். இவர் பிற்காலத்தில் குணசித்திர நடிகரா னார்.
    நாடகத்தில் இருந்து படிப்படியாக திரைத்துறைக்குள் எம் ஜி ஆர் வந்து சேர்ந்தார்.1945 ல் ஜுபிடர் நிறுவனத்தார் எம்ஜிஆரை தமது படங்களான ராஜகுமாரி, அபிமன்யு, படங்கள் வாயிலாக கதாநாயகன் ஆக்கினார்கள். 1947 – 1948 காலப் பகுதியில் எம்ஜிஆருக்குக் கிடைத்த மாதச் சம்பளம் எவ்வளவு தெரியுமா ரூ350 ஆகும்.

    இக்காலகட்டமானது எம்ஜிஆரின் முதல்காலகட்டம் எனக் கொள்ளலாம்.சாதாரண எம்ஜிஆராக அவர் இருந்தாலும் அவருக்குள்ளே- தான் முனேற வேண்டும் என்னும் என்னும் வேகமே காணப்பட்டது எனலாம். அவர் யாரையும் நோகடிக்கமாட்டார் .முரண்டு பிடிக்க மாட்டார். பரியாதை கொடுப்பார்.சற்றுக் கூச்சச் சுபாபம் உள்ளவராகவும் காணப்பட்டார்.காந்தியச் சிந்தனை அவர்மனத்தில் அக்காலத்தில் பதிந்து காணப்பட்டது. அவரிடம் கடவுள் நம்பிக்கையிருந்தது.உருத்திராட்சம் அணிந்திருந்தார். அவர் பிற்காலத்தில் திமுக வில் இணைந்திருந்தாலும் சில கொள்கைகளில் விடாப் பிடியாக இருந்தாலும் … கடவுள் நம்பிக்கையை பழித்ததோ, குறை கூறியதோ இல்லை என்றே சொல்லலாம்.

    ” பக்தியுள்ளவர்கள் சாமி கும்பிட வேண்டும்.சாமி கும்பிட வேண்டாம் என்று நான் சொல்லத் தயாரில்லை. ஆனால் கடவுளின் பெயரால் ஏமாற்ற நினைக்காதீர்கள்.மோசடிகள் செய்ய முயலாதீர்கள்.என்பதே என் வேண்டு கோள். ஒன்றே குலம் ஒருவனே தேவன் இதுதான் என் கொள்கை “ என்று 15/ 12/ 1962 ல் மருதமலை முருகன் கோவிலில் எம்ஜிஆர் அவர்கள் பேசி இருக்கிறார்கள்.

    எம்ஜிஆர் அவர்களின் ஸ்டூடியோவில் 14 வருடங்கள் பணிபுரிந்தவர் திருமதி ஜோதி பிரபா. எம்ஜிஆரின் கடவுள் நினைப்புப் பற்றி அவரே சொல்லி இருக்கிறார்.எம்ஜிஆர் வீட்டில் நடந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தின் பொழுது
    கேக்கின் மேல் வைக்கப்பட்ட மெழுகு திரியை அணைத்த பொழுது எம்ஜிஆர் அவர்கள் …… ” ஏற்றிய ஒளியைப் பிறந்த நாளன்று அணைப்பது தவறு…. கேக் வெட்டுவது எல்லாம் மேலை நாட்டினர் பழக்கம்… நமக்குத் தேவையில்லை. நமது பண்பாடு கோவிலுக்குச் சென்று இறைவனை வேண்டுவோம்.இயலாத வர்களுக்கு ஏதாவது கொடுத்து அவர்கள் வாழ்த்தையும், பெரியவர்கள் வாழ்த்தையும் பெறவேண்டும்.. என்று கண்டித்தாக குறிப்பிடுகிறார்.

    எம்ஜிஆர் அவர்கள் தமது அம்மாவின் நினைவு நாளில் மெளன விரதம் இருப்பாராம்.அவருடை செயினில் இருக்கும் அம்மாவின் படம் பதித்த டாலருக்கு தினமும் சந்தனம் வைத்து அதனை தனது பனியனுள் வைத்துக் கொள்ளுவாராம்.கடவுள் மீது ஆழ்ந்த நம்பிக்கை இருந்தாலும் அதனை வெளியே காட்டிக்கொள்ளமாட்டாராம் என்று அவரிடம் பணிபுரிந்த ஜோதி பிரபா சுட்டிக்காட்டு கிறார்.

    எம்ஜிஆர் அவர்களின் மனதில் ஆத்மீகச்சிந்தனை இருந்து கொண்டே வந்திருக்கிறது. ஆனால் வெளியே அதனை விளம்பரப் படுத்திட அவர் விரும்பவில்லை என்றே எண்ணமுடிகிறது.இந்த ஆத்மீகபலமே அவரைப் பல இன்னல்களிலும் இருந்து காப்பாற்றியது என்பதையும் மறுப்பதற்கில்லை எனலாம்.

    நடிகமணி டி.வி. நாராயணசாமி என்பரே எம்ஜிஆர் அவர்கள் திமுக சார்பானவராக மாறக்காரணம் என்று சொல்லப்படுவதும் உண்டு.அண்ணா அவர்களோடு நெருங்கவும் திமுக காரனாக மாறவும் ஆன ஒரு சூழ்நிலைக்கு எம்ஜிஆர் அவர்களுக்கு ஏற்பட்டது.

    இதனால் அரசியலிலும், சினிவாவிலும் செல்வாக்கு மிக்கவராக உருவாகத்தொடங்கினார்.எம்ஜிஆர் அவர்களுக்கு அண்ணா அவர்களிடம் மிகுந்த விருப்பும், மரியாதையும் இருந்தது. திமுகாவில் அவர் இணைந்தாலும் திமுகவின் கொள்கைகளில் பூரண ஐக்கியம் இருந்திருக்கிறதா என்பது சந்தேகமே! அவர் மனம் ஆஸ்த்திகத்தையே நாடி நின்றது எனலாம்.

    மதுரையில் எம்ஜிஆர் அவர்களுக்கு வளங்கப்பட்ட வெள்ளி வாளை மூகாம்பிகை அம்மனுக்கே வளங்கினார்.காஞ்சிப் பெரியவரே எம்ஜிஆரை ” இவர் நல்லமனுஷன் ” என்று சொல்லியிருக்கிறார் என்றால் ஆஸ்த்திகத்தின் செல்வாக்கு எம்ஜிஆர் அவர்களிடம் நிறைந்தே இருந்திருக்கத்தானே வேண்டும்.முருகபக்தரான திருமுருக வாரியார் சுவாமிகளுக்கு திமுக தொண்டர்களால்தேவையற்ற தொல்லைகள் ஏற்பட்ட வேளை அவரையும் சமாதானம் செய்து …. அண்ணாவையும் சமாதானம் ஆக்கி.. வாரியார் சுவாமிகளைக் கொண்டே ” பொன்மனச் செம்மல் ” என்னும் பட்டத்தையும் பெற்றுக் கொண்டார் எம்ஜிஆர் என்றால் …. அங்கும் அடியாக இருந்தது ஆஸ்திக வேரே எனலாம்.அவரின் அந்த ஆஸ்திக நம்பிக்கைதான் அவரை அதியுயர் நிலைக்குக் கொண்டுசென்றிருக்கலாம் என்பது எனது அவிப்பிராயமாகும்.

    தேவருக்கும் எம்ஜிஆர் அவர்களுக்கும் மிகவும் நெருக்கம் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயமாகும்.தான் அரசியலில் பிரவேசித்துக் கட்சி தொடங்குவது , தேர்தலில் நிற்பது பற்றியெல்லாம் எம்ஜிஆர் சொன்ன போது …. எம்ஜிஆர் நல்லபடி வெற்றி பெறவேண்டு மென்று தேவர் மருதமலை முருகனுக்குக் காணிக்கையும் செலுத்தி அர்ச்சனையும் செய்து , விபூதிப்பிரசாதத்துடன் எம்ஜிஆரிடம் வந்து கொடுக்கிறார்.

    எம்ஜிஆரும் தேவர் கொடுத்த பிரசாதத்தை வேண்டாம் என்று சொல்லாமல் … அதனைவாங்கிக்கொள்கின்றார்.இவையெல்லாம் மக்கள் திலகத்தின் ஆஸ்த்திகத்துக்கு நல்ல
    எடுத்துக்காட்டுகள் அல்லவா ?

    பிராமணரை எதிர்ப்பது என்பது திராவிடக் கட்சிகளின் மிகப்பெரிய பிரசாரமாகும்.ஆனால் எம்ஜிஆர் கருத்து சற்று வித்தியாசமானதாகவே காணப்பட்டது.” முன்னேறியஜாதிகளிலும் ஏழைகள் இருக்கிறார்கள்.அவர்களுடைய கஷ்டங்களும் தீரவேண்டும் “என்று எம்ஜிஆர் கூறினார்.ஆனால் அவரின் கட்சிக்கு இது ஒத்துவராத கொள்கைதான்.
    கடும் எதிர்ப்பு வந்ததும் அதைப்பற்றிப் பேசாமலேயே இருந்துவிட்டார்.

    எம்ஜிஆர் ரசிகமன்றத்தையே முதன் முதலாக தோற்றுவிக்கக் காரணமாயிருந்ததேயார் என நினைக்கிறீர்கள்? கல்யாணம் என்னும் ஏழைப் பிராமண இளைஞனே !

    எம்ஜிஆர் மனத்தில் இவையெல்லாம் பிற்காலத்தில் பலமாற்றங்களுக்கும் சிந்தனைக்கும் வித்திட்டிருக்கலாம் அல்லவா?
    ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் எம்ஜிஆர் அவர்கள் படப் பிடிப்போடு நின்று அதில் தீவிரம் காட்டத்தொடங்கினார்.திராவிட நாடு பிரிவினையை அண்ணா அவர்கள் கைவிட்ட போது எம்ஜிஆர் அவர்கள் அதனைக் கண்டுகொள்ளவேயில்லை. ஹிந்தி எதிர்ப்புக் காலத்தும் அவரின் ஈடுபாடு அவ்வளவு இருந்ததாகவும் தெரியவில்லை.
    திமுக கொள்கைகளைவிட …. அவர்களது பேச்சாற்றல், நல்ல தமிழ் எழுத்து, அதுமட்டுமல்லாமல் அந்தக்கட்சியில் தனக்குக் கிடைத்த வரவேற்பு, செல்வாக்கு, இவைதான் எம்ஜிஆர் அவர்களைக் கவர்ந்திருந்தது என்பதே உண்மையாகும்.
    ஆனால் எதையும் வெளியில் காட்டிக்கொள்ளாமல் தனது செயல்களில் உற்சாகமாக உழைப்பதை மட்டும் விட்டுவிடாமலும் இருந்தார். அவரிடம் சில கொள்கைகள் இருந்தன. அவற்றை அவர் விட்டுக்கொடுக்கவே மாட்டார்.அதே வேளைதனக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக வற்புறுத்தவும் மாட்டார்.முன் கோபம் உள்ளவர்.ஆனால் பின்னர் சரியான காரணத்தை எடுத்துக் கூறினால் சமாதானம் ஆகியும்விடுவார்.சந்தேகமும் அவரிடம் காணப்பட்டதாகப் பலகுறிப்புகள் வாயிலாக அறியமுடிகிறது.பலம்களும் பல்வீனங்களும்தான் மனித வாழ்க்கை.அதில் இருந்து யருமே விட்டுவிலகவே முடியாதல்லவா ?

    எம்ஜிஆர் படங்களுக்குப் பல வெற்றிப்பாடல்களைக் கொடுத்து எம்ஜிஆர் அவர்களின் அன்புக்கும் நட்புக்கும் பாத்திரமாய் இருந்தவர் கவிஞ்ஞர் வாலி அவர்கள். அவர் ஸ்ரீரங்கத்துப் பிராமணர். நெற்றியில் விபூதி இல்லாமல் அவர்வருவதே இல்லை.

    ஒரு படப்பிடிப்பின் போது .. எம்ஜிஆர் அவர்கள் .. வாலியிடம் .. தான் சார்ந்தகட்சியினர் விபூதியணியும் வாலியை எப்படிப் பாட்டெழுத சமமதித்தாய்? எங்கள் கட்சியில் வேறு ஆட்களா இல்லை என்று கேள்விமேல் கேள்வி கேட்கிறார்கள். ஆகையால் இனி வரும்போது விபூதியை இட்டுக்கொள்ளாமல் வந்தால் நல்லது என்று எம்ஜிஆர் வாலியிடம் சொல்ல நேர்ந்தது.

    அதற்கு வாலி சொன்னார்- அப்படியா அண்ணா! நல்லது நீங்கள் வேறு பொருத்தமானவரை பார்த்து எழுதச் சொல்லுங்கள் என்று சொல்லிவிட்டு புறப்பட ஆயத்தமானார். ஆனால் பொன்மனச் செம்மல் அவரைச் சமாதானப் படுத்தி உங்கள் விருப்பப்படியே விபூதியுடனே எழுதுங்கள் என்று சொன்னதாக .. வாலிஅவர்களே கூறியிருக்கிறார்கள்.
    தனது கருத்தைச் சொன்னார்.ஆனால் மற்றவர் வருந்த மக்கள் திலகம் முயலவில்லை.இதனால் வாலியும் அவரும் நீண்டகாலம் கலையுலக் நண்பர்களாகவேஇருந்ததை யாவரும் அறிவர்.

    எம்ஜிஆர் இயல்பாகவே எந்தக் கெட்டபழக்கமும் இல்லாதவர்.ஒழுக்கமாக வாழ்ந்தவர்.ஏழ்மையை நன்கு அனுபவித்தவர்.வீடு இல்லாமல், படிக்கமுடியாமல், பணம் இல்லாமல், ஆதரவு இல்லாமல், வாழ்ந்து வந்தவர்.இல்லாமை இல்லாமல் போகவேண்டும்.

    எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும்.குடிசைகள் குடியிருக்கும் நல்லமனை ஆகவேண்டும்.ஏழைஎன்று சொல்லும் நிலை இருக்கவே கூடாது.கல்வி அனைவருக்கும் கிடைக்கவேண்டும் ,உணவு அனைவருக்கும் கிடைக்கவேண்டும், மடமை ஒழிந்து மக்கள் விழிப்புப் பெறவேண்டும். என்றெல்லாம் எம்ஜிஆர் மனத்தில் பெரிய கனவு இருந்தது.

    அந்தக் கனவுகளை கண்முன்னே கொண்டுவந்து மக்களுக்கு வெளிச்சமாகக் காட்டி அவர்கள் வாழ்க்கையில் நம்பிக்கை ஊட்டவேண்டும் என்றுவிரும்பினார்.அதற்கு அவர் கையில் எடுத்த உத்திதான் தமிழ்ச் சினிமா.

    எப்படி எப்படி எல்லாம் கனவுகண்டாரோ அப்படியே அதே பாத்திரமாகவே சினிமாவில் எம்ஜிஆர் அவர்கள் தோன்றினார்.வெற்றியும் கண்டார்.அந்த வெற்றிதான் அவரைத் தமிழ் நாட்டின் முதன்மந்திரி பதவியைத் தேடிக்கொடுத்தது. உயர், மத்தியதர, மக்களை இலக்காகக் கொள்ளாமல்… தொழிலாளர்கள், விவசாயமக்கள், கீழ், மத்திய
    தரத்தினரை தனது இலக்காகாக் கொண்டு… ஏழைபங்காளனாக, வீரனாக, நீதியை நிலை நாட்டுபவனாக,சமதர்மவாதியாக, என்று .. நல்ல குணமுடைய , யாவரும் விரும்பும் பாத்திரங்களாகத் தேர்ந்தெடுத்து… அதற்கு ஏற்ப கதை , வசனம் ,பாடல்கள்,காட்சிகள் அமைத்து எம்ஜிஆர் மக்கள் மனத்தில் குடியேறி நின்றார்.

    எம்ஜிஆர் அவர்களின் படங்களில் சமூகத்தளைகளை மீறி தனிமனித மேல் நிலைப்பாட்டை எய்தமுடியும் என்ற கருத்து மிகச் செப்பமாகப் பதியவைக்கப் பெற்றது.அவர் சித்தரித்த பாத்திரங்களின் குணாம்சங்களைக் கொண்ட ஒருவரகவே அவர் போற்றப்பட்டார்.

    இதனால் தமிழ்நாட்டின் நடுமட்டத்திற்குக் கீழ்வந்த சமூகப்படி நிலையினர் இடையே அவர் ஒரு புருஷராகவே போற்றப்பட்டார்.தம் நிலையிலுள்ள ஒருவர் மேல் நிலை அடைந்ததாகவே அவர் உயர்ச்சியையும் புகழையும் .. அச் சமூக மட்டங்களைச் சேர்ந்தோர் நம்பினார்கள்.

    இதனால் தன்னம்பிக்கையும், சுயவளர்ச்சி பற்றிய பிரக்ஞையும் உள்ள ஓர் இளைஞ்ஞர் குழாம் தமிழ்நாட்டில் வளரத்தொடங்கியது எனலாம். எம்ஜிஆர் தனது கவர்ச்சியின் தளமாக … தமிழ் பற்றிய நிலைப்பாட்டினைக் கொள்ளவில்லை. இன்றும் கூட கலைஞ்ஞர் கருணாநிதியோடு தொடர்புறுத்தப்படும் தமிழ்த்தன்மை எம்ஜிஆர் அவர்களொடு பொருத்திப் பார்க்கப்படுவதில்லை.எம்ஜிஆர் அவர்களுடைய அறைகூவல் நல்ல நேர்மையான மனிதனாக வரவேண்டும் என்பது பற்றியதாகாவே காணப்பட்டது. இன்று எம்ஜிஆர் அவர்கள் இல்லாத நிலையிற்கூட .. நினைத்துப் பார்க்கும்பொழுது… அவரின் தொடர்பாற்றல் திறனால் அவர் தன்னைப் பற்றிய மதிப்பீட்டினை உயர்த்துவதற்கு ஏற்றவகையில் நடந்துகொண்ட ஒருவர் என்ற எண்ணமே மேலோங்கி நிற்கிறது எனலாம்.

    எம்ஜிஆர் அவர்களை உண்மையில் திராவிட இயக்கச் சினிமாத்துறைச் செயற்பாட்டுச் சாதனைகளிலிருந்து நோக்காது … அதனைத் தளமாகாக் கொண்டு வளர்ந்து ..

    தனக்கென ஓரிடத்தினை வகுத்துக் கொண்டார் என்றே கூறல் வேண்டும்.மேலும் அண்ணா, கலைஞ்ஞர் ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து வேறுபட்ட ஒரு சமூகத்தாக்கத்தையே இவர் ஏற்படுத்தினார் என்றே கொள்ளல் வேண்டும்.

    அண்ணாவின் பாசறையில் வளர்ந்தாலும் எம்ஜிஆர் அவர்கள் அண்ணாவிடம் இருந்த நல்லகுணங்களையே எடுத்துக்கொண்டார்.தனக்கென உள்ளவற்றைப் பறிகொடுக்கவிரும்பவில்லை. சரியெனப் பட்டதை சமயத்தில் வெளிப்படுத்தித் தன்னுடைய தனியியல்பையும் அவர் வெளிப்படுத்தத் தவறியதும் இல்லை.எம்ஜிஆர் அவர்கள் எம்ஜிஆர் ஆகவே இருக்க விரும்புகிறார் என்பதை பேரறிஞ்ஞர் அண்ணாவும் அறிந்து வைந்திருந்தார் என்றுதான் சொல்ல வேண்டும்.

    நீதியை, நியாயத்தை, விட்டுவிட எம்ஜிஆர் விரும்பவில்லை.நீதியும் நியாயமும் எடுபடா நிலையில்த்தான் அவருக்கும் ஏனையோருக்கும் கருத்து மோதல் வந்து பிரியும் நிலை ஏற்பட்டது.அந்த நேர்மைதான் அவரை மக்கள் மனத்தில் என்றும் மக்கள் திலகம் ஆக்கியது.

    தமிழ்ச் சினிமாவில், அரசியலில், தனிப்பட்ட நடைமுறையில் எல்லாம் எம்ஜிஆர் அவர்களை ஒரு காலபுஷன் என்றுதான் சொல்ல வேண்டும்.நல்ல நண்பனாக இருந்துள்ளார் நல்ல நடிகனாக இருந்துள்ளார். சிறந்த கொடைவள்ளலாக விளங்கியுள்ளார்.கடின உழைப்பாளியாகவும் இருந்துள்ளார்.சிறந்த தொண்டனாகவும் இருந்துள்ளார்.

    அதேவேளை நல்ல அரசியல் ஆட்சியாளனாகவும் விளங்கியுள்ளார். எம்ஜிஆர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பு ஏற்றவேளையில் பல அருமையான பணிகளை எல்லாம் ஆற்றியிருக்கின்றார்.இலவசங்கள் பலவற்றை ஈந்து எல்லோர் மனங்களிலும் மன்னாதி மன்னனானார்.

    மதுவிலக்கை 1984ல் அமுலுக்குக் கொண்டுவந்தார். தமிழர் அல்லாதவர் எம்ஜிஆர் என்றும் … அவர் ஒரு மலையாளி என்றும் பிரசாரம் செய்யப்பட்டாலும் அது உண்மையல்ல என்பது பின் கண்டறியப்பட்டது.எம்ஜிஆர் அவர்களது காலத்திலேதான் தஞ்சையில் தமிழ்ப்பல்கலைக்கழகம் உருவாக்கம் நிகழ்ந்தது.எம்ஜிஆர் அவர்கள் தனது சினிமாவில் எதையெல்லாம் காணவிளைந்தாரே அவற்றை நிறைவேற்றவே எண்ணம் கொண்டு உழைத்தார்.

    அவர் பட்டப்படிப்புப் படித்தவர் அல்ல.ஆனால் எல்லோரும் படிக்க வேண்டும் என்று கனவும் கண்டார்.அதற்கான வழிவகைகளை தன் ஆட்சியிலும் ஏற்படுதிக்கொடுத்தார். அவரின் உதவியினால் படித்து முன்னேறியவர்கள் பலபேர். அவர்கள் எல்லாம் அவரை இன்றும் தெய்வமாகவே போற்றுகின்றனர்.

    அவரின் உயர்வுக்கும் பெருமைக்கும் காரணம் அவரது வள்ளல் தன்மை என்பதை எவருமே ஏற்றுக்கொள்ளுவார்கள்.கலைஞ்ஞர் அவர்கள் தனது குடுப்பத்தைப் பார்ப்பார்.

    எம்ஜிஆர் அவர்கள் மற்றவர்களுக்குக் கொடுப்பதையே நினைப்பார்.தனக்கென எதையுமே சேர்த்துவைக்கும் நிலை எம்ஜிஆர் அவர்களிடம் இருக்கவில்லை.அவரது கைகள் கொடுத்துக் கொடுத்துச் சிவந்த கைகள். கலியுகக் கர்ணன் என்றால் அது எம்ஜிஆர் அவர்களுக்கு மிகப்பொருந்தும் எனலாம்.

    படமுதலாளிகள், பட இயக்குனர்கள், சகநடிகர்கள், படத்தொழிலாளர்கள், உதவியென நாடிவருபவர்கள் யாவருக்கும் வளங்கிய வள்ளலாக எம்ஜிஆர் அவர்கள்விளங்கினார்.அப்படி ஒருவரை இன்று காண்பது அரிது என்பதை அனைவருமே ஏற்றுக்கொள்வர்கள்.ஈழத்தமிழரைக் காப்பாற்ற தன்னால் இயன்றரை அதாவது உயிரிருக்கும்வரை எண்ணியவர் எம்ஜிஆர் அவர்கள். பிரபாகரனை தனது மகனாக எண்ணி கோடி கோடியாக தனது சொந்தப் பணத்தைக் கொடுத்த கொடைவள்ளல் எம்ஜிஆர் அவர்கள்.தமிழ் இனம் தலை நிமிர்ந்து வாழ மனத்தாலே ஆசைப்பட்டவர் மகோன்னத மாமனிதர்மக்கள்திலகம் எம்ஜிஆர் அவர்கள்.அவரின் பிரிவால் தமிழ்நாட்டு மக்கள் தத்தளித்தைவிடப் பலமடங்கு புலம்பிப் புரண்டவர்கள் ஈழத்துத் தமிழர்கள் ஆவர்.அந்த அளவுக்கு மக்கள் திலகம் ஈழத்துத் தமிழர்களின் இதயதெய்வமாக விளங்கினார்.

    ” இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
    இவர்போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் ” இது எம்ஜிஆர் அவர்களைத்தவிர வேறு எவருக்குமே பொருத்தமாக இருக்காது என்று கருதுகின்றேன்.

    நான் ஆணையுட்டால் அது நடந்துவிட்டால் – இங்கு
    ஏழைகள் வேதனைப் படமாட்டார் —- என்று படத்தில் பாடிநடித்தோடு நில்லாமல் அதனை நிதர்சனமாக நடத்திக்காட்டியவர்தான் எம்ஜிஆர் என்னும் இமயம்.

    அதுமட்டுமல்ல .. நினைத்தை நடத்தியே முடிப்பவன் நான்! நான் ! நான் ! …. என்று துணிவுடன் மூன்று முறை .. நான் என்பதை உச்சரிக்கும் துணிவு எம்ஜிஆர் அவர்களைவிட யாரருக்கு வரமுடியும் ?

    குண்டடிபட்டாலும், கால்முறிவு ஏற்பட்டாலும் .. கடசிவரை நடிப்பையும் விடவில்லை. நல்லகுணத்தையும் விடவில்லை. நாட்டையும் மறக்கவில்லை.

    ” நான் செத்துப் பிழைச்சவன்டா ” என்று பட்ட துன்பங்களையெல்லாம் ஒரு பக்கமாக வைத்துவிட்டு ‘ உழைக்கும் கைகளே உருவாக்கும் கைகளே ” என்று எம்மையெல்லாம்உற்சாகப்படுத்தி ” நாளை நமதே இந்த நாளும் நமதே ” என்று ஆறுதல் கூறிவிட்டு எல்லோர் மனங்களில் அமர்ந்திருக்கிறார் மக்கள் திலகம் எம்ஜிஆர்.அவரை நாம் ‘ நாடோடி மன்னனாகவும் கண்டோம்’ சக்கரவர்த்தித் திருமகனாகவும் பார்த்தோம்” ” ஆயிரத்தில் ஒருவனாகவும்” அவரே தான் இருக்கிறார்’ அந்த ” இதயக் கனியை” மறக்கத்தான் முடியுமா ? அவர்தான் ‘ மன்னாதி மன்னன் ” ஆகி மக்கள் மனதை இன்றும் ஆண்டுகொண்டு இருக்கிறார் !

  10. #3179
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Π*оссия
    Posts
    0
    Post Thanks / Like
    அதிரை இளையசாகுல்.

    mgrநடமாடும் ஒரு மனிதாபிமானம், வறுமைக்கோட்டை அழிக்க இயற்கை எறிந்த அழிரப்பர், வறண்ட தமிழகத்தை வளமாக்க வந்த அடைமழை, வரலாற்றையே வளைத்துப்போட்ட கருணைக் கல்வெட்டு, எளியோர் வாழ்வை பண்படுத்த வந்த இரக்க இதிகாசம், தவறுகளை சரியாக்க இறைவன் எய்த பிரம்மாஸ்திரம், புயலால் பாதித்த பூமிக்கு கிடைத்த மரக்கன்று, சுவையே அறியாத நாவுகளை நனைத்த கற்கண்டு, ஈழ மக்களும் இனிதே பூஜிக்கும் இனிப்புப் புலி, பசித்த வயிறுகளுக்காய் வந்த அட்சய பாத்திரம், அப்பாவி மக்களுக்கு அழகாய் கிடைத்த அன்புப் பரிசு, வட மாநிலங்களே வியந்து நோக்கிய தென்னகத்து ராஜ தந்திரி!

    இந்த அத்தனைக்கும் சொந்தக்காரர் மக்கள் திலகம், மனிதநேய மாமன்றம் எம்.ஜி.ஆர். தவிர வேறு யாராக இருக்க முடியும்?

    குடிசைவாசிகள் அனைவரும் கண்ணீர் யாகம் செய்து மக்கள்திலகத்தைக் கேட்டே மன்றாடினார்களோ?

    அதனால் தமிழ் நாட்டுக்குக் கிடைதத்த கண்கவர் மனிதர்தானோ எம்.ஜி.இராமச்சந்திரன் என்கிற எம்.ஜி.ஆர்!

    அவர் வந்த பிறகுதான் சுவாசப் பிரச்சினையில் சிக்கித் திணறிக் கொண்டிருந்த தமிழகப் பட்டித் தொட்டிகளுக்கெல்லாம் பிராண வாயு கிடைத்தது எனலாம்!

    அரசியல் உலக வரலாற்றில் தேர்தலில் படுத்துக்கொண்டே வெற்றி வாகை சூடிய ஒரே தலைவர் யாரென்று கேட்டால் அது மக்கள் திலகம் என்றே பதில்வரும்!

    அப்பேற்பட்ட மனிதாபிமானியைப் பற்றிக் கட்டுரை எழுத போட்டி வாயிலாக என்னைப் பணித்ததை நான் பெருமையாகக் கருதுகிறேன்!

    தமிழக அரசியல் சாம்ராஜ்ஜியத்தில் புரட்சித்தலைவர் அவர்களுக்கென்று தவிர்க்க முடியாத ஒரு தனியிடம் உண்டு.

    மலையாள நாட்டுக்கு சொந்தக்கரார் என்றாலும் இலங்கை தேசத்தின் கண்டியில் பிறந்து, தமிழ்நாட்டில் வந்து கோலோச்சியர்வதான் மக்கள்திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள். அவர் பிறந்த இடம் நமக்கு முக்கியமல்ல.. இங்கே அந்தத் தங்கத் தலைவனின் திறந்த இதயமே முக்கியம். கண்டவரையெல்லாம் வாழ வைக்கும் இந்த தமிழகம், இந்த வானவரை வாழவைக்காதா என்ன?

    இன்றுவரைக்கும்கூட, தமிழ்நாட்டு பாமரர்களின் மனதில் எம்.ஜி.ஆர். அவர்கள் தெய்வமாகவே அமர்ந்திருக்கிறார்கள்.

    இன்றும் ஒரு சில கிராம மக்களால் எம்.ஜி.ஆர் அவர்கள் உயிரோடு இருப்பதாகவே நம்பப்படுகிறார் என்றால் எத்தனை ஆழமாய் தன் சுவட்டை பதித்துச் சென்றிருக்கிறார் என்பதை நாம் உணர்ந்து கொள்ளலாம்!

    எம்.ஜி.ஆர். அவர்கள் முதன் முதலாய் திரையில் தோன்றியது சதி லீலாவதி என்றொரு திரைப்படத்தில்… அதில் அவர் காவல் அதிகாரி வேடம் ஏற்று நடித்திருப்பார்.

    அந்தப் படத்திற்குப் பிறகு மதிப்பு மிக்க நல்லதொரு வேடத்திற்காய் காத்துக் கொண்டிருக்கிறார். ஆனால், அவருடைய எதிர்பார்ப்பு நாளடைவில் பொய்த்துப்போனது.. ஆனாலும் அவர்தம் முயற்சியைக் கைவிடவில்லை…

    அடுத்தடுத்து வந்ததெல்லாம் காவல் அதிகாரி பாத்திரமே என்பதால், தொடர்ந்து அதில் நடிக்கும்பட்சத்தில் எம்.ஜி.ஆர். காவல் அதிகாரி வேடத்திற்கே லாயக்கு என்று முத்திரைக் குத்திடக்கூடும்.. கருவேப்பிலையாய் நம்மைப் பயன்படுத்திக் கொண்டு பின்னர் தூக்கியெறிந்துவிடக்கூடும் என்று பயந்து அதற்குப் பிறகு கிடைத்த ஒரே மாதிரியான பாத்திரங்களையெல்லாம் புறந்தள்ளி நல்ல ஒரு வேடத்தை எதிர்பார்த்து கவலையோடு அமர்ந்திருந்தவர்தான் பின்னர் அந்தத் துறையையே ஆட்டுவித்தார் என்பதை அறிக..

    அதற்காக அவர் எவ்வளவு உழைத்திருப்பார்.. எவ்வளவு இழந்திருப்பார்.. அந்த நிலையை அடைய எத்தனைக் கடின முயற்சிகளை மேற்கொண்டிருப்பார் என்று எண்ணி பார்க்கையில், அவரை உழைப்பின் முன்னோடியாக வைத்து நாமும் நம்மைப் பட்டைத் தீட்டிக் கொள்வதில் எந்தத் தவறுமில்லை என்பதாகவே மனதுக்குப்படுகிறது.

    முதலில் அவர் திரைத்துறையில் புக மேற்கொண்ட கடின முயற்சிகளையும், அதனால் அடைந்த வேதனைகளையும் கஷ்ட நஷ்டங்களையும் என்றுமே மற்ககாதவர்.. ஆகவேதான் அவர் திரைத்துறையில் வளர்ந்த நிலையில் தகுதி வாய்ந்த பல புதிய நபர்களுக்கு வாய்ப்புகளை அள்ளி அள்ளிக் கொடுத்தார். அதன்வழியில் திரைத்துறையில் அறிமுகமானவர்தான் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்கள்.

    எம்.ஜி.ஆர் அவர்கள் தன் பால்ய காலத்தில் வறுமையென்ற அரக்கனால் அதிகம் பாதிக்கப்பட்டவர். ஆகவே தான் திரைத்துறையின் உச்சத்தில் இருந்த போதும் சரி.. தமிழக ஆட்சி பீடத்தில் அமர்ந்தபோதும் சரி.. ஏழை மக்களுக்கு நிறையவே அள்ளி அள்ளிக் கொடுத்தார். அதனால் தமிழக வரலாற்றில் நல்லதோர் இடத்தையும் பிடித்தார்!

    எம்.ஜி.ஆர் அவர்களை கொடை வள்ளல் என்பதைவிட “கடை”வள்ளல் என்று சொன்னால் மிகவும் பொருத்தமாயிருக்கும்! காரணம், அவருக்குப்பிறகு ஈகைத் தன்மையோடு மக்களுக்காக செல்வங்களை வாரி இறைத்தவர் யாருமே இல்லை எனலாம்!

    இன்னெரு விஷயத்தை இங்கே பதிவு செய்ய வேண்டும்..

    அமைச்சரவை கூடும் இன்றைய நிலையில் பெரும்பாலும் சட்டசபை.. சண்டை சபையாகவே இருந்திருக்கிறது. கற்றோர் கூடும் அவை அது – எதிரில் இருப்பவர் எதிரி என்றாலும் மரியாதை நிமித்தமாக நடந்துக் கொள்வதே மனித மரபு.

    சில நேரங்களில் ஆளுங்கட்சிக்கும், எதிர் கட்சிக்கும் வாக்குவாதம் முற்றி தவறான சொற்பிரயோகத்தைப் பயன்படுத்துவதும், மைக்கைப் பிடுங்கி அடிக்கப்பாய்வதும்..உச்சக் கட்டமாக சேலையை உருவி பெண்ணை அவமானப்படுத்திய நிகழ்வெல்லாம் நடந்திருக்கிறது. இதை யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.

    ஆனால் மனிதப் புனிதர் எம்.ஜி.ஆர் தமிழகத்தை ஆண்ட காலத்திலெல்லாம் சட்டசபை கெளரவிமிக்க ஒரு சபையாகவே இருந்திருக்கிறது. அனைவரும் உள்ளே சரி சமமாகவே நடத்தப்பட்டார்கள். கண்ணியமாகவே, அழைக்கப்பட்டார்கள்.. அதற்கு உதாரணமாய் கூட ஒரு சம்பவத்தை மேற்கோள் காட்டலாம்.

    எம்.ஜி.ஆர். அவர்கள் முதன்முதலாய் முதலமைச்சர் பதவியில் அமர்ந்த நேரம்.. அப்போது சட்டமன்ற உறுப்பினராயிருந்த கிணத்துக்கடவு கந்தசாமி என்பவர் அன்றைய நாளின் எதிர்கட்சி தலைவராக இருந்த கலைஞர் கருணாநிதி அவர்களை.. அவருடைய பெயரைச்சொல்லி ஏதோ சாடி பேச, அதை செவியுற்ற முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள், மரியாதையின்றி பேரைச் சொன்னதற்காக கந்தசாமியை கலைஞர் அவர்களிடம் மன்னிப்பு கேட்க வைக்கிறார்என்றால், எம்.ஜி.ஆர். அவர்களை அவர்தம் ஆட்சியை மெச்சாமல் எப்படி இருக்க முடியும்? எம்.ஜி.ஆர். அவர்கள் உயிரோடு இருக்கும்வரை கலைஞர் அவர்களின் பெயரைச் சொல்லி ஒருமுறைகூட அழைத்ததில்லை என்பதை விளங்கிக் கொள்க!

    சாதி மத விசயங்களில் எம்.ஜி.ஆர். அவர்கள் இன்னொரு பெரியாராகத் திகழ்ந்தார் என்பதற்கு தாழ்த்தப்பட்ட ஏழை சிறுபான்மை, மக்களிடம் அவர் நடந்து கொண்ட விதம் சாட்சி..

    இன்றைய நாளில் சாதி வேற்றுமைகள் சற்று கட்டுக்குள் வந்துவிட்டாலும், கடந்த முப்பது ஆண்டுகளுக்கு இருந்த நிலை கிராமங்கள்தோறும் சாதி சம்பிரதாய பிரச்சினைகள் தலைவிரித்தாடியதை மறுப்பதற்கில்லை.. அது ஆளும் கட்சியாளர்களையும் விட்டுவைக்கவில்லையென்றால் அது உண்மையே..

    ஆனால் அந்த ஒரு விசயத்தில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் சற்று விதி விலக்காகவே இருந்தார்கள். எதையும் முற்போக்குத் தனமாகவே அணுகினார்கள்.

    1978ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். அவர்கள் முதலமைச்சர் பதவியில் இருந்த நேரம்.. மதுரையில் பிரபலமான மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவரை பார்க்கச் சென்றிருக்கிறார். அப்போது அந்த மருத்துவமனையில் வராண்டா பகுதியில் முதியவர் ஒருவர் வற்றிய உடம்போடு உடல் நலிவுற்ற நிலையில் படுத்திருந்திருக்கிறார். அவரை ஊன்றிக் கவனித்த புரட்சித்தலைவர் அவர்கள் அடையாளம் கண்டுகொண்டவராய் அவரை அலக்காக அப்படியேத் தூக்கி தன் நெஞ்சில்போட்டு அணைத்தவாறு உடனே மருத்துவமனை நிர்வாகத்தை அழைத்து அந்த அன்பரை “சிறப்புப் பகுதிக்கு” சேர்க்கச் சொல்லி அவருக்கான அத்தனைச் செலவுகளையும் தானே ஏற்றுக்கொண்டாரென்றால், எத்தனைப் பெரிய மனிதாபிமானி அவர்!

    அங்கே வராண்டாவில் படுத்திருந்த அந்த முதியவர் வேறு யாருமல்ல.. கர்மவீரர் காமராஜர் ஆட்சிக்காலத்தில் காவல் துறை மந்திரியாகப் பணியாற்றிய தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த மாண்பாளர் கக்கன் அவர்கள்தான்!

    இப்படி மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வாழ்வில் நடந்த சம்பவங்கள் ஏராளம்!

    எம்.ஜி.ஆர். அவர்களைப் பொறுத்தமட்டில்.. அவர் ஏழை மக்களுக்கெல்லாம் கிடைத்த வலி நிவாரணி, எப்போதும் கண் விழித்தே கவனித்துக் கொள்ளும் கலங்கரை விளக்கம், தாகம் தீர்க்க ஓடோடி வந்த மனித ஜீவநதி, மகத்தான மனிதாபிமானத்தின் மறுபக்கம், அரிச்சந்திரனின் அடுத்த வாரிசு.. இப்படி அவரைப் புகழ்ந்துகொண்டே போகலாம்.

    ஒரு சமயம் ‘ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ என்கிற பத்திரிக்கையின் சென்னைப் பிரதிநிதியான ராமானுஜம் என்பவர் தன் உறவினரான ஏழைப் பெண் ஒருவருக்கு ‘பைபாஸ்’ அறுவை சிகிச்சைக்காக உதவி தேடி ஏ.வி.எம்.சரவணன் அவர்களை அழைத்துக்கொண்டு சென்றிருக்கிறார். உடனே விசாரித்த மக்கள் திலகம் அவர்கள் அதற்கு உண்டான மொத்தப் பணத்தையும் தானே அளித்து உவகை கொண்டிருக்கிறார்.

    இப்படி அவருடைய சரித்திரத்தில் உதவி என்று போய் நின்றுவிட்டு வெற்றுக் கையோடு திரும்பியவர்கள் யாரும் இல்லை எனலாம்.

    அன்று எம்.ஜி.ஆர் அவர்கள் அன்பே வா படப்பிடிப்பில் இருந்த போது முதியவர் ஒருவர் அங்கே தரைக்கு வார்னீஷ் போடும் பணியில் மும்முரமாயிருந்திருக்கிறார்.. அந்நேரம் புரட்சித்தலைவரின் பார்வையில் அவர் பட்டுவிட.. உடனே அவரை அழைத்து விசாரித்திருக்கிறார். ரொம்ப காலத்திற்கு முன்பு மேடைதோறும் ராஜபார்ட் வேடத்தில் தோன்றி நடித்தவராம் அவர். அந்நிமிடமே அந்த முதியவரை கட்டித் தழுவி பிரத்யேகமாய் உண்டாக்கி வைத்திருந்த தன் உணவறைக்கு அழைத்துச்சென்று அவரோடு மதிய உணவை பகிர்ந்துண்டு தக்க தொகையும்கொடுத்து அவரை மகிழ்ச்சியோடு அனுப்பி வைத்தாரென்றால்.. அந்த கொடை வள்ளலை வாழ்த்தாமல் எப்படியிருக்க முடியும்?

    தோழமை வேறு, தொழில் வேறு, பகை வேறு, திறமை வேறு என்று இவ்வுலகில் எத்தனை பேர் இருக்கிறார்கள்?

    ஒருவர் தம்மை விமர்சிக்கும்பட்சத்தில் அவரை அடிவேரோடு சாய்த்துவிடவே நினைக்கும் மனிதர்களுக்கு நடுவே.. அது மாதிரியான பலஹீனத்தோடுதான் பெரும்பாலான மனிதர்கள் இருக்க.. மக்கள் திலகம் அப்படியல்ல..

    கவியரசு கண்ணதாசன் அவர்களும் எம்.ஜி.ஆர் அவர்களும் ஒரு நேரத்தில் நெருக்கம் கூடிய நண்பர்கள்.. பிறகு இருவருக்கும் கருத்து வேற்றுமை வந்து பிரிவினைக்கு வித்திட்டது. அதனைத் தொடர்ந்து கண்ணதாசன் பாட்டெழுதினால் நான் நடிக்க மாட்டேன் என்று அறிக்கைவிட்ட நிலையிலும் கவியரசின் கவித்திறமையை எம்.ஜி.ஆர் அவர்கள் குறைத்து மதிப்பிடவில்லை.

    ஆகவேதான், கண்ணதாசன் அவர்களை அரசவைக் கவிஞராக்கி அழகு பார்த்தார் என்பதெல்லாம் மறுக்க முடியாத வரலாறு..

    ஆக இத்தனைத் தனித்தன்மையோடு நடந்த, மக்களுக்கு வாரி வாரி வழங்கிய இன்னொரு பாரி, மற்றுமோர் பேகன், புரட்சித்தலைவர், பொன்மனச்செம்மல், மக்கள்திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் மக்கள் மனதில் இன்றும் வாழ்கிறார்.. என்றென்றும் வாழ்வார் என்றுகூறி இக்கட்டுரையை நிறைவுசெய்கிறேன்!

  11. #3180
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Π*оссия
    Posts
    0
    Post Thanks / Like
    தஞ்சை வெ.கோபாலன்

    எம்.ஜி.ஆர் எனும் இந்த மூன்றெழுத்து மந்திரச்சொல் தமிழ்நாட்டு சினிமா ரசிகர்கள் மனதில் ஒரு எழுச்சியை உண்டாக்கியது. இதன் தாக்கம் பின்னாளில் இவர் அரசியலில் முக்கியத்துவம் பெற்றபோது அந்த எழுச்சி பல மடங்கு பெருகி இவரைப் புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது. திரையுலக நாயகன் எனும் முறையிலாகட்டும், அரசியல் தலைவர் என்ற வகையிலாகட்டும் இவரது தோற்றத்தினாலும், பிரிட்டிஷ் முன்னாள் பிரதமர் சர் வின்ஸ்டன் சர்ச்சில் போல தன் இரு விரலை விரித்து வெற்றிக் குறி காட்டி, புன்னகை மன்னனாய் மக்கள் மனங்களில் நீங்கா இடம் பிடித்துவிட்டார். திரையில் கதாநாயகனாக வந்து தீனர்களைக் காக்கும் அனாதரட்சகனாக நடித்ததை உண்மை வாழ்க்கையிலும் மக்கள் அவரை அதுபோலவே உணரத் தலைப்பட்டுவிட்டார்கள். திரையில் நல்லவனாக, ஏழைகளுக்கு இரங்கி உதவி புரிபவனாக, பெண்களின் மானம் காக்கும் மாவீரனாக, சகோதர பாசம் நிறைந்தவராக, தந்தை தாய் நலன் பேணும் நல்ல மகனாக இவர் திரையில் தோன்றியவாறே நிஜ வாழ்விலும் இருப்பவர் எனும் எண்ணம் நிரந்தரமாக மக்கள் மனங்களில் தங்கிவிட்டது.

    mgrphotogallery81954 இவர் மலைக்கள்ளன் எனும் திரைப்படத்தில் நடிக்க கோவைக்குச் சென்று நடித்துவிட்டு ரயிலில் சென்னை திரும்புவதற்காக கொச்சின் விரைவு ரயிலில் கோவை ரயில் நிலையத்தில் முதல் வகுப்பில் ஏறி அமர்கிறார். அவருடன் ஸ்ரீராம் எனும் நடிகர், ஜி.வரலட்சுமி எனும் நடிகை ஆகியோரும் இருக்கின்றனர். இவருக்கு அடுத்த பெட்டியில் எர்ணாகுளத்திலிருந்து பயணம் செய்து வந்து கொண்டிருந்த பள்ளி மாணவனாக இருந்த நான் ஜன்னல் புறம் சென்று இவர் முதுகைத் தொட்டு அழைத்து ‘என்ன படத்தில் நடிக்கிறீர்கள்?” என்றேன். இன்றைய நிலைமையாக இருந்தால் என்னை அங்கேயே ஒருவழி செய்திருப்பார்கள். அவர் அமைதியாகத் திரும்பி “மலைக்கள்ளன்” என்றார். நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை எழுதிய அந்த நாவலை நான் படித்திருந்ததால் இன்ன வேஷமா என்று வினவ, அவர் ஆம் என்று தலையாட்டினார். அதற்குள் ஸ்ரீராம் கீழே இறங்கி ஏதோ வாங்க வெளியே வந்தார். அவருடன் ஜி.வரலட்சுமியும் இறங்கினார். ரசிகர்கள் அவர்களைச் சூழ்ந்து கொண்டார்கள். நான் எம்.ஜி.ஆர். இருந்த ஜன்னல் அருகிலேயே நின்று பேச்சு கொடுத்தேன். திரும்பிப் பார்த்த அவர் புன்னகை செய்து, போதும் என்பதை அறிவுறுத்தினார். அவர் பார்வையில் கோபமோ, எரிச்சலோ இல்லை என்பது புரிந்தது. அவர் நடிப்பில் எனக்கு அத்தனை ஈடுபாடு இல்லையாயினும், அவருடைய இந்த அன்பான நடவடிக்கை என்னை அவர்பால் ஈர்த்தது. இதுவே முதன் முதல் அவரிடம் என் மரியாதை உருவானது.

    1956ஆம் ஆண்டு. திருச்சியில் தி.மு.க. இரண்டாவது மாநில மாநாடு நடந்தது. அந்த மாநாட்டில்தான் தி.மு.க. தேர்தலில் நிற்க வேண்டுமா வேண்டாமா என்று வாக்கெடுப்பு எடுக்கப்பட்டது. அந்த மாநாட்டில் மிகப் பெரிய அறிவுபூர்வமான கருத்தரங்கம்; அதில் தி.மு.க.வின் பெருந்தலைவர்கள் ஒவ்வொரு தலைப்பில் பேசினார்கள். ஈ.வி.கே.சம்பத் திராவிட நாட்டின் வெளியுறவுக் கொள்கை என்று பேசினார். அதைப்போல், திராவிட நாட்டின் பல்வேறு கொள்கைகள் குறித்துப் பலரும் பேசினார்கள். மாநாட்டுப் பந்தல் நிறைந்த கூட்டம். தலைவர்கள் பேச்சுக்கு ஒன்றும் பெருத்த ஆரவாரமோ, வரவேற்போ இருந்ததாக உணரவில்லை. ஒப்புக்கு திராவிடநாடு எனும் கற்பனை நாட்டின் நிறைவேற்ற முடியாத பல கொள்கை அறிவிப்புகள் வந்து கொண்டிருந்ததைத் தவிர அதில் குறிப்பிடும்படி எதுவும் இல்லை. அப்போது எம்.ஜி.ஆர். அந்த பந்தலுள் நுழைந்தார். கொட்டகை நிறைந்த மக்கட்கூட்டம் எழுந்து நின்று உற்சாக கைதட்டலுடனும், ‘விசில்’ ஒலியுடன் வரவேற்பு கொடுத்தது. காலம்சென்ற என்.ஜி.ஓ. சங்கத் தலைவர் சிவ.இளங்கோ மற்றும் அவர் நண்பர்களுடன் மாநாட்டில் உட்கார்ந்திருந்த எனக்கு இது ஒரு புதுமை. பிரபலமான தலைவர்களுக்கு இந்த அளவு வரவேற்பு இல்லாத நிலையில், போயும் போயும் திரைப்பட புகழ் மட்டுமா இவருக்கு இப்படிப்பட்ட வரவேற்பைக் கொடுத்திருக்க முடியும்? இல்லை இதன் பின்னால் ஏதோவொரு கவர்ச்சி, ஏதோவொரு நம்பிக்கை மக்களுக்கு இவர்மீது வந்திருக்க வேண்டும். அது என்ன என்பதை அறிந்து கொள்ளும் ஆவல் எனக்கு ஏற்பட்டது.

    சென்னையில் ஒரு குப்பத்துப் பகுதி. இவரது பட ஷூட்டிங் அந்த மீனவர் குப்பத்துக்கு அருகில் நடந்தது. அங்கிருந்த ஏழை எளிய குடிசை வாசிகள் இவர் ஓய்வில் இருக்கும் சமயம் அருகில் சென்று ஏதோ பேச்சுக் கொடுக்க, அவரும் அன்போடு அவர்களுடன் கலந்துரையாடிய காட்சி, இது என்ன இவர் ஒரு வித்தியாசமான மனிதராகத் தென்படுகிறாரே என்று எண்ணத் தோன்றியது.

    ஒரு சமயம் பத்திரிகையொன்றில் இவரது புகைப்படம் வெளியானது. வயது முதிர்ந்த கிழவி, மகா ஏழையாக இருக்க வேண்டும், பொக்கை வாய், இவர் அருகில் சென்று இவர் முகத்தருகே திருஷ்டி கழித்து கைகளைத் தன் முந்தலையில் வைத்து சொடுக்கி திருஷ்டி கழித்தாள். அடுத்த கணம் இவர் தன் ஜிப்பா பைக்குள் கைவிட்டு கையில் வந்த கரன்சி தாள்களை இந்த அம்மையின் கையில் கொடுத்து அவரைத் தழுவிக் கொண்டார். இது நடிப்பா, இந்த மனிதரின் உள்ளார்ந்த அன்பா? பத்திரிகைகளும், இவரைப் பிடிக்காதவர்களும் இதை நடிப்பு என்றனர். பெரும்பாலோர், இதுதான் இந்த மனிதரின் உண்மையான முகம் என்றனர். நான் பின்னதை ஏற்றுக் கொண்டேன்.

    முதலமைச்சராக இருந்த அண்ணாதுரை அவர்கள் அகாலமாக மரணமடைந்துவிட்டார். அடுத்து யார் என்ற கேள்வி எழுந்தது. அண்ணா இருக்கும்போதே நாவலர் நெடுஞ்செழியனை அழைத்து, மாநாட்டுக்கு “தம்பீ வா! தலைமையேற்க வா!” என்று அழைத்த வாசகம் வரலாற்றில் இடம் பெற்றுவிட்டது. ஆகையால் அவர்தான் அடுத்த தலைவர் என்று நாடே எதிர்பார்த்திருந்த நிலையில், தலைமைக்குப் போட்டி எழுந்தது. அப்போது எம்.ஜி.ஆர். விரும்பியவரே தலைவராக முடிந்தது என்றால், இந்த தனி மனிதனுக்கு அந்தக் கட்சியிலும் சரி, மக்கள் மத்தியிலும் சரி ஊடுறுவியிருந்த செல்வாக்கு நாட்டுக்கு நன்கு புரிந்தது.

    ஏதோவொரு சினிமா படப்பிடிப்புக்காக இவர் கோவா கடற்கரையில் நடித்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் சார்ந்திருந்த கட்சியின் போராட்டமொன்று தமிழ்நாட்டில் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தது. அப்போது மக்கள் மனங்களில் எழுந்த சந்தேகம், இவர், தான் சார்ந்த நடிப்புத் தொழிலுக்கு முதலுரிமை தருவாரா, அரசியலுக்கா என்று பார்த்துக் கொண்டிருந்தனர். கட்சிக்காரர்கள் கட்சிப்பணிதான் என்பர்; கலா ரசிகர்களோ அவர் சார்ந்த நடிப்புத் தொழில்தான் என்பர். இவர் இரண்டாவது நிலைப்பாட்டை எடுத்தார், அதனால் வீண் கசப்புக்களை எதிர்கொண்டார். ஆனாலும் அவர் தொழில் மீது வைத்திருந்த பற்று கட்சிப் பற்றைக் காட்டிலும் அதிகம் என்பதை வெளிப்படுத்தினார். அந்த வகையில் தன்னுடைய நம்பகத் தன்மையை இவர் மக்களுக்குச் சொல்லாமல் புரியவைத்தார் என்பதே என் எண்ணம்.

    ஆதியில் இவர் ஒரு காங்கிரஸ்காரர். பெருந்தலைவர் காமராஜ் மீது மாறாத மரியாதை வைத்திருந்தார். அந்த வகையில் இவர் கதரே அணியவும் தொடங்கினார். 1953இல் இவரது அரசியல் நிலைப்பாட்டில் ஒரு மாற்றம் வந்தது. காங்கிரசில் ஆர்வம் கொண்டிருந்த இவர் தி.மு.க.வை நாடி வந்தார். அதற்குக் காரணம் சி.என்.அண்ணாதுரை எனும் மாமனிதர்தான். அவரே சொன்னார் எம்.ஜி.ஆரிடம். இவர் முகத்தைக் காட்டினால் போதும் லட்சக் கணக்கில் கட்சிக்கு வாக்குகள் வந்து குவியும் என்று. ஆம்! அதுதான் சரியான கணிப்பு, அதை சிலர் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்பதால் வந்தது கட்சியில் பிணக்கு.

    1967இல் அண்ணாவின் மறைவுக்குப் பிறகு எம்.ஜி.ஆர். கட்சியின் பொருளாளர் ஆனார். 1967இல் சொந்த முறை விரோதம் காரணமாக இவர் துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளாகி உயிர் பிழைத்தார். இவர் கழுத்தில் கட்டோடு படுத்திருக்கும் படம் சுவரொட்டிகளில் கண்டதுமே அவர் சாந்திருந்த கட்சிக்கு வாக்குகள் பேய்மழைபோல கொட்டித் தீர்த்து, அவர்கள் மாபெரும் வெற்றியை ஈட்டினார்கள் என்பது நாடு கண்ட வரலாற்று உண்மை. இப்படித் தனிமனிதனின் துன்பம் ஒரு கட்சியின் ஏற்றத்துக்கு வழிவகுத்தது என்றால் அவர் மக்கள் மனங்களில் எத்தனை ஆழமாகப் பதிந்திருக்கிறார் என்பதுதானே?

    ஒரு முறை தஞ்சையில் காவல்துறையில் விருது பெற்ற அதிகாரிகளுக்கு விருதுகள் வழங்கும் அணிவகுப்பு மாலை 4 மணிக்கென்று ஏற்பாடாகியிருந்தது. நான் 3 மணி சுமாருக்கு அந்த போலீஸ் திடல் இருக்கும் கலெக்டர் அலுவலக சாலை வழியாக என்னுடைய இருசக்கர வாகனத்தில் சென்றபோது தடுத்து நிறுத்தப்பட்டு வேறோரு சுற்றுப் பாதை வழியாகச் செல்லப் பணிக்கப்பட்டேன். சாலை வெறிச்சோடிக் கிடந்தும் அந்த திசையில் இருந்த என் அலுவலகம் செல்ல முடியாமல் சுற்றி வரும்படி நேர்ந்தது வருத்தமளித்தது. ஆனால் எம்.ஜி.ஆர். ஒரு முறை தஞ்சை மருத்துவக் கல்லூரி சாலையில் திறந்த ஜீப்பில் வந்து கொண்டிருந்தார். எங்கள் குடியிருப்புப் பகுதி பாலத்தடியில் நாங்கள் பலர் பேசிக்கொண்டு நின்றிருந்ததைப் பார்த்து, அவர் ஜீப் நின்றது. புன்னகையோடு எங்களைப் பார்த்து கையெடுத்துக் கும்பிட்டு வணங்கியதைக் கண்டு எங்களுக்கு திகைப்பு. நட்புரிமையோடு அவர் நடந்து கொண்டது ஒரு அரசியல் வாதிக்கே உரிய சாமர்த்தியமாகக் கூட இருக்கலாம். அதை உண்மை நட்புபோல நடந்துகொண்ட அந்த அருமையான காட்சி எங்கள் மனங்களில் அவர் நீங்கா இடம் பெற்றுவிட்டார்.

    அவர் காலமானார் எனும் செய்தி கேட்டு எங்களுக்கே ஏற்பட்ட சொந்த இழப்பைப் போல உணர்ந்தோம். இதற்கு முன்பு மகாத்மா காந்தி சுடப்பட்ட போதும், ஜவஹர்லால் நேரு காலமானபோதும், பெருந்தலைவர் இறந்து போனார் எனும் செய்தியைக் கேட்டபோதும் ஏற்பட்ட அதே உணர்வு எம்.ஜி.ஆர். எனும் மூன்றெழுத்து மனிதர் மாண்டார் எனும்போதும் உள்ளத்தை வருத்தியது, துக்கத்தை ஏற்படுத்தியது; அப்போதுதான் தெரிந்தது அவர் எங்கள் மனங்களில் எத்தனை உறுதியாக அமர்ந்திருக்கிறார் என்று. காலங்கள் மாறலாம்; கோலங்கள் மாறலாம், ஆனால் மனங்களில் படிந்த இதுபோன்ற உணர்வுகள் மட்டும் என்றென்றும் மாறாதிருக்கும்.

    முந்தைய காலங்களில் ஒரு தனி மனிதரின் புகழையும், பெருமைகளையும் உலகுக்கு அறிவிக்க அவரது மெய்க்கீர்த்தியை எழுதி கருங்கல்லில் வடித்து வைப்பார்கள். அப்படிப்பட்ட மெய்க்கீர்த்தியாக எம்.ஜி.ஆர். என்ற* இந்த தனிமனிதரின் புகழ், பெருமை அனைத்தையும் தமிழ்நாட்டு மக்களில் பெரும்பாலோர், குறிப்பாக ஏழை, எளியவர்கள், பெண்மணிகள், இளைஞர்கள், குழந்தைகள் ஆகியோர் தத்தமது நெஞ்சங்களில் பதிந்து வைத்திருக்கிறார்கள். அது சென்ற தலைமுறையோடு முடிந்துபோன செய்தியல்ல, இந்த தலைமுறைக்கும் தொடர்ந்து அதே உணர்வை தந்து கொண்டிருக்கிறது என்பதை அவரது பழைய படங்கள் இப்போதும் திரையரங்குகளில் கூட்டம் அலைமோத பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதிலிருந்து தெரியவருகிறது. இது ஏதோ மார்லன் பிராண்டோவையோ, கிளிண்ட் ஈஸ்ட்வுட் நடித்த படங்களையோ பார்க்கும் உணர்வில் அல்ல, எம்.ஜி.ஆர். எனும் நம் காலத்தில் வாழ்ந்த ஒரு மாமனிதனின் புகழுக்கு மரியாதை செய்கிறோம் எனும் உணர்வில்தான் பார்க்கிறார்கள். காலத்தால் அழிக்கமுடியாத இடத்தை அந்த மனிதர் பெற்றிருந்தார் என்பதுதான் முக்காலும் உண்மை.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •