-
13th January 2018, 11:24 PM
#2971
Junior Member
Platinum Hubber
-
13th January 2018 11:24 PM
# ADS
Circuit advertisement
-
14th January 2018, 09:42 AM
#2972
Junior Member
Diamond Hubber
-
14th January 2018, 09:59 AM
#2973
Junior Member
Platinum Hubber
மய்யம் திரியின் நண்பர்களுக்கும் , பார்வையாளர்களுக்கும் இனிய நல் பொங்கல் வாழ்த்துக்கள் .
-
14th January 2018, 06:33 PM
#2974
Junior Member
Platinum Hubber
மக்கள் திலகத்தின் 101 வது பிறந்த நாளில் 17.1.2018 அன்று மாலை சென்னை நகரில் இரண்டு விழாக்கள் நடை பெற உள்ளது .
1. ராமாவரம் தோட்டத்தில் மக்கள் திலகத்துடன் பணியாற்றியவர்களுக்கு எம்ஜிஆர் விருது வழங்கும் விழாவில் பல திரைப்பட நடிக நடிகைகள் கலந்து கொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது .
2. ஐசரி கணேஷ் அவர்களின் தயாரிப்பில் மக்கள் திலகத்தின் ''கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு '' -அனிமேஷன் படமாக தயாரிக்க உள்ளதாகவும் சத்யா ஸ்டுடியோவில் படத்திற்கான பூஜை துவங்க உள்ளதாகவும் விளம்பரம் வந்துள்ளது .
-
14th January 2018, 07:13 PM
#2975
Junior Member
Platinum Hubber
படித்தவர்கள் மட்டுமே பத்திரிகை வாசிக்கிறார்கள். ஆனால் படிக்காதவனும் சினிமா பார்க்கிறான். அந்த பாமரர்கள் என் படத்தில் நான் சொல்வதையும் செய்வதையும் நம்புகிறார்கள். அவர்களின் மனதில் தவறான கருத்துகளையும் பொய்களையும் புகுத்த நான் சம்மதிக்க மாட்டேன். நடிகன் என்ற முறையில் எனக்கு சமூக பொறுப்பு இருக்கிறது. அதை நிறைவேற்றும் கடமை இருக்கிறது//
எப்படி பட்ட உயர்ந்த பண்பு உண்மையிலேயே இந்த சமூகத்திற்கு நீங்கள் ஒரு வாத்தியார் தான் அய்யா இன்றைய காலகட்டத்தில் இரட்டை அர்த்த வசனங்களும்,பீப் பாடல் எழுதிப்பாடும் பாடக புலவர்கள் செய்யும் அளப்பரைகளுக்கு அளவே இல்லாமல் போய்விட்டது.
உங்களுக்கு இருந்த பொறுப்புணர்வும்,சமூக அக்கறையும்,இவர்களுக்கு இல்லாததின் விளைவே இந்த சமூக சீரழிவுக்கு காரணம்.என்ன செய்வது தாங்கள் இல்லாத தமிழ் சினிமா சீரழிவை சந்தித்தே தீரும்.
நாம பாடுற பாட்டும்,ஆடுற கூத்தும் படிப்பினை தந்தாகனும் நாட்டுக்கு படிப்பினை தந்தாகணும் .
இருந்தாலும்,மறைந்தாலும்,
பேர்சொல்ல வேண்டும்.
இவர்போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்.
வாழ்க என்றென்றும் புரட்சித் தலைவரின் புகழ் – நன்றி.
அன்புடன்
ஸ்ரீகாந்த்.ப
courtesy - net
-
14th January 2018, 07:15 PM
#2976
Junior Member
Platinum Hubber
இவர் போல யாரென்று ஊர் சொல்லிக் கொண்டே இருக்கும்… அடுத்த நூற்றாண்டிலும்!
திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் படிக்க வேண்டும் என்பதுதான் என் அதிகபட்ச ஆசை. ஆனால் பரந்த அறிவு கிடைக்கும் என்ற காரணம் காட்டி மாநிலக் கல்லூரியில் சேர்த்துவிட்டார் என் சகோதரி (தூயநெஞ்சக் கல்லூரியிலேயே இருந்திருக்கலாம். ஏதோ தெரிந்ததை வைத்து நிம்மதியாக வாழ்க்கையைக் கழித்திருக்கலாம்..).
வேண்டா வெறுப்போடு சென்னை வந்தாலும், மிகுந்த விருப்போடு நான் முதலில் பார்த்த இடங்கள் ராமாவரம் தோட்டம்… அடுத்து புரட்சித் தலைவரின் ஆற்காடு இல்லம். அப்போது அவர் முதல்வர். அவரைப் பார்க்க எங்கள் ஊர் எம்எல்ஏ அன்பழகனுடன் ராமாவரம் தோட்டத்துக்குப் போயிருந்தோம். சூரிய தரிசனம் என்பதற்கு நிகரான தரிசனம் அது!
அவரை ஒரு அரசியல் தலைவர் என்று சொல்வது மன்னிக்க முடியாதது. அரசியல் தலைவருக்கான வரையறைகள் அனைத்தையும் தாண்டிய அவதார புருஷன்தான். என் வாழ்நாளில் நான் பார்த்த ஒப்பில்லாத மனிதர். அந்த சந்திப்பு, ராமாவரம் தோட்டம், பின்னொரு நாளில் அவரை கோட்டையில் சந்தித்தது பற்றி பின்னொரு நாளில் எழுதுகிறேன்.
எம்ஜிஆர் மறைந்த சில மாதங்கள் கழித்து, நினைவில்லமாக மாறிவிட்ட ஆற்காடு இல்லத்தின் ஒவ்வொரு பகுதியிலும் கண்ணீருடன் சுற்றிப் பார்த்த ஒரு மழை நாள் இன்னும் மனதில் இருக்கிறது. இல்லத்தின் காவலர் முத்து அடிக்கடி சொல்வது, ‘கடவுள் இருந்தார், எம்ஜிஆர் உருவில்’!
அரசியல், சினிமா, சமூக மதிப்பீடுகள் என அனைத்திலும் என்னைப் பொறுத்தவரை மிகப் பெரிய இடம் எம்ஜிஆருக்கு உண்டு. வாடும் பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலாரின் வார்த்தைகளுக்கு, நூறு சதவீதம் உயிர் கொடுத்த பெருந்தகை இந்த புரட்சித் தலைவர்!
தனிப்பட்ட மாச்சரியங்கள், அரசியல் மாறுபாடுகளால் அவர் பற்றி பதிவு செய்யப்பட்ட விமர்சனங்களை நான் இப்போதும் பொருட்படுத்துவதில்லை.
பத்திரிகையாளனான பிறகு, கிட்டத்தட்ட இருபது முறை நான் பார்த்தது அமரர் எம்ஜிஆர் இல்லத்தைத்தான். அவரது ஒவ்வொரு நினைவு நாள் அல்லது பிறந்த நாளில் என்னையும் அறியாமல் என் கால்கள் தேடிச் செல்வது அவர் சமாதியை அல்ல… இந்த ஆற்காடு இல்லத்தைத்தான்.. அந்த வீட்டை முழுசாய் பார்த்து முடித்து வெளியில் வரும்போதும், அத்தனை தன்னம்பிக்கை!
சென்னை தி.நகர் ஆற்காடு தெருவில் இருக்கிறது எம்.ஜி.ஆர் நினைவு இல்லம். சிவாஜியும், எம்.ஜி.ஆரும் ஒரு காலத்தில் பக்கத்து, பக்கத்து தெருக்காரர்கள். தெற்கு போக் ரோடு வழியாக சிவாஜியின் அன்னை இல்லத்தை கடந்து சென்றால் இடது பக்கமாக ஆற்காடு சாலையில் தலைவரின் இல்லம்.
தமிழ் சினிமாவின் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத ஆளுமை வாழ்ந்த இல்லம் இது என்று கற்பூரம் அடித்து சத்தியம் செய்தாலும் யாராலும் நம்ப முடியாத எளிமையான இல்லம்.
1990ஆம் ஆண்டு ஜானகி எம்.ஜி.ஆர் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தாலும், அதற்கு முன்பிருந்தே எம்ஜிஆர் ரசிகர்கள் திரளாக வந்து தரிசித்து சென்ற இல்லம் இது. தமிழகத்தின் தலைவிதியை நிர்ணயித்த பல முடிவுகள் பிறந்த இடமும் இதுதான்.
எம்.ஜி.ஆர் மறைந்து 30 ஆண்டுகள் கடந்த நிலையிலும், இன்றும் நூற்றுக்கணக்கான மக்கள் அந்த இல்லத்துக்கு வந்து கண்ணீர் மல்க அவரை நினைத்து அஞ்சலி செலுத்துவதைப் பார்க்க முடிகிறது.
இனி இல்லத்தைச் சுற்றி வருவோம்…
நினைவு இல்லத்தின் தரை தளப் பகுதியில் எம்.ஜி.ஆருக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசுகள் வைக்கப்பட்டுள்ளன.
கிட்டத்தட்ட எம்.ஜி.ஆர் நடித்த படங்களில் 90 சதவிகிதப் படங்களுக்கு நூறாவது நாள் விழா கேடயமும் நினைவுப் பரிசும் கொடுத்திருக்கிறார்கள். கீழ் தளத்தின் மையத்தில் எம்.ஜி.ஆர் பயன்படுத்திய 4777 எண்ணுள்ள, சைரன் பொருத்தப்பட்ட அம்பாஸிடர் கார் புதுமெருகோடு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. உள்ளே மைக்குகள், செயற்கைக் கோள் ரேடியோ வசதி. இப்போதும் நல்ல கண்டிஷனுடன் இருக்கும் கார் இது என்றார்கள் பாதுகாவலர்கள். இது மக்கள் திலகத்தின் சொந்தக் கார். கடைசி வரை அவர் அரசாங்க வாகனத்தைப் பயன்படுத்தவில்லை!
முதல் தளத்தில் எம்ஜிஆர் பெற்ற பரிசுகள், டாக்டர் பட்டம் பெற்றபோது அணிந்த அங்கி, இடுப்பில் செருகும் குறுவாள், சாட்டை, மெகா சைஸ் பேனாக்கள், கூலர்ஸ், அந்த பிரத்யேக ஷூ என்று அவர் பயன்படுத்திய பொருட்கள் பெருமளவு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
தலைவர் வளர்த்த சிங்கமான ராஜாவின் பதம் செய்யப்பட்ட பிரம்மாண்ட உடலைப் பார்க்கும்போதே பிரமிப்பாக உள்ளது.
பெருந்தலைவரைப் போலவே இந்த புரட்சித் தலைவரும் ஒரு படிக்காத மேதைதான். அவரது நூலகம் இன்னொரு ஆச்சர்யம். கிட்டத்தட்ட ஐயாயிரம் நூல்கள்… பெரும்பாலும் தமிழ், தமிழ் வரலாறு, தமிழ் இலக்கியம் மற்றும் ஆங்கில நூல்கள் இடம்பெற்ற அந்த நூலகம், எம்ஜிஆரின் அறிவுப் பசிக்கு சின்னமாக நிற்கிறது.
எம்.ஜி.ஆர் பயன்படுத்திய அந்த சிறிய அலுவல் அறை அப்படியே இருக்கிறது. மேஜையில் அவரது தொப்பி, கண்ணாடிகள், பேனாக்கள்.
அலுவல் அறை வழியாக மீண்டும் கீழ்தளத்தின் முன்பக்கத்துக்கு படிக்கட்டுகள் வழியாக வந்தால், அங்குள்ள அறைகளில் எம்.ஜி.ஆர் நடித்த படங்களின் ஸ்டில்கள் வரிசையாக – சதிலீலாவதியிலிருந்து, மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் வரை (136 படங்கள்) பிரேம் போட்டு மாட்டப்பட்டிருக்கின்றன. கிட்டத்தட்ட நாற்பதாண்டுக்காலம் தமிழ் சினிமாவில் அவர்தான் ராஜாதி ராஜா. பெரும்பான்மையான படங்கள் நூறு நாட்கள் அல்லது வெள்ளி விழா அல்லது அதற்கும் மேல் நிறைந்த மக்கள் திரள், குறையாத வசூலுடன் ஓடியவை.
வெளியில் வந்தால், புரட்சித் தலைவர் பற்றிய புத்தகக்கள், சிடிக்கள், கேசட்டுகள், டிவிடிக்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. எத்தனை முறை கேட்டாலும் சிலிர்ப்பூட்டும் அவரது மணிக்குரலில் வெளியான பேச்சுக்கள் அடங்கிய சிடிக்கள், டிவிடிக்களுக்கு அத்தனை மவுசு… இவர் போல யாரென்று ஊர் சொல்லிக் கொண்டே இருக்கும்… அடுத்த நூற்றாண்டிலும்!
குறிப்பு: சென்னையில் என் மனம் லயித்த இடங்களைப் பற்றி ‘மெட்ராஸ் தினங்கள்’ எனும் தலைப்பில் தொடர்ச்சியாக எழுத ஒரு விருப்பம். முடிந்த வரை பெரிய இடை வெளி விடாமல் எழுத முயற்சிக்கிறேன். இஷ்ட தெய்வத்தை வணங்கி முதல் அத்தியாயத்தை ஆரம்பிக்க வேண்டும் என்ற வழக்கை நானும் மீற விரும்பவில்லை. அமரர் எம்ஜிஆரை வணங்கி முதல் பகுதியை எழுதியுள்ளேன்!!
–வினோ
net
-
14th January 2018, 07:19 PM
#2977
Junior Member
Platinum Hubber
புரட்சித் தலைவர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா... ஓஹோவென்று கொண்டாட வேண்டும் என அரசியல் தலைவர்களும் தொண்டர்களும் ரசிகர்களும் பெரிய அளவில் திட்டமிட்ட விழா இது. ஆனால் ஜெயலலிதாவின் மரணம், அதைத் தொடர்ந்து எழுந்த அரசியல் குழப்பங்களில், பெரிதாகக் கண்டு கொள்ளப்படாத விழாவாக மாறிப் போனது.
பிரேக்கிங் செய்திகளே ஊடகத்தை முற்றாக ஆக்கிரமித்ததில், எம்ஜிஆர் நூற்றாண்டு செய்திகள், கட்டுரைகளைப் பார்க்க முடியவில்லை. அந்தக் குறையைத் தீர்க்க இதோ சில கட்டுரைகள்...
தமிழ் சினிமாவில் பல முதன்மைகளை, புதுமைகளை நிகழ்த்தியவை எம்ஜிஆர் படங்கள்.
* எம்.ஜி.ஆர். நடித்த படங்களில் ஆங்கிலத்தில் டைட்டில் கார்டு காட்டப்பபட்ட முதல் திரைப்படம் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த 'அலிபாபாவும் 40 திருடர்களும்'.
* எம்.ஜி.ஆர். நடித்து தரக்குறைவான பத்திகைகளின் போக்குக்கு எதிர்த்து எடுக்கப்பட்டு வெளி வந்தப் படம் சரவணா பிலிம்ஸ் 'சந்திரோதயம்'. அன்றைய சூழலில் ஒரு முன்னணிப் பத்திரிகையை முற்றாக எதிர்த்து நடித்தார் எம்ஜிஆர்.
* எம்.ஜி.ஆர். நடித்து காளைமாட்டுடன் மோதும் (ஜல்லிக்கட்டு) காட்சியை முதன்முதலாக தமிழ் சினிமாவில் காட்டிய படம் 'தாய்க்குப்பின் தாரம்'.
* எம்.ஜி.ஆர். நடித்து தாழ்த்தப்பட்ட சமூகத்தின் பெருமையை திரைப்படம் மூலம் உலகுக்கு தெரிவித்த படம் கிருஷ்ணா பிக்சர்ஸ் தயாரித்த 'மதுரை வீரன்'.
* எம்.ஜி.ஆர். நடித்து புலியுடன் மோதும் சண்டைக் காட்சியை முதன்முதலாக திரைப்படமாக்கப்பட்டு வெளிவந்த படம் ஆர்.ஆர். பிக்சர்ஸ் தயாரித்த 'குலேபகாவலி'.
* எம்.ஜி.ஆர். நடித்து சண்டைக் காட்சியின்போது 350 பவுண்ட் எடைக்கொண்ட சண்டை நடிகரை அலக்காக தூக்கி நிறுத்தி சண்டை காட்சியில் சாதனைப் புரிந்த படம் ஏவிஎம்மின் 'அன்பேவா'.
* எம்.ஜி.ஆர். நடித்து கிராமங்களில் நடக்கும் மாட்டு வண்டிபோட்டியை முதன் முதலில் திரைப்படத்தில் காட்டிய படம் ஆர்.ஆர்.பிக்சர்ஸ தயாரித்த 'பெரிய இடத்துப் பெண்'.
* எம்.ஜி.ஆர். நடித்து முதன்முறையாக யோகா பயிற்சியை படத்தின் மூலம் மக்களுக்கு சொல்லிக் கொடுக்கும் காட்சி இடம்பெற்ற படம், தாமஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த 'தலைவன்'.
* எம்.ஜி.ஆர். உடற்பயிற்சி ஆசிரியராக நடித்து உடல் வளர்ச்சிக்கு தேவையான அனுகு முறையை மாணவர்களுக்கு சொல்லித் தரும் காட்சியை முதன் முதலாக படமாக்கப்பப்பட்ட படம் 'ஆனந்தஜோதி', 'பணம் படைத்தவன்'.
எம்.ஜி.ஆர். நடித்து முதன்முதலாக கிராமத்து காட்சியும், நகரத்து காட்சியையும் இணைத்து கதை அமைத்து திரைப்படமாக வெளிவந்த படம் ஆர்.ஆர். பிக்சர்ஸ் 'பெரிய இடத்துப் பெண்'.
எம்.ஜி.ஆர். நடித்து பேருந்தில் பணியாற்றும் போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்சனைகளை மையமாக வைத்து அதன் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட படம் தேவர் பிலிம்ஸ் 'தொழிலாளி'.
எம்.ஜி.ஆர். நடித்து மீனவ மக்களின் போராட்ட வாழ்க்கையை முழுமையாக படமாக்கப்பட்டு வெளிவந்து வெற்றிப்பெற்ற படம் சரவணா பிலிம்ஸ் 'படகோட்டி'.
எம்.ஜி.ஆர். நடித்து ஓய்வில்லாத ஒரு பிரபலமான தொழிலதிபரின் காதல் கதையை முழுமையாக முதன்முறையாக படமாக்கப்பட்ட படம் ஏவிஎமின் 'அன்பே வா'.
எம்.ஜி.ஆர். நடித்து பம்பாய் நகரில் முழுமையாக படமாக்கப்பட்டு வெளிவந்த படம் ராகவன் புரொடக்ஷன்ஸ் 'சபாஷ் மாப்பிள்ளே'.
எம்.ஜி.ஆர். நடித்து ரிக்ஷாவில் அமர்ந்தபடியே சிலம்பு சண்டை போடும் காட்சியை தமிழ் சினிமாவிலேயே முதன்முறையாக எடுக்கப்பட்ட படம் 'ரிக்ஷாக்காரன்'. இந்தப் படத்துக்காக இந்திய அரசங்கத்திடமிருந்து பாரத பட்டத்தைப் பெற்றார்.
எம்.ஜி.ஆர். படத்தில்தான் நடிகர் முத்துராமன் அறிமுகமானார். படம் 'அரசிளங்குமரி'.
எம்.ஜி.ஆர். படத்தில் அறிமுகமான இன்னொரு முக்கிய நடிகர் அசோகன். படம் 'பாக்தாத் திருடன்'.
எம்.ஜி.ஆர். நடித்து அண்ணன், தங்கை பாசத்தை முழுமையாக சினிமாவில் காட்டப்பட்டப்படம் முதல்படம் 'என் தங்கை'. எம்.ஜி.ஆர். நடித்த படங்களில் அதிக நாட்கள் (352) ஒடிய படமும் 'என் தங்கை' தான்.
எம்.ஜி.ஆர். நடித்து நல்ல கருத்துகளை வலியுறுத்தும் தலைப்பில் வெளிவந்த படங்கள்: 'நல்லவன் வாழ்வான்', 'தாய் சொல்லைத் தட்டாதே', 'தர்மம் தலைக்காக்கும்', 'பெற்றால் தான் பிள்ளையா', 'சிரித்து வாழ வேண்டும்', 'நீதிக்குத் தலைவணங்கு'.
எம்.ஜி.ஆருடன் இணைந்து 9 கதாநாயகிகள் நடித்த படம் 'நவரத்னம்'. தமிழில் இதுவும் ஒரு 'முதல்முதலாக'தான்.
எம்.ஜி.ஆர். நடித்து கிழக்கு ஜெர்மன், எகிப்து, துருக்கி, இஸ்ரேல் போன்ற நாடுகளில் திரையிடப்பட்ட முதல் தமிழ்ப் படம் 'நாடோடி மன்னன்' (1958). இந்தப் படம் வெளிவந்த போது ரிசர்வேஷனிலும் சாதனைப் புரிந்தது.
எம்.ஜி.ஆர். நடித்து, ஈரான் நாட்டு படவிழா, மாஸ்கோ படவிழா, சர்வதேச படவிழா தாஷ்கண்ட் படவிழா, கோவா படவிழா என்று பல விழாக்களில் கலந்துக் கொண்ட முதல் தமிழ்ப்படம் சத்யா மூவிஸ் 'இதயக்கனி'. இந்தப் படத்தின் 100 நாள் வெற்றி விழா ஆந்திரா முதல்வர் என்.டி.ராமாராவ் தலைமையில் நடந்தது (அப்போது அவர் முதல்வராகவில்லை. எம்ஜிஆருக்குப் பிறகுதான் அவர் அரசியலுக்கு வந்தார்).
எம்.ஜி.ஆர். நடித்து சென்னை சத்யம் திரையரங்கில் ஓடி வெள்ளி விழா கொண்டாடிய முதல் தமிழ்ப் படம் 'இதயக்கனி'.
எம்.ஜி.ஆர். நடித்த 'நீரும் நெருப்பும்' படத்திற்காக நடந்த ரிசர்வேஷன் கூட்டத்தை கட்டுப்படுத்துவற்காக குதிரைப்படை வரவழைக்கப்பட்டது, தமிழ் சினிமாவில் முதல்முறை நடந்த அதிசயம்.
எம்.ஜி.ஆர். அடையாளம் கண்டு பிடிக்க முடியாத அளவிற்கு வயோதிகர் வேடத்தில் ஒருசில காட்சிகளில் நடித்த படங்கள் 'மலைக்கள்ளன்', 'குலேபகாவலி', 'பாக்தாத் திருடன்', 'படகோட்டி'.
அன்றைய காலகட்டத்தில் எம்.ஜி.ஆர். நடித்து விஞ்ஞான அடிப்படையில் உருவான கதையை படமாக்கப்பட்ட படங்கள் 'கலையரசி', 'உலகம் சுற்றும் வாலிபன்'. இந்த ஜானரில் வெளிவந்த முதல் தமிழ்ப் படம் என்ற பெருமை கலையரசிக்கே.
எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளி வந்த முதல் சமூகப்படம் 'திருடாதே'.
எம்.ஜி.ஆர். நடித்து தனது தாயாரின் பெயரில் சத்யா ராஜா பிலிம்ஸ் சார்பில் தயாரித்து, சகோதரர் எம்.ஜி. சக்கரபாணியை இயக்குநராகப் பணியாற்ற வைத்த படம் 'அரசக் கட்டளை'.
எம்.ஜி.ஆர். நடித்து பொங்கல் திருநாளன்று வெளிவந்து வெற்றிப்பெற்றப் படங்கள் 'அலிபாபாவும் 40 திருடர்களும்', 'சக்கரவத்தி திருமகள்', 'அரசிளங்குமரி', 'ராணி சம்யுக்தா', 'பணத்தோட்டம்', 'வேட்டைக்காரன்', 'எங்க வீட்டுப் பிள்ளை', 'அன்பேவா', 'தாய்க்குத் தலைமகன்', 'ரகசிய போலீஸ் 115, 'மாட்டுக்காரவேலன்', 'மதுரையை மீட்ட சுந்தரப்பாண்டியன்'.
எம்.ஜி.ஆர். நடித்த திகில், மர்மம், கொலை, போன்ற காட்சிகளை சித்தரித்து எடுக்கப்பட்ட படங்கள் 'தர்மம் தலைகாக்கும்', 'என் கடமை', 'தாழம்பூ.
எம்.ஜி.ஆர். நடித்து காட்டின் பின்னணியில் எடுக்கப்பட்ட படங்கள் 'தாய் சொல்லைத் தட்டாதே', 'தாயைக்காத்ததனயன்', 'வேட்டைக்காரன்'.
எம்.ஜி.ஆர். சீர்காழியில் நடந்த 'அட்வகேட் அமரன்' நாடகத்தில் நடித்த போது கால் முறிந்து பின் குணமாகி மீண்டும் வந்து நடித்து கொடுத்தப் படம் 'தாய் மகளுக்கு கட்டிய தாலி'.
எம்.ஜி.ஆர். நடித்து கோவா கடற்கரையில் படமாக்கப்பட்ட படங்கள் 'நாடோடி மன்னன்', 'ஆயிரத்தில் ஒருவன்', கேரளா கடற்கரையில் முழுமையாக படமாக்கப்பட்ட படம் 'படகோட்டி'.
எம்.ஜி.ஆர். முதன்முதலில் வண்ணத்தில் நடித்து கொடுத்த படங்களும், நிறுவனங்களும் : 'அலிபாபாவும் 40 திருடர்களும்' - மாடர்ன் தியேட்டர்ஸ், 'படகோட்டி' - சரவணா பிலிம்ஸ், 'எங்கவீட்டுப் பிள்ளை' - விஜயா வாஹினி, 'ஆயிரத்தில் ஒருவன்' - பத்மினி பிக்சர்ஸ், 'அன்பேவா' - ஏவிஎம், 'பறக்கும் பாவை' - ஆர்.ஆர்.பிக்சர்ஸ் (டிஆர் ராமண்ணா), 'ஒளிவிளக்கு' - ஜெமினி பிக்சர்ஸ், 'நல்ல நேரம்' - தேவர் பிலிம்ஸ்.
எம்.ஜி.ஆர். வில்லனாக நடித்த படங்கள் : 'சாலிவாகனன்', 'பணக்காரி', 'மாயா மச்சீந்திரா'. 'சாலிவாகனன் படத்தில் ரஞ்சன் கதாநாயகனாக நடித்தார். 'பணக்காரி' படத்தில் வி.நாகையா கதாநாயகனாக நடித்தார்.
எம்.ஜி.ஆர். நடித்து விளம்பரப்படுத்தப்பட்டும், பூஜைபோடப்பட்டும் நின்று போன படங்களின் பட்டியலும் கொஞ்சம் பெரிதுதான்.
'சாயா', 'குமாரதேவன்', 'வாழப் பிறந்தவன்', 'பாகன் மகன்', 'மக்கள் என் பக்கம்', 'மறுபிறவி', 'தந்தையும் மகனும்', 'வெள்ளிக்கிழமை', 'தேனாற்றங்கரை', 'அன்று சிந்திய ரத்தம்', ' இன்ப நிலா', 'பரமபிதா', 'ஏசுநாதர்', 'நாடோடியின் மகன்', 'கேரளக் கன்னி', 'கேப்டன் ராஜா', 'வேலு தேவன்', 'உன்னை விடமாட்டேன்', 'புரட்சிப் பித்தன்', 'சமூகமே நான் உனக்கே சொந்தம்', 'தியாகத்தின் வெற்றி', 'எல்லைக் காவலன்', 'சிலம்புக்குகை', 'மலைநாட்டு இளரவசன்', 'சிரிக்கும் சிலை, 'கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு, இன்பக் கனவு', 'நானும் ஒரு தொழிலாளி'.
-
14th January 2018, 07:25 PM
#2978
Junior Member
Platinum Hubber
இதயங்கனிந்த எம்.ஜி.ஆர். -இரா.செழியன்
தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. வேதனைகளும் சோதனைகளும், அவற்றை மீறி அவர் அடைந்த வெற்றிகளும், காட்டிய வற்றாத வள்ளல் தன்மையும் பற்றிக் குறிப்பிட அவருடைய வாழ்வில் நடந்த ஒரு சில நிகழ்ச்சிகளை மட்டும் நினைவு கூர்கிறேன்.
எம்ஜிஆரை நான் நேரடியாகச் சந்தித்தது 1953 ஆகஸ்டு மாதத்தில். அப்பொழுது தி.மு.கழகம் மும்முனைப் போராட்டத்தில் மும்முரமாக ஈடுபட்டிருந்தது. மூன்று வகையான போராட்டங்கள் ஜூலை 14 முதல் நடைபெறுமென தி.மு.கழகச் செயற்குழு ஜூலை 13 முடிவெடுத்தது.
(1) அப்பொழுதையக் காங்கிரஸ் ஆட்சி அமல்படுத்தியக் "குலக் கல்வி' திட்டத்தை எதிர்த்து முதலமைச்சர் இல்லத்தின்முன் அறப்போர்.
(2) டால்மியாபுரம் என்பதைக் கல்லக்குடி என்று பெயர் மாற்றிடப் போராட்டம்.
(3) தமிழ்நாட்டில் கழகம் எடுத்த போராட்டங்களை "நான்சென்ஸ்' - முட்டாள்தனமானது என்று பிரதமர் நேரு கூறியதைக் கண்டித்து ரயில் நிறுத்தப் போராட்டம் ஆகியவையே அந்த மும்முனைப் போராட்டம்.
கழகச் செயற்குழு 1953 ஜூலை 13 கூடி இந்த முடிவுகளை எடுப்பதற்கு முன்னதாகவே போராட்ட காலத்தில் முக்கியமானவர்களுக்கு பொறுப்புகள் பிரித்துத் தரப்பட்டன. வட சென்னைச் சூரியநாராயணச் செட்டித்தெருவில் "அறிவாலயம்' இடத்திலிருந்து வெளிவந்த கழக "நம் நாடு' நாளேட்டை நடத்திடும் பொறுப்பு எனக்குத் தரப்பட்டது. ஆயினும் செயற்குழு கூடிய ஜூலை 13 இரவே அண்ணா, நெடுஞ்செழியன், ஈ.வி.கே. சம்பத், மதியழகன், என்.வி. நடராசன் ஆகியோர் கைது செய்யப்பட்டுவிட்டனர்.
சென்னை, டால்மியாபுரம் இவைகளை மையமாகக் கொண்ட போராட்டங்கள் மீது போலீஸாரின் கடுமையான அடக்குமுறை தாண்டவமாடியது. அத்துடன், தமிழ்நாடெங்கும் ஆங்காங்கு ரயில் நிறுத்தப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான தி.மு.க. தோழர்கள் தடியடி தர்பாருக்கு ஆளான செய்திகள் வந்தபடி இருந்தன. இரவு பகலாக "நம் நாடு' அச்சகத்திலேயே நான் தங்கிவிட்டேன், வரும் விவரங்களுக்குப் பதில் தரவும், செய்திகளை வரிசைப்படுத்தி வெளியிடவும். சென்னை மத்திய சிறைச்சாலையில் அண்ணாவிடம் நாள்தோறும் சென்று விவரங்களைச் சொல்லி, மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு ஆலோசனை பெறுவதற்கே எனக்கு நேரம் சரியாக இருந்தது.
ஒரு நாள் காலை 11 மணி அளவில் எம்.ஜி.ஆர். கீழே வந்திருப்பதாக என்னிடம் தெரிவித்தனர். தமிழ்ப் படவுலகில் அவர் வேகமாகத் தலையெடுத்துவரும் காலம். அவருக்கு முன்னதாக நடிகர்கள் கே.ஆர். ராமசாமி, சிவாஜி கணேசன், எஸ்.எஸ். ராஜேந்திரன், டி.வி. நாராயணசாமி ஆகியோர் கழகத்தில் தீவிரப் பங்கு வகித்தனர். ஆனால் அவர்கள் யாரும் போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டாம் என்று அண்ணா கண்டிப்பாகச் சொல்லியிருந்தார். அதற்குக் காரணம், நடிகர்களுக்குப் பலவகைகளில் தொடர்ந்து பல படங்களில் நடிக்கும் வாய்ப்பும் பொறுப்பும் இருக்கும். போராட்டத்தில் இறங்கினால் அவை பாதிக்கப்படும்.
ஆயினும் எம்.ஜி.ஆர். நடித்த "மந்திரி குமாரி' என்ற திரைப்படத்திற்கு கருணாநிதி வசனம் எழுதியிருந்தார். அந்தப் படம் 1950-இல் வெற்றிகரமாக ஓடியது. அது முதல் கழகத்துடன் எம்.ஜி.ஆருடைய தொடர்பு ஆரம்பித்தது எனலாம். அதற்கு முன்பு காங்கிரஸ் இயக்கத்தில் ஈடுபாடுடையவராக இருந்த எம்.ஜி.ஆர். அண்ணாவின் பேச்சிலும் எழுத்திலும் மிகவும் ஈர்க்கப்பட்டு 1952-இல் கழக உறுப்பினராகவும் ஆனார். திரையுலகில் மிகவும் சிறப்பான எதிர்காலம் அவருக்கு இருப்பதை அண்ணா உணர்ந்துகொண்டார்.
எம்.ஜி.ஆரும் அண்ணாவிடம் தனிப்பட்ட மரியாதையுடன். கழக நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதுடன், கழகத்தின் தீர்மானங்கள், கோட்பாடுகள் எல்லாவற்றிலும் மிகவும் உறுதியான ஈடுபாட்டுடன் செயல்பட்டார்.
"நம் நாடு' அலுவலகத்தில் கீழ்ப்பகுதியில் அச்சடிக்கும் வேலை நடைபெற்றது. மேல் தளத்தில் ஒரு நீண்ட அறையும், கீற்றுக் கொட்டகையும் இருந்தன. பெரும்பாலும், எழுதும் வேலைகள் மேல் தள அறையில் நடைபெறும். எம்ஜிஆர் வந்ததும் என்னருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்து, "மத்திய சிறையில் இருக்கும் அண்ணாவை நான் பார்க்கலாமா? அண்ணாவை ஒரு வாரத்துக்கு முன்பு பார்த்தபொழுது பேசிக்கொண்டிருந்தேன்; அப்பொழுது அவர், ஏதாவது முக்கியமானதாக இருந்தால் - அநேகமாக நாங்கள் சிறையில் இருந்தாலும் - செழியன் வெளியில்தான் இருப்பார். அவரைக் கலந்து கொள்ளுங்கள் என்று சொன்னார். அதனால்தான் உங்களிடம் வந்தேன்' என்றார்.
"சிறையிலிருக்கும் அண்ணாவைப் பார்க்கச் செல்வது சற்று சிக்கலான பிரச்னை; அண்ணா குடும்பத்தினரும் நெருங்கிய கழகத்தினரும் பார்ப்பதற்கே மிகவும் நெருக்கடி இருக்கும். உடனடியாக என்னால் அதை நிர்ணயிக்க முடியாது. அண்ணாவுடன் இதுபற்றிப் பேசிவிட்டு உங்களிடம் தெரிவிக்கிறேன். ஆனாலும் நீங்கள் மீண்டும் இங்கு வரவேண்டாம். அண்ணாவின் பதிலை நான் உங்களுக்குச் சொல்லி அனுப்புகிறேன்' என்றேன்.
என் மனதில் முதலில் உண்டான தயக்கம், கழகப் போராட்டத்தில் எம்ஜிஆரும் பங்கு பெறுவதாகப் போலீஸார் நினைத்துவிடக்கூடாது என்பதுதான். சிறிது நேரமே அவர் பேசிக்கொண்டிருந்தாலும், அவரிடம் ஒருவகைப் பெருந்தன்மையும் பொறுமையும் இருந்தன. எம்ஜிஆர் வந்ததை இரண்டு நாள்களில் அண்ணாவிடம் தெரிவித்துவிட்டேன். அண்ணா, "நீ நினைப்பதுதான் சரியானது; போலீஸ் நடவடிக்கைகள் நம்மீது பாய்வதை விட அவர்மீதும் கடுமையாகப் பாயும். அதை நாம் தவிர்க்க வேண்டும். அதனால்தான் கழகத்தில் உள்ள நடிகர்களை இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டாம் என்று முன்னதாகவே நான் சொன்னேன்' என்றார்.
அண்ணா கூறியதை என் நண்பர் ஒருவர் மூலம் எம்ஜிஆருக்குத் தெரிவித்தேன். அண்ணா விடுதலையானதும் அவரைப் பார்க்க எம்.ஜி.ஆர். அடிக்கடி வருவார். அப்பொழுதெல்லாம் என்னிடமும் பேசுவார்.
திரைப்பாடல்களிலும் எம்.ஜி.ஆர். தோன்றும் காட்சிகளிலும் அண்ணா பற்றிய குறிப்புகள் இருக்கும், அண்ணாவின் படமும் அவருக்கு அருகில் நேரடியாகத் தெரியும். "மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்...' என்று திரையில் அவர் பாடினால், கொட்டகை அதிரும்; அந்த வரி அண்ணா, திமுக ஆகியவற்றைக் குறிப்பிடுகிறது என்று கழகத்தினர் ஆரவாரம் செய்வார்கள்.
1962 மக்கள் சபைக்கான பொதுத்தேர்தலில் அண்ணா திருச்சி பெரம்பலூர் தொகுதியில் கழகத்தின் வேட்பாளராக என்னை அறிவித்துவிட்டார். தேர்தலில் - அதுவும் நாடாளுமன்றத்துக்கு - போட்டியிட வேண்டிய அளவுக்கு நான் தயாராக இல்லை. அந்தத் தொகுதியில் எனக்கு அதற்கு முன் எத்தகைய தொடர்பும் பழக்கமும் கிடையாது.
ஆயினும் தேர்தல் துவக்கத்துக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னதாக, எம்ஜிஆரைச் சந்தித்தபொழுது. அவர் மிக உற்சாகத்துடன் என்னிடம் பேசினார். "உங்கள் தொகுதியில் உள்ள ஐந்து சட்டசபைத் தொகுதிகளிலும் ஒவ்வொரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யுங்கள். இரண்டு நாள்களில் நான் அங்கு வந்து விடுகிறேன். அப்பொழுது கூட்டங்களை மண்டபங்களில் வைத்து ஒவ்வொருவருக்கும் ரூ. 5 என்று கட்டணம் போட்டு கழகத்துக்கான நிதிகளைச் சேர்ப்போம்' என்றார்.
அந்த வகையில் அவர் வந்ததும் ஒவ்வொரு சட்டசபைத் தொகுதியிலும் ரூ.1,000 அல்லது 1,200 கிடைத்தது. அந்தக் காலத்தில் அது பெரிய தொகை. கிடைத்த பணத்தை அந்தந்தத் தொகுதி சட்டசபை வேட்பாளரிடம் தந்துவிட்டேன். எம்ஜிஆர் வந்ததால் நல்ல பிரசாரமும் பண உதவியும் கிட்டின. மக்களிடமும் கழகச் செயலாளர்களிடமும் பெருத்த வரவேற்பையும் உற்சாகத்தையும் உண்டாக்கின.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு கழகத்திலிருந்து எனக்குத் தரப்பட்ட பணம் ரூ.2,500 தான். அது ஒரு வாடகைக் காரை நாளொன்றுக்கு ரூ. 30-க்கு அமர்த்தவும் அதற்கான பெட்ரோல் செலவுக்கும் பயன்பட்டது. மற்ற வகைகளில் கூட்டங்கள் போடுவதையும் சைக்கிள் ஊர்வலம் வைப்பதையும் கழகத்தினரே செய்தனர். காங்கிரஸ் சார்பில், அங்கு இருமுறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பழனியாண்டி மீண்டும் போட்டியிட்டார், அதற்கு உட்பட்ட ஐந்து சட்டசபைத் தொகுதிகளிலும் காங்கிரஸ் சட்டசபை உறுப்பினர்கள்தாம் 1957 தேர்தலில் வெற்றி பெற்றிருந்தார்கள். இவை போதாதென்று டால்மியா சிமென்ட் தொழிற்சாலை முதலாளியின் பணமும் செல்வாக்கும் காங்கிரஸுக்குப் பெரும் உதவியாக இருந்தன.
முதலில் எம்ஜிஆர் ஐந்து சட்டசபைத் தொகுதிகளிலும் செய்த பிரசாரமும் பிறகு அண்ணாவின் பிரசாரமும் தொகுதியில் வேகமாகப் பரவின. கழகத் தோழர்களும், பொதுமக்களும், படித்த இளைஞர்களும் மிகவும் உறுதியுடனும் உற்சாகத்துடனும் தொகுதியில் எங்கும் தேர்தல் பணிகளைச் செம்மைப்படச் செய்தார்கள்.
1962 தேர்தல் முடிவுகள் எல்லோருக்கும் தெரிந்ததே. நான் பெரும்பாலான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன். பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியில் இருந்த ஐந்து சட்டசபைத் தொகுதிகளிலும் கழக வேட்பாளர்கள் வெற்றி அடைந்தனர். ஆயினும் காஞ்சிபுரம் தொகுதியில் அண்ணா தோற்றுவிட்டது எங்களுக்குப் பேரிடியாக இருந்தது.
தேர்தலுக்குப் பிறகு அண்ணாவைச் சந்தித்தபொழுது என்னால் பேசமுடியவில்லை. என் துயரம் கண்களிலிருந்து நீராகச் சொரிந்தது. அண்ணா என்னைத் தட்டிக் கொடுத்து, "நீ பெற்ற வெற்றியை நான் பெற்ற வெற்றியாக நினைக்கிறேன். கவலைப்படாதே' என்றார். 1962 சட்டசபைத் தேர்தலில் அண்ணா தோல்வியடைந்தாலும் அது ஒருவகையில் நன்மையையே தந்தது; அவரை மாநிலங்களவைக்கு அனுப்பிவைத்தது. அங்கு அவருடைய வெளிப்படையான பேச்சு பிறரைக் கவர்ந்தது மட்டுமல்ல, அவர் ஐந்தாண்டு காலம் நான் இருந்த இல்லத்திலேயே தங்கியிருந்தார், அவருடைய நெருங்கிய உறவும் வாழ்வும் நாடாளுமன்ற நடவடிக்கைகளில் எனக்கு ஒரு முதல்தரமான வழிகாட்டியாக இருந்தன.
1967 தேர்தல் காலத்தில் எம்ஜிஆர் குண்டடிபட்டு சென்னை மருத்துவமனையில் படுத்திருந்தார். சென்னை வளசரவாக்கத்தில் நடைபெற்ற கழக மாநாட்டில் - அங்குதான் ராஜாஜி, காயிதே மில்லத், பி. ராமமூர்த்தி ஆகியவர்களை வைத்து அண்ணாவினால் காங்கிரஸ் எதிர்ப்பு அணியை தமிழ்நாட்டில் உண்டாக்க முடிந்தது - கலந்துகொண்ட ராஜாஜி சொன்னார்: "படுத்துக்கொண்டே ஜெயிப்பேன் என்று காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறியிருக்கிறார். படுத்துக் கொண்டிருக்கலாம், ஆனால் இந்தத் தடவை ஜெயிக்கமுடியாது' என்று அவருக்குரிய அமைதியுடன் கூறியது மாநாட்டில் பெரும் ஆரவாரத்தை உண்டாக்கியது. அந்தத் தேர்தல் போட்டியில் "படுத்துக் கொண்டே ஜெயித்தவர்' எம்ஜிஆர்தாம்.
"திரையுலகின் சிங்கம் எம்ஜிஆர்' அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெள்ளி விழா மலர் 1997- இல் வெளியிடப்பட்டது. அதை அண்மையில் கண்ணுற்றேன். அதில் எம்ஜிஆர் பற்றி அண்ணா கூறிய கருத்துகள் சிலவற்றைத் தொகுத்துள்ளனர். அந்த மலரில் தரப்பட்டுள்ள அண்ணாவின் ஒரு கருத்து, " எம்ஜிஆர் கழகத்தின் கண்மணி, கலை உலகத்தின் நன்மணி; குணத்தில் தங்கம், கொதித்தெழுந்தால் சிங்கம்' என்பதாகும்.
சிங்கம் பீடு நடையுடன் வந்த வழியை திரும்பிப் பார்க்குமாம் - அதை அரிமா நோக்கு என்பார்கள். அதைப்போல் எம்ஜிஆர் திரையுலகில் புரிந்த சாதனைகளை சற்றுத் திரும்பிப் பார்க்கலாம்.
எம்ஜிஆர் நடித்த படங்கள் 138. அதில் கதாநாயகனாக இருந்த படங்கள் 117. அவற்றில் 100 நாள்கள் விழா கண்ட படங்கள் 66. வெள்ளிவிழா (25 வாரங்கள்) கொண்டாடிய படங்கள் 17. என் தங்கை படம் 350 நாள்களுக்கு மேலும் வெற்றிப் படமாக விளங்கியது.
எம்ஜிஆர் பெற்ற விருதுகள்:
1954 - மலைக் கள்ளன் - இந்திய அரசாங்க விருது.
1956 - அலிபாபா நாற்பது திருடர்கள் - பிலிம் ரசிகர்கள் விருது 1967.
1967 - காவல்காரன், தமிழ்நாடு அரசாங்க விருது.
1968 - குடியிருந்த கோயில், தமிழ்நாடு அரசாங்க விருது.
1969 - அடிமைப் பெண், தமிழ்நாடு அரசாங்கப் பரிசு, பிலிம்பேர் விருது.
1972 - ரிக்ஷாகாரன், சிறந்த நடிகர் -தேசிய விருது.
1978 - மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன், சிறந்த படம்- தமிழ்நாடு அரசாங்க விருது.
கெüரவ டாக்டர் பட்டம் - அமெரிக்க அரிசோனா பல்கலைக்கழகம்.
கெüரவ டாக்டர் பட்டம் - சென்னைப் பல்கலைக் கழகம்.
1988 - (இறந்தபின்) பாரத் ரத்னா விருது.
மேலும் 1960-இல் இந்திய அரசாங்கம் தந்த பத்மஸ்ரீ விருதை ஏற்றுக்கொள்ள எம்ஜிஆர் மறுத்துவிட்டார். அதற்கு அவர் சொன்ன காரணம், "அந்த விருது தமிழில் எழுதப்பட்டிருந்தால் ஏற்றுக்கொள்ளலாம். இந்தியில் இருந்தபடியால் ஏற்றுக்கொள்ளவில்லை'.
நான் இந்தக் கட்டுரைக்கு "இதயம் கனிந்த எம்ஜிஆர்' என்ற தலைப்பில் ஆரம்பித்தேன். அதைப் பார்த்ததும் பலருக்கும் அண்ணா - எம்ஜிஆர் காலத்தில் இருந்தவர்களுக்கு - எம்ஜிஆர் பற்றி அண்ணா கூறிய "இதயக்கனி' என்ற பாராட்டுரை நினைவுக்கு வந்திருக்கும். அண்ணா கூறியதை நான் இங்கு தருகிறேன்.
""என்னை அறியாமலேயே என் மடியில் கனி ஒன்று வந்து விழுந்தது கண்டேன். அதன் அருமை கருதி அதனை எடுத்து என் இதயத்திலே வைத்துக்கொண்டேன். அதுதான் எம்ஜிஆர்.''
அண்ணா கூறிய இதயக்கனி என்பது மிகச் சிறந்த பாராட்டுரையாக ஆகி, எம்ஜிஆர் நடித்த ஒரு படத்துக்கே அந்தப் பெயர் தரப்பட்டது. இதயக் கனி என்று அண்ணா கூறியது கிடைத்த கனியைப் பாதுகாப்பாக இதயத்தில் வைத்துக் கொண்டேன் என்பது.
வேறொரு வகையில் நான் நினைப்பது, எம்ஜிஆர் அவர்களே கனிந்த இதயம் படைத்தவர் என்பதுதான்.
எல்லாவற்றையும்விட மேலாக எம்ஜிஆர் பற்றி அண்ணா ஒன்றைக் கூறியிருக்கிறார். அதுவும் மேலே குறிப்பிட்ட அஇஅதிமுக வெள்ளிவிழா மலரில் வெளிவந்துள்ளது. அந்த கருத்தாவது, ""எம்.ஜி.ஆர் என்றேனும் ஒரு நாள், ஒருக்கால் அரசியலில் பொறுப்பேற்றுச் செயல்படுவாரேயானால், அதிலும் அவரது தனி முத்திரை பதிக்கப்படும் என்பது தெளிவு''.
மிகவும் பிரமிக்கத்தக்க, ஆச்சரியமான அண்ணாவின் இந்தத் தெளிவான தொலைநோக்குப் பார்வை - எம்ஜிஆரால் தனிமுத்திரை பதிக்கப்பட்ட ஆட்சி - அண்ணாவுக்குப் பின் வந்த தமிழக அரசியல் வரலாற்றில் மெய்ப்பிக்கப்பட்டுவிட்டது.
-
14th January 2018, 07:42 PM
#2979
Junior Member
Platinum Hubber
-
14th January 2018, 11:24 PM
#2980
Junior Member
Platinum Hubber
Bookmarks