Results 1 to 10 of 3997

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 19

Threaded View

  1. #11
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like


    யாருக்காக ... இவர் நமக்காக...

    Sivaji Ganesan Definition of Style 37


    நடிகர் திலகத்தின் படங்களும் பாடல் காட்சிகளும் காலங்களைக் கடந்து, தலைமுறைகளைக்கடந்து சமுதாயத்துடன் பின்னிப் பிணைந்து நிற்கும் வல்லமை படைத்தவை என்பதற்கு சான்றாக சமீபத்தில் ஓர் அனுபவம் ஏற்பட்டது.

    வசந்த மாளிகை – இதைப் பார்க்காத சிவாஜி ரசிகன் உலகில் யாருமே இருக்க மாட்டார்கள். நூற்றுக்கு ஆயிரம் மடங்கு உறுதியிட்டு சொல்லலாம்.
    குறிப்பாக இந்தப் படப்பெயரைச் சொன்னவுடனேயே மயக்கமென்ன பாடலும் நடிகர் திலகமும் வாணிஸ்ரீயும் இணைந்த ஏதாவது போஸ் நினைவுக்கு வந்துவிடும். அந்த அளவிற்கு உச்சகட்ட பிரபலத்தை அடைந்த பாடல். காதல் உணர்வை மிக தத்ரூபமாக வெளிக்கொணர்ந்த பாடல்.
    அப்பேர்ப்பட்ட காதலுக்கு சோதனை வரும் போது ஒரு காதலன் எப்படி பாதிக்கப்படுகிறான் என்பதை சமகாலத்திற்கேற்ப சொன்ன காட்சிகள். பார்ப்போரை ஒன்ற வைத்து காதல் தோல்வியின் ஆழத்தை சிறப்பாக எடுத்துரைத்தன.

    காதலின் மேன்மையை பாடல்கள் மூலமாக கவியரசரும் உரையாடல் மூலமாக பாலமுருகனும் இணைந்து படைத்த அற்புதப்படைப்பு.
    அதில் காதல் தோல்வியால் விரக்தியின் உச்சத்தை அடையும் காதலன் ஒரு கட்டத்தில் தன்னைத்தானே மாய்த்துக்கொள்ளும் முடிவெடுக்கிறான். அவனுடைய மனது எந்த அளவிற்கு புண்பட்டிருக்கிறது என்பதை அந்தப் பாடல் வரிகள் சொல்ல வேண்டும். திரை இசைத் திலகம் கவியரசர் இணையும் போது அங்கே ஒரு காவியம் பிறப்பது உறுதி செய்யப்படுகிறதல்லவா. அதை மீண்டும் நிரூபித்தனர் வசந்த மாளிகையில், யாருக்காக பாடல் காட்சி மூலம்.

    காதலி தன்னை விட்டுப் பிரிந்து இன்னொருவனை மணக்க இருக்கிறாள் என்பதை ஜீரணிக்க முடியாமல் தவிக்கிறார் நாயகன் ஆனந்த். இந்தப் பாடலின் அத்தனை வரிகளும் காதல் வயப்பட்டவர்களை சுண்டி இழுத்து பாட்டுடன் ஐக்கியப்படுத்தி விடுகின்றன. அது 46 ஆண்டுகளுக்குப் பிறகும் தொடர்கிறது என்பது தான் இப்பதிவிற்கான காரணம்.

    மலரைத்தானே நான் பறித்தது – கை
    முள்ளின் மீது ஏன் விழுந்தது
    உறவைத்தானே நான் நினைத்த்து – என்னை
    பிரிவு வந்து ஏன் அழைத்த்து
    எழுதுங்கள் என் கல்லறையில்
    அவள் இரக்கமில்லாதவள் என்று
    பாடுங்கள் என் கல்லறையில்
    இவன் பைத்தியக்காரனென்று...

    --- இந்த வரிகளாகட்டும்

    கண்கள் தீட்டும் காதல் என்பது அது
    கண்ணில் நீரை வரவழைப்பது
    பெண்கள் காட்டும் அன்பு என்பது நம்மை
    பித்தனாக்கி அலைய வைப்பது ...

    ----- இந்த வரிகளாகட்டும்

    எங்கிருந்து சொந்தம் வந்த்து – இன்று
    எங்கிருந்து நஞ்சு வந்த்து
    அங்கிருந்து ஆட்டுகின்றவன் – தினம்
    ஆடுகின்ற நாடகம் இது

    இப்படி ஒவ்வொரு வரியும் காதலில் தோல்வியுற்றவர்களின் உள்ளத்தை கண்ணாடி போல் பிரதிபலித்து இன்றும் ஜீவனுடன் வாழ்கிறது.
    வசந்த மாளிகை .. முன்பே குறிப்பிட்டிருந்தபடி,. சென்னை சாந்தி தியேட்டர் இப்படத்தின் மூலம் அக்கால இளைஞர்கள் பலரின் வாழ்க்கையிலே இரண்டறக் கலந்து விட்ட படம். எத்தனையோ இளைஞர்கள் சாந்தி தியேட்டரில் தங்கள் காதலியுடனோ அல்லது அதைப் பற்றி அறிந்த நண்பர்களுடனோ மீண்டும் மீண்டும் பார்த்து தங்களை ஐக்கியப் படுத்திக்கொண்ட நிகழ்வுகளுக்கு சாட்சி. அதைக் கண்ணால் கண்ட எங்களுக்கு அது புதிய பரிமாணம். அது வரை குடும்பம் குடும்பமாக உற்றார் உறவினரோடு புடை சூழ நடிகர் திலகத்தின் படங்களைப் பார்க்க வந்த மக்கள் மத்தியில் இது மிகவும் புதுமையான வித்தியாசமான மகிழ்வூட்டும் அனுபவமாக இருந்தது. அந்த தியேட்டரில் வெள்ளி விழா ஒடிய அப்படத்தின் பெரும்பாலான நாட்களில் புதிய காதலர்களை உருவாக்கிய சிறப்பும் இப்படத்திற்கு உண்டு. இவையெல்லாம் வெறும் சம்பிரதாயத்திற்கான வர்ணனைகள் அல்ல. நாங்கள் நேரில் கண்டறிந்த அநுபவங்கள்.

    ஏன் இதைப் படிப்பவர்களில் கூட அப்படி ஓர் அனுபவத்தை அடைந்தவர்கள் யாராவது இருக்கலாம்.,
    குறிப்பாக இப்பாடல் காட்சியில் திரையரங்கே கோலாகலமாகி விடும். பெரும்பாலான பார்வையாளர்கள் பாடல் வரிகளை முணுமுணுத்தபடி இருப்பார்கள். ரசிகர்களோ நடிகர் திலகத்தின் நடிப்பில் தம்மை மெய்ம்மறந்து சுற்றம் மறந்து இருக்கைகளை விட்டு வெளிவந்து கூடவே ஆடுவார்கள்.

    படம் முடிந்து வெளியே வரும் போது மக்கள் படத்துடன் ஐக்கியமாகியிருந்த நிலையில் இருந்து வெளிபேற சற்று நிமிடங்களாகும் என்ற நிலையில் வெளியே வருவார்கள். இந்தப் பாடல் அந்த உணர்வைத்தந்து படத்தின் வெற்றியை ஆணித்தரமாக பதிவு செய்தது.

    இவ்வளவு சிறப்பு வாய்ந்த இப்பாடல் இன்றைய காலகட்டத்தில் இன்றைய தலைமுறையினரிடம் எப்படி சென்று சேரும் என்ற ஆர்வம் எப்போதுமே தலைகாட்டும். அதை அறிந்து கொள்ளும் சந்தர்ப்பம் சமீபத்தில் வாய்த்தபோது என்னையே நான் மறந்து விட்டேன்.

    ஓரிரு வாரங்களுக்கு முன் ஒரு நிகழ்ச்சிக்காக இரயில் பயணம் மேற்கொள்ள நேரிட்டது. இரவு பயணம் என்பதால் படுக்கை வசதியுடன் பதிவு செய்யப்பட்டிருந்த என் இருக்கையில் அமர்ந்திருந்தேன். அந்தப் பெட்டியில் வடசென்னையில் உள்ள ஒரு பள்ளி மாணவ மாணவியர் சுற்றுலா செல்வதற்காக பதிவு செய்திருந்தனர். ஆசிரியர்களும் மாணவ மாணவியருமாய் பெட்டி ஒரே கோலாகலமாய் இருந்தது. எல்லோரும் வந்து சேர்ந்து வண்டி புறப்படும் நேரத்தில் செட்டிலாகிவிட்டார்கள். எங்களைச் சுற்றியிருந்த இருக்கைகள் மற்றும் படுக்கைகள் ஒதுக்கப்பட்ட மாணவர்கள் ஒரு பத்து பேர் இருக்கும். வண்டி புறப்பட்டவுடன் தங்களுடைய நண்பர்களோடு நடனமாடிக்கொண்டும் சில புதிய திரைப்படப்பாடல்களைப் பாடிக்கொண்டும் தங்கள் மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொண்டிருந்தனர். என்னையும் இன்னொருவரையும் தவிர மற்றோரனைவருமே மாணவர்கள். அந்த மற்றொருவரும் டிக்கெட் பரிசோதகரிடம் டிக்கெட்டுக்கான வழிமுறைகளை முடித்து உறங்கப் போய் விட்டார். சில புதிய திரைப்படப்பாடல்கள் நம் பொறுமையை சோதித்தன.,

    அப்போது தான் துவங்கியது அந்த இன்ப அதிர்ச்சி. திடீரென ஒரு மாணவன் யாருக்காக பாடலைப் பாடத்துவங்கினான். அவ்வளவுதான் அத்தனை மாணவர்களும் உடன் சேர்ந்து கொண்டனர். அந்த மாணவன் ஒவ்வொரு வரியும் உணர்வு பூர்வமாகவும் உச்சரிப்புத் தெளிவாகவும் பாடினான். கூடவே மற்றவர்களும் சேர்ந்தனர். பாடல் முடியும் வரை காத்திருந்தேன். அந்தப் பாடலைப் பாடிய மாணவனை அழைத்து புதுப்பாடலைப் பாடிய நீ இந்தப் பாட்டை எப்படித் தேர்ந்தெடுத்தாய் என்றதற்கு அவன் சொன்ன பதில் அப்ப்டியே என்னை ஆனந்தக் கூத்தாட வைத்து விட்டது. இந்தப் பாட்டின் இசை உன்னைப் பிடித்ததா என்றேன் ஆமாம் சார் என்றான். டி.எம்.எஸ். குரல் ரொம்ப படித்த்தா என்று கேட்டேன். ஆமாம் சார் என்றான். இந்தப் பாட்டின் வரிகளைப் பிடித்துள்ளதா என்று சற்றே குத்தலாக கேட்டேன். அதற்கு அவன் அளித்த பதில் என்னைப் பொறியில் தட்டியது போல் இருந்தது. சார் உங்க காலத்துப் பாட்டையெல்லாம் நான் ரொம்பக் கேட்பேன் சார். எல்லாமே கருத்துள்ளதாக இருக்கும் என்றான். கூடவே இதையெல்லாம் கேட்ட நீங்கள் அதில் நடித்த சிவாஜி சாரைப் பத்தி ஏன் சார் கேக்கலே என்றானே பார்க்கலாம்.

    அதைத் தான் அடுத்து கேக்க இருந்தேன் என சமாளித்தேன். ஏம்பா தம்பி அதை நீயே சொல்லேன் என்றேன்.

    சார் சார் என குறிக்கிட்டான் பக்கத்தில் கூட இருந்த பையன். சார் அவன் சிவாஜி ரசிகன் சார். அவர் படத்தை டிவிலே போட்டா அதைப் பாத்துட்டு தான் வேற வேலை பாப்பான் சார் என்றான் அடுத்த மாணவன். உடனே குறிக்கிட்ட இந்த முதல் மாணவன், சார் நானே சொல்றேன் சார். இந்தப் பாட்டு வர்ற வசந்த மாளிகை படத்தை நான் தியேட்டர்லே பார்த்தேன் சார். இதுலே சிவாஜி சாரோட ஸ்டைலைப் பார்த்து நான் ஷாக்காயிட்டேன் சார். அதுவும் இந்த யாருக்காக பாட்டை தியேட்டரில் பாத்தபோது – சமீபத்தில் டிஜிட்டலில் பார்த்தாராம் – ரசிகர்கள் செஞ்ச ஆரவாரத்துலே நான் மெய் மறந்துட்டேன் சார் என்றான்.

    சரிப்பா இந்தப் பாட்டோட அர்த்தம் தெரியுமா உனக்கு என்றேன். சார் லவ் ஃபெயிலியர் பத்தின பாட்டு சார். எத்தனை புது படத்திலே நாங்க பாத்திருக்கிறோம். ஆனால் இந்தப் பாட்டை கேட்டா நாமளே லவ் ஃபெயிலியராயிட்டவங்க மாதிரி ஒரு ஃபீலிங் வருது சார் என்றான்.
    உடனே தலைவர் ஞாபகம் நமக்கு வந்து விட, தம்பி அந்த ஃபீலிங் படத்தோட இருக்கட்டும் நிஜத்தலே பெரியவங்க பாத்து வெக்கிற பொண்ணைத் தான் பண்ணிக்கணும். அதுவுமில்லாமே அதுக்கெல்லாம் இது வயசுமில்லே. இப்போதைக்கு உன் கவனம் படிப்பிலே மட்டும் இருக்கட்டும் எநக் கூறினேன்.

    பள்ளியிறுதி மாணவர்களையும் ரசிகராக்கும் வலிமை பெற்றவர் நடிகர் திலகம் மட்டுமே, காலங்களைக் கடந்து சிரஞ்சீவியாக வாழ்கிறார் என்பதற்கு இதை விட வேறென்ன வேண்டும்.


    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. Likes sivaa liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •