-
4th December 2016, 05:54 PM
#11
Junior Member
Devoted Hubber
செலுலாய்ட் சோழன் சிவாஜி தொடர் 154 – சுதாங்கன்.
சிவாஜி தொடர்ந்தார், `அதனால் நான் அவர்களின் மனதுக்கு உயரமாகத் தெரிகிறேன். அதனால் அவர்களின் கண்களும் என்னை உயரமாக பார்ப்பது போல் உணர்கின்றன. அவ்வளவுதான்! எப்பேர்ப்பட்ட உண்மை இது! இந்த உண்மை அவர் ஒருவரால் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டு, கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. இதை அவருக்கு யாரும் கற்றுக்கொடுக்கவில்லை. இப்படி எவரும் எதையும் கற்றுக்கொடுக்க முடியாத வியப்புக்குரிய நடிப்பின் எண்ணற்ற பரிமாணங்கள் இந்திய சினிமாவில் அவர் ஒருவருக்கு மட்டுமே உண்டு. நடிப்பில் அவர் தொடாத எல்லையே இல்லை எனலாம். நடிகர் திலகத்திடம் இயக்குநர் மகேந்திரன் இன்னொரு கேள்வியைக் கேட்டார். `சில படங்களில் உங்களின் நடிப்பு சற்று மிகையாக இருப்பதாக சிலர் குற்றம் சுமத்துகிறார்களே! இதற்கு உங்கள் விளக்கம் என்ன?’
`வாஸ்தவம்தான். நான் மறுக்கவில்லை. எல்லாம் தெரியாமலா செய்வேன்? மைக் இல்லாத காலத்தில் நாம் சத்தம் போட்டு பேசியிருக்கிறோம்.
அது போல ‘கட்டபொம்மன்’ காலகட்டத்தில், அப்படி நான் வசனம் பேசி, மிகையாக நடிக்காவிட்டால், அந்த ‘கட்டபொம்மன்’ மக்கள் மனதில் பதிந்திருக்க மாட்டான்.
இன்று வரை அந்த ‘கட்டபொம்மன்’, வசனத்தை நினைவு வைத்து பேசவும் மாட்டான். சரி, அதே வசனத்தைக் குரல் தாழ்த்தி நான் யதார்த்தமாக இப்போது பேசிக்காட்டுகிறேன் கேள்!’ என்றவர், வெள்ளைத்துரையிடம் பேசும் அந்த வசனக் காட்சியை தணிந்த குரலில் மிக மிக யதார்த்தமாக பேசிக் காட்டினார்.
மகேந்திரனுக்கு பிரமிப்பாக இருந்தது… `இப்படி நான் பேசியிருந்தால், அன்றைக்கு படம் பார்த்த மக்கள் ரசித்திருக்க முடியுமா? இன்று வரை அவர்கள் அதை நினைவில் வைத்திருக்க முடியுமா?’ என்று என்னிடம் கேட்டார்.
பிறகு அவரே தொடர்ந்தார், `என்ன மாதிரி கேரக்டரை எனக்குக் கொடுக்கிறார்களோ…. அதற்குத் தக்கபடி நான் நடிக்கிறேன். உதாரணத்துக்கு ஒரு பென்சிலை என்னிடம் தந்து கையெழுத்துப் போடச் சொன்னால், அதைக் கொண்டு அதற்கு ஏற்ற மாதிரி கையெழுத்துப் போட்டுக் காட்டுவேன். பேனாவைக் கொடுத்தால், அதற்கேற்ற மாதிரி… ஸ்கெட்ச் பேனாவை தந்தால், அதற்கேற்ற மாதிரி… பெயிண்ட் அடிக்கும் பிரஷ்ஷைக் கொடுத்தால் அதற்கேற்ற மாதிரியும் எழுதுவேன். இப்படித்தான் எனக்கு தரப்படும் கதாபாத்திரங்களின் தன்மைக்கேற்ப, இயக்குநரது சொல்படி எனது நடிப்பும் வேறுபடுகிறது.’’
அவரது அற்புதமான இந்த சுயவிளக்கம் மகேந்திரனுக்கு திருப்தி அளித்தது. ஆனால், அவரது வாழ்வின் இறுதிப் பகுதியில் அவரை வைத்து படமெடுத்தவர்கள், இயக்கியவர்கள் அவரிடம் பெயிண்ட் அடிக்கும் பிரஷ்ஷைக் கொடுத்து விட்டார்கள். அத்தகைய படங்களின் வரிசையில் பாரதிராஜாவின் ‘முதல் மரியாதை’ மட்டுமே வித்தியாசப்பட்டு ஆறுதல் அளித்தது’ என்கிறார் இயக்குநர் மகேந்திரன்.
`நடிகர் திலகம் ஏன் இந்த மாதிரியான தனக்குப் பொருத்தமற்ற, சராசரித்தனமான படங்களில் நடித்து, தன்னை வருத்திக் கொள்கிறார்?’ என்ற கேள்வியும் மகேந்திரனுக்குள் எழுந்தது. அவருக்கு விளங்கிய உண்மை இதுதான்! ‘நடிப்பு ஆற்றலில் அவருக்கிருந்த வல்லமையின் உயரத்துக்கு ஏற்ற கதைகளை உருவாக்கும் ஆற்றல் கொண்ட கதாசிரியர்களோ,இயக்குநர்களோ நம்மிடம் கிடையாது. அவரை உலகமயமாக்கும் முனைப்புக் கொண்ட படத்தயாரிப்பாளர்களும் நம்மிடையே இல்லை. சராசரிக்கும் தகுதியற்ற கதாபாத்திரத்தில் நடிக்கும்போது, அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளும், உப்புசப்பற்றதாக அமையும்போது, அதை ஈடுகட்ட அப்படிப்பட்ட காட்சிகளைக் கரையேற்றும் முனைப்பில் அவராகவே மிகையாக நடிக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு தன்னை உட்படுத்திக் கொண்டார்.’ இப்படித்தான் மகேந்திரனால் நினைக்க முடிந்தது.
‘தங்கப்பதக்கம்’ படப்பிடிப்பின்போது நடந்த ஒரு நிகழ்ச்சி. மனைவி லட்சுமி இறந்து போய் மனைவியை எஸ்.பி சவுத்ரி வந்து பார்க்கும் காட்சி மறுநாள் படமாக்கப்படவிருந்தது.
முதல் நாள் படப்பிடிப்பு முடிந்து புறப்படும்போது ``மகேன், இங்கே வாப்பா…நாளைக்கு எடுக்கப்போற சீன் எவ்வளவு எமோஷனலான சீன் என்று உனக்குத் தெரியும். அந்தக் காட்சியில் எனக்கு வசனம் எப்படி அமையவேண்டும் என்று நினைத்துப் பார். அதற்கேற்ற வசனத்தை எழுதிக் கொண்டு வா!!’ என்றார் நடிகர் திலகம்.
மகேந்திரனும் அன்று நள்ளிரவு வரை யோசித்தார். நடிகர் திலகம் கேட்ட மாதிரி வசனம் எழுதினால், ஒரு சில படங்களில் அவர் ஏற்கனவே பேசி நடித்த காட்சி போல அது அமையுமே என்று நினைத்தவராக… ஒரு தீர்மானத்துக்கு வந்தார் மகேந்திரன். ஒரு பேப்பரில் கால் பக்கத்தில் சில வரிகளை மட்டுமே எழுதிக் கொண்டு மறுநாள் ஸ்டூடியோவுக்குப் போனார். ஒப்பனை அறையில் சிவாஜி இருந்தார். அதனால் செட்டில் இருந்த இயக்குநர் பி. மாதவனிடம் அந்த சில வசன வரிகளைக் காட்டினார். அவர் பதைபதைத்துவிட்டார்.``நேத்து அவர் அவ்வளவு சொன்னதுக்கு அப்புறமும் இவ்வளவு கொஞ்சமா எழுதிட்டு வந்திருக்கீங்களே.. சீக்கிரம் போய் வேற டயலாக் எழுதுங்க ..’’
உதவி இயக்குநர் தேவராஜ் மகேந்திரன் எழுதிக் கொண்டு வந்ததைப்படித்து பார்த்துவிட்டு, `இதுதான் நல்லாருக்கு..மாத்தாதீங்க சிவாஜி சார்கிட்ட போய் விளக்கமாக சொல்லுங்கள்’ என்றார்.
மகேந்திரன் மேக்கப் ரூமுக்குப் போனார். தயங்கி தயங்கி தான் நினைத்தபடி எழுதிய அந்தக் காட்சியையும் சம்பந்தப்பட்ட வசனத்தையும் அவரிடம் விவரித்தார் மகேந்திரன்.
``நீங்கள் கமிஷனர் ஆபீஸிலிருந்து மனைவி இறந்த செய்தி கேட்டு வருகிறீர்கள். வீட்டுக்குள் நுழைந்ததும், ஆர்டர்லி உங்களுக்கு பின்பக்கமாக வந்து உங்கள் யூனிபார்மை கழற்றுகிறார். மனதுக்குள்ளேயே சுமையைத் தாங்கியபடி, நீங்கள் மவுனமாக படியேறிச் செல்கிறீர்கள்.மாடியில் மனைவியின் பிணத்தருகே நண்பர், மருமகள் எல்லோரும் உங்களது வரவை எதிர்பார்த்து நிற்கிறார்கள்.
மனைவியின் உயிரற்ற உடலைப் பார்த்ததும், நீங்கள் உடனே கதறவில்லை. தினமும் வீட்டில் உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் நடக்கிற நிகழ்வை மனதில் கொண்டு, இரண்டு வாக்கியங்கள் மட்டுமே பேசுகிறீர்கள். கடைசியில்தான், `லட்சுமி’ என்று பொறுக்க முடியாமல் வெடித்துக் குமுறி,மனைவி மீது விழுந்து அழுகிறீர்கள்’ என்றார் மகேந்திரன்.
அமைதியாகக் கேட்டவர், மகேந்திரனை அழைத்துக் கொண்டு செட்டிற்குப் போனார். இயக்குநரிடம், `மகேந்திரன் சொன்ன மாதிரியே காட்சியை எடுங்க. அதுக்கேத்த மாதிரி லைட் பண்ணிக்குங்க’’ என்றதோடு மகேந்திரன் விவரித்த காட்சியையும் அவருக்கு விளக்கினார்.
`என் மனைவி தினமும் நான் யூனிபார்மிலேயே வர்றப்ப, மொதல்ல யூனிபார்மை கழட்டுங்க ‘’ என்று சொல்லி விட்டு தனது கோபத்தைக் காட்டுவாள். நான் வீட்டுக்கு வரும் வரை அவள் தூங்கமாட்டாள். இப்படி இதற்கு முன்னால் கணவன்– மனைவிக்குள் நடந்தவற்றை காட்சிகளாக படமாக்கி இருக்கிறோம்..
அதனால்–
(தொடரும்)
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
4th December 2016 05:54 PM
# ADS
Circuit advertisement
Bookmarks