Results 1 to 4 of 4

Thread: துப்பு !

Threaded View

  1. #1
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    Chennai
    Posts
    0
    Post Thanks / Like

    துப்பு !

    சென்னைக்கு பக்கத்தில், திருவாலங்காடு. அங்கு ‘தமிழ்நாடு கமர்சியல் பேங்க்’ கிளை. காலை வேளை. வங்கி கொஞ்சம் மும்முரமாக இயங்கிக் கொண்டிருந்தது. வங்கி வாசலை ஒட்டிய ஒரு அறை.

    அதில் ரங்கமணி அமர்ந்திருந்தார். அவர்தான் அந்த வங்கி கிளையின் மேனேஜர். அவருக்கு கிட்டதட்ட ஒரு நாப்பது வயது.

    “கிரி, யாருப்பா அது? நானும் நாலு நாளா பாத்துக்கிட்டேயிருக்கேன். பாங்குக்கு வரான், போறான். என்ன பண்றான்? ”ரங்கமணி தனது அக்கௌண்டன்டை வினவினார்.

    “யார்ன்னு தெரியலே சார், நானும் இப்போதான் பார்க்கிறேன், எதாவது கஸ்டமரா இருக்கும். அக்கௌன்ட் ஓபன் பண்ண வந்திருப்பான். ” அசிரத்தையாக நழுவினார் அக்கௌண்டன்ட். இந்த மேனேஜருக்கு வேறே வேலையே இல்லை. எல்லாத்துக்கும் சந்தேகப் பட்டுக்கிட்டு. அவன் யாரா இருந்தால் இவருக்கென்ன? நான்தானே எல்லாத்துக்கும் ஓடனும் ! பொருமிக்கொண்டே , இருமிக்கொண்டே , அக்கௌன்டன்ட் ஒரு தம் போட வாசலுக்கு போய்விட்டார்.

    ரங்கமணி மட்டும் வாசலையே, அந்த சந்தேகத்துக்குரிய ஆசாமியையே நோட்டம் விட்டுக் கொண்டிருந்தார். அந்த நபர் தனது லுங்கியை மடித்துக் கட்டிக்கொண்டு கொஞ்ச நேரம் நின்று அங்கும் இங்கும் பார்வையை ஓட விட்டான். யாரோடோ கை பேசியில் பேசினான். போய்விட்டான்.

    அடுத்த நாளும், அதே சந்தேகத்துக்குரிய ஆசாமி, வங்கி வாசலுக்கு எதிரே நின்று கொண்டிருந்தான். கொஞ்சம் கசங்கிய சட்டை, ஐந்து நாள் தாடி, அவன் கண்ணில் தூங்காத அசதி.. வங்கியையே முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

    ‘ஏன் அந்த ஆள் இங்கேயே பார்த்து கொண்டிருக்கிறான்?பேங்க்லே கொள்ளை கிள்ளை அடிக்க பிளான் பன்றானோ?’ ரங்கமணிக்கு நிலை கொள்ளவில்லை. உடனே போலீசுக்கு போன் பண்ணின்னர்.

    “ஹலோ ! திருவாலங்காடு போலீஸ் ஸ்டேஷன்? இன்ஸ்பெக்டரா?”

    “ஆமா! இங்கிட்டு நான் இன்ஸ்பெக்டர் அமலன் பேசறேன். அங்கிட்டு நீங்க யாரு பேசறது?”

    “சார், நான் ரங்கமணி, ‘தமிழ்நாடு கமர்சியல் பேங்க்” திருவாலங்காடு கிளை , மெயின் ரோட்லே இருக்கே, அதன் மேனேஜர் பேசறேன்”

    “சொல்லுங்க சார், என்ன விஷயம்?”

    “இங்கே, சந்தேகப் படறா மாதிரி, ஒரு ஆள், பேங்க் வாசல்லே நிக்கறான். நாலு நாளா பாக்கறேன். பேங்க் பக்கமா வேறே முறைச்சி முறைச்சி பாக்கிறான். எனக்கு சந்தேகமா இருக்கு ! ஏதாவது தப்பு தண்டா பண்ண போறான் !. கொஞ்சம் என்னன்னு பாக்க முடியுமா?”

    “எங்களுக்கும் இங்கே அலெர்ட் வந்திருக்கு. சந்தேகப் படரா மாதிரி ஒருத்தன் இங்கே உளவு பாக்கிறா மாதிரி. இதோ உடனே வந்து பார்க்கிறோம்”

    ****

    அடுத்த நாள்.

    மேனேஜர் ரங்கமணி ஏதோ கடன் சம்பந்த பட்ட பேப்பர் பார்த்துக்கொண்டிருந்த நேரம். இன்ஸ்பெக்டர் அமலன் கிட்டேயிருந்து போன்.

    “தேங்க்ஸ் மேனேஜர் சார், உங்க உதவிக்கு ரொம்ப நன்றி . நாங்க சந்தேகப்பட்டது சரியாக போச்சு. உங்க பேங்க் பக்கத்திலே நடமாடிக் கிட்டிருந்தவன், சாதாரண ஆளில்லை. பெரிய தீவிரவாதி. பேரு வெடிகுண்டு வேலன்.தேடிகிட்டிருக்கிற பெரிய கிரிமினல். உங்க பக்கத்திலே இருக்கிற ஆஸ்பத்திரி திறப்பு விழாவிற்கு கவர்னர் வரும்போது,குண்டு வைக்க பிளான் பண்ணி கிட்டிருந்தான். சரியான நேரத்திலே துப்பு கொடுத்தீங்க. அவனை வளைச்சிபிடிச்சிட்டோம். ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் சார் ”

    “பரவாயில்லே சார், என் கடமையை தானே செய்தேன். எனக்கு ஏதோ சந்தேகமா இருந்தது!” – அவருக்கு கொஞ்சம் பெருமையாக இருந்தது.

    “இப்படி உங்களை மாதிரி எல்லாரும் அலெர்ட் ஆக இருந்தா, எங்களுக்கு வேலை ஈசி ஆச்சே சார். எப்போவாவது இந்த பக்கம் வந்தா, ஸ்டேஷன்க்கு வாங்க சார்”

    “அதுக்கென்ன, நேரம் கிடைக்கச்சே கட்டாயம் வரேன். உங்களுக்கு எந்த பேங்க்லே அக்கௌன்ட்?”. “பேங்க் கோஸ் டு போலிஸ் ஸ்டேஷன்” அப்படின்னு ஒரு ஸ்கீம் இருக்கு. நாங்களே உங்க ஸ்டேஷன் வந்து அக்கௌன்ட் ஓபன் பண்ணிடுவோம். வீட்டு கடன் அல்லது வேறே எந்த கடனா இருந்தாலும் உங்க ஸ்டேஷன்லே வெச்சு கொடுப்போம். சில சலுகைகளும் உண்டு". ஆர்வமாக பேசினார்.

    “அக்கௌன்ட் எல்லாம் வேண்டாம் சார் ! நீங்க சும்மா வாங்க” .

    “சரி வரேன்”. –ரங்கமணி போனை வைத்தார்.

    ரங்கமணிக்கு வேலை மும்முரம். போக முடியவில்லை. மறந்தும் விட்டார்.


    ****

    ஒரு இரண்டு வருஷம் கழித்து.

    இப்போது ரங்கமணி கொஞ்சம் பெரிய அதிகாரி. நெல்லை பக்கத்தில் , அம்பா சமுத்ரம் வங்கி கிளையின் சீனியர் மேனேஜர். ப்ரோமோஷன் ஆகி விட்டது.

    அன்று, கடன்காரர்களில் சிலரை பார்க்க, கடை வீதியில் அலைந்து கொண்டிருந்தார். ஒருவனும் வாங்கின கடனை திருப்பி கட்ட மாட்டேங்கிறானே!. சால்ஜாப்பு கேட்டு கேட்டு காது புளித்து விட்டது. கடன்காரனை தேடிக்கொண்டு போனால், சொல்லி வெச்சா மாதிரி எல்லோரும் காணாமல் போய் விடுறாங்களே ! என்ன புழைப்புடா இது ! சே !

    அலுத்துக் கொண்டே, யதேச்சையாக திரும்பினார். கொஞ்ச தூரத்தில், யாரோ ஒருவன் ரங்கமணியை கைகாட்டி, ஏதோ சைகை செய்துகொண்டிருந்தான். அவன் கூடவே இரண்டு மூன்று தடி ஆட்கள்.

    பார்த்தால், இரண்டு வருடம் முன்பு திருவாலங்காட்டில் பார்த்த அதே தீவிரவாதி போல இருந்தான். அதே சவரம் செய்யாத முகம். அடே !இது வெடிகுண்டு வேலன் போலிருக்கே! ஜெயில்லேருந்து விடுதலை ஆயிட்டானா என்ன? இல்லே தப்பிச்சு வந்துட்டானா? இங்கே என்ன பண்றான்? என்னை பார்த்து என்ன சொல்றான்?

    ரங்கமணிக்கு லேசாக அடி வயிற்றில் புளி கரைத்தது. ஒருவேளை நான்தான் காமிச்சு கொடுத்தேன்னு, தேடி பிடிச்சு பழி வாங்க வந்துட்டானா? ஐயையோ ! என்ன பண்ணுவேன்?சே ! துப்பு கொடுத்தது தப்பா? ரங்கமணிக்கு இப்போது குலை நடுங்கியது.

    தலையை குனிந்து கொண்டு, ரங்கமணி தெரிந்த ஒரு கடன்காரனின் கடைக்குள் உடனே நுழைந்து விட்டார்.

    ஏதோ இவரே கடன் வாங்கி விட்டு , பேங்க் காரங்க கிட்டேயிருந்து எஸ்கேப் ஆகிறது மாதிரி கடைக்குள் ஒளிந்து கொண்டார். ‘ உஸ். அப்பா! தப்பிச்சேண்டா சாமி. ‘ – பெருமூச்சு விட்டார்.

    டெலிபோன் டைரியை பார்த்து, திருவாலங்காடு போலீஸ் ஸ்டேஷன் நம்பர் கண்டு பிடித்து, அங்கிருந்தே இன்ஸ்பெக்டருக்கு போன் பண்ணினார்.

    “இன்ஸ்பெக்டர் சார், நாந்தான் ரங்கமணி பெசரேன். ஞாபகமிருக்கா? தமிழ்நாடு கமர்சியல் பேங்க்’ மேனேஜர்”.

    “சார், சொல்லுங்க சார், எப்படி இருக்கீங்க! நான் இன்ஸ்பெக்டர் அமலன். உங்களுக்கு ட்ரான்ஸ்பர் ஆயிடுச்சாமே!”

    “ஆமா சார், இப்போ நான் அம்பாசமுத்ரத்திலே இருக்கேன். சார், ஒரு முக்கிய விஷயம், இங்கே, அந்த தீவிரவாதி வெடிகுண்டு வேலனை திரும்பவும் பார்த்தேன்”

    “யாரு, திருவாலங்காடு ஆஸ்பத்திரிக்கு குண்டு வைக்க முயற்சி பண்ணினானே, அவனையா?”

    "அவனையேதான்! இங்கே தான் அம்பா சமுத்திரத்திலே சுத்தி கிட்டு இருக்கான்”

    “இருக்காதே ! அவன் புழலேறி ஜெயில்லே இருக்கானே! ஐந்து வருஷம் தண்டனை கொடுத்திருக்காங்களே. சரி, எதுக்கும்,நான் விசாரிச்சுட்டு சொல்லவா?”

    “சரி” - போனை வைத்தார் ரங்கமணி . கொஞ்சம் வியர்த்திருந்தது. துடைத்துக் கொண்டார்.

    ஒரு பத்து நிமிடம் கழித்து:

    அவரது அலைபேசியில் இன்ஸ்பெக்டர் அமலன் . “மேனேஜர் சார், நீங்க சொல்றது சரி. இப்போதான் சேதி கிடைச்சுது. வெடி குண்டு வேலன் ஜெயில்லேருந்து தப்பிச்சிட்டானாம். திருநெல்வேலி பக்கம் தான் நடமாடிகிட்டு இருக்கிறதா தகவல். நான் உடனே இந்த நியூசை அம்பா சமுதிரத்திற்கு பாஸ் பண்ணிடறேன். எனக்கு தெரிஞ்சவர் தான் அங்கே இன்ஸ்பெக்டர். திரும்பவும் உங்களுக்கு தேங்க்ஸ் சார்!”

    அடுத்த நாள் காலை.

    ஒரு பதினொரு மணி இருக்கும்

    “சார், நான் அம்பா சமுத்ரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பேசறேன். என் பேரு ஆதி. நீங்க கொடுத்த துப்பினாலே, நாங்க அந்த வெடிகுண்டு வேலனை பிடிச்சிட்டோம். ரொம்ப பிரமாதம் சார், என்னமா டைம்க்கு அலெர்ட் கொடுக்கறீங்க! இங்கேயும், மினிஸ்டர் வரப்ப, போட்டு தள்ள பிளான் பண்ணிட்டிருந்திருக்கான் கையும் களவுமா பிடிச்சிட்டோம் .”

    “ரொம்ப சந்தோஷம் இன்ஸ்பெக்டர் சார்”. ரங்கமணிக்கு மூச்சு வந்தது. அப்பாடா, இனிமே பயம் இல்லே. வெடிகுண்டு வேலன் நம்மளை போட்டு தள்ள வரவில்லை.

    ஆதி தொடந்தார். “ரொம்ப தாங்க்ஸ் சார், முடிஞ்சா இன்னிக்கு சாயந்தரம் ஸ்டேஷன் பக்கம் வாங்களேன். நேரே பார்த்து பேசலாம். ட்ரீட் இருக்கு.”

    “வரேனே”

    ***

    அன்று மாலை - அம்பாசமுத்திரம் போலீஸ் ஸ்டேஷன்

    ரங்கமணி உள்ளே போனபோது, இன்ஸ்பெக்டர் இல்லை. ஏட்டு மட்டும் தான் இருந்தார். “வாங்க சார், இன்ஸ்பெக்டர் ஐயா உள்ளே விசாரணை பண்ணிட்டு இருக்கார். இப்போ வந்துடுவார். நீங்க உக்காருங்க ”

    “இருக்கட்டும்!”

    “நீங்க கொடுத்த அலெர்ட்னாலே, டக்குன்னு அந்த தீவிர வாதியை பிடிச்சுட்டோம். ஐயாக்கு ரொம்ப சந்தோஷம். உங்களாலே, அவருக்கு ப்ரோமோஷன் கிடைச்சிருக்கு.”

    “அப்படியா! ரொம்ப சந்தோஷம். வெடிகுண்டு வேலன் இன்னும் உங்க கஸ்டடியில் தான் இருக்கானா?”

    “இங்கே தான் ஐயா இருக்கான்!”

    அப்போது, சிறை செல்லிலிருந்து ஒருவன் வெளியே வந்தான். அவனைப் பார்த்ததும் ரங்கமணிக்கு தூக்கி வாரிப் போட்டது. அவர் கண்ணை அவராலேயே நம்பவே முடியவில்லை.

    அவனேதான். வெடிகுண்டு வேலன். எப்படி வெளிலே வந்தான்? சிரிச்சிகிட்டே வேறே வரான். ஐந்து நாள் தாடி, வாராத தலை. சிவந்த கண்கள், அவனே தான். ஆனா அவன் கையிலே விலங்கு இல்லையே?

    வெளியே வந்தவன், நேராக ரங்கமணியை நோக்கி கை அசைத்த படியே வந்தான்.

    “ஹலோ! ரங்கமணி சார் ! எப்படியிருக்கீங்க?”

    ரங்கமணிக்கு பயத்தில் ரத்தம் உறைந்து விட்டது. உதடு ஒட்டிக் கொண்டது. . ." நீங்க! நீங்க ! " பயத்தில் வாய் குழறியது.

    "நான்தான் டிடெக்டிவ் இன்ஸ்பெக்டர் ஆதி!. என்னை நினைவில்லை?"

    “நீங்களா ? இன்ஸ்பெக்டரா ? என்னை தெரியுமா?”

    “என்ன சார், இப்படி கேட்டுட்டீங்க? திருவாலங்காட்டிலே மப்டிலே ரோந்து பண்றப்போ, பேங்க்லே வெச்சு உங்களை பார்த்திருக்கேன். நான் அப்போ ஸி.ஐ.டி போலீஸ்லே சென்னையிலே இருந்தேன். எஸ். ஐ. யா இருந்தேன். தீவிரவாத ஒழிப்பு துறை. என்ன சார், உங்க துப்புனாலே தானே வெடிகுண்டு வேலனையே பிடிச்சோம் ”

    "இப்போ?"

    "இப்போ இங்கே கிரைம் பிராஞ்ச். டிடெக்டிவ் இன்ஸ்பெக்டரா இருக்கேன். என்னடா போலீஸ் டிரஸ்லே இல்லையேன்னு தானே பாக்கறீங்க? எப்பவும் மப்டிலே தான் சுத்துவேன். நேத்தி கூட கடை தெருவிலே உங்களை பாத்தேன். ஆனால் சட்டுன்னு நினைவுக்கு வரல்லே."

    “சாரி, நான் கவனிக்கலே" சமாளித்தார் ரங்கமணி "அப்போ வெடிகுண்டு வேலன் எங்கே?”

    “என்ன சார், தெரியாத மாதிரி கேக்கறீங்க. இங்கே தான் கஸ்டடிலே, உள்ளே இருக்கான்! எதிரே பாருங்க! ”

    எதிர் செல்லில் இருந்த வெடிகுண்டு வேலனை, இதற்கு முன்னால் ரங்கமணி பார்த்ததே யில்லை.

    ஒரு படித்த நாகரிக யுவன். லெவிஸ் பான்ட் விலையுர்ந்த டீஷர்ட். மழித்த முகம். படிய வாரிய தலை. ரிம்லெஸ் கண்ணாடி. கண்ணை மூடி அமர்ந்திருந்தான்.

    இவனா தீவிரவாதி? இவனா?

    “இவனா?” - ரங்கமணி வாயை விட்டே கேட்டு விட்டார்.

    “என்ன சார், இவனான்னு புதுசா கேக்கறீங்க?”

    “இல்லே! சும்மா கேட்டேன்.’”

    ரங்கமனிக்கு நம்பவே முடியவில்லை. இவனா தீவிரவாதி? இவனை நம்பி அசால்டா ஐம்பது லக்ஷம் கடன் கொடுக்கலாமே! நானே கூல் ட்ரின்க் கொடுத்து கடன் கொடுத்திருப்பேனே!



    “டீ சாப்பிடுங்க சார்.” இன்ஸ்பெக்டர் ஆதி. “கேக்கனும்னு நினைச்சேன்! உங்களுக்கு எப்படி இவன்தான் டெர்ரரிஸ்ட்ன்னு சந்தேகம் வந்தது? நீங்க ப்ரில்லியன்ட் சார்.”

    முகத்தில் வழிந்த அசட்டை துடைத்து கொண்டார் ரங்கமணி. வெளிலே சொன்னா வெக்கக்கேடு.

    இரண்டு தடவையும் தப்பான துப்பு கொடுத்திருக்கோம். இன்ஸ்பெக்டர் ஆதியையே , மப்டிலே சுத்திக்கிட்டிருந்தப்போ, டெர்ரரிஸ்டுன்னு நினைச்சிருக்கிறோம். இதை சொன்னா டின் கட்டிடுவாங்க. நம்ப மானம் கப்பலேறி விடும். நல்ல வேளை, அதே நேரத்திலே இந்த வேலனும் அங்கே இருந்திருக்கான். ரெண்டு தடவையும் தற்செயலா இதே தான் நடந்திருக்கு. அதிசயம் தான்.

    “அது என்னமோ, இவனை பார்த்ததும் தோணித்து. பேங்க்லே வேலை செய்யறோம். இந்த அளவு கூட மனுஷங்களை புரிஞ்சிக்கலன்னா எப்படி? "- சமாளித்தார்.

    "ஆனாலும், அநியாயத்துக்கு அடக்கம் சார் உங்களுக்கு!" - புகழ்ந்தார் இன்ஸ்பெக்டர் ஆதி, ரங்கமணிக்கு வாசல் வரை வந்து விடை கொடுக்கும் போது. வழிசலை துடைத்துக் கொண்டு வெளியே வந்தார் ரங்கமணி.

    **** முற்றும்


    /inspired by Jeffery Archer /
    Last edited by Muralidharan S; 18th May 2015 at 07:23 AM.

  2. Likes chinnakkannan, kirukan liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •