-
26th November 2014, 08:04 AM
#1
Junior Member
Seasoned Hubber
Makkal thilagm mgr-part -12
வெற்றி! வெற்றி!! வெற்றி !!!
ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் நம் ‘வெற்றி’ அவர்கள் பேசும் முதல் வசனம் இது. என்ன பார்க்கிறீர்கள்? தலைவர் என்று வர வேண்டிய இடத்தில் வெற்றி என்று போட்டிருக்கிறேனே என்றா? சரியாகத்தான் போட்டிருக்கிறேன். தலைவர் வேறு. வெற்றி வேறா? இரண்டும் ஒன்றுதானே. ‘வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்’ என்று பாடிய வெற்றியின் மறு வடிவம் அவர்தானே?
பூவுலகில் வாழும்போதும் சரி. இப்போது விண்ணுலகில் வாழும்போதும் சரி. எங்கும் எதிலும் எப்போதும் வெற்றி என்பதற்கு சொந்தக்காரர் அவர் ஒருவராகத்தான் இருக்க முடியும். இந்த ஆண்டில் திரையுலகம் இதுவரை கண்டிராத சாதனையாக 49 ஆண்டுகளுக்குப் பின் மறு வெளியீட்டில் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் சென்னையில் வெள்ளி விழா கொண்டாடிய வரலாற்று சாதனையும் வெற்றியும் தலைவருக்கே சொந்தம். அதுவும் இரண்டு திரையரங்குகளில் என்பது இனியும் யாரும் தொட முடியாத வெற்றியின் உச்சம். அவரே அந்த சாதனையை தகர்த்தால்தான் உண்டு. விரைவில் உலகம் சுற்றும் வாலிபன் டிஜிட்டலில் வெளியாகப் போகிறது. நாடோடி மன்னன் படம் முழு நீள வண்ணப்படமாக வரபோகிறது என்ற இனிக்கும் செய்தியை திரு.எஸ்.வி.சார் அவர்கள் சமீபத்தில் தெரிவித்துள்ளார். தலைவரின் வெற்றிகள் தொடரும்.
தான் சம்பாதித்த பொருள், சொத்துக்களையும் மக்களுக்கே தந்த அந்த வள்ளல், தான் பெற்ற வெற்றியையும் நமக்கு பரிசளித்து விட்டார், அதை நாம் பகிர்ந்து கொண்டு மகிழ்ச்சியில் திளைப்பதற்காக. அந்த வகையில் வெற்றிகரமாக மக்கள் திலகம் திரியின் 12ம் பாகத்தை துவக்கி வைக்கும்படி எனக்கு அன்பு கட்டளையிட்ட சகோதரர்களுக்கு அன்பு கலந்த நன்றியை தெரிவிக்கிறேன். சமீபத்தில் சகோதரர் திரு.கலிய பெருமாள் அவர்கள் கூறியது போல தலைவரின் புகழை, பெருமையை, திறமையை, பண்புநலன்களை, திரையுலகம், அரசியல், தனிப்பட்ட வாழ்வு ஆகியவற்றில் அவரது வியக்கத்தக்க சாதனைகளை பட்டியலிட்டால் நமக்கு ஆயுள் போதாது.
என்றாலும், மக்கள் திலகம் திரியின் 5 லட்சத்து 83 ஆயிரத்து 783வது பாகத்திலும் அவரது சாதனைகளை சொல்லும் பணியை நமது பேரப்பிள்ளைகளும் அவர்களது வாரிசுகளும் தொடர்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. சமீபத்தில் சகோதரர் முத்தையன் அம்மு அவர்கள் தனது பேத்தியின் புகைப்படத்தை வெளியிட்டு, தனது பேத்தியும் தலைவரின் தொண்டர் என்று குறிப்பிட்டிருந்தார். எனது நம்பிக்கை பொய்க்காது என்பதற்கு அந்தக் குழந்தையே சாட்சி. நமக்கு இப்போதுதான் ஆரம்பமே.
தகவல் தொழில் நுட்பத்தால் உலகமே சுருங்கிவிட்ட நிலையில், இன்றைய அறிவுசார் உலகில் தலைவரின் ரசிகர்கள் என்றாலே ஏதோ படிப்பறிவு இல்லாதவர்கள், ரசனையற்றவர்கள், உலக அறிவு இல்லாதவர்கள், கைதட்டி விசிலடிக்கும் கூட்டம் என்ற தவறான கண்ணோட்டம் மாறியுள்ளது. இதுவும் தலைவர் பெயரால் நமக்கு கிடைத்த வெற்றிதான். இந்த வெற்றியையும் தலைவரின் ஆசியையும் வழித்துணையாக கொண்டு அடுத்த தளம் நோக்கி முன்னேறுவோம். ஊர் கூடி தலைவரின் புகழ்த் தேரை இழுப்போம்.
தலைவரின் திரைப்படங்கள், அவரது அரசியல் நடவடிக்கைகள், செயல்பாடுகள் ஆகியவை இன்றைய செய்திகள் மற்றும் நடப்புகளுடன் எப்படி ரிலவண்ட் ஆக உள்ளது என்பதை ஒப்புமைப்படுத்தி எழுதலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன்.
2005ம் ஆண்டு நமது திரி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 2012 மே மாதம் திரியில் திரு.எஸ்.வி.அவர்கள் இணைகிறார். பல்வேறு பணிகள், இடையூறுகளுக்கு இடையே நண்பர்களை தொடர்பு கொண்டு அவர்களை ஒருங்கிணைத்து திரிக்கு வரவழைத்து இன்று மக்கள் திலகம் திரி இரண்டே ஆண்டுகளில் 9 பாகங்களையும் 36,000 பதிவுகளையும் கடந்து ஆலவிருட்சமாய் நிற்பதற்கு உழைத்த அவரையும், விருட்சத்தை விழுதுகளாய் தாங்கி நிற்கும் சகோதரர்கள் திரு.செல்வகுமார், திரு.ராமமூர்த்தி, திரு.லோகநாதன், திரு.ஜெய்சங்கர், திரு. கலிய பெருமாள், திரு.சைலேஷ் பாசு, திரு. ரூப் குமார், திரு.ரவிச்சந்திரன், திரு.யுகேஷ் பாபு, திரு. தெனாலி ராஜன் திரு.முத்தையன், திரு.சுஹராம், திரு.ராஜ், திரு.மாசானம் உள்ளிட்டோரையும் நன்றியுடன் நினைக்கின்றேன். தொடர்ந்து தங்கள் பங்களிப்பை வழங்கும்படி அன்போடு கோருகிறேன்.
மக்கள் திலகம் திரியின் 11ம் பாகத்தில் பங்கேற்ற மாற்றுத் திரியை சேர்ந்த பண்பாளர்கள் திரு.ராகவேந்திரா, திரு.ஜி.கிருஷ்ணா, நண்பர்கள் திரு.சிவாஜி செந்தில், திரு.ஆர்.கே.எஸ், திரு.ஆதிராம்,திரு பம்மல் சுவாமிநாதன் ஆகியோர் தொடர்ந்து பங்களிக்க வேண்டுகிறேன். பண்பாளர் திரு.நெய்வேலி வாசுதேவன் அவர்கள் ‘தொட்டுக் காட்டவா’ பாடலுக்கு எழுதியதைப் போல தலைவரின் பட பாடல்களுக்கு அருமையான விமர்சனங்கள் எழுதினால் அதை இங்கே பதிவிடும்படி அன்போடு கோருகிறேன். மற்றும் நமது திரியின் 2வது பாகத்தை தொடங்கி வைத்து அவ்வப்போது இங்கே பங்கேற்கும் நண்பர் திரு.ஜோ, பொன்னந்தி மாலைப் பொழுது பாடலுக்கு சிறப்பான விமர்சனம் எழுதிய திரு.கார்த்திக், ‘புரட்சித் தலைவரின் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களை பார்த்து ரசித்தவன் நான். பாடல்களில் மயங்கித் திரிபவன். புரட்சித் தலைவரின் படங்களை திரும்ப திரும்ப சென்று பார்த்து ரசிக்கின்றவன்’ என்று நமது திரியின் 3வது பாகம் 13ம் பக்கத்தில் பதிவு செய்துள்ள திரு.கல்நாயக் அவர்கள், ஐதராபாத் ரவி அவர்கள் ஆகியோரும் இங்கே பங்கு கொண்டால் மகிழ்வேன். குறிப்பாக, நமது திரியின் கடந்த பாகத்துக்கு வந்து சில நிமிடங்கள் இருந்து விட்டு சென்ற நண்பர் திரு.கோபால், , நமது திரி பற்றி கருத்துக்கள் கூறும் நண்பர் திரு.முரளி ஸ்ரீனிவாஸ் அவர்களும் இங்கு வந்து கருத்துக்களை பகிர்ந்து கொண்டால் மகிழ்ச்சியே.
நமது சகோதரர்களுக்கு சொல்கிறேன். நான் ஏற்கனவே ஒருமுறை குறிப்பிட்டதைப் போல, உங்களிடம் உள்ளதைப் போல படங்கள், ஆவணங்கள், அரிய புகைப்படங்கள் என்னிடம் இல்லை.புத்தகங்களில் உள்ள சர்ச்சைக்குரிய தகவல்கள், ஆதாரங்கள், சில பேப்பர் கட்டிங்குகள் மட்டுமே உள்ளன. அவற்றை பதிவிட முடியாது. யார் மனதையும் புண்படுத்த விரும்பவில்லை. எனவே, உங்களிடம் உள்ள ஆவணங்களை நம்பி இத்திரியை தொடங்குகிறேன். கனிவு நிரம்பிய உங்கள் கண்களும் தடந்தோள் தூக்கி கைகொடுக்கத் தயாராக உள்ள உங்கள் கரங்களும் இருக்கும்போது எனக்கு என்ன கவலை?
பேரறிஞர் அண்ணா சொன்னதுபோல ஒரு தாயின் வயிறு தாங்காத காரணத்தால் நாம் தனித்தனியே பிறந்திருக்கிறோம். நாம் அனைவரும் தலைவரின் ரத்தத்தின் ரத்தங்கள். அந்த வகையில் எனது சகோதரர்களான நீங்கள் அனைவரும் எனது ரத்த சொந்தங்களே. உங்களின் அன்பான ஆதரவோடும் தலைவரின் ஆசியோடும் மக்கள் திலகம் திரி பாகம் 12 என்ற புரட்சித் தலைவரின் புகழ்த் தேரின் வெற்றி ஓட்டத்துக்கு முன்னோட்டமாக அந்த வெற்றி வேந்தனின் திருப்பெயரால் தேரை வடம் பிடித்து தொடங்கி வைக்கிறான் இந்த கலைவேந்தன்.
ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி கி ஜெய்!
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
Last edited by KALAIVENTHAN; 26th November 2014 at 08:17 AM.
-
Post Thanks / Like - 2 Thanks, 4 Likes
-
26th November 2014 08:04 AM
# ADS
Circuit advertisement
Bookmarks