Page 2 of 2 FirstFirst 12
Results 11 to 20 of 20

Thread: கதாநாயகனின் கதை - சிவாஜி கணேசன்

  1. #11
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    கதாநாயகனின் கதை - 10

    தினமலர் வாரமலர் 07.12.2014



    ராதா அண்ணனைக் கண்டதும், ஒருவர் ஓடோடி வந்தார். முட்டைக் கண்களும், ஒல்லியாக ஒடிந்து விழுவது போன்ற உடலமைப்பும் கொண்ட அவர், மரியாதையோடும், மிகுந்த அன்போடும் ராதா அண்ணனை வரவேற்றார்.
    'சவுக்கியமா இருக்கியா?' என்று அவரைப் பார்த்து கேட்டார் ராதா அண்ணன்.
    'சவுக்கியமா இருக்கேண்ணே...' என்று பணிவுடன் பதில் சொன்னவர், 'காபி சாப்பிடறீங்களா?' என்று கேட்டார்.
    'வேண்டாம்... இப்போது தான் குடிச்சிட்டு வந்தோம்..' என்றார் ராதா அண்ணன்.
    'அதனாலென்ன காபி தானே தரப் போகிறேன்; குடிச்சிட்டுப் போங்க...' என்று வற்புறுத்தினார் அவர்.
    'வேண்டாம்பா...' என்றார் ராதா அண்ணன்.
    'அப்படிச் சொல்லிட்டா எப்படி? நான் காபி கொடுக்கத்தான் போறேன்; நீங்க குடிச்சிட்டுத் தான் போகணும்...' என்று கட்டாயப்படுத்த ஆரம்பித்தார் அவர்.
    'சரி சரி... கொண்டு வா; குடிச்சிட்டே போறேன்...' என்று சொன்னார் ராதா அண்ணன்.
    ராதா அண்ணனின் பதிலைக் கேட்டதும், மகிழ்ச்சி பொங்க உள்ளே போனார் அவர்.
    போன வேகத்திலேயே, முகத்தில் அசடு வழிய திரும்பி வந்தவர், 'காபி இல்லயாம்; தீர்ந்து போச்சாம்...' என்று சங்கோஜப்பட்டு கொண்டே சொன்னார்.
    அவருக்கு ஒரே வெட்கமாகி விட்டது!
    ராதா அண்ணன் பெருந்தன்மையுடன், 'அதனாலென்ன பரவாயில்ல; அப்போ நான் போயிட்டு வர்றேன்...' என்று அவரிடம் விடை பெற்று கிளம்பினார்.
    அவர் யார் தெரியுமா?
    அவர் தான், பிரபல காமெடி நடிகர் டி.ஆர்.ராமச்சந்திரன்.
    அவர் யாரென்று அப்போது எனக்கு தெரியாது. பல நாட்களுக்குப் பிறகு தான், அவரைப் பற்றி தெரிந்து கொண்டேன்.
    ஆரம்பத்தில் எல்லா நடிகர்களுக்கும், கம்பெனி வீட்டில் இப்படிப்பட்ட நிலைமைதான் இருக்கும். அவர்களுக்கு செல்வாக்கு வளர வளரத் தான், கம்பெனியிலும் அவர்களுக்கு மதிப்பும், வசதியும், பெருகும்.
    அதாவது, அவர்கள் வளரும் போது, இவை எல்லாம் வளரும். ஆனால், வளரும் போதோ அவர்கள் கம்பெனியில் இருக்க மாட்டார்கள்.
    ராதா அண்ணன், கம்பெனிக்காக வாங்க வேண்டிய சாமான்களை வாங்கி முடித்ததும், பழையபடி பொள்ளாச்சிக்கே திரும்பி வந்தோம். இங்கு வந்ததும் தான் ராதா அண்ணன், எங்களை கம்பெனியிலிருந்து பிரித்து அழைத்துச் சென்று விட்டது பற்றி, காரசாரமான விவாதங்கள், கம்பெனியில் நடைபெற்றதாகக் கேள்விப்பட்டோம்.
    புதிய காட்சி ஜோடனைகளையும், சீன்களையும் (திரைச்சீலைகள்) தயார் செய்தார் ராதா அண்ணன். 25 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்து, நாடகத்தை ஆரம்பித்தார். அந்த நாளில் இவ்வளவு பெரிய தொகையைச் செலவிட்டு ஆரம்பித்த கம்பெனி, ராதா அண்ணனுடைய தாகத் தான் இருக்கும்.
    இப்படி பெருஞ்செலவில் உருவாக்கிய சீன்களையும், பல நல்ல நடிகர்களையும் ஒன்று சேர்த்து ஈரோட்டில் நாடகம் நடத்த ஆரம்பித்தார்.
    ஈ.வெ.ரா.,வுக்கு சொந்தமான தியேட்டரில் தான் நாடகம் நடந்தது.
    முதல் நாடகம், 'லட்சுமி காந்தன்!'
    ஆரம்பத்தில் சுறுசுறுப்பாக வந்த மக்கள் கூட்டம், பத்து நாட்களில் குறைய ஆரம்பித்தது.
    ஏன் என்று ஒருவருக்குமே புரியவில்லை.
    இதனால், கம்பெனிக்கு நஷ்டம் ஏற்பட்டு ஆயிரக்கணக்கில், கடன் வாங்கும் நிலையும் ஏற்பட்டது.
    நாடகத்தை ஆரம்பித்ததற்கும், பெரிய நஷ்டம் வருவதற்கும் இடையில் அதிக நாட்கள் கூட இல்லை. இறுதியில், தியேட்டருக்கான வாடகை பணத்தைக் கூட கொடுக்க முடியாமல், அதற்குப் பதிலாக பெரும் செலவில் உருவாக்கிய சீன்களை, அங்கேயே விட்டு விட்டு மீண்டும் பொள்ளாச்சிக்கே வரும்படி ஆகிவிட்டது.
    இந்நிலையில், ராதா அண்ணனுக்கும், அவருடன் கம்பெனியில் பாகஸ்தர்களாக இருந்தவர்களுக்கும் இடையில் மன வேறுபாடு ஏற்பட்டு, கம்பெனியை இரண்டாகப் பிரிப்பது என்ற முடிவுக்கு வந்தனர்.
    கம்பெனியில் பணம் போட்டவர்கள், சில முக்கியமான நடிகர்களையும், பையன்களையும் அழைத்து, ராதா அண்ணன் பேரில் புகார் சொல்லி, நல்லது கெட்டதைப் பாகுபடுத்திப் பார்க்க முடியாத பருவத்திலிருந்த சிறுவர்களாகிய எங்கள் மனதைக் கலைத்து, அவர்கள் கூடவே நாங்கள் இருக்கும்படி எங்கள் மனதைத் திருப்பி விட்டனர்.
    ராதா அண்ணனும், அவர்களும் பிரிந்து கொள்வதற்காக ஒரு பஞ்சாயத்து நடந்தது.
    'யார் யார், ராதா அண்ணனுடன் போகின்றனர், யார் யார் இங்கேயே இருக்கப் போகின்றனர்?'என்ற கேள்வியை பஞ்சாயத்தார் எல்லாரிடமும் கேட்டனர்.
    கம்பெனியில் இருந்த பெரும்பாலோர், ராதா அண்ணனுடன் போகாமல், அங்கேயே தங்கி விடுவதாகக் கூறினர். அப்படிச் சொன்னவர்களில் நானும் ஒருவன்.
    எங்கள் முடிவைக் கேட்டதும், ராதா அண்ணன் மன வேதனையுடன் பிரிந்து போனார்.
    பணம் போட்டவர்கள், பாலக்காடு கிருஷ்ணப் பிள்ளை தலைமையில், எங்களை அழைத்துக் கொண்டு பாலக்காட்டுக்கு வந்தனர்.
    பாலக்காடு, நெம்மாரா, வல்லங்கி, கொல்லங்கோடு போன்ற ஊர்களிலும் மற்றும் பல சின்ன சின்ன ஊர்களிலும் வழக்கம் போல ஸ்ரீ கிருஷ்ண லீலா, ராமாயணம் போன்ற நாடகங்களை நடத்த ஆரம்பித்தோம்.
    கொல்லங்கோடு மகாராஜா மிகச் சிறந்த கலா ரசிகர். அவர் தன் குடும்பத்துடன், அடிக்கடி எங்கள் நாடகத்தை பார்க்க வருவார். கொல்லங்கோட்டில் தான், 'மனோகரா' நாடகத்தில், முதன் முதலாக மனோகரனாக, கதாநாயகன் வேடத்தில் நடிக்க ஆரம்பித்தேன்.
    என் வாழ்க்கையில் பெரிய திருப்பமும், லட்சியமும் கொல்லங்கோட்டில் தான் நிறைவேறியது. ஆம்! கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்ற என் கனவு மற்றும் லட்சியம், இங்கே தான் ஈடேறியது. இந்நாடகத்தில் மனோகரனாக நடித்த என் நடிப்பை பாராட்டி, கொல்லங்கோடு மகாராஜா, வெள்ளியால் தயாரிக்கப்பட்ட விலை உயர்ந்த ஆடை ஒன்றை பரிசாக தந்தார்.
    கதாநாயகன் வேடம் போட்ட முதல் நாடகத்திலேயே எனக்கு இப்படி ஒரு பரிசு. அதுவும் சிறந்த கலா ரசிகரான, ஒரு மகாராஜாவால் கொடுக்கப்பட்டதை பெரும் பாக்கியமாகவே நினைத்தேன்.
    மீண்டும் நாடகப்பணியில் தொய்வு ஏற்படவே, 'நாடகமும் வேண்டாம்; நடிப்புத் தொழிலும் வேண்டாம்...' என்று தற்காலிகமாக ஒரு முழுக்குப் போட்டு, திருச்சி - ஸ்ரீரங்கம் டிரான்ஸ்போர்ட் பஸ் கம்பெனியில் மெக்கானிக்காகச் சேர்ந்தேன்.
    நடிப்புக்கு முழுக்குப் போட்டேனே தவிர, அந்த ஆர்வத்தை என்னால் தணிக்க முடியவில்லை. உள்ளூரில் அவ்வப்போது நடந்த அமெச்சூர் நாடகங்களில் நடித்தேன். இதுவும், என் கலை ஆர்வத்திற்கும், தாகத்திற்கும் போதுமானதாக இல்லை.
    மறுபடியும் பொன்னுசாமி பிள்ளை கும்பகோணத்தில் கம்பெனி ஆரம்பித்து, என்னை அழைத்தார். அதில் சேர்ந்தேன்.
    சென்னையில் முகாமிட்டிருந்த போது, இக்கம்பெனியை என்.எஸ்.கிருஷ்ணன் வாங்கினார். என்.எஸ்.கே.,யுடன் சில நாடகங்களில் நடித்தேன். துரதிருஷ்டவசமாக அவர் சிறை சென்று விடவே, நானும், கே.ஆர்.ராமசாமியும் தனியே பிரிந்து சென்று, தஞ்சாவூரில் ஒரு கம்பெனி ஆரம்பித்தோம்.
    இதற்கிடையில், சென்னை சவுந்தர்ய மகாலில், ஈ.வெ.ரா., தலைமையில், ஏழாவது சுயமரியாதை மாநாடு நடைபெற்றது. இதில், 'சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்' என்ற நாடகத்தில், சத்ரபதி சிவாஜியாக நடித்த என்னை அழைத்த ஈ.வெ.ரா., கணேசன் பெயரோடு ஒரு அடைமொழியைச் சேர்த்தார். அதுவே எனக்கு நிறந்தர பெயராக அமைந்து விட்டது.
    அது...
    — தொடரும்.
    தொகுப்பு: வைரஜாதன்,
    நன்றி 'பொம்மை'
    விஜயா பப்ளிகேஷன்ஸ்,
    சென்னை.
    நன்றி - தினமலர்
    தினமலர் இணையதளத்தில் இப்பக்கத்திற்கான இணைப்பு

    http://www.dinamalar.com/supplementa...d=22989&ncat=2
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. Likes Russellmai liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #12
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    comments portion a diehard nt fan

    இந்த படத்தில் இருக்கும் நம் நடிகர் திலகத்தின் கம்பீரம், அழகு போதுமய்யா . நிஜ சத்ரபதி சிவாஜியே கண்முன்னே நிற்பது போல் உள்ளது. அந்த கணங்கள் ஒன்றே போதும் ஆயிரம் கதைகள் சொல்லும். மாபெரும் கலைஞன். இந்தியாவில் பிறந்தது மட்டுமே குற்றம். பல கோடிகளுக்கு அதிபதியாகி உலகமே மெச்சுகின்ற அளவுக்கு போகவேண்டியவர். திறமைக்கு மதிப்பில்லை. இறந்த பிறகு தான் அவருக்கு விருது வழங்கப்பட்டது. இப்போது எல்லாம் பல நாய்கள் நடிப்புங்கிற பெயரில் கைய, கால ஆட்டி 3 படங்கள் ஹிட் கொடுத்தவுடன் பல கோடிகள் சம்பளம் கேக்குதுங்க, தனக்கு தானே கட்டவுட் பாலபிஷேகம் பட்டம் வேறு. விளக்குமாறுக்கு பட்டு குஞ்சலம்

  5. Thanks RAGHAVENDRA thanked for this post
    Likes Russellmai liked this post
  6. #13
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    கதாநாயகனின் கதை - 11

    தினமலர் வாரமலர் 14.12.2014




    சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்' என்ற நாடகத்தில், சத்ரபதி சிவாஜியாக நடித்த என்னை, 'சிவாஜி கணேசன்' என்று அழைத்தார் ஈ.வெ.ரா.,
    விழுப்புரம் சின்னையா மன்றாயரின் மகனான வி.சி.கணேசன், அன்று முதல், சிவாஜி கணேசன் ஆகிவிட்டேன். இச்சம்பவம், என் வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்பமாக அமைந்தது.
    சென்னையில் சக்தி நாடக சபை சார்பில், நாடகங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, 'சம்சார நவுகா' என்ற நாடகத்தை நடத்திக் கொண்டிருந்தார் பி.ஆர்.பந்துலு. அதில், அவரது நடிப்பு என்னை கவர்ந்து விட்டது. அன்று
    முதல் அவரது விசிறியாகி விட்டேன்.
    பி.ஆர்.பந்துலுவுக்கு மட்டுமல்ல, ராதா அண்ணன் நடிப்புக்கும் நான் விசிறி!
    சக்தி நாடக சபையிலிருந்த முக்கிய நடிகர்கள் பலர் விலகி விடவே, எனக்கு அதில் சேர அழைப்பு வந்தது; அதில் சேர்ந்தேன்.
    அப்போது அதன் முக்கிய நாடகங்களில், 'விதி' என்ற நாடகமும் ஒன்று. வேலூரில் இந்நாடகத்தைப் பார்த்த பி.ஏ.பெருமாள், கம்பெனி நடிகர்களை வைத்தே இதைப் படமாக்க விரும்பினார். ஆனால், என்ன காரணத்தினாலோ அது நடைபெறவில்லை.
    கடந்த, 1950ல், திருச்சியில் எங்கள் நாடகம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது தான், என் வாழ்க்கையில் மற்றொரு பெரிய திருப்பம் ஏற்பட்டது.
    சினிமாவில் நடிக்க வைப்பதற்காக கிருஷ்ணன், பஞ்சு மற்றும் பெருமாள் போன்றோர் திருச்சியிலிருந்து என்னை சென்னைக்கு
    அழைத்து வந்தனர்.
    அவர்கள் முயற்சியால், பராசக்தி கணேசனாகி விட்டேன். ஆனாலும், என்னை இந்தத் தொழிலுக்கு இழுத்து வந்த கட்டபொம்மனை மறக்க முடியவில்லை. ஒரு நாளாவது கட்டப்பொம்மனாக நடித்து விட வேண்டுமென்ற எண்ணம், என்னை விட்டு அகலாதிருந்தது. இந்த என் எண்ணம் தான், சிவாஜி நாடக மன்றத்தில், 'கட்டபொம்மன்' நாடகம் உதித்ததற்கு காரணம்.
    ஒரு நாள், கோவில்பட்டியில் நாடகம் நடத்திவிட்டு, கட்டபொம்மன் தூக்கில் தொங்கிய கயத்தாறு வழியாக திருநெல்வேலிக்கு காரில் போய்க் கொண்டிருந்தோம். எங்கள் தலைவர் சக்தி கிருஷ்ணசாமியும் உடன் இருந்தார். அவரிடம் என் வெகுநாளைய ஆசையைக் கூறி, கட்டபொம்மன் கேரக்டரை ஒரு சிறந்த நாடகமாக்க வேண்டும் என்ற எண்ணத்தை வெளிப்படுத்தினேன்.
    அவர் நாடகத்தை எழுதி முடித்ததும், படித்துப் பார்த்தேன். நாடக அமைப்பும், அவர் எழுத்தும், தரமாகவும், புதுமையாகவும் இருந்தன. என் வெகுநாளையத் துடிப்புக்கு இரட்டிப்பு ஊக்கம் ஏற்பட்டது. இந்நிலையில், மற்றொரு எண்ணமும் பிறந்தது.
    'சிவாஜி நாடக மன்றக் குழு'வில் ஏறக்குறைய, 60 கலைத் தொழிலாளர் இருந்தனர். அவர்களில் ஒரு சிலரைத் தவிர, பெரும்பாலோர் குடும்பம், குழந்தைகள் என உள்ளவர்கள்; அவர்கள் நாடக வருமானத்தையே பெரிதாக எதிர்பார்க்கும் நிலையில் இருந்ததால், அவர்கள் ஊதியத்தை அதிகமாக்க நினைத்தேன். ஆனால், அடிக்கடி நாடகம் நடந்தால் தான் அவ்வாறு செய்ய முடியும். அதனால், கட்டபொம்மன் நாடகத்தை எந்த குறையும் இல்லாமல், சிறப்பாக நடத்துவதற்காக புதிதாகவே தயாரிக்கத் திட்டமிட்டேன்.
    'வீரபாண்டிய கட்டபொம்மன்' நாடகத்தைத் தயாரிக்க ஏறக்குறைய, 20 மாதங்கள் ஆயின.
    சக்தி கிருஷ்ணசாமியால் நாடகம் எழுதி முடிக்கப்பட்டதும், அதற்கான காட்சிகளின் சித்திரங்களை வரைய, தர்மராஜ் என்பவர் நியமிக்கப்பட்டார்.
    ஆடை, அணி தயாரிப்புக்கென, டெய்லர் ராமகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார். காட்சி ஜோடனைக்கும், உடைத் தயாரிப்புக்குமாக ஓராண்டு ஆனது. அதற்கென, 50 ஆயிரம் ரூபாய் செலவழிக்கப்பட்டது.
    பின், ஓரிரு மாதங்கள் நாடகத்துக்கான ஒத்திகை நடைபெற்றது. பத்து நாட்கள் அண்ணாமலை மன்ற மேடையில் நாடக ஒத்திகையும், கடைசி நாள், முழு அமைப்போடு நாடக ஒத்திகையும் நடைபெற்றது.
    ஆக., 28, 1957ம் ஆண்டு, புதன்கிழமை, 'வீரபாண்டிய கட்டபொம்மன்' நாடகம் முதன்முதலாக சேலம் கண்காட்சி கலையரங்கத்தில் அரங்கேற்றப்பட்டது. அதற்கு தலைமை தாங்கியவர், டாக்டர் மு.வ., அவர் நாடகத்தைப் பெரிதும் வியந்து, புகழ்ந்து பாராட்டினார். மக்கள் ஆதரவு, நாளுக்கு நாள் எதிர்பாராத வகையில் பெருக்கெடுத்தது. முயற்சியும், உழைப்பும், ஆசையும் வீணாகவில்லையென்ற உவகை, என் மனதை நிறைத்தது.
    அதைத் தொடர்ந்து, சென்னையில் பல நாடகங்கள் நடந்து விட்டன. ஓய்வில்லாத படப்பிடிப்பிற்கிடையிலும், 25 நாட்களுக்குள்,
    16 நாடகங்கள் நடந்தன.
    பல நாடகங்களில், அதிக வேலையுள்ள பெரும் பாத்திரங்களை ஏற்று நடித்திருக்கிறேன். கட்டபொம்மன் நாடகத்தில் இயற்கையாக எழும் உணர்ச்சி, நாடக முடிவில் எத்தகைய களைப்பை, சிரமத்தை உண்டாக்கும் என்பதை நினைத்த போது பயமாக இருந்தது என்றாலும், என் குழுவினர்களோடு ஒன்றுபட்டுச் செயல்படுவதில் காணும் இன்பமும், மக்களின் பாராட்டுதலை நேருக்கு நேர் பெறும் வாய்ப்பும், எனக்கு, எதிலும் பெற முடியாத ஒரு தனி மகிழ்ச்சியைத் தந்தது.
    — தொடரும்.

    தொகுப்பு: வைரஜாதன்,
    நன்றி 'பொம்மை'
    விஜயா பப்ளிகேஷன்ஸ்,
    சென்னை.
    நன்றி தினமலர்

    தினமலர் இணையதளத்தில் இப்பக்கத்திற்கான இணைப்பு

    http://www.dinamalar.com/supplementa...d=23081&ncat=2
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  7. Likes Russellmai liked this post
  8. #14
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    கதாநாயகனின் கதை - 12

    தினமலர் வார மலர் 21.12.2014



    அலைகடல் ஓரம் நின்று கொண்டிருந்தேன். அலைகள் உருண்டு ஒன்றோடு ஒன்று மோதுகின்றன. அப்போது ஆயிரக்கணக்கான முத்துகளை உதிர்க்கின்றன; கரையோரம் வந்து தவழ்ந்து, பழையபடியே கடலுக்குள் சென்று சங்கமம் ஆகின்றன.
    இதே போன்று தான் நடிப்பு என்பதும் ஒரு பெரிய கடல். இதில், காட்டப்படும் ஆயிரமாயிரம் உணர்ச்சிகள் தான் அதன் முத்துகள்; பலதரப்பட்ட பாவங்கள் அதன் அலைகள்!
    கடலைப் போல் நடிப்பும் எல்லையில்லாதது; அதேசமயம் எல்லைகளைக் கடந்து நிற்பதும் அது தான்!
    அத்தகைய நடிப்பைப் பற்றி நான் கற்றிருப்பதோ கை மண்ணளவே!
    அப்படியானால் இதை நான் ஏன் எழுத வேண்டும்... அதற்கு எனக்கு என்ன தகுதி இருக்கிறது?
    நமக்குத் தெரிந்ததை, அது சிறிதளவானாலும், பிறருடன் பகிர்ந்து கொள்வதில் தவறில்லை. அதேசமயம், 'எனக்குத் தெரிந்தது இது தான்; இன்னும் நான் கற்றுக் கொள்ள எவ்வளவோ இருக்கிறது...' என்று சொல்லிக் கொள்வதிலும் தவறில்லை; வெட்கப்பட வேண்டியதும் இல்லை. எனக்குத் தெரியாததை, மற்றவர்கள் கற்றுத் தரலாம் அல்லவா?
    சிலரை, 'பிறவி நடிகன்' என்று அடைமொழி கொடுத்து அழைப்பர். என்னைக் கேட்டால், உலகில் உள்ள ஒவ்வொருவருமே பிறக்கும் போதே நடிகனாகத் தான் பிறக்கிறான். நடிப்பு என்பது, மனிதர்களின் ரத்தத்துடன் கலந்தே இருப்பது.
    ஒரு சிறு குழந்தை, தன் பிஞ்சுக் கரங்களால், தன் கண்களை மூடியபடி, தன் அம்மாவையோ, அப்பாவையோ பார்த்து, 'ஆ.... பூச்சாண்டி...' என்று பயமுறுத்துகிறது. அதைக் கண்டு குழந்தையின் பெற்றோர், பயப்படுவது போல நடிக்கின்றனர்.
    குழந்தை பூச்சாண்டி காட்டுவதும், பெற்றோர் அதைக் கண்டு பயப்படுவதும் நடிப்பு தானே!
    இதை யார் சொல்லிக் கொடுத்தது? இறைவனே தந்தது; இயல்பாகவே, இயற்கையாகவே அமைந்தது.
    கடன்காரன் வருகிறான்... 'அவர் வீட்டில் இல்லயே...' என்று, கணவன் வீட்டிலிருக்கும் போதே, இல்லாதது போல நடிக்கிறாள் மனைவி. வருபவனும் அதை நம்பி விடுகிறான்.
    இங்கே, அந்த மனைவிக்கு நடிப்பைச் சொல்லிக் கொடுத்தது யார்?
    இறைவன், இயற்கை, இயல்பு!
    கடன் கேட்க வருபவன், தன் கஷ்டத்தை எல்லாம் பலவாறு முகத்தில் படம் பிடித்துக் காட்டுகிறான். அவன் முக பாவம், குரலின் ஏற்ற இறக்கத்தினால் அவன் கஷ்டத்தை உணர்ந்து, மனம் இரங்கி, இன்னொருவன் கடன் கொடுக்கிறான்.
    இங்கே, கடன் கேட்பவனுக்கு நடிப்பைச் சொல்லித் தந்தது யார்?
    இப்படியே, ஒவ்வொருவருமே ஒவ்வொரு கட்டத்தில், தினமும் நடிக்கத்தான் செய்கின்றனர்; அந்த நடிப்பை பலர் நம்பத்தான் செய்கின்றனர்.
    இப்படி பலதரப்பட்ட மனிதர்களின் செயல்களையே நாங்கள் மேடையிலும், திரையிலும் கலை என்கிற பெயரில் செய்கிறோம்.
    இக்கலை, நம் நாட்டில் எப்போது வந்தது? காலம் காட்ட முடியாத பழங்காலத்தில் இருந்தே, தமிழ் இலக்கியங்கள் தோன்றிய காலத்திலிருந்தே வந்திருக்கிறது.
    அப்போது, இது, கூத்து என்று அழைக்கப்பட்டது.
    கடந்த, 19ம் நூற்றாண்டில் நாடகக் கலைக்கு உயிர் கொடுத்தார் சங்கரதாஸ் சுவாமிகள்.
    நாடகம் என்றால் என்ன, அதன் இலக்கணம் என்ன, அது எப்படி அமைக்கப்பட வேண்டும், எப்படி நடிக்க வேண்டும் என்பதையெல்லாம் எடுத்துச் சொன்னவர் சுவாமிகள் தான். 40க்கும் மேற்பட்ட நாடகங்களை இவர் எழுதியுள்ளார்.
    இதேபோல், அமெச்சூர் கோஷ்டி வகையில், நாடகத்தை ஆரம்பித்து, அதற்கு ஒரு மறுமலர்ச்சியைக் கொடுத்தவர் பம்மல் சம்பந்த முதலியார்.
    இவர், மனோகரா மற்றும் வேதாள உலகம் ஆகிய நாடகங்களை எழுதியதோடு, மேடையில் நடித்தும் காட்டினார். முதன் முதலாக ஆங்கில கவிஞர் ஷேக்ஸ்பியரின் நாடகங்களையும், வடமொழிக் கவி காளி தாசனின் நாடகங்களையும், தமிழில் மொழி பெயர்த்தவர் இவரே!
    கடந்த, 1922ல் தெ.பொ.கிருஷ்ணசாமி பாவலர், கதரின் வெற்றி என்ற நாடகத்தை எழுதினார். தமிழில் எழுதப்பட்ட முதல் தேசிய நாடகம் இது. மேலும், இவர், தேசியக் கொடி என்ற நாடகத்தை, சுதந்திரப் போராட்டத்தை அடிப்படையாக வைத்து எழுதினார்.
    இவர், சொந்தமாக ஒரு நாடகக் குழு வைத்திருந்ததோடு, லண்டனில் தமிழ் நாடகங்களையும் நடத்தி, நம் நாடகக் கலையின் மேன்மையை உணர்த்தியவர்.
    பதி பக்தி, பம்பாய் மெயில் மற்றும் பர்த்ருஹரி - ஆகியவை பாவலரின் படைப்புகளே!
    இதன்பின், எம்.கந்தசாமி முதலியார், நாடகக் கலையின் வளர்ச்சிக்குப் பெரிதும் உழைத்தார். பெரும்பாலான நடிகர்கள், ஏதாவது ஒரு வகையில் இவருடன் தொடர்பு கொண்டவர்களாகவே இருப்பர்.
    நடிப்புக் கலை நம் நாட்டில் எப்படி வளர்ந்தது, வேரூன்றியது என்பதற்காகவே இவற்றை சொல்கிறேன்.
    இப்படி பல மேதைகளால் வளர்க்கப்பட்டு, உருவாக்கப்பட்ட இக்கலையில், நான் கற்க வேண்டியது நிறைய இருக்கிறது.
    ஆனால், ஒரு நடிகன் என்ற நிலையில், 'என் நிலை மற்றும் என் எண்ணம் என்ன?' என்பதையே நான் இங்கு சொல்ல முயற்சி செய்திருக்கிறேன்.
    ஆரம்பத்தில் சொன்னது போல, நடிப்பு என்பது ஒரு பெரிய இலக்கியம் போன்றது.
    நடிப்பை நாட்டின் வளர்ச்சிக்கும், சமூகத்தின் வளர்ச்சிக்கும் எந்தெந்த வகையில் பயன்படுத்தலாம், இன்னும் எந்தெந்த வகைகளில் நடிப்பில் புதுமையை உண்டாக்க முடியும் என்று பார்க்க வேண்டும்.
    கை, கால்களை ஆட்டி, முக அசைவுகளை உண்டாக்கி நடிப்பது ஒரு வகை என்றால், மனதில் உள்ள உணர்ச்சிகளை வெளியே காட்டாமல், வசனம் பேசி நடிப்பது மற்றொரு வகை.
    அதிகம் பேசாமல், கண் அசைவிலும், உதட்டின் நடுக்கத்திலும் நடிப்பது பிரிதொரு வகை நடிப்பாகும்.
    எந்த உணர்ச்சியும் இல்லாமல், ஜடமாக நிற்பதும் ஒரு வகை நடிப்பு தான்!
    இவை அத்தனையிலும் ஏதாவது ஒரு வகையில் மாறுபாட்டை உண்டாக்க விரும்பி, அதில், இப்போது தான் முதல் படி எடுத்து வைத்திருக்கிறேன். இன்னும் ஆயிரம் படிகள் மேலே இருக்கின்றன.
    ஏதாவது ஒரு சம்பவம் ஏற்பட்டு, அந்தச் சம்பவத்தின் தன்மையை பிரதிபலிக்க முடியாமல், சில சமயத்தில் முகத்தை மூடிக் கொள்கிறோமே... என்ன காரணம்? அந்தச் சம்பவத்துக்குத் தகுந்தாற் போல, நம்மால் அப்போது உணர்ச்சியை முகத்தில் காட்ட முடிவதில்லை.
    சில சமயம் தேர்ந்த நடிகர்களாலும், இது முடிவதில்லை.
    உதாரணத்துக்கு ஒரு சம்பவத்தைச் சொல்கிறேன்.
    'சொர்க்கத்தில் அவளை விட்டு விடு' என்று ஒரு ஆங்கிலப் படம்.
    இப்படத்தில் ஒரு காட்சியில், படத்தின் கதாநாயகி, தன் சொந்த மைத்துனனையே தண்ணீரில் மூழ்கடித்து சாகடிப்பது போல ஒரு காட்சி.
    தன் கையாலேயே, தன் நெருங்கிய உறவினரையே கொல்லும் போது, அவளது முக பாவம் எப்படி இருக்கும்?
    இதில், கதாநாயகியாக ஜீன் டிரனி என்ற ஒரு நடிகை நடித்தார். எவ்வளவோ முயற்சித்தும், அந்த உணர்ச்சியை அவரால் முகத்தில் கொண்டு வர முடியவில்லை.
    இயக்குனர் பொறுமையை இழந்து விட்டார்.
    நடிகையிடம் ஒரு கூலிங் கிளாசை போட சொல்லி, கண்களை மறைத்து விட்டார்; அவர் எத்தகைய உணர்ச்சியை வெளிக்காட்டினார் என்பதே தெரியவில்லை.
    இங்கே அந்த நடிகைக்கு வெற்றி இல்லை; இயக்குனருக்கு தான் வெற்றி!
    ஆனால், என்னைப் பொறுத்தவரை, அந்தக் கூலிங் கிளாசை அணியாமல், எவ்வளவு உணர்ச்சிகளைக் கொட்டி நடிக்க வேண்டுமோ, அதைக் காட்டி நடிக்கவே முயற்சிப்பேன்; அதில் வெற்றி பெற, எவ்வளவு கடினமாக உழைக்க வேண்டுமோ அதைச் செய்வேன்.
    இப்படி சொல்வது ஆணவத்தின் அடிப்படையில் அல்ல; ஆசை, ஆர்வம் மற்றும் திறமையைக் காட்ட வேண்டும் என்ற துடிப்பினால் தான்.
    நான் ஒரு பெரிய சுயநலக்காரன்; ஆம்! நடிப்பில் புதுமைகளைப் புகுத்தி, சமூகத்திற்கு அதை எப்படிப் பயன்படுத்தலாம், மக்களை எப்படி மகிழ்விக்கலாம் என்ற எண்ணம் இருந்தாலும், அதே நடிப்பால் என்னை வளர்த்துக் கொள்வது எப்படி என்பது குறித்து சிந்திப்பேன். ஒருவன் தான் ஈடுபட்டிருக்கும் கலையில், மேலும் வளர்ச்சி பெற்று, முன்னேற்றம் காண முயற்சிப்பதில் தவறு இல்லையே! நடிகனுக்கு தன் மீது அதிக அக்கறை ஏற்பட்டால் தான், அந்த அக்கறை மற்றவர்களுக்கும் பயன்படும்; பயன்படுத்த முடியும்.
    கண்கள் ஆயிரம் கதை பேசும் என்று சொல்வர். அது, காவியமே பேசும்!

    கண்களாலேயே பலவித பாவங்களைக் காட்ட முடியும். உள்ளத்தில் இருப்பதை இரண்டு விழிகளினாலேயே உணர்த்தி விடலாம்.
    அகத்தின் அழகை, முகத்தில் பார்க்கலாம் என்று இதனால் தான் சொல்கின்றனர்.
    அந்த முகத்திலேயே, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது விழிகள் தான். உள்ளத்தின் ஜன்னல்கள் அவை!
    பார்வைக்குப் பார்வை, வித்தியாசத்தையும், உணர்ச்சிகளிலே வேற்றுமைகளையும் காட்டலாம்.
    பேசும் கண்கள் என்று சொல்வரே... அது உண்மை. நாள் கணக்கில் பேச வேண்டியதை, ஒரு பார்வையே சொல்லிவிடும். பார்வையாலேயே பலவித நடிப்புகளை காட்டலாம்.
    — தொடரும்.

    தொகுப்பு: வைரஜாதன்,
    நன்றி 'பொம்மை'
    விஜயா பப்ளிகேஷன்ஸ்,
    சென்னை
    நன்றி தினமலர்

    தினமலர் இணையதளத்தில் இப்பக்கத்திற்கான இணைப்பு

    http://www.dinamalar.com/supplementa...d=23172&ncat=2
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  9. Likes Russellmai liked this post
  10. #15
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    கதாநாயகனின் கதை - 13

    தினமலர் வாரமலர் 28.12.2014



    சிறுவனாக இருந்த போது ஒடிந்து விழுவது போலத்தான் இருப்பேன். உடலில் சதை அதிகம் இருக்காது. முகத்தில் பெரிதாக விழிகள் மட்டும் தான் இருக்கும். இந்த விழிகளைப் பார்த்துத்தான், 'மூக்கும், முழியும் பையனுக்கு நன்றாக இருக்கிறது...' என்று கூறி, நாடகக் கம்பெனியில் சேர்த்துக் கொண்டனர்.
    கம்பெனியில் எங்கள் ஆசிரியர் சின்ன பொன்னுச்சாமி பிள்ளை என்னை பார்த்து, 'பையன், குறுகுறுன்னு இருக்கான்; நல்ல முழிகள் இருக்கு...' என்று சொல்லி, கிருஷ்ணர் வேஷத்தைத் தான் முதலில் கொடுத்தார். அடுத்தபடியாக சூர்ப்பனகை வேஷத்தை அளித்தார்.
    'கண்களால் தான் நிறைய உணர்ச்சிகளை வெளிக்காட்ட முடியும். இப்படிப்பட்ட வேஷங்களைக் கொடுத்தால் நன்றாகச் செய்வான்...' என்று அப்போது, அவர் நினைத்தார். தவிர, அவ்வப்போது என்னை அழைத்து, 'நடிக்கும்போது நல்லா கண்ணை உருட்டிப் பாரு...' என்பார். நானும் கண்களை விரித்து, அப்படி இப்படிப் பார்த்து, கரகோஷம் வாங்குவதும் உண்டு.
    ஆனால், இம்மாதிரி தேவைப்படும் போது, தேவைப்படும் அளவுக்கு, உணர்ச்சிகளைக் கொட்டவும், அதற்கேற்ப உடலின் அங்க, அவயங்களை உபயோகிக்கவும், பல நாள் பயிற்சி பெற வேண்டும். எடுத்த எடுப்பிலேயே வந்து விடாது.
    எந்த வேடமானாலும், அதை, அவன் பல முறை தன் மனத்திற்குள் எண்ணிப் பார்க்க வேண்டும். கற்பனையில் அப்பாத்திரத்தை உருவகப்படுத்தி, வாழ்க்கையில் அந்தப் பாத்திரங்களைப் போல் அவன் சந்தித்தவர்களை எண்ணிப் பார்த்து, மனக்கண் முன் கொண்டு வர வேண்டும்; பின், அம்மாதிரி நடிக்க கொஞ்சம் கொஞ்சமாக முயற்சிக்க வேண்டும். இந்த மாதிரியான பயிற்சி தான் ஒத்திகை.
    பல் துலக்கும் போதும், முக சவரம் செய்து கொள்ளும் போதும், குளிக்கும் போதும் எப்படி முகபாவங்கள் மாறுகின்றன என்பதை யெல்லாம் ஒரு நடிகன் கூர்ந்து கவனிக்க வேண்டும்.
    ஏனெனில், அவனுக்கு அந்த உணர்ச்சிகளையும், பாவங்களையும் காட்டக்கூடிய சந்தர்ப்பம் எந்தக் கட்டத்திலும், எந்தப் படத்திலும் வரலாம். இதற்கெல்லாம் தனித்தனியாக ஒத்திகை பார்த்துக் கொண்டிருக்க முடியுமா!
    எந்த ஒரு நடிகனுக்கும் தன் வேடத்தைப் பற்றி நினைத்துப் பார்க்க, அமைதியான சூழ்நிலை முக்கியம்.
    தனிமையில், அமைதியாக இருக்கும் போது தான், தான் நடிக்கவிருக்கும் வேடம் குறித்து உருவகப்படுத்திப் பார்க்க முடியும்.
    ஒரு எழுத்தாளனுக்கு தனிமை எப்படி முக்கியமோ, அது போலவே நடிகனுக்கும் முக்கியம்.
    பெரும்பாலும் குளியல் அறையில் தனிமையில் இருக்கும்போது தான், அன்று செய்ய வேண்டிய வேடத்தைப் பற்றி சிந்திப்பேன்; என் மனத்திற் குள்ளேயே, பல முறை ஒத்திகை பார்த்துக் கொள்வேன்.
    இது என் வேலையை சுலபமாக்கி விடும்.
    'ஆள் பாதி ஆடை பாதி' என்பர்.
    வெறும் வேடம் மட்டும் நடிகனுக்கு உதவாது; வேடத்திற்குப் பொருத்தமான உடை அணிய வேண்டும். ராஜா வேடம் போட வேண்டுமானால், பட்டாடை அணிந்து, தலையில் கிரீடம் வைத்துக் கொள்ள வேண்டும். அரக்கன் வேடம் என்றால், மீசை கண்டிப்பாக இருக்க வேண்டும். நடிக்கும் பாத்திரங்களின் குணாதிசயங்களுக்கு ஏற்றபடி, உடை அணியவும் தெரிந்திருக்க வேண்டும்.
    வேடம், உருவம், உடை மூன்றும் இருந்தால் போதாது; போட்டிருக்கும் வேடத்திற்கேற்ற உணர்ச்சியையும் கொண்டு வர வேண்டும்.
    நடிகனின் பணி அப்போது தான் முற்றுப் பெறுகிறது.
    கப்பலோட்டிய தமிழன் படத்தில், ஒரு காட்சி. வ.உ.சி.,க்கு, 60 வயது ஆகிவிடுகிறது; இதற்காக, 60 வயது கிழவனைப் போல நான், 'மேக்-அப்' போட்டுக் கொண்டேன். வ.உ.சி.,யிடம் அவரது நண்பர் ஒருவர் வந்து, பாரதியார் இறந்து விட்டதாகச் சொல்வார். அதைக் கேட்டதும், வ.உ.சி., 'ஓ'வென்று கதறி அழ வேண்டும். அஞ்சா நெஞ்சம் படைத்த வ.உ.சி.,யையே கலங்க வைத்து விட்ட இந்தக் காட்சியில் சிறப்பாக நடிக்க வேண்டும்.
    வைர நெஞ்சம் படைத்த வ.உ.சி., எப்படி அழுதிருப்பார், இந்தக் கட்டத்தில் நான் எப்படி நடிக்க வேண்டும், எப்படி நடித்தால் மக்கள் ஏற்றுக் கொள்வர் என்பது பற்றி இரண்டு, மூன்று நாட்கள் யோசித்தபடி இருந்தேன். வெறுமே கதறி அழுது நடித்தால் மட்டும் போதாது; உண்மையான உணர்வு வர வேண்டும். இதை எப்படிக் கொண்டு வருவது?
    அரும்பாடுபட்டேன்; எப்படி எப்படி யெல்லாமோ சிந்தித்து பார்த்தேன். ஒன்றும் புலப்படவில்லை. படப்பிடிப்பு தினம் வந்தது; செட்டுக்குள் வந்து விட்டேன். நான் நடிக்க வேண்டிய நேரமும் வந்துவிட்டது. கேமராவுக்கு முன்னால் போய் நிற்கிறேன்...
    நான் எதிர்பார்த்த, மனதில் உருவகப்படுத்திக் கொண்ட பாவம் வரவேயில்லை.
    கேமரா ஓடிக் கொண்டே இருக்கிறது... கேமரா ஓடிக் கொண்டிருக்கிறதே என்று நினைத்தேன். திடீரென்று, என்னையும் அறியாமல் ஒரு வெறி, வேகம்... எங்கிருந்தோ உணர்ச்சி பொங்கி வந்தது. நான் தான் அதைக் கொட்டி நடித்தேன் என்று சொல்ல முடியாது. கடவுள் தான் அப்போது எனக்கு உதவி செய்தார் என்று சொல்வேன்.
    காட்சி முடிந்தது; கேமரா நிற்கவில்லை. 'கட்' என்று சொல்ல, டைரக்டராலும் முடியவில்லை; காரணம், அவரும் அழுது கொண்டு இருந்தார். இதிலிருந்து என்ன தெரிகிறது?
    வேடத்தைப் பற்றியும், காட்சியைப் பற்றியும் நடிக்கப் போகும் முன், கூடுமான வரை சிந்தித்துப் பார்ப்பது நல்லது. நடிகனும் ஒரு மனிதன். அவனுக்கும் அன்றாடப் பிரச்னைகள், கடமைகள், ஆசாபாசம், சொந்த அலுவல்கள் உண்டு. வீட்டை விட்டு இறங்கி, 'மேக்-அப்' அறைக்குள் நுழைந்தால், அவன் வீட்டை மறந்து, தன் கதாபாத்திரத்தைப் பற்றியே நினைக்க வேண்டும். அதேசமயம், தன்னை மறந்து விடவும் கூடாது. இதை ஒரு உதாரணம் சொல்லி, விளக்குகிறேன்.
    பாசமலர் படத்தின் கடைசி காட்சி!
    'கை வீசம்மா கை வீசு...' என்று உணர்ச்சிகரமாக பாடியபடி நானும், சாவித்திரியும் நடிக்க வேண்டும். டைரக்டர் பீம்சிங் காட்சியை விளக்கி, 'உணர்ச்சி முழுவதையும் கொட்டி நடிக்க வேண்டும்...' என்று சொன்னார். அவர் சொன்னது ரொம்ப அழகாகவும், விளக்கமாகவும் இருந்தது.
    ஆனாலும், 'எப்படி நடித்தால் நன்றாக இருக்கும்...' என பலவாறு சிந்தித்தும், தெளிவான உருவம் கிடைக்கவில்லை. நானும், சாவித்திரியும் நடிக்க ஆரம்பித்தோம். கப்பலோட்டிய தமிழன் படத்தில் வ.உ.சி., கதறி அழும் கட்டத்தில் வந்தது போல, கடைசி நிமிடத்தில் என்னைச் சுற்றிலும் இருப்பவர்களை மறந்து, கேமராவை மறந்து, என் பக்கத்திலிருந்த சாவித்திரியையும் மறந்து, 'எனக்கும் இப்படி ஒரு தங்கை இருந்து, அவளுக்கு இப்படி ஒரு நிலை வந்தால், எப்படி இருக்கும்...' என்ற எண்ணம் வந்தபோது தான், அந்த உணர்ச்சி பொங்கிப் பீறிட்டு வந்தது.
    சாவித்திரியும், நானும் நடித்து முடித்தோம். சாவித்திரி அழுகையை நிறுத்த, ஒரு மணி நேரத்திற்கு மேலாகி விட்டது.
    அவ்வளவு தூரம் நெகிழ்ந்து இருந்தார்.
    — தொடரும்.
    தொகுப்பு: வைரஜாதன்,
    நன்றி 'பொம்மை'
    விஜயா பப்ளிகேஷன்ஸ்,
    சென்னை.
    நன்றி - தினமலர்
    தினமலர் இணையதளத்தில் இப்பக்கத்திற்கான இணைப்பு

    http://www.dinamalar.com/supplementa...d=23252&ncat=2
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  11. Likes sss, Russellmai liked this post
  12. #16
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    கதாநாயகனின் கதை - 15

    தினமலர் வாரமலர் 04.01.2015



    நான் ஆரம்பத்தில் சொன்னபடி நடிகர்கள் தங்களை மறக்கக்கூடாது என்பதை வலியுறுத்த விரும்புகிறேன். ஏனெனில், அவன், தன்னை மறந்து விட்டால், கேமராவுக்கு எந்தக் கோணத்தில் தன் முகத்தை வைத்துக் கொண்டால் நன்றாக இருக்கும், எந்த இடத்தில் நாம் நிற்கிறோம், வசனத்தை எந்த இடத்தில் எப்படி அழுத்தியோ, மெல்லவோ பேச வேண்டும், எப்படி நடிக்க வேண்டும் என்பதையெல்லாம் அவனால் நிர்ணயித்துக் கொள்ள முடியாமல் போய்விடும். பாத்திரத்தின் முழு தன்மைக்கேற்ப தன்னை உருவகப் படுத்திக் கொள்ளும் அவன், தான் நடிப்பது நடிப்பு என்பதையும் உணர்ந்து, தன்னை மறக்காமல் இருக்க வேண்டும். மறந்து விட்டால், அவனுக்கே அவன் செய்வது என்ன என்பது தெரியாது.
    மக்களைப் கவர அவன் தன் நடிப்பைத் தான் பயன்படுத்துகிறானே தவிர, தன்னை அல்ல என்பதை நடிகன் உணர வேண்டும்.
    நடிப்பு மட்டும் யாரையும் எந்த விதத்திலும் வசப்படுத்தாது; பார்ப்பவர்களிடம் எந்தவிதமான மாறுதலையும் உண்டாக்காது. உணர்ச்சியுடன் அது வரும்போது தான் நடிப்புக்குண்டான சக்தியே விஸ்வரூபம் எடுக்கிறது. நடிப்புக்கு அப்படி என்ன பெரிய சக்தி இருக்கிறது? எழுத்துக்கு எவ்வளவு சக்தி உண்டோ, அதை விட அதிகமான சக்தி நடிப்புக்கும் உண்டு. எழுத்தைப் படித்தால் மட்டுமே உணர முடியும். நடிப்பைப் பார்த்தாலே உணர முடியும்.
    இதனால் தான் மக்கள் மனதில் எதைச் சொல்வதற்கும் நடிப்பே முக்கியமானது என்று பலர் கருதுகின்றனர்.
    நல்ல நடிப்பால் மனம் மாறியவர்களும் உண்டு; தங்கள் வாழ்க்கையையே மாற்றிக் கொண்டவர்களும் உண்டு. 20ம் நுாற்றாண்டின் மிகப் பெரிய தலைவர்களில் ஒருவரான காந்திஜி ஒரு சமயம், ஹரிச்சந்திரா நாடகத்தைப் பார்த்தார்.
    பொய் பேசுவது எவ்வளவு இழிவான செயல், சத்தியம் எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதை இந்த நாடகத்தைப் பார்த்ததும் புரிந்து கொண்டார். பொய் பேசுவதை விட்டொழிக்க காரணமாக அமைந்தது, அன்றைய தினம் அவர் பார்த்த ஹரிச்சந்திரா நாடகம் தான் என்று காந்திஜியின் வாழ்க்கை வரலாற்றில் படித்திருக்கிறோம். சத்திய வழிக்கு காந்திஜியை திருப்பியது அந்த ஒரு நாடகம் தான்.
    அப்படியானால், நடிப்புக்கு எவ்வளவு பெரிய சக்தி இருக்கிறது.
    நான் சிறு வயதில் பார்த்த, கட்டபொம்மன் தெருக்கூத்து தான், என்னுள்ளே, நானும் ஒரு நடிகனாக வேண்டும் என்ற எண்ணத்தை எழுப்பியது. அது மட்டுமல்ல, என்னிடம் தேசிய உணர்ச்சியையும் அந்தத் தெருக்கூத்து தான் ஏற்படுத்தியது. அப்போது, அவர்கள் நடித்த கூத்து, இன்றும் என் மனதில் பசுமரத்தாணி போலப் பதிந்திருக்கிறது.
    சிறந்த நடிகன் யார்?
    'நடிப்புக் கலையில் இவன் பரிபூரணத்துவம் பெற்று விட்டவன்...' என்று சொல்லி முற்றுப்புள்ளி வைத்து, அழைக்கக்கூடிய ஒரு நடிகர் எப்போதுமே இருக்க முடியாது.
    ஏனெனில், நடிப்பு என்பது முற்றுப் பெற முடியாதபடி வளர்ந்து கொண்டே இருக்கும் ஒரு பெரிய கலை.
    இதில் முற்றிலும் தேர்ச்சி பெற்று விட்டதாகச் சிலரைக் குறிப்பிட்டு அழைப்பது எப்படி பொருத்தமாகும்?
    ஆனால், 'நடிப்புக் கலையில் நல்ல பயிற்சி உள்ளவர்கள் இவர்கள்...' என்று வேண்டுமானால் அழைக்கலாம்.
    எனக்கே புதிராக உள்ள பல விஷயங்கள் இக்கலையில் இருக் கின்றன. ஒவ்வொரு முறையும் இந்தப் புதிர்களுக்கு நான் விடை காண முயலும்போது, ஒன்றல்ல, பல விடைகள் கிடைக்கின்றன. சரியான விடை எது என்று என்னால் ஒரு முடிவுக்கும் வர முடியவில்லை.
    ஆம், ஆரம்பத்தில் நான் சொன்னது போல நடிப்பு ஒரு பெரிய கடல். அதன் கரையில் தான் நான் நின்று, வியப்புடன் பார்த்தபடி இருக்கிறேன்.
    நாலும் தெரிந்தவன் தான் நடிகனாக முடியும்.
    அந்த நான்கு என்ன?
    * தொழிலில் ஆர்வம்
    * ஆழ்ந்த பயிற்சி
    * புரிந்து செயல்படும் திறன்
    * தன்னம்பிக்கையின் துணை
    — இவை தான் அந்த நான்கு.
    இந்த நான்கும் நான் சொன்னது அல்ல; இந்தத் துறைக்காக தங்கள் வாழ்க்கையையே அர்ப்பணித்த பல பெரியோர்கள் சொன்ன கருத்துகள்.
    கருத்து என்று சொல்வதை விட, நடிப்புக் கலைக்கு வகுத்துள்ள இலக்கணம் என்றே சொல்லலாம்.
    இந்த நான்கையும் நான் கடைப்பிடிக்கிறேனா?
    இந்த இலக்கணத்தின் எல்லைக்குள் தான், என் கலைப் பணியைச் செய்து வருகிறேனா?
    சொல்வது சுலபம்.
    செய்வது கடினம்!
    என்னால் முடிந்தவரை இவற்றை கடைப்பிடித்து வருகிறேன்.
    'முடிந்த வரை' என்று தான் சொல்லி இருக்கிறேன்; 'முழுக்க முழுக்க' என்று நான் சொல்லவில்லை.
    ஏன் முழுக்க முழுக்கக் கடைப்பிடிக்க முடியாதா?
    முடியும்!
    ஆனால், எல்லாராலும் அது முடியுமா, எந்த அளவுக்கு சந்தர்ப்பம் ஒத்துழைக்கும் என்பதையும் பார்க்க வேண்டும்.
    தவிர, முழுமையாகவே கடைப்பிடித்து, அதில் சொல்வதற்கு இனி ஒன்றுமில்லை என்று சொல்வதும் சரியல்ல என்பதே என் வாதம்!
    ஏன்?
    எதையுமே முழுமையாகக் கற்றுத் தேர்ந்தவர் இந்த உலகில் இல்லை! கற்றது கை மண்ணளவு என்ற கணக்குத் தான், எல்லா பாடங்களுக்குமே சரியான விடை.
    என்னையே நான் இப்போது விமர்சித்துக் கொள்கிறேன்.
    தொழிலில் ஆர்வம் என்பது இயல்பாகவே ஒவ்வொருவரிடமும் ஏற்பட வேண்டும்.
    எனக்கு நடிப்புத் தொழில் மீது சிறு வயதிலிருந்தே ஆர்வம் அதிகம் உண்டு. அதனால் தான், நான் சிறுவனாக இருந்தபோதே, என் பெற்றோர் என்னை நாடகக் கம்பெனியில் சேர்த்து விட்டனர்.
    ஒருவனுக்கு எந்தக் கலையில் விருப்பம் அதிகம் இருக்கிறதோ, அந்தக் கலையில் அவனை ஈடுபடுத்தி, உற்சாகப்படுத்தி, ஊக்குவித்து வந்தால், விரைவில் அவன் அக்கலையில் தேர்ச்சி பெற முடியும்.
    இது, பொதுவான உண்மை!
    இந்த உண்மை என் விஷயத்தில் நடிப்புக் கலையின் மீது நான் கொண்டிருந்த ஆர்வத்தின் உருவில் இருந்தது.
    அது மட்டுமல்ல, இந்த ஆர்வம் தொடர்ந்து வளர்ந்து வர வேண்டும்.
    இதில் கொஞ்சமும் குறைவோ அல்லது தளர்ச்சியோ ஏற்பட்டு விடக் கூடாது.
    அப்போது தான், தொழிலில் ஏற்படும் இந்த ஆர்வம் உண்மை யானதாக இருக்க முடியும்.
    எந்த ஒரு தொழிலுக்கும், கலைக்கும் பயிற்சி அவசியம்.
    பாடப் பாட ராகம்!
    இதையும் நான் சொல்லவில்லை;
    பெரியவர்கள் சொன்னது.
    நடிப்புக் கலைக்கும் பயிற்சி தேவை.
    இந்தப் பயிற்சி எங்கே கிடைக்கும்?
    நாடக மேடைகள்தான் நடிப்புக் கலையை வளர்த்துக் கொள்ள, நல்ல பயிற்சிக் கூடங்களாக, பள்ளிகளாக நம் நாட்டில் இருந்து வருகின்றன.
    — தொடரும்.

    தொகுப்பு: வைரஜாதன்,
    நன்றி 'பொம்மை'
    விஜயா பப்ளிகேஷன்ஸ்,
    சென்னை.
    நன்றி - தினமலர்
    தினமலர் இணையதளத்தில் இப்பக்கத்திற்கான இணைப்பு

    http://www.dinamalar.com/supplementa...d=23350&ncat=2
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  13. Likes Russellmai liked this post
  14. #17
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    கதாநாயகனின் கதை - 16

    தினமலர் வாரமலர் 11.01.2015



    ஏ.வி.எம்., ஸ்டுடியோவின் மூன்றாவது படப்பிடிப்பு தளத்தில், படப்பிடிப்பின் இடைவெளியில் பத்திரிகை நண்பர் ஒருவர் என்னைப் பார்க்க வந்தார். 'வணக்கம்...' சொல்லி, என் வலது கையை, தன் வலது கையால் பற்றிக் கொண்டு, 'வாழ்த்துகள்...' என்று சொல்லியபடி குலுக்கினார். இந்த வாழ்த்து எதற்கென்று தெரியாமல் விழித்தேன்.
    பதில் அவரிடமிருந்தே வந்தது... '1968ன் சிறந்த தமிழ்ப்படம், தில்லானா மோகனாம்பாள்...' என்று இந்திய அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஜனாதிபதியின் பரிசு கிடைத்திருப்பதைச் சொல்லி, 'நீங்கள் அதில் கதாநாயகன் ஆயிற்றே...' என்று, விளக்கம் தந்தார். 'நன்றி' என்றேன்.
    அவருக்கு நான் அப்படி சொல்லிக் கொண்டிருந்தபோது, படப்பிடிப்பு தளத்திற்குள் வந்து கொண்டிருந்த ஒரு ஆஜானுபாகுவான உருவத்தையும், என் கண்கள் நன்றிப் பெருக்குடன் பார்த்தன.
    அந்த ஆஜானுபாகுவான உருவம், இயக்குனர் ஏ.சி.திருலோகசந்தருக்கே சொந்தமான உருவம். அவரைப் பார்த்ததும், தெய்வமகன் படம் ஆஸ்கர் பரிசுக்காகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பதும், என் நினைவுக்கு வந்தது. தெய்வமகன் ஆஸ்கர் பரிசுக்காகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கும் செய்தியை, என்னிடம் முதலில் கூறியவரும், இயக்குனர் திருலோகசந்தர்தான். தில்லானா மோகனாம்பாள் படம் இந்திய அரசின் பரிசுக்கு, தெய்வமகன் படம் அமெரிக்க ஆஸ்கர் விருது போட்டிக்கு!
    இந்த பெருமை எல்லாம் யாருக்கு?
    தமிழ்க் கலைஞர்கள் அனைவருக்கும் சொந்தமானது. அப்படித்தான் நான் நினைக்கிறேன். தில்லானா மோகனாம்பாளை எடுத்துக் கொள்ளுங்கள். இதில், சிக்கல் சண்முக சுந்தரத்தையும், தில்லானா புகழ் மோகனாம்பாளையும் படைத்த கொத்தமங்கலம் சுப்புவையும் மறக்க முடியுமா?
    அவர், இந்தப் பாத்திரங்களை படைத்திரா விட்டால் படம் எங்கே?
    தில்லானா மோகனாம்பாள் தொடர் கதையாக வந்து முடிந்ததும், அதைப் படமாக்க விரும்பிய இயக்குனர் ஏ.பி.நாகராஜன், சுப்புவிடம் தன் எண்ணத்தை வெளியிட்டார். சுப்பு, அந்த கதையின் உரிமை, ஜெமினி வாசனிடம் இருப்பதாகச் சொல்லி விட்டார். ஜெமினியின் சார்பில், அதை, வாசன் படமாக்கலாம் என நினைத்து, ஏ.பி.என்., மேலே தொடாமல் அப்படியே விட்டு விட்டார்.
    மாதங்கள் பல கடந்தன. ஜெமினி நிறுவனத்தில், 'தில்லானா'வைப் படம் எடுப்பதற்கான அடையாளங்களே தென் படவில்லை.
    ஏ.பி.என்., மனதில் மீண்டும், மோகனாம்பாளின் மீதுள்ள ஆசை துளிர்விட்டது. வாசனிடம் சென்று, 'நான் மோகனாம்பாளைப் படமாக்க நினைக்கிறேன்...' என்றார்.
    'நானும் அதைப் படமாக்கலாம் என்ற எண்ணத்தில் தான் இருக்கிறேன்; வேண்டுமானால் இப்படிச் செய்யலாம். நாம் இருவரும் இணைந்து, அதை எடுக்கலாம்...' என்று பதில் கூறினார் வாசன்.
    'வாசன் ஒரு இமயமலை; ஜெமினி நிறுவனம் பெருங்கடல்; நாமோ சிறு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள்...' என்ற எண்ணத்தில், ஏ.பி.என்., இரண்டாவது முறையாக எழுந்த மோகனாம்பாள் ஆசையை, சிரமப்பட்டு அடக்கிக் கொண்டார்.
    மாதங்கள் பல சென்றன. மோகனாம்பாள் படத்தைப் பற்றிய பேச்சே இல்லை.
    ஏ.பி.என்., சிந்தனையில் மீண்டும் மோகனாம்பாளின் முற்றுகை. 'முயல்வதை மும்முறை முனை' என்பது பழம் பெரும் தமிழ் வாக்கு.
    ஏ.பி.என்., மூன்றாவது முறையாக மோகனாம்பாளைப் படமெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டார். வாசனிடம் சென்று, தன் எண்ணத்தை வெளியிட்டார்.
    மோகனாம்பாளைப் படம் எடுப்பதில் ஏ.பி.என்.,க்கு இருந்த ஆர்வத்தைக் கண்ட வாசனுக்கு என்ன தோன்றியதோ, 'உரிமைகளை உங்களுக்கே தருகிறேன்; நீங்களே படத்தை எடுங்கள்...' என்று சொல்லி, தன் அனுமதியையும் தந்தார். ஏ.பி.என்., படப்பிடிப்பில் இறங்கினார்.
    தில்லானா மோகனாம்பாள் படமாக வந்து, பெரும் வெற்றி பெற்றது. பெரும்பாலும், வாசகர்களிடையே அமோகமான வரவேற்பைப் பெற்ற ஒரு நாவல், திரைப்படமாக வெளியே வரும்போது, பெரும் வெற்றியைப் பெறுவதில்லை. ஆனால், ஏ.பி.என்., தில்லானா மோகனாம்பாளை ஒரு பெரும் வெற்றிச் சித்திரமாக்கி, உழைப்புக்கேற்ற பரிசைப் பெற்றார். தில்லானா மோகனாம்பாள் படம் இந்திய அரசின் ஜனாதிபதி பரிசைப் பெற்றிருக்கிறது. ஏ.பி.என்.,க்கு இப்பரிசில் பெரும் பங்கு உண்டு. அதில் நடித்த என்னைப் போன்ற கலைஞர்கள், இந்தப் படத்தை உருவாக்க உழைத்த கலை வல்லுனர்கள் எல்லாருக்கும் இதில் பங்கு இருக்கிறது.
    தில்லானாவுக்கு கிடைத்த பெருமை, தமிழ்க்கலை உலகின் பொதுச் சொத்து. அமெரிக்க ஆஸ்கர் போட்டியில், சிறந்த வெளிநாட்டுப் படம் ஒன்றுக்கும் ஆஸ்கர் பரிசு தருவதுண்டு. ஒவ்வொரு நாட்டிலிருந்தும், ஒரு படத்தை மட்டுமே இந்தப் போட்டியில் சேர்த்துக் கொள்வர்.
    வந்திருக்கும் வெளிநாட்டுப் படங்கள் அத்தனையும் திரையிட்டு, அவற்றில் சிறந்த படத்தைத் தேர்ந்தெடுப்பர்.
    இந்த ஆண்டு ஆஸ்கர் போட்டிக்கு, இந்திய நாட்டின் சார்பில், தெய்வ மகன் படம் அனுப்பப்பட்டது. தில்லானாவுக்கு சொன்னது போலவே, தெய்வ மகன் படத்திற்கு கிடைத்திருக்கும் இந்தப் பெருமையும் தமிழ்க்கலை உலகின் பொதுச் சொத்து.
    ஒரு கலைஞனுக்குள்ள திறமையை, மேலும் வளர்க்க உதவுவதுடன், அவன் ஈடுபட்டிருக்கும் துறையில், அவன் மேலும் உற்சாகமுடன் ஈடுபட்டு, ஊக்கமுடன் உழைத்து, சிறப்பாகப் பணியாற்றவும், இத்தகைய பரிசுகளும், பட்டங்களும் உதவுகின்றன. ஒவ்வொரு முறையும் நான் பரிசைப் பெறும்போது, 'நாம் மேலும் சிறப்பாக பணியாற்ற வேண்டும்...' என்று தான் நினைத்துக் கொள்வேன்.

    — தொடரும்.

    தொகுப்பு: வைரஜாதன்,
    நன்றி 'பொம்மை'
    விஜயா பப்ளிகேஷன்ஸ்,
    சென்னை.
    நன்றி - தினமலர்
    தினமலர் இணையதளத்தில் இப்பக்கத்திற்கான இணைப்பு

    http://www.dinamalar.com/supplementa...d=23447&ncat=2
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  15. Likes Russellmai liked this post
  16. #18
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    கதாநாயகனின் கதை - 17

    தினமலர் வாரமலர் 18.01.2015



    அது, சம்பூர்ண ராமாயணம் படம் வெளியான நேரம்... நடமாடும் தெய்வம் என வணங்கப்படும் காஞ்சி பரமாச்சாரியார், நாடகத்தில், நான் பரதனாக நடித்திருக்கும் காட்சிகளை பார்த்து, என்னை சந்திக்க வேண்டுமென்று அழைப்பு விடுத்தார். அப்பா, அம்மா மற்றும் என் மனைவியுடன் காஞ்சிபுரம் சென்றேன். நாங்கள் வந்திருக்கும் செய்தி, அவருக்கு தெரிவிக்கப்பட்டது. நாங்கள் அவர் அருகில் சென்றதும், நீண்ட நேரம் என்னையே உற்றுப் பார்த்தவர், என் அம்மாவிடம், 'இந்த குழந்தையை பெற்றதற்கு நீ ரொம்ப புண்ணியம் செய்திருக்கணும்; உனக்காக நான் பிரார்த்தனை செய்றேன்...' என்று சொல்லி ஆசிர்வாதம் செய்தார். பரமாச்சாரியர் முன், என்னால் எதுவும் பேச முடியவில்லை. என் அம்மாவின் முகத்தை பார்த்தேன். விவரிக்க முடியாத சந்தோஷத்துடன், அம்மாவின் கண்களில் ஆனந்த கண்ணீர். பரமாச்சாரியர் கூறிய பாராட்டு வார்த்தைகள், அம்மாவின் முன், எனக்கு கிடைத்த விருது.

    ராஜா அண்ணாமலை மன்றத்தில், வியட்நாம் வீடு நாடக அரங்கேற்றம். நாடகத்தில் எனக்கு அம்மாவாக எஸ்.எஸ்.வாசனுடைய அம்மாவின் புகைப்படத்தை மாட்டி வைத்தனர். ஒரு காட்சியில் நான் வசனம் பேசிக் கொண்டு வரும் போது, அப்புகைப்படத்தின் முன் நின்று, 'எங்க அம்மா வீடு வீடா மாவாட்டி என்னை படிக்க வைச்சா... பிரஸ்டீஜ் பத்மநாபன் அப்படி வளர்ந்தவன்...' என்று உணர்ச்சிகரமாக நடித்துக் கொண்டிருக்கும் போது, அரங்கமே அமைதியாக இருந்தது. ஆனால், முதல் வரிசையிலிருந்து ஒரு விசும்பல் குரல் கேட்டது. நான் மேடையிலிருந்து கீழே பார்த்தேன். எஸ்.எஸ்.வாசன் அழுது கொண்டிருந்தார். அன்று என் அப்பாவும் நாடகத்திற்கு வந்திருந்து, மேடையில் ஒரு ஓரமாக அமர்ந்திருந்தார். நாடகம் முடிந்ததும் எஸ்.எஸ்.வாசன் நேராக மேடைக்கு வந்து அப்பாவை கட்டிக் கொண்டு, 'அடடா... இப்படி ஒரு புள்ளய பெத்திருக்கீங்களே...' என்று ஆனந்தக் கண்ணீர் விட்டார். இது, என் தந்தை முன், என் நடிப்பிற்கு, திரையுலக மேதையிடம் இருந்து கிடைத்த விருது.

    எங்கள் வீட்டிற்கு எதிர் வீட்டில்; ஒரு பிராமண குடும்பம் இருந்தது; பனகல் குடும்பம் என்று பெயர். ஒருநாள் ஷூட்டிங்கிற்கு புறப்பட்டுக் கொண்டிருந்தேன். அப்போது எதிர்வீட்டில் இருந்த வயதான மாமி, என்னை வழியனுப்ப வந்த என் மனைவியிடம், 'கமலாம்மா... நேத்திக்கு உன் ஆம்படையான் நடிச்ச, வியட்நாம் வீடு நாடகம் பார்த்தேன்டீ; என்னம்மா நடிச்சிருக்காரு. பிராமணனா பொறந்திருக்க வேண்டியவன். நானும் ஒரு குழந்தைய சுவீகாரம் எடுத்திருக்கேன். அவனுக்கு கூட இவ்வளவு சரியா சந்தியா வந்தனம், அபிவாதயே செய்யத் தெரியல. உன் ஆம்படையான் பிரஸ்டீஜ் பத்மநாபனாகவே வாழ்ந்து காட்டீட்டார் போ...' என்று பாராட்டு மழை பொழிந்தார். நான் கமலாவை ஏறிட்டு பார்த்தேன். அவள் முகத்தில் என்றைக்கும் இல்லாத சந்தோஷமும், மகிழ்ச்சியும் நிறைந்திருந்தது. இது, என் மனைவி முன், எனக்கு கிடைத்த விருது.

    'செவாலியர்' விருது எனக்கு கிடைத்திருக்கிற செய்தியை அறிந்த இயக்குனர் கிருஷ்ணன் (பஞ்சு), என்னை பாராட்டுவதற்காக மாலையோடு வந்தார். அவருக்கு வயது, 85. என் இத்தனை வெற்றிக்கும் காரணியாக இருந்தவர்களில் முதலாமவர் பெருமாள் முதலியார். பராசக்தி படப்பிடிப்பின் போது என்னை திட்டியும், பேசியும், சிலர் அலட்சியப்படுத்திய போது, 'இதற்கெல்லாம் மனம் தளர்ந்து விடாதே; இதை, ஒரு காதில் வாங்கி, மறுகாதில் விட்டு விடு. நீ நிச்சயம் ஒரு நல்ல நிலைக்கு வருவாய்...' என்று என்னை உற்சாகப்படுத்தியவர். அதன்பின், 32 ஆண்டுகள் என்னுடைய வளர்ச்சியை கண்டு மகிழ்ந்தவர். அப்படத்தின் இயக்குனர் (கிருஷ்ணன் பஞ்சு) நேரில் வந்து என்னை பாராட்டுகிறார் என்றால், இதை விட எனக்கு வேறு பெரிய விருது எது?

    பொன்னல்ல பொருளல்ல; புவியாளும்
    மன்னர் தரும் என்னவெல்லாம் அறியாத எதுவும் அல்ல!
    மின்னி வரும் மெய்க் கவியின் மெய்
    அழகை காண்போர்தம் கண்ணில் வரும்
    ஒருதுளியே கலைஞனுக்கு கோடி!
    என்றார் கண்ணதாசன்.
    கோடி கோடியா கொட்டி கொடுப்பதை விட, திறமையை உணர்ந்து, மெய்சிலிர்த்து, ஒரு சொட்டு கண்ணீர் விட்டாலே போதும். அது, ஒரு கலைஞனுக்கு கோடி ரூபாய் கொடுத்த சந்தோஷத்தை தரும்.
    — அடுத்த இதழில் முடியும்.

    தொகுப்பு: வைரஜாதன்,
    நன்றி 'பொம்மை' விஜயா பப்ளிகேஷன்ஸ்,
    சென்னை.
    நன்றி - தினமலர்
    தினமலர் இணையதளத்தில் இப்பக்கத்திற்கான இணைப்பு

    http://www.dinamalar.com/supplementa...d=23530&ncat=2
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  17. Likes Russellmai liked this post
  18. #19
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    கதாநாயகனின் கதை - 18

    தினமலர் வாரமலர் 25.01.2015



    மதுரை, 'ஸ்ரீபாலகான சபா' சென்னையில் முகாமிட்டிருந்த சமயம். நாங்கள் தங்கியிருந்த வீட்டிற்கு அருகில் தான் சகோதரர் எம்.ஜி.ஆர்., வீடு இருந்தது. காலையிலும், நாடகம் முடிந்த பின்பும் மற்றும் ஓய்வு நேரங்களிலும் அவரது வீட்டிற்குச் செல்வேன். அவரது அம்மா, என்னையும் ஒரு மகனாக எண்ணி பழகியதை, என்னால் மறக்க முடியாது.
    இரு மலர்களால் தொடுக்கப்பட்ட எங்களுடைய நட்பை பற்றி சொல்ல வேண்டுமானால், கண்ணதாசன் எழுதிய,
    நதியில் விளையாடி கொடியில் தலைசீவி நடந்த இளந்தென்றலே...
    கண்ணில் மணி போல மணியில் நிழல் போல கலந்து பிறந்தோமடா
    இந்த மண்ணும் கடல் வானும் மறைந்து முடிந்தாலும் மறக்க முடியாதடா
    உறவை பிரிக்க முடியாதடா...
    - என்பதைப் போன்றது.
    தினமும் காலையில் உடற்பயிற்சி செய்து, குளித்து, எனக்காக காத்திருப்பார் எம்.ஜி.ஆர்., நான் சென்றதும், இருவரும் அருகருகே அமர்ந்த பின்தான், அவரது அம்மா எங்களுக்கு காலை சிற்றுண்டியை பரிமாறுவார். நான் செல்வதற்கு சிறிது தாமதமாகி, அதற்குள் அண்ணனுக்கு பசி எடுத்து விட்டால், 'அம்மா... எனக்கு பசிக்கிறது...' என்று சொல்வார்.
    அதற்கு, 'இரு... கணேசன் வரட்டும்; சேர்ந்து சாப்பிடலாம்...' என்பார் சத்யா அம்மா.
    நாங்கள் இருவருமே தாய்ப்பாசத்தில் அதிக பற்று கொண்டவர்கள்; தாய் சொல்லை தட்டாதவர்கள்; தாயை தெய்வமாக மதிப்பவர்கள்.
    'மதுரை ஸ்ரீபால கான சபா' என்றிருந்த பொன்னுசாமி பிள்ளையின் கம்பெனி, 'மங்கள பால கான சபாவாகி' கும்பகோணத்திலிருந்து சென்னை வந்தோம். அந்நேரத்தில் கம்பெனி ரொம்ப நொடித்து விட்டது. கம்பெனியை என்.எஸ்.கிருஷ்ணன் வாங்கினார். அங்கே, மனோகரா மற்றும் கிருஷ்ண லீலா நாடகங்களை நடத்தினோம்.
    அச்சமயத்தில் தான் அண்ணனுக்கும், எனக்கும் ரொம்ப நெருக்கமான உறவு ஏற்பட்டது. அப்போது நாங்கள் வால்டாக்ஸ் முனையில் இருந்த ஒரு பெரிய பில்டிங்கில் தங்கி இருந்தோம். அதிலிருந்து சிறிது தள்ளியிருந்த மூன்றாவது வீட்டில் தான் அண்ணன் இருந்தார். அப்போது அவர் பல கம்பெனிகளில் வேலை தேடுகிற நேரம். இருந்தாலும், டிபன் சாப்பிட எனக்காக காத்திருப்பார். நாங்கள் இருவரும் சாப்பிட்டதும் அவர் சென்று விடுவார்; நானும் வந்திடுவேன். பகல் சாப்பாடும் இப்படித்தான் நடக்கும். ஆனால், இரவில், நான் நாடகம் முடிந்து வரும் வரை காத்திருப்பார். இரவு, 10:00 மணிக்கு மேல் தான் நாடகம் முடியும். அதற்குபின், நாங்கள் நடந்து போய், சினிமா பார்ப்போம்.
    சினிமாவில் அண்ணன் நடிக்க ஆரம்பித்து, ரசிகர்களுக்கு அறிமுகமாகியிருந்த நேரம் அது! அதனால், தலையில் முண்டாசும், வேட்டியை வரிந்து கட்டி, சினிமாவுக்கு வருவார். ஆனால், என்னை யாருக்கும் தெரியாது. சினிமா பார்த்து விட்டு, இரவு, 1:00 மணிக்கு திரும்பி வரும் போது, மின்ட் தெருவில் இருந்த சேட்டு கடையில் சப்பாத்தி மற்றும் பால் சாப்பிடுவோம். எல்லாம் அண்ணன் செலவு தான். அப்போ, என்கிட்ட ஏது பணம்? அப்பவே பிறருக்கு உதவி செய்யும் பழக்கம் அவருக்கு அதிகம். அன்றைய நிலையிலேயே நண்பர்களுக்காக நிறைய செலவு செய்வார். வசதியாய் இருக்கும் போது எவ்வளவு செய்திருப்பார்ன்னு நினைத்து பாருங்கள்... இதற்கு பின், நான் தங்கியிருக்கும் வீட்டில் என்னை, விட்டு விட்டு, அவர் வீட்டுக்கு போவார். இம்மாதிரி வளர்ந்தது தான் எங்கள் நட்பு. அன்பை பொழிவதில் அவருக்கு இணை கிடையாது.
    ஒருமுறை, தி.மு.க., கட்சி சார்பில், ஏழாவது சுயமரியாதை மாநாட்டை நடத்தும் மும்முரத்தில் இருந்தார் அண்ணாதுரை. மாநாட்டில், 'சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்' என்ற நாடகத்தை அரங்கேற்றுவதற்காக கதை, வசனம் எழுதினார் அண்ணாதுரை.
    அப்போது, கோவையில் இருந்தார் எம்.ஜி.ஆர்., அச்சமயம், அவர், காங்கிரஸ்காரர். விபூதி பூசியிருப்பார். கதர் தவிர வேறு எதுவும் அணிய மாட்டார். கட்சி மற்றும் கொள்கை வேறுபட்டாலும் ரொம்ப பரந்த உள்ளம் கொண்ட தேசியவாதி அவர்.
    அண்ணாதுரை எழுதிய, சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் நாடகத்தில், சிவாஜி வேடத்தில் அண்ணன் நடிப்பதாக இருந்தது; ஆனால், அவர் நடிக்கவில்லை. அண்ணாதுரை என்னைப் பார்த்து, 'கணேசா... நீ நடிக்கிறாயா?' எனக் கேட்டதும், 'நடிக்கிறேன்...' என்று கூறினேன். அந்நாடகத்தின் மொத்த வசனம், 110 பக்கம்; அதை காலையில் என்னிடம் கொடுத்து விட்டு வீட்டிற்கு போய் விட்டார் அண்ணாதுரை. அன்று மாலை, நான் தங்கியிருந்த,'திராவிட நாடு' அலுவலகத்திற்கு வந்தவர், 'என்ன படிச்சியா?' என்று கேட்டார். உடனே நான், 'பாடமே செய்துட்டேன்...' என்றேன்.
    'உண்மையாகவா!' என்றார் ஆச்சரியத்துடன்.
    'ஆமாம்...' என்றேன்.
    'சொல்லு பார்க்கலாம்...' என்றார்.
    அப்போது அண்ணாதுரையின் நண்பர்கள் தங்கவேலு முதலியார் மற்றும் ராஜகோபாலும் உடன் இருந்தனர். நான், அண்ணாதுரை முன், நடித்து காட்டினேன். கோட்டையை உடைக்கிற அக்காட்சியை நடித்து காட்டி முடித்ததும், ஓடி வந்து என்னை கட்டி தழுவினார் அண்ணாதுரை. அதன்பின் தான் நாடகத்தில் சிவாஜியாக நடித்தேன்.
    சிவாஜி வேடத்தில் அண்ணன் எம்.ஜி.ஆர்., நடிக்காததால், அந்த வேடம் எனக்கு கிடைத்தது மட்டுமல்லாமல், அந்த வேடத்தின் பெயரே எனக்கு நிலைத்து விட்டது. இதுவே, என் வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்பு முனையாக அமைந்தது.
    — முற்றும் —
    தொகுப்பு: வைரஜாதன்,
    நன்றி 'பொம்மை' விஜயா பப்ளிகேஷன்ஸ்,
    சென்னை.
    நன்றி - தினமலர்
    தினமலர் இணையதளத்தில் இப்பக்கத்திற்கான இணைப்பு

    http://www.dinamalar.com/supplementa...d=23615&ncat=2
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  19. #20
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    It will be lesson for the upcoming as well as present day artists the dedication,devotion,determination shown by

    NT in his work.


    Regards

Page 2 of 2 FirstFirst 12

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •