-
10th October 2014, 09:50 PM
#11
Senior Member
Senior Hubber
பாசுரம் பாடி வா தென்றலே…
ஒன்பது – c)
பூ மாலை தொடுத்த பாமாலை (ஆண்டாள் திருப்பாவை)
*
முன்னுரை – தொடர்ச்சி
கிழியறுத்தான் வளர்த்த கிளி
***
“ நான் அழகாய் இருக்கிறேனா”
பதில் மெளனம்
“சரி, இந்தப் பட்டுப் புடவையில் எப்படி இருக்கிறேன்” மறுபடியும் மெளனமே பதில்.
“சரி, இப்பொழுதாவது சொல். இந்த நெற்றிச் சுட்டி, காதுகளில் கம்மல்கள், மூக்குத்தி, ஒட்டியாணம், கழுத்தில் காறை எனும் நகை, காற்கொலுசுகள் அணிந்து, கழுத்திலும் கொண்டையிலும் அணிந்திருக்கும் மலர்மாலையுடன் நான் எப்படி இருக்கிறேன்? அவரது அழகிற்கு இணையாக இருக்கிறேனா?” – கேள்வி கேட்டவள் கோதை. கேட்டது தன் எதிரே இருந்த கண்ணாடியை.
நிலைக்கண்ணாடி என்ன சொல்லும். ஏற்கெனவே எதிரில் நின்றவளின் அழகில் திகைத்து “ஏய், இன்னும் சற்று நேரம் என் முன்னேயே இரேன். உன்னை நான் பார்த்துக் கொண்டே இருக்கிறேனே” என மனதிற்குள் வேண்டிக்கொண்டு “இன்னும் சற்று நேரத்தில் அவள் அகன்று விடுவாளே” என நினைத்ததால் பெருமூச்சும் விட்டுக் கொண்டு நின்றிருந்தது.
“என்ன காரியம் செய்தாய் அம்மா?” பதற்றக் குரல் பின்னால். திரும்பினாள் கோதை. விஷ்ணு சித்தர் என்றும் கிழியறுத்தான் என்றும் அழைக்கப் பட்ட பெரியாழ்வார் பதற்றமாய் நின்றிருந்தார்.
யார் இந்தக் கோதை? யார் இந்தப் பெரியாழ்வார்?
மஹா விஷ்ணுவிற்கு மூன்று தேவியர்கள் என்கிறது உப நிஷத். – ஸம்வதி, ஸந்தினி, ஹலாதினி.
ஸம்வதி – ஞான சக்தி – மஹாலஷ்மி
ஸந்தினி – க்ரியா சக்தி – பூமிப் பிராட்டி
ஹலாதினி – ஆனந்த சக்தி – ராதை
கலியுகம் பிறந்த போது விஷ்ணு லஷ்மியைக் கேட்டார். “ நீ ஏன் இப்பொழுது பூலோகத்தில் அவதரித்து நல்லது செய்யக் கூடாது?”
லஷ்மி சொன்னாள், “போப்பா. உங்களுக்கு வேறு வேலை இல்லை. ஆசையாய் பூமிக்கு வா என்று கூப்பிடுவீர்கள். வந்தால் வா காட்டுக்கு என்பீர்கள். குளிப்பதற்கு நீரைத்தராமல் தீயைத் தருவீர்கள். நான் வரவிலலை இந்த ஆட்டத்திற்கு!”.
பிறகு விஷ்ணு பூமிதேவியிடம் கேட்டுஒப்புதல் வாங்கிவிட பூமிதேவியின் அம்சமாய் ஆடி மாதம் வளர்பிறையில் பூர நட்சத்திரத்தில் தோன்றியவள் தான் ஆண்டாள் என அறியப் பட்ட கோதை. (கோதாவரி ஆற்றின் குணங்கள் கொண்டவள் என்பதால் கோதை எனச் சொல்பவர்கள் உண்டு.
கோதையைப் பற்றியும் அவளை வளர்த்த பெரியாழ்வார் பற்றியும் அவள் எழுதிய திருப்பாவையைப் படித்துக் கொண்டே பார்ப்போம்.
மாடம்கொள் மேல் நிலைக் கோபுரமும் உயர்
…மாமதிலும் திரு மாளிகையும்
நீடும்பொன் ஆலயம் மேவியகோதையை
… நேர்ந்து கும்மி அடிப்பம் அடி! (புலவர் அழகிய சொக்க நாத பிள்ளையின் கும்மிப் பாட்டிலிருந்து)
(தொடரும்)
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
10th October 2014 09:50 PM
# ADS
Circuit advertisement
Bookmarks