Page 2 of 3 FirstFirst 123 LastLast
Results 11 to 20 of 27

Thread: கோள்கள் என்ன செய்யும்?

  1. #11
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    **

    மூன்றாம் பாடல்

    **

    “திருத்துறையூர், திருப்பந்தணை நல்லூர், திருஅச்சிறுபாக்கம் முதலிய பதினைந்துக்கும் மேற்பட்ட திருக்கோயில்களில் தலமரமாக கொன்றை விளங்குகிறது,,

    நீள் சதுரமான கூட்டிலைகளையும் சரஞ்சரமாய்த் தொங்கும் பளிச்சிடும் மஞ்சள் நிறப் பூங்கொத்துகளையும் நீண்ட உருளை வடிவக் காய்களையும் உடைய இலையுதிர் மரமாகும். தமிழகமெங்கும் இயற்கையாக வளர்கிறது.

    பட்டை, பூ, வேர், காய் ஆகியவை மருத்துவப் பயனுடையதாக விளங்குகிறது. இதில் சில மரங்களில் ஆரஞ்சு, இளம் சிவப்பு வண்ணங்களிலும் பூக்கள் பூக்குமாம்..பொட்டானிக்கல் பேர் என்னவென்று பார்த்தால் ஃபேபியேசியே என்பதாம்..”

    “சரி..எதுக்கு திடீர்னு கொன்றை..ஆமா நீ பாட்டனில்ல சுமாராத் தானே மார்க் வாங்கினே”

    “அதெல்லாம் இங்க எதுக்கு மனசாட்சி.. முருகலர் கொன்றைன்னுவருது.. அதனால பார்த்தேன்..முருகு அலர்னு பார்க்கணும் ..முருகுன்னா தேன் .. அலர் அலர்ந்த.. அதாவது தேன் நிறைந்து மலர்ந்திருந்த கொன்றைப்பூக்கள்.. அப்புறம் கலையதூர்தி- கலையையே வாகனமாகக் கொண்ட கலைமகள்னு அர்த்தம்.. மத்ததெல்லாம் சிம்ப்பிள் தான்..வா பாட்டுக்குள்ளயே போய்டலாம்..”

    *

    உருவளர் பவளமேனி ஒளி நீறணிந்து
    உமையொடும் வெள்ளை விடை மேல்
    முருகலர் கொன்றை திங்கள் முடிமேல் அணிந்தென்
    உளமே புகுந்த அதனால்
    திருமகள் கலையதூர்தி செயமாது பூமி
    திசை தெய்வமான பலவும்
    அருநெதி நல்ல நல்ல அவை நல்ல நல்ல
    அடியார் அவர்க்கு மிகவே.

    *

    பவளத்தைப் போல சிவந்து ஜொலிக்கும் மேனிகொண்ட பரமசிவன், ஒளிவிட்டுப் பிரகாசிக்கும் திரு நீற்றினை அணிந்து, உமையோடு தனது வெள்ளை எருதின் மேல் தேன் நிறைந்த கொன்றை மலர்களால் தொடுத்த மாலையையும், சந்திரனையும் தனது தலையில் தரித்து என் உள்ளத்தினுள்ளே புகுந்துவிட்டான்

    அதனால் செல்வத்திற்கு அதிபதியான திருமகள்,, கலையாகிய வித்தைகளையே வாகனமாகக் கலைமகள், .மலைமகள் உமையம்மை, நிலமகளாகிய பூமி, மற்றும் எண் திசைக்கும் உண்டான பல தெய்வங்கள் அரிய செல்வங்களையே நல்லனவாகத் தரும் குணமுடையவை..அவை அடியார்களுக்கும் மிக நல்லனவையே செய்யும்..

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #12
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    *

    நான்காம் பாடல்..

    *

    “வேலாம் விழிகளது விண்ணோக்கிப் பார்த்ததுவோ
    பாலாகப் பொங்கும் பிறை..

    என்னடா பேச மாட்டேங்கற..”

    “ஆமா.. நீ பாட்டுக்கு கேரள மக்கள் டீயோட சாப்பிடற ப்ரேக்ஃபாஸ்ட் பத்திச் சொன்னேன்னா நான் என்ன சொல்றது..”

    “பாவி.. அவங்க சாப்பிடறது பொறை.. நான் இங்க சொன்னது பிறை..

    அந்த இளநங்கை ஏதுக்கோ யோசிச்சு குறுக்கும் நெடுக்கும் நடந்துக்கிட்டிருந்தாளா..அப்போ மேலே வானைப் பார்க்கறா..அங்கேயோ பிறைச்சந்திரன்..அது இந்த ப்யூட்டி தன்னைத் தான் பார்க்கறான்னு சந்தோஷத்துல பூரிச்சுப் பொங்குது ..அப்படின்னும் வெச்சுக்கலாம்.. விழிகள் மேலே எதுக்கோ பார்க்கறபோது அந்த ப் பெண்ணீன் பிறை நெற்றி இன்னும் வெண்மை கொண்டதுன்னும் வெச்சுக்கலாம்..”

    ”ஓ.. நீ மதி நுதல்க்கு வர்றயா..”

    “ஆமாம்..மதி சந்திரன்..இந்த இடத்தில பிறை பிறை நிலாவைப் போல வளைந்து பிறை நிலாவின் குணத்தைப் போல க் குளிர்ந்து ஒளிவீசும் நெற்றியையுடைய நங்கை..வேற யார் நம்ம மிஸ்ஸஸ் பரமசிவன் தான்..அப்படின்னு வருது இந்தப் பாட்டுல..அப்புறம் கொதியுறுகாலன் அப்படின்னா டபக்குன்னு கொஞ்சம் குளிர்காத்துல போய்ட்டு வந்தா ஜூரம் வந்துடுதுல்ல..”

    “அப்படி இல்லாட்டியும் வருமே..”

    “ஹேய்.. நான் ஒரு பேச்சுக்குச் சொன்னேன். ஸோ உடலை வெப்பமடைய வைக்கிற காய்ச்சல் அப்படிங்கறா.ர்.. வா.. உள்ள போய்ப் பார்ப்போம்..

    *

    மதிநுதல் மங்கையோடு வடபாலிருந்து
    மறையோதும் எங்கள் பரமன்
    நதியொடு கொன்றை மாலை முடிமேலணிந்தென்
    உளமே புகுந்த அதனால்
    கொதியுறு காலன் அங்கி நமனோடு தூதர்
    கொடுநோய்கள் ஆன பலவும்
    அதிகுண நல்ல நல்ல அவை நல்ல நல்ல
    அடியாரவர்க்கு மிகவே 4

    *

    பிறை நிலாவைப் போல வளைந்து, பிறை நிலாவின் குளிர்ச்சியைப் போலக் குளிர்ந்து ஒளிவீசும் நெற்றியை உடைய உமையவளுடன் தென் திசை நோக்கி வடதிசையில் அமர்ந்து தஷிணாமூர்த்திக்கோலத்தில் மறைப்பொருளாய் இருக்கும் ஞான நூல்களான வேதங்களை ஓதி அருள்கின்ற நமது பரமசிவன் கங்கை நதியுடன் கொன்றை மாலையும் முடியில் அணிந்து என் உள்ளத்தில் புகுந்தான்..

    அதனால் உடலைச் சூடேற்றி வருந்த வைக்கும் காய்ச்சல் என்ற காலனும், உடலைச் சுடுகின்ற அக்னியும் (அங்கி) உயிரை எடுக்கும் தொழில் புரியும் எமனும் அவனுடைய தூதர்களான கொடுமையான நோய்கள் பலவும் சிவனடியார்களுக்கு அவை நல்லவை ஆகிவிடும்.. நற்குணங்களையும் அளித்து விடும்..

    *

  4. #13
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    *

    ஐந்தாம் பாடல்

    *

    “நஞ்சினை அணியாய் நல்வழி இருத்தி
    அஞ்சுதல் தவிர்த்தே அன்புடன் பரமன்
    துஞ்சியென் உளத்தில் தூய்மையை நிறைக்க
    விஞ்சியேத் துயரும் வேகமாய்ப் பறக்குமே”

    “என்னடா..சந்த விருத்தமா..”

    “தெரியலை மன்ச்சு..ட் ரை பண்ணினேன்.. ஆன்றோர் தான் சொல்லணும் சரியா என்னன்னு..

    இந்த அவுணர்ங்கறவா அசுரர் தானே..”

    “அப்ப்டித் தான் இந்தப் பாட்டுல வருது..கொன்றை மரமும் வன்னி மரமும் சிவாலயங்கள்ள தல மரமா இருப்பவை தெரியுமோ..

    “உருமிடின்னா என்ன..அந்தக்காலத்திலெயே மிடில்லாம் இருக்கா என்ன..”

    “மன்ச்சு..என்னோட சேர்ந்து நீயும் கெட்டுப் போயிட்டே.. உருமிடின்னா உறுமும் இடி.தட் தடார்னு மின்னலோட வானத்தில்ருந்து சத்தம் வருமோன்னோ.. சமயத்துல சிங்கம் உறுமறமாதிரி இருக்கும்..அந்தச் சத்தத்தை உறுமலுக்குக் கம்ப்பேர் பண்ணியிருக்கார் பிள்ளைவாள்..”

    “ஓ..அப்படியா…சரி சரி ..ரத்தி அக்னிஹோத்ரியான்னு கேக்காத..பாட்டுக்குள்ள போலாம்”

    *

    நஞ்சணி கண்டன் எந்தை மடவாள் தனோடும்
    விடையேறும் நங்கள் பரமன்
    துஞ்சிருள் வன்னி கொன்றை முடிமேலணிந்தென்
    உளமே புகுந்த அதனால்
    வெஞ்சின அவுணரோடும் உருமிடியும் மின்னும்
    மிகையான பூதமவையும்
    அஞ்சிடும் நல்ல நல்ல அவை நல்ல நல்ல
    அடியாரவர்க்கு மிகவே.

    “அதோ நீலகண்டன் சிரிப்பது தெரிகிறதா.. எதனால் நீலகண்டன் எனப் பெயர்..தேவாசுர யுத்தத்தில் சிரித்தபடி உலகைக் காக்க ஆலகால விஷத்தை உண்டவன்.. அந்த ஆலகால விஷத்தையே தனது கழுத்தில் அணிகலனாக வைத்துக் கொண்டவன்..
    அப்படிப்பட்ட நீலகண்டன் அனைவரும் ஆழ்ந்து உறங்கும் இரவு நேரத்தில் சூழ்ந்திருக்கும் காரிருள் போலக் கருமையான அடர்த்தியான வன்னி மலர்களையும் கொன்றை மலர்களையும் தனது திருமுடி மீது அணிந்து எருது வாகனத்தில் தன் மனைவியாகிய உமையவளுடன் என் உள்ளத்தில் புகுந்தான்..

    வேகமாகக் கோபம் கொண்டு துன்பம் பல தரும் அசுரர்களும், வானில் உறுமல் த்வனியுடன் கர்ஜிக்கும் இடி போன்றவையும், நீர், நிலம், காற்று, ஆகாயம், நெருப்பு போன்ற பஞ்ச பூதங்களும் கூட நம்மைக் கண்டு அஞ்சி நமக்கு நல்லனவையே செய்யும்.. பரமசிவனின் அடியவர்க்கு அவை நல்லனவையே செய்யும்..

    *

  5. #14
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    *
    ஆறாம் பாடல்



    அந்தக் காலத்திலேயே டாக்ஸ்லாம் இருந்திருக்குல்ல..”

    “பின்ன.. கவர்ன்மெண்ட் எப்படி சர்வைவ் பண்ண முடியும்..ஆமா திடீர்னு என்ன கேள்வி..சரி புரிஞ்சுடுத்து..”

    “ நீ கற்பூரம்டா மன்ச்சு.. சொல்லு அது என்ன வாள் வரி, தாடை வரி.. வாள் வரி ஓகே, தாடை வரின்னா கன்னத்துக்கெல்லாம் வரியாராவது போடுவாங்களா..அதுவே காதலியா இருந்துச்சுன்னா ஒரு குட்டி முத்தா கொடுக்கலாம்..”

    “நீ அதுலேயே இரு..வாள் வரி+ அதள்+ அது + ஆடை.. அதள் நா புலித்தோல்.. வாளைப் போன்ற கூர்மையான வரிகளைக் கொண்ட புலித்தோலால் ஆன மேலாடைன்னு அர்த்தம்..

    ”” நீ சொல்றது மேலாடையா..இதானா மனசாட்சி..

    வாலாட்டும் இளமையுடன் வஞ்சியவள் அங்கே
    .வசப்படுத்தும் மென்முறுவல் விழிமின்னல் கூட்டி
    கோலாட்டம் போடுகின்ற கூந்தலினைத் தள்ளி
    …கொஞ்சுநடை விஞ்சிவர குறும்புடனே கொஞ்சம்
    பாலாடை வட்டமுகம் பளபளக்கும் மேனி
    …பார்த்தவர்கள் சொக்கிவிடும் பருவமெழில் ஆட
    மேலாடை விகசித்தே மேல்மெருகைக் கூட்ட
    …மெல்லியளாள் வந்துவிட மனமாடும் அன்றோ”

    “பாவம் செய்தவனே.. மேலாடைக்கு ஒரு விருத்தமா..உன்னைக் கோளரி உழுவைய விட்டுத் தான் பயமுறுத்தணும்..”

    ‘ஹை.. கோளரி..கொடுமையே உருவான- உழுவை- புலியாக்கும்.. நல்லவேளை கேழல் அனுப்புவேன்னு சொல்லலை.. எனக்குக் காட்டுப் பன்றின்னா கொஞ்சம் பயம்..அழுக்கா இருக்கும்..அப்புறம் ஹமாம் சோப் போட்டு டென் ஸ்கின் ப்ராப்ளம்ஸ் வராம இருக்கக் குளிக்கணும்.. இருந்தாலும்.... இப்போ அந்த சிவன் என் நெஞ்சுள் இருக்கான் ஒண்ணும் செய்யாது.. சரி மன்ச்சு..சட்டுன்னு வா.. போய் பாட்டு என்ன சொல்லுதுன்னு பார்க்கலாம்..”

    **

    வாள்வரி அதளதாடை வரிகோவணத்தர்
    மடவாள் தனோடும் உடனாய்
    நாண்மலர் வன்னி கொன்றை நதி சூடி வந்தென்
    உளமே புகுந்த அதனால்
    கோளரி உழுவையோடு கொலையானை கேழல்
    கொடுநாகமோடு கரடி
    ஆளரி நல்ல நல்ல அவை நல்ல நல்ல
    அடியாரவர்க்கு மிகவே

    வாளைப் போன்ற கூர்மையான அதே சமயம் மிகப் பளபளப்பான வரிகளைக் கொண்ட புலித்தோலினால் செய்யப்பட்ட மேலாடையை அணிந்தவனும், வரிந்து கட்டப்பட்ட கோவணத்தை அணிபவனுமான சிவபெருமான் அன்றலர்ந்த தாமரை மலர்கள், வன்னி இலைகள், கொன்றை மலர்கள், கங்கை நதி ஆகியவற்றைத் திருமுடியில் சூடி தனது இனிய மனையாளான உமையுடன் என் உளத்தினில் புகுந்துவிட்டான்..

    எனில் கொடுமையே உருவான கொல்லும் புலியும், மதங்கொண்ட யானையும், காட்டுப் பன்றியும், கொடுமையான விஷம் கொண்டு சீறுகின்ற நாகமும், கரடியும் ஆட்களைக் கொல்கின்ற சிங்கமும்.. ந்ல்லனவையே செய்யும்.. அவை சிவ பக்தர்களான சிவனடியார்க்ளுக்கு மிக நலலனவற்றைச் செய்யும்..

    **

  6. #15
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    **

    ஏழாம் பாடல்..

    **

    “அப்புன்னா”

    ‘சென்னை பாஷைல்ல அடி..ஆங்கில்த்துல உயரம், தூக்கு, அப்புறம் உன்னோட ஃப்ரண்ட் பேரு அப்புச் செல்லப்பன், கமலோடபேரா ஒரு படத்துல வரும்..”

    “உன்கிட்ட போய்க் கேட்டேன் பாரு..அப்புன்னா நீர்.. அப்புத் தலம் நு சொல்லப்பட்றது திருவானைக்காவல்ல உள்ள அகிலாண்டேஸ்வ்ரி கோவில்.
    ”அதோட வெப்புன்னும் வருதே..”

    ‘வெப்புன்னா ஜூரம்.. வெம்மையான ஜூரம்னு இங்க வரும்..வா..பாட்டுக்குள்ற போகலாம்..”

    *

    செப்பிள முலை நன்மங்கை ஒரு பாகமாக
    விடையேறு செல்வனடைவார்
    ஒப்பிள மதியும் அப்பும் முடிமேல் அணிந்தென்
    உளமே புகுந்த அதனால்
    வெப்பொடு குளிரும் வாதம் மிகையான பித்தும்
    வினையான வந்து நலியா
    அப்படி நல்ல நல்ல அவை நல்ல நல்ல
    அடியாரவர்க்கு மிகவே

    இளமையான, செம்பினை ஒத்த நகில்களை உடைய உமையம்மையை ஒருபாகமாகப் பெற்றவன். ரிஷபம் எனப்படும் எருதின் மேல் அவளையும் அமர்த்தி அமர்ந்தவன்.. அழகிய இளமை கொண்டு சிரிக்கும் பிறைச்சந்திரனையும், இளமையாய்த் துள்ளி ஓடும் கங்கை நதியையும் தனது திருமுடிமேல் அணிந்தவன்..அப்படிப் பட்ட பரமன் என் உளத்தினுள்ளே புகுந்துவிட்டான்..

    அதனால் என்ன ஆயிற்று.. வெம்மை தரக்கூடிய சுரமும், குளிரினால் வரக்கூடிய சுரமும், வாத நோய்களும், பித்த நோய்களும் – நான் செய்த முன்வினையால் எனக்கு வருவதாகில் – அவை வந்து என்னை நலிய வைக்காது.. என்னையும், என்போன்ற சிவனடியவர்க்கும் அவை நல்லதையே செய்யும்..

  7. #16
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    *

    எட்டாம் பாடல்..

    *

    மலர்க்கணைகள் பாய்ந்துவிட்டால் மடியிரண்டும் பஞ்சணைகள்..

    “அது சரி.. என்னடா சமர்த்தா இருக்கியேன்னு பார்த்தேன்..”

    ‘இல்லை மன்ச்சு.. இந்த மாறவேள் எனப்படுகின்ற மன்மதன் என்ன செய்தான்.. தவத்தைக் கெடுக்க கெக்கெக்கெக்னு மலரம்புகளைப் பாய்ச்சினான்..சிவன் என்ன பண்ணினார்.. ஏற்கெனவே கோபம் நெற்றிக் கண்ணைத் திறந்து கொய்ங்க்னு அழிச்சார் இல்லையா..அதை நினைச்சேன்..

    ஆறாய்ப் பெருகிடும் காமத் தீயினை
    அற்றே போக்கிய பரனவன்
    வேறாய்ச் சாம்பலாய் வீழ்த்தி வேளவன்
    வாழ்வைப் பொடியெனச் செய்தவன்
    வாரா படுதுயர் வாகாய் உளத்தினில்
    வைக்க அருளினைக் கொடுப்பவன்
    நேராய் வாழ்வில் நெறிதரும் ஈசனை
    நெற்றி தாள்பட போற்றுவோம்

    :”என்னடா ஒழுங்கா வரலைன்னு நினைக்கறியா.. பரவால்லடா.. முதல் முயற்சி தானே..போகப் போக சரியா வரும்..”

    ‘தாங்க்ஸ் மன்ச்சு.. முன்னாடி வந்த பாட்டுல புலி பன்றி, சிங்கம் செய்யாதுன்னாருல்லயா..இந்தப் பாட்டுல கடல்வாழ் பிராணிகளும் ஒரு தீமையும் செய்ய மாட்டாங்கறார்.. வா..பாட்டுக்குள்ள போய்ப் பார்ப்போம்..”

    *

    வேள்பட விழி செய்து அன்று விடைமேல் இருந்து
    மடவாள் தனோடும் உடனாய்
    வாண்மதி வன்னி கொன்றை மலர்சூடி வந்தென்
    உளமே புகுந்த அதனால்
    ஏழ்கடல் சூழ் இலங்கை அரையன் தனோடும்
    இடரான வந்து நலியா
    ஆழ்கடல் நல்ல நல்ல அவை நல்ல நல்ல
    அடியாரவர்க்கு மிகவே


    *
    அன்று மன்மதன் சாம்பலாவதற்கு நெற்றிக் கண்ணைத் திறந்து எரித்த சிவபெருமான் தனது ரிஷபமாகிய எருது வாகனத்தில் உமையம்மையோடும் வான்மதியாம் பிறையையும், வன்னி இலைகள் கொன்றை மலர்களையும் சூடி என் உளத்தில் புகுந்தான்..

    எனில் ஏழுகடல்களால் சூழப்பெற்ற அரணை உடைய இலங்கையின் அரசனான இராவணன் போன்ற அசுரர்களால் ஏற்படும் இடர்களும், ஆழ்கடலில் இருக்கின்ற ஆபத்தான உயிரினங்களால் ஏற்படும் இடர்களும் எனக்கு ஒன்றும் செய்யா.. நல்லனவே செய்யும்.. அதுவும் சிவனடியவர்களுக்கு மிக நல்லதையே செய்யும்..

    *

  8. #17
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    *
    ஒன்பதாம் பாடல்.
    *

    ஒரு நாடகத்தில் ஒரு நாயகி சில நாள் மட்டும் நடிக்க வந்தாள்..

    ”கண்டிப்ப்பா சினிமாப் பாட்டு தேவையாடா உனக்கு..”

    “கொஞ்சம் ஸ்டார்ட் பண்ணத் தானே மனசாட்சி.. நல்லா இருக்கும்ல சிச்சுவேஷன்..அதுவும் அந்த ஹீரோயின் அந்தப் படத்துல நடிச்சிருந்தப்ப ஷீ வாஸ் இன் த ஃபேமிலி வேன்னு கேள்விப் பட்டிருக்கேன்..

    “ரொம்ப முக்கியம்..சரி..சொல்லு”

    நாடுதற்கு அன்னையவள் அழகுமுகம் நோக்கியே
    ..நல்லநல்ல சைகைசெய்து பார்த்திருந்த காலம்போய்
    ஆடலுடன் பாடலுடன் பள்ளிசென்று பாடங்கள்
    ..அழகுறவே கற்பதற்கு மாணவனாய் இருந்ததும்
    மாடத்திலே நின்றிருக்கும் மங்கையரின் விழிமலர்
    …மனதினுள்ளே ஊடத்தான் மாற்றங்கண்ட காலம்போய்
    வேடமிட்டு வேடமிட்டு வாழ்க்கைநதி சென்றிட
    …விந்தைமனம் நொந்தபடி ஈசனையே நாடுதே..

    “அது சரி.. இது எல்லாரும் வாழ்கிற வாழ்க்கை தானே..இதுல எதுக்கு நோகணும்..வா..இந்தப் பாட்டுல எனன் சொல்றார்னு பார்க்கலாம்

    *
    பல பல வேடமாகும் பரன் நாரி பாகன்
    பசுவேறும் எங்கள் பரமன்
    சலமகளோடு எருக்கு முடி மேல் அணிந்தென்
    உளமே புகுந்த அதனால்
    மலர்மிசையோனும் மாலும் மறையோடு தேவர்
    வருகாலமான பலவும்
    அலைகடல் மேரு நல்ல அவை நல்ல நல்ல
    அடியாரவர்க்கு மிகவே

    பரமசிவன்.. எனையாளுகின்ற ஈசன்.. எப்படிப் பட்டவன்.. பலப்பல வேஷங்கள் அணிந்து பல்வேறு தோற்றங்களில் அடியாருக்கு அருள்புரிபவன்.. அவன் தனது ரிஷப வாகனத்தில் த்னது உடலின் பாதியான உமையன்னையையும் இருத்தி தலைமுடியில் நீர்மகளாகிய கங்கையையும் எருக்கம் பூக்களையும் அணிந்த்படி என் உளத்தினில் புகுந்து விட்டான்..

    அஹோ பாரும்… அதனால் என்ன ஆயிற்று தெரியுமா.. அழகிய சிவந்த தாமரை மலரில் வீற்றிருப்பவனாகிய பிரம்மன், திருமால்,வேதங்கள், தேவர்கள் ஆகியோரும், எதிர்காலத்தில் முடிவைக் கொடுக்கின்ற காலனும் அதைப் போன்ற பலவும் நல்லவையே செய்யும்..அதுவும் பரமனின் அடியவருக்கு மிக நல்லதைச் செய்யும்..

    *

  9. #18
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    *

    பத்தாம் பாடல்..

    *
    “பூ வாசம் புறப்படும்பெண்ணே நீ பூவரைந்தால்..”

    “சரி.. எனக்குக் கோபம் வருது தான்..ஆனா பரவால்லை..பிழைத்துப் போ.. நீ எதுக்காக இதைச் சொல்ற..”

    “,மன்ச்சு டியர்..கோச்சுக்காதடா.. கொத்தலர்னு பாட்டு ஆரம்பிக்குது..அப்படின்னா என்ன அர்த்தம்..விடியற்காலையில கதிரவன் குணதிசை எழுந்திருக்கும் போது படக்கென மொட்டவிழ்ந்து அவனைப் பாத்து ஹாய் குட்மார்னிங்க்னு சொல்லும் நறுமலர்கள்.. அந்த நறுமலர்களை ஒருகொத்தாகத் தொடுத்து கெத்தாகக் கூந்தலிலே வைத்திருப்பவள் உமை என்கிறார் ஞான சம்பந்தர்..

    சொத்து பலவெனச் சோர்விலாமல் நான் தருவேன்
    கொத்துமலர்க் கூந்தலுக்குத் தான்..

    அப்படின்னானாம் ஒரு அரசன் ரொம்ப நாள் முன்னாடி.. கொத்தலர் பூங்குழல்னு திருப்பாவையிலயும் வந்திருக்கு தெரியுமோ..

    “ஓ தெரியுமே..குத்துவிளக்கெறிய பாட்டு தானே..சரி ஒரு விஷயம் சொல்லு..யாராக்கும் அந்த அரசன்..”

    “மன்ச்சு..வா..வா..சமர்த்தோன்னோ கேள்வில்லாம் கேக்கப்படாது..வா.. பாட்டுக்குள்ள போலாம்..”
    *

    கொத்தலர் குழலியோடு விசயற்கு நல்கு
    குணமாய வேட விகிர்தன்
    மத்தமும் மதியு(ம்)நாகம் முடிமேலணிந்தென்
    உளமே புகுந்த அதனால்
    புத்தரொடமணை வாதில் அழிவிக்கும் அண்ணல்
    திருநீறு செம்மை திடமே
    அத்தகு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
    அடியாரவர்க்கு மிகவே
    *
    அந்தப் பரமசிவன் அழகிய இள மலர்க் கொத்துகளை கூந்தலில் அணிந்த உமையோடு ஒருகாலத்தில் வேடமிட்டு அர்ச்சுனனுக்கு அருளியவன்..கங்கை நீரையும் பிறை நிலவையும் பாம்பினையும் தனது திருமுடி மேல் அணிந்தவன்..அவன் என் உளத்தில் நிரந்தரமாகப் புகுந்து விட்டான்..

    புத்தமதத்தைச் சேர்ந்தவர்களான பெளத்தர்களையும், சமணர்களையும் வாதங்களிடும் போரில் அவர்களது கர்வத்தை அழிக்கும் தன்மை அந்தப் பரமசிவனின் திரு நீற்றுக்கு உண்டு என நான் நம்புகின்றேன்..அத்தகைய திரு நீறு அந்த எதிர்ப்புகளைச் சமாளிக்கும்..சிவனடியவர்களுக்கு நல்லதையே செய்யும். மிக நல்லதைச் செய்யும்..

    *

  10. #19
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    *
    பதினொன்றாம் பாடல் (முடிபு)

    *

    “நான் நன்றி சொல்வேன்..”

    “சரி..ஏன் பாதிலேயே நிறுத்திட்ட என் கண்களுக்குன்னும் வெச்சுக்க வேண்டியது தானே..”

    “இல்லை மன்ச்சு..இந்த நன்றி என் நண்பருக்கு. இதை எழுதத் தூண்டியவருக்கு..அவரை என்னிடம் சொல்லச் செய்தவன் பரமன் அவனுக்கு..

    “ஸோ ஒட்டுக்க தாங்க்ஸ்ங்கற..:

    :யா..

    பாழ்மனமாய்ப் பரிதவித்துப் பலபாவம் செய்தவன்
    ..பகட்டுடனே பலவிதமாய் பரிகசித்து நின்றவன்
    காழ்ப்புணர்ச்சி கோபமென பலவுணர்வு கொண்டுதான்
    ..கட்டவிழ்த்து நின்றவனைக் கொண்டழைத்த நண்பரும்
    ஆழ்மனதில் ஆடியாடி உறங்கிநின்ற ஜோதியை
    ..அழகுடனே ஊக்குவித்து எழுதவைத்த மாண்பினை
    கோள்பதிகம் பலவுரைத்த அடியவராம் பிள்ளைக்கும்..
    ..கொண்டிடுவேன் நன்றிகளை எந்தவெந்த நாளுமே..

    :ஸோ இந்தப் பாட்டில என்ன சொல்றார் ஞான சம்பந்தர்.. இந்தக் கோளாறு பதிகம் படிச்சா ஏற்படற நன்மைகளைச் சொல்றாரா..”

    “:ஆமாம் மனசாட்சி.. வா, போய்ப் பார்க்கலாம்..”

    *

    தேனமர் பொழில் கொள் ஆலை விளை செந்நெல் துன்னி
    வளர்செம்பொன் எங்கும் திகழ
    நான்முகன் ஆதியாய பிரமாபுரத்து
    மறைஞான ஞான முனிவன்
    தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து
    நலியாத வண்ணம் உரை செய்
    ஆன சொல் மாலை ஓதும் அடியார்கள் வானில்
    அரசாள்வர் ஆணை நமதே.

    அடர்த்தியான தேனைக் கொண்ட அழகிய பல மலர்களை உடைய நந்தவனங்களைக் கொண்டதும் க்ரும்பும், செந்நெல் நிறைந்ததும் பொன்போல் ஒளிர்வதும், நான்முகனாகிய பிரம்மன் வழிபட்ட காரணத்தால்
    பிரமா புரம் என்னும்பேர் பெற்றதுமான சீகாழி என்ற ஊரில் தோன்றி அபர ஞானம் பர ஞானம் ஆகிய இருவகை ஞானங்களையும் உணர்ந்த ஞான சம்பந்தனாகிய நான், தாமே வந்து சம்பவங்கள் உண்டு பண்ணும் நவக் கிரகங்கள், நாள் நட்சத்திரங்கள் போன்றவை அடியவரை வந்து வருத்தாதவாறு பாடிய இந்தப் பதிகத்தைப் படிப்பவர்களுக்கு என்ன ஆகும்..

    என்ன ஆகுமென்றால் வானுலகில் அவர்களுக்கு இனிய மோட்சமும் அழகிய பதவியும் பெற்று அரசு புரிவர்.இது நமது ஆணை..

    *

    ஈசனடி போற்றி..

    சிவமயமே என்றும் சிவமயமே.. நன்றி.

    . வாசக் தோஷ ஷந்தவ்யஹ..

  11. #20
    Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Madurai, India, India
    Posts
    21,799
    Post Thanks / Like
    பேஷ்! பேஷ்! ரொம்ப நன்னாருக்கு! கோளறுபதிகமேயானாலும் கோளாறுதான் சின்னக்கண்ணன் கையில் சிக்கினா! கூடப்பிறந்த குசும்பு சும்மா இருக்க விடுமா? லயமும் நயமுமாய் தெளிவாய் எம்போன்ற பாமரரும் புரிந்து கொள்ளும் வண்ணம் விளங்கும் இந்த நவீன கோனார் உரையின் பாணியும் தொனியும்
    அத்தகு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
    அடியாரவர்க்கு மிகவே
    Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

  12. Thanks chinnakkannan thanked for this post
Page 2 of 3 FirstFirst 123 LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •