விகடன் குழும நிறுவனங்களின் சேர்மன் திரு எஸ்.பாலசுப்ரமணியன் (79), 19.12.2014, வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணிக்கு காலமானார். சிறிதுகாலமாக உடல் நலிவுற்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர், மாரடைப்பால் காலமானார் என்பதை மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழ்த் திரையுலகிலும், பத்திரிகையுலகிலும் முடிசூடா சக்ரவர்த்தியாகத் திகழ்ந்த திரு எஸ்.எஸ். வாசன் அவர்களின் தவப்புதல்வனான திரு எஸ்.பாலசுப்ரமணியன், தந்தையின் மறைவுக்குப் பிறகு, அவர் வகித்து வந்த பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார்.
ஆனந்த விகடனை தமது சீரிய சிந்தனையாலும் நுட்பமான செயல்திறனாலும் இன்னும் இன்னும் வளர்த்து, மேலே உயரே உயர்த்தி தமிழ்ப் பத்திரிகையுலகில் அதிகம் விற்பனையாகும் பத்திரிகையாக உச்சம் தொடவைத்தவர் ’எம்.டி.’ என்றும் ‘சேர்மன்’ என்றும் அன்புடன் அழைக்கப்படும் திரு எஸ்.பாலசுப்ரமணியன், தன் அப்பாவைப் போன்று சினிமா உலகிலும் நுழைந்து, வெற்றிப் படங்களை இயக்கியவர். பிறகு, இரண்டு குதிரைகளில் சவாரி செய்ய விரும்பாமல், ஆனந்த விகடன் மீது மட்டுமே தன் அத்தனை கவனத்தையும் செலுத்தியவர்.
50 ஆண்டு கால தமிழ் இதழியலின் பிதாமகனாகத் திகழ்ந்த திரு எஸ்.பாலசுப்ரமணியன், தமிழ்ப் பத்திரிகையுலகுக்கு செய்த பங்களிப்புகள் ஈடு இணையற்றவை. புலனாய்வு இதழியலின் முன்னோடியான 'ஜூனியர் விகடன்' பத்திரிகையும், ஊடகத் துறைக்குக் கொடையான மாணவப் பத்திரிகையாளர் திட்டமும் இவர் நனவாக்கிய நல்ல கனவுகள். சமூகநலக் காரியங்களுக்காக லட்சக்கணக்கான வாசகர்களை ஒன்று திரட்டி, நிறைய நல்ல விஷயங்களை நிகழ்த்திக் காட்டிய சமூக நல நிர்வாகி.
பாசத்துக்குரிய பண்பாளரை, மிகச்சிறந்த பத்திரிகையாளரை, எங்களின் வழிகாட்டியை இழந்து தவிக்கிறோம்.
அனைவரின் கவனத்துக்கு...
மருத்துவம் படிக்கும் மாணவர்களின் ஆராய்ச்சிக்காக தன்னுடைய உடலை தானம் தரவேண்டும் என்பதே சேர்மனின் விருப்பம். அதற்கான பணிகள் நடக்கின்றன.
அதனால், வரும் திங்கள் கிழமை 22.12.2014 அன்று காலை 6 மணி முதல் இறுதி அஞ்சலிக்காக அவருடைய உடல் போயஸ் தோட்டத்து இல்லத்தில் வைக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
முகவரி: ஏ1 டிவோலி அப்பார்ட்மென்ட், எண். 11, கஸ்தூரி எஸ்டேட், போயஸ் கார்டன், தேனாம்பேட்டை, சென்னை-18
-விகடன் குழும ஊழியர்கள்
Bookmarks