Page 1 of 2 12 LastLast
Results 1 to 10 of 20

Thread: கதாநாயகனின் கதை - சிவாஜி கணேசன்

  1. #1
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like

    கதாநாயகனின் கதை - சிவாஜி கணேசன்

    பொம்மை மாத இதழில் தொடராக வெளிவந்து, பின்னர் புத்தகமாக பதிப்பிக்கப்பட்ட நடிகர் திலகத்தின் கதாநாயகனின் கதை 05.10.2014 ஞாயிறு தொடங்கி தினமலர் வார மலரில் தொடராக இடம் பெறுகிறது. தினமலர் வாரமலர் கிடைக்கப் பெறாத நம் ரசிக நண்பர்களின் வசதிக்காக இங்கே மீள்பதிவு மற்றும் இணைப்பு தரப்படுகிறது.

    தினமலர் வாரமலர் கிடைக்கப் பெறும் வசதியுள்ள நண்பர்கள் வாங்கிப் படிக்குமாறு அன்புடன் வேண்டப்படுகிறார்கள்.

    கதாநாயகனின் கதை - 1

    தினமலர் வாரமலர் 05.10.2014




    வி.சி.கணேசனாக இருந்து, நடிகர் திலகம் சிவாஜி கணேசனாக சிகரம் தொட்ட சுயசரிதை இது. சிவாஜி கணேசன், 'பொம்மை' இதழில் எழுதிய கட்டுரை மற்றும் பேட்டிகளின் தொகுப்பு; நுாலாகவும் வெளிவந்தது. சாதனை புரிய எவ்வளவு உழைக்க வேண்டும் என்ற படிப்பினையை, இத்தொடர் தரும் என்பதில் சந்தேகமில்லை.

    விழுப்புரம், சின்னையா மன்றாயரின் மகனான என்னை, 'சிவாஜி' கணேசனாக்கி, 'பராசக்தி' கணேசனாக உருவெடுக்கச் செய்து, 'நடிகர் திலகம்' கணேசன் என அன்புடன் அழைத்து, பத்மஸ்ரீ விருது பெரும் கணேசனாக மாற்றியது யார்?
    கலை உள்ளம் கொண்ட நீங்கள் தான்! திருச்சி, சங்கிலியாண்ட புரத்து, என் இளமைக் காலத்து வாழ்க்கை, இப்போது நினைவுக்கு வருகிறது. அது ஒரு வகை அலாதியான வாழ்க்கை! சங்கிலியாண்டபுரத்தில் எனக்கென்று தனியாக, ஒரு நண்பர்கள் கூட்டம் உண்டு.
    ஊருக்குள் எங்களுக்கு ஒரு பட்டப்பெயர் உண்டு. அது, 'துஷ்டர்கள்!' ஆக, சின்ன வயதிலேயே எனக்கும், பட்டத்திற்கும் ஒரு தனிப்பிடிப்பு உண்டு.
    வீதியிலே நாங்கள் விளையாடிக் கொண்டிருப்போம். திடீரென்று ஏதேனும் ஒரு அழுகுரல் கேட்கும். 'யாரடிச்சா... பாவம் பையன் அழறானே...'என்று கேட்டால், 'கணேசன் அடிச்சிட்டான்...' என்று, பல குரல்கள் ஒலிக்கும். அந்த அளவுக்கு, அப்போது என் கை ஓங்கி, தவறு... நீண்டிருந்தது.
    அடி வாங்கிய சிறுவனின் தாயோ, அக்காவோ என் தாயாரிடம், என் வீரத்தை பற்றி புகார் சொல்வர்.
    என் தாயார் நான் வீடு திரும்புவதை எதிர்பார்த்து, கையில் வெங்காயத்துடன் ஆவலாக காத்திருப்பார்.
    வீட்டிற்குள் நுழைந்ததும் நுழையாததுமாக, 'வாடா மகனே... ஏன்டா என் வயித்தெரிச்சலைக் கொட்டிக்கறே...' என்று அன்புடன் அழைத்து, கையில் மறைத்து வைத்திருந்த வெங்காயத்தை, என் தந்தையின் துணையுடன், கண்களில் பிழிந்து விடுவார்.
    துடிப்பேன்... கதறுவேன்... கண்ணீர் வடிப்பேன்.
    'இனிமே இப்படிச் செய்ய மாட்டியே... வீண் வம்புக்கு போக மாட்டியே...'என்று, முதுகிலும் அன்பளிப்பு வழங்குவார்.
    இவ்வளவு வாங்கியும், நான் திருந்தினேன் என்றா நினைக்கிறீர்கள்? இல்லை.
    மறுநாளே என் துஷ்டத்தனம் மீண்டும் தலைதுாக்க ஆரம்பித்து விடும்.
    இதனாலேயே என் பெற்றோர் எங்காவது வெளியே செல்வதென்றால், என்னை வீட்டிற்குள் வைத்து பூட்டி விட்டே செல்வர். சில சமயம், வெளிக்கதவை பூட்ட மறந்து, தாழ்ப்பாள் மட்டும் போட்டு விட்டு போய் விடுவர். அதைத் தெரிந்து, நானும் கதவை சாமர்த்தியமாக ஆட்டி அசைத்து, தாழ்ப்பாளை விடுவித்து, மதில் சுவரை தாண்டி குதித்து வெளியேறி விடுவேன்.
    'கணேசன் வந்துட்டான் டோய்...' என்று என் சகாக்கள் மகிழ்ச்சிக் குரல் எழுப்புவர்; அதைக் கேட்கும் போது, பெருமையாக இருக்கும்.
    என் பெற்றோர் வீடு திரும்பியதும், நான் வீட்டில் இல்லாததைக் கண்டுபிடித்து விடுவர். இரவு வீட்டிற்கு வரும் போது, வழக்கம் போல வெங்காயம் காத்திருக்கும்.
    அந்த அளவுக்கு படு துஷ்டை நான்.
    ஒரு சமயம் என் அண்ணன் தங்கவேலுக்கும், எனக்கும் ஏதோ தகராறு வந்து விட்டது.
    'வாடா வா... இன்னிக்கு ராத்திரி உன்ன அடிச்சுக் கொன்னுடறேன் பாரு...' என்று ஒரு தடியை துாக்கி வைத்துக் கொண்டேன்.
    பயந்து போய் அம்மாவிடம் தஞ்சம் அடைந்து விட்டார் என் அண்ணன்.
    'பாவிப்பய, உதவாக்கரை... செஞ்சாலும் செஞ்சுப்புடுவான்...' என்று, அன்றிரவு முழுவதும் துாங்காமல், என் அண்ணன் பக்கத்திலேயே படுத்திருந்தார் அம்மா.
    ஆனால், நானோ தடியை பக்கத்தில் வைத்துக் கொண்டே நிம்மதியாக துாங்கி விட்டேன்.
    அப்போது, ஊர்க்காவல் என்று ஒரு வழக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. திருடர்கள் வராமல் தடுக்க, நான்கு வீட்டுக்கு ஒருவராக சிலர் சேர்ந்து, இரவு நேரத்தில் தெருவில் ரோந்து வருவது வழக்கம்.
    திருடனை சமாளிக்க வேண்டுமென்றால், முரட்டுத்தனம் உள்ளவர்கள் தானே வேண்டும்? என்னிடம் அப்போது அது தாராளமாக இருந்ததால், இந்த ரோந்து காவல் குழுவில் நானும், என் வீட்டின் சார்பில் கலந்து கொண்டேன்.
    எங்களுக்கு சின்ன வயதாக இருக்கலாம்; ஆனால் முரட்டுத்தனமும், பிடிவாதமும் எக்கச்சக்கமாக இருந்தன.
    ஏதாவது பாட்டு பாடியோ, கோஷமிட்டபடியோ வீதியை சுற்றி வருவோம்.
    சில சமயங்களில் விளையாடவும் செய்வோம்.
    'பச்சை இலை கொண்டு வருவது' என்று ஒரு விளையாட்டு; 'கண்ணாமூச்சி' விளையாட்டைப் போன்றது.
    'இன்ன இடத்தில், இன்ன மரத்தில் இருந்து, பத்து இலை பறித்து வா...' என்று ஒருவனிடம் சொல்வர். அவன் போவான்; அவன் கூடவே மற்றவர்களும் போவர். அவன் மரத்தில் ஏறி இலை பறிக்கும் நேரத்தில், மற்றவர்கள் ஓடிப் போய் ஒளிந்து கொள்வர். சொன்னபடி இலையை பறித்து திரும்பும் அவன், யாரை முதலில் பார்த்து பிடித்து விடுகிறானோ, அவன் தோற்றவனாகி விடுவான். தோற்றவன் இலை பறிக்க வேண்டும்.
    இந்த விளையாட்டின் போது, சில சமயம் வேண்டுமென்றே, 'சுடுகாட்டு பக்கத்தில் உள்ள மரத்திலிருந்து இலை பறித்து வா...' என்று சொல்வர். ஒருசமயம் நானே இம்மாதிரி போய் பறித்து வந்திருக்கிறேன்.
    இம்மாதிரியான விளையாட்டுகள், சில சமயங்களில் விபரீதமாகவும் முடியும்!
    ஒரு நாள், விளையாடிக் கொண்டிருந்த போது, ராஜு என்ற நண்பன், ஏதோ ஆத்திரத்தில் பேனாக் கத்தியால், என் முதுகில் குத்தி விட்டான். அந்தத் தழும்பு, இப்போதும் என் முதுகில் இருக்கிறது.
    என் தாயார் என்னை கண்டிக்கும் போது, சில நேரம் எனக்கு கோபம் வந்து விடும்.
    'வீட்டை விட்டு போய் விடுகிறேன்...' என்று சொல்லி, ஆத்திரத்துடன் வெளியே கிளம்பி விடுவேன்.
    எங்கே போவேன் என்று நினைக்கிறீர்கள்... மலைக்கோட்டை பிள்ளையார் கோவிலில் போய் உட்கார்ந்து விடுவேன் அல்லது வேறு எங்காவது மரத்தடிக்கு போய் விடுவேன்.
    மாலை வரும்; என் வீராப்பை விட்டு, 'ஜம்'மென்று வீட்டுக்குள் காலடி எடுத்து வைப்பேன்.
    என் தாயார் என்னைப் பார்த்ததும், பார்க்காதது போல நடிப்பார்.
    எந்தப் பெற்றோருக்கும், தன் மகன் நன்றாக படித்து பெரிய உத்தியோகத்தில், சீரும் சிறப்புமாக இருப்பதைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் ஏற்படுவது இயற்கை.
    என் பெற்றோருக்கும், அந்த ஆவல் இருந்தது.
    திருச்சியில், ஒரு கிறிஸ்துவப் பள்ளியில் என்னை சேர்த்து விட்டனர். அப்போதெல்லாம், நான் அருமையாகப் பாடுவேன். 'ஞான சங்கீதப்பன் மணி மண்டபம்...' என்று, நான் பாட ஆரம்பித்து விட்டால், அதைக்கேட்டு ரசிக்க, என்னைச் சுற்றி ஒரு கூட்டமே நிற்கும். பள்ளியில் படிக்கும் போதும், எனக்கு பாட்டில்தான் நிறைய மதிப்பெண் கிடைக்கும். அதில் தான், முதலில் வருவேன்; மற்றவற்றில் சுமாரான மதிப்பெண்கள் தான் கிடைக்கும். கணக்கிலோ பெரிய பூஜ்யம்!
    'காட் சேவ் தி கிங்' (கடவுள் அரசரைக் காக்கட்டும்) என்ற ஆங்கில பாட்டுத்தான், அப்போது பள்ளியில் கடவுள் வணக்கப்பாட்டு. என் குரலில் இனிமையைக் கண்ட ஆசிரியைகள், என்னையும் கடவுள் வணக்கம் பாடும் மாணவர்கள் கோஷ்டியில் சேர்த்து விட்டனர்.
    என் வீட்டுக்கும், பள்ளிக்கும் குறைந்த துாரமோ அல்லது நீண்ட துாரமோ அது எனக்கு தெரியாது. ஆனால், படிப்புக்கும், எனக்கும் வெகு துாரம் என்பது உடனே தெரிந்துவிட்டது.
    அந்த பதினைந்து மாத பள்ளி வாழ்க்கைக்கு பின், என்ன நடந்தது...

    — தொடரும்.

    தொகுப்பு: வைரஜாதன்,
    நன்றி 'பொம்மை'
    விஜயா பப்ளிகேஷன்ஸ்,
    சென்னை - 26.
    இத்தொடர் இடம் பெற்றுள்ள தினமலர் வாரமலர் இணைய தளப்பக்கத்திற்கான இணைப்பு -

    http://www.dinamalar.com/supplementa...d=22182&ncat=2
    Last edited by RAGHAVENDRA; 4th November 2014 at 10:14 PM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. Likes Russellmai liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #2
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    கதாநாயகனின் கதை - 2

    தினமலர் வாரமலர் - 12.10.2014




    என் பள்ளிக்கூடப் படிப்பு, ஒரு முடிவுக்கு வந்தது. என் தந்தையார் பார்த்து வந்த ரயில்வே வேலை போய்விட்டதால், ஒரு பஸ் கம்பெனியில், குறைந்த சம்பளத்தில் வேலை பார்த்து வந்தார்.
    அந்தக் குறைந்த வருமானத்தில் குடும்பத்தை நடத்த, என் தாயார் மிகவும் சிரமப்பட வேண்டியிருந்தது. எனக்கும், அப்போதுதான் குடும்ப கஷ்டங்கள் ஓரளவுக்கு தெரிய ஆரம்பித்தன. அதனால், சீக்கிரம் பெரியவனாகி, கை நிறைய சம்பாதித்து, என் தாயாரின் கண்ணீரைத் துடைக்க வேண்டும் என்று மனதில் எழுந்த எண்ணம், வெறியாகமாறி சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தேன்.
    அதுவும், 'கட்ட பொம்மன்' நாடக உருவில் வந்தது.
    ஒரு நாள், நான் தங்கியிருந்த தெருவிலேயே, 'கட்டபொம்மன்' கூத்து நடைபெற்றது. இதைக் கூத்திலும் சேர்க்க முடியாது; நாடகம் என்றும் சொல்ல முடியாது. இரண்டும் கலந்த ஒரு ஆட்டம்.
    இந்த கட்ட பொம்மனைப் பார்த்ததும் தான், என் மனதில், நாமும் இம்மாதிரி நடித்தால் என்ன என்ற எண்ணம் துளிர்விட ஆரம்பித்தது.
    சக்கரபாணி என்ற தோழனின் உதவியால், பொன்னுசாமி பிள்ளை நடத்தி வந்த மதுரை ஸ்ரீ பால கான சபையில் சேர்ந்தேன்.
    இதில், பல நாடகங்களில், பல்வேறு வேடங்களை ஏற்று நடித்தேன். ராமாயண நாடகத்தில், முற்பகுதியில், அழகு சுந்தரியான சீதையின் கதாபாத்திரத்திலும், பிற்பகுதியில், சூர்ப்பனையாகவும், கடைசி நாட்களில், இந்திரஜித்தாகவும் தோன்றுவேன்.
    நான் நாடகக் கம்பெனியில் சேர்ந்து ஆறு ஆண்டுகளுக்கு பின், ஒரு சமயம் பொள்ளாச்சியில், 'இழந்த காதல்' நாடகம் நடந்து கொண்டிருந்தது. என்னைப் பார்க்க, யாரோ ஒருவர் வந்திருப்பதாக கூறினர். யாரோ, என்னவோ என்று பதற்றத்துடன் போனேன். என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை.
    என் தாயார், ஒரு கையில் பையும், மறுகையில் ஒரு சிறு பையனையும் பிடித்தபடி நின்று கொண்டிருந்தார். என் தாயாரை, ஆறு ஆண்டுகளுக்குப் பின் பார்த்த மகிழ்ச்சியில், 'அம்மா' என்று கூவி, அவரை ஓடிப்போய் அணைத்துக் கொண்டேன். தன் கூட வந்த பையனை சுட்டிக்காட்டி, 'உன் தம்பிடா... சண்முகம்ன்னு பேர்; நீ வந்ததுக்கப்பறம் பிறந்தவன்டா...' என்றார்.
    'அடேய் தம்பி...' என்று அவனைத் தூக்கி, ஒரு சுற்றுச் சுற்றினேன், அவன் பயந்து விட்டான்.
    என் தாயார், முறுக்கு, சீடை, பலகாரங்கள் எல்லாம் கொண்டு வந்திருந்தார். தீபாவளி பண்டிகை நெருங்கிக் கொண்டிருந்ததால், முதலாளியிடம் சொல்லி பண்டிகைக்காக, என்னை கையோடு ஊருக்கு அழைத்து வந்துவிட்டார். நான் சம்பாதித்த பணத்திலிருந்து வெடி வாங்கி வெடித்தேன். இன்றும் தீபாவளி பண்டிகை வரும்போதெல்லாம், இந்தச் சம்பவம் நினைவுக்கு வரும்.
    அந்தக் காலத்தில், கம்பெனி வாழ்க்கை என்பது குருகுல வாசம் போன்றது.
    ஒவ்வொரு பையனுக்கும் ஒரு பெட்டி, படுக்கை இருக்கும். காலையில் எழுந்ததும் படுக்கையைக் சுருட்டி, பெட்டியின் மேல் வைத்து, பின், குளித்துவிட்டு வர வேண்டும். அதன்பிறகு, சிற்றுண்டி, காபி தருவர். எல்லாம் முடிந்த பின், நாடக பாடங்களைப் கேட்பர்.
    எல்லாருக்கும் எல்லா நாடகங்களின் பாடமும் சொல்லித் தரப்படும்.
    பகல் மணி, 12:30 க்கு பூஜை நடக்கும்; இதில், எல்லாரும் கலந்து கொள்வோம். ஒரு மணிக்கு சாப்பாடு. பின்னர் தூங்கப் போக வேண்டும். வலுக்கட்டாயமாக தூங்க வைத்து விடுவர்.
    மாலை, 4:00 அல்லது 4:30 மணிக்கு காபி, பலகாரம் தருவர். கொஞ்ச நேரம் பாடம் கேட்பர். பின் கொஞ்சம் ஓய்வு இருக்கும். இரவு மணி, 7:30க்கு சாப்பாடு, உடனே, நாடகம் நடிக்க தியேட்டருக்குப் போய் விடுவோம். நாடகம் இரவு, 10:00 மணிக்கு ஆரம்பமாகும்; முடிய இரவு இரண்டாகும். சில சமயம், அதற்கு மேலும் ஆகும்; இதுதான் கம்பெனி வாழ்க்கை.
    கம்பெனியில் எல்லாரும் ஒன்றாகப் பழகுவோம். ஒரே குடும்பத்தில் இருப்பதைப் போலவே நினைத்து வந்தோம். பாடம் சரியாகச் சொல்லாவிட்டாலோ, ஏதாவது தப்புத்தண்டா செய்து விட்டாலோ, அடி, உதை நிச்சயம்! கம்பெனியில், என்னை மாதிரி உதை வாங்கியவர்கள் யாரும் கிடையாது. ஏன், பெரியவனாகியும், அதாவது, 1944ல் கூட, கே. சந்தானத்திடம் உதை வாங்கியிருக்கிறேன். அவர், என்னை அடித்த அடியில், பிரம்பு இரண்டாக உடைந்து விட்டது என்றால் பார்த்து கொள்ளுங்களேன்.
    ஆனால், இம்மாதிரி வாங்கிய அடிகளெல்லாம் பின்னால் நான் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்பதற்கு உதவியாக இருந்தன. பெரியவர்களிடம் இம்மாதிரி அடி, உதை வாங்கியதெல்லாம் எனக்கு நிரம்பவும் பயனளித்தன. அப்படி அடி வாங்கிய சம்பவங்களை நினைக்கும் போது, நான் தவறை செய்யாமலிருக்க, அவை எச்சரிக்கையாக நிற்கின்றன.
    தெரியாமலா பெரியவர்கள் சொன்னார்கள், 'அடி உதவுவதைப் போல அண்ணன் தம்பி கூட உதவ மாட்டார்கள்...' என்று!
    ஆனால், எனக்கு அடியும் உதவியிருக்கிறது, என் அண்ணனும், தம்பியும் கூட இப்போது பேருதவியாக இருந்து வருகின்றனர். இதுவும் நான் பெருமைப் பட வேண்டிய விஷயம் தான்!
    கட்டபொம்மனைப் பற்றியோ, ஆங்கிலேயர் ஆட்சி பற்றியோ, சுதந்திரப் போராட்டத்தைப் பற்றியோ அதிகமாக புரிந்து கொள்ள முடியாத சிறு வயது எனக்கு. ஆனாலும், நாடகம் நடக்கிறது அதைப் பார்க்கப் போகிறோம் என்ற பொதுவான ஆவலினால், இந்த நாடகத்தைப் பார்த்தேன். இந்த நாடகம்தான், என் மனதில் ஒரு புதிய எண்ணத்தை எழுப்பி, நடிப்பு துறையில் என் வாழ்க்கையை அமைக்க அஸ்திவாரமாக அமைந்தது.
    ஆம்... அந்த நாடகத்தைப் பார்த்ததும் தான் என்னுள்ளத்தில், நானும் ஒரு நடிகனாக வேண்டும் என்ற ஆவல் மொட்டு விட்டது.
    சாதாரணமாக சொல்வதுண்டு... ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு திறமை உள்ளுக்குள் மறைந்து இருக்கிறது; அதை, தூண்டி விடக் கூடிய சம்பவமோ, சந்தர்ப்பமோ கிடைக்கும்போது, அந்தத் திறமை வெளிப்பட்டு விடுகிறது என்று சொல்வர்.
    என்னைப் பொறுத்தவரை என்னிடம் திறமை இருக்கிறதோ இல்லையோ, நடிப்புத் துறைக்கு என்னை இழுத்து வர, நடிப்புத் துறையில் என்னை ஈடுபடச் செய்ய, அன்று நான் பார்த்த கட்டபொம்மன் நாடகம் தான் தூண்டுகோலாக அமைந்தது. அந்நாடகம், என் மனதில் பசுமையாகப் பதிந்து விட்டதுடன், அந்நாடகத்தின் மீது ஒரு தனிப்பற்றுதலை உண்டாக்கி, தேசிய உணர்வையும் ஏற்படுத்திவிட்டது.
    பல ஆண்டுகளுக்குப் பின், நான் திரையுலகில் அறிமுகமாகி, ஓரளவுக்கு நடிகனாக வந்தபோது, அந்தப் பழைய நினைவிலிருந்து மீள முடியாத காரணத்தினாலும், அதன் பேரில் ஏற்பட்ட தணியாத ஆர்வத்தாலும் தான், கட்டபொம்மன் சரித்திர நாடகத்திலும், திரைப் படத்திலும் நடித்தேன்.
    என் குடும்பத்தில், எனக்கு முன் யாருமே நடிப்புத் துறையில் ஈடுபட்டிருக்கவில்லை. என் தந்தையார், ரயில்வேயில் பணி புரிந்தார்; என் பாட்டனார் இன்ஜினியராக இருந்தவர். நான் பிறந்த அன்றே, என் தந்தையார், சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக, கைது செய்யப்பட்டு, சிறைக்கு அழைத்துச் செல்லப் பட்டுவிட்டார்.
    எங்கள் குடும்பம் விழுப்புரத்திலிருந்து, திருச்சிக்கு இடம் பெயர்ந்தது. திருச்சியிலும் நாங்கள் நிரந்தரமாகத் தங்க முடியவில்லை. தஞ்சாவூர் திருச்சி என்று மாறி மாறி குடித்தனத்தை நடத்த வேண்டி வந்தது. இதனால், எந்த ஒரு பள்ளிக் கூடத்திலும் தொடர்ந்து படிக்க முடியாத நிலை எனக்கு ஏற்பட்டது. தவிர, குடும்பத்தில் சிரமமான நிலையும் வளர ஆரம்பிக்கவே, ஏதாவது, தொழில் செய்து குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற நிலைக்கு நானும் விரட்டப்பட்டேன்.
    அந்த வயதில், நான் படித்திருந்த அரை குறைப் படிப்புக்கு என்ன வேலை கிடைக்கும்?
    — தொடரும்.

    தொகுப்பு: வைரஜாதன்,
    நன்றி 'பொம்மை'
    விஜயா பப்ளிகேஷன்ஸ்,
    சென்னை.

    தினமலர் இணையதளத்தில் இப்பக்கத்திற்கான இணைப்பு

    http://www.dinamalar.com/supplementa...d=22265&ncat=2
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  5. Likes Russellmai liked this post
  6. #3
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    கதாநாயகனின் கதை - 3

    தினமலர் வாரமலர் 19.10.2014



    நாடகக் கம்பெனியில் சேர்ந்தேன். குறைந்த சம்பளம்தான்; ஆனால், என் மனதுக்கு நிறைவான வேலை.
    வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனுக்கும், ஒரு லட்சியம் இருக்கும். கல்லூரியில் காலடி எடுத்து வைக்கும் ஒரு மாணவன், எதிர்காலத்தில் ஒரு வக்கீலாகவோ, டாக்டர் ஆகவோ, இன்ஜினியராகவோ, கணக்கராகவோ இப்படித் தனக்கு ஏற்ற ஒரு உத்தியோகத்தை மனதில் வைத்து, அதற்கேற்ற பாடத்தைத் தேர்ந்தெடுத்து படிக்கிறான். படித்துப் பட்டம் பெற்றதும், அந்த துறையில் பெரும் புகழ் பெற வேண்டும் என்பது அவன் லட்சியமாகி விடுகிறது.
    ஒரு சிலர்தான் இதற்கு விதிவிலக்கு. அவர்களது உள்ளத்தில் ஊறிக் கொண்டிருக்கும் ஆர்வம் மற்றும் திறமை காரணமாக, வேறு ஒரு தொழிலில் ஈடுபட வேண்டிய அவசியத்தை, சூழ்நிலை உருவாக்கித் தந்து விடுகிறது.
    நடிப்புத் துறையில் சிறு வயதிலேயே ஈடுபடும் பெரும்பாலோருக்கு, அவர்களது மனதின் அடித் தளத்தில் ஒரு ஆசை பூத்துக் கிடக்கும்.
    அதை, ஆசை என்று சொல்வதை விட லட்சியம் என்றே சொல்லலாம்.
    அது தான், கதாநாயகன் வேடம்! நடிப்புத் துறையில் பதவி உயர்வின் உச்சமே, கதாநாயகன் வேடம்தானே!
    'என்றாவது ஒரு நாள், நாம் கதாநாயகன் வேடம் போடப் போகிறோம், கதாநாயகனாக மாறப் போகிறோம்' என்ற ஆசை, அவர்களது உள்ளத்தில் ஊறிக் கொண்டே இருக்கும்.
    சின்னஞ் சிறுவனாக நாடகக் கம்பெனியில் நுழைந்து, அங்கு, எடுபிடி வேடம் போட்டு கதாநாயகனாக வருவதற்குள், எப்படியெல்லாம் ஒரு நடிகன் பாடுபட வேண்டியிருக்கிறது, எத்தனை வேடங்களில் நடிக்க வேண்டியிருக்கிறது, என்னவெல்லாம் கற்றுக் கொள்ள வேண்டி இருக்கிறது.
    உண்மையிலேயே நாடக மேடைதான், ஒரு நடிகனுக்கு நல்ல பயிற்சி சாலை. அவன் பலதரப்பட்ட பாடங்களை கற்றுத் தேர்ச்சி பெற உதவும் பல்கலைக் கழகம்.
    வேறுபட்ட வேடங்களை ஏற்று நடிக்கும்போதும், ஒவ்வொரு ஊர்களாக முகாம் மாறி, பலதரப்பட்ட மனிதர்களைச் சந்திக்கும்போதும், வெவ்வேறு சூழ்நிலைகளில் அவன் வளரும் போதும், அவன் பெறும் உலக அனுபவம் பெரிது. இதனால் தான், 'பாய்ஸ் கம்பெனி'யிலிருந்து வரும் எந்த நடிகரும், எந்தப் பாத்திரத்தையும் ஏற்று திறமையாக நடித்துக் காட்ட முடிந்தது.
    நான் சிறுவனாகத்தான் நாடக மேடையில் பயிற்சி பெற நுழைந்தேன்.
    முதன் முதலாக நான் மேடைக்கு சென்று, மக்கள் முன் நின்றபோது, எனக்கு எப்படி இருந்தது, நான் மேடையில் ஏற்று நடித்த முதல் வேடம் என்ன என்பதும் என் நினைவில் நிலைத்துவிட்டது.
    அந்த முதல் வேடத்திலிருந்து, படிப்படியாக நான் போட்டு வந்த வேடங்கள் எத்தனை...
    பெண் வேடம் போட்டுக் கொள்ள வேண்டிய அவசியம் கூட வந்ததே... அது ஏன், எப்படி என்ற விவரங்களும் என் ஞாபகத்தில் அப்படியே நிழலாடுகின்றன.
    இத்தனை வேடங்களையும் ஏற்று, கடைசியாக கதாநாயகன் வேடத்தை ஏற்று, நடிக்க வந்த போது, எனக்கு ஏற்பட்ட உணர்ச்சி என்ன, நான் முதன் முதலாக கதாநாயகனாக ஏற்று நடித்த வேடம் எது, கதாநாயகனாக மாறியது எப்போது என்பதும், என் நினைவில் அப்படியே இருக்கிறது.
    நான் ஆரம்பத்தில் போட்ட அந்தச் சின்னஞ்சிறிய வேடத்திலிருந்து, கதாநாயகனாக வேடம் போட்டு நடித்தது வரை, எனக்கு நாடக மேடையிலும், நடிப்புத் துறையிலும் ஏற்பட்ட அனுபவங்களைத்தான் உங்களுக்குச் சொல்லப் போகிறேன்.
    அது தான், 'கதாநாயகனின் கதை!'
    கட்டபொம்மன் நாடகத்தைப் பார்த்த அன்றிரவு, எனக்கு தூக்கமே வரவில்லை. இரவு நெடுநேரம் வரை அந்த நாடகத்தைப் பற்றிய சிந்தனைகள், அடுக்கடுக்காக மனதில் வந்து கொண்டிருந்தன.
    'வானம் பொழிகிறது... பூமி விளைகிறது... உனக்கு ஏன் நான் கப்பம் கட்ட வேண்டும்...' என்று, தன்மானத்தைத் தன் குரலாக்கி, கட்டபொம்மன் இடி முழக்கம் செய்த போது, சபையிலே எழுந்த கைதட்டல்கள் என் காதில், ரீங்காரமிட்டன.
    கட்டபொம்மனாக நடித்த நடிகருக்கு கிடைத்த பாராட்டுதல்களை நினைத்து, 'ஆஹா... நடிகனாகி விட்டால் எவ்வளவு கைதட்டல்களும், பாராட்டும் கிடைக்கும்...' என்று நினைத்தேன்.
    என் பிஞ்சு மனதில் ஆசைகள் எழ எழ, நாடக மேடையின் பக்கமாக நெருங்கி வந்து கொண்டிருந்தேன். நடிகனாக வேண்டும் என்ற ஆவல் என்னைத் துரத்த ஆரம்பித்தது.
    நான் இந்த நாடகக் கம்பெனியில் சேர்ந்த போது, காக்கா ராதாகிருஷ்ணன் கம்பெனியில் இருந்தார். கம்பெனியில் இருந்த எம்.ஆர்.ராதா அண்ணன் சினிமாவில் நடிப்பதற்காக அப்போது போயிருந்தார். ரொம்ப நாட்கள் கழித்து அவர் வந்தார்.
    நாடகக் கம்பெனியில் சேர்ந்த முதல் சில நாட்கள், நான் அங்கு நடப்பவைகளை பொதுப்படையாகக் கவனித்து வந்தேன். சில நாட்களுக்குப் பின், எனக்குப் பாடம் கொடுத்து படிக்கச் சொல்லியும், சின்ன வேஷம் கொடுத்து நடிக்கவும் கூறினர்.
    வாத்தியார் சொல்லிக் கொடுத்ததை, எந்த விதமான தப்பும் செய்யாமல், அவர் சொல்லிக் கொடுத்தபடியே நடித்துக் காட்டினேன். அப்போது, நான் என்னுள் இருந்து நடிக்கவில்லை; என் ஆசிரியர் தான் உள்ளிருந்து நடித்தார் என்று சொல்வது தான் பொருத்தமாக இருக்கும்.
    என் மீது ஏற்பட்ட நம்பிக்கையினால், நான் கம்பெனியில் சேர்ந்த பத்தாவது நாளிலேயே, நாடகத்தில் நடிக்க எனக்கு ஒரு வேடம் கொடுத்தனர்.
    என்ன வேடம் தெரியுமா? சீதை வேடம். ஆம், நான் வாழ்க்கையில் போட்ட முதல் வேடம், பெண் வேடம் தான். அதுவும், நாடகம் முழுவதும் வரும் சீதை வேடம் அல்ல, கன்னி சீதையின் வேடம். அதாவது, கன்னிகா மாடத்தில் நின்ற சீதை, ராமனைப் பார்த்து, அவர் வில்லை ஒடித்து மணக்கும் வரை உள்ள சீதை.
    மூன்றே காட்சிகள் தான் வரும்.
    'யாரென இந்தக் குருடனை அறியேனே... என் ஆசைக்கினிய என் முன்னே நின்றவன்...' என்று சீதை பாடுவாள்.
    கம்பெனியிலே, 'மேக்-அப்' போடுவதற்கென்று தனியாக ஒப்பனைக் கலைஞர்கள் இருக்க மாட்டார்கள். நடிகர்களே தங்களுக்குப் போட்டுக் கொள்வர். நடிப்போடு, கூடவே, 'மேக்-அப்' போட்டுக் கொள்வதையும் சொல்லிக் கொடுத்து விடுவர். நடிகர்கள் தங்களுக்குள் ஒருவருக்கொருவர் போட்டு விடுவதும் உண்டு.
    சில சமயங்களில் வாத்தியாரும் போட்டு விடுவார்.
    நாடகம் நடக்கும் போது, வாத்தியார் மேடையின் பக்கவாட்டில் வந்து நின்று கொள்வார். முக்கியமான வேடமாக இருந்தால், அவர் தாளம் போட்டு தட்டிக் காண்பிப்பார். அவரைப் பார்க்கப் பார்க்க அப்படியே மனப்பாடம் செய்திருந்த வசனமும், சொல்லிக் கொடுத்த நடிப்பும் வந்துவிடும்.
    நாடகத்தில் நடிக்காதவர்களும், பக்கவாட்டில் வந்து நின்று கொண்டு கவனிப்பர், கவனிக்க வேண்டும். இது தவிர, நாடகத்தில் பங்கு எடுத்துக் கொள்ளாதவர்கள், திரைக்குப் பின்னால், சீன் தள்ளுவது, காட்சிக்கான சாமான்களைப் பொருத்தமான இடத்தில் வைப்பது போன்ற வேலைகளையும் செய்வர். நீண்டநாள் அனுபவம் வாய்ந்த சில பெரியவர்கள் மட்டும் இதற்கு விதிவிலக்கு. அவர்கள் உள்ளே எங்கேயாவது இருப்பர்.
    சீதையாக நான் அலங்கரிக்கப்பட்டுவிட்டேன்.
    மனதிற்குள்ளேயே, கடவுளை வேண்டிக் கொண்டேன். ஏதேனும் உளறிக் கொட்டி, கெட்ட பெயர் வாங்கிவிடக் கூடாதே என்ற ஒரு வகை பயம் மனதுக்குள் ஓடிக் கொண்டிருந்தது.
    நாடகம் ஆரம்பமாயிற்று, திரை தூக்கப்பட்டுவிட்டது. நான் மேடைக்குள் செல்ல வேண்டிய நேரம் வந்தது.
    கடவுளையும், என் குருநாதரையும் மனதில் நினைத்தபடி மேடைக்குள் நுழைந்தேன்.
    நான் போட்டிருந்த வேடம், என் பாவனை, என் வேடத்திற்கு வேண்டிய உணர்ச்சி மற்றும் நடிப்பு இவை மட்டும் தான் என் கவனத்திலும், கண் முன்னும் வந்து நின்றன.
    எதிரே நாடகம் பார்க்க வந்த ரசிகர்கள், என் கண் முன் தெரியவில்லை. மூன்று காட்சிகள் முடிந்தன. நான் உள்ளே வந்தேன்.
    'ரொம்ப நல்லா செஞ்சுட்டேடா...' என்று, என் வாத்தியார் சின்ன பொன்னுசாமி, இரண்டு முறை முதுகில் தட்டிக் கொடுத்தார்.
    எனக்கு இமயத்தையே வென்று விட்ட எக்களிப்பு; நூற்றுக்கு நூறு வாங்கிவிட்ட மாணவனின் நிலை.
    கம்பெனியில் சேர்ந்த பின், இரண்டாவது முறையாக அன்றிரவும் நான் தூங்கவில்லை. என் மனதில் ஆயிரம் கனவுகள்; ஆயிரம் கற்பனைகள்.
    கம்பெனி திருச்சியில் தங்கியிருந்த கடைசி நாட்களில் தான் நான் போய்ச் சேர்ந்தேன். நான் சேர்ந்த சில நாட்களில், கம்பெனி திண்டுக்கல்லுக்கு முகாம் மாறியது.
    திண்டுக்கல்லில் முகாமிட்டபோது தான், ஒரு நாள் வாத்தியார் என்னைக் கூப்பிட்டார்.
    'உனக்கு பிரமோஷன் கொடுத்திருக்கிறேன்...' என்று கூறி, அந்தப் பிரமோஷன் என்ன என்பதை கூறினார். அதைக் கேட்டு, நான் அப்படியே திகைத்து நின்றுவிட்டேன்.
    — தொடரும்.

    தொகுப்பு: வைரஜாதன்,
    நன்றி 'பொம்மை'
    விஜயா பப்ளிகேஷன்ஸ்,
    சென்னை.
    தினமலர் இணையதளத்தில் இப்பக்கத்திற்கான இணைப்பு

    http://www.dinamalar.com/supplementa...d=22365&ncat=2
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  7. Likes Russellmai liked this post
  8. #4
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    கதாநாயகனின் கதை - 4

    தினமலர் வாரமலர் 26.10.2014



    என்னுடைய திகைப்புக்கு இரண்டு காரணங்கள் இருந்தன. ஒன்று, இவ்வளவு சீக்கிரத்தில் எனக்கு, ' பிரமோஷன்' கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை; இரண்டு, 'பிரமோஷன்' கிடைத்தால், அது ஆண் வேடமாகத்தான் இருக்கும் என்று நம்பிக் கொண்டிருந்தேன். ஆனால், எனக்கு கிடைத்ததோ பெண் வேடம்; அதுவும் கொஞ்சம் பெரிய வேடம் என்பது தான் திகைப்புக்குக் காரணம்.
    பெரிய வேடம் என்றால், என்ன வேடம்?
    சீதையாக இருந்த நான், சூர்ப்பனகையாக்கப் பட்டேன்!
    ராமாயணத்தில் சீதையைவிட, முக்கியத்துவம் வாய்ந்த பாத்திரமல்ல சூர்ப்பனகையின் வேடம்!
    ஆனால், என்னைப் பொறுத்தவரை, சீதையை விட, சூர்ப்பனகையே முக்கியமானவராகக் காட்சி தந்தார். காரணம், அதுவரை, ராமாயணத்தில் நான் போட்டது, கன்னி மாடத்து சீதை; மூன்றே காட்சிகள்தான் வரும் என்று முன்பே குறிப்பிட்டிருக்கிறேன். இந்த கதாபாத்திரத்தில் திறமையைக் காட்டவோ, பார்வையாளர்களை கவரவோ அதிக சந்தர்ப்பம் இல்லை.
    ஆனால், சூர்ப்பனகையின் வேடம் அப்படி அல்ல, அழகு சுந்தரியாக அவள் வந்து, லட்சுமணனை மயக்க ஆடி, பாட வேண்டும்; அவனுடன் கொஞ்ச வேண்டும்; கடைசியில், லட்சுமணனிடம் மூக்கறுபட்டு, கோபத்துடன் செல்ல வேண்டும்; ஆடல், பாடல், காதல், கோபம் - இப்படி எல்லாம் நிறைந்த வேடம் அது!
    'நல்ல வேடம் எது?' என்ற கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, சீதையைவிட, சூர்ப்பனகை வேடமே பெரிது என்று தோன்றியது. அதனால் தான் சூர்ப்பனகையின் வேடத்தை எனக்கு தரப்போவதாக சொன்ன போது கொஞ்சம் பெருமையாகவும் இருந்தது.
    சாதாரணமாக, மூக்கும் முழியுமாக சிறிது லட்சணமாக இருக்கும் நடிகர்களுக்குத்தான் சூர்ப்பனகை வேடம் தரப்படும். எனவே, கம்பெனியின் பார்வையில், நானும் ஒரு அழகனாக கருதப்பட்டிருந்ததை எண்ணியபோது எனக்குப் பெருமையாகவே இருந்தது.
    நான் சூர்ப்பனகையாக நடித்த போது, லட்சுமணனாக துறையூர் நடராஜன் நடித்தார். அவருக்கு கண்கள் சற்றுப் பெரியதாக இருக்கும்; அதனால் அவரை, முண்டக்கண் நடராஜன் என்று அழைப்போம்.
    லட்சுமணனை மயக்குவதற்காக, கண்ணை ஒரு வெட்டு வெட்டி, இடுப்பை ஒரு ஒடி ஒடித்து, பாட ஆரம்பித்தால் போதும்... அந்தக் கண் வெட்டுக்கும், இடுப்பு ஒடிப்புக்குமே, 'அப்ளாசு'ம், 'ஆகா'வும் கொட்டகையில் எழும்!
    என் வாத்தியாருக்கு இதையெல்லாம் கண்டு ரொம்பவும் சந்தோஷம்; என் மீது கொஞ்சம் அதிகமாகவே பிரியம் வைக்க ஆரம்பித்தார்.
    அந்த பிரியத்தில் தான், 'அபிமன்யு சுந்தரி, பம்பாய் மெயில் மற்றும் வேதாள உலகம்' போன்ற நாடகங்களில் கதாநாயகியின் வேடம் கொடுத்து, அவற்றிற்கான பாடங்களை படிக்க வைத்து, அந்த வேடங்களை ஏற்று நடிக்க, எனக்கு சந்தர்ப்பம் தந்தார்.
    இந்தப் பாடங்களை எல்லாம் பத்து, பதினைந்து நாட்களுக்குள்ளேயே மனப்பாடம் செய்து விட்டேன்.
    பொதுவாகவே, நாடகக் கம்பெனிகளில் அப்போது ஒரு பழக்கம் உண்டு; முக்கிய நடிகர்கள் என்று சொல்லப்படுவோர் அனைவரும், அந்த நாடகக் கம்பெனி நடத்தும் நாடகங்களில் வரும் எல்லா கதாபாத்திரங்களின் வசனத்தையும் மனப்பாடம் செய்திருக்க வேண்டும். எந்த ஒரு காரணத்திலாவது, வழக்கமாக ஒரு வேடத்தைச் செய்பவர், அதைச் செய்ய இயலாமல் போய்விட்டால், நாடகம் நின்றுவிடக் கூடாதல்லவா? உடனே, யாராவது ஒருவர், அந்த வேடத்தில் நடிக்கத் தயாராக இருக்க வேண்டும் என்பதற்காகவே, இந்த முன்னேற்பாடு கடைப்பிடிக்கப்பட்டு வந்தது.
    இந்த ஏற்பாட்டின்படி, நானும் எல்லா முக்கிய வேடங்களின் பாடங்களையும் படித்து, மனப்பாடம் செய்து வைத்திருந்தேன்.
    சுருங்கச் சொல்வதானால், பெரும்பாலான நடிகர்களுக்கு, ஒவ்வொரு நாடகமும் அப்படியே மனப்பாடம் ஆகி இருக்கும்.
    ஒவ்வொரு ஊராகச் சென்று முகாமிட்டதும், கம்பெனியிலுள்ள முக்கியமானவர்கள் முதல் முக்கிய நடிகர்கள் வரை, முதல் வேலையாக அந்த ஊரிலுள்ள பெரிய மனிதர்களை, பெரிய அதிகாரிகளை தெரிந்து, அவர்களது வீட்டிற்கு நேரில் போய் பார்ப்பர்.
    'நாங்கள் உங்கள் ஊருக்கு நாடகம் நடத்த வந்திருக்கிறோம்; உங்கள் ஒத்துழைப்பையும், ஆதரவையும் தந்து எங்களை ஊக்கப்படுத்தி, கலையை வளர்க்க வேண்டுகிறோம்...' என்று பெண் வீட்டார், சம்பந்திகளை அழைப்பது போல அழைப்பர். இதனால், ஒவ்வொரு ஊரிலும் முகாமிடும்போது, அவ்வூரிலுள்ள முக்கியமானவர்களுக்கும், கம்பெனிகளுக்கும் நல்ல தொடர்பு ஏற்பட்டு விடும்.
    ஊர்ப்பெரியவர்களும், கம்பெனியில் உள்ளவர்களைக் கவுரவப்படுத்தும் வகையில், தங்கள் வீட்டுக்கு அழைத்து, விருந்து வைத்து, பரிசுகளும் கொடுத்து அனுப்புவர்.
    அந்த மாதிரி விருந்துகளுக்கு போவதென்றால், எங்களுக்குத் தனி, 'குஷி!'
    திண்டுக்கல்லில் நாங்கள் முகாமிட்டிருந்த போது, இப்படி ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது.
    திண்டுக்கல்லின் புகழை, தமிழ்நாடெங்கும் பரப்பியவர்களில், 'அங்கு விலாஸ்' புகையிலை நிறுவனரும் ஒருவர். அதன் உரிமையாளர் முத்தையா பிள்ளை, எங்கள் கம்பெனி நாடகங்களைப் பார்த்து, பெரிதும் மனமகிழ்ந்து, மேடைக்கு முன் தொங்க விடுவதற்காக, பெரிய திரைச் சீலை ஒன்றை பரிசளித்தார். வெள்ளிச் சரிகையும், ரங்கூன் டைமண்ட் கற்களும் கொண்டு, சித்திர வேலைப்பாடுகள் செய்யப்பட்டு, கவர்ச்சியுடன் விளங்கிய அந்தப் படுதாவின் விலை, அப்போதே பல ஆயிரம் ரூபாய் இருக்கும்.
    அது மட்டுமல்ல, அவரது வீட்டுக்கு எங்கள் எல்லாரையும் அழைத்துச் சென்று, ஒரு பெரிய விருந்து அளித்தார். பின்னர் வேட்டி, பைஜாமா, ஜிப்பா என்று கம்பெனியிலிருந்த நடிகர்களுக்கு புது உடைகளையும் பரிசளித்தார்.
    கம்பெனி நடிகர்களில், அவர்களது அனுபவத்திற்கும், அவசியத்திற்கும் ஏற்ப விடுமுறை தரப்படும்.
    ஒரு சமயம் கம்பெனியில் இருந்த காக்கா ராதாகிருஷ்ணன் திருச்சிக்கு போய் வந்தார். திரும்பி வந்தபோது என்னை தனியே அழைத்து, என் அண்ணன் திருஞானசம்பந்தமூர்த்தி தவறி விட்ட சோகச் செய்தியைச் சொன்னார்.
    அவர் இறப்பதற்கு முன்தினம், அவர் பக்கத்திலேயே காக்கா ராதாகிருஷ்ணன் படுத்திருந்ததாகவும், என்னைப் பற்றியும், என் கம்பெனி வாழ்க்கையைப் பற்றியும், அக்கறையுடன் அவர் விசாரித்தாக கூறினார். இதைக் கேட்டதும் நான் இடிந்து போய், கண்ணீர் விட்டேன்.
    அன்று பூராவுமே, என் மனம் ஒரு நிலையிலும் இல்லாமல் அலைபாய்ந்து கொண்டிருந்தது.
    வீட்டிலுள்ளவர்களைப் பார்க்க வேண்டும்; அதுவும் உடனடியாகப் போய் என் தாயார், அண்ணன், தம்பி, ஏன் எல்லாரையும் கண்டு பேசிவிட்டு வர வேண்டும் என்ற ஒரு ஆசை, ஏக்கம் என் நெஞ்சில் பீறிட்டு எழுந்தது.
    பிரிவின் வேதனையை, என் மனம் மீண்டும் அனுபவிக்க ஆரம்பித்து விட்டது.
    ஆனால், எப்படி, எதைச் சொல்லி விடுமுறை வாங்குவது என நினைத்த போது, கூடவே அந்த பயமும் பிடித்துக் கொண்டது.
    — தொடரும்.
    தொகுப்பு: வைரஜாதன்,
    நன்றி 'பொம்மை'
    விஜயா பப்ளிகேஷன்ஸ்,
    சென்னை.
    தினமலர் இணையதளத்தில் இப்பக்கத்திற்கான இணைப்பு

    http://www.dinamalar.com/supplementa...d=22457&ncat=2
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  9. Likes Russellmai liked this post
  10. #5
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    கதாநாயகனின் கதை - 5

    தினமலர் வாரமலர் 02.11.2014



    ஊருக்குப் போய் என் அம்மாவையும், அண்ணனையும் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டதும், கம்பெனியிலுள்ள முக்கியமானவர்களிடம் சென்றேன். என் தமையனார் இறந்து விட்டதையும், நான் ஊருக்குப் போக வேண்டிய அவசியத்தையும் எடுத்துச் சொன்னேன்.
    என் தமையனார் இறந்த செய்தியைக் கேட்டு அனுதாபப்பட்டனர்; ஆனால், ஊருக்குப் போக அனுமதி கிடைக்கவில்லை. ஏன் என்று இப்போதும் ஞாபகம் இல்லை. என் தமையனாரின் நினைவாகவே கொஞ்ச நாட்கள் இருந்தேன். நாட்கள் செல்லச் செல்ல, வேலையும் அதிகரிக்கவே, அதைக் கொஞ்ச கொஞ்சமாக மறந்துவிட்டேன்.
    புதுப் படங்கள், புதுப் புது நாடகங்கள் அடுத்தடுத்து வரவே, வேலை மும்முரத்தின் நடுவே, அந்த ஒரே சம்பவத்தை நினைத்துக் கொண்டு இருக்க முடியுமா? வீட்டிலிருந்தும் எனக்குக் கடிதம் வரவில்லை; நானும் போடவில்லை. சொல்லப் போனால், கடிதப் போக்குவரத்தின் முக்கியத்துவத்தை அப்போது நான் பரிபூரணமாகத் தெரிந்து கொள்ளவில்லை என்று சொல்லலாம்!
    கம்பெனியில் அவ்வப்போது சினிமாவுக்கு அழைத்துப் போவர். திண்டுக்கல்லில் நாங்கள் முகாமிட்டிருந்தபோது, தியேட்டருக்கு படம் பார்க்க அழைத்துச் சென்றனர். அண்ணன் சிதம்பரம் ஜெயராமன் நடித்த, கிருஷ்ணருடைய வரலாற்றுப் படம்; பெயர் எனக்குச் சரியாக நினைவில்லை. படத்தில் நிறைய பாடல் இடம் பெற்றிருந்தன. அக்காலத்தில் இப்போதுள்ளதைப் போல, 'பிளே - பாக் சிஸ்டம்' அதாவது, பின்னணியில் பாடும் முறை கிடையாது.
    படத்தில் நடிக்க வருவோருக்கு பாடத் தெரிந்திருக்க வேண்டும்; நடிக்கும் போதே பாட வேண்டும். அப்படியே, அங்கேயே ஒலிப்பதிவு செய்து விடுவர். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது... அண்ணன் சிதம்பரம் ஜெயராமன், ஒரே இடத்தில் நின்றபடியே ஒரு முழுப் பாடலைப் பாடியிருப்பார். ஒரே, 'ஷாட்'டில் இந்தப் பாட்டு முழுவதும் எடுக்கப்பட்டிருக்கும்.
    அக்காலத்துப் படங்களோடு, இப்போதுள்ள திரைப்படத் தொழில் வளர்ச்சியை எண்ணிப் பார்க்கும்போது, ஏணி வைத்தால் கூட எட்டாது.
    அந்தக் குறைவான வசதிகளைக் கொண்டு, அவர்கள் உருவாக்கிய படங்களைப் பார்க்கும் போது, பிரமிப்பு தான் ஏற்படுகிறது. படம் பார்த்து விட்டு வந்த பின், அன்று முழுவதும், நாங்கள் ஒருவருக்கொருவர் படத்தில் வந்த பாடல்களைப் பாடியபடி, அதைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தோம்.
    ஒரு ஊரைவிட்டு, இன்னொரு ஊருக்குப் போகும்போது, கடைசி நாளன்று, 'பட்டாபிஷேகம்' (ராமாயணம்) நடத்தி விட்டுத்தான் இடம் பெயர்வோம்; இதை, ஒரு வழக்கமாகவே வைத்திருந்தனர். இதே ராமாயணத்தை எத்தனை முறை நடத்தி இருந்தாலும், கடைசி நாளன்று நடக்கும் இந்த நாடகத்திற்கு நிறைய கூட்டம் வரும்.
    பொதுவாக நாடக மேடையின் முன், ஒரு படுதா தொங்கும்; இதை, நாடகம் நடக்கும்போது, அப்படியே அவிழ்த்து விடுவர்.
    சாதாரண நாட்களில் இப்படி எல்லாரும் வந்து நிற்க மாட்டார்கள். நடிகர்கள் தங்கள் காட்சியில் நடித்து முடித்த பின், உள்ளே போய்விடுவர். ஆனால், ஊரைவிட்டு கிளம்புவதற்கு முன், கடைசியாக நடத்தப்படும், 'பட்டாபிஷேகம்' நாடகத்தில், கடைசி காட்சி முடிந்ததும், எல்லா நடிகர்களும், மேடையில் அப்படியே நிற்பர். நாடகத்தில் வேலை செய்யும் மற்ற தொழில் துறை நண்பர்களும், கலைஞர்களும் கூட மேடையில் வந்து நிற்பர்.
    கடைசி நாள், 'பட்டாபிஷேகம்' நாடகம் முடிந்து, மேடைக்கு முன் தொங்கவிடப்படும் படுதா சுருட்டி கட்டப்பட்டு, மேலே இருந்து அப்படியே கீழே இறக்கப்படும். நடிகர்கள் தங்கள் கைகளைக் கூப்பி வணக்கம் சொல்வர். சில நடிகர்களுக்கு பரிசுகளும் கிடைக்கும்; மாலையும் போடுவர்.
    கம்பெனிக்கு நிறைய வெள்ளிக் கோப்பைகளும், பரிசுகளும் கிடைக்கும். அன்று எங்களுக்குக் கொண்டாட்டம் தான்!
    கம்பெனி ஊரை விட்டுப் புறப்படுவதற்கு சில நாட்கள் ஆகும்; மூட்டைகளையெல்லாம் கட்ட வேண்டாமா?
    அப்படிப்பட்ட நாட்களில் வழக்கம் போல பாடம் படிப்பது, பாட்டு சொல்லிக் கொள்வது, நடனப் பயிற்சி போன்றவை இருக்காது. விடியற்காலையில் எழுந்திருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு இல்லாமல், அவரவர் இஷ்டப்படி, சுதந்திரமாக இரண்டு, மூன்று நாட்களுக்கு விடப்படுவர். இம்மாதிரியான சந்தர்ப்பங்களில், கம்பெனியில் உள்ளவர்கள் ஊரைச் சுற்றிப் பார்ப்பதோ, அல்லது அக்கம் பக்கத்திலுள்ள உறவினர்களைப் பார்ப்பதற்கோ செல்வர்.
    நாங்கள் ஒரு சிலர் சேர்ந்து, திண்டுக்கல் மலை மீதுள்ள கோட்டைக்குச் சென்றோம். அங்கிருந்த ஒருவர், 'இதுதான் ஊமையன் கோட்டை; இங்க தான் அவன், வெள்ளைக்காரர்களை எதிர்த்து சண்டை போட்டான்...' என்றெல்லாம் கூறினார்.
    அதைக் கேட்க கேட்க, எனக்கு உடல் புல்லரித்தது.
    'கட்டபொம்மன்' நாடகத்தைப் பார்த்துத் தான், நான் நடிப்புத் துறையில் ஈடுபட்டேன். அந்த, கட்டபொம்மனின் வலது கையாக விளங்கி வந்த ஊமைத்துரையின் கோட்டையில் நின்று, அவனது வீர பிரதாபங்களைக் கேட்ட போது, என்னை அறியாமலேயே, ஒரு சந்தோஷ உணர்ச்சி ஏற்பட்டது.
    பல ஆண்டுகளுக்குப் பின், எங்கள் நாடகக் குழுவின் சார்பில், கட்ட பொம்மன் நாடகத்தை நடத்த முனைந்த போது, அது, ஊமையன் கோட்டையும் இல்லை; ஊமைத்துரை அந்தப் பக்கம் கூட வரவில்லை என்பதை, தெரிந்து கொண்டேன்.
    எங்களது அடுத்த முகாம், பழனி - திண்டுக்கல்லில் இருந்து நடிகர்கள் அனைவரும் பஸ்சிலேயும், நாடக பொருட்கள் லாரிலேயும் வந்தன.
    இங்கே, முதன் முதலில்,'கிருஷ்ணலீலா' நாடகத்தை தான் நடத்தினோம்.
    இதில் யசோதை, ருக்மணி, பூதகி, நடனமாடும் கோபிகைப் பெண் - இப்படி பல வேடங்களை, நான் மாறி மாறிப் போடுவேன்.
    ஒரு நாள், 'கிருஷ்ணலீலா' நாடகத்தின் போது, ஒரு சுவையான சம்பவம் நடைபெற்றது. அன்று, நான், பூதகி வேடம் போட்டிருந்தேன்.
    தன் எதிரியாக வளர்ந்து வரும் கிருஷ்ணனைக் கொல்ல, கம்சன், தன் தங்கையான பூதகியை அழைத்து, விஷப்பால் கொடுத்து, கிருஷ்ணனைக் கொன்று விடும்படி கூறுகிறான்.
    கோர ரூபம் படைத்த அந்த பூதகி, கிருஷ்ணனைத் தேடிப் புறப்பட்டு வருவாள்.
    வரும் வழியில், நாரதர் அவளைப் பார்த்து,'எங்கே போகிறாய் பூதகி?' என்று கேட்பார்.
    பூதகி விஷயத்தைச் சொன்னதும், அதைக் கேட்டு சிரிப்பார் நாரதர்.
    'ஏன் சிரிக்கிறாய் நாரதா?' என்று பூதகி கேட்க, நாரதர், 'இந்த கோர உருவத்துடன் போனால் எந்தக் குழந்தை உன்னிடம் நெருங்கி வரும்? அழகான உருவத்துடன் போனால் தானே குழந்தைகள் உன்னிடம் ஆசையோடு ஓடி வரும்...' என்று சொல்வார்.
    'உண்மைதான் நாரதா! இப்போதே நான், அழகான பூதகியாக மாறுகிறேன்...' என்று கோர பூதகி சொல்வாள்.
    அப்போது மேடையில் விளக்கு அணையும். கோர பூதகி வேடம் போட்டவர் உள்ளே சென்று விடுவார்; அழகியான பூதகி வேடம் போட்டவர், வந்து நிற்பார்.
    மீண்டும் விளக்கு எரியும். கோரபூதகி இருந்த இடத்தில், அழகான பூதகியை கண்டதும் மக்கள் மத்தியில் ஒரு ஆரவாரம் எழும்.
    இவ்வளவும் கண் இமைக்கும் நேரத்தில் நடந்து விடும். கோர பூதகியாக மாதவ அய்யர் வேடம் போடுவார். அவர், ரொம்பவும் சீனியர்; எங்களுக்கு நடனம் சொல்லித் தருவார்.
    விளக்கு அணைந்ததுமே, அவர் தன் தலையிலுள்ள டோப்பாவைக் கழற்றிய படியே உள்ளே போய் விடுவார்; இது வழக்கம்.
    மேடையிலே பக்கவாட்டில் இரண்டு பக்கமும் வழிகள் இருக்கும். அதன் வழியாகத்தான் அவர் உள்ளே போவார்; எல்லாருக்கும் அதுதான் வழி!
    குறிப்பிட்ட தினம், இந்த மாதிரி பக்கவாட்டில் நுழைந்து, உள்ளே செல்வதற்குப் பதிலாக, மாதவ அய்யர், முன் பக்கம் பக்கவாட்டில், எங்கள் கம்பெனிக்குக் கிடைத்துள்ள பதக்கங்கள், கோப்பைகள் இவை எல்லாம் அலங்காரமாக வைக்கப்பட்டிருக்கும் இடத்தில் வந்து நின்று விட்டார்.
    விளக்கு மீண்டும் எரிந்த போது, கையில் டோப்பாவுடன் நின்ற மாதவ அய்யரையும், அழகான பூதகியாக நின்ற என்னையும் பார்த்த போது, பார்வையாளர்கள் சிரித்து, ஆரவாரம் செய்தனர்.
    மாதவ அய்யர் உள்ளே ஓடிவிட்டார்.
    — தொடரும்.

    தொகுப்பு: வைரஜாதன்,
    நன்றி 'பொம்மை'விஜயா பப்ளிகேஷன்ஸ்,
    சென்னை.
    தினமலர் இணையதளத்தில் இப்பக்கத்திற்கான இணைப்பு

    http://www.dinamalar.com/supplementa...d=22547&ncat=2
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  11. Likes kalnayak, Russellmai liked this post
  12. #6
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    கதாநாயகனின் கதை - 6

    தினமலர் வாரமலர் 09.11.2014



    பழனியில் மூன்று மாதங்கள் தங்கி இருந்தோம்.
    'கிருஷ்ணலீலா' தவிர, 'ராமாயணம், பவளக்கொடி, பதி பக்தி மற்றும் கதரின் வெற்றி' போன்ற நாடகங்களையும் இங்கு நடத்தினோம். இந்த நாடகங்களில் எல்லாம் எனக்கு வேடம் உண்டு.
    'பதி பக்தி'யில், கதாநாயகனின் சகோதரியாக நடிப்பேன். 'கதரின் வெற்றி'யில் இரண்டு சிறுவர்கள் வருவர்; அவர்களில் ஒருவனாக வருவேன். 'பவளக்கொடி'யில் சில சமயம் பவளக்கொடியாகவும் நடிப்பேன்.
    பழனியில் இருந்தபோது தான், என் தாயாரிடமிருந்து கடிதம் வந்தது. அக்கடிதத்தைப் பார்த்ததும், என் தாயைப் பார்ப்பது போலவே இருந்தது. பாசத்தையும், என் பிரிவின் ஏக்கத்தையும், கடிதத்தின் வாசகங்களில் தேக்கி எழுதி இருந்தார்.
    என் நலனைப் பற்றி அக்கறையுடன் விசாரித்து, 'எப்போது ஊருக்கு வருகிறாய்?' என்று கேட்டு எழுதியிருந்தார்.
    'ஊருக்கு எப்போது வருவேன் என்று எனக்கே தெரியாது...' என்று பதில் போட்டேன்.
    தவிர, ஊருக்குப் போக வேண்டும் என்ற ஆர்வத்தைவிட, நடிப்பிலும், பாடங்களிலும் தான் எனக்கு அதிக அக்கறையும், ஆர்வமும் அப்போது இருந்தது.
    அப்படியானால், 'குடும்பப் பாசமே உங்களுக்கு இல்லையா?' என்று கேட்காதீர்கள்.
    அதுவும் இருந்தது; அதைவிட தொழிலில் இருந்த கவனமே வென்றது.
    எங்களது அடுத்த முகாம் - மதுரை!
    மதுரையில் பிரமாண்டமான முறையில், 'கிருஷ்ண லீலா' நாடகத்தை நடத்த ஆரம்பித்தோம். பழைய கோல்டன் கம்பெனியிலிருந்து சீன், செட்டிங் மற்ற எல்லா பொருட்களையும் வாங்கி இருந்தோம்.
    நாடகத்தில் ஒவ்வொரு காட்சியும் பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தும்படி இருக்கும்.
    இந்த நாடகத்தில், வைகுண்டத்தின் கதவுகள் திறக்கும் காட்சியை பார்ப்பதற்காகவே, மக்கள் அடிக்கடி வருவர்; இக்காட்சிக்காக, பிரமாண்டமான கதவுகள் இருக்கும்.
    ஒரு நாளைக்கு இரு காட்சிகள் வீதம், மூன்று மாதம், 'கிருஷ்ண லீலா' நாடகம் மதுரையில் நடந்தது.
    மதுரையில் கம்பெனி முகாமிட்டிருந்த காலத்தை பொற்காலம் என்றே சொல்லலாம். பாலும், தேனும் கம்பெனியில் ஆறாக ஓடிய காலம் அது. தாராளமாக செலவு செய்தனர். அப்படிச் செலவு செய்யும் அளவுக்கு, வசூலாகி, நிறைய வருமானமும் வந்தது.
    இவ்வளவு சிறப்பாக கம்பெனி நடந்து கொண்டிருந்த போது தான், இரண்டு துயரமான சம்பவங்கள் நடைபெற்றன. 'கிருஷ்ண லீலா'வில் ஒரு காட்சி - கம்சன் தன் தங்கை தேவகியின் திருமணத்தை மிகச் சிறப்பாகக் கொண்டாடி விட்டு, தங்கையையும், தன் மைத்துனனையும் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் ஏற்றிக் கொண்டு வருவான்.
    அப்படி வரும்போது, ஆகாயத்திலிருந்து, 'கம்சா... உன் தங்கையின் வயிற்றில் பிறக்கும் எட்டாவது குழந்தையால் உன் உயிருக்கு ஆபத்து வரப் போகிறது...' என்று அசரீரி ஒலிக்கும்.
    இக்காட்சியை, தந்திரக் காட்சியாக அமைத் திருந்தனர்.
    கம்சன் ரதத்தை ஓட்டி வரும்போது மின்னல் ஒன்று பளிச்சிடும்; உடனே மேடைக்கு மேலே தலை மாதிரி ஓர் உருவம் வரும். அதன் பின், நட்சத்திரம் ஒன்று சுழன்று கொண்டே இருக்கும்; அதிலிருந்து குரல் வரும்.
    மக்கள் இக்காட்சி வரும்போது கைதட்டி, தங்கள் ஆச்சரியத்தையும், மகிழ்ச்சியையும் வெளிப்படுத்துவர்.
    அன்று, அந்த நட்சத்திரம் சுற்றவில்லை. எங்கள் கம்பெனியில் சுப்பையா என்பவர்தான் எலக்ட்ரீஷியன்; மின்சாரம் சம்பந்தப்பட்ட எல்லா வேலைகளையும் அவர்தான் செய்வார்.
    நட்சத்திரம் சுற்றாமல் இருப்பதைக் கண்ட அவர், உடனே மேடை மீதுள்ள உத்தரத்திற்குத் தாவி, அதைச் சுற்ற முயன்றார். அவ்வளவுதான்! மின்சாரம் பாய்ந்து விட்டது. அங்கேயே தலைகீழாக, வவ்வாலைப் போல தொங்கி விட்டார்.
    அப்போது, பிரபல ஹாஸ்ய நடிகர் எம்.ஈ. மாதவன், எங்கள் கம்பெனியில் இருந்தார். அவர் வாத்தியக்காரர்கள் வாசிக்கும் இடத்தில் உட்கார்ந்திருந்தார்.
    மின்சாரம் பாய்ந்து சுப்பையா தலை கீழாக தொங்குவதைப் பார்த்த அவர், உடனே ஓடிப் போய், 'மெயின் ஸ்விட்சை' அணைத்து விட்டார்.
    சுப்பையாவை கீழே இறக்கி என்னவெல்லாமோ சிகிச்சை செய்து பார்த்தோம்; சுப்பையா பிழைக்கவே இல்லை.
    சுப்பையா இறந்த மறுநாள், எங்களில் யாருக்கும் வேலையே ஓடவில்லை.
    இந்த ஏக்கம், எங்கள் கம்பெனி நடிகர்களிடையே எந்த அளவுக்கு ஆழமாக இருந்தது என்பதற்கு மற்றொரு சோகமான சம்பவத்தையும் சொல்கிறேன்.
    கேரளாவை சேர்ந்த ஒரு பையன் எங்கள் கம்பெனியில் இருந்தான். சிவப்பாக, அழகாக இருப்பான்.
    பெண் வேடத்தில் மேடையில் நடனம் ஆடுவான் பாருங்கள்... ஆகா... அழகு அப்படியே சொட்டும்!
    ஒரு நாள் நாடகம் முடிந்த பின், நாங்கள் எல்லாரும் தூங்கிக் கொண்டு இருந்தோம்.
    இந்தப் பையன் தூக்கத்திலிருந்து எழுந்து, பிரமை பிடித்தவன் போல் தோட்டத்துப் பக்கம் சென்றிருக்கிறான்.
    எங்களை கவனித்துக் கொள்ள ஒரு பயில்வான் இருப்பார்; அவர் தோட்டத்துப் பக்கத்தில் படுத்திருப்பார்.
    இந்த பையன் வரும் சத்தத்தைக் கேட்டு விழித்துக் கொண்ட பயில்வான், அவனை நிறுத்தி, 'எங்கேடா போறே?' என்று கேட்டார்.
    அவன், 'சுப்பையா கூப்பிடுறாரு; நான் போறேன்...' என்று பதில் சொன்னான்.
    'சுப்பையாதான் செத்துப் போயிட் டானே... நீ வா, உள்ளே போய் படுக்கலாம்...' என்று சொல்லி, அவனை அழைத்து வந்து, படுக்க வைத்தார் பயில்வான்.
    அன்று படுத்தவன், மீண்டும் எழுந்திருக்கவே இல்லை.
    சுப்பையாவின் மரணத்தினால் ஏற்பட்ட அதிர்ச்சி, அவனை இரண்டு நாட்கள் வரை படுக்கையில் கிடத்தி, மூன்றாம் நாள் சுப்பையாவிடமே சேர்த்து விட்டது.
    இதை ஏன் இங்கே சொல்கிறேன் என்றால், ஜாதி, மதம், பணக்காரன், ஏழை என்ற வித்தியாசமில்லாமல் வளர்ந்தது தான் இதற்கு காரணம். இந்த பாரபட்சமற்ற மனநிலையை குருகுல வாசம் எங்களுக்கு கற்றுத் தந்தது.
    அதனால் தான் இன்றும் அதே எண்ணத்துடன் என்னால் இருக்க முடிகிறது.

    இவ்வளவு சீரும், சிறப்புமாக மதுரையில் நாடகம் நடத்திவிட்டு, மேலூர் வந்து சேர்ந்தோம்.
    மேலூரில் காலடி எடுத்து வைத்ததும், மதுரைக்கு நேர் மாறாக, வறுமைதான் எங்களை வரவேற்க காத்திருந்தது.
    அந்த ஊரில் கீற்றுக் கொட்டகையைப் போட்டு, எங்கள் சொந்த, ஜெனரேட்டரை வைத்து மின்சாரத்தை உண்டாக்கி, நாடகம் நடத்த ஆரம்பித்தோம்.
    ஊரில் மக்களைவிட தேள், நட்டுவாக்காளி, பாம்பு இவைதான் அதிகம். தலையில் வைக்க டோப்பாவை, மாட்டிய இடத்திலிருந்து எடுத்தால், அதில் இரண்டு தேள் இருக்கும். ஆனால், நல்ல வேளை, மேலூரில் நாங்கள் இருந்த வரை இந்த விஷ ஜந்துக்கள், எங்களை ஒன்றும் செய்யவில்லை.
    இந்த நிலையில் நாங்கள் கஷ்டப்பட்டு நாடகம் நடத்தியும் வசூல் கிடைக்கவில்லை.
    ஒரு நாளைக்கு, ஒரு வேளை சோறு என்ற நிலைமை கூட மாறி, பல நாட்கள், வெறும் மோர் சாதம் மட்டுமே சாப்பிட்டு, இங்கு காலத்தை ஓட்டினோம்.
    ஆனால், அப்படி இருந்தும் வறுமையின் கொடுமையோ, பசியின் வேகமோ எங்களுக்கு தோன்றியதில்லை. ஒரே நினைப்புடன், அதாவது நடிப்பது என்ற ஒரே எண்ணத்துடன் சிறுவர்களாகிய நாங்கள் எல்லாரும் பழகி வந்ததுதான் இதற்கு காரணமாக இருக்கும்.
    எங்களின் அடுத்த முகாம் பரமக்குடி அங்கு...
    — தொடரும்.

    தொகுப்பு: வைரஜாதன்,
    நன்றி 'பொம்மை'
    விஜயா பப்ளிகேஷன்ஸ்,
    சென்னை.
    தினமலர் இணையதளத்தில் இப்பக்கத்திற்கான இணைப்பு
    http://www.dinamalar.com/supplementa...d=22623&ncat=2
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  13. Likes Russellmai liked this post
  14. #7
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    is that all ?

  15. #8
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    கதாநாயகனின் கதை - 7

    தினமலர் வாரமலர் 7 - 16.11.2014



    எங்கள் நாடகக் கம்பெனி பரமக்குடிக்கு சென்றிருந்த காலத்தில் தான், சினிமாவில் நடிக்கப் போன ராதா அண்ணன், மீண்டும் எங்கள் கம்பெனிக்கு வந்து சேர்ந்தார்.
    ராதா அண்ணன் வந்ததும், எல்லாருக்கும் உற்சாகம் வந்துவிட்டது. கம்பெனிக்கே ஒரு தனி வேகம் வந்து விட்டது என்று சொல்லலாம்.
    ராதா அண்ணன் என் மீது ரொம்பவும் பிரியமாக இருப்பார்.
    கொஞ்சம் பெரிய பையன்களை வைத்து, கம்பெனியில் உள்ள மற்ற பிள்ளைகளைக் குளிப்பாட்டுவது, தலை வாரி, டிரஸ் செய்து விடுவது அவரது வேலை. அவரது தலைமையில் கம்பெனியில், உள்ள பிள்ளைகள் பாத்ரூமை சுத்தப்படுத்துவர். எங்களுக்கெல்லாம் ஒரு தளபதி மாதிரி இருப்பார்.
    நடிகர்களிலேயே ராதா அண்ணனைப் போன்ற திறமைசாலியை நான் பார்த்ததில்லை. அவருக்கு மிக நன்றாக நடிக்கத் தெரியும் என்பது மட்டுமல்ல, வேறு பல வேலைகளிலும் அவர் நிபுணராக விளங்கினார். மின்சாரம் சம்பந்தமான, நுணுக்கமான வேலைகளிலும், ரேடியோவைப் பழுது பார்க்கும் கலையிலும் வல்லவர். பம்புசெட், இன்னும் பல கருவிகளையும் நொடியில் பழுது பார்த்து, சரிசெய்து விடுவார்.
    மின்சாரத்தினால் இயங்கும் உபகரணங்களை புதிது புதிதாக அமைத்து, நாடகத்திற்கான தந்திரக் காட்சிகளை அமைத்துக் கொடுப்பார்.
    ராதா அண்ணன் அதிகம் படிக்காதவர் என்றாலும், ஒரு விஷயத்தை ஒரு முறை சொன்னால் போதும், அதை அப்படியே மனதில் பதிய வைத்து, அதை மேலும் விரிவுபடுத்தி, மெருகு கொடுத்து அழகாகச் சொல்லி விடுவார்.
    ஒவ்வொரு நாளும் பத்திரிகைகளைப் படிக்கச் சொல்லிக் கேட்பார். காலையிலோ, பிற்பகலிலோ அவர் ஓய்வில் படுத்திருக்கும்போது, தலைமாட்டில் உட்கார்ந்து, நான் தான் பத்திரிகைகளை படிப்பேன்.
    'அது அப்படி இருக்கும்; அதனால்தான் இப்படி ஆயிற்று...' என்று ஒவ்வொரு செய்தியையும் படித்து முடித்த தும், விமர்சனம் செய்வார்.

    கம்பெனியில் அவர் மீண்டும் வந்து சேர்ந்தபோது, நடித்த முதல் நாடகம், 'லட்சுமி காந்தன்!'
    இதில், சிங்கக் குட்டி கோவிந்தன் என்ற வேடத்தை ஏற்று அவர் நடித்த நடிப்பு இருக்கே... அப்பப்பா... என்ன ஒரு நடிப்பு! இன்று நினைத்தாலும் என் கண் முன் அவரது நடிப்பு அப்படியே நிழலாடுகிறது. அவ்வளவு அற்புதமாக காமெடி செய்திருப்பார்.
    அடுத்தது, 'பதிபக்தி!'
    இதில், வில்லன் கங்காதரனாக வருவார்.
    பார்ப்போர் பயப்படும்படியாக அவ்வளவு அற்புதமாக நடித்திருப்பார். இந்நாடகத்தில், சரஸ்வதி என்ற பெண்ணாக வருவேன்.
    ஒரு காட்சியில் அவர் முடியைப் பிடித்து உலுக்கி, கீழே தள்ளி, அவரை நான் மிதிக்க வேண்டும்.
    நன்றாக மிதிக்கச் சொல்வார். நான் மெதுவாக மிதித்தால், 'நல்லா மிதிடா...' என்று, என் காதுக்கு மட்டும் கேட்கும்படி மிரட்டுவார். தலைமுடியைப் பிடித்து எப்படி உலுக்க வேண்டும் என்று அவரே சொல்லித் தருவார். சரியாகச் செய்யாவிட்டால், மேடையிலேயே யாருக்கும் தெரியாத வகையில் அடியும் கொடுப்பார்.
    மேடையில் சண்டைக் காட்சிகளை அந்தக் காலத்திலேயே மிகவும் விறுவிறுப்பாகவும், கவர்ச்சியாகவும் அமைத்தவர் ராதா அண்ணன். இந்த சண்டைக் காட்சிகளில் உண்மையிலேயே அவர் நிறைய அடி வாங்குவார்; சில சமயம் கொடுக்கவும் செய்வார். அம்மாதிரி ஒரு நாள் நடிக்கப் போய், அவரது பல் உடைந்து விட்டது. அவ்வளவு தத்ரூபமாக நடிப்பார்.
    ராதா அண்ணனின், சண்டைக் காட்சிகளை பார்ப் பதற்காகவே நிறைய பேர் வருவர்; அதனால், நாடகத்திற்கு அதிக வசூல் கிடைக்கும்.

    பரமக்குடியில்,'ராமாயணம்' நாடகம் அடிக்கடி நடக்கும். எத்தனை முறை, 'ராமாயணம்' நாடகம் போட்டாலும் நல்ல கூட்டம் வரும்; பார்த்தவர்களே திரும்பத் திரும்ப வந்து பார்த்ததால், நல்ல வசூலும் கிடைத்தது.
    பெரும்பாலும் இரவு, 9:00 மணிக்கு மேல் தான் நாடகம் ஆரம்பமாகும். இரவு ஆரம்பித்தால், விடியற்காலை வரை நடக்கும். மக்கள் இடையில் எழுந்து போகாமல், தூங்கி வழியாமல், ஆர்வத்துடன் பார்ப்பர்.
    நாடகம் முடிந்ததும் காலை, 6:00 அல்லது 6:30 மணிக்கு, எல்லாரும் வைகை ஆற்றுக்குப் சென்று, தலை நிறைய எண்ணெய் வைத்து, வைகை படுகையில் ஊற்றுத் தோண்டி, தண்ணீர் வரவழைத்து குளிப்போம். அவ்வளவு சுகமாக இருக்கும்; இரவு கண் விழித்து நடித்த களைப்பெல்லாம் பறந்து விடும்.
    அக்காட்சிகள் என் மனதில் அப்படியே பதிந்து விட்டன; சில சமயம், இவை எல்லாம் கனவு போல் தோன்றுவதும் உண்டு.
    இந்நேரத்தில் கம்பெனியில், 'தேச பக்தி' என்ற பெயரில், நாடகம் நடத்தினோம்.
    தேச பக்தி உணர்வை தூண்டக் கூடிய வகையிலும், குறிப்பாக காங்கிரசின் லட்சியங் களையும், மகாத்மா காந்தியின் கொள்கைகளை விளக்கும் விதமாக அமைந்த நாடகம் இது. நாட்டில் பெரும் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்திய, 'கதர் இயக்கம்' அப்போது தான் நடந்தது.
    இந்நாடகத்தில் ஒரு காட்சியில், சிறுவர்களாகிய நாங்கள், கதர்க்கொடியுடன் மேடைக்கு வந்து, 'வந்தே மாதரம்' என்று குரல் கொடுப்போம்.
    நாங்கள், சொல்லி முடித்த மறு நிமிஷமே, நாடகம் பார்க்க வந்த நூற்றுக்கணக்கான மக்களும், 'வந்தே மாதரம்' என்று உரத்த குரலில் முழங்குவர். கொட்டகையே, 'கிடுகிடு'க்கும்!
    அடுத்ததாக,'மகாத்மா காந்திக்கு' என்று சொல்லி முடிக்கும் முன், 'ஜே' என்று இடி முழக்கம் எதிரொலிக்கும்.
    அப்போது உடல் புல்லரித்து, இனம் தெரியாத ஒரு வேகம், ஆவேசம் எங்களுக்குள் ஏற்படும்.
    'தேச பக்தியே தங்கள் லட்சியம்...' என்று மக்கள் நினைத்துக் கொண்டிருந்த நேரம் அது! ஒவ்வொரு நாடகத்திற்கும் வெள்ளம் போல் மக்கள் திரண்டு விடுவர்.
    பரமக்குடியில் நடத்திய எல்லா நாடகங்களுக்குமே, பொதுமக்களிடையே பெரும் ஆதரவு கிடைத்தது.
    கம்பெனிக்கும் நல்ல பெயர்; நல்ல வருமானம்; எல்லாருக்குமே பெரும் மகிழ்ச்சி.
    'தேச பக்தி' நாடகத்தைப் பார்க்க, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அடிக்கடி வந்ததாக நினைவு.
    தேச பக்தி உணர்வுடன் அவர், கலை ஆர்வமும், கலை வளர்ச்சியில் பெரும் அக்கறையும் உள்ளவர்.
    — தொடரும்.

    தொகுப்பு: வைரஜாதன்,
    நன்றி 'பொம்மை'
    விஜயா பப்ளிகேஷன்ஸ்,
    சென்னை.
    நன்றி - தினமலர்

    தினமலர் இணையதளத்தில் இப்பக்கத்திற்கான இணைப்பு

    http://www.dinamalar.com/supplementa...d=22715&ncat=2
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  16. Likes Russellmai liked this post
  17. #9
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    கதாநாயகனின் கதை - 8

    தினமலர் வாரமலர் 23.11.2014

    பரமக்குடியிலிருந்து, மதியம், 3:00 மணிக்கு, ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் கிளம்பும். எங்கள் முகாமை பரமக்குடியில் முடித்து, சேலம் போக, அந்த எக்ஸ்பிரசில் ஏறினோம்.
    திருச்சிக்கு, இரவு, 10:30 மணிக்கு வண்டி வந்து சேர்ந்தது.
    அன்றிரவு, திருச்சியில் உள்ள சின்னய்யா பிள்ளை சத்திரத்தில் தங்கினோம்.
    மறுநாள் திருச்சியிலிருந்து பஸ்சில் கிளம்பி, சேலம் போய் சேர்ந்தோம். சேலத்தில் நியூ ஓரியண்டல் தியேட்டர்ஸ் (பின்னாளில் அது, 'நியூ சினிமா'வாக மாறிவிட்டது) கொட்டகையில், எங்கள் நாடகங்களை நடத்த ஆரம்பித்தோம்.
    'இந்தியன் டக்லஸ்' ('டக்லஸ் பேர் பாங்க்ஸ்' - புகழ் பெற்ற அமெரிக்க நடிகர்) எம்.ஆர்.ராதா நடிக்கும், 'இழந்த காதல்' நாடகம் நடைபெறும் என்று விளம்பரப்படுத்தி, முதல் நாடகத்தை ஆரம்பித்தோம். ஆறு மாதங்கள் இந்த நாடகம் அங்கு நடைபெற்றது.
    இப்போது படங்களில் வரும் முக்கிய காட்சிகளை படம் எடுத்து, 'போஸ்டர்' வைப்பதைப் போல, 'இழந்த காதல்' நாடகத்திற்காக முதன் முதலாக புகைப்படங்கள் எடுத்து, 'போஸ்டர்' வைத்திருந்தனர். இம்மாதிரி ஒரு நாடகத்தில் வரும் முக்கிய காட்சிகளை புகைப்படமெடுத்து, 'போஸ்டர்' வைத்தது, இதில் தான் என்று நினைக்கிறேன். 'இழந்த காதல்' தவிர, எங்கள் கம்பெனியின் மற்ற எந்த நாடகங்களுக்கும் இம்மாதிரி செய்யவில்லை.
    எங்கள் கம்பெனி நாடகங்களில் மாயாஜால தந்திரக் காட்சிகள் அவ்வளவாக இருக்காது. கதையும், நடிப்பும் தான் நாடகங்களுக்கு ஜீவன்.
    எம்.ஆர்.ராதா, கே.டி.சந்தானம், எம்.ஈ.மாதவன், சி.எஸ்.பாண்டியன், டி.கே.சம்பங்கி, காகா ராதா கிருஷ்ணன் போன்ற பல திறமை வாய்ந்த நடிகர்கள் கம்பெனியில் இருந்தனர். கே.டி.சந்தானம் நாடகத்திற்குரிய பாடங்களையும், நடிப்பையும் சொல்லித் தரும் ஆசிரியராக இருந்தார்.
    கம்பெனி நிர்வாகத்தை ராமசுப்பைய்யர் கவனித்து வந்தார். எங்கள் தலைமுறைக்கு முந்தி, ஜகந்நாதய்யர் கம்பெனி என்று ஒரு பிரபல நாடகக் கம்பெனி இருந்தது.
    அந்நாளில் புகழ் பெற்று விளங்கிய கண்ணையா கம்பெனியுடன், இந்த ஜகந்நாதய்யர் கம்பெனியையும் ஒப்பிட்டுச் சொல்வர்.
    அந்த ஜகந்நாதய்யருடைய மகன் தான் ராமசுப்பைய்யர். நிர்வாகத்திலும், கண்டிப்பிலும் எப்படியோ, அப்படியே அன்பை பொழிவதிலும்!
    'இழந்த காதல்' நாடகத்தில், கம்பெனியில் இருந்த பாதி பேருக்கு வேலை இல்லை. இதனால், அய்யர், ஒரு சாமர்த்தியமான வேலை செய்தார்.
    வேலை இல்லாமல் நடிகர்களை வைத்து பராமரிப்பது கம்பெனிக்கும் நஷ்டம், நடிகர்களிடையேயும் ஒருவித சலிப்பை ஏற்படுத்திவிடக் கூடும் என்பதை உணர்ந்து, வேலை இல்லாத நடிகர்களை எல்லாம் ஒன்றாகச் சேர்த்து, மதுரை ஸ்ரீ பால கான சபாவின் கிளையாக, ஒரு தனிக் கம்பெனியை ஏற்படுத்தி, சேலம் சுற்று வட்டார ஊர்களில் நாடகம் நடத்த ஆரம்பித்தார் ராமசுப்பைய்யர்.
    கிளைக் கம்பெனிக்கும் இதே பெயர் தான். கிளைக் கம்பெனியில், நானும் சேர்த்துக் கொள்ளப்பட்டேன். எங்கள் முதல் முகாம், நாமக்கல்.
    வழக்கம் போல, 'ராமாயணம், லவகுசா, கள்வர் தலைவன், வேதாள உலகம், தேசபக்தி மற்றும் கதரின் வெற்றி' என, பல நாடகங்களில் நடித்தோம்.
    நாமக்கல்லில் ஒரு மாதம் நாடகம் நடத்தினோம். அங்கே முகாமிட்டிருந்த போது தான், நாடக உலகில் தனிப் பெரும் புகழ் பெற்றிருந்த, சாமண்ணா அய்யரை சந்தித்தேன்.
    எங்களுடைய நாடகம் இல்லாத நாட்களில், நாமக்கல்லில் உள்ள அதே கொட்டகையில், சாமண்ணா அய்யரின் ஸ்பெஷல் நாடகங்கள் நடைபெறும்.
    'டம்பாச்சாரி' நாடகத்தில் ஒன்பது விதமான வேடங்களில் அற்புதமாக நடித்திருப்பார் அய்யர். அம்மாதிரி பல தரப்பட்ட வேடங்களை ஒரே நாடகத்தில் செய்ய வேண்டும் என்ற ஆசை, என் உள்ளத்திலும் துளிர் விட்டது. ஆனால், 'அது சாத்தியமா...' என்ற கேள்வியும் எழுந்தது. அன்றைய நிலையில் என்னால் அப்படித்தான் நினைக்க முடிந்தது.
    பல ஆண்டுகளுக்குப் பின், நவராத்திரியில் ஒன்பது வேடங்களை ஏற்று நடித்த போது தான், அன்றைய கேள்விக்கான, பதில் கிடைத்தது.
    நாமக்கல்லை அடுத்து, ராசிபுரம் சென்றோம்.
    சந்தை திடலுக்கு எதிர்வாக்கில் உள்ள கொட்டகையில் தான் எங்கள் நாடகங்கள் நடந்தன.
    பொதுவாக கம்பெனி நடிகர்கள் தங்கி இருக்கும் வீட்டுக்கும், நாடகம் நடக்கும் கொட்டகைக்கும் எட்டு கி.மீ., துாரம் இருக்கும்.
    ஆறு வயதிலிருந்து, இருபது வயது வரை உள்ள பையன்கள், எங்கள் கம்பெனியில் நடிகர்களாக இருந்தனர். அவர்கள் அனைவரும் ஒரே மாதிரியான உடை அணிந்து, உயரத்திற்கு ஏற்றபடி அடுத்தடுத்து நின்று, வரிசையாக கம்பெனி வீட்டிலிருந்து நாடகக் கொட்டகைக்கு அழைத்துச் செல்லப்படுவர். கட்டுப்பாட்டுடன் இப்படி நாங்கள் நடந்து செல்வதைப் பார்க்க, வீட்டுக்கு வெளியே வருவர் ஊர் மக்கள்.
    ராசிபுரத்துக்கு அடுத்தபடி நாங்கள் வந்தது தர்மபுரி. இங்கு விசேஷமாகக் குறிப்பிடும்படி எதுவும் இல்லை.
    ராமசுப்பைய்யர் மிகவும் கண்டிப்பானவர் என்று சொன்னேன் அல்லவா? அவர் எங்களிடம் காட்டிய அன்பையும் குறிப்பிட வேண்டும்.
    மாதத்தில் ஒரு முறை, எங்கள் அனைவருக்கும் பேதி மருந்து சாப்பிடக் கொடுப்பார். அதற்காக எண்ணெய் கொடுக்கும் நாளில், அண்டா நிறைய ரசம் வைக்கச் சொல்வார். அன்று மாலை வரை, வயிற்றுக்கு ஒன்றும் தர மாட்டார்.
    இப்படி பையன்களை ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்து செயலாற்றிய அந்த நல்ல உள்ளத்தை, உயர்ந்த மனிதரை, சாகும் வரை மறக்க முடியாது.
    என்ன கேட்டாலும் கொடுப்பார். வயிறாரச் சோறு போட்டு, துணிமணி வாங்கிக் கொடுத்து, தேவைக்குப் பணம் தந்து, வாழத் தொழிலும் கற்றுக் கொடுத்தார்; அதேசமயம் கண்டிப்புடனும் இருந்தார். அதுவும் தொழிலில் மிகவும் கண்டிப்பு. சரியாகப் பாடத்தைச் சொல்லாவிட்டால், அவ்வளவு தான்! பிரம்படி தான் பரிசு!
    முதலில் பாடம் சொல்லி தந்தவுடன், இரண்டு நாள் இடைவெளி விடுவர். இந்த இரண்டு நாளில் பாடத்தை நன்றாக மனப்பாடம் செய்திருக்க வேண்டும். மூன்றாவது நாள் அவர் பாடம் கேட்கும் போது ஒரு வார்த்தை தடுமாறாமல், தங்கு, தடையின்றி சொல்ல வேண்டும். வார்த்தையைத் தவற விட்டால் போதும்... அந்த இடத்திலேயே படுக்க வைத்து, வெறும் உடம்பில் பிரம்பால் ஓங்கி அடிப்பர். ஒரு அடி, இரண்டு அடி அல்ல, கை ஓயும் வரை அடிப்பார்!
    இந்தப் பிரம்படி பரிசை நானும் வாங்கி இருக்கிறேன்.
    இரவு சாப்பாட்டுக்குப் பின், எங்கள் எல்லாரையும் அழைத்து உட்கார வைத்து, அவரவர்களுக்குத் தெரிந்த நடிப்பை, செய்து காட்டச் சொல்வார்.
    பாடத் தெரியாதவனை வேண்டுமென்றே பாடச் சொல்வார். அப்படி அவன் பாடவில்லை என்றால், அவனைத் திட்டி, அன்பாக உதைப்பார். அதிலே மற்ற பையன்களுக்கு ஒரு தமாஷ்!
    அப்போது பாகவதர் நடித்த, திருநீலகண்டர் படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தது.
    அதிலே கலைவாணர், மதுரம், டி.எஸ்.துரைராஜ் நடித்த காமெடி காட்சியை நான், காகா ராதாகிருஷ்ணன், திருச்சி தங்கவேலு மூவரும் நடித்துக் காட்டினோம்.
    நான் மதுரமாகவும், காகா ராதாகிருஷ்ணன் என்.எஸ்.கே., வேடத்திலும் நடித்தோம்.
    இரவு,8:00 மணிக்கு ஆரம்ப மாகும் இந்த கேளிக்கைகள், இரவு, 10:00 அல்லது 11:00 மணி வரை நடக்கும். அதாவது, எங்களுக்கு துாக்கம் வரும் வரை!
    இம்மாதிரி கேளிக்கைகளை நடத்துவதற்கு இரண்டு காரணங்கள் உண்டு.
    ஒன்று, புதிதாக மற்றொரு ஊருக்குப் போகும்போது, உற்சாகமாக இருப்பர் என்பது. இரண்டாவது, சாப்பிட்ட உடனே படுத்துத் துாங்குவது ஆரோக்கியத்திற்கு கெடுதல் என்பதால், அதைத் தடுப்பது!
    தர்மபுரியிலிருந்து குமாரபாளையம், ஈரோடு, கோவை, ஊட்டி மற்றும் சிங்காநல்லுார் ஆகிய இடங்களுக்கு எங்கள் முகாம் மாறியது. இவை எல்லாமே சிறப்பு வாய்ந்த ஊர்கள்.
    குமாரபாளையத்தில் நாடகம் நடத்தச் சென்ற போது, ஒரு பயங்கரச் சம்பவம் நடைபெற்றது.
    அது...
    — தொடரும்.
    தொகுப்பு: வைரஜாதன்,
    நன்றி 'பொம்மை'
    விஜயா பப்ளிகேஷன்ஸ்,
    சென்னை.
    நன்றி - தினமலர்
    தினமலர் இணையதளத்தில் இப்பக்கத்திற்கான இணைப்பு

    http://www.dinamalar.com/supplementa...d=22813&ncat=2
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  18. Likes Russellmai liked this post
  19. #10
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    கதாநாயகனின் கதை - 9

    தினமலர் வாரமலர் 30.11.2014


    ஒரு நாள் காலை, பவானி ஆற்றில் நாங்கள் எல்லாரும் (200 பேர்) குளித்துக் கொண்டிருந்தோம்.
    வெள்ளம் வரப்போவது பற்றி ஊர் தலையாரி தமுக்கடித்து சொல்லியிருந்தது எங்களுக்குத் தெரியாது. நாங்கள் அங்கு போவதற்கு முன்தினம் சொல்லி இருப்பாரோ என்னவோ!
    திடீரென வெள்ளம் வந்து விடவே, நாங்கள் திக்குமுக்காடிப் போனோம். கரைக்கு ஓடி வருவதற்குள் வெள்ளம் எங்களை சூழ்ந்து விட்டது. நாங்கள் வெள்ளத்தில் சிக்கித் தவிப்பதைக் கண்ட, சில பெரியவர்கள் உடனே ஆற்றில் குதித்து, எங்களை தோளில் தூக்கி கரை சேர்த்தனர். அன்று, அவர்கள் அப்படி செய்திராவிட்டால், எங்களில் பலர், வெள்ளத்துடன் போயிருப்பர்; நானும் போயிருப்பேன். நல்லவர்களின் ஆசியே எங்களைக் காப்பாற்றியது.
    ஊட்டியில் நல்ல குளிர், எங்களுக்கெல்லாம் கம்பளிச் சட்டை, போர்வை, மப்ளர் எல்லாம் வாங்கித் தந்தனர்.
    காலையில் பல் தேய்க்க, வெந்நீர் போட்டுத் தருவர். 'புளு மவுண்டன் டாக்கீஸ்' என்ற கொட்டகையில் தான் எங்கள் நாடகங்கள் நடந்தன. அதன் கீழே ஒரு பெரிய உருளைக்கிழங்கு கிடங்கு இருந்தது. நாடக நாட்களில் எங்களுக்கு அங்கு நல்ல வேட்டை. தினசரி உருளைக் கிழங்கு இல்லாமல் சாப்பாடே இருக்காது.
    ஊட்டியில், 'தோடர்கள்' என்ற மலை ஜாதியினர் உள்ளனர். நாங்கள் தங்கி இருந்த வீட்டுக்கு சிறிது தூரத்தில் தான் அவர்கள் வசித்து வந்தனர். அவர்களை நாங்களும், எங்களை அவர்களும் அதிசயமாகப் பார்த்துக் கொண்டோம்.
    காலையில் பாடம் படித்து முடித்ததும், நாங்கள் அவர்கள் இடத்திற்குப் போய் விடுவோம். அவர்களது உடை, வசிக்கும் வீடு, பேசும் மொழி இவை எல்லாம் எங்களுக்குப் புதுமையாக இருந்தது. அவர்களை பாடச் சொல்வோம்; அவர்களும் பாடுவர். பட்டாபிஷேகம் நாடகம் முடிந்து, ஊட்டியை விட்டுக் கிளம்புவதற்கு முன்பாக, அங்கு நடைபெற்ற மலர் கண்காட்சியையும் பார்த்தோம்; ரொம்பவும் அருமையாக இருந்தது.
    ஊட்டிக்கு அடுத்து சிங்காநல்லூருக்கு வந்தோம். இதே சமயம் கோவையில் டி.கே.எஸ்., சகோதரர்கள் நாடகங்களை நடத்தி வந்தனர்.
    இந்த ஊரில் தான் என் வாழ்க்கையில் ஒரு முக்கிய நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது கோவை சென்ட்ரல் ஸ்டுடியோவில் பல படங்கள் தயாராகி வந்தன. ஒரு நாள் ராதா அண்ணன், முதன் முதலாக என்னை சினிமாவில் சேர்த்து விடுவதற்காக அழைத்துப் போனார். எனக்கு ஒரே சந்தோஷம்!
    ஆனால், என்னைப் பார்த்ததும் அந்த வேஷத்திற்கு நான் உயரமாக இருப்பதாகச் சொல்லி அனுப்பி விட்டனர்; ஏமாற்றத்துடன் திரும்பினேன். பின், இந்த வேஷத்திற்கு காகா ராதாகிருஷ்ணன் பொருத்தமாக இருக்கிறார் என்று ஒப்பந்தம் செய்து கொண்டனர்.
    கலைவாணர் என்.எஸ்.கே.,யுடன் நடிக்க வேண்டிய படம் என்பது நினைவு!
    சிங்காநல்லூரில் பழையபடி கம்பெனிக்கு கஷ்ட நிலை வந்து விட்டது. இரவோடு இரவாக வண்டியில் நாடக சாமான்களை ஏற்றி, கம்பெனியில் இருந்தவர்களில் பாதி பேர் கால்நடையாகவே கிளம்பினோம்.
    சென்ட்ரல் ஸ்டுடியோவில் என்.எஸ்.கே.,யுடன் படத் தயாரிப்பு விஷயமாக கோவைக்கு வந்திருந்த எஸ்.வி.சகஸ்ரநாமம் இந்தக் கட்டத்தில், எங்கள் உதவிக்கு வந்தார். அவர் ஒரு காரை எடுத்து வந்து, சின்னப் பையன்களை அதில் ஏற்றி, பொள்ளாச்சியில் கொண்டு போய் விட்டு வந்தார். இப்படி இரண்டு, மூன்று முறை அவர் வண்டியில் ஏற்றி பொள்ளாச்சிக்கு எங்களைக் கொண்டு போய் சேர்த்தார்.
    அவரது பெருந்தன்மையான செயல், எங்கள் உள்ளத்தில் நன்றியுணர்வை உண்டாக்கியது.
    பொள்ளாச்சி முகாமை என்னால் மறக்க முடியாது. இங்கு தான் என் வாழ்க்கையில் ஒரு சிறு திருப்பம் ஏற்பட்டது. தீபாவளிப் பண்டிகை நெருங்கிக் கொண்டிருந்தது. ரொம்ப நாட்களுக்கு பிறகு ஊருக்குப் போவதற்காக, கம்பெனி நிர்வாகிகளிடம் அனுமதி பெற்று, நானும், திருச்சி தங்கவேலுவும் ஊருக்குக் கிளம்பினோம்.
    என் வீட்டாருக்கு என்னைக் கண்டதில் பெரும் மகிழ்ச்சி; தீபாவளியை அந்த வருஷம் கோலாகலமாகக் கொண்டாடினோம். நாங்கள் கம்பெனிக்கு திரும்ப வேண்டிய நாட்களும் நெருங்கிக் கொண்டிருந்தது. அப்போது திடீரென்று ஒரு நாள் எம்.ஆர்.ராதா அண்ணன், என் வீட்டிற்கு வந்தார்.
    ராதா அண்ணனைப் பார்த்ததில், எங்கள் எல்லாருக்கும் ஒரே சந்தோஷம். 'உன்னைப் பாக்க தான் வந்தேன்...' என்று, அவர் சொன்னதைக் கேட்டதும், எனக்கு அளவு கடந்த மகிழ்ச்சி. ராதா அண்ணன், என்னைத் தேடி வந்த காரணத்தைச் கூறினார். அவர் தனியே நாடகக் கம்பெனி ஆரம்பிக்க இருப்பதாகவும், அதில், என்னைச் சேரச் சொல்லி அழைப்பு விடுத்தார். என்னுடன் ஊருக்குப் புறப்பட்டு வந்த தங்கவேலுவையும், தன்னுடன் சேர்ந்து விடும்படி அழைத்தார். அப்போது தான் ராதா அண்ணன், எங்கள் கம்பெனி முதலாளியுடன் கருத்து வேறுபாடு கொண்டு பிரிந்து வந்த விவரம் எங்களுக்கு தெரிய வந்தது.
    ஆனால், அது என்ன காரணத்திற்காக என்பது தெரியவில்லை; கேட்கவும் தைரியம் வரவில்லை. இரு நாட்கள் அவர் எங்கள் வீட்டிலேயே தங்கினார்; அந்த இரு நாட்களிலும் பலவாறு யோசித்துப் பார்த்தேன். 'கம்பெனியிலேயே பழையபடி போய்ச் சேர்ந்து விடுவதா அல்லது ராதா அண்ணனுடன் போவதா?' என்று!
    கடைசியில், 'ராதா அண்ணன் பெரிய நடிகர்; சினிமாவில் நடித்துப் புகழ் பெற்றவர். அவரே என் வீட்டுக்கு வந்து கூப்பிடும்போது, போகாமல் இருந்தால் நன்றாக இருக்குமா? தவிர, ராதா அண்ணன் கம்பெனியில் பெரிய வேடங்கள் போடுவதற்கு, சீக்கிரத்திலேயே சந்தர்ப்பமும் கிடைக்கும்...' என்றெல்லாம் எண்ணிய நான், ராதா அண்ணனுடன் செல்வதென்ற முடிவுக்கு வந்தேன்.
    வீட்டாரிடம் சொன்னேன்; என்னுடைய முடிவுக்கு அவர்கள் தடையாக நிற்கவில்லை. ராதா அண்ணனிடம், அவருடன் வருவதாகச் சொன்னோம்; எங்கள் முடிவை சந்தோஷத்துடன் ஏற்றுக் கொண்டார். நானும், தங்கவேலுவும் அவருடன் கிளம்பினோம்.
    சென்னையைப் பற்றி பலவாறாக பிரமாண்டமாகக் கற்பனை செய்து வைத்திருந்ததால், நான், முதன் முதலாக அந்தச் சென்னையில், ஒருவகை புல்லரிப்புடன் காலடி எடுத்து வைத்தேன்.
    கோவிந்தப்ப நாயக்கன் தெரு என்று நினைக்கிறேன். அங்கு ஒரு வீட்டில் தங்கினோம். மறுநாள் காலை, அங்கிருந்து டிராம் வண்டியில் (அப்போது சென்னையில் டிராம் ஓடிய காலம்) ஏறி, புகழ்பெற்ற மூர் மார்க்கெட்டுக்கு வந்தோம். எனக்கும், தங்கவேலுவுக்கும் புதுச் சட்டை, துணிகளை வாங்கிக் தந்தார் ராதா அண்ணன். அப்போது, மூர்மார்க்கெட்டில் பானு ஓட்டல் பிரபலம்; அங்கே தான், நாங்கள் தினமும் சாப்பிடுவோம்.
    எங்கள் ரெண்டு பேருக்கும் ஒரு ரிக் ஷாவை ஏற்பாடு செய்து, ரிக் ஷாக்காரனிடம் சென்னையில் பார்க்க வேண்டிய முக்கியமான இடத்திற்கெல்லாம் எங்களை அழைத்துச் செல்லும்படி சொல்லி. செலவுக்கு கைநிறைய காசும் கொடுத்து அனுப்புவார் ராதா அண்ணன்.
    உயிர் காலேஜ் (மிருகக் காட்சி சாலை), செத்த காலேஜ் (மியூசியம்), லைட் - ஹவுஸ், துறைமுகம் என, புதிதாக சென்னைக்கு வருபவர்கள், எந்த இடங்களை எல்லாம் பார்க்க விரும்புவார்களோ, அந்த இடங்களை எல்லாம், ஒன்று விடாமல் பார்த்தோம். காலையில் கிளம்பும் நாங்கள், நன்றாக இருட்டிய பின் தான், வீடு திரும்புவோம்.
    ராதா அண்ணன், தான் தயாரிக்கவிருந்த நாடகங்களுக்கான உடைகளையும், மற்ற பொருட்களையும் வாங்குவதற்காகவே சென்னை வந்தார். குறிப்பாக, சில சினிமா கம்பெனிகளிடமிருந்து அவர்கள் தயாரித்து வெளியிட்ட படங்களில் உபயோகித்திருந்த உடைகளை வாங்கினார். மாத்ரு பூமி படத்தை வெளியிட்டிருந்த கம்பெனியிலிருந்து, நிறைய உடைகளை வாங்கினார்.
    ஒரு நாள் ராதா அண்ணன், எங்கள் இருவரையும் ஒரு கம்பெனிக்கு அழைத்துப் போனார். பிரகதி ஸ்டுடியோவை சேர்ந்த கம்பெனி வீடு என்று நினைவு.
    அங்கே...
    — தொடரும்.
    நன்றி - தினமலர்
    தினமலர் இணையதளத்தில் இப்பக்கத்திற்கான இணைப்பு
    http://www.dinamalar.com/supplementa...d=22909&ncat=2
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  20. Likes Russellmai liked this post
Page 1 of 2 12 LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •