காத்தவராயன்
கதை
ஈசனிடம் நடனித்தில் தோல்வியுற்ற உமையாள் சினம் கொண்டதால், பூமிக்கு சென்று உணர்வடிக்கி வாழப் பணிக்கப்படுகிறாள். வீரபாகுவும் உமையின் குழந்தையாக பூமிக்குச் செல்கிறான். அங்கு வேடர் குலப்பெண்கள் உமையாளிடம் (கண்ணாம்பா) குழந்தையைத் தாங்கள் வளர்ப்பதாக பெற்றுச் செல்கிறார்கள்.
மிகச்சிறந்த வீரனாக வளரும் காத்தவராயன் தன் தாயைத் தேடிக் கண்டடைகிறான். வேண்டும் உருவம் பெற ஆசீர்வதிகப்படுகிறான். வெளி ஊர்கள் பலவற்றுக்குப் பயணப்படுகிறான். மலையாள மாந்த்ரீகர் பாலையாவை அடிமையாக்குகிறான். அவன் மனைவி MN ராஜம், அவள் தம்பி சந்திரபாபு.
பிறகு ஆரியகுல இளவரவி ஆரியமாலாவை (சாவித்ரி) சந்தித்து, புகழ்பெற்ற "வா கலாப மயிலே" பாடலைப் பாடுகிறான். அவளை சந்திக்க கிழவனாக வருகிறான். அவனைப் பிடித்து அரசவையில் ஒப்படைக்க சாக்குப்பையிலிருந்து குடுகுடுப்பைக்காரனாக உருமாரி எழுகிறான்.
சிறையிலடைப்பட்டு பிறகு பட்டத்து யானையோடு தப்பிக்கிறான். கிளியாக உருமாரி மறுபடி ஆரியமாலாவை சந்திக்கிறான். மறுபடி தப்பியோட்டம். கல்யாண நிச்சயமான ஆரியமாலாவை சந்திக்க வளையல்காரன் வேடம் இட்டு வருகிறான் (படகோட்டி !).மறுபடி தப்பியோட்டம், இம்முறைி பிடிபடுதல். பிணைத்து அவனை அரசன் கொல்ல முனையும் போது, ஆரியமாலா கத்திக்குத்து பட்டு விழுகிறாள்.
அவள் இறந்துவிட்டாள் என்று எண்ணி ஊரை துவம்சம் செய்கிறான் காத்தவராயன். கண்ணாம்பா கடிந்து கொள்ள அடங்கும் அவன் கைது செய்யப் ப்படுகிறான். பிணைத்த அவனை யானை தரையோடு இழித்துச் செல்கிறது. பின் சாட்டையடி வாங்கிக்கொண்டு ஊரார் காண தண்டனை நிறைவேற்றப்படவேண்டிய பெருவெளிக்கு செல்கிறான். அங்கு ஒரு பிரம்மாண்டமான அய்யனார் (?) சிலை. கண்ணாம்பா முறையிட அருள மறுக்கிறான் அரசன். மனோகரா பாணியில் பொங்கி எழச்சொல்லும் அன்னையின் ஆணைக்கு இணங்கி பிரம்மாண்ட சிலைய உடைத்து பேரழிவை ஏற்படுத்துகிறான். ஓடிவரும் ஆரியமாலாவும் அதில் சிக்குகிறாள்.
சிவபெருமான் அருளால் பார்வதி, காத்தவராயன், ஆரியமாலா யாவரும் வானுலகம் ஏறுகிறார்கள்.
கடைசி அரை மணி நேர அவசரகதி திருப்பம் மேல் திருப்பங்களைத் தவிற மிக சுவாரஸ்யமான திரைப்படம்.
குறிப்பாக: பல அபாரமான காட்சிகள் நிறைந்த படம் இது.
Spectacle
-> வேடர்களை அறிமுகம் செய்யும் காட்சி. கோழி உடை தரித்து (சிறுவர்கள் ?) நடனம். குழு நடன அமைப்பின் ஒற்றுமை. தக்கை செட் என்று நினைத்துக் கொண்டிருந்தால் அதன் மீது அமர்ந்து ஒருவர் முரசு அடித்துக் கொண்டிருந்தார் !
--> படத்துவக்கமே சிவன்-பார்வதி நடனம். தொழில்முறை நடனக்காரர்கள் என்று நினைக்கிறேன்.(பயப்படாதீர்கள் கண்ணாம்பா இல்லை. பாட்டு முடிந்ததும் சிவன்/பார்வதி மாறிவிடுவர்..தொலைக்காட்சித் தொடர்களில் பாத்திரங்கள் மாறுவது போல) தமிழ் சினிமாவின் மிக உக்கிரமான பரதநாட்டியக் காட்சிகளில் ஒன்று இது. படத்தில் முதல் ஐந்து-ஆறு நிமிடம் இசையும்-நடனும் மட்டுமே !
--> சக்கரம் சுழன்று, பாடலினூடே பெரியவனாகும் குழந்தைகளைப் பார்த்திருக்கிறோம். சண்டையினூடே ? சிறுவன் காத்தவராயன் வாள்பயிற்சி பெறுகிறான். அவன் நிழல் காண்பிக்கப் படுகிறது. நிழல் வளர்கிறது. வாளுடன் சிவாஜி. நிழலிலிருந்து நிஜத்துக்கு வரும்போது 'கட்' மிகக் கூர்மையாக கவனித்தால் மட்டுமே தென்படும் சிறப்பான படத்தொகுப்பு
--> யானை மோதி கதவு திறக்கிறது. கூர்ந்து கவனித்தால் யானை கதவை வேகமாக நெருங்குவதைக் காண்பித்து, பிறகு எதிர்பக்கம் அதிரும் கதவைக் கண்டு மிரளும் தங்கவேலும் சிப்பாய்களும் காட்டப்படுகிறார்கள். அதாவது யானை மோதாமல் அந்த உணர்வைப் பார்வையாளர்களிடம் ஏற்படுத்தியிருந்தார்கள். அந்த காட்சி முழுவதும் இவ்வாறே காட்டப்படுகிறது. மிக புத்திசாலித்தனமான உத்தி.
--> மிக தத்ரூபமான மல்யுத்தக் காட்சி. சிவாஜியின் எதிராளி நிஜமாகவே ஒரு மல்யுத்த வீரர் என்று நினைக்கிறேன். கிட்டத்தட்ட 5-6 நிமிடங்கள் நீளும் அக்காட்சியில் சிவாஜியின் வெற்றி இயல்பான படிப்படி முன்னேற்றமாக நம்பும்படி காண்பிக்கப் படிகிறது. பல முறை சிவாஜியும் (டூப் அல்ல!) எதிராளியும் ஒருவரை ஒருவர் வீழ்த்துகிறார்கள். களத்துக்குள் இறங்கும் பொழுது சிவாஜி தோளை வளைத்துக் கொண்டு இறங்குவது, ஆயத்தத்தை போகிற போக்கில் மிக சிறப்பாக காண்பிக்கும் காட்சித்துளி. குன்னக்கோல் சிவாஜி 'பாட்டும் நானே'வின் தன் முறை வரும்பொழுது லேசாக தொண்டையை செறுமிக்கொள்வது போல.
--> மணிரத்னத்தில் அலைபாயுதே திரைப்படத்தில், காதல்-சடுகுடு பாடலில் பின்னோக்கி ஓட்டப்படும் காட்சிகள் இடம்பெற்று கவனத்தை பெற்றது. காத்தவராயனின் ஒரு சண்டைக்காட்சியில் சிவாஜி பல படைவீரர்களை எதிர்கொள்ளும்போது தரையிலிருந்து படிப்படியாக மேலே குதித்து, பல நிலைகளைத் தாண்டி கோட்டைசுவரை எட்டுவதாக இரு காட்சி வருகிறது. அது மேலிருந்து குதித்ததைப் படமாக்கி பின்னோக்கி ஓட்டி காட்டப்படுகிறது. ஒரு 5 வினாடிகள் வரும் அக்காட்சியின் துவக்கத்தில் படச்சட்டகத்துக்குள் இடத்திலிருந்து வலமாக ஒரு சில அடிகள் சிவாஜி ஓடி வரவேண்டும். அது 'ரிவெர்சில்' ஓடியது என்று பார்த்து வியக்க டிவிடி தேவைப்படுகிறது.
--> அரண்மனையிலிருந்து தப்பி ஓடும் சிவாஜி தனது குகைக்குள் விரைந்து ஓடி வருவார். அங்கு, படுத்துக்கொண்டிருக்கும் பாலையாவுக்கு ராஜம் கால் அமுக்கிக்கொண்டிருப்பார். ஓடிய வேகத்தில் உள்ளே வரும் சிவாஜி ஒரு அரை விநாடித் தயங்கி திரும்பி (அதற்குள் அவர்கள் எழுந்துகொண்டு சிவாஜியைக் கூப்பிட) மீண்டும் உள்ளே செல்வார். மிக கவனமாக காட்சி அமைப்பு/நடிப்பு
- பல ஊர்கள் பயணப்படும் ஆரம்பக்காட்சி மிக புத்திசாலித்தனமாகக் காட்டப்படுகிறது. தஞ்சை பெரிய கோவில், மதுரைக் கோவில், ஆலப்புழை படகுப் போட்டி என்று பல கோப்புக் காட்சிகள். அதன் மேலேயே அதை ரசிக்கும்/கண்டு வியக்கும் சிவாஜியின் முகபாவங்கள் என்று காட்சியின்-மேல்-காட்சி பதிக்கும் உத்தி. இது இதற்கு முன்னர் (1958) கையாளப்பட்டிருக்கிறதா என்று கவனிக்கவேண்டும். அது சிறப்பாக வந்ததற்கு சிவாஜியின் ஒரு முக்கிய காரணம். ஒரு நெருக்கமான படகுப்போட்டியை கண்டு களிக்கும் பாவனையை மிகச்சிறப்பாக செய்வார்.
--> குடுகுடுப்பைக்காரனாக வரும்போது பேச்சும், பாவனையும் முற்றிலும் மாறிப்போவதெல்லாம் சிவாஜியின் அன்றாட அதிசயம்.
--> பொம்மலாட்டம் போன்ற நடனம் (இது சமீபத்தில் ஓரிரு படங்களில் செய்யப்பட்டது நினைவில் இருக்கலாம்). சந்திரபாபுவும், ராஜமும் ஆடும் ஜோடி நடனம். குறிப்பாக சந்திரபாபு பொம்மையைப் போலவே குறைந்த அசைவுகளுடன் சிறப்பாக ஆடுவார்.
--> காத்தவராயன் கோபம் கொண்டு ஊரை துவம்சம் செய்யும் போது தூணைப் பிடுங்க வீடே விழும் காட்சிகள்
--> பிரமாண்ட அய்யனார் சிலை உதிர்ந்து விழும் கடைசி காட்சி
இப்படி பல சிறப்பான காட்சிகள்.
இன்ன பிற..
--> தங்கவேலுவின் நீண்ட நெடுங்கால நகைச்சுவை முயற்சிகள் எதற்கும் இதுவரை என்னால் சிரிக்க முடிந்ததில்லை. இதிலும் அனேகம் அப்படியே. ஆனால் ஓரிரு காட்சிகள் சிரித்து வியந்தேன்: ராஜம் வீட்டுக்கு வந்து விசாரிக்கும் போது மிடுக்காக "பட்டத்து யானை எங்கே" என்று கேட்டபடி மிக இயல்பாக மேசைக்கு அடியில் பார்ப்பார்
--> சந்திரபாபுவின் slapstick நன்றாக வந்திருக்கிறது.
--> கதையின் காலத்துக்கு முரணாக ஓ/சி, கோலா லம்பூர் என்கிற வார்த்தைகள் பாடல்களில் வருகின்றன. சந்திரபாபுவின் கஸ்மாலமும் !
சோகம் தோய்ந்த சமூகப் படங்களில் எனக்கு மிகையாகத் தோன்றும் காட்சிகள் மிகுந்திருக்கின்றன. அவற்றின் தேவைகளுக்குத் தோதாக சிவாஜி நடிக்கும்பொழுது என்னால் அதை அவ்வளவாக ரசிக்க முடிவதில்லை. உதாரணமாக நான் இதற்கு முன் பார்த்த படம் புனர்-ஜென்மம். சிவாஜியும்-கண்ணாம்பாவும் போட்டிப் போட்டுக்கொண்டு உணர்ச்சியைக் கொட்டித் தீர்த்தார்கள்.
மாறாக காத்தவராயனில் கதை தான் மிகை, ஆனால் காட்சியமைப்பும், நடிப்பும் மிகச் சரளமானவை (கடைசி சில நீமிடங்கள் தவிற). இது போன்ற சிறப்பாக எடுக்கப்பட்ட கேளிக்கைசித்திரங்கள் நடிப்பு மட்டுமல்லாது, மேற்சொன்ன பல விஷயங்களினாலும் ரசிக்கத்தக்கதாக இருக்கிறது. இத்திரியின் இப்படத்தைப் பற்றி நான் அதிகம் படித்ததில்லை என்பதால் இந்த நீண்ட இடுகை.
Bookmarks