என் தம்பி - Part I
தயாரிப்பு : சுஜாதா சினி ஆர்ட்ஸ்
இயக்கம்: A.C. திருலோகச்சந்தர்
வெளியான நாள்: 07.06.1968
நகரம் என்றும் சொல்ல முடியாமல் அதே சமயம் கிராமம் என்றும் இல்லாமல் உள்ள ஒரு நடுவாந்திர ஊர். அங்கே மிகப் பெரிய செல்வந்தர் முருகபூபதி. அவரின் மனைவி இறந்து விடவே இரண்டாம் திருமணம் திருமணம் செய்திருக்கிறார். மூத்த மனைவியின் மூலமாக ஒரு மகனும் இரண்டாவது மனைவி மூலமாக ஒரு மகன் ஒரு மகள் ஆகியோர் அவருடைய வாரிசுகள். தவிர, கணவனை இழந்த விதவை தங்கையும் அவரது மகன் மற்றும் மகளும் அந்த வீட்டிலே வளர்கிறார்கள். தம்பி முறையாகும் அவரது சித்தப்பா மகனும், அவரது மகளும் பர்மாவிலிருந்து அகதிகளாக இங்கே வந்திருக்கிறார்கள். ஒரே மகள் உமா போலியோ நோயினால் பாதிக்கப்பட்டிருக்கிறாள். அவள் மேல் மூத்த மகன் கண்ணன் உயிரையே வைத்திருக்கிறான். அந்த பெண்ணும் அப்படியே.
எல்லா நல்ல குணங்களும் பொருந்திய கண்ணன் ஜமீன் விவகாரங்களையும் கணக்கு வழக்குகளையும் கவனித்துக் கொள்ள இளைய மகன் விஸ்வம் ஊதாரியாக சுற்றிக் கொண்டிருக்கிறான். வீட்டிலே வளரும் அத்தை மகள் ராதாவும் கண்ணனும் ஒருவரை ஒருவர் காதலிக்கிறார்கள். தம்பியின் மீது மிகுந்த பாசம் கொண்ட கண்ணன் அவனை திருத்த பல முயற்சிகள் மேற்கொண்டும் பலன் ஒன்றுமில்லை.
இந்நிலையில் விஸ்வத்தின் செயல்பாடுகள் பொறுக்க முடியாமல் ஜமீந்தார் அவனது கைகளுக்கு பணமே போகாமல் செய்து விட ஒரு நாள் இரவில் தந்தையின் பீரோ சாவியை எடுத்து பணத்தை திருட முயற்சிக்கும் போது அவர் பார்த்து விட கடுமையான வாக்குவாதம் முற்றி விஸ்வம் தந்தைக்கு நேராக துப்பாக்கியை எடுத்து நீட்ட அது அவரது இதயத்தை பாதித்து நெஞ்சு வலி வந்து விடுகிறது.
படுக்கையில் விழும் அவர் நடந்த விஷயத்தை யாரிடமும் சொல்லாமல் மறைத்து விடுகிறார். வக்கீலை அழைத்து உயில்எழுதுகிறார். அதன்படி சொத்துகளை நிர்வகித்து வரும் பொறுப்பையும் மூத்த மகன் மற்றும் சகோதரியிடம் ஒப்படைக்கிறார். மறுக்கும் கண்ணனிடம் வற்புறுத்தி ஒப்புக் கொள்ள செய்யும் அவர் யாருக்கும் தெரியாத குடும்ப ரகசியம் ஒன்றை கண்ணனின் காதில் சொல்கிறார். உயில் விஷயம் தெரிந்து தந்தையோடு சண்டை போடும் விஸ்வதிடம் பேசிக் கொண்டிருக்கும் போதே முருகபூபதிக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விடுகிறார்.
தந்தையின் மறைவிற்கு பிறகு சொத்துக்களை நிர்வகித்து வரும் கண்ணன் தம்பியை திருத்தி விட முயற்சிக்கிறான். ஆனால் மேலும் விஸ்வத்தைப் பற்றி தவறான செய்திகளே வருகிறது. எஸ்டேட் பங்களாவில் வேலைக்கார பெண்ணிடம் பழகுவது பற்றி புகார்கள் வர, கண்ணன் அதைப் பற்றி விசாரிக்கிறான். அலட்சியமாக பதில் சொல்லும் தம்பியை பார்த்து நீ திருந்தவே மாட்டியா என்று கேட்டு போகும் அண்ணனின் குரல் விஸ்வத்தின் மனதில் எதிரொலிக்கிறது. மறு நாள் காலை அனைவருக்கும் ஆனந்த அதிர்ச்சி. பக்திமானாக படியில் இறங்கும் விஸ்வம் அனைவரிடமும் திருந்தி விட்டேன் என்கிறான். கோவிலுக்கு போகிறான்.
கண்ணனுக்கு பெரும் சந்தோஷம். அந்த நேரத்தில் கண்ணன் ராதா இவர்களுடன் வெளியே செல்லும் தங்கை உமா தண்ணீரில் தவறி விழுந்து விட, காப்பற்ற செல்லும் கண்ணனும் சிக்கிக் கொள்கிறான். அவனுக்கு நீச்சல் தெரியாது என்ற விவரத்தை அப்போதுதான் ராதா தெரிந்துக் கொள்கிறாள். குதிரையேற்றம், வாள் பயிற்சி போன்றவற்றில் எல்லாம் தேர்ச்சி பெற்ற கண்ணன் நீச்சல் பயிற்சி பெறாததன் காரணம் அவனுக்கு நீரில் ஒரு கண்டம் இருப்பதாக ஜோசியர் சொன்னதை நம்பி அவனது தந்தை நீச்சல் சொல்லி தரவில்லை என்ற விஷயத்தை கண்ணன் சொல்கிறான்.
இந்நிலையில் விஸ்வம் ஒரு நாள் தங்கள் தந்தைக்கு ஒரு நினைவிடம் அமைப்பதற்கு பக்கத்திலுள்ள தீவில் இடம் பார்த்திருப்பதாகவும் அதை பார்க்க வர வேண்டும் என்று சொல்லி கண்ணனை அழைத்துப் போகிறான். மோட்டார் படகில் செல்லும் கண்ணன் படகு வேறு திசையில் பயணிப்பதை பார்த்து காரணம் கேட்க விஸ்வம் தன் சுயரூபத்தை காட்டுகிறான். சொத்து முழுவதும் கண்ணன் கையில் இருப்பதால் வாழ்நாள் முழுக்க கண்ணனுக்கு அடிமையாக இருக்க வேண்டும். அது தன்னால் முடியாது,ஆகவே கண்ணனை ஒழித்து விட்டு தான் சொத்தை அடைய போவதாக சொல்கிறான். கண்ணனுக்கு நீச்சல் தெரியாது என்பதால் இந்த படகில் அழைத்து வந்து விட்டு பாதி வழியில் ஆற்றில் குதித்து விடுகிறான். வெகு வேகமாக ஓடும் மோட்டார் படகை சமாளிக்க் முடியாமல் கண்ணன் திணற, படகு ஒரு பெரிய பாறையில் மோதி விபத்துக்குள்ளாகிறது.
வீட்டில் அனைவரும் அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்க விஸ்வமும் அவர்களுடன் சேர்ந்து சோகமாக இருப்பது போல் நடிக்கிறான். குழந்தை உமா அண்ணனை காணாமல் படுத்த படுக்கையாகி விடுகிறாள். இதற்கிடையே இப்போது சொத்தின் ஒரே பராமரிப்பாளாரான தன் அத்தையிடம் சொத்துகளையும் தன் பெரியம்மா [கண்ணனின் அம்மா] நகைகளையும் கேட்டு ரகளை செய்யும் விஸ்வம் வீட்டை விட்டு வெளியேறப் போவதாக மிரட்டுகிறான். நகைகளைப் பற்றி தெரியாது என்று சொல்லும் அத்தை சொத்துகளை தர சம்மதிக்கிறாள். முன்பு தன் அண்ணனிடம் தன் மகள் ராதாவை இந்த வீட்டு மருமகளாக்குகிறேன் என்று சொன்ன வாக்குறுதியை நினைவுப்படுத்தி விஸ்வம் ராதாவை மணந்துக் கொள்கிறேன் என்கிறான். ராதாவிற்கும் அவள் அண்ணன் சபாபதிக்கும் இதில் துளியும் விருப்பமில்லை. ஆனால் அவர்களது தாய் இருதலைக் கொள்ளி எறும்பாக தவிக்கிறாள்.
இந்த நேரத்தில் எஸ்டேட் வேலைக்காரன் ஒருவன் சபாபதியிடம் வந்து பக்கத்து கிராமத்தில் ஒரு நாடக குழு முகாமிட்டிருப்பதாகவும் அதில் கள்ளபார்ட் போடும் நடிகன் கண்ணனைப் போலவே இருப்பதாக சொல்கிறான். நாடகத்தை பார்க்க செல்லும் சபாபதி நாடக நடிகன் கந்தப்பாவை பார்த்து பிரமித்துப் போகிறான். காரணம் அச்சு அசல் அவன் கண்ணனைப் போலவே இருப்பதால். அவனிடம் சென்று விஷயங்களை விளக்கி கண்ணனாக நடிக்க சொல்ல அவன் முதலில் மறுக்கிறான். யாருக்கும் தெரியாமல் சபாபதி அவனை கூட்டிக் கொண்டு வந்து குழந்தையை காட்டவே, அந்த பெண்ணிற்காக நடிக்க ஒப்புக் கொள்கிறான்.
தன்னை ஒருதலையாய் காதலிக்கும் பர்மா மாமாவின் மகளிடமிருந்து பூட்டி கிடக்கும் அவர்களின் ஒரு வீட்டு சாவியை வாங்கி அங்கே கந்தப்பாவை தங்க வைத்து சபாபதி அவனை கண்ணனாக மாற்ற பயிற்சி கொடுக்கிறான்.
சொத்துகளை விஸ்வம் பெயருக்கே மாற்ற ஏற்பாடு செய்து அதை அனைவர் முன்னாலும் செய்ய போகும் நேரத்தில் கந்தப்பா, கண்ணனாக உள்ளே நுழைய அனைவர் முகத்திலும் மகிழ்ச்சி. விஸ்வம் மட்டும் அதிர்ச்சி அடைகிறான். அதை வெளியே காட்டிக் கொள்ளாவிட்டாலும் கூட அவன் மனதில் குழப்பங்கள்.
வந்திருப்பவன் கண்ணன் அல்ல என்ற சந்தேகத்தை விஸ்வம் வெளிப்படுத்தி பல பரிட்சைகளை வைக்க அவை அனைத்திலும் கண்ணன் வெற்றிப் பெறுகிறான். இறுதியாக சிறு வயதில் போட்ட வாள் சண்டையை நினைவுப் படுத்தி சண்டைக்கு அழைக்கும் தம்பியின் சவாலை ஏற்று ஜெயித்துக் காட்டும் கண்ணன் தன்னை கொல்ல, வாள் முனையில் விஷம் தடவியிருக்கிறான் தம்பி என்று தெரிந்ததும் துடித்துப் போகிறான்.
நீ என் அண்ணன் இல்லை. பணம் தருகிறேன், வீட்டை விட்டு போய் விடு என்று சொல்லும் தம்பியிடம் பேரம் பேசும் கண்ணன் அவன் வாயிலிருந்தே உண்மையை வரவழைக்கிறான். ஆனால் பேரம் பேசும் போது அதை கேட்டு விடும் அத்தை அவனை தவறாக புரிந்துக் கொண்டு விடுகிறாள். சபாபதியும் உண்மையை சொல்ல, தான் கந்தப்பா அல்ல கண்ணன்தான் என்ற உண்மையை கண்ணன் சொல்ல யாரும் நம்ப மறுக்கிறார்கள். ஆற்றில் விழுந்த தன்னை ஒரு நாடக குழு காப்பாற்றியதாகவும், அதன் மூலமாகதான் தான் உயிர் பிழைத்து வந்ததாகவும், குடும்பத்தில் உள்ள குழப்பங்களை தீர்க்கவே வேறு வேடத்தில் வந்ததாகவும் கண்ணன் சொல்வது எடுபடாமல் போகிறது. அவனை வீட்டை விட்டு துரத்துகிறார்கள். அப்போது இறக்கும் தருவாயில் தன் தந்தை தன்னிடம் சொன்ன ரகசியம் நினைவிற்கு வருகிறது. மீண்டும் வீட்டுக்குள் செல்லும் அவன் பாரம்பரியமான குடும்ப நகைகளை தந்தை எங்கே வைத்திருக்கிறார் என்பது தனக்கு தெரியும் என்றும் அதை எடுத்துக் கொண்டு வந்து கொடுத்துவிட்டு தான் கண்ணன் என்பதை நிரூபிப்பதாக சொல்லி விட்டு செல்கிறான். இதை கேட்டு அவன் பின்னே செல்லும் தம்பி, அண்ணன் நகைகளை எடுத்தவுடன் அதை பிடுங்கி கொண்டு அண்ணனை கொல்ல முயற்சிக்க, அந்த முயற்சியில் அவன் இயந்திரத்திற்கு அடியில் மாட்டிக் கொள்ள, அவனை அண்ணன் காப்பாற்றுகிறான். அவனின் நல்ல மனது புரிந்து தம்பி மனம் மாற, எல்லாம் இனிதே முடிவடைக்கிறது.
....
Bookmarks