Results 1 to 10 of 1846

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Filmography, News and Events

Threaded View

  1. #11
    Member Regular Hubber
    Join Date
    May 2011
    Location
    Dubai, UAE
    Posts
    34
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post

    குழந்தைகள் கண்ட குடியரசு.(1960)

    தயாரிப்பு: பத்மினி பிக்சர்ஸ்

    நடிகர்கள்: சிம்மக் குரலோன், 'ஜாவர்' சீத்தாராமன், பி.ஆர்.பந்துலு, 'குலதெய்வம்' ராஜ கோபால், கே.ஆர். சாரங்கபாணி, மாஸ்டர் கோபி

    நடிகைகள்: வழக்கம் போல (பத்மினி பிக்சர்ஸ்) எம்.வி.ராஜம்மா, லட்சுமி ராஜம், பேபி லட்சுமி.

    கதை: தாதாமிராசி

    வசனம்: விந்தன்

    பாடல்கள்: கு.மா. பாலசுப்ரமணியம்

    இசை: டி .ஜி.லிங்கப்பா.

    ஒளிப்பதிவு டைரக்டர் :W.R.சுப்பாராவ்.

    ஒளிப்பதிவு: M .கர்ணன்.

    ஒப்பனை : ஹரிபாபு. (நடிகர் திலகத்தை முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் காட்டிய இந்த 'ஹரி' ஒரு 'ஒப்பனை சிங்கம்'.)




    இந்த குடியரசு தினத்தில் பத்மினி பிக்சர்ஸ் 'குழந்தைகள் கண்ட குடியரசு' படத்தில் தலைவரின் நடிப்பைப் பற்றி எழுதுவது பொருத்தமாய் இருக்கும் எனத் தோன்றியது. நம் ரசிகர்களே அதிகம் பார்த்திருக்க முடியாத மிக அபூர்வப் படமென்றும் சொல்லலாம். நடிகர் திலகத்திற்கு கௌரவ வேடம்தான். ஆனால் படத்திற்கே அதுதானே கௌரவம்! நடிகர் திலகத்திற்கு கௌரவத் தோற்றம்தானே என்று சொல்லி அலட்சியப்படுத்திவிட முடியாத முக்கியமான ப(வே)டம்.

    B.R.பந்துலு அவர்களின் தயாரிப்பு + இயக்கத்தில் தமிழ், (குழந்தைகள் கண்ட குடியரசு) கன்னடம், (மக்கள ராஜ்யா 1960) தெலுங்கு, (பிள்ளலு தெச்சின செல்லனி ராஜ்ஜியம் 1960) என மும்மொழிகளில் வெளியானது. குழந்தைகளே முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இந்தப் படத்தின் கதையை ஓரிரு வரிகளில் முடித்து விடலாம்.

    மாயாபுரி நாட்டின் மன்னன் (B.R.பந்துலு) நல்லவன். முடியாட்சியை முடித்து வைத்து மக்களாட்சியை மலரச் செய்வதே அவன் எண்ணம். கெட்ட எண்ணம் கொண்ட தளபதி (ஜாவர்) மன்னனை தீர்த்துக் கட்ட துணிகிறான். மன்னன் மக்களுடன் குடியாட்சியின் மகத்துவத்தைப் பற்றி உரையாற்றிக் கொண்டிருக்கையில் மன்னர் குடும்பத்தை வெடி வைத்து கொல்ல தளபதி முயற்சி செய்கிறான். அதிர்ஷ்டவசமாக மன்னன் மகாராணியுடன் (எம்.வி ராஜம்மா) தப்பித்து, விதிவசத்தால் ஒரு பூதத்தின் கோபத்திற்கும், சாபத்திற்கும் ஆளாகி, பத்து வருடங்களுக்கு மாமரமாக ஆகி விடும்படி சபிக்கப்பட்டு விடுகிறான். தளபதியோ ஆட்சியைக் கைப்பற்றி, மன்னனாக மகுடம் தரித்து கொடுங்கோலாட்சி புரிகிறான். கர்ப்பம் தரித்திருந்த மகாராணி நல்லவர் ஒருவரால் காப்பாற்றப்பட்டு ஆண் குழந்தை ஒன்றை ஈன்றெடுக்கிறாள். இளவரசன் வில்லேந்தி (மாஸ்டர் கோபி) என்ற அந்தக் குழந்தை வளர்ந்து வீரச் சிறுவனாகிறான். மாமரமாகிப் போன மன்னரான தன் தந்தையின் சாபத்தை போக்கவும் , தாய்க்கு சாபத்தின் காரணமாக நேர்ந்த இழந்து போன ஞாபக சக்தியை திரும்பக் கொண்டு வருவதற்கும் தேவையான சர்வகலாமணியை வில்லேந்தி ஒரு விஞ்ஞானி (தலைவர்தான்) உதவியுடன் சந்திர மண்டலத்திலிருந்து எடுத்து வந்து, தாய் தந்தையரின் சாபங்களைப் போக்கி, அந்நாட்டின் குழந்தைகளுடன் (தளபதியின் பெண் சிறுமியான இளவரசியையும் சேர்த்து) கைகோர்த்து, கொடுங்கோலாட்சி புரியும் தளபதியுடன் போராடி, வெற்றி பெற்று, அவனைத் திருத்தி, குடியரசையும் மலரச் செய்கிறான்.

    சிறுவனான வில்லேந்தி சாபங்களைப் போக்கும் சர்வகலாமணி சந்திர மண்டலத்தில் கிடைக்கும் என்று கேள்விப்பட்டு சந்திர மண்டலத்திற்கு போவது எப்படி என்று விழித்து நிற்க, ஆபத்பாந்தவனாய் ஆருயிர் நடிகர் திலகம் சந்திர மண்டல ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானியாக இடைவேளைக்குப் பின் அட்டகாச அறிமுகம். சந்திரனுக்கு மனிதனை தான் கண்டுபிடித்து வைத்துள்ள விண்கலத்தில் அனுப்பி ஆராய்ச்சி செய்வதே அவர் நோக்கம். மனித உயிர்கள் எவரும் அவர் முயற்சிக்கு முன் வராததால் வெறுப்புற்று சந்திரனுக்கு ஒரு நாயை சோதனை முயற்சியாக வைத்து தன்னுடைய விமானத்தில் விஞ்ஞானி அனுப்ப எத்தனிக்க, அங்கு தன் தாய், தந்தையரின் சாபங்களைப் போக்கக் கூடிய சர்வகலாமணி இருப்பதாகவும், அதைக் கொண்டுவர சந்திர மண்டலத்திற்கு தன்னை அனுப்பும்படியும் அவரிடம் வேண்டுகோள் விடுக்கிறான் வில்லேந்தி. அவனுடைய முயற்சியில் மனம் மகிழ்ச்சி கொண்ட விஞ்ஞானி தன்னுடைய அறிவியல் ஆராய்ச்சி நோக்கமும் நிறைவேறப் போகிறதே என்ற மகிழ்ச்சியில் வில்லேந்தியையும், அவன் தோழனையும் ('குலதெய்வம்' ராஜகோபால்) உடல் ரீதியாக பரிசோதித்து இருவரையும் பொது மக்கள் முன்னிலையில் விமானத்தில் சந்திரனுக்கு அனுப்பி வைக்கிறார். அதற்கான இயந்திரங்களை அவர் பூமியிலிருந்து இயக்கிக் கொண்டிருக்கிறார். எதிர்பாராத விதமாக அதில் ஒரு இயந்திரம் உடைந்து விடுகிறது. அதை எப்படியும் சரி செய்து விடுவதாகக் கூறி அதற்கான முழு முயற்சியில் ஈடுபடுகிறார் விஞ்ஞானி. அதற்குள் பொறுமை, மற்றும் அறிவிழந்த மானிடக் கூட்டம் விஞ்ஞானியின் திறமை மீது நம்பிக்கை இழந்து (!) சந்திர மண்டலத்திற்கு சென்ற வில்லேந்தி மற்றும் அவன் தோழன் உயிருடன் திரும்ப முடியாததற்கு காரணம் விஞ்ஞானிதான் என்று அவர் மீது அவசரப்பட்டு பழி சுமத்தி, அவரை அடித்துத் துவைத்து துவம்சம் செய்கிறது. குற்றுயிரும், கொலையுயிருமாய் மரண வாசலை நெருங்கிக் கொண்டிருக்கும் அந்த விஞ்ஞானி தன் உயிர் போகும் அந்தத் தருவாயிலும் பழுதான இயந்திரத்தை சரி செய்து வில்லேந்தியையும், அவன் தோழனையும் திரும்ப பத்திரமாக பூமிக்கு வரவழைக்கிறார். சந்திரனுக்கு மனிதனை அனுப்பி சோதனை செய்த முயற்சியில் தனக்கு முழு வெற்றி கிடைத்து விட்டது என்ற திருப்தியுடன் தன் உயிர் போகக் காரணமாக இருந்த மக்களையும் மன்னித்து, பரமேஸ்வரன், பார்வதியை வணங்கியபடியே உயிரை விடுகிறார்.



    தோள்பட்டை வரை நீளும் முற்றிலுமாக படர்ந்த, பஞ்சடைந்த, கலைந்த தலைமுடி. நடு வகிட்டிலிருந்து நெற்றியின் மீது இருபுறமும் கீற்றாய் படரும் வெண் முடிக் கற்றைகள். அகோரமான அருவருக்கத்தக்க மிகப் பெரிய சேதமடைந்த கருட மூக்கு. மூக்கின் கீழே வரைகோடிட்டாற் போன்ற தெரிந்தும் தெரியாத மெல்லிய மீசை. அடிக்கடி வாயிலிருந்து உதட்டோரமாய் அரணை போல வெளியே தள்ளும் நாக்கு. முழுதான கூன் விழுந்த முதுகு. கண்களுக்குக் கீழே காணச் சகியாத தடிமன் வீக்கங்கள். முகவாய்க்கட்டையிலிருந்து நீளும் சற்றே நீண்ட வெண் குறுந்தாடி. அறிவியல் ஆர்வத்தை அள்ளித் தெளிக்கும் அரிய பெரிய கண்கள். பருத்த கனத்த வயிறு. நீண்ட பிரில் வைத்த கருப்பு அங்கி. முதுமையை வெளிப்படுத்தும் சற்றே தள்ளாடிய தடுமாறும் ஓட்டமும் நடையுமான நடை. (அந்த சிம்மக் குரல் மட்டும் காட்டிக் கொடுக்கவில்லையென்றால் "யார் அது கணேசனா?" என்று அனைவரும் வாயடைத்துப் போவார்கள்) அப்படி ஒரு அபார ஒப்பனை. வித்தியாசம்... வித்தியாசம்... வித்தியாசம். ஆம். நடிப்பை ஆராய்ந்து முடித்த நடிப்புலக விஞ்ஞானிக்கு சந்திர மண்டல ஆராய்ச்சி செய்ய, அங்கு ஆள் அனுப்பும் இப்படி ஒரு வித்தியாச விஞ்ஞானி வேடம் இந்த 'குழந்தைகள் கண்ட குடியரசு' படத்தில். இதுவரை எந்த ஒரு படத்திலும் அவர் செய்திராத ரோல். நடிப்புக்கே ரோல் மாடலாக விளங்கியவருக்கு இந்த விஞ்ஞானி வேடம் சவால் விட்டு பின் "ஐயோ எமகாதகா' என்று எகிறிக் குதித்து அலறி இவரிடம் தோற்றோடிப் போனது. அறிவியல் ஆராய்ச்சி நிபுணர் வேடம் தரிக்க வேண்டும். அதுவும் அந்தக் கால கட்டத்திலேயே. இந்த ரோலை எப்படி உள்வாங்கிக் கொள்வது என்பதற்கு அடையாளம் தெரிந்து கொள்ள எவ்வித முகாந்திரமும் அப்போது இருந்திருக்க வாய்ப்பில்லை. மீடியாக்களோ, சேனல்களோ, டிவி பெட்டியோ, இணைய வலைத்தளங்களோ இல்லாத கால கட்டம். அறிவியல் சம்பந்தமாக அப்போது அல்லது அதற்கு முன்னால் எடுக்கப் பட்ட அயல் நாட்டு சினிமாக்களை முடிந்தால் பார்த்திருக்கலாம். அது சம்பந்தமான புத்தகங்கள் இருந்திருக்கலாம். படித்திருக்கலாம். ஆனால் இந்த ஜாம்பவான் கொடிகட்டிப் பறந்த அந்தக் காலத்தில் அதற்கெல்லாம் இவருக்கு நேரம் இல்லை. அப்படியே நேரம் இருந்து இவற்றையெல்லாம் பார்த்து நம்மவர் கிரகித்திருந்தாலும் பார்த்தவற்றின் பிரதிபலிப்பைக் நம்மிடம் காட்டிவிடக் கூடாது. நடிகர்களுக்கெல்லாம் நாயகர் என்பதால் காட்டிவிடவும் முடியாது. அப்படியே காட்டிவிட்டாலும் அதைக் கண்டுபிடித்து வெட்ட வெளிச்சமாக்கிவிடும் அறிவு சார்ந்த ஜாம்பவான்கள் நிறைய பேர் உண்டு. (நம்ம கோபால் சாரைப் போல என்று வைத்துக் கொள்ளுங்களேன்.) ஆனால் இந்த சரித்திர புருஷருக்கு இதெல்லாம் தேவையே இல்லயே! மற்றவர்களைத் தன் பக்கம் திருப்பித்தானே நம் திலகத்திற்குப் பழக்கம்! அடுத்தவர் பக்கம் திரும்பிப் பழக்கம் இல்லையே! அதனால்தான் இந்த சவால்மிகு பாத்திரத்தை சந்தித்து சரித்திர சாதனை ஆக்கினார் நம் சாதனை நாயகர்.



    வில்லேந்தி தலைவரை சந்திக்கப் போகும் போது தன்னுடைய ஆராய்ச்சிக் கூடத்தில் தரையில் அமர்ந்தபடியே பின் பக்கம் முதுகைக் காட்டி அமர்ந்தவாறு விண்வெளிக் கூண்டு போன்ற கலத்தில் உள்ளே நாயை வைத்து மூடி, நாய்க்கு "வலது புறம் விசை... இடது புறம் விசை...இப்போது வரிசையாக எல்லாம்" என்று இயக்க command கொடுக்கும் அந்தக் கணமே நடிப்பு அரக்கன் நயமாக நடிகர் திலகத்துடன் சங்கமிக்க ஆரம்பித்து விடுகிறான். தன்னுடைய கட்டளையை உள்ளே உள்ள நாய் சரியாக நிறைவேற்றியவுடன் "மனிதனால் செய்ய முடியாததை ஒரு நாய் நீ செய்துவிட்டாயே" என்ற தொனியில் "மகா புத்திசாலிடா நீ" என்று அவரது கம்பீரக் குரலிலே கரைபுரண்டோடும் உற்சாகம் இருக்கிறதே....(இத்தனைக்கும் இன்னும் முகத்தைக் காட்டவில்லை).

    இந்த சம்பவங்களைப் பார்க்கும் வில்லேந்தியும், அவனுடன் வந்தவர்களும் தன்னையறியாமல் கொல்'லென்று ஏளனமாகச் சிரித்து விட, சட்டென்று முகம் திருப்பி (யப்பா.. நடிகர் திலகமா அது!) நாக்கை பாம்பு போல வெளியே நீட்டி "யாரது? என்று மிரட்டும் தொனி வில்லேந்தி கூட்டத்தை மட்டுமல்ல நம்மையும் மிரள வைக்கிறதே...எள்ளி நகையாடியவர்களை சாடிவிட்டு 'சரித்திரத்தில் யாருமே சாதிக்க முடியாத காரியத்தை நான் சாதித்தேன்" (உண்மை! உண்மை! படத்தில் அவர் விஞ்ஞானியாய் செய்த சாதனையை சொன்னாலும் நடிகர் திலகம் நடிப்பில் தன்னிகரில்லா சாதனை புரிந்ததுதானே நமக்கு ஞாபகம் வருகிறது!) (இந்த வசனத்தின் மூலம் விந்தனின் ஆழ்மனதில் நடிகர் திலகம் எவ்வளவு தூரம் ஊடுருவியுள்ளார் என உணர முடியும்) என தான் கண்டு பிடித்த சாதனத்தைப் பற்றி கூறி பெருமையில் தனக்குத் தானே பூரித்துக் கொள்வது ஜோர். "சிரிக்கிறார்கள்" என்று பதிலுக்கு அவர்களைப் பார்த்து "ஹேஹே" என கைகளால் நையாண்டி செய்து பழித்துக் காட்டி நகைப்பதோ இன்னும் ஜோர்.



    "சந்திர மண்டலத்துக்கு நீங்களே போயிட்டு வரக் கூடாதா?" என ஒரு அம்மணி கேட்க "நான் போனால் இங்குள்ள இயந்திரங்களையெல்லாம் யார் இயக்குவது?" என்று எகத்தாள எதிர்க் கேள்வி வேறு கேட்பார். இயக்குவது என்ற வார்த்தையின் போது கைகள் இயந்திரங்களை சர்வ சாதாரணமாக handle செய்வது போன்ற பாவனயில் பின்னுவார்.

    வில்லேந்தி அவரைப் புரிந்து கொண்டு, "என்னை சந்திரனுக்கு அனுப்புங்கள்" என்றவுடன் அதை கொஞ்சமும் எதிர்பாராமல் ஆச்சர்யம், வியப்பு, சந்தோஷம், பெருமிதம் அனைத்தையும் ஒரு வினாடியில் முகத்தில் கொண்டு வந்து கொட்டுவார். அத்துணை பாவங்களும் ஒன்றன் பின் ஒன்றாக வராமல் ஒரு சேர முகத்தில் ஒன்றாக சட்டென சங்கமிக்கும். வில்லேந்தியை தன் வயிற்றோடு சேர்த்து அணைத்துக் கொண்டு "பலே! சிறுவனாய் இருந்தாலும் சிங்கமாய் இருக்கிறாய்" என்று சடுதியில் அவனை நமக்கு பெருமை பூரிக்க சுட்டிக் காட்டுவார். அற்புதமாய் இருக்கும். பின் இருவரையும் சந்திரனுக்கு அனுப்ப தயாராவார். வில்லேந்தியும் அவனது தோழனும் விசேஷ கவசங்கள் அணிந்து நிற்கையில் இருவரின் உடல் நிலையை பரிசோதிப்பார். இருவரின் நாடிகளைப் பிடித்துப் பார்த்து 'நாடித் துடிப்பு நன்றாக இருக்கிறது' என்பதை தன் தலையாட்டலில் விளக்குவார். நாக்கை மட்டும் மறக்காமல் அடிக்கடி வெளியே தள்ளியபடி இருப்பார். எந்த ஒரு இடத்திலும் தவறு நேரவே நேராது. (அதுதான் நடிகர் திலகம் என்கிறீர்களா!)

    மீன் வடிவிலான விமானத்தில் இருவரையும் ஏற்றி விட்டு சற்று பதைபதைத்தவாறு அனைவரையும் அழைத்துக் கொண்டு இயந்திரங்கள் இருக்கும் பகுதிக்கு வருவார். அந்த நடையில் ஒரு பதட்டம் தெரியும். என்னதான் பெரிய அறிவார்ந்த விஞ்ஞானியாய் இருந்தாலும் முதன் முதலில் தன்னுடைய கண்டுபிடிப்பான இயந்திரத்தில் மனிதர்கள் பயணம் செய்கிறார்களே என்ற தன் இயல்பு மீறிய படபடப்பு உணர்வினை அந்த நடையிலேயே காட்டி விடுவார். இயந்திரங்களை இயக்கிக் கொண்டிருக்கையில் ஒரு இயந்திரம் எதிர்பாராமல் வெடித்துச் சிதறும்போது உள்ளுக்குள் இவர் வெடித்துச் சிதறுவது நமக்குப் புரியும்... தெரியும்.... கைகளை ஒன்றோடொன்று பிசைந்தவாறு ஒருகணம் செய்வதறியாது குழம்பி நிற்பார். மறு வினாடி தன்னம்பிக்கை துளிர்விட "சீக்கிரமே சரி செய்து விடுகிறேன்" என்று வில்லேந்தி நண்பன் காதலியிடம் தைரியம் சொல்லுவார்.

    அதற்குள் கொந்தளிக்கும் ஜனம் அவரது திறமை மீது அவநம்பிக்கை கொண்டு கற்களால் அவரைத் தாக்கும் போதும், பின் ஜனத்திரள் அவரை சூழ்ந்து கண்மண் தெரியாமல் தாக்கும் போதும் அடி வாங்கும் பாவனைகளில் நம்மை பதற வைப்பார். அடிதாங்க மாட்டாமல் கீழே வீழ்ந்து கிடக்கும் சமயத்தில் தான் அனுப்பிய கலம் திரும்பி வரும் சப்தம் கேட்டதும்

    "அதோ பாருங்கள்... அவர்கள் வந்து விட்டார்கள்" என்று தரையில் ஒரு காலை முட்டி போட்டவாறு மறு காலைக் கெந்திக் கெந்தி படுத்தவாறே எழுந்திருக்க இயலாமல் ஒருக்களித்தாற் போன்று தவழ்ந்தவாறே தடுமாற்றத்துடன் நகர்ந்து செல்வதை என்னவென்று எழுதுவது!. எழுத்துகளுக்கும், வார்த்தை வர்ணிப்புகளுக்கும் அப்பாற்பட்ட மாமேதை அல்லவோ அவர்! பின் தட்டுத் தடுமாறி எழுந்து கைகளை கால்களாகி தரையில் ஊன்றி பின் மறுபடி எழுந்து இயந்திரத்தை நிறுத்தி சட்டென்று முடியாமல் கீழே சாய்ந்து விடுவார். வில்லேந்தி, அவனது நண்பனுடன் திரும்பி வந்தவுடன் நண்பனின் மடியில் சாய்ந்து விடுவார். கைகள் துவண்டு விடும். முகம் வெளிறி வலியின் வேதனைகளை பிரதிபலிக்கும். "ஆண்டவன் எனக்கு நீண்ட ஆயுளைக் கொடுத்திருந்தால் எத்தனையோ அற்புதங்களை சாதிக்கத் திட்டமிட்டிருந்தேன். நான் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்" என்று அமைதியாக மரண தருவாயில் அவர் கூறுவதை நான் கண்ணுற்ற போது எனது கண்கள் பனித்தன. (உண்மையாகவே அவர் இன்னும் உயிரோடு இருந்திருந்தால், நல்ல உடல் நலத்துடன் இருந்திருந்தால் இன்னும் எவ்வளவோ அற்புதங்களை நிகழ்த்திக் காட்டியிருப்பார். நமக்குக் கொடுப்பினை இல்லையே! இன்னும் ஆயிரம் வருடங்கள் மறக்க முடியாத சாதனைகளை அவர் ஆயுளில் அவர் நிகழ்த்தியிருக்கிறாரே! அது மட்டும் சாந்தப்படுத்திக் கொள்ளவேண்டியதுதான்)



    பின் அவரை கைத்தாங்கலாக அழைத்து வந்து பரமேஸ்வரன் பார்வதி தெய்வச் சிலைகளின் முன் அமரச் செய்தவுடன், "பரமேஸ்வரா... இந்த மக்கள் என்ன செய்கிறார்கள் என்று அவர்களுக்கே தெரியாது... இவர்களை மன்னித்து விடு",என்று அமைதியாக உயிரை விடுவார்.

    கிட்டத்தட்ட பத்து நிமிட நேரம்தான். பத்து நிமிடத்திலும் பத்தாயிரம் முகபாவங்கள். நாம் காணாத பல்வேறு உடல்மொழிகள். அற்புதமான பாத்திரம். எந்த நடிகன் தான் ஏற்றிருக்கும் பாத்திரத்திற்காக தன்னை, தன் உருவத்தை உருக்குலைத்தது, சிதைத்துக் கொள்கிறானோ அவனே மக்கள் மனதில் நிற்பான்... அவனே நடிகன். ஈகோ, இமேஜ் என்ற மாய்மாலங்களையெல்லாம் உடைத்தெறிந்து இந்த நடிப்புலக ஞானி இந்தப் படத்தில் கூனனான, குரூபியான விஞ்ஞானியாக வி(ந்)த்தைகள் புரிந்து வியக்க வைக்கிறார் வழக்கத்திற்கும் மேலாக.

    என்றென்றும் வாழ்க நம் தெய்வத்தின் புகழ்.

    இந்தப் படத்தில் தலைவர் போர்ஷனுக்குதான் முக்கியத்துவம் கொடுத்து எழுதியிருக்கிறேன். வித்தியாசமான கோணத்தில் தலைவரை சிந்தித்துப் பார்த்த கதாசிரியர், ஒப்பனைக் கலைஞர் மற்றும் இயக்குனருக்கு நன்றி. 1960-லேயே சந்திர மண்டலத்திற்கு விண்கலம் மூலம் மனிதனை அனுப்பும் முயற்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து அதுவும் அந்த விஞ்ஞானி பாத்திரத்தில் தலைவரை கற்பனை செய்து பார்த்து நடிக்க வைத்து, நாம் இதுவரை காணாத புதிய பரிமாணத்தில் அவரை பரிமளிக்கச் செய்தது நமக்கு ஆச்சர்யம் கலந்த ஆனந்தத்தை அளிக்கிறது. இதில் நடித்துள்ள குழந்தைகளும் அற்புதமாக நடித்திருப்பார்கள். வில்லேந்தியாக வரும் கதாநாயகச் சிறுவன்தான் சற்று அதிகப் பட்சமாகப் பண்ணியிருப்பான். ஜாவர் காமெடி கலந்த வில்லன் தளபதி வேடத்தில் கனப் பொருத்தம். பந்துலு, ராஜம்மா as usual. காமெடிக்கு சாரங்கபாணியும், குலதெய்வமும். படமும் மாயாஜாலம், சந்திர மண்டலம், குழந்தைகள் குறும்புகள், வீர வசனங்கள் என்று போரடிக்காமல் செல்லும். குழந்தைகளோடு குதூகலித்துப் பார்க்க இது ஒரு நல்ல படமே. பாடல்களைப் பற்றி அவ்வளவாக ஒன்றும் சொல்வதற்கு இல்லை.


    (இந்தப் படத்தின் DVD மற்றும் CD க்கள் எங்கும் கிடைப்பதாகத் தெரியவில்லை. கண்டிப்பாக சந்தர்ப்பம் வரும்போது மிஸ் செய்யாமல் பாருங்கள். புதியதொரு பரிணாமத்தை நடிகர் திலகத்திடம் காண்பீர்கள். இதனுடைய தெலுங்கு பதிப்பு (பிள்ளலு தெச்சின செல்லனி ராஜ்ஜியம்) இணையத்தில் உள்ளது. அதைப் பார்த்தும் ஆனந்தப் படலாம். ஆனால் நம்மவருக்கு சொந்தக்குரல் அல்ல. முக்கமாலாதான் நடிகர் திலகத்திற்கு தெலுங்கில் பின்னணி கொடுத்திருப்பார். (அப்படிதானே முரளி சார்! ஜக்கையா என்றும் சந்தேகமாக இருக்கிறது). தமிழில் நடிகர் திலகத்தின் சிம்ம கர்ஜனையில் பார்ப்பதே தனி சுகம். கௌரவ தோற்றம் என்றாலும் இப்படிப்பட்ட பிரமிக்க வைக்கும் நம்மவரின் நடிப்பைக் கொண்டுள்ள இந்தப் படமும், இதைப் போன்ற வேறு சில படங்களும் வெட்ட வெளிக்கு வந்து ஒளி வீச முடியாமல் குடத்தினுள் இட்ட விளக்காகவே ஒளி வீசுகின்றன. இதில் நிறையவே எனக்கு வருத்தம் உண்டு. அந்த ஆசையில் முன்னம் எழுதப்பட்டதுதான் 'பக்த துக்காராமு'ம் கூட. நம் ரசிகர்கள் கூட இவற்றிக்கெல்லாம் அதிக முக்கியத்துவம் தருவதில்லையோ என்ற சந்தேகமும், அது சார்ந்த வருத்தமும் எனக்கு அடிக்கடி எழுவதுண்டு. இப்படிப்பட்ட சில அபூர்வ படங்களில் தலைவரால் உழைக்கப்பட்ட அசாதாரணமான உழைப்பு சூரியக் கதிர்களாய் உலகெங்கும் பரவி ஒளி வீசி, அவர் புகழ் அகிலமெல்லாம் பிரகாசிக்க வேண்டும் என்ற ஆசையில் வடிவமைக்கப்பட்டதுதான் இந்த ஆய்வு. இதில் ஒரு சதவிகிதம் வெற்றி பெற்றால் கூட எனக்கு அளப்பரிய ஆனந்தம் கிட்டும் என்பது மட்டும் திண்ணம். நன்றி!)


    அன்புடன்,
    வாசுதேவன்.
    வாசுதேவன் சார்/ ராகவேந்திர சார்,

    "குழந்தைகள் கண்ட குடியரசு" வைப் பற்றி எழுதி கலக்கிடீங்க, பிரமாதம் உங்கள் எழுத்து, இப்பொழுது எங்களை எல்லாம் அந்த படத்தைப் பார்க்கத் தூண்டி விட்டீர்களே!

    பழையப் பொக்கிஷங்களை இவ்விடம் பதிய வைத்து, பிரமாதம் ராகவேந்திர சார்.

    ஆனந்த்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •