டியர் முரளி,
'இரத்ததிலகம்' பற்றிய ஆய்வு மிக அருமை.
இப்படம் இந்திய சீன போரை மையமாகக் கொண்டதாயினும், போர் முடிந்தபின் எடுக்கப்பட்டது. (உ-ம்; நீங்கள் குறிப்பிட்ட பத்திரிகைச்செய்தி). ஆனால் போர் நடந்துகொண்டிருக்கும்போதே, நடிகர்திலகம் தன் சொந்த செலவில் 'சிங்கநாதம் கேட்குது' என்ற டாக்குமெண்ட்டரி படத்தை எடுத்து இலவசமாக வெளியிட்டார். இந்த டாக்குமென்டரியில் அப்போதைய பிரபல நடிகர்கள் (ஜெமினி, தங்க்வேலு உள்பட பலர்) இலவசமாக நடித்துக்கொடுத்தனர். தியேட்டரில் அரைமணி நேரம் ஒடும் இப்படம் எல்லாதிரையரங்குகளிலும் காண்பிக்கப்பட வேண்டும் என்று அன்றைய காங்கிரஸ் அரசால் உத்தரவிடப்பட்டு, அதன்படி தமிழகத்தின் அனைத்து திரையரங்குகளிலும் இடைவேளை முடிந்து, மெயின் படம் துவங்கும் முன்பாக காண்பிக்கப்பட்டது. அதிலும் தேசத்தலைவர்கள் பலர் காண்பிக்கப்பட்டனர். பார்த்த மக்கள் அனைவரும் தேசப்பற்றால் உந்தப்பட்டனர். யுத்தநிதியாக பணமாகவும், பொருட்களாகவும், நகைகளாகவும் அள்ளி வழங்கினர். நாடே ஒன்றுபட்ட நின்ற நேரம் அது. பாதுகாப்பு அமைச்சர் கிருஷ்ண மேனன், உள்துறை அமைச்சர் ஒய்.பி.சவான் ஆகியோரைக்கொண்ட பாதுகாப்புக்குழுவில், தி,மு,கவைச்சேர்ந்த நாஞ்சில் மனோகரனையும் இடம் பெற வைத்தார் அண்ணாதுரை.
ஆனாலும், சுதந்திரம் பெற்றதிலிருந்து நமது பாதுகாப்புக்காக ராணுவத்தை பலப்படுத்த வேண்டும் என்று தேவையில்லாத நேரமாக இருந்ததால், அந்த போரில் இந்தியா தோற்றது. லடாக் பகுதி சீனர் வசமானது. (இந்தியா தோற்ற ஒரே போர் அதுதான்). அதன்பின்னர்தான் அண்டைநாடுகளின் வஞ்சக எண்ணத்தையறிந்த நேரு, ராணுவத்தை பலப்படுத்த முனைந்தார். நேருவின் உடல்நிலை பலவீனப்பட்டதற்கு சீனப்போரில் அடைந்த தோல்வியும் முக்கிய காரணம்.
இந்நிலையில்தான் இந்திய சீனப் போரை மையமாக வைத்து கண்ணதாசன் இப்படத்தை தயாரித்தார். ஆனாலும் நீங்கள் சொன்ன பலகுறைகளோடு.... தேவையில்லாத, செயற்கையான கல்லூரிக்காட்சிகள். அதோடு 'ஒதெல்லோ' நாடகத்தின் நீளம் அதிகமானதால் திகட்டிப்போனது.
ஆனாலும் போர்முனைக்காட்சிகள் உணர்ச்சியை ஊட்டின. 'பனி படர்ந்த மலையின்மேலே' பாடலின் ஒரு வரியில்...
பண்பில் நிறைந்த மகன், வள நாட்டின் மூத்த மகன்,
இருக்கின்றான் தாயே, ஏங்காதே என்றுரைத்தேன்
என்ற வரிகளின்போது, தனது அலுவலக அறையில் இருக்கும் தொப்பியில்லாத நேருவைக்காண்பிக்கும்போது நம் உணர்ச்சிகள் எல்லையை மீறும். (ஓடுவது காங்கிரஸ் ரத்தமல்லவா?)
சாவித்திரியின் சீனக்கணவராக வரும் சண்முகசுந்தரத்துக்கு இதுதான் முதல் படம். முதல் படத்திலேயே நடிகர்திலகத்துடன் நடித்ததை அவர் அடிக்கடி பெருமையாகச்சொல்வார். (பின்னர் 'கர்ணனில்' தேரோட்டி சல்லியனாக வந்து, போர்க்களத்தில் கர்ணனின் தேரை பள்ளத்தில் விட்டு விட்டுப்போகும் காட்சிதான் நமக்குத்தெரியுமே).
படத்தில் இடம்பெறும் இன்னொரு இனிமையான பாடல், புஷ்பலதாவுக்காக எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய 'வாடைக்காற்றம்மா... வாடைக்காற்றம்மா, வாலிப வயசு நாளுக்கு நாளா வாட்டுவதென்னம்மா'. அன்றைக்கு இலங்கை வானொலியில் பட்டையைக்கிளப்பிய பாடல்.
'பசுமை நிறைந்த நினைவுகளே' பாடல், கல்லூரி ஃபேர்வல் விழா என்று மட்டுமில்லை. எந்த ஒரு பிரிவுபசார நிகழ்ச்சியிலும் ஒலிக்கும் பாடல். அதிலும் அந்த வரிகள்...
'எந்த ஊரில் எந்த நாட்டில் என்று காண்போமோ
எந்த அழகை எந்த விழியில் கொண்டு செல்வோமோ'
அப்படியே மனதை உருக வைக்கும்.
யாரும் நினைத்துப்பார்க்காத நேரத்தில் இரத்தத்திலகம் படத்தோடு வந்துள்ளீர்கள். இன்ப அதிர்ச்சி.
'ஆண்டவன் கட்டளை', 'குலமகள் ராதை', 'இரத்தத்திலகம்' பட ஆய்வுகளைத்தொடர்ந்து அடுத்தது என்ன?. எல்லோருக்கும் அதிகம் தெரியாத வடிவுக்கு வளைகாப்பு, கல்யாணியின் கனவன், வளர்பிறை, சித்தூர் ராணி பத்மினி இவற்றில் ஒன்றாக இருந்தால் நன்றாக இருக்கும்
Bookmarks