இரத்த திலகம் - Part I
தயாரிப்பு : நேஷனல் பிலிம்ஸ்
இயக்கம்: தாதா மிராசி
வெளியான நாள்: 14.09.1963
கல்லூரியில் இறுதியாண்டு படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் குமார், கமலா மற்றும் மதுரை. மதுரையின் தங்கை கமலா. கமலாவின் பெற்றோர் சிறு வயதிலேயே சைனாவின் தலைநகரமாம் பீகிங் (அன்றைய பேர்) நகரத்தில் செட்டிலாகி விட்டவர்கள். படிப்பிற்காக கமலா தமிழகத்திற்கு வந்திருக்கிறாள். குமாரும் கமலாவும் எப்போதும் எலியும் பூனையுமாக இருக்கிறார்கள். எதற்கெடுத்தாலும் சண்டை போட்டுக்கொண்டிருக்கும் இவர்கள் சூழ்நிலை காரணமாக கல்லூரி கலை விழாவில் ஒதெல்லோ நாடகத்தில் இணைந்து நடிக்க நேர்கிறது. அந்த இணைதல் அவர்கள் அடி மனதில் ஒருவர் மேல் ஒருவர் வைத்திருந்த ஆசையை வெளிக் கொண்டுவருகிறது. இருவரும் ஒருவரை ஒருவர் விரும்பும் செய்தியை சொல்லும் போது கமலாவின் தந்தை ஆபத்தான நிலைமையில் இருப்பதால் உடன் சைனாவிற்கு கிளம்பி வருமாறு அழைப்பு வர அவள் கிளம்பி செல்கிறாள். சிறிது காலத்திற்குள்ளாகவே அவள் தந்தை காலமாகி விடுகிறார், அங்கே இருக்கும் ஒரு தமிழ் குடும்பம் அவர்களுக்கு உறுதுணையாக இருக்கிறது. அந்த குடும்பத்தின் ஒரே மகன் டாக்டராக இருக்கிறான்.
குமாருக்கு தாய் தந்தை இல்லை. தந்தை சுதந்திரப் போராட்டத்தில் உயிர் நீத்த தியாகி. தாத்தா பாட்டி மட்டுமே உள்ளனர். பம்பாயில் ஒரு வானொலி நிலையத்தில் வேலைக்கு சேரும்படி குமாருக்கு கடிதம் வருகிறது. அந்த நேரத்தில் சைனா அத்து மீறி நமது எல்லைப் பகுதிக்குள் நுழைந்து சில பகுதிகளை கைப்பற்றிய செய்தி வருகிறது. பஞ்சசீல கொள்கையில் உறுதியாக நின்ற இந்தியா, சைனாவை நண்பனாக நினைக்க, சைனாவோ நம்மை ஆக்ரமித்தது. நமது நாட்டை காப்பாற்ற வீட்டிற்கு ஒருவர் முன் வரவேண்டும் என்று (அன்றைய) பாரதப் பிரதமர் ஜவஹர்லால் நேரு வானொலியில் உரையாற்றுவதை கேட்கும் குமார் ராணுவத்தில் சேர முடிவு செய்கிறான். வானொலியில் இருந்து வந்த ஆர்டரை கிழித்து எறிகிறான். ராணுவத்தில் சேர கூடாது என்று தாத்தா மன்றாட, அவரை சம்மதிக்க வைக்கிறான்.
அடுத்து போர் முனையில் குமார். ராணுவத்தில் ஒரு மேஜராக பொறுப்பேற்கும் குமார் இழந்த இடங்களை மீட்க வியூகம் வகுக்கிறான். சீனர்கள் நமது இடங்களை பிடிப்பதற்கே பணம் பெற்றுக் கொண்டு நமது நாட்டினரே துரோகிகளாக மாறி உளவு சொன்னதுதான் காரணம் என்பதை தெரிந்து கொள்ளும் குமார் அவர்களில் ஒருவனை சுட்டு கொல்கிறான். துரத்தும் சீன ராணுவத்திடமிருந்து தப்பித்து ஓடும் குமார் ஒரு வீட்டில் தஞ்சம் புகுகிறான். அந்த வீட்டில் இருக்கும் வயதான தாய் அவனை காப்பாற்ற, தனியறையில் தன் திருமணமாகாத மகளுடன் சேர்ந்திருக்க சொல்லிவிட்டு அவனை தேடி வரும் ராணுவத்திடம் தன் மகளும் மருமகனும் உறங்குவதாக சொல்லி காப்பாற்றுகிறாள். அவனுக்கு உணவு கொடுத்து உபசரிக்கிறாள். மகன் என்ன வேலை செய்கிறான் என்று அவளுக்கு தெரியவில்லை. அந்த நேரத்தில் அவளது மகனின் சடலம் கொண்டு வரப்படுகிறது. தான் கொன்றது அந்த தாயின் மகனைத்தான் என்று அறியும் குமார் துடித்து போக, அந்த தாயோ விஷயத்தை புரிந்துக் கொண்டு நான் பெற்ற மகன் தேச துரோகியானான். உன்னை போன்ற ஒரு வீரனை என் மகனாக நினைக்கிறேன் என்கிறாள். மிகுந்த கனத்த மனதோடு குமார் அந்த இடத்தை விட்டு விலகி வருகிறான்.
இதே நேரத்தில் போர் ஏற்பட்டதால் சைனாவில் உள்ள இந்தியர்கள் திருப்பி அனுப்படுகின்றனர். போகாதவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்படுகின்றனர். இந்தியாவிற்கு போய் விடுவோம் என்று தாய் சொல்ல கமலா மறுக்கிறாள். சைனாவிற்கு விசுவாசமாக அங்கேயே தங்கி விடப் போவதாக சொல்லும் கமலாவை தாய் சபிக்கிறாள். என்ன சொல்லியும் கமலா வர மறுப்பதால் தாய் மட்டும் கிளம்பி இந்தியா செல்கிறாள். இவ்வளவு செய்தும் சீன அதிகாரிகளுக்கு அவள் மேல் நம்பிக்கை வராமல் ஒரு சீன குடிமகனை அவள் திருமணம் செய்து கொள்ள தயாரா என்று கேட்க கமலா சம்மதிக்கிறாள். குடும்ப நண்பரின் டாக்டர் மகனையே திருமணம் செய்து கொள்கிறாள். ஆனால் முதலிரவன்று தன்னை நெருங்கும் கணவனிடம் நாடு இன்றுள்ள நிலையில் நாம் மகிழ்வாக இருப்பது சரியாக இருக்காது என்று கூறி விலகுகிறாள். அவனும் அதை அதை ஒப்புக் கொள்கிறான். டாக்டர் என்ற முறையில் காயம்பட்ட வீரர்களுக்கு மருத்துவம் செய்ய அவனை போர் முனைக்கு சீன அரசாங்கம் அனுப்பி வைக்க, அவனுடன் செவிலயராக சேவை செய்ய கமலாவும் புறப்படுகிறாள்.
போர் முனையிலிருக்கும் குமாருக்கு கமலா நினைவு வருகிறது. அந்நேரம் அங்கே அவனுக்கு கிடைக்கும் ஒரு தமிழ் பத்திரிகையில் இந்திய- சைனா போர் நடக்கும் போது ஒரு சைனாக்காரனை ஒரு தமிழ் பெண் திருமணம் செய்துக் கொண்டாள் என்ற சேதியுடன் கமலாவின் புகைப்படமும் வெளியாகியிருக்க மனம் உடைந்து போகிறான் குமார். அவளை அந்த நிமிடம் முதல் அடியோடு வெறுக்க தொடங்குகிறான்.
ஆக்ரமித்துள்ள பகுதிகளில் கமலாவும் அவளது கணவனும் சென்று சீன ராணுவத்தோடு சேர்ந்து தங்குகிறார்கள். அவர்கள் வகுக்கும் போர் திட்டங்களை எல்லாம் கமலா குறிப்பெடுத்து இந்திய படைகளின் கைகளில் கிடைக்குமாறு செய்கிறாள். அவை எல்லாமே தற்செயலாய் குமார் கையிலே கிடைக்கிறது. அதை வைத்து படை நடத்தும் குமார் எதிரிகளை பல இடங்களில் வீழ்த்துகிறான். தாங்கள் போடும் திட்டங்கள் எல்லாம் எப்படி இந்திய படைகளுக்கு தெரிகின்றன என்று சந்தேகப்படும் சீன இராணுவம் ஒரு நாள் கமலாவை பிடித்து விடுகிறது. விசாரணையில் கமலா குற்றவாளி என்று தீர்ப்பாகி மரண தண்டனை விதிக்கப்படுகிறது. தண்டனையை நிறைவேற்றும் நேரம் இந்திய படைகள் அங்கே தாக்குதல் நடத்த கமலா தப்பி விடுகிறாள்.
இதனிடையே போர் முனையில் ஒரு இடத்தை கைப்பற்றும் முயற்சியில் தன் படையிடமிருந்து பிரிந்து விடும் குமார் எதிரிகள் கையில் அகப்பட்டுக் கொள்கிறான்.அவனை விசாரித்து ஒரு இடத்தில் அடைத்து வைக்க அங்கிருந்து தப்பி ஓடி வரும் அவன் ஒரு பாழடைந்த மண்டபத்தில் ஒளிந்து கொள்ளும் நேரத்தில் அங்கே கமலாவும் இருப்பதை பார்க்கிறான். அவளை தேச துரோகி என்று குற்றம் சாற்றும் குமார் அவளை கொல்ல முற்படுகிறான். அந்நேரம் எல்லா உண்மைகளையும் கமலா சொல்ல அவனுக்கு நிலைமை புரிகிறது. அவளை ஏற்று கொள்ள நினைக்கும் குமாரிடம் தனக்கு திருமணமாகி விட்டதால் அவனை ஏற்று கொள்ள முடியாது என்று மறுப்பு தெரிவிக்கிறாள். இருவரும் அங்கிருந்து தப்பி வரும் நேரம் அவள் கணவன் ஒரு சாமியார் வேடத்தில் வந்து அவளை சுட்டு விடுகிறான். அவனை கொன்று விட்டு அந்த பகுதியில் சீன ஆக்ரமிப்பை முறியடிக்கும் விதமாக சீன் கொடியை இறக்கி விட்டு மூவர்ண இந்திய கொடியை ஏற்றி வைக்கும் குமாரை எதிரிகள் நெற்றியிலே சுட அந்த ரத்த திலகத்துடன் இழந்த இடத்தை மீட்டு விட்டோம் என்ற நிறைவுடன் உயிர் துறக்கிறான்.
இரத்த திலகம் - Part II
இந்த படம் ஒரு உயரிய நோக்கத்திற்காக எடுக்கப்பட்டது. தி.மு.கவிலிருந்து விலகி தமிழ் தேசிய கட்சி கண்ட கண்ணதாசன் தன் தேசப்பற்றை இந்த படம் தயாரித்ததன் மூலமாக வெளிப்படுத்தினார். சுதந்திர பாரதம் நான்கு போர்களை சந்தித்திருக்கிறது. [கார்கிலையும் சேர்த்தால் ஐந்து] ஆனால் சீனப் படையெடுப்பு ஏற்படுத்திய கோவம் மிக பெரியது. காரணம் பாகிஸ்தான் பற்றி அனைவருக்கும் தெரியும். ஆனால் சைனா நண்பனை போல் நடித்து நம்மை ஏமாற்றியது அதனால் மக்கள் கோபம் அதிகமாக இருந்தது.
இப்படிப்பட்ட நேரத்தில் மக்களின் பூரண ஆதரவு அரசுக்கு இருக்க வேண்டும் என்று மத்திய அரசு முடிவு செய்தது. ஆகவே பிரிவினை கோரிக்கைக்களை முன் வைக்கும் எந்த ஒரு அமைப்பும் தடை செய்யப்படும், அதன் தலைவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று அறிவித்தது [நமது மாநிலத்தின் வீராதி வீரர்கள் எல்லாம் பெட்டிப் பாம்பாக அடங்கி போனது தனிக் கதை]. இந்த சூழ்நிலையில் கண்ணதாசன் இந்த படம் எடுத்தார். குறை சொல்ல முடியாத முயற்சி. ஆனால் கதை மற்றும் திரைக் கதையமைப்பில் போதிய கவனம் செலுத்தவில்லை என்பது உண்மை
இந்திய சீன போரைப் பற்றி படம் எடுக்க வேண்டும். அதற்காக நாயகியை சைனாவில் பிறந்து தமிழ்நாட்டில் படிக்கும் பெண்ணாக கதை எழுதியாகி விட்டது. போர் நடக்கும் போது அவள் சைனாவில் இருப்பது போலவும் சந்தர்ப்பத்தை அமைத்தாகி விட்டது. இந்தியர்கள் அனைவரும் நாடு திரும்பலாம் என்று சொன்ன பிறகும் நாயகி அங்கேயே இருப்பது ஏன் என்று ஒரு முடிச்சு விழுகிறது. ஆனால் முடிவில் நாயகி சொல்லும் காரணம் [எப்படி சைனா வெளியில் நட்பு பாராட்டி தீடீரென்று இந்தியா மீது படையெடுத்ததோ அது போல நானும் அவர்கள் பக்கம் இருப்பது போல நடித்து அவர்களை கவிழ்க்க முயற்சி எடுத்தேன்] வலுவாக இல்லை. ஏன் என்றால் அவர் நாடு திரும்ப வேண்டாம் என்று முடிவெடுக்கும் போது குடும்ப நண்பரின் மகனை திருமணம் செய்து கொள்ள போகும் எண்ணமே அவருக்கு இல்லை. அப்படியிருக்க இப்படி திருமணம் செய்து கொண்டு போர் முனைக்கு போய் உளவு சொல்வோம் என்று எப்படி திட்டம் போட முடியும்?
அது போல நாயகன் எடுத்தவுடன் மேஜர் பதவிக்கு வருவதும் அப்படியே. ஆனால் கதையை நகர்த்தி செல்ல இவை தேவை என்பதால் லாஜிக்கை மறந்து விடலாம். தந்தைக்கு உடம்பு சரியில்லை என்றவுடன் நாயகி மட்டுமே போகிறாள். அவள் அண்ணன் அதைப் பற்றி கவலைப்படவே இல்லை.
மற்றொரு குறை. சைனா நம் மீது போர் தொடுத்தது 1962 அக்டோபர் 20ந் தேதி. அப்போது நாயகன் படிப்பை முடித்து விட்டு ராணுவத்தில் சேருகிறான். ஆனால் அதற்கு முந்தைய காட்சி ஒன்றில் நாகேஷ் பேப்பர் கடையில் புத்தகம் வாங்கும் போது அங்கே தொங்கும் தினத்தந்தி போஸ்டரில் காமராஜர் ராஜினமா பற்றி ---- கருத்து என்று போட்டிருக்கிறது. காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த வேண்டி மூத்த தலைவர்கள் அரசு பதவிகளை விட்டு விலகி கட்சி பணியாற்ற வேண்டும் என்ற கே பிளான் அதாவது காமராஜ் பிளான் அறிவிக்கப்பட்டது 1963 வருடம் ஜூலை/ஆகஸ்ட் மாதம். அதன்படி பெருந்தலைவர் பதவி விலகியது 1963 வருடம் அக்டோபர் 2 அன்று. இதை கவனித்திருக்கலாம். 2008-களிலே கூட இது போன்ற தவறுகள் நடக்கும் போது 45 வருடங்களுக்கு முன் வந்த படத்தில் இது ஒன்றும் பெரிய விஷயமில்லை என்றாலும் திரைகதையமைப்பு இன்னும் சுவையாக பின்னப்பட்டிருந்தால் இப்படிப்பட்ட நெருடல்கள் மறந்திருக்கும்.
நடிகர்களை பொருத்த வரை நடிகர் திலகம் நிறைந்து நிற்கும் கதை. மறுபடியும் சொல்லாமல் இருக்க முடியவில்லை. ஓவர் என்ற எண்ணமே மனதில் தோன்றாது. படம் முழுக்க இயல்பு.
முதல் பாதியில் படு காஷுவலாக வருவார். சாவித்திரியை கிண்டல் செய்வது எல்லாம் ரொம்ப இயல்பாக பண்ணியிருப்பார். இரண்டாம் பகுதியில் சீரியஸ். ஆனால் தேவையறிந்து பரிமாறியிருப்பார். ஷேக்ஸ்பியரின் மிக பிரபலமான ஒதெல்லோ நாடகம் தமிழ் சினிமாவில் இரண்டு முறை வந்திருக்கிறது. இரண்டுமே நடிகர் திலகத்தின் படத்தில் தான். அன்பு திரைப்படத்தில் தமிழில் வந்தது [அந்த விளக்கு அணைந்தால் இந்த விளக்கு அணையும்]. இந்த திரைப்படத்தில் ஷேக்ஸ்பியரின் ஆங்கில வரிகளே கையாளப்பட்டது. நடிகர் திலகம் ஒரு ஹாலிவுட் படத்தில் நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்பதற்கு இந்த காட்சியை பார்த்தாலே போதும். அதே ஸ்டைலில் பண்ணியிருப்பார். ஒரே குறை, ராஜபார்ட் ரங்கதுரை போல இந்த படத்திலும் வேறு ஒருவரை பேச வைத்திருப்பார்கள். ஆனால் அதில் இவர் பேசவில்லை என்பது வெளிப்படையாக தெரிந்தது போல் இல்லாமல் இதில் ஓரளவிற்கு பொருத்தமான குரல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இறுதியில் சாவித்திரி தன் நிலையை விளக்கி சொன்னவுடன் பொங்கி வரும் அந்த ஏமாற்றத்தை தாங்கி கொண்டு, தான் உண்பதற்காக வைத்திருந்த ரொட்டி துண்டை சாவித்திரிக்கு சாப்பிட கொடுத்து விட்டு பக்கத்தில் உட்கார்ந்து நகத்தை கடித்தபடியே பார்க்கும் பார்வை இருக்கிறதே, நடிகர் திலகத்தால் மட்டுமே முடியும். இந்த படத்திலும் இமேஜ் பார்க்காமல் தன் உடல் பருமனை கிண்டல் செய்யும் வசனங்களை பேசியிருக்கிறார். "உங்கண்ணனை வேற தேசத்துக்காரன் பார்த்தான்னா, பஞ்சத்திலே அடிப்பட்ட நாடுன்னு நம்ம நாட்டை பத்தி நினைப்பான்" என்று நாகேஷை குறிப்பிட்டு சாவித்திரியிடம் சொல்ல, அதற்கு சாவித்திரி "உங்களை பார்த்தா அந்த பஞ்சத்திற்கே நீங்கதான் காரணம்னு நினைப்பான்" . அது போல ஊரிலிருந்து வரும் பாட்டி சிவாஜியை பார்த்து "என்னப்பா இப்படி இளைச்சு போயிட்டே"? என்று கேட்க "யாரு நானா?" என்று கேட்பார்.
நடிகையர் திலகத்திற்கு அவ்வளவாக வேலை இல்லை. முதலில் வரும் கோபம் குறும்பு மட்டுமே அவருக்கு ஸ்கோர் செய்ய கிடைத்த சந்தர்ப்பங்கள். நாகேஷ் நடிகர் திலகத்தோடு இணைந்த மூன்றாவது படம். அவர் மனோரமாவை திருமணம் செய்ய எடுக்கும் முயற்சியெல்லாம் ஏற்கனவே அது போல பார்த்து விட்டதால் நகைச்சுவை பஞ்சம். மேலும் அது கதையில் ஒட்டாமல் தனியாக இருக்கிறது. கல்லூரி பேஃர்வல் விருந்தின் போது அடுத்தவனிடம் மணி கேட்டு காபியை தன் கப்பில் மாற்றிகொள்வது மட்டும் புத்திசாலித்தனமான நாகேஷ். மற்றவர்கள் எல்லாம் இரண்டு மூன்று சீன் மட்டுமே.
இந்த படத்தின் மிகப் பெரிய பலம் பாடல்கள். கவியரசுவின் சொந்தப் படம் வேறு. மாமா மஹாதேவன் போட்ட அருமையான பாடல்கள்.
கவிஞர் நேரிடையாக திரையில் தோன்றி தன்னை பற்றிய சுய விமர்சனம் செய்த பாடல் [படத்தில் பழைய மாணவன் முத்தையா பாடுவதாக அறிவிப்பு]. அதிலும்
நான் நிரந்தரமானவன் அழிவதில்லை; எந்த
நிலையிலும் எனக்கு மரணமில்லை.
என்ற வரிகள் என்றும் சாகாவரம் பெற்றவை.
அடுத்த பாடல் பசுமை நிறைந்த நினைவுகளே. தமிழக கல்லூரிகளில் பேஃர்வல் பார்ட்டி நடக்கின்ற காலம் இருக்கும் வரை இந்த பாடலும் சிரஞ்சீவியாக இருக்கும்.
எந்த ஊரில் எந்த நாட்டில் என்று காண்போமோ? என்ற வரியும்
இந்த நாளை வந்த நாளில் மறந்து போவமோ என்ற வரியும்
எப்போது கேட்டாலும் ஒரு காலத்தில் மாணவனாக இருந்த எல்லோருக்கும் அவர்களின் பசுமையான நினைவுகள் திரும்பி வரும்.
புத்தன் வந்த திசையிலே போர்
புனிதர் காந்தி மண்ணிலே போர்
என்ற வரிகள் கேட்பவர்கெல்லாம் உணர்வு ஊட்டக்கூடிய பாடல்.
பனி படர்ந்த மலையின் மீது
படுத்திருந்தேன் சிலையை போல
நட்பு பாராட்டிய நம் மீது அநியாயமாக போர் தொடுத்த சைனா மீது கோபம் கொண்ட ஒவ்வொரு இந்தியனின் மனக் குமுறல். இந்த படத்தில் தான் இந்த பாட்டின் மூலமாக தான் முதலில் காங்கிரஸ் பேரியக்கத்தையும் பெருந்தலைவர் மற்றும் நேரு போன்றவர்களை திரையில் நடிகர் திலகம் காண்பித்தார். இந்த பாடலின் இறுதி வரிகள்
வீரம் உண்டு தோள்கள் உண்டு
வெற்றி கொள்ளும் ஞானம் உண்டு
ஞானமிக்க தர்மம் உண்டு
தர்மமிக்க தலைவன் உண்டு,
என்ற வரிகளின் போது பிரதமர் நேரு அவர்களை காண்பித்து மக்களுக்கு ஒரு தைரியம் கொடுத்து பயப்பட வேண்டாம் என்று சொன்ன பாடல்.
இதை தவிர இசைத்தட்டுகளில் இடம் பெற்று படத்தில் இடம் பெறாமல் போன ஒரு அருமையான பாடல் தாழம்பூவே தங்கநிலாவே தலை ஏன் குனிகிறது. டி.எம்.எஸ் மற்றும் எல்.ஆர். ஈஸ்வரி பாடியது. இது இடம் பெறாததன் காரணம் தெரியவில்லை. எனக்கு தெரிந்த வரை அல்லது யூகிப்பது, இந்த பாடல் நடிகர் திலகம் மற்றும் புஷ்பலதா பாடுவதாக அமைக்கப்பட இருந்தது. தங்கள் வீட்டில் அடைக்கலம் புகும் நாயகனின் மனைவியாக நடிக்க வேண்டிய சூழ்நிலை புஷ்பலதா ஏற்ற கதாபாத்திரத்திற்கு. அந்த நேரத்தில் நடிகர் திலகத்தை ஒரு வித காதலுடன் புஷ்பலதா பார்ப்பதாக ஒரு ஷாட் வரும். அதன் தொடர்ச்சியாக இந்த பாடல் காட்சி அமைக்கப்பட்டிருக்கலாம். ஆனால் கதையோட்டத்திற்கு தடை செய்யும் என்றோ, பார்த்தவுடன் ஒரு பெண் காதல் வயப்பட்டு கனவு காண்பதை மக்கள் ஏற்பார்களா என்ற தயக்கமோ அல்லது நடிகர் திலகத்தின் மகளாக அந்த நேரத்தில்தான் புஷ்பலதா பார் மகளே பார் படத்தில் நடித்திருந்தார். ஆகவே இந்த நேரத்தில் இந்த பாடல் வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டதா என்பதும் தெரியவில்லை. ஆனால் பாடல் அருமையான ஒன்று.
14.09.1963 அன்று வெளியானது இரத்த திலகம். பெரிய வெற்றியை பெறவில்லை. வழக்கம் போல் பார் மகளே பார் வெளியாகி 60 நாட்களே ஆகியிருந்த நிலையிலும் குங்குமம் வெளியாகி 30 நாட்களே ஆன நிலையில் இது வெளியானது. இந்த படம் வெளியாகி 6 நாட்களில் [20.09.1963] நடிகர் திலகத்தின் கல்யாணியின் கணவன் வெளியானது. 60 நாட்களில் தீபாவளி - அன்னை இல்லம் ரிலீஸ். ஆகவே படத்தின் குறைகளும் போட்டி படங்களும் சேர்ந்து வெற்றியின் அளவை குறைத்து விட்டது.
ஆனால் ஒன்று. படத்தின் பின்னில் இருந்த உயரிய நோக்கம் மற்றும் காலத்தால் அழியாத பாடல்களுக்காவும் இந்த படம் என்றும் பேசப்படும்.
அன்புடன்
PS: This review dedicated to dear friend Senthil [Harish] who wanted me to write about this film.
Bookmarks