'Baharatha Vilas' climax scene dialogue (re-presented in 'copy & paste' method from our former hubber Saradha mam's Bharatha Vilas analysis, in previous part)...
படத்தின் நடுவே வரும் 'இந்தியநாடு என் வீடு இந்தியன் என்பது என்பேரு... எல்லா மக்களும் என் உறவு எல்லோர் மொழியும் என் பேச்சு' என்ற பாடல் சும்மா சம்பிரதாயத்துக்காக பாடப்பட்ட பாடல் அல்ல, உண்மையிலேயே படம் மத, மொழி, மாநில நல்லிணக்கத்தை வலியுறுத்தும் படமே என்பதை உறுதிப்படுத்தும் அந்த கிளைமாக்ஸ்....
மகளுடைய திருமணத்தின்போது, லட்ச ரூபாய் தட்டில் வைப்பதாக வாக்குறுதியளித்த கோபால் (நடிகர்திலகம்), தொழிலில் திடீரென ஏற்பட்ட சரிவினால் அதை நிறைவேற்ற முடியாமல் போக, சம்மந்தியும் சொந்தக்காரருமான ராஜவேலு, கோபம் கொண்டு திருமணத்தை நிறுத்தும் நிலைக்குப் போகும்போது உதவிக்கு வரும் நண்பர்கள், அவர்கள் பேசும் வசனங்கள்.....
நாயுடு (எம்.ஆர்.ஆர்.வாசு): "கோபால், இதோ நான் முதல்முதலா கதை எழுதிகிடைச்ச இருபதாயிரம் ரூபாய் செக், இதை உன் சம்மந்திகிட்டே கொடுத்திட்டா?. கடன்பட்டு கல்யாணம் பண்றோமேன்னு கவலைப்படாதே, எங்கப்பன் ஏழுமலையானே குபேரன்கிட்டே கடன் பட்டுத்தான் கல்யாணம் பண்ணினான். இந்த வாங்கிக்கோ".
சிங் (மேஜர்): "கோபால், இதோ ரெண்டு லட்சரூபாய் பெறுமானமுள்ள என்னோட கடையின் உரிமைப்பத்திரம். இதை உன் சம்மந்திகிட்டே கொடுத்திடு. இந்த வீட்டுல வளர்ந்த அந்தப்பிள்ளை கண்கலங்கி நின்னா எங்களுக்கு ஒரு பிடி சோறு இறங்குமா? இல்லை நாங்கதான் மனுஷங்களா?"
பாய் (வி.கே.ஆர்): "கோபால், இதோ என்பையன் பேருல நான் போட்டிருந்த இன்ஷூரன்ஸ் பாலிஸி. என்ன சம்மந்தி பார்க்கிறீங்க?. இந்த பாலிஸி செல்லும். ஏன்னா என்மகன் இப்போது உயிரோடு இல்லை. அதோடு, பேங்க்ல என் பெயரில இருக்கிற முப்பதாயிரம் ரூபாய்க்கும் இதுல 'செக்' போட்டு வச்சிருக்கேன். கோபால் மனுஷன்தான் பணத்தை படைச்சான், பணம் மனுஷனைப்படைக்கலை. ஜாம் ஜாம்னு உன்பொண்ணு கல்யாணத்தை நடத்து".
ராஜவேலு (சம்மந்தி): "அப்புறம் என்ன, அதான் நண்பர்கள் உதவிக்கு வந்துட்டாங்களே. நீரடிச்சு நீர் விலகுமா என்ன?. சொந்தக்காரங்களுக்குள்ளே........" பேசிக்கொண்டே அவற்றை வாங்கப்போகும்போது..
கோபால் (நடிகர்திலகம்): "ச்சீ கையை எடுய்யா. யாருய்யா சொந்தக்காரன்?. நீயா சொந்தக்காரன்?. இல்லை... இந்த தெலுங்கர், இந்த சீக்கியர், இந்த முஸ்லீம் இவங்கதான் என் சொந்தக்காரங்க. இனி ஜென்மத்துக்கும் உன் கூட சம்மந்தம் கிடையாது... போ வெளியே".
வசனகர்த்தா, இயக்குனர், கதாபாத்திரங்கள் அனைவரும் விஸ்வரூபம் எடுத்து நிற்கும் அந்த இடம் அபாரம்.