Quote:
எல்லா மதங்களிலும் அடிப்படைவாதத்துக்கு எதிரான பெரும் சக்தியாக நிலைகொள்வது பழைமைவாதமே என்ற் அப்பட்டமான உண்மை நம் முன் உள்ளது. அதைப்புரிந்துகொள்ளாமல் நம்மால் இந்தியச்சூழலை மதிப்பிடவே முடியாது. அடிப்படைவாதிகளுக்கும் பழைமைவாதிகளுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை வகுத்துக்கொள்ளாமல் இருவரையும் ஒரேதரப்பாக எண்ணிக்கொள்வதன் மூலம் நாம் அடிப்படைவாதத்தின் எதிர்த்தரப்பாக மட்டுமே செயல்பட்டாகவேண்டிய பழைமைவாதத்தை அடிப்படைவாதம் நோக்கி தள்ளிக்கொண்டிருக்கிறோம்.
அடிப்படைவாதம் என்பது என்ன? அதை எப்படி வரையறை செய்திருக்கிறோம்? போகிற போக்கில் எல்லாவகையான முத்திரைகளையும் அதன்மேல் குத்தி அதை ஒருவகை பேய்பிசாசாக உருவகம் செய்து கொள்வதற்குப் பதிலாக அதன் வரலாற்றையும் அதன் அடிப்படை இயல்பையும் நாம் விளக்கிக் கொண்டிருக்கிறோமா?
மரபான ஆசாரங்களையும் நம்பிக்கைகளையும் மாறாமல் அப்படியே பிடித்துக்கொண்டிருப்பது பழைமைவாதம். ஆனால் பழைமைவாதத்துக்கு முக்கியமான சில எல்லைகள் உண்டு. முதன்மையாகச் சொல்லப்படண்டியது அது நெடுங்காலமாக நீடித்துவரக்கூடிய ஒன்று என்பதுதான். ஆகவே அது நடைமுறைச் சமரசத்துக்கு உள்ளாகியே தீரவேண்டும். ஏனென்றால் மக்கள்திரளை பொறுத்தவரை எந்த கொள்கையை விடவும் பெரியது உயிர்வாழ்தல்தான். ஆகவே ஓடைக்கரை பாறை போல காலத்தால் அரித்து மென்மையாக ஆக்கப்பட்ட நம்பிக்கைகளும் ஆசாரங்களுமே பழைமைவாதத்தில் நீடிக்கமுடியும். அங்கே எந்த கொள்கையும் நடைமுறை சமரசத்துக்கு உட்பட்டதாகவே இருக்கும்.
More here:
Quote:
பழைமைவாதத்தின் இயல்பு இதுவே. அது இயந்திரத்தனமான ஒரு நீட்சியாகவே சமூகத்தில் உள்ளது. நடைமுறைத்தேவை அழுத்தும்போது மாறுகிறது.
ஆனால் அடிப்படைவாதம் அப்படி அல்ல. அது ஒருவர் தனக்கென வரித்துக்கொண்ட கருத்தியல் தரப்பு. அவர் அதற்கான எல்லா தர்க்கங்களையும் உருவாக்கிக் கொண்டிருக்கிற்றார். எந்த நடைமுறைக் கட்டாயத்துக்காகவும் அவர் தன்னுடைய கொள்கையை விட்டுக்கொடுக்கப் போவதில்லை.