-
-
-
"ரோஜாவின் ராஜா" சிறப்பு அரிய நிழற்படம்
அசோகச் சக்கரவர்த்தியாக நடிப்புலகச் சக்கரவர்த்தி.
http://i1087.photobucket.com/albums/...IMG_0001-4.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
-
-
நடிகர்திலகத்தின் கிருஸ்துமஸ் பரிசு 'ரோஜாவின் ராஜா'
36-வது உதய தினம் (25.12.1976 - 25.12.2011)
1976-ம் ஆண்டு நடிகர்திலகத்துக்கு அவ்வளவு வெற்றிகரமான ஆண்டு அல்ல. அந்த ஆண்டில் வெளிவந்த சில படங்கள் 100 நாட்களைக்கடந்ததுடன், ஒரு படம் இலங்கையில் வெள்ளிவிழாப்படமாகவும் அமைந்தது. இருப்பினும் அவருக்கு இதற்கு முந்தைய ஆன்டுகளைப்போல பரபரப்பான ஆண்டு அல்ல. அதற்குக்காரணம், இந்த ஆண்டின் துவக்கத்தில் தமிழக அரசியலில் குறிப்பாக காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட சில மாற்றங்கள் என்பதை ஏற்கெனவே இங்கே பலமுறை விரிவாக அலசியிருக்கிறார்கள். குறிப்பாக நமது வரலாற்று விற்பன்னர் முரளி சார் தெளிவாக பல பதிவுகளில் சொல்லியிருக்கிறார்.
1976-ம் ஆண்டு வெளிவந்த படங்கள் சென்னையில் ரிலீஸான அரங்குகள்
உனக்காக நான் - தேவி பாரடைஸ், அகஸ்தியா புவனேஸ்வரி
கிரகப்பிரவேசம் - பைலட், அகஸ்தியா, முரளிகிருஷ்ணா, கமலா
சத்யம் - வெலிங்டன், கிரௌன், ராக்ஸி, நூர்ஜகான்
உத்தமன் - சாந்தி கிரௌன், புவனேஸ்வரி
சித்ரா பௌர்ணமி - பிளாசா, ஸ்ரீபத்மனாபா, உமா
ரோஜாவின் ராஜா - பிளாஸா, பிராட்வே, ராக்ஸி, கமலா
ரசிகர்களால் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டது வருடத்துவக்கத்தில் வெளியான 'உனக்காக நான்'. பாட்டும் பரதமும் போலவே இதுவும் அரசியல் சூழலில் சிக்குண்டதால் எதிர்பார்த்த வெற்றியைப்பெறவில்லை. நடிகர்திலகம் - பாலாஜி அணியின் முதல் சரிவு. (இருந்தாலும் சரியாக ஒரே ஆண்டில், பழைய காம்பினேஷன்களை மாற்றி 'தீபம்' படத்தின் மூலம் வெற்றியைக்கண்டனர். நடிகர்திலகத்தின் தேக்க நிலையும் சீரானது).
அடுத்து வந்த கிரகப்பிரவேசம், சத்யம் படங்களை ரசிகர்கள் அதிகம் எதிபார்க்கவில்லை. காரணம் அவை பரபரப்பில்லாத குடும்ப்பபடங்கள் என்பது முன்பே தெரிந்து போயிற்று. கிரகப்பிரவேசம் படத்தை டி.யோகானந்த் இயக்கியிருந்தார். யோகானந்த் படம் எப்படியிருக்கும், முக்தா படம் எப்படியிருக்கும், சி.வி.ஆர்.படம் எப்படியிருக்கும் என்பதெல்லாம் ரசிகர்களுக்கு அத்துப்படி. ஆகவே எதிர்பார்ப்புக்களை மூட்டைகட்டினர். இருந்தாலும் தாய்க்குலத்தின் ஆதரவைக்கொண்டும் அருமையான தியேட்டர்கள் அமைந்ததாலும் படம் ஓரளவு நன்றாகவே ஓடி சுமார் வெற்றியை பெற்றது.
1962-ல் சிறுவனாக நடித்த பார்த்தால் பசிதீரும் படத்துக்குப்பின்னர் நடிகர்திலகத்துடன் 'வாலிபன் கமல்' இணைந்து நடித்த முதல் படம் சத்யம். பாலச்சந்தரின் அவள் ஒரு தொடர்கதை, அபூர்வ ராகங்கள் உள்பட பல்வேறு படங்கள் மூலம் கமல் நன்றாக பாப்புலராகிவிட்ட நேரம். அதனால் நடிகர்திலகத்துடன் இணைகிறார் என்றதும் எதிர்பார்ப்பு தலைதூக்கியது. சிவாஜிநாடகமன்ற இயக்குனர் எஸ்.ஏ.கண்ணன் இயக்கிய முதல் படம். என் நினைவு சரியாக இருக்குமானால் சாந்தி படத்துக்குப்பின்னர் தேவிகா மீண்டும் நடிகர்திலகத்தின் ஜோடியாக நடித்த படம். இப்படி பல்வேறு எதிர்பார்ப்புகள் இருந்தும் கதை பழைய ஜமீன்தார் காலத்து கதைபோல ஆனதால் எதிர்பார்த்த பெரிய வெற்றியைப்பெறவில்லை எனினும் பரவலாக நன்றாக ஓடியது. இலங்கையில் கிரகப்பிரவேசம், சத்யம் இரண்டுமே நல்ல வெற்றியைப்பெற்றன.
ரசிகர்களின் அடுத்த பெரிய எதிர்பார்ப்பு 'உத்தமன்' படம். எங்கள் தங்க ராஜா என்ற மாபெரும் வெற்றிப்படத்தைத்தந்த வி.பி.ராஜேந்திர பிரசாத்தின் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் வந்த படம். மஞ்சுளா ஜோடி. சாந்தி, கிரௌன் புவனேஸ்வரி காம்பினேஷனில் இந்த ஆண்டில் வெளியான ஒரே படம். படம் நன்றாகவே இருந்தது. கே.வி.எம். இசையில் பாடல்கள் அனைத்தும், அவற்றைப்படமாக்கிய விதமும் நன்றாகவே இருந்தன. ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஏமாற்றாமல் அமைந்திருந்தது. காஷ்மீர் காட்சிகள் கண்களுக்கு விருந்தாக அமைந்தன. தமிழகத்தில் பெரிய வெற்றியைப்பெறும் என்று எல்லோருக்கும் நம்பிக்கையிருந்தது. என்ன காரணமோ மதுரையில் மட்டும் 100 நாட்களைத்தாண்டி ஓடியது. சென்னை, திருச்சி போன்ற நகரங்களில் 10 வாரங்களைக் கடந்தது. (இலங்கையில் இது பெரிய வெற்றி பெற்று வெள்ளிவிழா கொண்டாடியது).
தீபாவளிக்கு 'இளைய தலைமுறை', 'சித்ரா பௌர்ணமி' என இரண்டு படங்கள் வெளியாவதாக அறிவிப்புக்கள் வந்தன. இரண்டுமே சற்று நீண்டகால தயாரிப்பு. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த இளைய தலைமுறை கடைசி நேரத்தில் தயாரிப்பாளருக்கும் வங்கிக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினையால் தள்ளிப்போனது. இப்படம் பின்னர் அடுத்த ஆண்டு மே மாதம்தான் வெளியானது. சென்னை சென்ட்ரல் அருகில் வால்டாக்ஸ் ரோட்டிலுள்ள, புதிய படங்களே வெளியாகாத ஸ்ரீபத்மநாபா தியேட்டரில் 'சித்ராபௌர்ணமி' வெளியானது. அதுவே ரசிகர்களுக்கு முதல் கோணலாகப் பிடிக்காமல் போனது. இருந்தாலும் போய்ப்பார்த்தோம். ரசிகர்கள், பொதுமக்கள், தாய்மார்கள் என்று எத்தரப்பினரையும் திருப்திப்படுத்தாத படமாகப்போய், அந்த ஆண்டில் வெளிவந்த நடிகர்திலகத்தின் படங்களில் மிக மோசமான ரிசல்ட்டை சந்தித்தது.
இப்படி ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்த 1976-ம் ஆண்டின் இறுதிப்படமாக 'ரோஜாவின் ராஜா' வெளியாவதாக அறிவிப்பு வந்தது. அதுவும் சற்று நீண்டகாலத் தயாரிப்புதான். இப்படத்தின் தயாரிப்பாளர் என்.வி.ஆர். பிக்சர்ஸ் என்.வி.ராமசாமி, ரோஜாவின் ராஜாவைத்துவக்கியபின், அதற்காக விநியோகஸ்தர்களிடம் பெற்ற தொகையைக்கொண்டு வேறு நடிகர்களை வைத்து புதுவெள்ளம் போன்ற படங்களை எடுத்ததால், இப்படம் கிடப்பில் போடப்பட்டிருந்தது. ஒருவழியாக படம் முடிவடைந்து டிசம்பர் 25 அன்று வெளியாவதாக விளம்பரம் வந்தது. வழக்கமாக காலை தினத்தந்தியில்தான் ரிசர்வேஷன் விளம்பரம் வெளியாவது வழக்கம். இப்படத்துக்கு முதல்நாள் மாலைமுரசிலேயே 'நாளைமுதல்' ரிசர்வேஷன் விளம்பரம் வந்தது.
வீட்டுக்கு மிக அருகிலேயே இருக்கும் பிராட்வே தியேட்டரில் எப்போதும்போல ரிசர்வேஷன் செய்யச்சென்றோம். என்னதான் சோர்வு இருந்தாலும் ரசிகளின் கூட்டத்துக்குக் குறைவில்லை. கேட் திறக்கும்வரை கூட்டமாக நின்று பேசிக்கொண்டிருந்தனர். ஒருதட்டியில் படத்தின் பெரிய போஸ்ட்டர் ஒட்டப்பட்டு வெளியில் வைக்கப்பட்டிருந்தது. நடிகர்திலகம் ஜிப்கோட், கூலிங் கிளாஸ் அணிந்து வாணிஸ்ரீயின் கைகளைக்கோர்த்தவாறு சற்று தலையைத்தூக்கி சிரித்துக்கொண்டிருக்கும் போஸ்ட்டர். அங்கிருந்த மூத்த ரசிகர்கள், அது 'அலங்காரம் கலையாத சிலையொன்று' பாடல் காட்சியென்று சொன்னார்கள். (படம் பார்த்தபோது அவர்கள் சொன்னது சரிதான் என்று தெரிந்தது).
பிராட்வே தியேட்டர் முன் கூட்டம் கூடியிருந்தபோதிலும், ரசிகர்கள் உற்சாகம் சற்று குறைந்து காணப்பட்டனர். அதற்குக்காரணம் 'மன்னவன் வந்தானடி' படத்துக்குப்பின் சென்னையில் அண்ணனின் 100-வதுநாள் போஸ்ட்டரைப் பார்க்க முடியவில்லை என்பதோடு, பிராட்வேயில் படம் வெளியாகிறதே என்ற வருத்தமும் கூட என்பது அவர்கள் பேச்சிலிருந்து தெரிந்தது. 'ஏன்யா இந்த தியேட்டர்ல ரிலீஸ் பண்றாங்க?. இவங்களுக்கு நம்ம படம்னாலே பிடிக்காதே. மானேஜரிலிருந்து முறுக்கு விற்கிறவன் வரையில் 'அவரோட ஆளுங்க'. நம்ம படம்னாலே கூட்டத்தோடு ஓடிக்கொண்டிருக்கும்போதே கழற்றி விட்டுடுவாங்க' என்று ஒருவர் சொல்ல இன்னொருவர் 'ஆமாமா, ஊட்டிவரைஉறவையும், ஞான ஒளியையும் நல்ல கூட்டம் இருக்கும்போதே எடுத்துட்டாங்க' என்று சொன்னார். கேட்டுக்கொண்டு நின்ற எங்களுக்கு பிரமிப்பாக இருந்தது. (பிற்காலத்தில் கல்தூண் படத்துக்கும் அப்படியே செய்தார்கள்).
கேட் திறந்தபின்னும் எந்த வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் ரசிகர்கள் வரிசையில் போய் நின்றனர். அங்கும் கூட, அதற்குமுன் வந்த படங்களின் ஓட்டம் பற்றிய விமர்சனங்கள். ஏற்கெனவே வானொலி மூலம் 'அலங்காரம் கலையாத', 'ஜனகன் மகளை', 'ஓட்றா... ஓட்றா...' ஆகிய பாடல்கள் மக்கள் மத்தியில் பிரசித்தமாகியிருந்தன. (பிற்காலத்தில் 'ஓட்றா' பாடலை கேட்டால் எனக்கு அண்ணன் ஒரு கோயிலில் ஐ.எஸ்.ஆர். ஈகா தியேட்டர் லவுன்ச்சில் தர்ம அடி வாங்கும் காட்சிதான் நினைவுக்கு வரும்). நான் சுமார் ஐம்பதாவது ஆளாக நின்றிருந்திருப்பேன். எனக்குப்பின்னால் கூட்டம் நீண்டிருந்தது. முதல்நாள் மேட்னிக்காட்சிக்கே டிக்கட் கிடைக்க வாய்ப்பிருந்தது. இருந்தாலும் வழக்கம்போல மாலைக்காட்சிக்கே எங்கள் அணி டிக்கட் வாங்கிக்கொண்டோம். ரிசர்வேஷன் எந்தபரபரப்புமின்றி அமைதியாக நடந்துகொண்டிருந்தது. டிக்கட் வாங்கியதோடு வேலை முடிந்தது என்று போகாமல் எல்லோரும் வாசலிலும், ஸ்டில் போர்டு வைக்கப்பட்டிருக்கும் வழியிலும் கொத்து கொத்தாக நின்று படம் எப்படிப்போகும் என்று பேசிக்கொண்டிருந்தனர்.
'படம் ஏற்கெனவே லேட் படம். கொஞ்சமாவது கேப் கொடுத்தால்தான் ஓரளவுக்காவது ஓடும்' என்று ஒருவர் சொல்ல, இன்னொரு ரசிகர் 'எங்கே கேப் கொடுத்தாங்க?. மதிஒளி 15-ம்தேதி இஷ்யூ பார்த்தியா இல்லையா?. இன்னும் 19 நாளில் பொங்கலுக்கு 'அவன் ஒரு சரித்திரம்' வருது. அடுத்த 12 நாள்ள பாலாஜியோட 'தீபம்' ரிலீஸாகுது. இப்படி விட்டாங்கன்னா எப்படிப்பா?' என்று சொன்னார். தியேட்டர் மேனேஜரும் எல்லோரோடும் நின்று பேசிக்கொண்டிருந்தார். அப்போதே படத்தை மட்டம் தட்டிப்பேச ஆரம்பித்தார். அவர் பங்குக்கு 'திருவொற்றியூர் ஓடியன் மணியிலேயும் இந்தப்படம் (ரோஜாவின் ராஜா) ரிலீஸாகுதாமே. அப்போ தேறுவது கஷ்ட்டம்தான்' என்று சொல்ல, சிலர் ரகசியமாக, 'இப்பவே ஆரம்பிச்சுட்டாருய்யா' என்று சலிப்படைந்தனர்.
அப்போது பஸ்ஸில் வந்திறங்கிய ஒருவர் 'பிளாசாவிலே நல்லா ஜரூராக புக்கிங் நடதுப்பா, இங்கே ஏன் டல்லக்கிறது?' என்று வினவினார். பிராட்வேயில் அமைதியா புக்கிங் நடந்தாலும் அப்போதே ஒன்பது காட்சிகள் அரங்கு நிறைந்தன. ரிசர்வேஷன் தொடர்ந்துகொண்டிருக்க நாங்கள் வீடு திரும்பினோம்.
டிசம்பர் 25 அன்று கிருஸ்துமஸ் தினம். எங்கள் குடும்ப நண்பர் ‘டெய்ஸி மேடம்’ வீட்டிலிருந்து மதிய விருந்துக்கு அழைத்திருந்தார்கள். போய் சாப்பிட்டு விட்டு வந்து, நான்கு மணிக்கு மேல் நண்பர்களை ஒவ்வொருவராக இணைத்துக்கொண்டு பிராட்வே போய்ச்சேர்ந்தோம். வழக்கம்போல வடசென்னை மன்றங்கள் தியேட்டரை அலங்கரித்திருந்தனர். விடுமுறை நாள் என்பதால் கூட்டம் அதிகமாகவே இருந்தது. பிராட்வேயில் ஒரு அசௌகரியம் என்னவென்றால், கேட் திறக்கும் வரை சாலையில்தான் நிற்க வேண்டும். அதிகம் வாகனப்போக்குவரத்து உள்ள சாலையாதலால் ஒரே தூசியும் தும்பையுமாக இருக்கும். இப்போதும் அப்படித்தான் இருக்கிறது.
மேட்னி முடிந்து வெளியில் வந்த கூட்டம், 'படம் நல்லாயிருக்கு' என்று சொல்லிக்கொண்டு போனார்கள். மனதுக்கு திருப்தியாக இருந்தது. கரண்ட் டிக்கட் விற்பனைக்கு கூட்டம் முண்டியத்தது. தாய்மார்கள் கூட்டம் எதிர்பார்த்ததைவிட அதிகமாகவே இருந்தது. சற்று நேரத்தில் அரங்கு நிறைய, கிட்டத்தட்ட இரண்டு மடங்கு கூட்டம் டிக்கட் கிடைக்காமல் திரும்பியது மனதுக்கு சந்தோஷமளித்தது. இந்த மகிழ்ச்சியோடு உள்ளே சென்று அமர்ந்தோம். நடிகர்திலகம் படம் முழுக்க நீல்நிற கூலிங் கிளாஸ் அணிந்து நடித்திருந்தது மனதுக்கு இதமாக இருந்தது. கல்லூரி விழாவில் 'சாம்ராட் அசோகன்' நாடகத்தை எதிர்பார்த்து காத்திருக்க, வாணிஸ்ரீ (கண்ணகி), சுருளிராஜன் (கட்டபொம்மன்) இவர்களின் இவர்களின் நாடகத்தைத்தொடர்ந்து உடனே அசோகன் நாடகத்தைத் துவக்காமல், இடையில் தேவையில்லாமல் ஒரு பாடலைப் போட்டு சொதப்பியிருந்தார்கள். சாம்ராட் அசோகன் நாடகத்துக்கு எதிர்பார்த்ததைப்போலவே ஆடியன்ஸ் மத்தியில் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்தது. செட்டில் எடுக்கப்பட்ட 'ரோஜாவின் ராஜா' பாடலுக்கும் (ஓ.. தலைவர் என்ன அழகு), மைசூர் அரண்மனை முன் எடுக்கப்பட்டிருந்த 'அலங்காரம் கலையாத' பாடலுக்கும் கூட நல்ல வரவேற்பு. பெரும்பாலான காட்சிகள் பரபரப்பில்லாமலேயே போனது. 'ஓடிக்கொண்டேயிருப்பேன்' பாடலும் நன்கு ரசிக்கப்பட்டது. மற்ற இடங்களின் ரெஸ்பான்ஸ் அவ்வளவு நினைவில்லை.
படம் முடிந்து வெளியே வந்தபோது, எல்லோரும் படம் நன்றாயிருப்பதாகவே பேசிக்கொண்டு போயினர். மேலும் இரண்டுமுறை பார்த்தபின், 'அவன் ஒரு சரித்திரத்துக்கு' தயாரானோம்.
-
அன்பு வாசுதேவன் சார்,
ரோஜாவின் ராஜா படத்தின் ஸ்டில்களும், பாடல்களின் வீடியோக்களும், படம் வெளிவந்த காலகட்டத்தை நினைவூட்டுவதாக அமைந்துள்ளன.
பதிப்பித்தமைக்கு மிக்க நன்றி.
-
அன்பு கார்த்திக் சார்,
தங்களின் நடிகர்திலகத்தின் கிருஸ்துமஸ் பரிசு 'ரோஜாவின் ராஜா' பதிவை வெகு ஆவலாக எதிர்பார்த்திருந்தேன். அதே மாதிரி நீங்கள் வெகு சிறப்பான பதிவோடு தங்களுக்கே உரிய நடையில் ரோஜாவின் ராஜாவைப் பற்றி மட்டுமல்லாது 1976-ம் ஆண்டின் அனைத்து நடிகர் திலகத்தின் படங்களுக்குமான ஒரு மினி ஆய்வையே தந்து அசத்தி விட்டீர்கள். நீங்கள் கூறியுள்ள கருத்துக்கள் நூற்றுக்கு நூறு சரியே.
இந்த ஆண்டில் வெளியான நடிகர் திலகத்தின் படங்களை "ஓஹோ" என்று சொல்லிவிட முடியாதுதான். ஒரு சிறு தேக்கம். இந்தத் தேக்கம் நடிகர் திலகத்திற்கே தெரிந்திருந்தது. அதன் வெளிப்பாடு கிரஹப் பிரவேசம் படத்தில் தெரியும். லாரி டிரைவராகவும், நாடக நடிகராகவும் நடிகர்திலகம் அப்படத்தில் நடித்திருப்பார். ஒரு விபத்தில் இடது காலும், இடது கையும் சுவாதீனமில்லாமல் போய்விடும். கைகால்கள் விளங்காமல் போனதால் நாடகங்களில் அவர் நடிக்க இயலாமல் போய்விடும். இருந்தாலும் நடிப்பவருக்கு பின்னணி பாடும் பாடகராக மேடையின் ஒரு ஓரத்திலிருந்து பாடிக்கொண்டிருப்பார். அப்போது நாடகம் பார்க்கும் மக்கள்," நீ பாடாதே. அந்த வேஷத்தை நீ கட்டு" என்று அவரை நடிக்கச் சொல்லி வற்புறுத்துவார்கள். நடிகர் திலகம் தன் நிலைமையைச் சொல்லி அவர்களை சமாதானப்படுத்தி மறுபடி பாட ஆரம்பிப்பார். ("கன்றுகுரல் தேடி வரும் பசுவானேன்...) பாடல் முடிந்ததும் ரசிகர்கள் எல்லோரும் கை தட்டி ஒன்ஸ்மோர் பாடச் சொல்லுவார்கள். அப்போது நடிகர் திலகத்தின் போட்டி நடிகர் (படத்தில்) ஒருவர் தரையில் அமர்ந்து நாடகம் பார்த்துக் கொண்டிருப்பார். ஜனங்கள் ஆரவாரத்தைக் கண்டதும் அவர் பொறாமையுடன் பக்கத்தில் கை தட்டி ரசிக்கும் ரசிகரிடம்,
"என்னடா ரசிக்கிற... என்ன விட அவன் பெரிய நடிகனோ?... என்பார்.
அதற்கு அந்த ரசிகர், "நீ சொன்னாலும், சொல்லாட்டியும் அவன் அதுக்குன்னே பொறந்தவன்தான்டா...அவன் தன் நடிப்பால நாட்டுல துடிப்ப ஏற்படுத்துனவன்டா...
என்று நடிகர் திலகத்தின் புகழ் பாடுவார். இப்படியே வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டுவிடும். உடனே நடிகர் திலகம் எழுந்து வந்து கூட்டத்தை சமாதானப் படுத்தி
"அய்யா! கொஞ்சம் அமைதியா இருங்க...என் ரசிகர்களை விட என் விரோதிகளுக்குதான் அதிக மதிப்பு கொடுப்பேன். ஏன் தெரியுமா?... அவுங்க என்ன திட்றதனாலதான் என்னால என் கலைய வளர்த்துக்க முடியுது...கொஞ்சம் கலாட்டா பண்ணாம இருக்கீங்களா"
என்று கூறியவுடன் கூட்டத்திலிருந்து சிலர் கல்லால் நடிகர் திலகத்தை அடித்து விடுவார்கள். அப்போது வருத்தத்துடனும்,சற்று கோபத்துடனும் அவர் பேசுவதை கவனியுங்கள்.
"கலைகளையும்,கலைஞனையும் பொக்கிஷமா நினைக்கிற இந்த நாட்டுல இந்த நிலைமை வந்துடுச்சா... ரொம்ப சந்தோஷம்...என் எதிரிங்களுக்கு சொல்லிக்கிறேன்... நீங்க என்ன கல்லால அடிக்கல...நான் கட்டுற கலைக்கோயிலுக்கு அஸ்திவாரம் போட உதவி செய்யிறீங்க...எதிர்ப்பில நீங்க எறியிற சாணத்தை எல்லாம் எருவா போட்டு அதுல வளர்த்த கலை என் கலை...இந்த மேடையில்தான் நான் சாகணும்னு விதி இருந்துச்சுன்னா அதுக்காக நான் ரொம்ப சந்தோஷப் படுறேன்...
மேற்குறிப்பிட்ட நடிகர் திலகம் பேசும் வசனம் அவருக்கு அப்போதிருந்த சூழ்நிலைக்கு தக்கவாறு எழுதப்பட்டிருந்தது. அச்சு அசல் தன் அப்போதைய மனநிலையை கிரஹப்பிரவேசம் பட வாயிலாக வெளிப்படுத்தியிருந்தார் அவர்.
நீங்கள் சொன்னது போல உனக்காக நான், சத்யம்,உத்தமன்,சித்ரா பௌர்ணமி எல்லாம் சுமார் ரகங்களே. கிரஹப்பிரவேசம் வெற்றி அடைந்தது. உத்தமன் படம் நடக்கும் போது இவர் இந்திராகாங்கிரசுடன் இணையும் சம்பவம் வேறு நடைபெற்றது. அதுவும் எங்கள் தங்க ராஜாவை ஒப்பிட்டுப் பார்க்கும் போது உத்தமன் சுமார்தான். அதனால் கடலூரில் கூட அப்படம் சுமாராகத்தான் போயிற்று. தலைவரின் பல ரசிகர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார்கள். வேறு சிலர் அவர்கள் விருப்பப்பட்ட கட்சிகளில் இணைந்தார்கள். எங்களைப் போன்றவர்கள் தலைவர் வழி எதுவாயினும் முதலும் முடிவும் அவர்தான் என்று அவர் எது சொன்னாலும் அதையே தாரக மந்திரமாய் ஏற்றுக்கொண்டோம்.
சில படங்கள் நன்றாய் இருந்தது என்றும் சொல்லமுடியாமல், நன்றாய் இல்லை என்றும் சொல்ல முடியாமல், சுமார் ரகம் என்றும் சொல்ல முடியாமல் நம்மை குழப்பத்தில் ஆழ்த்தும். அப்படிப்பட்ட படங்கள் தாம் 1976-இன் அவருடைய படங்கள்.
"ரோஜாவின் ராஜா" வும் அப்படியே. சில இடங்கள் தூள் பரத்தும். சில இடங்கள் சுமாராக இருக்கும். நீங்கள் சொன்னது போல தலைவர் படு ஸ்டைலாக இருப்பார். "நாளை நீ மன்னவன்" தேவை இல்லாதது. அதை அசோகன் ஓரங்க நாடகத்தில் காணாமல் செய்துவிடுவார். (dvd யில் அந்த நாடக சீனையே காணோம். நம் நண்பர்கள் யாராவது வைத்திருப்பவர்கள் கொடுத்தால் கோடி புண்ணியமாக இருக்கும்). பாடல்கள் கொள்ளை போகும். "ஓடிக்கொண்டே இருப்பேன்" சூப்பர். காந்தி சிலை அருகில் மனோகரிடம் பேசும் வசனத்தில் அரசியல் நெடி அதிகம். எப்படி இருந்தாலும் "அலங்காரம் கலையாத சிலை ஒன்று கண்டேன்" என்ற அற்புத பாடல் உள்ள படம் என்ற ஒரு சிறப்பே இப்படத்திற்கு போதும்.
சிறிது கூட நடுநிலை பிறழாமல் தாங்கள் அளித்திருக்கும் ரோஜாவின் ராஜா பதிவு உண்மையிலேயே பெருமைப்பட வைக்கிறது. தங்கள் மேல் எங்களுக்கிருக்கும் மதிப்பையும் மரியாதையையும் இன்னும் கூட்டுகிறது. நிறைய விஷயங்களை இப்பதிவின் மூலம் நான் தெரிந்து கொள்ள வைத்ததற்கு மிகுந்த நன்றிகள் சார்.
அன்புடன்,
வாசுதேவன்.
-
டியர் கார்த்திக்,
ரோஜாவின் ராஜா பதிவின் மூலம் அநைவரையுமே 1976க்கு அழைத்து சென்று விட்டீர்கள். பாராட்டுக்கள்.
வாசுதேவன் கூறியது போல் அந்த சாம்ராட் அசோகன் நாடகத்தை மீண்டும் பார்க்க முடியுமா என்கிற நிலை ஏற்பட்டுள்ளது. பார்ப்போம்..
Inherit the Wind (1960) - இந்தப் படத்தைப் பற்றி ஒரு இணையதளத்தில் குறிப்பிடும் போது நடிகர் திலகத்தை அப்பாத்திரத்தில் போட்டிருந்தால் நன்றாக இருக்கும் என்று குறிப்பிட்டிருப்பது கவனிக்கத் தக்கது. அது மட்டுமல்ல இன்றைய நடிப்பினைப் பற்றியும் குறிப்பிடப் பட்டுள்ளது.
இதோ அந்த பதிவு
-
the photo (laughing) by both thilagams are very nice
-
நடிகர்திலகத்தின் புகைப்படங்கள், பாடல் காட்சிகளின் மூலம் சிறப்பான கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை அளித்த டியர் பம்மலார், வாசுதேவன் சார், பாரட்டுக்கள், நன்றிகள்.