நீண்ட இடைவெளிக்குப் பின் டூயட் திரைப்படத்தை ராஜ் டி.வி.யில் sunday பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. K.பாலசந்தர் இயக்கத்தில் பிரபு நடித்த ஒரே படம். ஒரு ஹிந்தி படத்தின் தழுவல் - சில மாற்றங்களுடன்.
சாக்சபோன் கலைஞராக பிரபு. தமிழ் படத்தில் சாக்சபோன் கலைஞராக ஹீரோ வருவது இதுவே முதல் முறை. தந்தையின் (மோஹன்ராம் சார்) மறைவிற்குப் பின் அவரது இரண்டாவது மனைவியைத் தேடி அவரை தன்னுடனே இருக்க வைக்கும் மகனாகவும், தம்பி மீது மிகுந்த பாசம் கொண்ட அண்ணனாகவும் கச்சிதமான வேடம் பிரபுவுக்கு.
என்னைக் கவர்ந்த காட்சிகள்...
- காதலி கவிதை வாசிப்பது மின் தடையால் ( ஆர்க்கட்டார்தான் அப்போதும் மின் துறை அமைச்சரோ !) நின்று போக, இருட்டில் கவிதையை தொடர்ந்து, அந்த கவிதையை உண்மையில் எழுதியது தானே என்ற உண்மையை பிரபு வெளிப்படுத்தும் காட்சி...
- இந்த உண்மையை காதலிக்குத் தெரிவித்த அண்ணன் மீது கோபம் கொள்ளும் தம்பி ரமேஷ் அரவிந்தை சமாதானப்படுத்தும் காட்சி (அண்ணன் பற்றவைக்கும் சிகரெட் லைட்டரை கோபத்துடம் இருமுறை ஊதி அணைக்கும் தம்பி, அண்ணன் விடாது அடுத்த முறையும் பற்றவைக்கும் போது கோபம் தணிந்து அண்ணனை கட்டிக் கொள்வது பாலசந்தர் டச்)....
- மலைக்கோவிலில் தான் எழுதிய காதல் கவிதைகளை ஏற்ற இரக்கத்துடன் -சொந்தக் குரலில்- பாடும் காட்சி....
இப்படி பல காட்சிகளில் முத்திரை பதித்திருக்கிறார் இளைய திலகம்.
பிரகாஷ் ராஜின் முதல் படம். ரகுமானின் பாடல்கள் அனைத்தும் ஹிட். ரகுனாத ரெட்டியின் ஒளிப்பதிவில் விசாகபட்டினம் கடல் அலைகளுக்கும் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரம் உண்டு என்றால் மிகையைல்ல. கிளைமாக்ஸ் ( டிரம் உருளுவது) கொஞ்சம் சொதப்பல்தான் என்பது தவிர வேறு குறைகள் தென்படவில்லை.
எல்லாவற்றையும் விட தன்னுடைய உடல் குறையை - குண்டு உடல் அமைப்பை- பலர் படத்தில் வெளிப்படையாக கேலி செய்வது போன்ற ( குண்டு கத்திரிக்காய்.... பாட்டு வேறு) ஒரு கதா பாத்திரத்தில் நடிக்கும் ஈகோ இல்லாத பரந்த மனம் பிரபுவுக்கு இருப்பது பன்ச் டயலாக் மற்றும் image concious இமேஜ் நடிகர்கள் அதிகம் உள்ள தமிழ்த் திரையுலகில் கொஞ்சம் அபூர்வம்தான்.
படத்தின் ஹிட் பாடல்கள்.
அஞ்சலி அஞ்சலி..
வெண்ணிலாவின் தேரில் ஏறி..
மெட்டுப்போடு மெட்டுப்போடு
கத்திரிக்கா கத்திரிக்கா
என் காதலே என் காதலே....
குளிச்சா குத்தாலம்...
கவிதைக்கு பொருள் தந்த...(பிரபுவின் குரலில்).
Box office
20.05.1994ல் வெளியான டூயட் 100 நாள் ஓடிய திரையரங்கங்கள்
1. சென்னை - சாந்தி
2. சென்னை - அனு ஈகா ( பகல் காட்சி)
3. கோவை - பல்லவி
4. ஈரோடு - தேவி அபிராமி
5. மதுரை - சக்தி
6. சேலம் - ஓரியண்டல் சக்தி
இவை தவிர நாகர்கோவில் - கார்த்திகை - 77 நாட்கள், .Nellai - அருணகிரி - 56 நாட்கள், உட்பட 12 திரையரங்கங்களில் 50 நாட்களைக் கடந்து ஓடியது.