1967-1968 mgr movies - malaimalar
எம்.ஜி.ஆர். சுடப்பட்ட பிறகு நடித்து வெளிவந்த "காவல்காரன்", பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. வசனம் பேசுவதில் குறை தெரிந்தாலும், சென்னையிலும், மற்ற ஊர்களிலும் நூறு நாட்களுக்கு மேல் ஓடியது.
எம்.ஜி.ஆர். சுடப்பட்டபோது, தயாரிப்பில் இருந்த படங்கள் சத்யராஜா பிக்சர்ஸ் "அரச கட்டளை", சத்யா மூவிஸ் "காவல்காரன்" ஆகியவையாகும்.
"அரச கட்டளை"யில் எம்.ஜி. ஆருடன் ஜெயலலிதா, சரோஜாதேவி ஆகியோர் நடித்தனர். படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்துவிட்டது. "எடிட்டிங்", "ரீ ரிக்கார்டிங்" போன்ற ஒரு சில வேலைகளே பாக்கி. அந்தப் பணிகள் முடிந்து படம் 19_5_67 அன்று வெளிவந்தது. படம் வெற்றிகரமாக ஓடியது. இந்தப் படத்தை எம்.ஜி. ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்ரபாணி டைரக்ட் செய்திருந்தார். வசனம்: சொர்ணம். இசை: கே.வி.மகாதேவன்.
சத்யா மூவிஸ் "காவல்காரன்" படத்தில் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் இணைந்து நடித்தனர். வசனம்: வித்வான் வே.லட்சுமணன். இசை: எம்.எஸ். விஸ்வநாதன். டைரக்ஷன் பொறுப்பை பா.நீலகண்டன் ஏற்றிருந்தார்.
எம்.ஜி.ஆர். சில காட்சிகளில் நடிக்க வேண்டி இருந்தது. குணம் அடைந்த பிறகு, எம்.ஜி.ஆர். அந்தக் காட்சிகளில் நடித்தார். அவரால் வழக்கம் போல் நடிக்க முடிந்தது; ஆனால் வழக்கம் போல் பேச முடியவில்லை. குரலில் குறை தெரிந்தது.
"பொருத்தமான குரல் உடையவர்களைக்கொண்டு பின்னணி குரல் (டப்பிங்) கொடுக்கலாம்" என்று சிலர் யோசனை தெரிவித்தார்கள். ஆனால், எம்.ஜி.ஆர். இதை ஏற்கவில்லை. "நானே பேசுகிறேன். மக்கள் ஏற்றால் தொடர்ந்து நடிக்கிறேன். ஏற்காவிட்டால், நடிப்பதையே விட்டு விடுகிறேன்" என்று கூறினார்.
அதன்படியே, எம்.ஜி.ஆர். சொந்தக் குரலில் பேசினார்.
7_9_1967 அன்று "காவல்காரன்" வெளியாயிற்று. சில கட்டங்களில் எம்.ஜி.ஆரின் குரல் தெளிவாக இல்லாவிட்டாலும், ரசிகர்கள் அதைப் பொருட்படுத்தவில்லை.
"காவல்காரன்" சூப்பர்ஹிட் படமாக அமைந்தது. சென்னையில் மூன்று தியேட்டர்களில் நூறு நாள் ஓடியது. மதுரை, திருச்சி, சேலம் ஆகிய ஊர்களிலும் நூறு நாள்.
யாழ்ப்பாணம் ராஜா தியேட்டரில் 162 நாட்களும், மற்றொரு தியேட்டரில் 127 நாட்களும் ஓடி சாதனை படைத்தது.
"தன் குரலை ரசிகர்கள் ஏற்றுக்கொண்டு விட்டார்கள்" என்று எம்.ஜி.ஆர். திருப்தி அடைந்துவிடவில்லை. "முன்போல் கம்பீரமாகப் பேசவேண்டும்" என்ற வைராக்கியத்துடன், தினமும் வீட்டிலேயே உரத்த குரலில் பேசிப் பயிற்சி பெற்றார். குரலில் காட்ட வேண்டிய ஏற்றத் தாழ்வுகளையும், உணர்ச்சிகளையும் மீண்டும் கொண்டு வருவதற்கு பெரும் முயற்சி மேற்கொண்டார். அவருடைய விடா முயற்சி வெற்றி பெற்றது. மீண்டும் முன்போல் பேசும் சக்தியை நாளடைவில் பெற்றார்.
தேவர் பிலிம்ஸ் தயாரிப்பான "விவசாயி", 1967 நவம்பர் 1_ந்தேதி வெளிவந்தது. இதில், எம்.ஜி.ஆர். வசனம் பேசுவதில் மிகுந்த முன்னேற்றம் காணப்பட்டது. இந்தப்படத்தில், எம்.ஜி.ஆரின் ஜோடி கே.ஆர்.விஜயா. இதை இயக்கியவர் எம்.ஏ.திருமுகம்.
நன்றாக குணம் அடைந்துவிட்ட எம்.ஜி.ஆர், மீண்டும் நிறைய படங்களில் நடிக்கலானார். 1968_ல் "ரகசிய போலீஸ் 115", "தேர்த் திருவிழா", "குடியிருந்த கோயில்", "கண்ணன் என் காதலன்", "புதிய பூமி", "கணவன்", "ஒளி விளக்கு", "காதல் வாகனம்" ஆகிய 8 படங்களில் நடித்தார். இந்த எட்டுப்படங்களிலும் ஜெயலலிதாதான் கதாநாயகி.
எல்லாமே வெற்றிப் படங்கள் என்றாலும், "குடியிருந்தகோயில்" "மெகா ஹிட்" படம். சரவணா ஸ்கிரீன்ஸ் தயாரிப்பான "குடியிருந்த கோயி" லில் எம்.ஜி.ஆர். இரட்டை வேடத்தில் நடித்தார். ஜெயலலிதா, ராஜஸ்ரீ இணைந்து நடித்தனர். இசை அமைப்பு: எம்.எஸ்.விஸ்வநாதன். வசனம்: சொர்ணம்.
"ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலேதான் சுகம் சுகம்", "துள்ளுவதோ இளமை", "நான் யார்... நான் யார்", "உன் விழியும் என் வாளும் சந்தித்தால்" முதலான இனிய பாடல்களும் பொழுதுபோக்கு அம்சங்களும் நிறைந்த இந்தப்படத்தில், "குங்குமப்பொட்டின் மங்கலம்" என்ற பாடல் மூலம் பெண் கவிஞர் ரோஷனாரா பேகம் அறிமுகம் ஆனார்.
"ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலேதான் சுகம்" என்ற பாடலுக்கு "எம்.ஜி.ஆரும், எல்.விஜயலட்சுமியும் ஆடிய பஞ்சாபி நடனம், ரசிகர்களிடம் கை தட்டல் பெற்றது. எம்.ஜி.ஆரின் 100_வது படம் "ஒளிவிளக்கு". இது ஜெமினி தயாரிப்பு.
1936_ல் வெளிவந்த "சதிலீலாவதி", எம்.ஜி.ஆருக்கு முதல் படம். இந்தப்படத்தின் கதாசிரியர் எஸ்.எஸ்.வாசன். முதல் படத்தில் இணைந்த இந்த இருவரும் 100_வது படத்திலும் இணைந்தனர். தமிழ்நாட்டில் ஒளிவிளக்கு நூறு நாள் ஓடியது.
இலங்கையில் ஐந்து தியேட்டர்களில் 100 நாள் படம். கொழும்பு, யாழ்ப்பாணம் ஆகிய நகரங்களில் 162 நாள் ஓடியது.