-
கடந்த 1960 ல் சென்னை எழும்பூரில் உள்ள, டான்பாஸ்கோ பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன், அப்போது நாங்கள் பாந்தியன் ரோடில் வசித்து வந்தோம், வீட்டிற்கு அருகே ஸ்கூல்,
என் தாயார் ஒய்.ஜி.பி.,பத்ம சேஷாத்ரி பாலபவன் பள்ளியை ஆரம்பித்த நேரம். நுங்கம்பாக்கம் லேக் ஏரியாவில், கட்டடம் இல்லாமல், கூரை போடப்பட்ட வகுப்பு அறைகள், பள்ளி ஆண்டு விழாவிற்கு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வந்திருந்தார், அவர் தான் தலைமை, மாணவர்கள், பெற்றோர் எல்லோரும் பென்சுகளிலும் தரையிலும் உட்கார்ந்திருந்தனர், நான் சிவாஜி சாரை முதன் முறையாக அன்று தான் பார்த்தேன்.
என் தாயார் நடிகர் திலகம் சிவாஜியை வரவேற்று பேசும்போது "கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிச்சுகிட்டு கொடுக்கும் என்பர், எங்களுக்கு கூரை கூட இல்லை, தெய்வம் எவ்வளவு கொடுத்தாலும், மகிழ்ச்சியாக, நன்றியோடு பெற்றுக் கொள்வோம்" என்றார்.
விழாவில் நடிகர் திலகம் சிவாஜி பேசும்போது, "மொத்த ஸ்கூலுக்கும் கூரை போட முடியுமா என்று தெரியவில்லை, என்னால் முடிந்த 10 ஆயிரம் ரூபாயை இந்தப் பள்ளிக் கட்டிட நிதிக்கு நன்கொடையாக அளிக்கிறேன், இந்தப் பள்ளி கண்டிப்பாக, பெரியதாக வளரும்..." என்று வாழ்த்தினார்,
அவருடைய வாழ்த்து பலித்தது, இன்று என் தாயார் நடத்தும் பத்ம சேஷாத்ரி பள்ளி, பெரிய அளவில் வளர்ந்திருக்கிறது.
தகுதியான காரியங்களுக்கு, நிறைய தர்மம் செய்வார் நடிகர் திலகம் சிவாஜி, அவர் செய்யும் தர்ம காரியங்களை, கொடுக்கும் நன்கொடைகளை விளம்பரப்படுத்திக் கொண்டதில்லை,
அது தான் அவருடைய உண்மையான குணம்,
:- திரு ஒய்.ஜி.எம்.அவர்கள் எழுதிய "நான் சுவாசிக்கும் சிவாஜி" என்ற நூலிலிருந்து,
Thanks Sekar
-
https://scontent.fyto1-2.fna.fbcdn.n...7e&oe=5F290D46
மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே 4 கோடிகளை கடந்த பார்வையாளர்கள்
இன்றைய நிலவரப்படி 7 கோடியை கடந்திருக்க வேண்டும்
ஆனால் YouTube ல் ஏதோ நடந்திருக்கிறது,
பழைய அதிகம் பார்வையாளர்கள் எண்ணிக்கை கொண்ட நடிகர் திலகத்தின் பாடல் பதிவுகள் அழிக்கப்பட்டிருக்கிறது
யார் நியாயம் கேட்க போகிறார்கள்??
Thanks Sekar
-
-
இளையதளபதி விஜய் அவர்களின் தந்தையும், பிரபல இயக்குனரும், நடிகர் திலகத்துடன் வசந்தமாளிகை, எங்கள் தங்க ராஜா, உத்தமன் ஆகிய படங்களில் உதவி இயக்குனராகவும், பட்டாக்கத்தி பைரவன் படத்தில் இணை இயக்குனராகவும் பணி புரிந்த திரு.S.A.சந்திரசேகரன் அவர்கள் நடிகர் திலகம் அவர்களைப் பற்றி சமீபத்தில் அளித்த ஒரு காணொளிப் பேட்டியில் இருந்து சில பகுதிகளை இங்கு எழுத்து வடிவில் தருகின்றேன்.)
I.
வசந்த மாளிகை படத்தில் நான் துணை இயக்குநர். அதற்கு முன்பு சில நாடகங்களைத் தயாரித்து நடித்துக் கொண்டிருந்தேன்.
வசந்தமாளிகை படத்தின் வசனகர்த்தா திரு.பாலமுருகன் அவர்கள். அவர் தினமும் படப்பிடிப்பு அரங்குக்கு வந்து, அன்றைய காட்சிகளின் வசனங்களை நடிகர் திலகத்திடம் படித்துக் காண்பித்து விட்டுப் போவார்.. சுமார் பத்து நாட்கள் இப்படி நடந்தது.
அதன் பின்னர், ஏதோ அலுவல் காரணமாக பாலமுருகன் அவர்கள் தினசரி வர முடியாத ஒரு சூழல் அவருக்கு ஏற்பட்டது.
எனது நாடகங்களை ஏற்கெனவே பார்த்திருந்த அவர், சிவாஜியிடம் என்னை அழைத்துச் சென்று, "இவன் நல்ல திறமையான பையன். நல்லா நாடகம் எல்லாம் போடறான். உங்கள் வசனங்களை இனிமேல் இவன் தினமும் உங்களுக்குச் சொல்லுவான்" என்று சொல்லி என்னை அவருக்கு அறிமுகப்படுத்தி விட்டுச் சென்று விட்டார்.
"அப்படியா.." என்று சொன்ன சிவாஜி, "டேய் இங்க வாடா .." என்று அழைத்தவர், "எங்கே சீனைப் படி " என்று சொன்னார்.
அப்போது அவர் கண்ணாடி முன்னால் அமர்ந்து மேக்கப் போட்டுக் கொண்டிருந்தார். போட்டு விட்டவர் ரங்கசாமி . நான் சிவாஜிக்குப் பின்னால் நின்றபடி, சீனைப் படித்தேன். அவர் கண்ணாடி வழியாக என்னைப் பார்த்துக் கொண்டிருந்தார் என்பது எனக்குத் தெரியாது.
நான் அன்றைய சீனைப் பாடம் படிப்பது போலப் படித்தேன்.. திரும்பினார். என்னை அழைத்தார்.
"டேய். இங்கே வா...உன்னைப் பத்தி அவன் என்னென்னவோ சொல்லிட்டுப் போனான்...நீ இப்படிப் பண்ணினா நான் எப்படிடா நடிக்கிறது? கொஞ்சம் உணர்வு பூர்வமாப் படிடா" ன்னு சொன்னார்.
அதற்கு நான், "அண்ணே..நீங்கதான் எதையும் சூப்பரா நடிச்சிருவீங்களே!" என்றேன்..
அதற்கு அவர்,"டேய்..நீ எனக்கு எப்படி நடிக்கறதுன்னு சொன்னாத்தான்டா நான் நடிப்பேன்" என்றார்.
அடுத்த நாள்ல இருந்து, காலைல நாலு மணிக்கு எந்திருச்சு, டயலாக் எல்லாம் மனப்பாடம் பண்ணி, நடிச்சும் பார்த்துக்குவேன். அப்புறம் போய் அவர்கிட்ட சீன் சொல்லுவன் பாருங்க... மெல்லத் தலையாட்டுனபடி...'எஸ்..இப்படி இருக்கனும்'பார்.
அதுதான் எனக்கு வாழ்க்கையில் மிகப் பெரிய எலிவேசனைக் கொடுத்தது.
II.
இதற்கிடையில் சிவாஜியுடனான எனது நெருக்கம் அதிகமாகி இருந்துச்சு. தினமும் சீன், டயலாக் எல்லாம் சொல்றதுல..
"அண்ணே.. அண்ணே" என்று நான் சொல்லுவேன். அவர் எப்பவும் என்னை நல்லாத் திட்டுவார்.
அப்போ ஒரு நிகழ்ச்சி நடந்துச்சு.
வசந்த மாளிகை படத்துல ஒரு பாட்டு சூட்டிங்.. ஏகப்பட்ட ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் கூட இருந்தாங்க.
பாடல் காட்சியிலே, அடுத்த வரி வர்றதுக்கு சில செகன்ட் முன்னாடி அவருக்குப் பிராம்டிங் செய்யனும்.. நான்தான் செய்வேன்..
ஒரு சாட்ல அது சிங்க் ஆகலை...உடனே நான் "அண்ணே.. ஒன் மோர்" என்றேன்.
சிவாஜி என்னை ஒரு முறை முறைச்சார்.
"எதுக்குடா ?" ( கூடவே அவர் ஒரு வார்த்தை சொல்லுவார்.. அது இங்கே வேண்டாமே).. நான் "அண்ணே, நான்-சிங்க்" என்றேன்.
"எங்கிட்டேயேவா ? " என்று எப்பவும் என்னை மிரட்டும் அதே தொனியில் சொன்னவர், நேரே வந்தார்.
அப்போதெல்லாம், உடனடியாகக் காட்சியைப் பார்க்கும் ஒரு கருவி இருக்கும்..அதில் படமான காட்சியைப் பார்த்து விடலாம். அதில் சென்று பார்த்தவர், அவரே வந்து "ஒன் மோர்" என்று சொல்லி விட்டு, மறுபடியும் அந்தக் காட்சியை நடித்துக் கொடுத்தார்.
'டைரக்டர் சும்மா உட்கார்ந்திருக்கார், இந்தச் சின்னப் பையன் சின்னச் சின்ன விசயங்களை எல்லாம் நல்லா கவனிக்கறானே' ன்னு என் மேலே சிவாஜிக்கு ஒரு நல்ல அபிப்பிராயம் வந்திருச்சு.
( டைரக்டர் K.S.பிரகாஷ்ராவ் டைரக்ட் பண்ணும்போது நாற்காலியை விட்டு எழுந்திருக்கவே மாட்டார். ஆனால் காட்சி படமாக்குவதற்கு வேண்டிய அனைத்து ஏற்பாடுகளையும் பக்காவாகச் செய்து விட்டு , பின் அசோசியட் டைரக்டரிடம் காட்சியைப் படமாக்கும் வேலையைக் கொடுத்து விட்டு அமைதியாக அமர்ந்து பார்த்துக் கொண்டிருப்பார். ஆறடிக்கு மேல் ஆஜானுபாவமாக ஒரு கம்பீர உருவம் )
( இதே போன்ற, இன்னொரு 'ஒன் மோர்' பற்றிப் பின்னர் இன்னும் ஒரு சுவாரசியமான செய்தி வரும்...தவற விட்டு விடாதீர்கள்)
III.
சுமார் 50 வருசத்துக்கு முன்னால், க்ஷோபாவை நான் காதலிச்சு, அவரைக் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு சொன்னப்போ, மிகவும் பலத்த எதிர்ப்புக்குப் பின்னர் அம்மா, ரெண்டு அண்ணனுக, தங்கை, எல்லாரும் ஒரு வழியா சரி சொல்லிட்டாங்க...ஆனா அப்பா மட்டும் ஒப்புக்கவே இல்லை. கல்யாணத்துக்கும் வர மாட்டேன்னு சொல்லிட்டார்...
அந்தச்சமயத்தில் பட்டாக்கத்தி பைரவன் பட சூட்டிங் நடந்துட்டு இருந்துச்சு. அதில் நான் இணை இயக்குநர். VB ராஜேந்திர பிரசாத் இயக்குநர்.
அப்போது சிவாஜிக்குப் படப்பிடிப்பு சம்பந்தமான செய்திகள், நேர மாறுதல்கள் போன்ற எதாவது சொல்ல வேண்டும் என்றால் என்னைத்தான் அனுப்புவார்கள். போனில் சொல்லக் கூடாது.நேராக வீட்டில் போய்த்தான் சொல்ல வேண்டும்.
காலை நேரத்தில், சிவாஜி, வீட்டுக்குப் பின்புறம் ஒரு சேரைப் போட்டு உட்கார்ந்திருப்பார். யார் போனாலும், வீட்டுக்குள்ள போகாமலே, சுத்திப் போய் அவரைப் பார்த்துப் பேசலாம். அடிக்கடி அப்படிப் போய்ப் போய் அவர் கூட நல்லாப் பழக ஆரம்பிச்சுட்டேன்.
காலைலை அம்மாவே சர்வீஸ் பண்ணுவாங்க பாருங்க. கமலா அம்மா.
டிபன் டைம்ல போன டிபன்.. சாப்பாடு டைம்ல போன சாப்பாடு.
அவங்க வீட்ல பெரிய டைனிங் டேபிள் இருக்கு. 25 பேர்ல இருந்து 30 பேர் வரை ஒன்னா உட்கார்ந்து சாப்பிடற அளவு பெரிய, மர டைனிங் டேபிள். இப்பவும் இருக்கு.
யார் அந்த வீட்டுக்குப் போனாலும் கமலா அம்மா நல்லா உபசரிப்பாங்க..
சர்வன்ட்ஸ் நிறையப் பேர் இருக்காங்க..
ஆனாலும் கமலா அம்மாவே எல்லோருக்கும் பரிமாறுவாங்க..
நான் ஒரு சாதாரண அசிஸ்டன்ட் டைரக்டர்.. எனக்கும் அவங்களேதான் கைப்படப் பரிமாறுவாங்க..
அப்ப ஒரு நாள் சிவாஜி கிட்ட நான், "அண்ணே, நான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்.. நீங்கதான் வந்து தாலி எடுத்துக் கொடுக்கனும் " என்றேன்..
அப்போது அவர் அழகா சொன்னாரு பாருங்க.." டேய்.. நான் சரி இல்லைடா.. கெட்டவன். நீ கமலாவை அழைச்சுட்டுப் போய், அவளை வெச்சு உன் கல்யாணத்தைப் பண்ணிக்கோ" என்றார்..
நான்," நான் அம்மாவை அழைச்சுட்டுப் போய் அவங்க முன்னாடி கல்யாணம் பண்ணிக்கறேன்..ஆனால் நீங்க வரணும்" என்றேன்.
"சரி" என்றார்.
தர்மபிரகாஷ்ல ரொம்ப கிரேண்டா கல்யாணம் நடந்துச்சு. VB ராஜேந்திர பிரசாத் எனக்கு கல்யாண கோட் சூட் எடுத்துக் கொடுத்தார். மனைவி ஷோபாவுக்கு ஆனந்த் சினி ஆர்ட்ஸ் பெரியவர் கல்யாணப் பட்டுப் புடவை தந்தார். VBRP பெரிய ராயல் பேமிலி... ரொம்ப நல்ல மனுசன்...ஒரு அசோசியேட் டைரக்டரான எனது கல்யாணச்செலவு முழுக்கவும் ஏத்துக்கிட்டு மிக பிரமாண்டமா நடத்தினார்..
சிவாஜியும் கமலா அம்மாவும் வந்திருந்தாங்க. கமலா அம்மா கையால தாலி எடுத்துக் கொடுத்தாங்க...
இன்னைக்கும் அதைச் சொல்வேன்.. "உங்க கையால நான் வளர்ந்தேன். உங்க கையால தாலி எடுத்துக் கொடுத்தீங்க... நானும் க்ஷோபாவும் வாழ்க்கையில் மிக உயர்ந்த நிலைக்கு வந்துட்டோம்...நாங்க மட்டும் அல்ல.. எங்க புள்ளையும் "
அந்த ராசி அப்படி. நெத்தி நெறைய அவ்வளவு பெருசா, வட்டமா பொட்டு வச்சிருப்பாங்க.. ரொம்ப மங்களகரமா இருக்கும்..
IV.
கல்யாணம் முடிஞ்சு இரண்டு நாள் கழிஞ்சு, ஊட்டியில் சூட்டிங். நான் வேலைக்குப் போனாத்தான காசு ? வீட்ல சொல்லிட்டு நான் ஊட்டி போனேன்.
பொட்டானிக்கல் கார்டன்ல சூட்டிங். காலை 8 மணிக்கு. சிவாஜி வந்து இறங்கினார். என்னைப் பார்த்துட்டார்.
நேரா என்னைக் கூப்பிட்டார்.
"டே இங்கே வாடா. என்னடா, கல்யாணம் முடிஞ்ச ரெண்டாம் நாள் சூட்டிங் வந்துட்டே?" ன்னு கேட்டார்.
நான் நெளிந்தபடி... "இல்லைண்ணே... வேலை முக்கியம்ணே" என்றேன்..
" பெரிய கடமை உணர்ச்சி.." அப்படின்னெல்லாம் என்னைக் கிண்டல் எல்லாம் அடிச்சிட்டு,மானேஜர் மொய்தீனைக் கூப்பிட்டார்.
"இவன் பொண்டாட்டி, ராத்திரிக்குள்ள இங்க இருக்கனும்" அப்படின்னு அவர் கிட்ட சொன்னார்.
அப்ப எல்லாம் கோயம்புத்தூருக்கு ஃப்ளைட் கிடையாது. கார்லயே என் மனைவியை ஊட்டிக்குக் கூட்டிட்டு வந்துட்டாங்க.. சாயங்காலம் நாலரை மணிக்கு சூட்டிங் ஸ்பாட்டுக்குக் கார்ல வந்து இறங்கினா அவ.
அப்போ என்னைக் கூப்பிட்டார் சிவாஜி. அந்தக் காலத்தில அசிஸ்டென்ட் டைரக்டர்கள் எல்லாம் கழுத்துல ஒரு விசில் மாட்டிருப்போம்..சூட்டிங் சமயத்தில் அதில் விசில் அடிப்போம்..
என் கழுத்தில் இருந்த விசிலை அவரே கழற்றினார். இன்னொரு உதவி இயக்குனரைக் கூப்பிட்டு, அந்த விசிலை சிவாஜியே அவர் கழுத்தில் மாட்டினார்.
பின்னர் என்னைப் பார்த்து..."ஓடறா..ஓடு. போ போ..போய் ஜாலியா இரு. நாளைக்கு இந்தப் பக்கமே நீ எட்டிப் பார்க்கக் கூடாது..ஓடு ஓடு " என்று துரத்தி விட்டார்.
அவரோட தயவால, ஒரு சாதாரண அசிஸ்டெண்ட் டைரக்டரான என் ஹனிமூன் ஊட்டியில நடந்துச்சு..அப்போ அது கனவுல கூட நினைச்சுப் பார்க்க முடியாத பெரிய விசயம். இப்போ ஸ்விட்சர்லாந்து போறதைப் போல அப்போது ஊட்டி போறது
அதெல்லாம் லைப்ல எனக்கு சிவாஜியால கிடைச்ச மிகப்பெரிய விசயம்.
இதோட முடிஞ்சுச்சா ? இல்லை.
நாங்க அசிஸ்டெண்ட் டைரக்டர்கள் எல்லாம், ஊட்டியில் ஒரு சின்ன, சாதாரண லாட்ஜ்ல தங்கி இருந்தோம்.
சிவாஜி உட்லண்ட்ஸ்ல தங்கி இருந்தார்.. அதுதான் ஊட்டியில் அப்போது பெரிய ஹோட்டல்..
அந்த உட்லண்ட்ஸ் ஹோட்டல்லயே ஒரு காட்டேஜ் எங்களுக்குப் போட்டுக் கொடுத்து...பாருங்க....எங்களை அங்கே தங்க வெச்சார்..
சிவாஜியோட இந்தச் செயல் பலபேர் அறியாத விசயம். அவரோட நெருக்கமா பழகறவங்களுக்குத்தான் தெரியும், சிவாஜி எப்படி அன்பு செலுத்துவார்னு.
அவருக்கு ரெண்டு பேரை ரொம்பப் பிடிக்கும். ஒன்னு நான்..மற்றவர் வியட்நாம் வீடு சுந்தரம். என்னன்னு தெரியலை..என்னை ரொம்பத் திட்டுவாரு. ஆனால் ஒரு நாள் நான் வரலைன்னாலும், "அந்த எழவெடுத்தவனை எங்கே காணோம்.. அவனைக் கூட்டிட்டு வா" ன்னு சொல்லுவார். எப்பவும் நான் எதாச்சும் நொட்டை, நொள்ளை சொல்லிட்டேதான் இருப்பேன். அதுக்குத்தான் என்னை அவர் எழவெடுத்தவனேன்னு திட்டுவார்..
V.
ஆரம்பத்துல சொன்ன 'ஒன் மோர்' பத்தி இப்போ இன்னொரு சம்பவம் சொல்றேன்.
எம்ஜியார் கூட 'எங்க வீட்டுப்பிள்ளை'ல எடிட்டிங் அசிஸ்டென்டா வேலை செய்யற வாய்ப்பு வந்துச்சு. அப்போ எல்லாம் எடிட்டிங் அசிஸ்டென்ட்ஸ் செட்டுக்கும் வரணும். அதனால் அவர் கூடப் பழகற சந்தர்ப்பமும் கிடைச்சது. அவர் கூட 3 படத்துல பணி செய்யற வாய்ப்பு அமைஞ்சது.
சிவாஜி, எம்ஜியார் இவங்க ரெண்டு பேருக்கும் இருந்த பெரிய வித்தியாசம் என்னன்னா, சிவாஜி செட்ல இருக்கும்போது, கலகலன்னு இருக்கும். நாம பாட்ல பேசிட்டோ, சிரிச்சிட்டோ நம்ம வேலையைப் பார்த்துட்டு இருக்கலாம். சிவாஜி கூட எல்லோரும் ஃபிரண்ட்லியா மூவ் பண்ணுவோம்.. திட்டுவாரு, கலாட்டா பண்ணுவாரு..ஜாலியா இருப்பாரு.
ஆனால் எம்ஜியார் செட்ல இருக்கும்போது நாம சிரிக்கலாம்.. ஆனால் சின்ன சப்தம் கூட வெளியே கேட்கக் கூடாது. சிரிப்புச் சத்தம் கேட்டு, அவர் நம்மைத் திரும்பிப் பார்த்துட்டார்னா போதும்.. அவ்வளவுதான் நாம அவுட்.
அவர் கூட நான் பண்ணுன மூனாவது படம் 'நாளை நமதே'..சேது மாதவன்தான் டைரக்டர்.
லதா அம்மா கூட இவர் ஒரு டூயட் பாட்டு பாடற காட்சி, அன்னைக்கு நடந்தது.. ஒரு பாடல் வரியில எம்ஜியார் நடிப்பு சரியா சிங்க் ஆகலை..அதைக் கவனிச்ச நான், சிவாஜி கிட்ட சொல்ற மாதிரியே எதார்த்தமா 'ஒன் மோர்'னு சொல்லிட்டேன்.
என்னைத் திரும்பிப் பார்த்த எம்ஜியார், ஒன்றும் சொல்லாம, மறுபடியும் அதை நடிச்சுக் கொடுத்தாரு.
அன்னைக்கு சூட்டிங் முடிஞ்சு வீட்டுக்கு வந்துட்டேன். வழக்கமா என்னைக் கூட்டிட்டுப் போக சூட்டிங் கார் வரும். மறுநாள் காலையில் கார் வரலை.
ரொம்ப நேரம் காத்திருந்து பார்த்துட்டு, நானே ஒரு ஆட்டோ பிடிச்சுட்டு ஸ்டுடியோ போனேன்.
ஆனால், நான் ஸ்டுடியோ உள்ளேயே அனுமதிக்கப்படலை... கொஞ்ச நேரத்தில் டைரக்டர் சேது மாதவனே வெளியே வந்தார்..
என்னிடம், " சேகர்.. உனக்கு இந்தப்படம் வேண்டாம். நீ அடுத்த படத்தில வேலை பார்க்கலாம்" என்றார்.
அதாவது, 'ஒன் மோர்' கேட்டதுக்காக என் வேலை போச்சு.
***************
நன்றி :
டைரக்டர் திரு S.A.சந்திரசேகர் அவர்கள்.
திரு.சித்ரா லட்சுமணன் அவர்கள்
****************
காணொளியை எழுத்து வடிவமாக்கியது..
அன்புடன்,
நாகராஜன் வெள்ளியங்கிரி.
Thanks Vijaya Raj Kumar
-
-
-
-
-
-