Originally Posted by
tiruttakkan
வென்றவன் சொன்னதே வரலாறு
கௌரவர்கள் வென்றிருந்தால்
பாண்டவர்கள் பஞ்சமாபாதகர்கள்.
திரௌபதியின் கற்பு கேள்விக்குறி.
துச்சாதன யோகியை அவள் துகிலுரிக்கத்
தப்பியோடும் தம்பிக்காகத் தன்
வேட்டியில் பாதி தந்த சுயோதனபிரான்.
பார்வை மங்கிய போது பக்கமிருந்து
நாட்டுக்குப் பாதகம் செய்த பாண்டு.
வஞ்சகப் பாண்டுவை வனமனுப்பிய
தெய்வத் திருமகனார் திருதிராட்டிரர்.
உண்ட வீட்டுக்கு இரண்டகம் எண்ணிய
வீட்டுமன், துரோணன், கிருபன்.
சூதாட்ட வெறியன் அதர்ம ராசன்.
பொய்யின் துணையால் போரிட்டுத் தோற்றவன்.
ஒரே மனைவியைப் பங்கிட்ட பாண்டவக் கும்பல்.
சொந்த நாட்டிலிருந்து விரட்டப்பட்டு
வந்த நாட்டில் கலகம் விளைவித்து
அண்ணன் தம்பியிடையே
அடிதடி எற்படுத்திவிட்ட கண்ணன்.
குறுக்கு வழிகளைப் போரில் புகுத்தி
அதர்மத்தை அனுதினம் ஆராதித்தவன்.
பொய்மையும் வாய்மையிடத்தென உணர்ந்து
நன்மை பயக்கப் பொய் கூறிய கர்ண வள்ளல்.
இந்திரனின் வஞ்சகம் உண்ர்ந்து
கவசம் குண்டலம் பிச்சை மறுத்துப்
பெண் பித்தன் அர்ஜுன வதம் எண்ணிய
கர்ணன் என்னும் கடவுளின் பகுதி.
கௌரவ குலம் அறத்தால் நிலக்க
பாரதம் எழுதக் கோலெடுத்தான்
சகுனி மகா முனிவன்.
திருத்தக்கன்.