Quote:
புதுமை இயக்குனர் என்று புகழின் உச்சியில் ஏறி நின்ற ஸ்ரீதரின் இயக்கத்தில் வந்த அனைத்துப் படங்களிலும் பாடல்கள் தேனிசை ரீங்காரமிடும் மதுர கானங்களே !
கல்யாண பரிசு போன்ற காலத்தினால் கரையாத கனமான கதைக் களம் மட்டுமல்லாது தன்னால் என்றென்றும் சிரித்து மகிழ வைக்கும் தரமான நகைச்சுவைத் ததும்பலையும் சம பங்கில் தர இயலும் என்பதை தேன் நிலவு, காதலிக்க நேரமில்லை, ஊட்டி வரை உறவு படங்களின் மூலம் நிலைப்படுத்தினார் ஆரம்பகால தயாரிப்புக்களில் இசையில் ஏ எம் ராஜா இணைவில் மறக்க முடியாத பாடல்களில் கண்ணியமான காதலை படம் பிடித்தார்.
ஜனரஞ்சகமான பொழுதுப் போக்குப் படமான தேன் நிலவில் பாட்டுப் பாடவா...பார்த்துப் பேசவா..பாடல் காட்சியமைப்பும், இதமான வண்ணத்தில் எடுக்கவில்லையே என்று ஏங்க வைத்த வெளிப்புற இயற்கையழகுக் காட்சிகளும், இளமைத்துள்ளல் மங்கை வைஜயந்தியுடன் காதல் மன்னரின் பதமான காதல் பதிவுகளுடன் கூடிய ராஜாவின் மென்மைக் குரல் குழைவும்...என் மனத் திரையில் என்றும் பசுமையான மதுர கானப் பதிவே!!