மறுபடியும் மறுபயணம்.
நிரம்ப நாட்களாகிவிட்டதால் மீண்டும் ஒருமுறை என் பூர்வீகத்தை கண்டுவர என்று இந்த காலாண்டுவிடுமுறையின் இருநாட்களை ஒதுக்கினேன்.செல்ல நாயிடம் விடை பெறுவதைப்போல கணிணியிடம் சொல்லிக்கொண்டு ஆட்டோவில் பேருந்துநிலையம் அடைந்தேன்.இதற்குமுன் இவ்வளவு கனத்ததில்லை,ஊருக்கு சென்றுவர.அநேகம் முறை பள்ளிக்கு மட்டம் போட்டுவிட்டு ஆனந்தமாய்த்தான் கிளம்பியிருக்கிறேன்.ஆனால் இம்முறை பள்ளி சகாக்களுடன் இரண்டு நாட்களை மிஸ் செய்யப்போகிறேன் என்ற எண்ணத்துடன் கிளம்பினேன்.ஆட்டோவில் முன்னாடி ஓட்டுனருடன் அமர்ந்துகொள்வதே வழக்கம்.வழிகளெல்லாம் எனது ஊரின் பழைய முகத்தை காட்டிக்கொண்டே வந்தன.எங்கள் மாமாவிற்கு திருமணம் முடிந்து வீட்டிற்கு வந்திருந்த மாமியிடம் அறிமுகமான முதல் பிரமுகர்கள் நாங்கள் ஐந்து பங்காளிகள் தான்.வெட்கத்தோடு பேசி நண்பர்களாகி பரிசுப்பொருட்கள்அனைத்தையும் பிரித்தது நினைவிருக்கிறது. எங்களுக்கான பேருந்து வந்துவிட்டிருந்தது.என் ஞாபகங்களை அங்கேயே போட்டுவிட்டு பேருந்தில் ஏறி வேகவேகமாக ஒரு ஜன்னல் இருக்கையில் அமர்ந்துகொண்டேன்.சென்னையின் புழுக்கத்தை விட்டுவிட்டு பட்டுநகரத்திற்கு விரைந்துகொண்டிருக்கிறது உந்து.ஒரு வேடிக்கை பாருங்கள்:பல்லவனின் நகரத்தில் பாரதி ஓடுகிறான்,பாரதியின் நகரில் பல்லவன் ஓடுகிறான்,நான் பேருந்துகளின் பெயரை சொன்னேன்.பாதையின் முன்னோட்டம்,வாழ்க்கையை பின்னோடியது.ஐயம்பேட்டை,இது லா.ச.ரா. வாழ்ந்த ஊராம்!ஐயம்பேட்டையிலிருந்து முத்தியால்பேட்டை செல்ல அவா கொண்ட என்னிடம்,ரெண்டு ஊருக்கு ஊடால முதைலைங்க கிடக்கு என்று பயமுறுத்தியவர்களின் முகங்கள் நினைவில் பூச்சாண்டி காட்டின.தூக்குச்சட்டியில் நுங்கு கொணர்ந்தது,மரத்தில் ஏற முற்பட்டு விழுந்தது,வண்டி ஓட்ட கற்றுக்கொண்டது தோற்றது- பசுமரத்தாணி.ஸ்ரீபெரும்புதூரை அடைந்த பின் நினைவுகளை விட குமுதம் கொஞ்சம் சுவாரஸ்யமாகப்பட்டது.எவ்வலவு நேரம் தான் கன்னத்தில் கரம் வைத்து முட்டுக்கொடுத்து வேடிக்கை பார்ப்பதைப்போல பாவ்லா காட்டுவது?காற்றின் கைகள் அப்போதுதான் வேலையில் இறங்கின.என் முகத்தினை வறட்சிப்பிரதேசமாக்கி சுத்தமாக உலரவைத்தது.காற்றின் விஸ்வரூபக்கைகளில் மிகவும் காயம் கண்டிருந்த பொம்மை போலிருந்தது என் சிரம்.என் பால்யம் அலாதியாக எல்லாம் இல்லை.எனக்கு கிடைத்த வசவுகள் இவை:அடுப்பு,தயிர்வடை,டியூப்லைட்,தத்தி,எருமை இன்னபிற.ஆனால் என்னைடம் அன்று எக்காளமிட்டவர்களால் இன்று பேசி மாளவில்லை.அவர்களாலேயெ பழக்கப்பட்டு அவர்களையே காயப்படுத்தும் கத்தி நான்.இந்த துர்நினைவுகள் சலனமிட,கொஞ்ச தூரம் வேடிக்கை பார்த்துக்கொண்டு வந்தேன்.காற்றூ இன்னமும் ஓய்ந்தபாடில்லை.தூரத்து பனைமரங்கள் சாய்ந்தபடி "எங்க அவஸ்தை உனக்கு புரியுதா?"என்று கேட்பது போல இருந்தது.ஊருக்கு செல்லும் குழந்தைகளின் வழக்கமான செயல்களைப்போல அன்றி நான் ஏதேதோ விபரீத கற்பனைகளில் மூழ்கி முத்தெடுத்துக்கொண்டிருந்தேன்.கையிலிருந்த வால்காவிலிருந்து கங்கை வரை-யையும் படிக்க முடியவில்லை.கடந்த முறை வந்துப்ப்யிருந்தபோது ஒரு இழவுக்கு வந்திருந்ததால்,அந்தப்பயணத்தின் ரணங்கள் இன்னுமொருமுறை எனக்கு வலித்தன.ஆறு தெருக்களும்,நூற்றுக்கணக்கான நாராசந்துகளும் நிரப்பிய ஊரின் தொழிலான நெசவின் சாயங்கள் மனதில் ஊறின.சாயடிகளில் பந்துகளை அடித்து அதை தேடி ரகசியமாக கடத்தல்காரர்களைப்போல சென்று வந்ததும்,மாமியின் குழந்தையோடு விளையாடியதும்,விநாகருக்கு கண்கள் பறித்ததும்,தாயபாஸ் ஆடியதும் தெருவில் டயர் உருட்டியதும்,தராசுகளில் விளையாடியதும் என்று எண்ணற்ற ஞாபகங்கள்.அதன் நகைச்சுவையில் சிரித்துக்கொண்டிருந்த என்னை சுற்றியிருதவர்கள் பைத்தியக்காரன் என்று நினைத்திருக்க வேண்டும்.ஊர் அடைந்து டி.வி.டியில் படங்கள் பார்த்தேன்.அதிகம் பேசவில்லை.பாடியின் கைமணத்திலான ஆபங்களை புசித்தபடி நினைவுகளையும் சேர்த்து ஏப்பம் விட்டேன்.ஊருக்கு போஇ வருவது வீண் என்று கற்றுக்கொண்டதோடு இந்த பயணம் முடிவுக்குவந்தது.திரும்பும் தடங்களில் தொலைத்த என் நினைவுகளை சுருட்டிக்கொண்டு மீண்டும் கையிலெடுத்து காகிததில் கொட்டிவிட்டேன்.காற்று அடிக்கிறது