Quote:
உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த கதை, யதார்த்த குடும்ப பின்னணியுடன் தொடங்குகிறது. சிவநேசன் தனது இரண்டு மகள்கள் சக்தி, நிலா, மகன் திலீபன் இவர்கள் தான் உலகம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும் அன்பான அப்பா. பிள்ளைகளிடம் அன்பை கொட்டுவதோடு அவர்களை பொறுப்பு மிக்கவர்களாகவும் வளர்க்கிறார். பிள்ளைகளும் அப்பா மீது உயிரையே வைத்திருக்கிறார்கள். தாயில்லை என்ற குறை தெரியாமல் தாய்க்குத் தாயும் தந்தைக்கு தந்தையுமாக நேசிக்கும் சிவநேசனின் அன்பில் பிள்ளைகள் உருகிப்போகிறார்கள்.
இப்படி ஒரு அப்பாவா என்று மற்ற பெண்களே பொறாமைப் படும் அளவுக்கு சிவநேசனின் பாசத்தின் எல்லை விரிந்துகொண்டே போகிறது.
இவர்கள் வீட்டுக்கு எதிர்வீடு அலமேலுவின் வீடு. சிவநேசனை `தம்பி' என்றும் அவர்மகள் சக்தியை `மருமகளே' என்று அவர் வார்த்தைக்கு வார்த்தை அழைப்பவள் அலமேலு.
இந்த உறவு முறை நெருக்கம் அவர்கள் இருவர் குடும்பத்திலும் அதிகப்படியான நெருக்கத்தை ஏற்படுத்தி வைக்கிறது.
அலமேலுவுக்கு ஒரு மகன். 3 மகள்கள். பெண்களில் இருவருக்கு திருமணமாகி அவர்கள் கணவர்களும் வீட்டோடு மாப்பிள்ளைகளாக அங்கேயே இருக்கிறார்கள். திருமணமான பெண்கள் இருவருமே அக்கா- தங்கை மாதிரி நடந்து கொள்ளாமல் எப்போதும் சக்களத்திகள் மாதிரி சண்டைபோட்டுக் கொள்வார்கள்.அதுபோதாதென்று இவர்கள் கணவர்கள் அடிக்கும் லூட்டி வேறு. உழைக்காமல் வீட்டோடு மாப்பிள்ளையாக இருந்தாலும் வெட்டி பந்தாவை விட்டு விடாத மாப்பிள்ளைகள் இவர்கள்.
அலமேலுவின் மகன் லட்சுமிபதி. சிறுவயது முதலே சிவநேசன் குடும்பத்துடன் இவர்கள் குடும்பம் நட்பு பாராட்டி வந்ததில் சக்தி இவனது அன்பான சிநேகிதி. இந்த நட்பு இவர்கள் இருவரின் பருவ வயதில் காதலாக மொட்டவிழ்ந்து ஒருவர் மற்றவரிடம் வெளிப்படுத்த தவிக்கிறது. ஆனால் யார் காதலை முதலில் சொன்னாலும் நட்பு சிதைந்து விடுமோ என்ற பயத்தில் காதலை உள்ளுக்குள்ளேயே பூட்டி வைக்கிறார்கள்.
இதற்கிடையே அலமேலு தன் மகன் லட்சுமிக்கு தங்கள் ஜாதிசனத்தில் பெண் தேடுகிறாள். இனம் இனத்தோடு தான் சேரவேண்டும் என்பதில் அவள் தீவிரமாக இருக்கிறாள்.
இந்தமாதிரியான ஒரு சூழ்நிலையில் சக்தி-லட்சுமி தங்கள் காதலை வெளிப்படுத்தினார்களா? அலமேலுவின் ஜாதிவெறியைத் தாண்டி இவர்களால் வாழ்க்கையில் இணைய முடிந்ததா? என்பது தொடரின் அடுத்த கட்டம்.
தொடரின் நட்சத்திரங்கள்: சேத்தன், மானசா, ஹரி, கிரேசி, வடிவுக்கரசி, ரூபஸ்ரீ, சுவேதா, சர்வன், ரேவதிபிரியா, பாரதி, அகிலா, எல்.ராஜா, ஸ்ரீலேகா.
பாடல்: யுகபாரதி. பாடல் இசை: இலக்கியா. பின்னணி இசை:கிரண். ஒளிப்பதிவு: சாகித்யா சீனு. திரைக்கதை: சி.முத்துச்செல்வன். வசனம்: பா.ராகவன். இயக்கம்: விக்ரமாதித்தன். தயாரிப்பு: சுஜாதா விஜயகுமார். திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.