-
ஒன்றன் பின் ஒன்றாய் ஞாபக மேகங்கள் …….
இருபது வயதில் என்னைத் தூங்கவிடாமல் செய்தது காதல் ;
எட்டு வயதில் என்னைத் தூங்கவிடாமல் செய்தவர் நீங்கள்.
கதைகளிலும் கனவுகளிலும் நான் கற்பனை செய்து வைத்திருந்த ராஜகுமாரன் நீங்கள் தான் என்று நினைத்தேன்.
உங்களின் இரட்டை நாடியின் பள்ளத் தாக்கில் குடியிருந்தேன்.
உங்கள் முகத்தின் மீது மீசைவைத்த நிலா என்று ஆசை வைத்தேன்.
நீங்கள் புன்னகை சிந்தும் போது நான் வழிந்தேன். வாள் வீச்சில் வசமிழந்தேன். உங்கள் பாடல்களில் நானும் ஒரு வார்த்தையுமாய் ; நானும் ஒரு வாத்தியமாய் ஆனேன்.
ஒரு தாளம் கட்டுமானத்தில் சிரிக்கும் உங்கள் சங்கீதச் சிரிப்பில் வார்த்தைகளில் பிசிறடிக்காத உங்கள் வசன உச்சரிப்பில் நான் கரைந்து போனேன்.
பெரியகுளம் ரஹீம் டாக்கீஸில் “நாடோடி மன்னன்”பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்து, தூக்கத்தைத் தொலைத்துவிட்டு, சுவரில் நசுக்கப்பட்ட மூட்டைப் பூச்சிகளின் ரத்தக் கோடுகளை அந்தப் படத்தில் வரும் கயிற்றுப் பாலமாய்க் கற்பனை செய்து கொண்டு விடிய விடிய விழித்திருக்கிறேன்.
“மன்னனல்ல மார்த்தாண்டன”என்று உங்களைப் போல் மூக்கில் சைகை செய்யப் போய் சுட்டுவிரல் நகம்பட்டு சில்லி மூக்கு உடைந்திருக்கிறேன்.
பிரமிக்க மட்டுமே தெரிந்த அந்தப் பிஞ்சு வயதில் எனக்குள் கனவுகளைப் பெருகவிட்டதிலும் கற்பனைகளைத் திருகிவிட்டதிலும் உங்கள் ராஜாராணிக் கதைகளுக்குப் பெரும்பங்கு உண்டு என்பதை நான் ரகசியமாய் வைக்க விரும்பவில்லை.
நூறு சரித்திரப் புத்தகங்கள் ஏற்படுத்த முடிந்த கிளர்ச்சியை உங்கள் ஒரே ஒரு படம் எனக்குள் ஏற்படுத்தியிருக்கிறது. அந்த பாதிப்பு எனக்கு மட்டும் இல்லை. குடை பிடித்துக் கொண்டவர்களையும் எங்கோ ஓர் ஓரத்தில் நனைந்துவிடுகிற அடைமழை மாதிரி உங்களை விமர்சித்தவர்களைக் கூட ஏதேனும் ஒரு பொழுதில் நாசூக்காக நனைத்தே இருக்கிறீர்கள்.
என்ன காரணம் என்று எண்ணிப் பார்க்கிறேன். நீங்கள் மந்திரத்தால் மாங்காயோ தந்திரத்தால் தேங்காயோ தருவித்தவரில்லை. வரலாற்று ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் அகழ்ந்து பார்த்தால் மட்டுமே உங்கள் வெற்றியின் வேர்களை விளங்கிக் கொள்ள முடியும்.
இந்த மண்ணில் எங்கள் மனிதர்கள் சில நூற்றாண்டுகளாக எதை இழந்துவிட்டு நின்றார்களோ அதையே நீங்கள் தோண்டி எடுத்துத் துடைத்துக் கொடுத்தீர்கள் ; விறுவிறுப்பாய் விலைபோயிற்று.
உடலும் உயிரும் மாதிரி காதலும் வீரமும் கலந்தே விளைந்த களம் இந்தத் தமிழ் நிலம்.
காதலை ஒரு கண்ணாகவும் வீரத்தை ஒரு கண்ணாகவும் போற்றிய தமிழன், பொருளாதாரத்தை நெற்றிக் கண்ணாய் நினைக்காமல் போனான் என்பதே அவன் முறிந்து போனதற்கு மூல காரணம்.
பொருதாரச் சிந்தனைக்கே வராத தமிழன், காதலையும் வீரத்தையும் மட்டும் கோவணத்தில் முடிந்து வைத்த தங்கக் காசுகளைப் போல ரகசியமாய்க் காப்பாற்றியே வந்திருக்கிறான்.
இடைக்காலத்தில் தமிழன் அடிமைச் சகதியில் சிக்கவைக்கப்பட்டான்.
அடிக்கடி எஜமானர்கள் மாறினார்கள் என்பதைத் தவிர அவன் வாழ்க்கையில் மாற்றமே இல்லை.
அவனது வீரம் காயடிக்கப்பட்டது ; காதல் கருவறுக்கப்பட்டது.
இழந்து போன ஆனால் இழக்க விரும்பாத அந்தப் பண்புகளை வெள்ளித் திரையில் நீங்கள் வெளிச்சம் போட்ட போது இந்த நாட்டு மக்களின் தேவைகள் கனவுகளில் தீர்த்துவைக்கப்பட்டன.
வீராங்கன், உதயசூரியன், கரிகாலன், மணிவண்ணன், மாமல்லன்
என்றெல்லாம் நீங்கள் பெயர்சூட்டிக் கொண்டபோது தமிழன் தன் இறந்தகால பிம்பங்களைத் தரிசித்தான்.
நீங்கள் கட்டிப்பிடித்து கானம் படித்துக் காதலித்தபோது தமிழன் புதைந்து போன காதல் பண்பைப் புதுப்படித்துக் கொண்டான்.
மலையாள மரபுப்படித் தாயார் பெயரைத் தான் இனிஷியலாகக் கொள்வார்கள். ஆனால் நீங்களோ தமிழ் மரபுப் படி தந்தை பெயரைத்தான் இனிஷிலாகக் கொண்டீர்கள்.
நீங்கள் முதன் முதலாய் இயக்கித் தயாரித்த “நாடோடி மன்னனில்” தொடக்கப் பாடலாக “செந்தமிழே வணக்கம்” என்று தான் ஆரம்பித்தீர்கள்.
உங்களைப் பற்றி என் செவிகள் சேகரித்திருக்கும் செய்திகள் ருசியானவை.
ஒரு பாடகர் ஒரு மேடையில் உங்கள் பழைய பாடல்களைப் பாடிக் கொண்டிருக்கிறார். இரண்டு மணி நேரம் கரைந்து போன நீங்கள் இப்போது என் கைவசத்தில் இருப்பது இது மட்டும் தான் என்று உங்கள் விலையுயர்ந்த கைக்கடிகாரத்தைக் கழற்றி அந்தப் பாடகருக்குப் பரிசளிக்கிறீர்கள் ; அது உங்கள் ஈகைக்குச் சாட்சி.
நாற்பத்திரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இறந்து போன உங்கள் இரண்டாவது மனைவியின் இல்லம் சென்றபோது படுக்கையறையின் கட்டிலைப் பார்த்துக் குலுங்கிக் குலுங்கி அழுதிருக்கிறீர்கள் ; அது உங்கள் ஈரத்திற்குச் சாட்சி.
தி.மு.க மாநாடுகளில் மாநாடு முடிந்ததும் பந்தலுக்கடியிலேயே படுத்துக்கிடக்கும் வெளியூர் மக்களுக்கு அவர்களே அறியாமல் அதிகாலைச் சிற்றுண்டிக்கு ஏற்பாடு செய்துவிட்டுப் போவீர்களே ! அது உங்கள் மனிதாபிமானத்துக்குச் சாட்சி.
பொதுக் கூட்டங்கள் முடித்துவிட்டு நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு வைகை அணைக்கு வந்து பொன்னாங்கண்ணிக் கீரை இருந்தால் சாப்பிடுவேன் என்று நீங்கள் நிபந்தனை விதிக்க, ஆளுக்கொரு திசையில் அதிகாரிகள் பறக்க, பொன்னாங்கண்ணிக் கீரை தயாராகும் வரை சாப்பிடாமல் இருந்தீர்களாமே ! அது உங்கள் உறுதிக்குச் சாட்சி.
தொலைபேசி இணைப்பகத்திலிருந்த உங்கள் ரசிகர் ஒருவர் உங்கள் குரல் கேட்க ஆசைப்பட்டு இரவு பதினொரு மணிக்கு உங்கள் வீட்டுத் தொலைபேசி சுழற்றப்படுகிற சத்தம் கேட்டு ஆசையாய் எடுத்துக் கேட்க’டொக்’என்ற அந்தச் சின்ன சத்தத்திலேயே தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுகிறது என்பது உணர்ந்து கொண்டு “யாராயிருந்தாலும் தயவு செய்து போனை வையுங்கள்” என்று உடனே உத்தரவிட்டீர்களாமே ! அது உங்கள் கூர்மைக்குச் சாட்சி.
வெளிநாட்டில் கொடுத்த பணத்தை பி.சுசீலா தமிழ்நாட்டில் திருப்பித் தரவந்தபோது “ஏன் என்னுடைய உறவை முறித்துக் கொள்ளப் பார்கிறீர்களா”? என்று உரிமையோடு மறுத்து விட்டீர்களாமே. அது உங்கள் பெருந்தன்மைக்குச் சாட்சி.
தேசிய விருது வாங்கிய பிறகு முதலமைச்சரான உங்களைச் சந்திக்காமல் கலைஞரைச் சந்தித்து வாழ்த்துப் பெறுகிறேன். கவனிக்கிறீர்கள்.
இத்தனைக்குப் பிறகும் எனக்கு இரண்டு முறை விருது தருகிறீர்கள்.
உங்கள் பெருந்தன்மை கண்டு நெகிழ்ந்து போகிறேன்.
உங்கள் வெற்றியிலிருந்து நாங்கள் கற்றுக் கொள்வதற்கு ஒன்றே ஒன்று உண்டு அது தான்-
நசிந்து போனவர்களுக்கு நம்பிக்கை ஊட்டுவது.
உங்கள் பாடல்களெல்லாம் தமிழ்நாட்டுக்கு நீங்கள் செய்த ரத்ததானம்.
பாடலாசிரியன் முகம் கரைந்து போய் நீங்கள் மட்டுமே முகம் காட்டுவது உங்கள் பாடல்களில் மட்டும் தான்.
உங்களுக்காகப் படைக்கப்பட்ட பாடல்கள் என்னையும் படைத்திருக்கின்றன.
எனக்கு ஒரே ஓர் ஆசை மட்டும். ஆடிக்காற்றில் ஆடும் அகல் விளக்கின் சுடராய் ஆடிக் கொண்டேயிருக்கிறது.
நிகழ்விலிருக்கும் எல்லாக் கதாநாயகர்களும் என் பாடலை உச்சரித்திருக்கிறார்கள். உங்கள் உதடுகளைத் தவிர.
ஒரே ஒரு பாட்டு உங்களுக்கு நான் எழுத ஆசைப்பட்டேன்.
ஆனால்,என்னால் எழுத முடிந்தது உங்களுக்கான இரங்கல் பாட்டுதான்.
உங்களுக்கு என்னால் படைக்க முடிந்தவை – உங்கள் இறுதி ஊர்வலமான “காவியத் தலைவனுக்குக் கடைசி வரிகள்” தான்.
உங்கள் ராமாவரம் தோட்டத்திற்கு நான் முதன் முதலாய்ப் போனது உங்கள் அன்புத் துணைவியாருக்கு ஆறுதல் சொல்லத்தான்.
“உங்களைப் பற்றி முதன் முதலில் நான் பேசியது உங்கள் இரங்கல் கூட்டத்தில் தான். அன்று சொன்ன இறுதி வரியே இன்றும் என் இறுதி வரி ;
ஒரே ஒரு சந்திரன் தான் ;
ஒரே ஒரு சூரியன் தான் ;
ஒரே ஒரு எம்.ஜி.ஆர் தான் ;
நன்றி : வைரமுத்துவின் “இந்தக் குளத்தில் கல் எறிந்தவர்கள்” நூலிலிருந்து.
-
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு மாபெரும் கட்சியாகத் தமிழகத்தில் விளங்கும் என்று நான் எதிர் பார்த்ததுண்டு. அது நியாயமாக நடந்துவிட்டது. அதைச் சரிக்கட்டவும், ‘அப்படியொன்றும் இல்லை’ என்று காட்டவும் நண்பர் கருணாநிதி பல்வேறு திசையில் பிராயணம் செய்து பார்த்தார். பல ஊர்களில் அவர் பேசவே முடியாமல் போயிற்று.
எம்.ஜி.ஆர். மீது ஜனங்களுக்கும் கட்சித் தொண்டர்களுக்கும் இருந்த பிரியம் என்பது சாதாரணமானதாக இல்லை.அதற்குக் காரணம் நியாயமா இல்லையா என்று ஆராய்வதைவிட, ஏதோ சில காரியங்களை அவர் செய்திருக்கிறார், செய்யக்கூடியவர், நியாயமானவர், நேர்மையானவர், ஒழுக்கமானவர் என்றெல்லாம் மக்கள் எண்ணினார்கள். அப்படி எண்ணிய மக்களின் நம்பிக்கை வீண் போகவில்லை.
கருணாநிதியின் மீது மக்களுக்கிருந்த நல்ல பெயரை அதுதான் போக்கடித்தது. எம்.ஜி.ஆரை அவர் விலக்காமல் இருந்திருந்தால் நிலைமைகள் வேறுபட்டிருக்கக் கூடும். திராவிட முன்னேற்றக் கழகத்தைக் தவிர வேறு யாரும் ஆட்சிக்கு வருவதென்பது இன்னும் ஒரு 25 ஆண்டுக் காலத்துக்கு நடக்காமலேயே போயிருக்கும். அதனால் எம்.ஜி.ஆருடைய விலக்கம் காரணமாக, எம்.ஜி.ஆர் விலக்கப்பட்டதன் காரணமாக, திராவிட முன்னேற்றக் கழகம் மெலியும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்கின்ற கட்சி ஓங்கி வளரும் என்று நம்பினேன்.
மற்ற நடிகர்களைப் போல் அவரும் ஒரு நடிகர்தான் என்றாலும், அரசியல் ஈடுபாட்டில் அவருக்கு இருந்த பிடிப்பின் காரணமாக, சில அரசியல் தத்துவங்களையும் அவர் உணர்ந்து கொண்டிருந்தார்.விஷயங்களுக்குப் பதில் சொல்வதில் கெட்டிக்காரராக விளங்கினார். பிரச்சனைகளுக்குப் பரிகாரம் தேடுவதிலும் கெட்டிக்காரராக விளங்கினார். ஒரு கட்சியை நடத்தக் கூடிய சாமர்த்தியம் தனக்கு இருக்கிறது என்பதையும் காட்டினார்.
“பிரித்தலும் பேணிக் கொளலும் பிரித்தார்ப் பொருத்தலும் வல்லது அமைச்சு”- என்றும் அவர் காட்டினார். அவர் கட்சிக்குள் மிக முக்கியமான ஆட்களும் உள்ளே நுழைய ஆரம்பித்தார்கள். அண்ணா திராவிட முன்னேற்றக் கழக்த்தில் அங்கம் வகித்தவர்களில் பட்டதாரிகள் அதிகமாக இருந்தார்கள். அதே அளவுக்கு பட்டமோ, படிப்போ இல்லாத கிராம வாசிகளும் அதிகமாக இருந்தார்கள். திராவிட முன்னேற்றக் கழகம் எவ்வளவு எரிச்சல் அடைந்தும் கூட இந்த வளர்ச்சியைத் தடுத்து நிறுத்த முடியவில்லை.
எம்.ஜி.ஆருக்கு எதிராகக் கருணாநிதி அதிகார பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டும் கூட அவரால் அவருடைய வளர்ச்சியை நிறுத்த முடியவில்லை. யாரோட உறவு கொண்டால் எந்த எதிரியைத் தீர்த்துக் கட்டலாம் என்பதில் கருணாநிதியைவிட எம்.ஜி.ஆர் கெட்டிக்காரராக விளங்கினார். கருணாநிதிக்கு இல்லாத சில புதிய திறமைகளும், எம்.ஜி.ஆருக்கு இருந்ததாக அந்தக் காலங்களில் கருதப்பட்டது. உண்மையாகவே ஒரு கட்டத்தில் ஆகிவிட்டது. எனக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையில் நீண்டகாலமாகத் தொழில் தொடர்பு உண்டு. அந்தத் தொடர்புகளில் கசப்பு இருந்தாலும், இனிப்பும் இருந்தது. ஆனால் அரசியலில் அவர் நடந்து கொண்ட முறையும், சாமர்த்தியமும் எனக்கே திகைப்பாக இருந்தன. நமக்குக்கூட அந்த அளவுக்கு உழைக்கின்ற சக்தி இல்லை என்பது புரிந்தது.
திண்டுக்கல் தேர்தலில் அவர் ஈடுபட்ட போது, அந்தத் தேர்தலுக்கு அவர் பட்டபாடு, அதிகாலையிலிருந்து இரவு வரையில் அவர் செய்துவந்த சுற்றுப்பயணங்கள், இவை வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். சோம்பல் என்பது துளியும் இல்லாமல், அவர் எந்தச் சூழ்நிலையிலேயும் யாரையும் சந்திப்பதற்குத் தயாராக இருந்து மாபெரும் வெற்றி ஒன்றை, எல்லாக் கட்சிகளையும் எதிர்த்துப் பெற்றார் என்பது, தமிழக வரலாற்றில் மறக்க முடியாத ஒன்றாகும்.
courtesy - kannadasan
-
-
-
மதுரை என்றாலே மக்கள் திலகத்தின் கோட்டை என்பது தெரிந்த விஷயம்தான். அவரது படங்கள் பல மதுரையில் சாதனை செய்துள்ளன. நினைத்ததை முடிப்பவன், சிரித்துவாழ வேண்டும் ஆகிய படங்கள் 100 நாள் பட வரிசையில் இணைய காரணமாக இருந்தது மதுரை. 1950-ம் ஆண்டிலேயே முதல் முதலில் மக்கள் திலகத்துக்கு ரசிகர் மன்றம் ஆரம்பிக்கப்பட்ட பெருமை மதுரைக்குத்தான் உள்ளது. கடைசியாக புரட்சித் தலைவர் முதல்வராக இருந்தபோது ரசிகர் மன்ற மாநாடும் 1986ல் மதுரையில்தான் நடந்தது.
புரட்சித் தலைவரின் அரசியல் பாதையிலும் பல சாதனைகளை செய்தது மதுரை. 1980,1984ம் ஆண்டில் (மதுரை மேற்கு, ஆண்டிப்பட்டி) சட்டசபைத் தேர்தல்களில் மதுரை மாவட்டத்தில்தான் புரட்சித் தலைவர் போட்டியிட்டு வெற்றி பெற்று 2வது மற்றும் 3வது முறையாக ஆட்சி அமைத்தார்.
புரட்சித் தலைவருக்கு இவ்வளவு சிறப்புகள் கொண்ட மதுரையில் 30ம் தேதி எம்ஜிஆர் நூற்றாண்டு விழா தமிழக அரசு சார்பில்கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு நேற்று புரட்சித் தலைவரின் சாதனைகளை விளக்கும் புகைப்படங்கள் கொண்ட கண்காட்சியும் திறந்து வைக்கப்பட்டது. இதில் அரிய புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன.
30ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நூற்றாண்டு விழா நடக்கிறது. இதில் மக்கள் திலகத்தின் ரசிகர்கள், தொண்டர்கள் , புரட்சித் தலைவரின் மீது மாறாத நன்றி விசுவாசம் அன்பு கொண்ட லட்சக்கணக்கானோர் கலந்து கொள்கின்றனர்.
எம்ஜிஆர் சகாப்தம் முடிந்துவிட்டது என்று அவரது புகழை ஏற்க முடியாதவர்கள் தங்களுக்குள் கூடி பேசி திருப்தியை ஏற்படுத்திக் கொண்டு கலைந்து செல்வார்கள். அவர்களுக்கு ஏமாற்றத்தை தரும்படி தமிழக அரசின் சார்பிலேயே புரட்சித் தலைவருக்கு வெற்றிகளை கொடுத்த மதுரையில் நூற்றாண்டு விழா நடக்கிறது. பிறகு அரசு கவிழ்ந்தாலும் பரவாயில்லை. தமிழக அரசு சார்பில் நூற்றாண்டு விழா நடந்தது என்பது வரலாறு பதிவு ஆகிவிடும்.
எம்ஜிஆர் புகழ் என்றும் மறையாது. அவர் பேரை சொல்லாமல் அதிமுகவின் எந்த அணியும் ஆட்சிக்கு வரமுடியாது. எதிர்க்கட்சிகளும் கூட எம்ஜிஆரை தவறாக விமர்சித்தால் ஓட்டு கிடைக்காது என்ற நிலையை அவர் அடைந்துவிட்டார்.
அதனால்தான் புரட்சித் தலைவர் மக்கள் தலைவராக விளங்குகிறார். மக்கள் மனங்களில் எம்ஜிஆர் என்றும் புகழுடன் வாழ்வார்.
-
மதுரை : எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி மதுரையில் இன்று 1500 பேர் பங்கேற்ற மாரத்தான் ஓட்டம் நடந்தது. அமைச்சர் செல்லூர் ராஜூ துவக்கி வைத்தார். எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நாளை மறுநாள் (ஜூன்30) மதுரை ரிங்ரோடு பாண்டிகோயில் அருகே நடைபெறுகிறது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமை வகித்து துவக்கி வைக்கிறார். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விளையாட்டு, கட்டுரை, கவிதை, பேச்சு உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான மாரத்தான் ஓட்டம் இன்று காலை நடந்தது. ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் துவங்கிய மாரத்தான் ஓட்டத்திற்கு கலெக்டர் வீரராகவராவ் தலைமை வகித்தார். கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கொடியசைத்து துவக்கி வைத்தார்.
போலீஸ் துணை கமிஷனர் மணிவண்ணன், டிஆர்ஓ குணாளன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் செந்தில்குமாரி, மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில் அண்ணா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ரோஸ்கோர்ஸ் மைதானத்தில் துவங்கிய ஓட்டம் அழகர்கோயில் ரோடு, தல்லாகுளம், கோரிப்பாளையம், சிம்மக்கல், வடக்கு வெளிவீதி, ரயில் நிலையம், பெரியார் பஸ் ஸ்டாண்ட், மகப்பூப்பாளையம் வழியாக அரசரடியை சென்று அடைந்தது. இதில் 1500 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு நாளை மறுநாள் நடைபெறும் விழாவில் முதல்வர் பரிசு வழங்க உள்ளார்.
-
மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா குறித்து அமைச்சர்களுடன் முதல்வர் கே.பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார்.
மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் பிறந்த நாள் நூற் றாண்டு விழா இந்தாண்டு கொண் டாடப்பட்டு வருகிறது. இதற்காக தமிழக அரசு சார்பில் வரும் 30-ம் தேதி முதல் தொடர்ந்து மாவட்டந் தோறும் பெரிய அளவில் மாநாடு நடத்தப்படுகிறது. இறுதியாக சென் னையில் பிரம்மாண்ட மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பல லட்சம் பேர் பங்கேற் பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் மாநாடு வரும் 30-ம் தேதி மதுரையில் நடக்கிறது. இதற்கான இடத்தில் தற்போது பந்தல், மேடை அமைக்கும் பணிகள் விறு விறுப்பாக நடைபெற்று வருகின் றன. இதற்காக அரசு சார்பில் புகைப் படக் கண்காட்சியும் மதுரையில் தொடங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், எம்ஜிஆர் நூற் றாண்டு விழா தொடர்பாக விவா திக்கவும், பல முக்கிய முடிவுகளை எடுக்கவும், தமிழக முதல்வர் கே.பழனிசாமி இன்று பிற்பகல் 2 மணிக்கு அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று பொதுப்பணித்துறை, நெடுஞ் சாலைத்துறை மானியக் கோரிக்கை கள் மீதான விவாதம் நடக்கிறது. இத்துறைகளை கவனிக்கும் முதல்வர் கே.பழனிசாமி, உறுப் பினர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பதுடன், துறை தொடர் பான அறிவிப்புகளையும் வெளி யிடுகிறார்.
அமைச்சர்களுடன் ஆலோசனை கூட்டம் நடப்பதால், பேரவைக் கூட் டம் இரு பிரிவுகளாக நடத்தப்பட லாம் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
-
எம்ஜியார்_என்கிற_பிம்பம்_உருவான_விதம்
அப்போதெல்லாம், புரட்சித்தலைவர், மக்கள்திலகம் என்கிற பட்டங்கள் எல்லாம் கிடையாது. எங்களுக்கு அவர் MGR மட்டும் தான்…!
முதல் தடவையாக நான்எம்ஜியார் படம் பார்த்தபோது. எனக்கு வயது 11-12 இருக்கும். அந்த காலகட்டத்தில் தமிழ் சினிமாக்களில் மூன்று ஹீரோக்கள் இருந்தார்கள். மூவருக்கும் மூன்றெழுத்து தான்…
எம்ஜியார், சிவாஜி,ஜெமினி
. ராஜா, ராணி – சரித்திரப்படம் என்றால் –அவை எம்ஜியாரை தவிர வேறு யாருக்கும் பொருந்தாது –
என்பது என் அபிப்பிராயம். இன்று வரை அந்த அபிப்பிராயம் மாறவில்லை.
அந்த காலத்தில் எனக்கு மிகவும் பிடித்த எம்ஜியார் படம் “மலைக்கள்ளன்”.இப்போதும் எனக்கு பிடித்த பாடல்களில் ஒன்று, நாமக்கல் கவிஞரின் அந்த
“எத்தனை காலந்தான் ஏமாற்றுவார்
இந்த நாட்டிலே” என்று எம்ஜியார் பாடும் பாடல்.
பின்னர் நிறைய படங்கள் – எல்லாம் ராஜா ராணி, சரித்திர படங்கள். மதுரை வீரன், மகாதேவி, மன்னாதி மன்னன்.
நாடோடி மன்னன் – என்று வரிசையாக..
எம்ஜியாருக்கு பிடித்த பாடலாக “அச்சம் என்பது மடமையடா” பாடலை கூறுவார்கள். எனக்கும் மிகவும் பிடித்த பாடல் இது.
இளமையில் நான் பெரும்பாலும், வடக்கேயே படித்தாலும், ஒரு மூன்று வருட காலம் சென்னையில் படித்தேன். அந்த சமயத்தில் என் நெருங்கிய தோழர்களில் ஒருவர் திமுகவை உருவாக்கிய ஐந்து தலைவர்களில் ஒருவரான என்.வி.நடராஜன் அவர்களின் மகன் என்.வி.என்.பன்னீர்செல்வம்…!
அவன்(ர்), தந்தை திமுகவில் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்ததால், எம்ஜியார், அவருக்கும் நன்கு
பழக்கமானவராக இருந்தார். எம்ஜியாருக்கு
கட்சியில் அப்போது இருந்த செல்வாக்கு பற்றி எல்லாம் பன்னீர்செல்வத்தின் மூலம் அப்போதே எனக்கு தெரிய வந்தது….
பின்னர் நான் வடக்கே போய் விட்டேன்…
எம்ஜியார் முதலமைச்சராக இருந்தபோது நான் பெரும்பாலும் வடக்கேயே இருந்தேன். இடையில் தமிழ்நாட்டிலும் சில ஆண்டுகள் இருந்தேன்… அவர் மறைந்த சமயத்தில் இங்கே, திருச்சியில் தான் இருந்தேன்.
ஒரு திரைப்பட நடிகராகவோ, ஒரு அரசியல்வாதியாக, முதலமைச்சராகவோ,
எம்ஜியார் அவர்களை ரசித்ததை விட,
விரும்பியதை விட –
ஒரு மிகச்சிறந்த மனித நேயமுள்ள மனிதராக, தான் சந்திக்கும் அனைவரையுமே
நேசித்த ஒரு மனிதராக, அடுத்தவருக்கு தெரியாமலே, வெளியே சொல்லாமலே –
பலருக்கும் உதவி புரியக்கூடிய ஒரு நிஜ ஹீரோவாக, தனக்கென்று எதையும் சேர்த்து வைத்துக் கொள்ளாமல், தான் சம்பாதித்ததை எல்லாம் பிறருக்காகவே செலவழித்த ஒரு
அற்புதமான கொடைவள்ளலாக, ஒரு நல்ல மனிதராக –என் இதயத்தில் நிறுத்திக் கொள்ளவே நான் விரும்புகிறேன்…
பிற்காலத்தில், இரண்டு சமயங்களில்
அவரை மிக நெருக்கத்தில்
பார்க்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது.
ஸ்ரீரங்கத்தில் ராஜகோபுரம் உருவாகிக் கொண்டிருந்தது. கோபுரத்தில், 200 அடி உயரத்தில் தொழிலாளர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
கும்பாபிஷேகம் நெருங்கிக் கொண்டிருந்ததால் தீவிரமாக
வேலை நடந்து கொண்டிருந்தது.
மஹாராஷ்டிராவில் பணி புரிந்து கொண்டிருந்த நான் –அந்த சமயத்தில் விடுமுறையில் அங்கே போயிருந்தேன்…
ஒரு ஞாயிறு காலை சுமார் பத்து மணி இருக்கும்.கோபுரத்திற்கு கீழே காந்திஜி சிலையருகே–திடீரென்று ஒரு கார் வந்து நின்றது….
ஒரே சமயத்தில் முன்,பின் கதவுகள் திறந்தன.
ஆச்சரியம் – நம்பவே முடியவில்லை…
எந்தவித பந்தாவோ, போலீஸ் பாதுகாப்போ இல்லாமல் –எம்.ஜி.ஆர். (கூடவே இதயம் பேசுகிறது மணியனும்) காரிலிருந்து வெளியே வந்தார்.
திடீரென்று அந்த இடமே பரபரப்பானது..
சுற்று முற்றும் பார்த்தார்… மேலே கோபுரத்தை பார்த்தார்…வலது கையைத் தூக்கி மேலே பார்த்துக் கொண்டே அசைத்தார்..
மேலே, கோபுரத்தின் உயரத்தில் வேலை செய்துகொண்டிருந்த கட்டிட தொழிலாளர்களுக்கு ஒரே ஆச்சரியம்,
மகிழ்ச்சி, ஆரவாரம் – “வாத்யாரே” “வாத்யாரே” என்று
மேலேயிருந்து பலத்த கூக்குரல்கள்…!!!
மேலே பார்த்து – எல்லாருக்கும் வணக்கம் சொன்னார். எல்லா பக்கமும் கைகுவித்து
அனைவருக்கும் வணக்கம் சொன்னார்.
அடுத்த நிமிடம் காரில் ஏறினார்…. பறந்து விட்டார்…
ஒரே நிமிடத்தில் அந்த இடத்தையே மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தி விட்டு பறந்து விட்டார்.
எம்ஜியாரே அக்கறையுடன் வந்து பார்த்த மகிழ்ச்சியில் –பின்னர் பணி படு மும்முரமாக நடந்தது….!
பின்னர் ஒரு தடவை எம்ஜிஆர் அவர்களுடன்
ஒரே மேடையில், அலுவலக நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற சம்பவம்….
சுமார் இரண்டு மணி நேரங்கள் மேடையில், அவருக்கு மிக அருகாமையில், இரண்டடி தூரத்தில் நின்றுகொண்டு, நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த
மகிழ்ச்சிகரமான, மறக்கமுடியாத அனுபவமும் கிடைத்தது. ஒரு மிகப்பெரிய ஆளுமையின் அருகாமையை அப்போது நன்கு உணர முடிந்தது.
எங்கேயோ, தொலைதூரத்தில்,
எந்தவிதத்திலும் அவருடன் சம்பந்தம் இல்லாத என் போன்ற ஒருவனுக்கு
தன்னுடைய இருப்பின் (simply by his presence ) மூலமே இவ்வளவு நெகிழ்ச்சியையும், மகிழ்ச்சியையும்
அவரால் கொடுக்க முடிந்தால் –
அவருடன் வருடக்கணக்கில் நெருங்கிப்பழக,
சேர்ந்து உழைக்க – அவரது சகல பரிமாணங்களையும் கண்டு அனுபவிக்க – வாய்ப்பு கிடைத்தவர்கள் அவரைப்பற்றி எத்தகைய நினைவுகளில் இருப்பார்கள்…?
எம்.ஜி.ஆர். அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழா கொண்டாடப்படும் இன்றைய தினம் அவரைப்பற்றி அவசியம் எழுத வேண்டும் என்று தோன்றியது. பத்திரிகைகளின் மூலமும், மற்ற பிரபலங்களின் மூலமும் தெரியாத எதை நான் புதிதாகச் சொல்லி விடப்போகிறேன்…?
எனவே தான், அவரைப்பற்றிய
என் நினைவுகளைப்பற்றி சொல்ல முனைந்தேன்….
“வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி,
மக்கள் மனதில் நிற்பவர் யார்….? ”
கட்சி, அரசியல், வகித்த பதவிகள் –
இவற்றை எல்லாம் தாண்டி –எத்தனை ஆண்டுகள் ஆனாலும், மக்கள் மனதில்
நிலைத்து நிற்கக்கூடிய மிகச்சில மனிதர்களில் எம்.ஜி.ஆர். அவர்களும் ஒருவர்….!!!
கட்டுரையாளர்:கவிரிமைந்தன்/விமர்சனம் இணைய தளம்
-
30.6.1977
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் தமிழக முதல்வராக பதவி ஏற்று இன்று 40 ஆண்டுகள் நிறைவு தினம் . நடிகன் நாடாள முடியுமா? என்ற கேள்விற்கு மக்கள் திலகம் விடை தந்தார் .
எதிர்மறையான கருத்துக்களை கொண்டவர்களும் , எம்ஜிஆரின் வெற்றிகளை ஏற்க முடியாதவர்களும் திகைத்து போய் நின்ற தினம் .
எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடை பெறும் இந்த இனிய தருணத்தில் எம்ஜிஆர் ஆட்சி கட்டிலில் அமர்ந்து 40 ஆண்டுகள் நிறைவு நேரத்தில் எம்ஜிஆரின் இயக்கமான அதிமுக 7 வது முறையாக ஆட்சியில் இருப்பது உலகத்தில் எங்கும் நடக்காத சரித்திர சாதனையாகும் .
மக்கள் திலகம் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சென்னையில் பிரமாண்ட நூற்றாண்டு விழா வளைவு அமைக்கப்படும் என்ற இனிய தகவல் கிடைத்துள்ளது .
எம்ஜிஆரின் நூற்றாண்டு விழா நேரத்தில் மக்கள் திலகத்தின் அடிமைப்பெண் திரைப்படம் டிஜிட்டல் வடிவில் அகன்ற திரையில் 5.1 ஒலியில் நம்மை மகிழ்விக்க 7.7.2017 அன்று திரைக்கு வருவது அடுத்த மகிழ்ச்சியான தகவல் .
எம்ஜிஆரை பற்றி தப்பு கணக்கு போட்டவர்கள் நேற்றும் சரி இன்று சரி தங்களை மாற்றி கொண்டதாக தெரியவில்லை . எதிர்காலத்திலும் நம்முடைய வெற்றி முரசு கேட்க அவர்கள்
காத்திருப்பார்கள் என்று நம்புகிறோம் .
-