Quote:
'' 'தேவர் மகன்’ படத்தில் நடித்த போது செவாலியே சிவாஜி கணேசனுட னான மறக்க முடியாத அனுபவம் ஏதாவது?''
''நா நேஷனல் அவார்டு வாங்கலனு ரொம்பப் பேரு வருத்தப்படுவாங்க. நா அவருகிட்ட அப்பவே அத வாங்கிட்டேன். 'தேவர் மகன்’ படத்தை தேவிஸ்ரீ தியேட்டர்ல ப்ரிவியூ போட்டுக் காண்பிச்சாங்க. அப்போ, கமலா அம்மாளக் கூப்புடுற மாதிரி கமல் சாரை, 'டே கமலா, இங்க வாடா’னு கூப்புட்டாரு சிவாஜி சார். 'இந்தப் படத்துல ஒரிஜினல் மதுரைப் பேச்சுப் பேசி நடிச்சவன் இவந்தான்டா... இவன் பெரிய ஆளா வருவான்டா’னு என்னயக் காட்டிச் சொன்னாரு. என்னைய பக்கத்துல அழைச்சு 'நல்லா வருவேடா’னு அழுத்தமா ஒரு முத்தம் கொடுத்தாரு. 'இத இப்புடியே வளத்துக்கடா. காமெடியில மட்டும் இல்ல... கழுவுற கையில திங்கணும்... திங்குற கையில கழுவணும்னு பேசி, சிம்பதி கேரக்டரையும் சிறப்பா பண்ணுன பாரு... லேசா என்னயவே ஒரு சிலுப்புச் சிலுப்பி விட்டுட்டேடா. நல்லா வருவடா’னு வாழ்த்தினாரு. காதாரக் கேட்டவன் அப்புடியே அவரு கால்ல நெடுஞ்சாண் கிடையா விழுந்துட்டேன். விழுந்தவன் எந்திரிக்கவே இல்ல. 'யேய், அவன் தூங்கிட்டான்போல இருக்கு. எழுப்பி வுடுங்கப்பா’னு சொன்னாரு சிவாஜி சார். அவரோட வாய் குளிர்ந்த வாழ்த்து வேர்ல்டு அவார்டுக்குச் சமம்ணே. அந்த மகராசனோட வாழ்த்து இன்னிக்கு வரைக்கும் நெலச்சு நிக்குது. வசிஷ்டர் கையால வாங்கிய வரம்ணே அது.
தேவர் மகன்’ படம் கமல் சார் எனக்குக் கொடுத்த லைஃப். என்னோட டேர்னிங் பாய்ன்ட்டே அதுதான். இனிமே, அப்புடி ஒரு படம் கிடைக்குமானு தெரியல. பெரிய இமயங்களான சிவாஜி சார், கமல் சார் ரெண்டு பேருக்கும் நடுவுல நடந்து வார பாக்கியம் அந்தப் படத்துலதான் எனக்கு அமைஞ்சது. வளர்ற நேரத்துல அந்த மகத்தான வாய்ப்பக் கொடுத்த கமல் சாருக்கு நா காலா காலத்துக்கும் கடமப்பட்டு இருக்கேன். 'தேவர் மக’னுக்குப் பெறகு, 'பசும்பொன்’ படத்துல சிவாஜி சாரோட நடிச்சேன். அதுக்கப்புறம் சிவாஜி சாரோட வீட்ல எடுத்த 'சந்திரமுகி’ படத்துல நடிச்சேன். தரயில மண்ணக் குமிச்சு சிவாஜி சாரைப் பாத்த வடிவேலு, அந்த மன்னவனோட ஒண்ணா நின்னு தெரயில நடிப்போம்னு நெனச்சதுகூட இல்ல. அவரு கண்ண மூடினப்ப அவரோட கால்மாட்டுலயே நின்னு கதறினேன். அது அழுகை இல்லங்க... அத்தன சொட்டுக் கண்ணீரும் நா மிச்சம் வெச்சிருந்த நன்றிங்க!''