சா. கந்தசாமி'யின் தொலைந்து போனவர்கள்
இது தற்காலத்தது இல்லை என்றாலும் இத்திரியில் இடுகிறேன்.
சா.க'வின் ஒரு சில சிறுகதைகளை படித்திருக்கிறேன். மிக சாதாரணமானவையாகவே அவை எனக்குப் பட்டன. அவர் மீது வைத்திருந்த அபிப்ராயத்தை மாற்றியது நான் சமீபத்தில் படித்த "தொலைந்து போனவர்கள்" புதினம்.
சிறிய புதினம் தான். 200 பக்கம் கூட இல்லை - நத்தையான நானே 3 நாட்களில் படித்துவிட்டேன். மிக எளிதான கதை, சொல்லும் முறை. இன்றைய எழுத்தில் புத்திசாலித்தனம் வழியும் கதைகளிலிருந்து விலகி இப்புதினத்தை படிப்பதே இதமாக இருந்தது. இலக்கியத்தில் கூட இன்று சிடுக்கு விழுந்துவிட்டதே என்ற அங்கலாய்ப்பை தவிற்கமுடியவில்லை. இந்த புதினத்தின் கதையும் அது தான். எளிமையான நண்பர்கள் வாழ்வில் மேலும் மேலும் காலம் படிந்து முடிச்சுகள் விழுந்து, வாழ்க்கையை மாற்றி, ஆட்களை மாற்றி விடும் சுழல். வளர்ச்சி/வீழ்ச்சி போன்ற எளிமையான வகைபடுத்துதலுக்கு அப்பால் காலம் நகர்ந்துவிட்டது என்ற ஒரே உண்மையை, மிகையான சோகம் இல்லாமல், எளிமையாக, அழகாக படம்பிடித்திருக்கிறார் சா.கந்தசாமி.
தாமு என்கிற தாமோதரன் தான் பிரதான பாத்திரம். நடுவயது தாமு தனது பள்ளி நண்பர்களை தேடி பிடிப்பது தான் கதை.
அவன் வாழ்க்கையின் துண்டும், அவர்கள் வாழ்க்கையின் துகள்களும், நிலைகளும் நமக்குக் காணக்கிடைக்கின்றன.
தாமுவின் வசதி பற்றி, அவனுக்கு அதை எட்ட கிடைக்கும் தகுதி பற்றி, அவன் சமரசங்கள் பற்றி, 'சமரசம்' என்ற அளவிலெல்லாம் சிந்திக்கும் அளவு பிரக்ஞை இல்லாத அவன் எளிய மனது பற்றி, அது பிறருக்கு வாய்க்காதது பற்றி...என்று கதையை ஒட்டி நாமும் ஜ்ட்ஜ் செய்ய உந்தப்படுகிறோம். அதற்கெல்லாம் அப்பால் நின்று வாழ்க்கை நடந்துகொண்டே போகிறது.
புரிதல்/முயற்சி மூலம் வாழ்க்கையை வெல்லலாம் என்ற நிலைப்பாட்டை புதினம் நகையாடுகிறதா. இல்லை அவ்வாஅறு நினைப்பதே "வாழ்க்கையில் வெற்றி" பற்றி நாம் கொண்ட முன்தீர்மானங்கள் தான் காரணமா என்று சிந்திக்க வைத்து அலைக்கழிக்கிறது இப்புதினம். நிகழ்வுத்தோரணமும், அதன் ட்ராமாவும் இல்லாத நளினமான "ஸ்னாப்ஷாட்" வழங்கப்படுகிறது. அது நெகிழ்வாக வந்ததற்கு காரணம் எழுத்தாளரின் நுட்பமான பேனா.