Quote:
செல்போன்... 150 ரூபாய்...
சீரியல்களில் இப்போதெல்லாம் கதையை விடவும் சீரியசான விஷயம் செல்போன்கள். டைரக்டர் காட்சியை விவரித்து நடிகை நடிக்கத் தயாராகிவிடுவார். டைரக்டர் `ரோல்' என்று குரல் கொடுக்கும் நேரத்தில் சரியாக நடிகையின் கையில் உள்ள செல்போன் குரல் கொடுக்கும்.
உடனே நடிக்கும் மூடில் இருந்து மாறுபடும் நடிகை, டைரக்டரிடம் `ஒரு நிமிஷம் சார்' என்று சொல்லி விட்டு சற்றுத் தள்ளிச் சென்று பேசுவார். பேசுவார்..பேசிக்கொண்டேயிருப்பார்.
நடிகை இப்படி பேசிக்கொண்டிருப்பதில் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டிருப்பதை அவர் உணர்ந்து கொள்ள வேண்டுமே... அதற்காக இரண்டு உதவி இயக்குனர்கள் நடிŰகையின் பார்வையில் படுகிறமாதிரி நின்று கொண்டிருப்பார்கள். ஆனால் நடிகை அவர்களை கண்டுகொண்டதாகவே காட்டிக் கொள்ள மாட்டார். `தானுண்டு தன் செல்லுண்டு' என்று பேசுவதை தொடர்ந்து கொண்டிருப்பார்.
நடிகை ஒருவழியாக பேசிமுடித்து ஷாட்டுக்கு வரும்நேரத்தில் நடிகையுடன் அந்தக்காட்சியில் நடிக்கவேண்டியவர்கள் மட்டுமின்றி இயக்குனரும் சோர்ந்து போய் விடுவார்.
நடிகைகள் என்றில்லை., சிலநடிகர்களும் செட்டுகளில் இயக்குனருக்கு `செல்போன் டென்ஷன்' கொடுத்தபடி இருக்கிறார்கள்.
இதை முதன்முதலில் சரி செய்த பெருமைக்குரியவர் நடிகை குஷ்பு. அவர் தயாரித்து நடித்த தொடர்களில் யாராவது படப்பிடிப்பு நேரத்தில் செல்லில் பேசினால் உடனடியாக 150 ரூபாய் அங்கேயே வசூலிக்கப்படும். இதனால் குஷ்புவின் செட்டில் செல்போன் சத்தத்தையே கேட்கமுடியாத நிலை ஏற்பட்டது நிஜம்.
தயாரிப்பாளர் `சத்யஜோதி' தியாகராஜன் தயாரிக்கும் தொடர்களின் படப்பிடிப்பு செட்களிலும் செல் ஒலி கேட்பதில்லை. இயக்குனரே படப்பிடிப்புக்கு வந்ததும் முதல்வேலையாய் செல்லை அணைத்து மற்றவர்களுக்கு முன்மாதிரியாகி விடுகிறார்.
தமிழ்நாடு சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக குஷ்பு தேர்ந்தெடுக்கப்பட்டதும் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டபல தயாரிப்பாளர்களின் குமுறலும் இந்த செல்போன் தொல்லை பற்றியது தான்.
இதற்கு பதிலளித்த குஷ்பு தனது தொடர்கள் நடக்கும் செட்களில் செல்போன் பேசுவோருக்கு பைன் போட்ட கதையை விலாவாரியாக விவரித்தார். ஒவ்வொரு தயாரிப்பாளரும் இதே ரூட்டில் போனால் `செல்போன் தொல்லை செட்டுக்குள் இல்லை' என்ற நிலை வந்துவிடும் என்று தலைவர் குஷ்பு சொன்னபோது தயாரிப்பாளர்களிடம் இருந்து எழுந்தது பலத்த கரகோஷம்.